வியாழன், 30 ஜனவரி, 2014

ஜல சமாதியான ஒரு நகரம்! - தேவராஜன்.


ஜல சமாதியான ஒரு நகரம்! - தேவராஜன். 1500 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது ஒரு மிகப்பெரிய ஆழிப்பேரலை. அது இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே தந்த தமிழ் இனம் வசித்த ஒருநகரத்தை கடல் வாய்க்கொண்டு குடித்துவிட்டது. அந்த அழகிய நகரத்தின் பெயர் காவிரிப்பூம்பட்டினம்! இந்த நகரின் அருமை, பெருமை, அழகை, சிறப்பை மிக அழகாக வர்ணிக்கும் இலக்கியங்களில் முதன்மையானது இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரம். மேலும் சீத்தலைச்சாத்தனார் எழுதிய மணிமேகலை காவியம், சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை நூல்களுள் சில பாடல்களும், பத்துப்பாட்டில் பொருநர் ஆற்றுப்படையும், பட்டினப்பாலையும் சொல்லலாம். சிலப்பதிகாரம் இந்த ஊர் எழிலை வர்ணிப்பதைப் பார்க்கலாமா! காவிரிப்பூம்பட்டினம் நகரம் அழகான இரண்டு முக்கிய ஊர்களை கொண்டிருந்தது. ஒன்று கடலோரம் இருந்த மருவுர்பாக்கம். மற்றொன்று இதன் மேற்கே அமைந்த பட்டினப்பாக்கம். இந்த இரண்டு ஊர்களையும் பிரித்து, குறுக்கே அமைந்த அழகிய மரத் தோட்டங்கள். இந்த தோட்டத்து மர நிழலில் தான் தினமும் அங்காடிகள் நிறைந்த சந்தை நடைபெற்றது! பகல், இரவு என 24 மணி நேரமும் செயல்பட்டுள்ளது! பகல் அங்காடியின் பெயர் ‘நாளங்காடி‘, இரவில் நடப்பது ‘அல்லங்காடி‘ !! மருவுர்பாக்கம் மாட மாளிகைகள் இருந்தன. அதில் நிலாமுற்றமும் அழகிய அறைகளும் மான் கண் போன்ற அமைப்பில் காற்றுவரும் சாளரங்களும் கொண்டிருந்தன. யவனர் எகிப்தியர் மற்றும் கிரேக்கர் வீடுகள் இருந்தன. நகரவீதியில்வண்ணக்குழம்பு,சுண்ணப்பொடி,சந்தனம்,தொடுத்தபூக்கள்,, புகை தரும் அகில் முதலானவை விற்றனர். பட்டுநூல், எலிமயிர்,பருத்திநூல் நெய்யும்தொழில் புரியும் சாலியர் வீதி காருகர் வீதி எனப்பட்டது. பொன் வணிகர் வீதியில் பவளம், அகில், முத்து மாணிக்கம் பொன் ஆகியன விற்கப்பட்டது. எண் வகைக்கூலமும் தானியம் விற்கும் கூலக்கடைத்தெரு. பிட்டு வணிகர் , அப்பம் சுடுவார், கள்விற்பார், மீன் விற்கும் பரதவர், உப்பு விற்கும் உமணர், வெற்றிலை விற்பார்,கயிறு விற்பார், ஆட்டிறைச்சி விற்பார்,எண்ணை வணிகர்,வெண்கலகன்னார்,செப்புக்கலன் விற்பார்,மரவேலை செய்யும் தச்சர்,கொல்லர்,சித்திரம் வரைவோர்,மண்ணால் உருவம்செய்வோர்,பொன்செய்கொல்லர், மாணிக்க வேலை செய்யும் தட்டார்,தையல்காரர்,துணியால் உருச்செய்வோர்,குழல் யாழ் இசைக்கும் பாணர்,சிறிய கைத்தொழில் செய்வாரும்,குற்றேவல் செய்யும் வேலைக்காரர்களும் வாழ்கின்ற இடங்களும் மருவூர்ப்பாக்கத்தில் இருந்தன. பட்டினப்பாக்கம்: அரசர்வாழும் வீதி,தேர் ஓடும் வீதி,கடைதெரு, பெரியகுடிப்பிறந்த வணிகரது மாடங்கள் கொண்ட தெரு, வேதியர், உழவர்,சோதிடர், மாணிக்கவேலை செய்வோர், நின்று புகழ் படும் சூதர், அமர்ந்து புகழும் மாகதர் வேதாளிகர் , நாழிகை கணக்கர், சாந்திகூத்தர், காமக்கிழத்தியர் ஆகும் பரத்தையர் , ஆடல் கூத்தியர், அப்போதைக்குப்பூச்சூடும் மடந்தையர், ஏவல் தொழில் செய்வோர், பல்வகை வாத்தியம் வாசிப்போர்,விகட கவிகள், குதிரை வீரர் ,யானப்பாகர்,தேர்ப்பாகர்,காலாட்படைத்தலைவர் ஆகியோர் அரசனின் பெரியகோயிலைச்சூழ வசிக்கும் பெரியோர் நிறைந்த பகுதி பட்டினக்பாக்கம். ஐவகை மன்றங்கள் பொருளைக் களவு செய்வோரை வெளிப்படுத்திக் காட்டுவது வெள்ளிடை மன்றம். ‘இலஞ்சி மன்றம்‘ எனும் பொய்கை மன்றில், கூன், குருடு, ஊமை, செவிடு, தொழுநோயர் ஆகியோர் மூழ்கி வலம் வந்தால் குறை நீங்கி நலம் பெறுவர் எனக் கருதப்பட்டது. நெடுங்கல் மன்றத்தில் ஒளி வீசும் நெடிய கற்கள் நடப்பட்டிருக்கும். வஞ்சகர்களால் மருந்து வைக்கப்பட்டுப் பித்தம் கொண்டோர் - நஞ்சுண்டு துன்புறுவோர், நச்சவரம் தீண்டப்பட்டோர் ஆகியோரெல்லாம் ஒள்ளிய நெடிய கற்களைச் சுற்றி வந்து நலம் பெறுவர். செங்கோல் தவறினாலும், அறங்கூறவையத்தார் நடுவுநிலை பிறழினும், அதனை நாவாற் கூறாமல், கண்குறிப்பில் காட்டும் பாவைப் படிவத்தைக் கொண்டிருந்தது பாவை மன்றம். ஏற்றுமதி- இறக்குமதி காவிரிப் பூம்பட்டினம் துறைமுகத்தில் அயல்நாட்டுக் குதிரைகள் வந்து இறங்கின. தமிழக மிளகு, அகில், துகில், முத்து, மணி, பவளம் முதலியன பிறநாடுகளுக்கு மிகுதியாக அனுப்பப்பட்டன. இவ்வளவு சிறப்பு பெற்ற காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த கோவலன், கண்ணகி,மாதவியின் கதையைக் கடலோர உப்புக்காற்று காலந்தோறும் பேசிக்கொண்டே இருக்கிறது. பாக்ஸ் செய்தி வருடா வருடம் தவறாமல் ‘இந்திர விழா‘ கொண்டாடும் சோழ மன்னன், அந்த ஆண்டு கொண்டாடத் தவறியதால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி அவனின் நகரை அழித்ததாகக் கூறுகின்றது மணிமேகலை. இங்கு கிடைக்கப்பெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு இந்த ஊரில் ‘சிலப்பதிகார அருங்காட்சியகம்‘ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 27 ஜனவரி, 2014

வானந்தரத்தில் ராட்சச நடுக்கல்கள்! - தேவராஜன்.


வானந்தரத்தில் ராட்சச நடுக்கல்கள்! - தேவராஜன். **************************************************************************** இங்கிலாந்து நாட்டின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள ஸ்டோன்ஹென்ஞ் நினைவுச் சின்னம் வரலாற்றுப் புகழ் பெற்றதாகும். உலகின் பாரம்பரிய நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பூமியில் புதைக்கப்பட்ட கருங்கல் பலகைகளால் ஆன ஒருவட்டவடிவமான அமைப்பாகும். இங்கிலாந்தில் வில்ட்ஷயர் பகுதியில் அமைந்து இருக்கும் இந்த இடம், நம் ஊர் கிராமங்களில் நுழைவு களில் இருக்கும் சுமைதாங்கிக் கற்களை ஞாபகப்படுத்துகிறது. இந்தக் கற்கள் ஒரு வட்டத்தை உருவாக்குகின்றன. இந்தக் கற்கள் எல்லாம் கி.மு. 3000ல் இருந்து இங்குதான் இருக்கின்றனவாம். ஒவ்வொரு கல்லும் டன் கணக்கில் எடை கொண்டவை. இவ்வளவு எடையுள்ள கற்கள் சக்கரம் பயன்பாடு மற்றும் இயந்திரங்கள் இல்லாத காலத்தில் எப்படி கொண்டுவரப்பட்டன என்பவை நம்பமுடியாத ஆச்சரியமா நீள்கிறது. இவை எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பதும் உலகின் தீரா மர்மங்களில் ஒன்றாக இந்த ஸ்டோன் ஹென்ஜ் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த ஸ்டோன் ஹென்ஜ் கற்களின் காலம் தோராயமாக 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கணித்திருக்கிறார்கள். இன்றைய இங்கிலாந்து நாட்டின் மிகப்பழமையான புராதனச்சின்னங்களில் இதுதான் முதலிடமாக கருதப்படுகிறது. அதன் மர்மமும் அதன் கூடுதல் சிறப்பாக இருக்கிறது. ஸ்டோன் ஹென்ஜ் பார்ப்பதற்கென்ற உலகளவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கில் தினமும் வருகிறார்கள். ஒரு சில மலைகளைத் தாண்டிச் செல்லும் பயணத்தில் திடீரென இந்த அமானுஷ்ய இடத்துக்குச் செல்லலாம்! உயர்ந்த மலைப்பரப்பில், பச்சை பசேல் புல்வெளி மத்தியில் உறைந்த மவுனத்தின் உருவாக நிற்கும் கற்களும், இந்த இடத்தில் நிலவும் பேரமைதியும், வீசும் வித்தியாசமான காற்றும், பளீர்ரென பட்டுத் தெரிக்கும் சூரிய வெளிச்சமும் உங்களுக்குள் ஒரு திகில் படப்படப்பையும் மர்மத்தாக்கத்தையும் நிச்சயம் உண்டாக்கும். ஸ்டோன் ஹென்ஜ் உருவாக்கப்பட்ட விதமாக ஆராய்ச்சியாளர்களால் கணிக்கப்பட்ட தகவல்கள் சில இருக்கின்றன. அவை: 1) முதலில் கி.மு.3100ம் ஆண்டில் மதச்சடங்குகளுக்காக தொடர் பள்ளங்கள் தோண்டப்பட்டிருக்கின்றன. 2) அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான் இந்த கல் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. வேல்ஸ் மலையிலிருந்து பெரிய பெரிய கருங்கற்கள் கிட்டத்தட்ட 240மைல் தொலைவுக்கு எடுத்துவரப்பட்டிருக்கிறது. சக்கரம் கண்டுபிடிக்கப்படாத காலகட்டத்தில் எதற்காக, யாரால், எப்படி இந்தக் கற்கள் இவ்வளவு தூரம் எடுத்து வரப்பட்டிருக்கும் என்பது மர்மமே. இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள் முற்றுபெறாத ஒரு இரட்டை வட்ட வடிவில் மிட்சம்மர் சூரிய உதயத்திற்கு அலைன்மெண்ட் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டிருக்கிறது. 3) இதன் முன்னர் மூன்றாவது நிலையாக கி.மு.2000வது ஆண்டில் மேலும் சில கற்கள் 25மைல்களுக்கு அப்பால் உள்ள இடத்திலிருந்து எடுத்துவரப்பட்டிருக்கிறது. 4) இதன் பின்னர் மேலும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு யாரோ ஒரு சிலரால் இன்றைய குதிரைக் குளம்பு போன்ற வட்ட வடிவத்தில் இந்தக்கற்கள் மறுஒழுங்கு செய்யப்பட்டு அடுக்கப்பட்டிருக்கிறது. இன்று வரையிலும் இந்தக்கற்கள் எதற்காகஅடுக்கப்பட்டிருக்கிறது? யாரால் அடுக்கப்பட்டது? யாருமில்லாத வானந்தரத்தில் வெட்ட வெளியில் நடப்பட்டிருக்கும் இந்தக் கற்களின் உபயோகம் என்ன? யாருக்கு அது உபயோகப்பட்டிருக்கும்? இந்தக் கற்கள் சொல்லும் செய்தி என்ன? ம்ஹூம் இதுவரை எந்தவொரு முடிவையும் பதிலையும் இந்த உலகத்துக்கு யாரும் சொல்லவும் வில்லை! நட்டக்கல்லு பேசுமா? அது பேசினால்தான் உண்மை தெரியுமோ என்னவோ? அது வரைக்கும் இது ஒரு வழிபாட்டுத்தலம், வானவெளி சம்பந்தப்பட்ட காலண்டர், சுடுகாட்டு மயானம் என்று விதவிதமான செவி வழிக்கதைகள் சொல்லப்பட்டாலும் இதன் உண்மையான தத்துவம் அல்லது இதன் பயன்பாடு இன்னமும் ஆராய்ச்சியாளர்களால் தீர்க்கப்படாத ஒரு மர்ம முடிச்சுகளாகத்தான் உள்ளது. பாக்ஸ் செய்தி கச்சிதமாக வரைந்த ஒரு வட்டம் போல் இருக்கும் இந்தக் கற்கள் நிற்கும் இடம். மதி ரீதியிலான சடங்குகளுக்கான எந்திரமாக இருக்குமோ என்ற கருத்தும் நிலவுகிறது. ஸ்டோன் ஹென்ஜ் கற்கள் புதைக்கப்பட்ட பகுதியின் அடியில், நிறைய எலும்புக்கூடுகள் இருப்பதால், இது கல்லறை அல்லது நம்மூர் பழங்காலத்து நடுக்கல் போல இருப்பதாகவும் பலர் கருதுகிறார்கள். ஆனால், எலும்புகளைத் தவிர மனிதர்கள் பயன்படுத்தும் எந்தப் பொருளும் இங்கே இல்லை. இதனால் வேற்றுக் கிரகவாசிகள் பூலோக மனிதர்களைப் பலி கொடுத்து ஏதேனும் செய்தார்களா என்றும் மர்மமும் தொடர்கிறது. *********

வெள்ளி, 17 ஜனவரி, 2014

மாயமான மாயா இனம்! - தேவராஜன்.


மாயமான மாயா இனம்! - தேவராஜன். மெக்சிகோவின் கிழக்குப் பகுதியில் உள்ள மழைக்காடுகளுக்குள் பிரமிக்க வைக்கும் சிதலமடைந்த கட்டங்கள், பிரமீடுகள், வழிபாட்டு தலங்கள் என அமைந்த ஒரு நகரொன்றை விஞ்ஞானம் மற்றும் கலைக்கான ஸ்லோவேனிய கல்லூரியின் துணைப் பேராசிரியரான ஐவன் ஸ்பிரஜக் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். அந்த நகரில் குறித்த பகுதியில்15 பிரமிட்டுக்கள் (75 அடி உயரமான பிரமிட் ஒன்று அடங்கலாக) , விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கான மைதானங்கள், உயரமான செதுக்கப்பட்ட கற்தூண்கள், போன்றவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த அடர்ந்த, வழிதெரியாத, வெளிச்சம் புகாத காட்டில் எப்படி இவ்வளவு பெரிய சிற்பக்கலையுடன் கட்டிடங்களை எழுப்ப முடிந்தது? இவர்களது கட்டிடங்கள் ‘டன்’ கணக்கிலான கற்களை கொண்டு அந்த மர்ம நகரத்தினில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவுப்பெரிய கற்களை அடர்ந்த காட்டிற்குள் கொண்டு வந்து அவற்றை சரிவர அடுக்கி கட்டிடங்களையும் பிரமிடுகளையும்அமைத்துள்ளதும் ஆச்சரியமிக்கவையாகும். இந்த அடர் காட்டுக்குள் அவர்கள் கண்டுபிடித்த அந்த புதையல் நகரத்தை மாயன் நகர் என்கிறார் ஆராய்ச்சியாளர்கள். மாயா நகர் பெருமைகள், மாயா மக்களின் திறமைகள், சாதனைகள், அவர்களின் வாழ்க்கை காலம் பற்றி அறிஞர்கள் ஆய்வுகளின் வழியாகத் தெரிந்துகொள்ளலாம்! மாயா நாகரீகம் வரலாறு எனும் பேழையில் புதைந்துபோன ஒரு நாகரீகம் தான்மாயா நாகரீகம். மாயா இனத்தவர்களின் துல்லியமான கணிதமுறை, பிரமிக்கவைக்கும் கட்டிடக்கலை, வியக்கவைக்கும் வானிலை கணிப்புக்கள், இதையெல்லாம் விட வருங்காலத்தை கணித்து கூறும்அவர்களது நாட்காட்டி என பிரமிக்கவைக்கிறார்கள் மாயாக்கள். மாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. எழுத்து மொழி கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. ஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. இதில் இப்போது கண்டெடுக்கப்பட்டவை தப்பியவை நான்கு நூல்கள் தாம். மாயா நாகரீக காலம் வரலாற்றுஅறிஞர்கள் மாயா நாகரிகத்தின் நினைவுச்சின்ன கட்டமைப்புகளை கார்பன் தேதியிட்டல் மூலம் ஆராய்ந்த போது இவர்களின் நாகரிகமானது கி.மு. 2600 ம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. மாயா நாட்காட்டியானது கி.மு. 3114 ஆகஸ்ட் 11 ல் இருந்து தொடங்குகிறது. மாயாக்களின் வானியல் அறிவு மாயன்கள் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை மிக நுணுக்கமாக கணித்துஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மானிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியொட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன. இவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் படிப்படியாக அழிந்து போனதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் உறுதிப்படக் கூறவில்லை. அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்திருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். மாயாக்களின் மறைவிற்கு இயற்கை சீற்றங்களே முக்கிய காரணம் என சிலர் கூறுகிறார்கள். மாயாக்களின் கலை திறன் மிகவும் நுட்பமானது, சிற்ப கலையும் வரையும் திறனும் இவர்கள் விட்டுச் சென்ற அற்புத பொக்கிஷங்களின் வடிவில் இன்றளவும் நம்மால் காண முடிகிறது. பாக்ஸ் -1 ஆராய்ச்சியாளர்கள் மாயாக்களின் நாகரிகம் கி.மு 2000 ஆண்டில் தொடங்கி சிறுகச் சிறுக வளர்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்கள். கி.மு 2000 முதல் 250 வரை வளர்ச்சி காலமாகவும், 250 தொடங்கி 900 வரை மாயாக்களின் பொற்காலமாகவும் கருதப்படுகிறது. 7 மற்றும் 8-ம் நூற்றாண்டுகள் மாயாக்களின் உச்சகட்ட பொற்காலம் எனவும் கூறுகிறார்கள். * பாக்ஸ்-2 மாயாக்களால் டிகல், பேலன்கூக், கூபன்,கலாக்முல்,டாஸ்பிளாஸ், உசாக்டூன், அல்டன் ஹ போன்ற நகரங்கள் மிகவும் திறமையாக உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றுள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது பிரமிடும் அரண்மனையும் ஆகும். மாயா நகர பகுதியில் காணப்படும் ஸ்டிலே எனப்படும் கல் வகையில் இவர்களின் ஆட்சிமுறை, போர்களில் பெற்ற வெற்றி மற்றும் பல முக்கிய தகவல்கள் ஹெரோக்ளிபிக் எழுத்துவடிவில் செதுக்கப்பட்டுள்ளது. மாயாக்கள் தூர தேச வியாபாரத்திலும் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கபட்ட உண்மைகள். பாக்ஸ்-3 19ம் நூற்றாண்டில் மாயா நகர பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவையாவும் புரியாத புதிராகவே இருந்தது. 1960 முதல் 1970 வரையில் அனைத்து எழுத்துக்களுக்கும் அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு படிக்கப்பட்டன. இந்திய நாகரிகத்தை அடுத்து மாயாக்களும் ‘0’ பூஜியத்தை கணக்கு வழக்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் 0 முதல் 20 வரையிலான எண் வகைகளை அமல்படுத்தியிருக்கிறார்கள். கல்வெட்டுகளில் இவர்கள் லட்சம் வரையில் கணக்கு வழக்குகளை எழுதி பார்த்திருக்கிறார்கள். அவை பெரும்பாழும் வான் ஆராய்ச்சிக்கு பாயன்படுத்தப்பட்டிருக்கிறது. கிரகங்களின் அசைவுகளும், வான் நிகழ்வுகளும் துள்ளியமாக கணிக்கப்பட்டுள்ளன. **********

தற்கொலை பறவைகள்! - தேவராஜன்.


தற்கொலை பறவைகள்! - தேவராஜன். ஜதிங்கா ஒரு அழகிய மலைவாசஸ்தலம். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகின் மடியில் அமர்ந்து மகிழ்கின்றனர்.இங்குள்ள வானுயர் மரங்கள், பரந்த செடி கொடிகள்,அடர்ந்த பசுமை, தெளிந்த நீரோடைகள் , தலைக்கு மேல் குளிர் துõவும் மேகங்கள் என மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயங்கள் பல உண்டு. இந்த ஜதிங்கா மலைக்கிராமம் சில்சார் நகரத்தில் (அசாம் மாநிலம்) இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு ஆச்சரியப்பட வைக்கும் சம்பவம் ஆண்டுதோறும் நிகழ்கிறது! அந்த நிகழ்வில் அடங்கி இருக்கும் மர்மம் மட்டும் இன்று வரை வெளிபடவே இல்லை! ஜதிங்காவில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு இருக்கிறது. அந்தப் பள்ளத்தாக்கில்தான் அந்த பயங்கரம் நடைபெறுகிறது! உலகில் இன்னும் தெளிவுபடுத்தப்படாத பல மர்மங்கள் இருக்கின்றன. இந்த வரிசையில்தான் செப்டம்பர் முதல் நவம்பர் வரை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஜதிங்கா கிராமத்தில் நடைபெறும் ‘பறவைகள் தற்கொலை’யும் புரியாத புதிராக இருக்கிறது. ஜதிங்காவின் அழகிய பள்ளத்தாக்கில் தான் கொத்து கொத்தாக ஆயிரம் ஆயிரம் பறவைகள் பறந்து வந்து தற்கொலை செய்து கொள்கின்றன! என்னது பறவைகள் தற்கொலை செய்து கொள்கின்றனவா! ஆச்சரியமாக இருக்கிறதா! மனிதர்கள் தான் விரக்தி, தோல்வி, கஷ்டம் இப்படி பல விஷயங்களால் மன உளைச்சல் உந்துதலில் தற்கொலைö சய்து கொள்வான் அல்லது கொள்வார்கள். பறவைகள் எப்படி? எதற்காக? எதனால்? அட பறவைகளுக்குக்கூடவா மனிதர்கள் போல துன்பம், துயரம், தோல்வி, விரக்தி எல்லாம் இருக்கும்? விடை யாருக்குத் தெரியும்? அந்தப் மர்மப் புதிருக்குப் பறவைகள்தான் விடை சொல்ல வேண்டும். இந்தக் கிராமத்தில் வழங்கப்படும் நாட்டுப்புற கதைகளின் படி இந்த கிராமத்தில் பறவைகள் தற்கொலை செய்து கொல்வதாக நம்பப்படுகிறது. எனவே இந்தக் கிராமம் சுற்றுலா பயணிகள் மத்தியில் புகழ் பெற்று விளங்குகிறது. அறிவியல் ஆய்வுகள், பறவைகள் உண்மையில் தற்கொலை செய்து கொள்வதில்லை, ஆனால் கொலை செய்யப்படுகின்றன என்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இலையுதிர் மாதத்தில் (செப்டம்பர், நவம்பர்) வரும் அமாவாசை இரவுகளில், இந்தப் பள்ளத்தாக்கில் பறக்கும் பறவைகள் தங்களது இலக்கிலிருந்து தவறி விடுவதாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளத்தாக்கு பகுதியில் பறக்கும் பறவைகள் அனைத்தும் ஒரே நாளில் உயிரை விடுகின்றன. அதாவது தற்கொலை செய்துகொள்கின்றன. இங்கு குறிப்பிட்ட 1.5 கி.மீ. தொலைவில் 200 மீட்டர் சுற்றளவில் பறக்கும் பறவைகள் மட்டும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவைத் தேர்ந்தெடுக்கின்றன. இங்கு பறந்து வந்த குறிப்பிட்ட பறவைகள் ஏதேனும் தொற்று வியாதியால் இறந்து இருக்கலாம் என நம்பிய மருத்துவர்கள் ,அவைகளை ஆய்வு செய்தபோது, இறந்த எந்தப் பறவையும், எந்த வித நோயாலும் தாக்கப்பட்டிருக்கவில்லை என்பதை அறிந்தனர். அந்த நாளில் நிலவிய சூழ்நிலை, தட்பö வப்பம் மற்றும் அன்று எதிர்பாராமல் பெய்த பலத்த மழையின் காரணமாக , தங்கள் இருப்பிடத்தையும், உணவு வரத்தையும் அழித்ததை எண்ணி மனம் வெதும்பி இறந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர். கிராமங்களில் இரவு நேரங்களில் காடுகளுக்குத் தீவைப்பதால் தப்பி ஓடும் பறவைகள், திக்கு தெரியாமல் தத்தளித்து ஏதாவது ஒரு இடத்தில் பயத்துடன் ஒதுங்கும். அப்போது அதன் உடலில் ஏற்படும் மாறுபாடுகள், ரத்த ஓட்டத்தைப் பாதித்து, பின் மூளையும் பாதிக்கப்பட்டு சுய உணர்வின்றி, இவை தற்கொலை முடிவை மேற்கொள்கின்றன என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. மின்னல் தாக்கி இருக்கலாம், அல்லது ஆலங்கட்டி மழை தாக்கி இறந்திருக்கலாம், அல்லது புது வருடப் பிறப்பினையொட்டி வான வேடிக்கை கேளிக்கையினை தொடர்ந்து இப்படி ஆகியிருக்கலாம், அல்லது விஷமேறிய உணவை உண்டிருக்கலாம் என்று பல கோணங்கள் முன்வைக்கப்படுகிறது. பொதுவாக வயிறு உபாதை ஏற்படும்போது பறவைகளும், விலங்குகளும் சில மூலிகைகளை உண்டு சரி செய்துகொள்கின்றன என்பது கிராமங்களில் அறியப்படும் அனுபவத் தகவல்கள். மனிதனின் சுயநலமும், பேராசையும், காலநிலை மாறுபாடும், இயற்கையைச் சீரழித்து ,மாறுபாடுகளுக்கு உள்ளாக்குவதுமே இவ்வாறான விநோத நிகழ்வுகளுக்கு முக்கிய காரணங்கள் என்பதை மனிதன் ஏற்றுக்கொள்ளும் வரை இது போல மர்மங்கள் தொடரத்தான் செய்யும். பாக்ஸ் செய்தி கடந்த சில ஆண்டுகளாக வருடப்பிறப்பின் வார இறுதியில் கூட்டம் கூட்டமாய் பறந்த பத்தாயிரம் பறவைகளுக்கும் மேல் வானத்தில் இருந்து பொத், பொத்தென்று செத்து ஒரு சதுர மைல் அளவில் உள்ள ஏரியா முழுதும் விழுந்திருக்கிறதாம்! இந்த சம்பவம் நடந்ததுஅமெரிக்காவில் உள்ள அர்க்கான்சஸ் என்ற மகாணத்தில். அதுமட்டுமல்ல அமெரிக்காவில் லுõசியானா, ஓசார்க், பீபீ டவுன் சாலைகளில் ஆயிரக்கணக்கான பறவைகள் கொத்து கொத்தாக செத்து வீழ்ந்துகிடந்ததாம்!

வியாழன், 2 ஜனவரி, 2014

வாழத் தகுதியற்ற நகரம்! - தேவராஜன்


தினமும் இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பேர் வந்து இறங்கிய இடம். சென்னையிலிருந்து இந்தோ-சிலோன் போட் மெயில் மூலமாக வரும் பயணிகள், ரயிலிலிருந்து இறங்கி, கப்பல் மூலம் தலைமன்னார் செல்வதற்காக ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்ட தளம். ராமாயணத்திலும் சங்க இலக்கியத்திலும்பேசப்படும் இடம். வங்க கடலும் இந்துமாக் கடலும் சங்கமம் ஆகும் இடம். இத்தனைச் சிறப்பு பெற்ற அந்த இடம் தான் தனுஷ்கோடி! இப்போது தனுஷ்கோடியில் நகரம் இருந்தது என்பதற்கான சான்றாக மிச்சம் இருப்பது சிதிலமடைந்த தேவாலயமும், சில கட்டடங்களின் இடிபாடுகளும், ஓலமிடும் கடற்கரையும் தான். இந்திய வரைப்படத்தில் இருந்து தனுஷ்கோடி என்ற நிலப்பரப்பை காலம் கை கொண்டு அழித்தது, மூர்க்கத்தனமான கோரபசியோடு மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் அந்த நகரைப் புரட்டி, சுருட்டி கடலுக்குள் எறிந்த தினம் டிசம்பர் 22, 1964. தனுஷ்கோடியில் அன்று தொடக்கமே வழக்கத்தை விட, ஏதோ விபரீத விளைவுகளை உணர்த்தும்படி நகர்ந்தது. அதை உறுதி படுத்தும்விதமாக அதிகமான காற்றும் மழையும் அடித்துக்கொண்டிருந்தது. கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை. அன்று வங்கக் கடலில் தோன்றிய புயல் எங்கு ,எப்போது,கரையைக் கடக்கப் போகிறது என்பது பற்றியும் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. பாம்பன் பாசன்ஜெர் ரயில் எண் 653, பாம்பனில் இருந்து தனுஷ்கோடிக்கு சென்றுகொண்டிருந்தது. மணி பகல் 11.55. ரயில் தனுஷ்கோடியை நெருங்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன், பேய் காற்று அசுர வேகத்தில் வீசியது. வேகம் தீவிரம் அடைந்து, கடல் கொந்தளித்தது. தனுஷ்கோடியை புயல் தாக்கத் தொடங்கி இருந்ததால், அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் செயல் இழந்து இருந்தன. ரயில்வே சிக்னல், தந்தி கம்பங்கள் என எதுவும் வேலை செய்யவில்லை. டிரைவர் செய்வதறியாது திகைத்தார். கண் இமைக்கும் நேரத்தில் ஓலமிட்ட பேய்காற்றும் அதன் சவாரி செய்த பேரலையும் ரயிலை வாரி, சுருட்டி கடலின் வாயிக்குள் திணித்தது. ரயிலில் பயணித்த அத்தனை பயணிகளும் கடலுக்கு மதிய உணவானார்கள். தனுஷ்கோடி நகரின் நிலைமை அந்தோ பரிதாபம்! மின்கம்பங்கள் உடைந்தும் மின் கம்பிகள்அறுந்து ஊரே இருளில் மூழ்கியது. கட்டடங்களின் கூரைகள் பிய்த்துக் கொண்டு பறக்கத் தொடங்கின. அவசரகால தகவல் தொடர்புச் சாதனமான தந்திக் கம்பங்களும் அறுந்து தொங்கின, இன்ன நடக்கிறது என்று தகவல் சொல்லக் கூட அங்கிருந்தவர்களுக்கு வழி இல்லமால் போனது. அங்கு வசித்த மக்களில் பெரும்பாலனவர்கள் மீனவர்கள். அவர்கள் குடும்பம் குடும்பமாக பாதுகாப்பான இடம் தேடி நகரத் தொடங்கினார்கள். ஊர் முழுவதும் வெள்ளமும் சோகமும் பொங்கி வழிந்தது! அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலம் துரிதமாக செயல்பட்டார். மத்திய அரசின் உதவியை நாடினார். மத்திய அரசும் போர்கால அடிப்படையில் செயல்பட்டது. தனுஷ்கோடி துயரம் தேசியப் பேரிழப்பு என்று அறிவித்தது. ராணுவம் தொடங்கி முப்படைகளும் தனுஷ்கோடி நோக்கி விரைந்தன. முதல் தேவை நீரும் உணவும். வான்படை மூலம் ஹெலிகாப்டர்கள் மூலமாக உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தியக் கப்பல் படையின் மீட்புக் குழுவும் களத்தில் இறங்கியது. காப்பாற்றப்பட்ட மக்களை விட கண்டெடுத்த சடலங்களே அதிகம் என்று மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள். உயிர்ப்பிழைத்தவர்களை ‘சாரதா‘ என்னும் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரைந்தது. தனுஷ்கோடியை மணிக்கு 250 கி.மீ வேகத்தில் தாக்கிய புயல் 1500 அதிகமான மக்களின் உயிரைக் குடித்தது. 1500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை நீருக்குள் இழுத்துக் கொண்டது. டிசம்பர் 21, 1964ம் ஆண்டு முந்தைய தினங்களில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துறைமுகம், ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், போலீஸ் ஸ்டேஷன், சுங்க வரி அலுவலகம், தபால் நிலையம், பள்ளிக்கூடம், இந்துக் கோயில்கள், தேவாலயங்கள், கடைத்தெரு, ஐந்தாயிரம் பேர் வசித்த ஊர், எப்போதும் கடலில் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் என்று இருந்த தனுஷ்கோடி என்பது எல்லாம் பழைய கதை. இன்று இது வாழத் தகுதியற்ற நகர் என்று கடல் அலைகள் கரைக்கு வந்து, வேடிக்கைப் பார்ப்பவர்களிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறது. பாக்ஸ் செய்தி தனுஷ்கோடி கடற்கரை, வில்லைப் போன்று வளைந்து காணப்படும். இதனால் தான் தனுஷ்கோடி என்று பெயர் வந்தது. தனுஷ் என்றால் வில், கோடி என்றால் முனை என்ற அர்த்தத்தில் தனுஷ் கோடி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆசியாவின் 20 நூற்றாண்டுப் பேரிழப்பாக ஐ.நா சபை இந்த சம்பவத்தை அறிவித்தது. ‘வாழத் தகுதி இல்லாத ஊர்’ என்று தனுஷ்கோடியை அரசு அறிவித்துள்ளது. அரசாங்கம். ***************

மா நோ உமி மர்மங்கள்! - தேவராஜன்


மா நோ உமி மர்மங்கள்! - தேவராஜன் மா நோ உமி! முதியவர் ஒருவர் வெற்றிலைப்பாக்கு போட்டு,வாயில் குதக்கிக்கொண்டு சொல்லிய வார்த்தை என்று நினைத்து விட்டீர்களா! இந்த வார்த்தை ஜப்பான் மொழி வார்த்தை. இதன் பொருள் பிசாசு கடல் என்று அர்த்தமாகும். ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசு கடலுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’. அதாவது டிராகன் முக்கோணம். டிராகன் முக்கோணப் பகுதி கடல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசு கடல். இந்தக் கடல் பகுதி வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியதில்லையாம்! இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை. இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துவது பயங்கரமான மர்மமாகவே இருந்து வருகிறது. இந்த மர்மத்தீவு, பெர்முடா முக்கோணத்தின் நேராக, பூமி உருண்டையின் மறு பக்கத்தில் இருக்கிறது. பெர்முடா முக்கோணம் கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்கள்,விமானங்கள் போன்றவை காணாமல் போவது போலவே, இந்த பிசாசுக் கடல் பகுதி வழியாகச் செல்லும் கப்பல்களும்,விமானங்களும் மாயமாக மறைந்து போவதாக கூறப்படுகிறது. இந்த மர்மமான தொலைதல்கள் பற்றி ஜப்பான் கண்டுகொள்ளவில்லை. ஆனால், 1952 ம் ஆண்டிற்கும் 1954 ம்ஆண்டிற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இக்கடல் பகுதி வழியாக ஜப்பானின் ராணுவக் கப்பல்கள் சென்றன.இந்தப் பிசாசு கடல் பகுதியை கடந்தபோது அவை என்னவாயின என்பதும்அதில் பயணித்த 700 பேரின் நிலைஎன்ன ஆனது என்பது தெரியவில்லை. இந்த அதிர்சிகரமான சம்பவத்திற்குப் பிறகு ஜப்பான் அரசு இது பற்றி முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்காக 31 விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இந்த விஞ்ஞானிகள் குழு உடனடியாக டிராகன் முக்கோணம் நோக்கி பயணித்தது. ஆனால் இதில் பயங்கரம் என்ன என்றால், ஆராய்வதற்குச் சென்ற விஞ்ஞானிகளின் அந்த கப்பலின் நிலையும் என்ன ஆனதென்று தெரியவில்லை. இந்த மாய, மர்மங்கள் புரியாமல்,எதற்கு வம்பு என்று ஜப்பான் அரசாங்கம் அதனை ஆபத்தான பகுதியாக அறிவித்தது. இந்த மர்மங்கள் ஒருபுறம் இருக்கட்டும். உண்மை நிலை என்ன என்பது பற்றி விஞ்ஞானிகள் என்ன கருதுகிறார்கள் தெரியுமா? விஞ்ஞானிகள் ஆய்வின் படி ஜப்பானிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலும் எரிமலைகள் வெடிப்பதும்,நிலஅதிர்வுகள் ஏற்படுவதும் சர்வ சாதாரணமான ஒன்றே. இதே போன்ற நிகழ்வுதான் கடலுக்கடியிலும் எரிமலைகள் வெடிக்கின்றன. இதனால் கடலுக்கடியில் நில அதிர்வு ஏற்படுகிறது . இதனால் கடல் பரப்பின் மேல்பகுதியில் திடீர் திடீரென்று அலைகள் உருவாகின்றது. அப்பொழுது அந்த வழியாகச் செல்லும் கப்பல்கள் அதில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றன. என்கிறார்கள். ஜப்பான் நாட்டினர் ஒரு சிலர் என்ன கருதுகிறார்கள் தெரியுமா? ஒரு சுவாரஸ்யமான நம்மூர் புராணக்கதைப்போல ஒன்றை சொல்கிறார்கள். அதையும் தெரிந்து கொள்ளுங்கள். நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் இதற்கு காரணம் என்று நம்புகிறார்கள். அதற்கு, ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர். “மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்துவிட்டாலும், அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன” என்கின்றனர் அவர்கள். உண்மை என்னவென்று இதுவரை பெர்முடா முக்கோணத்தைப் போலவே, டிராகன் முக்கோணப் பகுதியும் கண்டுபிடிக்கப் படவில்லை. மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. பாக்ஸ் செய்தி: டிரையாங்கிள் முக்கோணம் பற்றி பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட துதான். பேட் இதழ் ’நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்’ என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது. அமெரிக்கன் லெஜன் இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 பற்றிய செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது. வின்சென்ட் காடிஸ் என்பவர் 1964 பிப்ரவரியில் அர்கோசி இதழில் பிளைட் 19 காணாமல் போனதை பிற மர்மமான தொலைதல்களுடன் இணைத்து அவற்றை ‘மரண பெர்முடா முக்கோணம் ‘ (ஆரம்பத்தில் தலைப்பு நம்பிக்கையிழக்கச் செய்யும் நீர்ப்பரப்பு என்கிற வகையில் இருந்தது) பிறகு, அந்த கட்டுரையை விரிவுபடுத்தி, கண்ணுக்குத் தெரியாத வெளிகள் , என்னும் தலைப்பில் ஒரு விரிவான புத்தகம் ஒன்று எழுதினார் ஜான் வாலஸ் ஸ்பென்சர் (லிம்போ ஆஃப் தி லாஸ்ட் , 1969); சார்லஸ் பெர்லிட்ஸ் (தி பெர்முடா டிரையாங்கிள் , 1974); ரிச்சார்டு ஒயினர் (தி டெவில்’ஸ் டிரையாங்கிள், 1974)ஆகியோரின் மற்ற பல படைப்புகளும் வெளியாயின. ******************