வெள்ளி, 26 மார்ச், 2010

ஆன்மிக சிந்தனை

ஆன்மிக சிந்தனை 7

சொர்க்கம் செல்ல பெயர் பதிவு செய்துவிட்டீர்களா?

நாம் இந்தப் பூமியில் பிறந்தவுடன் நமது இருப்புக்கான, வாழ்வுக்கான ஆதாரமாக நமது பெயர் பதிவு செய்யப்படுகிறது. அடுத்ததாக, கல்வி கற்பதற்கு பள்ளிக்கூடம் போகும் போது நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. நிலம் வாங்கும் போதும், வீடு வாங்கும் போதும், தண்ணீருக்காகவும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களுக்கு உரிமம் வாங்கும் போதும், வாகனம் ஓட்டுவதற்கு லைசன்ஸ் வாங்கும் போதும் நம் பெயர் பதிவு செய்யப்படுகிறது. ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு வாங்கும் போதும், வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யும் போது,வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை வாங்க என இங்கே தற்காலிகமாக வாழ்வதற்கு ஆயிரத்தெட்டு முறை நம் பெயரை பதிவு செய்துள்ளோம். ஆனால், நம்மை படைத்த இறைவன் வசிக்கும் சொர்க்கத்தில் நாம் வசிக்க, இறைவனின் திருகமலத்தில் இருக்க நம் பெயரை பதிவு செய்து இருக்கிறோமா? என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்.
எப்படி நாம் வெளிநாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட், விசா தேவைப்படுகிறதோ, அதுபோல நாம் சொர்க்கம் செல்வதற்கு ஆன்மிகம் என்கிற பாஸ்போட்டும்,பக்தி என்கிற விசாவும் தேவை. இவைகளை பெற பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை நமது வேதமும்,மதமும், இதிகாசமும், புராணங்களும் எடுத்துச் சொல்கின்றன. அந்த வழிமுறைகளில் சென்று கோயிலில் இறைவனை தரிசித்து, நாம் இறைவனின் அன்புக்கு ஆளானால், இறைவன் பக்தர்களுக்கு சொர்க்கம் செல்ல விசா கொடுத்தருள்வான்.
பக்தி என்பது மனிதனாக பிறந்த யாவருக்கும் வேண்டிய ஒன்றாகும். பக்தியை குழந்தைப் பருவம் முதல் செய்ய பழக வேண்டும். பக்தியை முதுமையில் தான் செய்ய வேண்டும் என்று ஒரு போதும் கருதகூடாது.
உலகத்தில் பெரும்பாலோர் நல்ல வீடு, கவுரவமான வேலை, திரண்ட செல்வம், அழகான மனைவி, அறிவான குழந்தைகள், ஆரோக்கியம்,சந்தோஷம், நிம்மதி இவைகளைப் பெறுவதற்கு தான் பக்தி என்று எண்ணிக்கொள்கின்றனர். இவைகளை பக்தி செய்தால் பெறலாம் என்பது உண்மை ஒருபுறம் இருந்தாலும், இவைகளைப் பெறுவதற்காக மட்டுமே பக்தி செய்வது என்பது அர்த்தமல்ல.
ஒரு சிலர் "அட, நான் இப்போ சகல வசதிகளுடன் சந்தோஷமாகத்தானே இருக்கிறேன். பாசமுள்ள பெற்றோர், அன்பான மனைவி, அழகான குழந்தைகள், சொகுசு பங்களா, பெரிய கார், கைநிறைய சம்பளம்... இப்படி எல்லாம் நிறைவாக தானே இருக்கிறது! வாழ்க்கை குதுõகலமாக தானே போய்கிட்டு இருக்கு. பின் எதற்கு நான் பக்தி செய்ய வேண்டும்? வாழும் வாழ்வே சொர்க்கமாக இருக்கும் போது, சொர்க்கம், மோட்ஷம், கைலாஷம், வைகுண்டம் எல்லாம் எதற்கு? என்று கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டால் பரவாயில்லை. எடுத்தப்பிறவி மண்ணுலக வாசத்தோடு முற்றுபெற்றுவிட்டால் நீங்கள் நினைப்பது சரிதான். எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! இறப்புக்குப் பிறகு, நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப கடவுளின்நியாய தீர்ப்பு ஒன்று இருக்கிறதே. நாம் புரிந்த நல்லது, கெட்டதுக்கு ஏற்ப நரகமோ தண்டனையோ, சொர்க்கம் எனும் வெகுமதியோ கிடைக்க உள்ளதே. அதனால் தான் நரகம் சென்று தண்டனை அனுபவிக்காமல் இருக்கவும், அதே சமயம் சொர்க்கம் செல்ல பக்தி செய்யவேண்டும். சொர்க்கம் செல்வதற்கு பக்தியின் மூலம் நம் பெயரை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இன்று சந்தோஷமாக இருக்கலாம். நிம்மதியாக இருக்கலாம். சகல வசதிகள் இருக்கலாம்.ஆனால், அது நிச்சயமானது என்று எப்படி உங்களால் நினைக்க முடியும்? நாளை என்ன நடக்கும் என்று உங்களுக்கென்ன தெரியும்? எல்லாம் படைத்தவன் கையில் அல்லவா இருக்கிறது. நாளை உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது என்று எப்படி முடிவு செய்ய முடியும்? ஆதலால், இப்போது இருக்கும் வசதி,வாய்ப்பு, சந்தோஷங்கள் நிலைத்திருக்க பக்தி செய்துதானே ஆகவேண்டும்?
சிலர் இன்று வறுமையில் இருக்கலாம். கஷ்டப்படலாம். என்னடா இது வாழ்க்கையே நரகமாச்சே! என்று நொந்து கொண்டு என்னத்த பக்தி செய்து என்னத்த ஆகப்போகுது என்று மனம் வெம்பி கடவுளையும் பக்தியையும் புறக்கணித்தல் முட்டாள் தனமான செயலாகும். ஏனென்றால் நாளை என்பது நம் வசம் இல்லையே... ஒரு வேளை நாளை அப்படியே வாழ்க்கை தலைகீழாக மாறலாம். வறுமை அகலலாம்; கஷ்டம் தீரலாம். நம்பிக்கையோடு பக்தி செய்து வந்தால் நல்லது நடக்கும். எனவே கஷ்டத்தில் இருப்பவர்களும் சரி; சந்தோஷத்தில் இருப்பவர்களும் சரி பக்தி செய்துதான் ஆகவேண்டும்.
இந்த இரு சாரார் அல்லாத இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். அவர்கள் தங்களை நாத்திகவாதிகள் என்று சொல்லிக்கொள்வார்கள். அவர்கள் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் புருடா பொய் என்று நம்புகின்றனர். இவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கை சரியா, தவறா என்பதை வரும் காலம் உணர்த்தும். ஆனால், சின்ன உபாயம் இருக்கிறது. வானிலை அறிக்கையில் மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. குடை கொண்டு போங்கள் என்று வலியுறுத்துகின்றது. நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும் போது குடைகொண்டு போங்கள். மழை வந்து விட்டால் குடை கொண்டு நனையாமல் வீடு வந்து சேரலாம். ஒருவேளை மழை வராது போனால் ஒன்றும் மோசமில்லையே... குடையை அப்படியே எடுத்து வந்து விடுங்கள். இந்த குடையை சுமக்கவா உங்களுக்கு சிரமம்? இங்கே நான் குடை என்று குறிப்பிட்டிருப்து பக்தியைத் தான் என்பது உங்களுக்கு விளங்கி இருக்கும்.
ஆல்கிலத்தில் ஒரு பழமொழியுண்டு. நீ சிரிக்கும் போது இறைவனை நினைத்தால்; நீ அழும் போது இறைவன் உன்னை நினைப்பான்! நாம் இந்தப்பூமிக்கு மனிதர்களாக அனுப்பப்பட்டிருப்பது எதற்கு தெரியுமா? வீடு,வாசல் மனைவி ,மக்கள், சொத்து, சுகம் என்று வாழ்வதற்காக, படிக்கவும், உழைக்கவும் தானா? அப்படி எதுவும் இல்லை. இவையெல்லாம் அன்னத்தால் வளரும் உடம்புக்குத்தான். ஆத்மாவுக்கு அல்ல. ஆத்மாவின் கடமை, யாரால் படைக்கப்பட்டோமோ அவனை நினைக்க வேண்டும். எங்கிருந்து வந்தோமோ அங்கே செல்ல நினைக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதோ, அதை செய்ய வேண்டும். ஆனால், நாம், நாம் உருவாக்கியதில் மயங்கி பக்தி செய்யாமல் இருந்து விடுகிறோம். இந்த தற்காலிக வாழ்வும்; இடமும் பெரிதென்றோ அல்லது நிலையானதென்றோ எண்ணிவிடுகிறோம். இந்த எண்ணப்பிழைக்கும், செயல் பிழைக்கும் தண்டனை உண்டு. அந்த தண்டனை தான் நரக வாசம்.
இந்த தண்டனையிலிரு தப்பிக்க ஒரே வழி ஈசனை உள்ளன்போடு உண்மையாக வணங்கி பக்தி செய்வது தான். வேறு உபாயம் ஏதுமில்லை. அடுத்ததாக சொர்க்க வாசம் செய்ய வேண்டுமானால் நீங்கள் உங்களுக்கான இருக்கையை பதிவு செய்து கொள்ள வேண்டும். எங்கே பதிவு செய்வதென்றால் ஈசன் குடிகொண்டிருக்கும் கோயில்களில். பெயர் பதிவு செய்துக்கொள்ள என்ன கட்டணம் என்றால் அது பக்தி. எந்தளவுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஈசனை நினைக்கிறீர்களோ அந்தளவுக்கு சீக்கரம் உங்களுக்கு சொர்க்கத்திற்கான பதிவு கிடைத்து விடும்.



ஆன்மிக சிந்தனை8

ஏகன் அனேகன் இறைவன்!
ஈஸ்வரன், கிருஷ்ணன்,ராமன்,முருகன், விநாயகர்,ஆஞ்சநேயர் என பலவாறாக இறைவனாக வழிபடுகிறோம். அவரவர்களுக்கு இஷ்டமான இறைவனை வழிபட்டு இறைஅனுபூதி பெற்றவர்கள் அனேகம். ஈஸ்வரனை வழிப்பட்டு ஈசனுக்கு பிரியமானவர்கள் நாயன்மார்கள். கிருஷ்ணனை வழிபட்டு கிருஷ்ணனின் அருளைப்பெற்றவர்கள் ஆழ்வார்கள். இப்படி ஒவ்வொரு தெய்வத்தையும் நம்பி வழிபாடு செய்து அந்ததந்த இறைவனால் அருள்பெற்றிருப்பதால் எந்த தெய்வத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது.
ஆக, எந்த தெய்வத்தை நம்பி வழிபாடு செய்தாலும் இறையருள் பெறுவது திண்ணம் என்றால் பக்தர்களுக்கு ஒரு சந்தேகம் எழும். எந்த தெய்வம் உசத்தி? எந்த தெய்வத்தை வழிபட்டால் உடனடி விமோசனம் கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுவதோடு மேலும்,
இறைவன் ஒருவனா? ஒன்றுமேற்பட்டவனா? என்பதில் சிலருக்கு குழப்பம் இருக்கிறது.உலகம் எங்கும் எத்தனை ஆயிரம் கோயில்கள்.எத்தனை ஆயிரம் தெய்வங்கள்.அதற்கு தான் எத்தனை நாமங்கள், உருவங்கள். இதில் எத்தனை மதங்கள், எத்தனை வழிபாடு முறைகள்? இப்படி ஒரு நாட்டுக்கொரு இறைவன், ஒரு மதத்திற்கொரு இறைவன், ஒவ்வொரு மொழி பேசும் மக்களுக்கு ஒரு இறைவன்,குறிப்பிட்ட சாதிக்கொரு இறைவன், ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒரு குலதெய்வம் என்றெல்லாம் இறைவனை பல வாறாக வழிபடுகிறோமே அப்படி என்றால் இறைவன் ஒருவன் இல்லையா? என்று சந்தேகம் எழுகிறதல்லவா? ஆனால் ,அவதாரபுருஷர்களும் ஞானிகளும் இறைவன் ஒருவனே! என்கின்றனர். சாமானிய மக்களாகிய நமக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி ஞானிமார்கள் மட்டும் இறைவன் ஒருவனே என்று உறுதியாக கூறுகின்றனர். எவ்வாறு என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்!
இறைவனுக்கு இயல்பாகவே வடிவமில்லை; அவனை மனதாலும்,வாக்காலும் எட்டுவதற்கரியவன் என்று வேதம் சொல்லுகிறது. இருந்தாலும், அவனுடைய வடிவை பலவாறு கோயிலிலும்,வீட்டிலும் பூஜிக்கிறோம். அதற்கு காரணமும் இருக்கிறது. நாம் உண்ணும் உணவு வயிற்றுக்குத்தான் போகிறது. வயிறுபசியை தீர்க்கிறது. அப்படி என்றால் எல்லாரும் ஏதேனும் ஒரு உணவு வகையை மட்டுமே சாப்பிட்டால் என்ன? பிறகு ஏன் பல உணவு வகைகளை சாப்பிடுகிறோம்.மானம் காக்கத்தான் ஆடை. அதற்கு தானே ஆடை அணிகிறோம். அப்படி பார்த்தால் எல்லாருமே ஒரு வகை, ஒரே நிற ஆடையை அணிந்துகொண்டால் என்ன? பதில் சொல்ல முடிகிறதா? ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகை உணவு, உடை பிடித்திருக்கிறது. அது போல ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வகையான இறைவடிவம் பிடித்திருக்கிறது. அதற்கேற்றார் போல இறைவனும் பல வடிவங்களில் நுழைகிறான்.
"ஏகன் அனேகன் இறைவன் அடி வாழ்க!' என்று மாணிக்க வாசகர் சிவனின் புராணத்தை சொல்லும் போது ஈஸ்வரனை இப்படி அழைத்து வணங்கு கிறார். ஏகம் என்றால் ஒன்று. அனேகம் என்றால் பல. ஆக இறைவனை ஒருவனாக இருப்பவனும், பலவாக இருப்பனும் ஆன ஈஸ்வரா உன் பாதக்கமலம் வாழ்க என்று வழிபடுகிறார். ஆக மாணிக்கவாசகருக்கும் இறைவன் ஒருவனாக மட்டுமல்ல பலவாகவும் இருக்கிறான் என்று நம்புகிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. மாணிக்க வாசகர் இறைவனை ஒருவராகத்தான் பாவித்தார்.
எங்கள் ஊர் கோயிலுக்கு வந்த சமய சொற்பொழிவு செய்த ஒருவர் இறைவன் ஒருவனே என்பதற்கு உதாரணமாக சொல்லும் போது "நாகராசன்' இவர் ஒருவர். ஆனால் நாகராசன் தன் தந்தைக்கு மகன். தன் தம்பிக்கு அண்ணன். மனைவிக்கு கணவன். பிள்ளைகளுக்கு தந்தை. பேரனுக்கு தாத்தா. ஆக, நாகராசன் என்கிற ஒருவர் எப்படி உறவுகளுக்கு ஏற்ப மகனாக,அண்ணனாக,கணவனாக, தந்தையாக, தாத்தாவாக பல பெயர் பெறுகிறார். பல பெயர்கள் ஒருவர் பெறுவதால் அவர் பலரா? என்று விளக்கி, இறைவன் என்பவன் பல நாமங்களில், பல ரூபங்களில் இருந்தாலும் ஒருவனே என்று எளிமையாக விளக்கினார். அவர் சொன்ன உதாரணம் என்னவோ புரியும் படிதான் இருந்தது.
இந்த உதாரணத்தில் கூட கொஞ்சம் குழப்பம் வரத்தான் செய்யும். எப்படி எனில், நாகராசன் என்பவர் ஒருவராக இருந்தப்போதும் அவர்காட்டும் அன்பு உறவுக்கு ஏற்ப மாறக்கூடும். அம்மாவிடமும் மனைவியிடமும் காட்டும் அன்பு ஒன்றுபோல இருக்காது. தன் தம்பியிடம் காட்டும் உரிமைக்கும் தன் மகனிடம் காட்டும் உரிமைக்கும் வித்தியாசம் உண்டு. அப்படி பார்த்தால் இறைவனும் உருவம், நாமங்களுக்கு ஏற்ப பக்தர்களுக்கு அருள்பாலிப்பதில் வேறுபடுவதாக கருதக்கூடும்.
அடுத்ததாக மிகச்சிறந்த இரு உதாரணங்கள் இறைவன் பலவாக தெரிந்தாலும் இறைவன் ஒருவனே என்று எடுத்தியம்புகின்றன.
ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை சில்லு சில்லாக உடைத்து தரையில் பரப்பி வைத்து விட்டு அதை உற்று பாருங்கள். ஒவ்வொரு சில்லிலும் உங்கள் முகம் பிரதிபலிக்கும். உங்களுக்கு இருப்பது ஒரு முகம் தானே! ஆனால் ஒவ்வொரு கண்ணாடி சில்லிலும் ஒரு முகம் தெரிகிறதே! அப்படி என்றால் உங்களுக்கு பல முகங்களா இருக்கிறது?
ஆற்று நீரில் நுரை பொங்கி கரையோரம் ஒதுங்கும். அந்த நுரையில் ஒவ்வொரு குமிழிலும் கரையில் உள்ள மரம் காட்சியாகும். இருப்பது ஒரு மரம். ஆனால் அத்தனை நுரை குமிழிழும் தெரிவதால் பல மரங்கள் என்றா சொல்ல முடியும்?
ஒரு முகம், ஒரு மரம் என்பதும் உண்மை. அதே சமயம் கண்ணாடி சில்லில் தெரியும் பல முகங்களும், நுரையில் காட்சியாகும் பல மரங்களும் உண்மை. ஆக, கண்ணாடி சில்லுவில் தெரியும் முகத்திற்கும், நுரையில் விழுந்த மரம் பிம்பத்திற்கும் ஆதாரமாக இருப்பது உண்மையான ஒன்று. அந்த ஒன்று இல்லாமல் பல இல்லை. ஆதலால் ஒன்று தான் பல வாக தெரிகிறது. பலவானதை தொகுத்தால் ஒன்றாகும். எனவே இறைவன் ஒருவன் என்பதே உண்மையாகும். இறைவன் பல என்பது காட்சிப்பிழை அல்லது மாயபிம்பம் ஆகும். இதை தான் நாட்டுப்புறத்தில் "ஹரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு' என்பர்.
இதை புரியும் படி சொல்வதென்றால் இறைவன் உருவமில்லாதவன். உருவமில்லாதவனை எந்த உருவத்தில் வழிபட்டாலும் அது எல்லாம்வல்ல ஒருவனைத் தான் சாரும். எந்த நாமங்கள் சொல்லி வழிபட்டாலும் அந்த ஒலியும் ஓசையும் ஒருவனையே சென்றடையும்.
நீங்கள் உலகின் எந்தப் பரப்புகளில் இருந்து தோன்றும் ஆற்றில், நதியில் பயணப்பட்டாலும் முடிவில் கடல் என்கிற பரந்துபட்ட ஒன்றில் தான் சங்கமம் ஆகமுடியும். ஆறும், ஊரும் வேறாக இருந்தால் என்ன? அவை உங்களை கடல் என்கிற ஒன்றில் தானே இணைக்கிறது. அதுபோல தான் நீங்கள் எந்த தெய்வங்களை வழிபட்டாலும் உங்கள் பிரார்த்தனை ஒன்றாகிய இறைவனை தான் சென்றடையும். ஒரு பொருள் குறித்த வார்த்தை மொழிகளுக்கு ஏற்ப ஒலியில் மாறுபடும். ஆனால் அர்த்தத்தில் ஒரு போதும் மாறுபடுவதில்லை. அது போல தான் இறைவனும். ஆதலால் இறைவன் ஒருவனே! என்பதை மனதில் நிறுத்துங்கள். அதே சமயம் நீங்கள் எந்த வடிவில், எந்த பெயரில் இறைவனை வழிபட்டாலும் அது ஒன்றாகி ஈசனை வழிபட்டதாகவே அர்த்தம் ஆகும். நாம் வழிபடுவதுதான் முக்கியம். எந்த தெய்வத்தை என்பதல்ல.


ஆன்மிக சிந்தனை 9

பேசா எழுத்து வந்ததெப்படி?
புதிதாக ஒரு பேனா வாங்கியதும் முதலில் போட்டுப்பார்ப்பது பிள்ளையார் சுழியாக இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயம். புதிதாக கணக்கு தொடங்கும் நோட்டில் முதலில் பிள்ளையார் சுழி போட்டு விட்டு லாபம் என்று எழுத வேண்டும் என்பது வழிவழியாக வந்த பழக்கம். இப்படி நாம் எதை எழுத வேண்டும் என்றாலும் முதலில் பிள்ளையார் சுழி போடுகிறோமே, அது எதற்காக? அதன் காரணம் என்ன? அந்த தலை எழுத்தின் பெயர் என்ன என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திக்கலாம்!
ஒரு மொழியின் கட்டமைப்பு ஆனது எழுத்து, எழுத்துக்கள் சேர்ந்த சொல், சொல்கள் அடுக்கிய வாக்கியம் என்பதாக இருக்கும். இதில் எழுத்து என்பது மொழியின் அஸ்திவாரம் போன்றது. எழுத்து வரி வடிவம் அதாவது எழுத்து வடிவம் மற்றும் ஒலி வடிவம் அதாவது உச்சரிக்கும் பெயர் வடிவம் எனும் இரு அமைப்புகளை உள்ளடக்கியதாக தான் எந்த ஒரு மொழியின் எழுத்தும் இருக்கும்.
தமிழில் ஒரு எழுத்துக்கு எழுத்து வடிவம் இருக்கிறது. ஆனால், அந்த எழுத்துக்கு ஒலிவடிவம் இல்லை. அதாவது உச்சரிக்கும் முறை எதுவென்று தெரியவில்லை. மேலும் தமிழ் எழுத்துக்கள் 247 களில் இந்த எழுத்து சேர்க்கப்படவில்லை. எந்த மொழியிலும் இந்த எழுத்து மொழிக்குரிய எழுத்தாக கூறப்படவில்லை.
இந்த எழுத்தை பேசா எழுத்து, மவுன எழுத்து, மோன எழுத்து, ஊமை எழுத்து என்று கூறுகின்றனர். மற்ற எழுத்துப்போல இந்த எழுத்துக்கு இன்ன பெயர் என்று எதுவுமில்லை என்பதாலும்,ஒலி வடிவம் இல்லை என்பதாலும் இதை தனி எழுத்து, ஓரெழுத்து என்றும் வடமொழியில் ஏகாட்சரம் என்றும் பெயரிட்டு அழைக்கப்படுகிறது.
இந்த எழுத்தை தமிழின் தலைஎழுத்து என்றும் சமய சான்றோர் சுட்டுகின்றனர்.
இவ்வளவு படித்து வந்த உங்களுக்கு அது என்ன எழுத்து என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வந்திருக்கும் என்பதால் அந்த எழுத்து எது என்பதை சொல்லி விடுகிறேன்.
அந்த எழுத்தை "உ' என்று வடிவம் கொடுத்து எழுதுகிறோம். இந்த எழுத்தை தெய்வ எழுத்து என்றும் பிள்ளையார் சுழி என்றும் வழக்கில் சொல்லி வருகிறோம். உயிர் எழுத்து 12களில்" உ' போல வடிவம் கொடுத்து எழுதிவந்தாலும் அந்த எழுத்தை "உ' என்று உச்சரிப்பதில்லை. இந்த எழுத்து எதிலுமே சேராததால் அதற்கென்று பெயர் இல்லாமல் ஆதி எழுத்தாக இருக்கிறது. வடிவம் கருதி யாரோ சொல்லி வைத்ததை தான் நாம் பிள்ளையார் சுழி என்கிறோம். அதற்கும் காரணம் இருக்கத்தான் செய்கிறது.
சகல வேதமந்திரங்களும் பிரணவத்தால் தான் ஆரம்பிக்கப்படுகின்றன. பிரணவம் என்றால் ஓங்காரம் ஆகும். அதுபோல நம்முடைய எல்லா காரியங்களும் முதலில் பிள்ளையார் வணக்கத்துடன் ஆரம்பிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாம் செய்யப் போகும் செயல்களில் தாமதம், தடை, தோல்வி வரக்கூடாது என்பதற்காக பிள்ளையாரை பிரார்த்தனை செய்து விட்டு தொடங்குகிறோம். பிள்ளையாருக்கு விக்னகங்களை தீர்ப்பதால் விக்னேஷ்வரன் என்ற நாமமும் உண்டு.
நாம் எழுதப்போகும் நுõல், சாசனம் தொடங்கும் முன் பிள்ளையார் சுழிப்போட்டுதான் எழுத தொடங்குகிறோம். எதற்காக பிள்ளையார் சுழி போட்டு ஏன் எழுத தொடங்குகிறோம் என்றால் பிள்ளையார் சுழி போடுவது என்பது பிள்ளையாரை வணங்குவதற்கு சமம் என்று ஒரு நம்பிக்கையில் தான்.
பிள்ளையார் சுழி என்பது இறைவனின் திருவடி நினைவுக்குறி என்றும் சொல்வோர் உண்டு. பிள்ளையாரின் துதிக்கை வடிவம் என்றும் கருதுவோரும் உண்டு. பிரணவம் போல இதுவும் பேசா பிரணவம் என்ற கருத்தும் இருக்கிறது.
சங்ககாலத்தில் பிள்ளையார் வழிபாடு இல்லை என்றும் பிள்ளையாரே இல்லாத போது பிள்ளையார் சுழி மட்டும் வந்தது எப்படி என்று சிலர் ஆராய்ந்திருக்கின்றனர். கணபதி வழிபாடு சோழர்காலத்தில் தான் ஏற்பட்டிருக்கிறது. இப்போது நாகை மாவட்டத்தில் இருக்கும் திருசெங்காட்டாங்குடி என்ற ஊரில் முன்பு வாழ்ந்த பரஞ்சோதி, சோழர் மன்னரின் படைத்தளபதியாக இருந்தபோது வாதாபியில் போரில் வெற்றிப்பெற்றதன் நினைவாக அங்கிருந்து கணபதி கடவுளை சோழநாட்டுக்கு எடுத்து வந்தார் பரஞ்சோதியார். அந்த கணபதியை அவர் ஊரான திருசெங்காட்டாங்குடியில் பிரதிஷ்ட்டை செய்து கணபதி வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அவரை பின்பற்றி மக்களும் கணபதியை வழிபாடு செய்து வந்துள்ளனர். ஆக கணபதி வழிபாடு தமிழ் நாட்டிற்கு வரும் முன்பே பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் இருந்திருக்கிறது. அப்படி பார்த்தால் அது பிள்ளையார் சுழி என்று பின்னர் வந்தவர்கள்தான் பெயரிட்டிருக்க வேண்டும். அது "பேசா எழுத்தாக தான்' இருந்திருக்கிறது.
ஒரு சிலர் முன்பு பனை ஓலையில் எழுத எழுத்தாணி கூராக இருக்கவேண்டும். கூராக இருக்கும் எழுத்தாணியைக் கொண்டு அதிகம் உலராத ஓலையில் எழுத முடியாது. அதனால் எழுதுவதற்கு ஓலை பதமாக இருக்கிறதா என்பதை சோதித்துப் பார்க்கவே சும்மா வட்டமிட்டு சுழித்து பார்த்திருக்கிறார்கள். அந்த கிறுக்கலை தான் பிள்ளையார் சுழி என்று கூறிவந்திருக்கிறோம். என்று சொல்வோரும் உண்டு.
எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும் அவரவர் கருத்துகள். நம்முடை நம்பிக்கை மற்றும் பழக்கம் எல்லாம் அர்த்தம் கொண்டதாகவே இருக்கும். ஏனெனில் நம் முன்னோர்கள் பரிசீத்துப்பார்த்து, அவர்கள் காரியங்களில் நன்மைகள் ஏற்பட, ஏற்பட தானே அதை படிப்பினையாக கொண்டு எழுத தொடங்கும் முன் பிள்ளையார் சுழி போடும் பழக்கத்தை நமக்கு தந்து சென்று இருக்கிறார்கள்.
எப்படியோ இறைவனை நினைவுகூறும் ஒரு எழுத்தும் இறைவனை ஒத்து பேசாதிருக்கும் குணம் கொண்டு அது வும்"பேசா எழுத்தாக, மோன எழுத்தாக, ஊமை எழுத்தாக' இருக்கிறது என்பது ஆச்சரியம் தானே!



ஆன்மிக சிந்தனை10
வாங்க,பர்சனல் பக்தி செய்யலாம்!
இன்று பாஸ்ட்புட் கலாசாரத்தில் எதையுமே துரித கதியில் செய்துகொண்டிருக்கும் நாம்பொருளற்ற வாழ்க்கையில் பொருள் தேடி அலைந்து கொண்டிக்கிறாம்.வாழ்க்கையில் நம்மை படைத்தவனை நினைப்பதைவிட, பணத்தையே சதாகாலமும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்! என்ன செய்வது? செயற்கையான விருப்பங்களையும், ஆசைகளையும் கட்டமைத்துக்கொண்டு நினைப்பு கெடுக்கும் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் சூழலில் பொருளில்லார்க்கு வாழ்க்கை பொருளற்றதாகிவிட்டது.
சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் ஓடிக்கொண்டேயிருக்கும் காலத்தில் நாமும் ஓடிக்கொண்டேயிருக்கிறோம். இப்படிப்பட்டவர்களிடம் பணம் பண்ணும் வழியைச் சொன்னால் காதுகொடுத்து கேட்பார்கள். ஆனால்,பக்தி பண்ணுவது பற்றி சொன்னால் பயனளிக்காது என்பதையும் அறிவேன். பொன்னுக்காகவும், பொருளுக்காகவும் ,பெண்ணுக்காகவும் ,பெருமைக்காகவும், பதவிக்காகவும் இன்னம் எதை எதையோ தேடி தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ, எப்போதோ இடறி விழுந்து, பலத்த அடிப்பட்டு எழுந்திருக்க முடியாத போது "கடவுளே!' என்று கூக்குரலில் கூப்பாடு போடுவீர்கள்! அப்போதாவது கடவுளை நினைக்கதோன்றும் அப்போதாவது இதை படித்த ஞாபகம் வரும். இனியாவது மனதில் பக்தியை விதைத்து நற்கதியை அறுவடைய செய்ய புத்திவரும் நேரத்தில் இங்கே சொல்லப்படும் வழிமுறை உங்களுக்கு உபயோகப்படும்.
வாழ்வில் கஷ்டம் வரும்போதுதான் கடவுளை நினைப்பேன் என்று கருதாமல் சந்தோஷமாக இருக்கும் போதே நல்ல நிலையில் இருக்கும் போதே கடவுளை நினைத்துக்கொண்டிருக்க பக்தி செய்ய சுலபமான வழி எது? என்பதை இந்த வார ஆன்சிக சிந்தனையாக சிந்திப்போம்!
நமக்காகவோ, பிறருக்காகவோ வெளியிடத்தில் அதாவத கோயில் விக்ரகம் முன்பும், சக்கரம்,யாகம்,ஹோமம் போன்ற வழிபாடுகளை புரியும் புரோகிதர்கள்,சாஸ்திரிகள்,அர்ச்சகர்கள் செய்யும் பூஜையை பரார்த்த பூஜை அதாவது புறவழிபாடு என்கிறோம்.
நம்முடைய பிரார்த்தனையை இன்னொருவர் ஊடகமாக இருந்து இறைவனிடம் சேர்ப்பது ஆகும்.
இது எப்படி என்றால் நமக்கு தேவையான ஒன்றை அரசிடமிருந்து பெற அதிகாரிகள் மூலம் விண்ணப்பித்தது, அதற்கான வழிமுறைகளை பின்பற்றி பெறுவது போன்றது.இதை தான் நாம் செய்துகொண்டிருக்கிறோம்.
இன்றைய அவசர வாழ்க்கையில் காலையில் எழுந்து, குளித்து, சூரியநமஸ்காரம் செய்து, அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று பூஜை,வழிபாடு செய்துவிட்டு, பின்னர் சாப்பிட்டு விட்டு அலுவலகம் செல்வது என்பது நடக்கிற விஷயமா, என்ன? காலையில் எழுந்ததுமே ஆயிரத்தெட்டு வேலை இருக்கும் இதை முடிக்கவே நேரமில்லாதப்போது எப்படி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வதாம்? அப்படி என்றால் வழிபாடு செய்யவேண்டாமா? எப்போது நேரம்,ஓய்வு கிடைக்கிறதோ அப்போது வழிபாடு செய்துகொள்ளலாம் என்றிருபது சரியாகுமா? இப்படி எல்லாம் கேள்விகள் எழும். நீங்கள் காலத்துக்கு ஏற்ப மாறிகொண்டது போல, பக்தி செய்யும் முறையையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டால் போதும். அதற்கு மிக எளிமையான வழி இருக்கிறது. அது பர்சனல் பக்தி . இதை அகவழிபாடு என்றோ,
ஆன்மார்த்த வழிபாடு என்றோ சொல்லலாம்.இந்த பக்தி முறை அற்புதமானது. சுலபமானது. நமக்குள் நாமே வழிபட்டுகொள்வதாகும். அதாவது இறைவனை நம் மனதில் இருத்திக்கொண்ட தியானம்,மந்திரம் மனதுள் சொல்லிக்கொண்டு வழிபடுவதாகும். இந்த வழியில் நம் தேவைகளை பெற இன்னொருவர் தயவு தேவையில்லை. நம் தாயிடமோ,தந்தையிடமோ, அண்ணன், தம்பியிடமோ தம் குறைகளை, கஷ்டங்களை கூறி பயன் பெறுவது போலாகும். இதற்கு பிறர் கேரண்டியோ,ரெக்கமென்டேஷனோ தேவையில்லை.
கோயில் சென்று வழிபடும் முறையில் உடல் துõய்மை, மனத்துõய்மை, மடி, ஆச்சாரம் எல்லாம் தேவை. எல்லோருமே கருவறைக்குள் சென்று பூஜை செய்ய முடியாது. அதற்கெல்லாம் சாதி,சமய தீட்சை என பல நியமங்கள் உள்ளன.
பர்சனல் பக்தியில் அதெல்லாம் தேவையே இல்லை. நீங்கள் நினைத்த மாத்திரத்தில் மனதில் எந்த கோயில் கருவறையிலும் உங்களுக்குப்பிடித்த கடவுளுக்கு வழிபாடு செய்து சந்தோஷபடலாம்.
புறவழிபாடு செய்பவர்கள் உடல்நலம் இல்லாதபோது வழிபாடு செய்ய முடியாது.
"வாயானை மனத்தானை நின்ற
கருத்தானை கருத்தறிந்து முடிப்பான் தன்னை என்று அப்பர் அடிகள் சொல்வது ஆன்மார்த்த பூஜைபற்றியதே. ஊனக்கண்ணால் காணமுடியாத இறைவனை மனக்கண்ணால் காண இந்த முறை வழிபாடு உதவும்.
"ஓம் நமசிவாய' என்ற மகா மந்திரத்தை மனதுள் நினைப்பதே பர்சனல் பக்தியின் முதல் வழி. இதை செய்தாலே போதும் கோயில் செல்ல முடியலையே, கண்ணார கடவுளை தரிசனம் செய் முடியலையே... இப்படி எல்லாம் ஆதங்கம்பட தேவை இருக்காது. உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் "ஓம் நமசிவாய' மகா மந்திரத்தை மனதுள் நினைத்துக்கொண்டிருங்கள். காலையில் படுக்கையில் எழுந்தவுடன் முதல் வேலையாக ஒரு 5 நிமிடம் மகா மந்திரத்தை நினத்துக்கொண்டு பின் மற்ற வேலையை பாருங்கள். கடைக்கு பால் வாங்க செல்லும் நேரத்தில், குளிக்கும் நேரத்தில், பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து செல்லும் நேரத்தில், ஆட்டோவிலோ, பஸ்சிலோ செல்லும் நேரத்தில், லன்ஞ் நேரத்தில், மாலையில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு திரும்பும் போது பஸ்சில் வரும் நேரத்தில் என இப்படி கிடைக்கும் எந்த நேரத்திலும் மகா மந்திரத்தை மனதுள் சொல்லிக்கொண்டிருங்கள். இப்படி செய்வது தான் பர்சனல் பக்தி!
அடுத்ததாக கொஞ்சம் கூடுதலாக நேரம் கிடைத்தால் குறைந்த பட்சம் பத்துநிமிடம் கிடைத்தால் பர்சனல் பக்தியின் இரண்டாவது வழியை பழகலாம். அந்த வழிமுறையும் எளிமையானது தான். சுலபமானதுதான். இதோ அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.இரண்டாவது வழியை எப்படி செய்யவேண்டுமென்றால் மூலாதாரத்தில் "ஓம் 'என்றும் சுவாதிட்டானத்தில் "ந' என்றும் மணிபூரகத்தில் "ம' என்றும் அநாகத்தில் "சி' என்றும், விசுத்தியில் "வா' என்றும், ஆக்ஞையில் "ய' என்றும் நினைத்து கீழேயிருந்து மேல் நோக்கி செல்வது கீழ்முறை அல்லது ஏறுமுறை என்று திருமூல ர் திருமந்திரத்தில் கூறியவழிமுறையாகும்.
உங்களுக்கு புரியும்படி எளிதாக சொல்ல வேண்டும் என்றால் முதுகு தண்டின் கீழ் "ஓம்' என்று நினைத்து, அதற்கு மேலே இருக்கும் குறிக்கு சற்றுமேலே "ந' என்று நினைத்து, தொப்புள்கொடி புள்ளியில் "ம' என்று நினைத்தும், இருமார்புகாம்புகளுக்கு மத்தியில் உள்ள குழியில் "சி' என்று நினைத்தும் தொண்டைக்குழி மத்தியில் "வா' என்று நினைத்தும், இரு புருவமத்தியில் "ய' என்று நினத்துக்கொண்டிருப்பது தான் இரண்டாம் படிநிலை. உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் பக்தி செய்யும் முறை தான் மேற் சொன்ன முறை. இதை பின்பற்ற எல்லோருக்கும் முடியும் தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக