திங்கள், 7 ஜூன், 2010

( என் படைப்புகள்-2

1.மரணத்தின் மடியில்
வாழ்ந்த நடிகை!

( என் படைப்புகள் : தினமலர் பெண்கள் மலர் பிரசுரிக்கப்பட்ட பேட்டிகள், கட்டுரைகள்)
மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரிவதில்லை. என்றோ ஒருநாள் அது நிகழும் என்ற உண்மை மட்டும் எல்லாருக்குமே தெரியும். ஆனால் இந்த தாய்க்கு தான் இறந்து விடுவோம் என்று தெரியும். அதனால் தன் பிள்ளைகளிடம், "எப்போதும் உங்க கூடவே இருக்கமாட்டேன். ஆனால் இருப்பது போல உணர்வை, நினைப்பை தந்து கொண்டிருப்பேன். நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தால் பிரகாசமான நட்சத்திரம் மின்னுவதை பார்ப்பீர்கள். அந்த நட்சத்திரமாக நானிருந்து உங்களை நேசித்துக் கொண்டிருப்பேன்' என்று தன் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறி தன் இழப்பு பிள்ளைகளை பாதிக்காத வகையில் அவர்களை தயார் படுத்தியிருக்கிறார். அந்த தாய் ஜேட்கூடி. இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறப்பிற்கு முன் தன் பிள்ளைகளிடம் கூறிய வார்த்தைகள்தான் இவை.
இவரின் பெயரை சொல்வதை விட "பிக் பிரதர்' நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இன வெறி பேதத்தை துõண்டும் வகையில் பேசிய பெண் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.

லண்டனில் பெர்மான்டுசேவில் ஜூன் 6, 1981 பிறந்த இவர், ஆரம்ப காலத்தில் ஏழ்மையிலும், குடும்ப பிரச்னையிலும் தான் வளர்ந்தார். 5 வயதில் லண்டன்ஸ் பர்னிங் என்ற டி.வி. தொடரில் தோன்றினார். பின்னர், ஒரு பல் டாக்டரிடம் செவிலிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். 2002 ல் பிக்பிரதர் டிவி தொடர் நிகழ்சியில் கலந்து கொண்டு ஷில்பா ஷெட்டியிடம் சண்டைப்போட்ட பிறகுதான் மீடியாவின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. ஜேடியின் பேச்சைக் கேட்ட ஷில்பா ஷெட்டி மனம் உடைந்து அழுதார். இந்த நிகழ்ச்சியை லைவ்வாக பார்த்து உலக மக்கள் அதிர்ந்தனர். உலகளவில் பலரின் கண்டனத்துக்கு உள்ளான ஜேட், ஷில்பா ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர் அந்த நிகழ்சியிலிருந்து விலக்கப்பட்டார்.

பின்னர், இந்த கசப்பான சம்பவத்தை மறக்க, இந்தியர்களை அவமானப்படுத்தியதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் இந்தியாவிற்கு வந்து தெருவோர குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட நன்கொடை வழங்கினார் ஜேட். பிட்னஸ் வீடியோ மாடலாக நடித்து இவர் வெளியிட்ட அந்த வீடியோக்கள் மிகவும் பிரபலம்.

பிறகு, ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர் ஜெப்பிராஸியரை காதலித்து, அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். பிறகு ஜெப்பிஸியுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவரை விட்டு விலகினார். குழந்தைகள் இருவரையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். பின்னர் ரேயன் அமுவுடன் பழகிவந்தார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட, கடைசியாக ஜாக் தாவீத்துடன் நெருங்கி பழகி வந்தார்.

இந்நிலையில்தான் ஜேட்டுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். ஆனாலும் பலனில்லை. 2009 பிப்ரவரி மாதம் 4ம் தேதி அவரின் உடல் முழுவதும் புற்றுநோய் பரவிவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இனிமேல் ஜேட் நீண்டநாள் உயிர் வாழஇயலாது என்று தெரிவித்தனர்.

தன் இறுதி ஆசையாக ஜாக்தாவீத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அவரும் சம்மதிக்க, பிப்ரவரி 22ந் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களின் திருமண படத்தை ஒரு புகழ் பெற்ற பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக பெருந்தொகைக்கு ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதன்மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தார் ஜேட்.

மார்ச் 6ம் தேதி ஜேட்டின் நிலை மோசமானது. அவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த ராயல் மார்ஸ்டன் மருத்துவமனை சோகத்துடன் காணப்பட்டது. ஜேட் குணமடைய வேண்டும் என்று அவரின் நல விரும்பிகள் பிரார்த்திக் கொண்டிருந்தனர். மரணத்தின் விளிம்பில் ஜேட் போராடிக்கொண்டிருந்தார். கடைசியில் டாக்டர்கள் இனிமேல் அவருக்கு எந்த வைத்தியமும் செய்வது பிரயோசனம் இல்லை என கை விரித்து விட்டனர். இதனால், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் அவரின் கணவர் ஜாக்.

அடுத்ததடுத்த நாட்களில் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஜேட் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடலானார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. மார்ச் 22ம் தேதியன்று தெற்கு லண்டனில் உள்ள எசக்ஸ் பகுதியில் உள்ள அவரது கனவு இல்லத்தில் ஜேட் சுகமாய் துõங்கிக் கொண்டிருந்தார். பொழுது மலர்ந்தது. ஆனால், ஜேட் எழவில்லை. சுகமான துõக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இப்போது ஜேட்கூடியின் புதுகணவர் ஜாக் ஜாவீத்தே ஜேட்டின் இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக பாவித்து வளர்த்து வருகிறார். ஆசை மனைவியின் பிரிவு சோகத்தை அந்த இரு குழந்தைகளின் முகத்தைப்பார்த்து ஆறுதல் கண்டு வருகிறாராம்.

தேவராஜன்
***************************************************


2. பெண்கள் மானம்
கப்பலேறி போயாச்சு...

கமர்ஷியல் பிரேக்!
இந்த ஆங்கில வார்த்தை பட்டித்தொட்டி முதல் பட்டணம் வரை, பாப்பா
முதல் பாட்டி வரைக்கும் பழகிப்போன தமிழாகி வார்த்தை! உபயம்:
சின்னத்திரை.
தங்கள் பொருளைப்பற்றி சுயதம்பட்டம் அடித்து கொள்வதற்கு சொல்
லும் அலங்கார வார்த்தைக்குப் பெயர் தான் கமர்ஷியல் பிரேக்!
ஆரம்பத்தில் தங்கள் பொருளின் தரத்தை மிகைப்படுத்தி, உயர்வாக
நுகர்வோரிடம் எடுத்துச் சொல்ல நிறுவனங்களுக்கு விளம்பரம் மிகவும்
அவசியப்பட்டது.
ஆனால், இன்றைய விளம்பரங்கள், உங்களுக்குத் தேவைப்படும் பொருள்
களுக்காக செய்யப்படுவதாக இல்லை. உங்களிடம் அவற்றுக்கான தேவை
யை ஏற்படுத்தும் நோக்கில் இருக்கிறது. தேவையற்றப் பொருள்களை
வாங்க துõண்டும்படி விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன.
நாங்கள் காட்டும் விளம்பரப்பொருளை வாங்கு. வாங்காமல் போனால்
நீ பத்தாம்பசலி! நாகரிகமானவனல்ல; மலிவான மனிதனாய் சித்தரிக்கப்
படுவாய் என்று நம் வீட்டுக்குள்ளே வந்து பயம் காட்டுகிறது. அதற்கு
தகுந்தாற்போல விளம்பரம் சொல்லும் கருத்துகள் அமைக்கப்படு
கின்றது.
பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை சந்தை வளாகமாக்கி விட்டன.
குறிப்பாக, பெண்களைக் குறிவைத்து பொறிவைத்து பிடித்து அவர்களி
டம் தங்கள் பொருளைத் திணிக்கின்றன.
அதற்காக நம் பெண்களையே விளம்பர மாடல்களாக நடிக்க வைத்து
தங்களின் பொருள்களோடு பெண்களின் அழகு, கவர்ச்சி, தசையைப்பூசி
நம்மிடம் அவர்களின் பொருளை விற்று காசு பார்க்கின்றன.
பெரியத்திரையில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டது போதாது என்று
சின்னத்திரையில் காட்டப்படும் விளம்பரங்களில் மேலும் பெண்களின்
மானம் கப்பலேற்றப்படுகின்றது.
விளம்பரங்களில் பெண்களைக் காட்சிப் பொருளாக்கி, அவர்களின்
உடலை பாகம் பாகமாக பிரித்து காட்டியும், ஒட்டுமொத்தமாக அரை நிர்வாணப்படுத்தியும்
பெண்களை கேவலப்படுத்தி அவர்களின் பொருளை மிகைப்படுத்திக்
காட்டுகின்றன.
இந்திய விளம்பரங்களைப் போன்று வேறெதுவும் இப்படி பெண்களை
ஆபாசப்படுத்தி, கேவலப்படுத்தி சித்தரிப்பதில்லை.

சாம்பிளுக்காக சில விளம்பரங்கள்...

1. ஒரு மருத்துவமனையில் விபத்தில் அடிப்பட்ட இருஇளைஞர்கள் கை,
கால், தலையில் கட்டு போட்டு பெட்டில் படுத்துக் கிடக்கின்றனர்.
அந்த இளைஞர்கள் திட்டமிட்டு, முன் ஏற்பாட்டுடன் ஒருவக்கிரத்தை
அரங்கேற்ற காத்துக் கிடக்கிறார்கள். அப்போது, அழகான,
உயரமான, ஒல்லியான ஒரு நர்ஸ் மருந்து கொடுப்பதற்கு வருகிறாள்.
அந்த நேரத்தில் அந்த இளைஞனின் கால் சட்டைக்குள் இருக்கும் செல்
போன் ரிங் ஆகிறது. அவனால் அதை எடுக்கமுடியவில்லை. அவனுக்கு
உதவ, அந்த நர்ஸ் அவனின் கால் சட்டை பாக்கெட்டுக்குள் கையைவிட்டு துழாவு
கிறாள். இது ஒரு செல்போனுக்கான விளம்பரம்.
பாருங்கள்! ஒரு நர்சை வாயாற சிஸ்டர் என்றழைக்கும் நம் கலாசாரத்தில்
எவ்வளவு வக்கிரமான, கேவலமான, குரூரபுத்தி புகுத்தப்பட்டிருக்கிறது.

2. அடுத்து 50காசு மிட்டாய் விளம்பரம்.
திருமணமான ஒருகவர்ச்சியானப் பெண். அவளை மடக்கிப்போட அவள்
வீட்டுக்கு எதிரே வாலிப பட்டாளம் காத்துக் கிடக்கிறது. அப்போது கோமாளி போலொருவன் சைக்கிளில் வந்து, அந்த மிட்டாயை எடுத்து வாயில் போடுகிறான். அதன் நறுமணம் அவளை நோக்கிப் போகிறது.
அந்த கணமே அவள் புருஷனைவிட்டு அந்த கோமாளியோடு ஓடிப்
போகிறாள். இதே போன்று இன்னொரு குளிர்பான விளம்பரத்தில் ஒரு குளிர்பான
பாட்டிலுக்காக அழகான பெண்ணொருத்தி ஒரு பிச்சைக்காரன்
பின்னால் ஓடுகிறாள்.
கேவலம் 50 காசு மிட்டாய்க்காக மானம், வெட்கம், கற்பை மறந்து கோமாளியோடு ஓடும் பெண்ணா, இந்தியப் பெண்? ஒரு குளிர்பானத்துக்காக இளமங்கை முன்பின்தெரியாத பிச்சைக்காரன் பின்னால் ஓடுகிறாளே! இதுவா இந்தியப் பெண்ணின் லட்சணம்?
இந்த விளம்பரங்களைப்பார்க்கும் உலகினர் நம் நாட்டுப் பெண்களை
அல்பமாக நினைக்க மாட்டார்களா?
3. இன்னொரு விளம்பரம். அது பள்ளிவளாகம். சகமாணவி ஒருத்தி
சைக்கிளில் வந்து இறங்குகிறாள். அந்த நேரத்தில் சக மாணவன் ஒருவன்
பிஸ்கட் பாக்கெட்டை டர்ர்.. என்று கிழிக்கிறான். அந்த சப்தம் கேட்டு,
தான் அணிந்திருக்கும் ஸ்கர்ட் கிழிந்து விட்டதோ என்றஞ்சி பின்புறம்
தடவிப் பார்க்கிறாள். சக மாணவர்கள் இதைப் பார்த்து சிரிக்கிறார்கள்.
ஒருபிஸ்கட் விளம்பரத்திற்காக வயதுக்கு வந்து மாணவி அசிங்கப்
படுத்தப்படுகிறாள்.
4. அடுத்து, ஒருசாக்லட் மனிதன் விளம்பரம். ஒரு இளைஞன் சாக்லட்
மனிதனாக மாறி வீதிவழி போகிறான். போகிற போக்கில் மூக்கை கிள்ளி
பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்ணிடம் கொடுத்து போகிறான். அடுத்து
காபி ஷாப்பில் நுழைகிறான். அவனை மொய்க்கும் பெண்களில் ஒருத்தி
அவன் புட்டத்தைக் கடித்து ருசிக்கிறாள். மற்ற பெண்கள் ஆளாளுக்கு
எதை எதையெல்லாம் கடித்து ருசித்தார்கள் என்பதை எழுத சீச்சீ...
கூச்சமாக இருக்கிறது.
5. அது வாசனைத் திரவியத்துக்கான விளம்பரம். பஸ்சில் மாடர்ன் பெண்
ஸ்லீவ்லஸ் மேலாடை அணிந்திருக்கிறாள். கையைத் துõக்கி கம்பியைப்
பிடித்திருக்கிறாள். அவள் அக்குளுக்குள் மூஞ்சியைக் கொண்டுபோன
இளைஞன் குமட்டி வாந்தி எடுக்கிறான். மறுமுறை விளம்பரத்தில்
காட்டப்பட்ட வாசனைத் திரவத்தை மேலே பூசிக்கொண்டு வருகிறாள்.
இப்போது அந்த இளைஞன் அவளைப் பார்த்து கிறங்கிப் போகிறான்.
இதைவிட கேவலம், இன்னொரு விளம்பரத்தில் பெண்பூசி இருக்கும்
வாசத்தில் சொக்கிப் போயி கார்த்திகை மாத நாய்கூட்டம் போல அவளை
பின்தொடர்ந்து வாலிபர்கள் ஓடுகிறார்கள்.
பெண்விடுதலை, பெண் உரிமை என்றெல்லாம் வாய்கிழிய பேசுகிறோமே!
கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், சாஸ்திரம் என்றெல்லாம் சொல்கிறோமே!
இந்த விளம்பரங்கள் நம் வீட்டுக்கு வந்து நம்மை அசிங்கப்படுத்து
கிறதே. என்னசெய்தோம். என்னதான் செய்துகொண்டிருக்கிறோம் நாம்?
குழந்தைகளும், பருவப்பெண்களும் கூடி நாம் டி.வி.பார்க்கும் போது
காண்டம், நாப்கின் விளம்பரங்கள் வந்து நம்மை நெளிய வைக்கிறதே!
அந்த விளம்பரங்களைத் தடை செய்ய போராடினோமா? அல்லது டி.வி.
பார்ப்பதைத் தவிர்த்தோமா?
கற்பனைச் செறிவுள்ள, பண்பாட்டுக் கூறுள்ள, கலாசார பதிவுகள் உள்ள
விளம்பரங்களை இவர்களுக்கு எடுக்கத் தெரியாதா? மட்டமான, கீழ்தரமான கற்பனை மட்டும் இவர்களுக்கு எப்படி வருகிறது?
ஒரு அம்மா தட்டில் சாப்பாடு வைத்து மகனை சாப்பிட கூப்பிடுகிறாள்.
அவன் வருவதற்குள், நாய் அந்த உணவை நக்கி, நக்கி சாப்பிடுகிறது.
அம்மா கொஞ்சம்கூட அதைப் பொருட்படுத்தாமல், நாய் நக்கி முடித்ததும்
அந்த தட்டை விளம்பரத்தில் காட்டப்படும் சோப்பைப் போட்டு கழுவி
அதே தட்டில் மகனுக்கு சாப்பாடு போடுகிறாள். அந்த சோப்பு
போட்டால் தட்டு சுத்தமாகலாம். அதற்காக நாயும் செல்ல மகனும் ஒன்றா?
தங்கள் பொருளை உயர்வாக காட்ட எவ்வளவு மட்டமான சிந்தனை இது!
பொதுவாக விளம்பரங்கள் பெண்களை கவர்வதற்காக, பெண்களை
மைய படுத்தியே எடுக்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள்
தயாரிக்கும் அனேக பொருள்கள் பெண்களுக்கே உரித்தானவை.
அப்படி இருக்கும் போது, வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை
வைத்த கதையாய் பெண்களையே கேவலப்படுத்தி, மானத்தை வாங்கி
விளம்பரங்களில் காட்டி பெண்களிடமே கல்லா கட்டும் இவர்களை
பெண்கள் தான் புறக்கணிக்கவேண்டும். பெண்களை அசிங்கப்படுத்
தும் விளம்பரப் பொருள்களை பெண்கள் வாங்குவதை புறக்கணித்தால்
ஒருவேளை பெண்களை கொச்சைப்டுத்தும் விளம்பர நிறுவனங்கள்
திருந்தாலாமோ?
தையல்நாயகி
***************************************************



3.பெண் இல்லாத வாழ்க்கையும் சில நிஜ அழுகையும்!



ஒரு ஆணின் வாழ்க்கை நெடுகிலும் பெண் என்பவள் தாயாக, தாரமாக, மகளாக, சினேகி
தியாக என பல அவதாரம் எடுத்து அவனை ரட்சித்து, காக்கிறாள். சொல்லப்போனால்
ஒரு ஆணின் வாழ்க்கை பெண்ணில்லாமல் முழுமை பெறாது. இப்படி பெண்ணின்
பல படி நிலைகளில் ஏதோ ஒன்றை இழந்த ஆணின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்
களின் பேழையை வாசகிகளுக்கு தொகுத்துத் தருகிறோம்.


தாயை இழந்ததும் உணர்ச்சியற்ற பொம்மையானேன் ம. திருப்பதி

"தந்தையில்லாமல் வளரும் குழந்தைகள் தறுதலையாக திரியும்; ஆனால் ,தாயில்லாமல் வளரும்
குழந்தைகள் வெறும் பொம்மைகளாக, உணர்ச்சியற்றுதான் இருப்பார்கள். தாயில்லாமல் நான்
வளர்ந்த நாட்களில் பட்ட பசிவேதனையும்,சொந்த பந்தங்களின் உதாசீன துரத்தல்களும்
பாச காயங்களும் என் எதிரிக்கும் வரக்கூடாது'' என்று
கண்ணீர் கசிய சொல்லும் திருப்பதி, ஒரு பள்ளியில் தமிழாசிரியராக இருக்கிறார்.
அவரிடம் தாய் இல்லாமல் வளர்ந்த விதத்தையும் ஒரு மனிதனின் வாழ்வில் பெண்ணின் முக்கியத்
துவம் பற்றி கேட்டபோது, பெண் என்ற வார்த்தையை மூன்று முறை வாய்விட்டு உச்சரித்து விட்டு,
"என்னோட குடும்பம் ரொம்பவும் ஏழ்மையான குடும்பம். அப்பா குடிக்கு அடிமையானவர். என்
தாய்தான் போராடி என்னை வளர்த்தார். அப்போது தாயின் அருமை எனக்குத் தெரியவில்லை.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் ஒருமழை நாளில் மின்சாரக் கம்பத்தின் கம்பி அறுந்து விழுந்து
என் தாய் இறந்து போனார்கள்.
ஏற்கனவே குடும்பம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு திண்டாடியது. இந்நிலையில் என் தாயும்
இறந்து போக, என் சித்தப்பா வீட்டில் வளர்ந்தேன். வீட்டில் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பதுன்னு
ஆயிரத்தெட்டு வேலை செய்து, அவர்கள் வேண்டா வெறுப்பாக ஊத்தும் கஞ்சியைக் குடித்து
வளர்ந்த நாட்களில் பட்ட அவமானங்களும், வேதனையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
இந்த தொல்லையிலும் அவமானத்திலும் இருந்து தப்பிக்க ஒரு முறை தற்கொலைக்கும் முயற்சி
செய்தேன்.
நான் தாயில்லாமல் அனாதையாக வேதனையில் துடித்தப்போது பொன் வைத்த இடத்தில் பூவைப்பது
போல உலகம்பட்டியில் உள்ள உடற்கல்லி ஆசிரியர் இன்பராஜ் பொன்னுதுரையும் அவரது மனைவி
ஹேமலதா தான் எனக்கு அப்பா, அம்மாவா இருந்து என்னை வளர்த்து, படிக்க வைத்தார்கள்.
அவர்களின் அரவணைப்பில் நன்றாக படித்து 10,12வது அப்பறம் காலேஜ் வரை படித்தேன். அடுத்து
புலவர் பயிற்சி பெற்று இப்போது தமிழாசிரியராக பணி செய்கிறேன்.நான் படித்த நாட்களில்
பல பரிசுகள் மாவட்ட, மாநில அளவில் பெற்றிருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய
ஓலைச்சுவடி கண்டுப்பிடிச்சு கொடுத்ததில் நான் முதல்மாணவனாக கவுரவிக்கப்பட்டேன். இப்போதும்
நுõற்றுக்கு மேலான பழைய நாணயங்கள் சேகரித்து வைத்துள்ளேன்'' என்கிறார்.
உலக பெண்கள் தினம் பற்றி கேட்டப்போது, ""எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே தாயை
இழந்தேன். தம்பியை இழந்தேன். கூடபிறந்த சகோதரிகள் கிடையாது என்பதால் பெண்களின்
அன்பும் பாசமும் அவர்களின் அருமையும் முக்கியத்துவம் என்னைப் போன்றவர்களால் தான்
முழுமையாக உணரமுடியும். வாழட்டும் பெண்இனம் ''என்று வாழ்த்து சொல்லி முடித்தார்,திருப்பதி.
தேவராஜன்

தாரம் வாழ்க்கைக்கு ஆதாரம் சடகோபன்

தாயோடு ருசி போகும்; பசி போகும். சம்சாரம் போனால் சகலமும் போகும் என்பதற்கு உதாரணமாய்
நானே இருக்கிறேன் என்று சோகம்படர சொல்கிறார் சடகோபன். இவர் அரசு பணியில் இருப்பவர்.
உங்கள் வாழ்க்கையில் மனைவியை இழந்தப்பின் நீங்கள் பட்ட பாடுகளும்; மனைவி என்ற ஸ்தானத்தில்
ஈடுசெய்யமுடியாத பெண்ணின் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்களேன் என்றோம்.
"எனக்கு 21 வயசுல கல்யாணம் ஆச்சு. இரண்டு பையன், ஒரு பொண்ணு. தலைப்பிள்ளைக்கு 12 வயசு
இருக்கும் போது என் மனைவி மஞ்சள் காமலை நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டாள். மூணு பிள்ளைங்கல
வைச்சுக்கிட்டு நான் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அம்மா இருந்த வரை என்னையும் குழந்தைகளையும்
பார்த்துக்கிட்டாங்க. பொண்ணு வயசுக்கு வர்ற ஸ்டேஜில அம்மாவும் தவறிட்டாங்க. இப்போ அம்மாவும்
இல்லாம, மனைவியும் இல்லாம இருக்கும் போதுதான் வீட்டுக்கு ஒரு பெண்ணின் அவசியம் என்னன்னு
தெரியுது. வயசும் 50 ஆயிடுச்சு. பசங்க கல்யாண வயசுல இருக்காங்க. அவங்களுக்கு நாலு இடத்துல போய்
பொண்ணு, மாப்பிள்ளை பார்க்ககூட முடியல. மனைவி இருந்தவரைதான் வீடு வீடா இருந்தது. அப்பறம்
வீடே ஒரு ஹோட்டல் போல தான் தோணுது. பையன், பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா பிறகு என்
அந்திம காலம் எப்படி கழியப்போகுதோண்ணு நினைச்சாலே மனசுக்குள்ள ஏதோ ஒரு பாரம் வந்து அழுத்துற
மாதிரி இருக்கு. என்னைப் பொருத்தவரை வாழ்க்கையில் மனைவி ஆதாரம். மனைவியை இழந்து விட்டால்
வாழ்க்கை சேதாரம் தான்' என்கிறார்.

பிரிவையும் பிரியத்தோடு கொண்டோம் மகேஷ்
"அன்பெனும் ஓர் குடைக்குள் அன்றிலாய்இருந்தோம். இந்த உலகமே எங்களுக்காகப் படைக்கப்பட்டது
போல உணர்ந்தோம். அவளின்றி நானும், நானின்றி அவளும் வாழும் வாழ்க்கை சாத்தியமில்லை என
சத்தியம் செய்து காதலால் கட்டுண்டு காதல்சிறகு விரித்து சந்தோஷமாய்தான் இருந்தோம். ஆனால்....
இன்று அவள் கணவனோடு வாழ்கிறாள். நான் அவள் கனவோடு வாழ்கிறேன்' என விரக்தியோடு
காதலை இழந்தும் கவிதை நடையிலேயே பேசுகிறார், மகேஷ். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில்
கேஷியராக உள்ளார்.
வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம். அதில் நேசித்தப் பெண்ணின் பிரிவு உங்களை எப்படி பாதித்தது
என்று கேட்டோம்.
"பிரச்னை எங்குதான் இல்லை? எங்களுக்கும் இருந்தது. பிரிவையும் பிரியத்தோடு தான் கொண்டோம்.
கண்ணாடியை சேதப்படுத்தாமல் விலகும் பிம்பம் போல என் காதலி பிரிந்து போனாள். அவ்வளவுதான்
என் வாழ்வே சூன்யமானது. பசியில்லை, துõக்கமில்லை. வாழவும் பிடிக்கவில்லை. ஏதோ இருக்கிறேன்.
அவளும் நானும் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனையில் கோட்டை கட்டியிருந்தோம்.
இன்று அவள் இடத்தில் இன்னொருத்தியை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
பெற்ற தாயால் திருத்த முடியாத என்னை காதலியாக வந்த அவள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விரட்டினாள்.
பட்டப்படிப்பு படிக்க ஊக்கம் தந்தாள். நல்ல வேலையில் சேர நம்பிக்கை தந்தாள். இப்படி அவள் என்
வாழ்க்கையை புரட்டிப்போட்டத்தை அடிக்கிக்கொண்டே போகலாம். இளமையில் காதலி என்கிற
ரோலில் ஒரு பெண்ணின் முக்கியத்துவம் பற்றி சொல்லிமாளாது. சும்மாவா சொன்னர், பாவேந்தர்
மண்ணில் கன்னியர் கடைக்கண் பார்த்து விட்டால் குமாரர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்!' என்கிறார்
மகேஷ்.

மனைவி அமைவதெல்லாம் ... பூபாலன்

"திருமண வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கீங்களே' என்று பூபாலனிடம் கேட்டதும், அவர்,
பிரம்மச்சாரி வாழ்கை என்பது கொஞ்சம் சுதந்திரமாக இருந்தாலும், கட்டுப்பாடு இல்லாமல் அல்லவா இருக்கிறது.
பசிக்கும் போது ருசியாய் புசிக்க சாப்பாடு கிடைப்பதில்லை. சுயமாய் சமைத்து சாப்பிடுவதும், ஹோட்டலில்
சாப்பிட்டு வருவதும் நானே என் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வதாகப் படுகிறது.
துவண்டு வரும்போது தோள் கொடுக்க, அக்கடான்னு டல்லாகி உட்காரும்போது அன்பாய்,அனுசரணையாய்
நடந்துகொள்ள மனைவி இல்லை என்பது என்னவோ நிரப்பப்படாது வெற்றிடமாக வாழ்க்கை நடக்கிறது.
திருமணம் என்பது பெரியவர்கள் பார்த்து முடிவு செய்ய வேண்டியதல்லவா?
வீட்டில் பார்க்கிறார்கள், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் தகையாமல் இருப்பதற்கு ஆயிரம்
காரணம் பாலத்து ஜோசியன் சொன்னதாக சொல்கிறார்கள்' என்கிறார்கள்.
திருமணம் ஆகிஇருந்தால் இப்போது இருக்கும் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? என்றதற்கு,
ஊதாரிதனம் குறைந்திருக்கும். வங்கியில் சேமிப்பு கூடியிருக்கும். பொறுப்புகள் கூடியிருக்கும்.வாழ்க்கை
சுவாரஸ்யம்மிகுந்ததாக இருந்திருக்கலாம். ஆக வாழ்க்கையில் எல்லாருக்குமே
ஒரு பெண் தாயாக, தாரமாக, மகளாக,சகோதரியாக, தோழியாக இருந்து வாழ்க்கையை அர்த்தம்
ஆக்குவதும் பெண்கள் தான் என்று முடித்தார்,' பூபாலன்.
தேவராஜன்
*******************************************

4. வாங்க,கோடையை கொண்டாடலாம் !

ஆண்டு முழுவதும் வீடு, சமையல், அலுவலகம் என ஓடி, ஆடி சோர்ந்து மன இறுக்கத்தில் ஒரு வட்டத்துக்குள் போராடும் வாழ்க்கையை கொஞ்சம் குதுõகலப்படுத்தவும், குழந்தைகள் கோடை விடுமுறையை கொண்டாடவும் நமக்கு வரப்பிரசாதமாக இருப்பது சுற்றுலா தான். இதை தான் நம்முன்னோர்கள், “மண் மாறினால் மனசு மாறும்’ என்று சொல்லி வைத்தார்கள். சுற்றுலா செல்வது மூலம் வெவ்வேறு இடம்; மனிதர்கள்; சூழ்நிலைகள்; ஆச்சரியங்கள் கண்டு பிரமிப்பான அனுபவங்களை பெறுவதோடு கூடுதலாக மகிழ்ச்சியையும் பெறலாம்.
ஒரு காலத்தில் சுணங்கிக்கிடந்த தமிழ்நாடு சுற்றுலா துறை இப்போது சுறுசுறுப்பாகி வருகிறது.
"விருந்தினர் போற்றுதும்! விருந்தினர் போற்றுதும்!' என்ற தாரக மந்திரத்தோடு சுற்றுலாவாசிகளுக்கு பல சலுகைகள், வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
இன்முகத்துடன் வரவேற்பு, சுற்றுச்சூழல் துõய்மை பேணுதல், பாரம்பரியமிக்க கலைச்செல்வங்களை பேணிக்காத்தல், இயற்கைக்குப் பங்கமில்லாமல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பில் அக்கறை போன்ற சேவைகளை தமிழ் நாடு சுற்றுலா துறை செய்து வருகிறது.

தமிழக சுற்றுலா துறையின் சேவை, அதன் வளர்ச்சி குறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாதுறை மக்கள் தொடர்பு அதிகாரி என். ரவி கூறியதாவது:
தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் என்பவை கொஞ்சம் நஞ்சமல்ல. அவற்றில் பிரபலமான சில இடங்களை தேர்ந்தெடுத்து மக்கள் சென்று, பார்த்து, மகிழ பல வசதிகளும், சேவைகளும் செய்து வருகிறோம்.

ஹாப் ஆன் ஹாப் ஆப் டூர்:

உங்கள் விருப்பம் போல ஒரு நாளில் சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள 13இடங்களை ஏசி பஸ்சில் சென்று பார்த்துவர பஸ் கட்டணம் ரூபாய் 250 மட்டுமே. சொகுசான 18 இருக்கைகள் கொண்ட பஸ்வசதி ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை இருக்கிறது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை இந்த பஸ் செல்லும். நீங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் ஏறலாம்; இறங்கலாம்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பிடித்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

பிளாட்டினம் கார்டு, தங்க கார்டு:

தமிழ்நாடு சுற்றுலா துறையில் ரூபாய் 5000 செலுத்தி உறுப்பினர் ஆவதன் மூலம் நீங்கள் புகைப்படத்துடன் கூடிய பிளாட்டினம் அடையாள அட்டையை பெறலாம். இந்த உறுப்பினர் அட்டை 10 ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்டது.
இந்த அடையாளஅட்டை வைத்திருப்பவர்களுக்கு கோடைக்காலத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு சொந்தமான ஓட்டல்களில் தங்கும் இடம், உணவு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை உண்டு. மற்ற சீசன்களில் 10 சதவீதம் சலுகை உண்டு.

ரூபாய் 1000 செலுத்தி உறுப்பினர் ஆவதன் மூலம் நீங்கள் புகைப்படத்துடன்
கூடிய தங்க அடையாள அட்டையை பெறலாம். இந்த அட்டை 3 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்டது. இந்த அடையாள அட்டை மூலம் தமிழ்நாடு ஓட்டல்களில் தங்கும் இடம், உணவு கட்டணத்தில் கோடைக்காலத்தில் 20 சதவீதம் சலுகை பெறலாம். மற்ற சீசன்களில் 10 சதவீதம் சலுகை பெறலாம்.

மினி டூர்:

சிலர் சனி, ஞாயிறு விடுமுறைகளில் டூர் செல்ல விரும்புகிறார்கள். சிலர் ஞாயிறு ஒரு நாள் மட்டுமே டூர் செல்ல விரும்புகிறார்கள். சிலர் ஒரு வாரம், 15 நாள் என்று டூர் செல்ல விரும்புவதால் சுற்றுலா துறை முக்கியமான, பிரபலமான இடங்களை தேர்வு செய்து ஒருநாள், மூன்று நாள், நான்கு நாள், ஏழு நாள், எட்டு நாள், பதினான்கு நாள் டூர் என வகைப்படுத்தியிருக்கிறோம். மக்களுக்கு கிடைக்கும் விடுமுறை மற்றும் வசதிக்கு ஏற்ப இதில் ஏதாவது ஒரு டூரை பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

பாக்ஸ்:

ஒரு நாள் சுற்றுலா வகைகள்:

1. மாமல்லபுரம் காஞ்சிபுரம் முட்டுக்காடு ரூ. 385 ஏசி 550
2. திருப்பதி திருமலை திருச்சானுõர் ரூ.715 ஏசி 935
3. திருவண்ணாமலை கிரிவலம் ரூ.385 ஏசி 375
4. மாங்காடு, திருவேற்காடு, திருமுல்லை வாயில், செம்புலிவரம்,
பஞ்சட்டி, மேலுõர், திருவொற்றியூர் ரூ 250 ஏசி 375

மூன்று நாள் சுற்றுலா வகைகள்:
1. நவதிருப்பதிகள் ரூ. 2,200 சிறுவர் ரூ. 1900
2. நவக்கிரக சுற்றுலா ரூ.1,400 ஏசி 2150 சிறுவர் ரூ1,150 ஏசி ரூ 1900
3. பஞ்சபூத ஸ்தலங்கள் சுற்றுலா ரூ. 2050 சிறுவர் 1650

நான்கு நாள் சுற்றுலா:
1. சோழநாட்டு திருப்பதிகள் சுற்றுலா ரூ 1600 சிறுவர்1200

ஏழுநாள் சுற்றுலா:
1. கொல்லுõர் பெங்களூர், வேலுõர், சிருங்கேரி,
உடுப்பி, மைசூர் கர்நாடக தலங்கள் மற்றும் ஒகேனக்கல் ரூ. 2,150
2. ஆந்திரச் சுற்றுலா நாராயண வனம், கோனே அருவி, ஸ்ரீசைலம், காளகஸ்தி ரூ. 5650 ஏசி 8200

எட்டு நாள் சுற்றுலா:
1. தமிழகச் சுற்றுலா ரூ 7,600 ஏசி 12,400
2. கிழக்கு மேற்குக் கடற்கரை சுற்றுலா ரூ 7,700 ஏசி 10, 400
3. கோவா, மந்த்ராலயம், ஸ்ரீசைலம், அஹோபிலம் சுற்றுலா ரூ. 7,250 ஏசி 9,900

பதினான்கு நாள் சுற்றுலா:
1. மும்பை, அஜந்தா, எல்லோரா சுற்றுலா ரூ. 12,000 ஏசி17,300
2. பூரி, கயா, காசி, அலகாபாத் சுற்றுலா ரூ. 13,000 ஏசி 17,400
தேவராஜன்
***************************************************


5. பேர் சொல்லும் பிள்ளைகளைப் பெற்ற மகராசி!
சாந்தா கிருஷ்ணமூர்த்தி

உலக மக்களின் விருப்ப குளிர் பானமான பெப்சி நிறுவனத்தின் பெரும் பதவியான சி இ ஓ பதவியைஅலங்கரிக்கும் தமிழகப் பெண் இந்திரா லுõயியின் தாயார் சாந்தா கிருஷ்ணமூர்த்தியை அன்னையர் தினத்திற்காக சந்தித்து, உரையாடியபோது அவர் முகத்தில் பூத்த பூரிப்பும், வார்த்தைகளில் விழுந்த பெருமிதமும் நமக்கு சொல்லாமல் ஒன்றை சொல்லியது. அது,"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை(ளை)ச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற வள்ளுவனின் வாக்கு .

உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?

எங்கள் குடும்பம் பாரம்பரிய குடும்பம். பெருமைக்காக சொல்லவில்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே படிப்பில் அறிவாளிகள், நல்ல கல்விமான்கள் என்று தான் சொல்லுவேன். என் கணவர் கிருஷ்ணமூர்த்தி ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் சந்திரிகா, அடுத்தவள் இந்திரா, இளையவன் நாராயணன். இவர்கள் மூன்று பேருமே ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரர்களாவே இருந்தனர். இவர்களின் தாத்தா அந்தக் காலத்திலேயே மாவட்ட நீதிமன்றத்தில் ஜட்ஜ் ஆக இருந்தவர். அவர், பிள்ளைகளுக்கு நிறைய விசயங்களை சொல்லிக் கொடுப்பார். பள்ளிப் படிப்பிலிருந்து, பட்டப்படிப்பு வரை என் பிள்ளைகள் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர்களாகவே திகழ்ந்தனர். இப்போது மூன்று பேருமே வெளிநாட்டில் நல்ல வேலையில், உயர்பதவியில் இருக்கிறார்கள்.

உங்கள் பிள்ளைகள் இந்தளவுக்கு புகழ் பெற காரணமாக இருந்தது எது?

அவர்களின் அம்மா என்ற முறையில் சொல்வதென்றால் வளர்ப்பு தான் காரணம் என்பேன். எந்த குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே இருக்கிறார்கள். நம் வளர்ப்பு, வழிகாட்டல்தான் அவர்களின் ஏற்றத்திற்கும், பின்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கிறது. எங்கள் வீட்டில் சங்கீதமும், பக்தியும் எப்போதும் கமழ்ந்து கொண்டிருந்ததால் குழந்தைகளின் மனதில் தெய்வீக தன்மையை ஊட்டிவிட்டிருக்கலாம். அடுத்ததாக, என் பிள்ளைகளுக்கு எது நல்லது, எது கெட்டது? என்பதை அறியும் பக்குவம் வந்தப்பிறகு அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்கவும், சுதந்திரமாக இருக்கவும் விட்டுவிட்டேன். அதுவே அவர்களுக்கு பிளஸ்பாயிண்டாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன். என் பிள்ளைகள் மூன்று பேருமே எல்லா விஷயத்தையும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் விஷயத்தை கேட்டுப்பேனே தவிர முடிவு அவர்கள் இஷ்டம்தான்.

இந்திரா நுõயி பற்றி சொல்லுங்களேன்?

இந்திரா குழந்தைப் பருவத்திலிருந்தே சுட்டிப் பெண்தான். குறு குறுன்னு எப்போதும் ஜாலியாக இருப்பாள். இசையில் நல்ல ஆர்வம் உண்டு. கேள்வி ஞானத்தால் நல்லா பாடுவாள். டான்ஸ் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். பரதநாட்டியம்கூட கற்றுக்கொண்டாள். படிப்பில் ஸ்டேட் ரேங்க் எடுத்திருக்கிறாள். நிறைய டிகிரி வாங்கியிருக்கிறாள். அவளுக்கு பல மொழிகள் தெரியும். ஆரம்பத்தில் இருந்தே ஏதாவது பண்ணணும், சாதிக்கணும் இருந்தாள். அவள் பெப்சிக்கு முன்பு நிறைய நிறுவனங்களில் வேலைப் பார்த்திருக்கிறாள். ஆனால், அத்தனையிலும் உயர்பதவியில் இருந்தாள். ஆனால் அதை எப்போதும் அவள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டாள். பெப்சியில் சிஇஓவான விஷயத்தை என்னிடம் கூட தெரிவிக்கவில்லை. டிவி நியூஸ் பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன். பிறகு அவளிடம் போன் செய்து கேட்டதற்கு, "ஆமாம்மா' என்றாள் ரொம்ப சாதாரணமாக. நான்தான் அவளை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எத்தனை கவுரவம், புகழ் வந்தாலும் இந்திரா, அம்மா பிள்ளை தான்! உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எனக்கு போன் செய்துவிடுவாள். அது போல நம் கலாசாரத்தை கொஞ்சம்கூட விடாமல் இருக்கிறாள். அவளுடைய மகள்களையும் அப்படியே வளர்க்கிறாள். எந்த விழாவாக இருந்தாலும் அது எங்கு நடந்தாலும் இந்திராவுடன் நான் இருக்கணும் என்பதைதான் அவள் விரும்புவாள். ஒரு முறை என் சகோதரருக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. அதனால் நான் வருத்தமாக இருக்கிறேன் என்பதை அறிந்து முக்கியமான மீட்டிங்கை கூட கேன்சல் செய்து விட்டு எனக்கு ஆறுதல் சொல்ல வந்தாள்.

உங்கள் மகள்களால் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி?

பெயர், புகழில் உச்சத்தில் இருக்கும் என் மூன்று பிள்ளைகளால் எனக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை பெருமையாகவே கருதுகிறேன். விழாவில், நிகழ்சியில் கலந்துகொள்ளும் போது பலர் "நீங்க இந்திராவின் அம்மா தானே? நீங்க சந்திரிகாவின் அம்மாதானே?' என்று கேட்டு பாராட்டுவதும், காலில் விழுந்து ஆசீர்வாதம் கேட்பதும் எனக்கு பெருமையையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் என் பிள்ளைகளை எண்ணி பூரித்துப் போகிறேன். இப்படிபட்ட மகள்களைப் பெற்ற மகராசி என்று எனக்கு விருதுகளும், பத்திரிகைகள் கவுரவப்படுத்துவதும் எனக்கு சங்கடமாக இருந்தாலும், அதை அடைவதில் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.

பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ள நினைப்பது?

இப்போதுள்ள பெற்றோர்களுக்கு சொல்ல சில வார்த்தைகள் என்னிடம் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பொதுவாகவே புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். அவர்களைப் புரிந்து சரியாக வழிநடத்தினாலே போதும். இப்போதுள்ள பிள்ளைகளில் என் கருத்துபடி பெண் பசங்களை விட, ஆண் பசங்களுக்கு பொறுப்பும், அக்கறையும் இருக்கு என்று நினைக்கிறேன். நம் குழந்தைகளுக்காக பெற்றோர் சில தியாகங்கள் செய்து தான் ஆக வேண்டும். அதன் பலனை பின்னாளில் அடைவோம்.
என் பிள்ளைகள் பள்ளி விட்டு வரும்போது நான் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் அவர்கள் படிக்கும் காலத்தில் எங்கும் வெளியில் செல்ல மாட்டேன். இப்போது மூன்று பேரும், "எங்களுக்கு எங்கேயும் செல்லாமல் இருந்து விட்டீர்கள். இப்போது எங்கு வேண்டுமானாலும் சென்று வாருங்கள்' என்று சொல்கின்றனர். ஆனால் எனக்கு இப்போதும் அவர்களுக்கு பிடித்த சமையலை செய்து வைத்துக் கொண்டு அவர்களுக்காக காத்திருப்பதுதான் பிடித்திருக்கிறது.

தேவராஜன்
படங்கள்: விஜி
*************************************************


6.உன்னதமான உறவு, அம்மா!

நினைத்தால் ஒருமனிதன் நிலவுக்கு மட்டுமல்ல; அதையும் தாண்டி ஒன்பது கோள்களுக்கு கூட சென்று வரலாம். ஆனால், எத்தனை பெரிய விஐபியாக இருந்தாலும், கோடீஸ்வரனாக இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தாயின் கருவறைக்குச் சென்று வர முடியுமா? முடியாது. தாய் என்ற உறவை ஒப்பிட, நீ ங்கள் தேடி அலைந்தாலும் தாய்க்கு சமமாக ஒன்றை சொல்ல இந்த உலகில் எதுவுமே கிடைக்காது.
தாய் என்பவள் நடமாடும் தெய்வம். அவள் மடிசாய்ந்தால் அதுவே மண்ணில் சொர்க்கம். இப்படியாகி உன்னதமான அம்மாவுடனான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து, அன்னையர் தினத்துக்கு பெருமை சேர்க்கிறார்கள் சினேகனும், கங்கை அமரனும்.

என் அம்மா பெண் கர்ணன் கவிஞர் சினேகன்:

"என் அம்மா பெயர் மகமாயி! எனக்கு என்றுமே அவள் தான் தெய்வம். அந்த மகமாயி தெய்வம் தான் எனக்கு அம்மாவாக வாய்த்ததோ என எண்ணியோ என்னவோ என்வீட்டில், அலுவலகத்தில், காரில் என என் அம்மாவின் படத்தை தான் வைத்திருக்கிறேன். அது தவிர வேறு எந்த சாமி படங்களும் கிடையாது' என்று அம்மாவை தெய்வமாகவே பாவித்து உருகுகிறார் கவிஞர் சினேகன்.
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் பக்கம் உள்ள பசுமையான ஒரு கிராமம். எங்க குடும்பம் பெரிய குடும்பம். மொத்தம் எட்டுபிள்ளைகள். என் அம்மா படிப்பறிவில்லாதவள். ஆனால், எங்களை பண்போடு வளர்த்தவள். கடை ஏழு வள்ளல்கள் பற்றி படிப்பதற்கு முன்னதாகவே என் அம்மாவை குணவதியாக, கருணையுள்ளவளாக, பெண் கர்ணனாக உணர்ந்தேன்.
எங்கள் வீடு பெரிய வீடு என்பதால் வெளியில் திண்ணைகள் உண்டு. எங்கள் ஊரில் தள்ளுவண்டிகளில், சைக்கிள் களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் எல்லாம் என் அம்மா கையில் ஆகாரம் புசித்து மகராசி நீ நல்லா இருக்கணும்ணு வாழ்த்தி விட்டு, திண்ணையில் இளைப்பாறி செல்வது வழக்கம். பொதுவாக எங்கள் வீட்டில் தினமும் பத்துபேருக்கு சாப்பாடு கிடைக்கும். எங்கள் வீட்டுபடியை மிதித்தவர்கள் யாரும் வெறும் கையோடு, பசி வயிறோடு சென்றதில்லை.
திருவிழா, பண்டிகைன்னா எங்கம்மா பித்தளை தவளையில தான் காபி போட்டு எல்லாருக்கும் கொடுப்பாங்க. பசித்தவரை புசின்னு அன்னமிட்டு வாழ்ந்த அன்னையின் குணம் தான் எனக்கும் இருக்கிறது. இன்று நிறைய சம்பாதிக்கிறேன். பல பேருக்கு உதவுகிறேன். கவிஞனாகி விட்டேன். இருந்தும் இதுவரை நான் தனியாக சாப்பிட்டதில்லை. யாரோ ஒருத்தருக்கு உணவு தந்து விட்டுதான் சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்த பழக்கம் என் அன்னையிடம் இருந்து வந்தது.
நான் சினிமாவில் பாட்டெழுத வீட்டை விட்டுகிளம்பும் போது எல்லோருமே தடுத்தார்கள்; எதிர்த்தார்கள். ஆனால், என் அம்மா மட்டும் தான் என் பிள்ளை எங்க இருந்தாலும், எந்த துறையில இருந்தாலும் பெரியாளா வருவான்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணாங்க. சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு கிடைக்காம ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு தானிருந்தேன். இந்த நிலையில ஒரு நாள் அம்மா ரொம்ப சீரியசாக இருக்காங்க, பிழைக்கமாட்டாங்க உடனே ஊருக்கு வா ன்னு செய்தி வந்தது. அப்போ என்கிட்ட ஊருக்கு போககூட போது மான பணம் இல்ல. காலையிலிருந்து மாலை வரை பணத்துக்காக நண்பர்களை தேடி அலைந்துகிட்டிருந்தேன். கடைசியா பாஷா என்கிறவரிடம் என் நிலைமையைச் சொன்னேன். அவர் 2000 ரூபா கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இரவெல்லாம் அம்மாவை நினைத்துக் கொண்டு அழுதபடியே பயணம் செஞ்சேன். மறுநாள் காலை உறவு சனம் எல்லாம் நான் எந்த பஸ்சில் வருவேன்னு பஸ் ஸ்டாண்டிலேயே காத்துக்கிடந்தாங்க. வந்த என்னை அவசர அவசரமா அழைச்சுட்டு போனாங்க. நான் அம்மா இறந்துட்டாங்க. அடக்கம் பண்ணிட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டே வீட்டுக்கு போனேன். என்ன பார்த்ததும் சித்தி, "உன்ன பார்க்கத்தான் உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு' என்று சொன்னதும் அம்மாவின் கை பிடித்து குலுங்கி, குலுங்கி அழுதேன். அப்போது அம்மா என்னைப் பார்த்து, "வந்துட்டீயா? நல்லாயிருக்கியான்னு?' கேட்டாங்க. அவங்க வாயில் அழுதபடி துளசி தண்ணிய விட்டேன். அடுத்த நிமிஷமே அம்மாவின் உயிர் அடங்கிப் போனது.
ஒருத்தர் எப்படி வாழ்ந்தார்னு தெரிஞ்சுக்க அவர் இறுதி சடங்கிற்கு வருபவர்களை வைத்து தெரிஞ்சுக்கலாம்னு சொல்வாங்க. எங்க அம்மாவுக்கு 600க்கும் மேல கோடி துணி போட்டாங்க. அவருக்கு போட்ட மாலையை நாலு வண்டியில ஏத்தலாம்.
எனக்கு என் அம்மா தான் சகலமும். என் முதல் புத்தகம். நுõலகம் எல்லாமே அம்மா தான். என் அம்மா போட்டோவுக்கு கீழே கோபமா ஒரு வாக்கியம் எழுதி வைச்சிருக்கேன். அது "நான் ஜெயிக்ணும்னு நீ நினைச்சப்படி நானிருக்கேன். நான் நினைச்சப்படி நீ இல்லையே'ன்னு எழுதி வைச்சிருக்கேன். ஆனாலும் ஒரு சின்ன ஆறுதல் நான் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த போது அவர் எடுத்து தந்த சேலையை அம்மாவிடம் கொடுத்தேன். அந்த புடவையைதான் அவங்க இறக்கும் போதும் கட்டியிருந்தாங்க. என் அம்மா எனக்கு எந்த வருத்தத்தையுமே கொடுத்ததில்லை. அவர் இறந்துப் போயி தந்த வருத்தத்தை தவிர.
இந்த அன்னையர் தினத்தில் நான் சொல்லிக்க விரும்பறது ஒண்ணுதான். "அம்மா உயிருடன் இருக்கும் போது ஆசைப்பட்டதெல்லாம் செய்யுங்க. கொண்டாடுங்க. இறந்தப் பிறகு கோயில் கட்டறதுல்ல எந்த பிரயோஜனமுமில்ல என்பது என் அனுபவம்' என்று சினேகன் உருக்கமாக சொல்லி முடித்தார்.
தேவராஜன்
******************************************************


7.தாய், தெய்வம் என்பதால் கோயில் கட்டினோம்!
இசையமைப்பாளர் கங்கை அமரன்.

"பெற்ற தாயை தெய்வமாக நினைத்ததால்தான் நானும், அண்ணன் இளையராஜாவும் சேர்ந்து எங்க அம்மாவுக்கு பண்ணப்புரத்துல மலை மீது கோயில் கட்டினோம். அந்த கோயிலில் இருக்கும் தெய்வம் போட்ட பிச்சை தான் இந்த இசையையும், பெருமையான வாழ்க்கையும்' என்று தாய் பக்தியோடு, தன் அம்மாவைப்பற்றி நினைவுகூர்கிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்.
அம்மா நம்மை கர்ப்பத்தில் சுமக்கையில் தன் குழந்தைக்காக ஒரு உணவை சாப்பிடக் கூடாதென்றால் பிள்ளைக்காக அதை ஒதுக்கி வைக்கிறாள். பத்தியம் இருக்கிறாள். சூடான பாலை ஊதிஊதி குழந்தைக்கு புகட்டும் தாய்க்கு, வயதான அவள் நாவிற்கு சுவையாக, இதமாக உணவைத் தரவேண்டியது பிள்ளைகளின் கடமை தானே!
என்னுடைய அம்மாவை கடைசி காலத்தில் ராணியைப் போல கவனித்துக் கொண்டோம். இறந்த அவளின் உடலை புதைத்த இடத்தில் கோயில் கட்டியிருக்கிறோம். கடைசி காலத்தில் சுகமாகவே வாழ்ந்து விட்டுப் போனாள். இப்போதும் எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கிற போதெல்லாம் என்தாயின் கோயிலுக்குச் சென்று துயில் இருப்பேன். ஏனோ அவள் மடி மீது தலைவைத்து உறங்குவது போலவும், அவள் எனக்கு ஆறுதல் சொல்வது போலவும் இருக்கும். எனக்கு பின்னால் என்னுடைய தலைமுறை எங்களை நினைவில் வைத்திருக்குமா தெரியவில்லை. இசையும் இந்த வாழ்க்கையும் அம்மா எங்களுக்கு தந்த பிச்சை. அவள் பாடியவை தான் எங்களுக்குள்ளும் இசையாக பெருகிக் கொண்டிருக்கிறது. அதுபோல இன்று ஒவ்வொரு மகனுக்கும் அவனுடைய தாய் ஊட்டிய அறிவு தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களை பல வயதுகளின் பருவங்களில் வைத்து போற்றுகிறோம். ஆனால், தாய்மை ஸ்தானத்தை தானே கொண்டாடுகிறோம்.' அப்படி தெய்வநிலையில் நான் வைத்து கொண்டாட இரண்டு அன்னைகள் உண்டு. ஒன்று பாண்டிச்சேரி அன்னை. இன்னொன்று என்னைப்பெற்றவள்' என்று முடித்தார்.

செல்வகுமார், தேவராஜன்.
*************************************************



8.அக்னி வெயில் வாட்டினால்
"ஆங்சைட்டி அட்டாக்' வரும்!

"ஆஹா... இது என்ன புது வியாதி? ஹார்ட் அட்டாக் தெரியும். அது என்ன ஆங்சைட்டி அட்டாக்? இருக்கிற ஆயிரத்தெட்டு வியாதியில, புதுசா ஒண்ணு வேறு வந்திருக்கா' என்று பயப்படாதீங்க. இது சாதாரண அட்டாக் தான்! சாதாரண விஷயம்தான். ஆனால், கவனிக்க வேண்டிய விஷயங்க. இப்போ சுட்டெரிக்கும் வெயிலில் எல்லாருமே தகித்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்ச துõரம் வெயிலில் நடந்து போனாலே தலைசுத்தும். டயர்டாக இருக்கும். இதுல வேற ஆங்சைட்டி அட்டாக் வரும் என்றால் யாருக்குத் தான் பயம் வராம இருக்கும். சரி, ஆங்சைட்டி அட்டாக் யாருக்கு, எப்படி வரும்? வந்தா என்ன பண்ணணும் என்பதை தெரிஞ்சுக்கலாம்.
ஏதோ ஒரு வேலையை செய்துக்கிட்டு இருக்கும் போது, திடீர்ன்னு நெஞ்சு அடைக்கும். நாக்கு வறண்டு போகும். கண்ணு இருண்டு போகும். கை, கால் எல்லாம் நடுங்கி, உதறல் எடுக்கும். வேர்த்து கொட்டி, தலைசுத்தி ஒரு மயக்கம் வரும். இதை தான் மருத்துவதுறை ஆங்சைட்டி அட்டாக் என்று சொல்லுது. இந்த அட்டாக் எதனால வருதுன்னு தெரிஞ்சுக்குங்க.
எல்லாம் மன உளைச்சல் தான்! மனஅழுத்தம், பதட்டம், வேலை சுமைகள் தான் முக்கிய
காரணம். குட்டிப்போட்ட பூனை போல அங்கும் இங்கும் உலாத்திக்கிட்டு, ஒரே டென்ஷன், டென்ஷன் என்று முணு முணுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், எதற்கெடுத்தாலும் யார் மீதாவது, கோபப்பட்டு, எரிந்து விழுபவருக்கும், பதட்டம், தடுமாற்றம், உணர்ச்சி வசப்படுபவர்களுக்கும் இந்த அட்டாக் வரும். இது மட்டுமல்ல; உடம்பு பருமனாக இருந்தாலும், மன உளைச்சல், நெருக்கடி, கடன் தொல்லை, வேலை சுமை, கவலை, தோல்வி, ஏமாற்றம், வெறி இவை எல்லாம் இருப்பவர்களுக்கு இந்த ஆங்சைட்டி அட்டாக் வருகிறதாம். அதுவும் இந்த கோடை காலம் வேற கூடுதலா காரணமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க.
ஆங்சைட்டி அட்டாக் வந்துட்டா எந்த டாக்டரைப் பார்க்கணும்? என்ன மருந்து சாப்பிடணும்? அப்படின்னு உங்களுக்கு கேள்வி கேட்க தோணுமே!
இதுக்கு டாக்டர்கள் சொல்றதைக் கேட்டா ஆச்சரிய படுவீங்க. ஏன்னா, இதுக்கு மருந்து
எல்லாம் இல்லையாம்! அதுக்காக மருந்து தான் இல்லையேன்னு சும்மா இருந்து விடக்
கூடாது. இந்த அட்டாக் வந்த தருணத்தில் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கணும். மூச்சை நல்லா இழுத்து விடணும். நல்ல காற்றோட்டமான, நிழல் உள்ள இடத்துக்கு வந்திடணும். பின்னர், விரும்பிய பாட்டு கேக்கலாம். இயற்கையை ரசிக்கலாம். பெயிண்டிங் பண்ணலாம். பிடிச்ச நண்பர்களோடு கொஞ்சம் பேசி, சிரித்து விட்டு வரலாம். கொஞ்ச துõரம் வாக்கிங் போயிட்டு வரலாம். இதை செய்தாலே போதும் என்று டாக்டர்கள் சொல்றாங்க.
பொதுவா, இந்த அட்டாக் அதிகபட்சமா பத்து வினாடியிலிருந்து இரண்டு நிமிஷங்கள் வரைக்கும் தான் இருக்குமாம். பின்னர், எப்போதும் போல நாம சகஜநிலைக்கு வந்துடுவோமாம். அதனால, நாம நார்மலா இருந்தாலே போதும், ஒரு அட்டாக்கும் வராது.
அடுத்ததா, இந்த அட்டாக் ஆண்களைவிட, பெண்களுக்குத் தான் அதிகம் வர சாத்தியம் என்று ஒரு மருத்துவ ஆராய்ச்சி புள்ளி விவரம் கூறுகிறது. பெண்களுக்குத்தான் அதிகமான பொறுப்புகளும், சென்சிடிவ்வான செயல்களும் இருப்பதால், மேலும், வீட்டிலேயே முடங்கி அடைப்பட்டு இருப்பதாலும் மன இறுக்கம், மனஉளைச்சல் ஏற்பட்டு ஆங்சைட்டி அட்டாக் வருகிறது என்று கூறுகிறார்கள்.
ஆகையால், பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும். அதற்கு தியானம், யோகாசனம் செய்ய பழகிக்கணும். மாலை வேளைகளில் பக்கத்தில் இருக்கும் கோயில், குளம், ஏரி பக்கம் காலார போயிட்டு வரணும். நகரவாசிகளா இருந்தால், பார்க், பீச், ஓட்டல்னு போயிட்டு வந்தீங்கின்னா
மனசு ரொம்ப ப்ரீயா இருக்கும். பிறகென்ன? ஆங்சைட்டி அட்டாக்கை ஒரு சொடுக்கு
போட்டு விரட்டி விடலாம்.
தேவா
*************************************************

9.தண்ணீர் தேசத்தின் ராணி!

"தண்ணீருக்கும் உயிர் உண்டு; சக்தியுண்டு; அது பேசுவதற்கும் சில வார்த்தைகள் உண்டு. நான் தண்ணீரை பார்க்கும் போதெல்லாம் அதை ஒரு சக மனுஷியாகத்தான் பார்க்கிறேன். உலகின் மிக பெரிய ஆதி உயிர் தண்ணீர்தான்! தண்ணீர் உலகின் தாயைப் போன்றவள். நான் ஏரிக்கரைக்கு போகும் போதெல்லாம் தண்ணீரோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு தான் வருவேன். அந்த தண்ணீர் எப்போதுமே என்னைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈனசுரத்தில் தேம்பி தேம்பி அழுதபடி "என்னைக்காப்பாற்று! என்னைக்காப்பாற்று' என்று ஒரு தாய், தன் மகளிடம் கெஞ்சிக் கேட்பது போலவே புலம்பும். தண்ணீரின் அழுகையைத் துடைக்க நானும், "தண்ணீரே, தண்ணீரே! நீ எங்களுக்கு எவ்வளவு தந்திருக்கிறாய்... தாகத்துக்கு நீராய், காய்கறி, கனி, அரிசி, பருப்பு என உணவுபொருட்களாக எவ்வளவோ கொடுத்திருக்கிறாய்! எங்களைக் காப்பாற்றியதும், காப்பாற்றிக் கொண்டிருப்பதும் நீ தானே! உனக்காக நான் குரல் கொடுப்பேன்! எங்கள் அடுத்த தலைமுறைகளையும் வாழவைக்கும் உன்னைக் காப்பாற்ற நிச்சயம் போராடுவேன்' என்று சொல்லும் இந்த பெண்மணியின் பெயர் ஜோசபின் மண்டாயின். கனடா நாட்டின் மிகப்பெரிய ஏரியான "தி கிரேட்டர் லேக்' பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்களில் ஒருவர் தான் இவர்!
ஏரிக்கரையில் வசித்து வந்ததாலோ என்னவோ தண்ணீரோடு பழகி,நேசித்து, தண்ணீரை காக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபடலானார் ஜோசபின் மண்டாயின். அவர் வசித்த ஏரி கனடாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ளது. உலகின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தி கிரேட்டர் லேக் ஐந்து பெரிய ஏரிகளாகவும், சிறு சிறு ஏரிகளாகவும், தீவுகளாகவும் பிரிந்து உள்ளது. அதன் ஆழத்தையும், பரப்பளவையும் கணக்கிடவே முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஏரி, சுற்றியுள்ள தொழிற்சாலைகளாலும், எங்கெங்கோ இருந்து வரும் கழிவுநீராலும் மாசுப்பட்டு, அதன் இயல்பிலிருந்து மாறிவருவதை அறிந்து ஆவேசப்பட்டார். இந்த ஏரியை நம்பி எத்தனை குடும்பங்களும், எத்தனை தலைமுறைகளும் இருக்கின்றன என்பதை நினைத்து, சாவின் பிடியில் உள்ள இந்த ஏரித்தண்ணீரை காப்பற்றவேண்டும் என்று தீர்மானித்தார். இனி, இது தான் தன் வேலை என்று முடிவு செய்த ஜோசபின் ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, இருபாட்டிகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஏரியை சுற்றி வர தொடங்கினார். நம்மூர் ஏரிபோல ஒரு மணிநேரத்திலோ, ஒருநாளிலோ சுற்றி வர முடியாது அந்த ஏரியை. தி கிரேட்டர் லேக்கை ஒரு முறை சுற்றி வருவதென்பது அமெரிக்காவையும், கனடாவையும் கால்பகுதி சுற்றி வருவதற்கு சமமானதாகும். இருந்தும் துணிச்சலோடு வாளி தண்ணீரோடு விழிப்புணர்வு நடைபயணத்தைத் தொடர்ந்தார். ஆரம்பத்தில் இவரின் முயற்சியை எல்லாரும் கிண்டல் செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தனர். "இதெல்லாம் நடக்கிற விஷயமா என்ன? வயசான காலத்துல வெந்ததை தின்னுட்டு கம்முன்னு கிடக்காம தண்ணீரை காப்பாற்ற கிளம்பிட்டாளாம்' என்று பலர் ஜோசபின் காதுபடவே பேசினர்.
இதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஏரிக்கரையில் ஜரூராக நடை பயணத்தைத் தொடங்கினார். செல்லும் இடமெல்லாம் மக்களிடம் தண்ணீரின் அருமையை எடுத்துச் சொன்னார். "தண்ணீர் தான் நம் ஜீவ சக்தி. ஆதாரம். உயிர்ப்பிக்கும் ஊக்கி. தண்ணீர் மக்களை ஒன்று சேர்க்கும் வலிமையான தொப்புள் கொடி உறவு. நதிகள் நாடுகளை இணைக்கும் தோழிகள். அது தெரியாமல் நாம் நதிகளைப் பிரித்துப் போட்டு, நாம் பிரிந்துக் கிடக்கிறோம். வானமும் தண்ணீரும் யாவருக்கும் பொது என்பதை நம் சுயநலத்தால் மறந்து விட்டோம். மனிதர்களின் உடம்பில் தண்ணீர் தான் 75 சதவீதம் விரவிக்கிடக்கிறது. பெண் தண்ணீரை சுமப்பவள். கர்ப்பத்தில் குழந்தை தண்ணீரில் தான் வளர்கிறது. எதிர்க்கால தலைமுறையை காப்பாற்ற வேண்டுமானால் தண்ணீரை காப்பாற்ற வேண்டியது நம் கடமை' என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். இப்படி நடைபயணத்தில் தண்ணீர் மாசுபடுவதையும், அதற்கான காரணத்தையும் விளக்கினார். "படித்தவர், அறிஞர்கள், ஆய்வாளர்கள் செய்ய மறந்ததை நான் செய்கிறேன். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நடக்க ஆரம்பிப்பேன். ' என்று சொல்லும் ஜோசபின் கமாண்டாயின் 17 ஆயிரம் கி.மீ. துõரம் நடைபயணம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஜோசபின் விழிப்புணர்வு போராட்டத்தில் நாளடைவில் பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் துணையிருந்தன. அரசின் பார்வையும் இவரது போராட்டத்தின் மீது விழுந்தது. இதன் காரணமாக விவசாயம், நதி நீர் குறித்த தேசிய விழிப்புணர்வு ஆணையத்தை உருவாக்கினார்கள்.
ஜோசபின் மண்டாயின் 30 ஆண்டுகளாக, 30 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஏரித் தண்ணீர் மாசுக்கு எதிராக போராடி மக்களிடையே பெரும்புரட்சியை ஏற்படுத்தியதற்காக, கனடா அமெரிக்க நாடுகள் ஏப்ரல் 24, 2007ம் ஆண்டில் பவுண்டிங் சீப் கமிஷனரி ஆப் தி விமன்ஸ் வாட்டர் கமிஷனின் கமிஷனராக பொறுப்பு கொடுத்து கவுரவித்து தொடர்ந்து அவர் சேவையாற்ற உதவின.
சாதாரண பெண்ணாக இருந்து ஏரிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஜோசபின் இப்போது கமிஷனராக இருந்து ஏரியை பாதுகாத்து வருகிறார்.

தேவராஜன்
***************************************************



10.நோய்களை உணர்த்தும் நகங்கள்!

நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பச் செய்வது தான் மருத்துவ முறையாகும். அப்படி ஒருவருக்கு மருத்துவம் பார்க்கும் போது, அவருக்கு இருக்கும் நோய்அறிகுறிகள் இன்னதென்று காட்டும் உறுப்பு நகம்.
'அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்ற குறள் போல, அடுத்தது காட்டும் பளிங்கு போல் நோய் கடுத்தது காட்டும் நகம் என்றே சொல்லலாம். நகம் வரும் நோய் மட்டுமல்ல; வந்துப்போன நோயையும் காட்டிவிடும் என்று கூறும் டாக்டர் முருகு சுந்தரம் நகம் காட்டும் அறிகுறிகள், அது உணர்த்தும் நோய்கள் பற்றி விளக்குகிறார்.
பொதுவாக ஒருவருக்கு நகம் மாதத்திற்கு 3 மில்லி மீட்டர் வரை வளரக்கூடியது. நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப்பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு எப்போதும் நகம் அதிகமாக வளரும். பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக எல்லாருக்கும் நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இளம் சிவப்பு நிறத்தில் இருந்து மாறுபடும் நகத்தை வைத்தே அறிவியல் ரீதியாக வைத்திய ஆருடம் கூறிவிடலாம். நகம் மூலம் 40 க்கும் மேலான நோய்களை கண்டறியலாம்.

*ரத்தசோகை நோய்கள் ஒருவருக்கு இருந்தால் அவரின் நகம் ஸ்பூன்போல குழிவிழுந்து மெல்லிதாக காணப்படும்.
*பாதி வெள்ளை பாதி நார்மலான நிறத்தில் நகம் காணப்பட்டால் புரோட்டீன் சத்து குறைபாடுகளால் வரும் நோய்களுக்கான அறிகுறியாகும். சிறுநீரக நோய்கள் இருந்தாலும் நகம் பாதிவெள்ளையாக இருக்கும்.
* நகத்தின் மேற்பரப்பில் அகல வசத்தில் பட்டைக்கோடு போல இருப்பது சிறுநீரக கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
*நகத்தில் பள்ளம் விழுந்தது போல அகலவாக்கில் கோடு காணப்பட்டால், அவருக்கு டைபாய்டு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் வந்து குணமடைந்ததற்கான அறிகுறியாகும்.
*நகத்தில் புள்ளி புள்ளியாய் திட்டு திட்டாக குழியிருந்தால் அவர்களுக்கு சொரியாசிஸ் இருப்பதற்கான அறிகுறியாகும். இது சில சமயம் நார்மலாக இருப்பவர்களுக்கும் இருக்கும்.
* கிளி மூக்கு போல நகம் காணப்பட்டால் நுரையீரல் தொடர்பான நோய்கள் இருக்கிறது என்று அர்த்தம்.
*நகத்தின் வேர்ப்பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டால் இதய நோய் இருப்பதற்கான அடையாளமாகும்.
*நகத்தின் வேர்ப்பகுதி சிவப்பாக காணப்பட்டால் கல்லீரல், இதய நோய் இருப்பதற்கான அறிவிப்பாகும்.
* கை,கால் என 20 நகங்களும் வெள்ளையாக வெளுத்துப் போயிருந்தால் அவர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதற்கான எச்சரிக்கையாகும்.
*நகம் முழுவதும் பட்டுபோயிருந்தாலோ சொத்தை ஏற்பட்டிருந்தாலோ அவர்களுக்கு சுகர், தைராயிடு நோய்கள் இருப்பதற்கு சாத்தியகூறுகளாகும்.
*முழு நகமும் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நுரையீரல் நோய்கள், மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்று அர்த்தம்.
*ரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சின் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீல நிறத்தில் காணப்படும்.
* மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நகத்தில் மாற்றம் தெரியும்.
*அவரவர் பணிக்குத் தகுந்தவாறு நகம் நிறம் மாறக்கூடும். போட்டோ டார்க் ரூமில் பணி செய்பவர்கள், கெமிக்கல் பணிசெய்பவர்களுக்கு நகம் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
* வீட்டு வேலை செய்பவர்களுக்கும் எப்போதும் தண்ணீரில் கை வைத்திருப்பவர்களுக்கும், இயந்திரம், மெக்கானிக் போன்ற வேலைகளில் இருப்பவர்களுக்கு நகத்தின் இயல்பான நிறம் காணப்படாது.
*குழந்தைகள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டால் நகங்கள் பட்டுபோகும்.

அடுத்து நகங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

நகங்களை எப்போதும் துõய்மையாக வைத்திருக்க வேண்டும். நகங்களை பற்களால் கடிக்க கூடாது. அதற்கான கருவிகள் மூலம் கவனமாக வெட்ட வேண்டும். நகங்களுக்கு நெயில் பாலீஷ் போடுவதோ, போட்டத்தை சுரண்டி எடுப்பதோ கூடாது. சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும் போது நகங்களை சுத்தம் செய்யவேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை,கால் நகங்களை சுத்தமாக கழுவிக்கொள்ளவேண்டும்.
பியூட்டிபார்லர்களில் பெடிகியூர், மெனு கியூர் பண்ணக்கூடாது. பியூட்டி பார்லர்களில் நகத்தை அழகுப் படுத்துவதாக கூறி நகத்தில் உள்ள பாதுகாப்பு வளையமான எனாமலையும், நகத்திற்கும் தசைக்கும் உண்டான இணைப்பு பாண்டையும் சுத்தப்படுத்துவதாக கூறி, அதை கெடுத்துவிடுகிறார்கள். இதனால் நகத்தில் ரத்தக்கசிவு, நகசுத்தி ஏற்படுகின்றன.
நகம் என்பது அழகுபடுத்திக் கொள்வதற்காக அல்ல. அது மனித உடலில் ஒரு முக்கியமான உறுப்பு என்று எண்ணியே பராமரிக்கவேண்டும்.
தேவராஜன்
*************************************************


11.வாங்க, வாழ்க்கையை சந்தோஷமாக்கலாம்!

மகிழ்ச்சி, சிரிப்பு, ஆனந்தம், பூரிப்பு, இன்பம், நிம்மதி இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உச்சரித்து பாருங்கள்! அந்த கணம் ஒரு மலர்ச்சி மனதிலும் முகத்திலும் ஏற்படும். வார்த்தைகளில் இருக்கும் சந்தோஷத்தை வாழ்க்கையில் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? அது ரொம்ப ரொம்ப ஈசிங்க. சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டாலே போதும் சந்தோஷம் தானாக வந்து விடும். அப்படி வந்த சந்தோஷத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள சில சந்தோஷமான டிப்ஸ்கள். இதை முயற்சி செய்து பாருங்க. வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டாடலாம்.

மலர்களில் இருக்கிறது மகிழ்ச்சி:

பூக்கள் என்பது புன்னகையின் குறியீடு. வண்ண வண்ணப்பூக்கள் வசந்தங்களின் வாசல்கள். மலர்களின் மலர்ச்சியும், அழகும், வாசமும் யாரையும் வசீகரிக்கக்கூடியவை. பூக்களின் மென்மை நம் மனதை மென்மையாக்கும் வல்லமை கொண்டவைகளாக இருக்கிறது. ஆதலால், வீட்டின் முன் சின்னதாய் மலர் தோட்டம் வைத்துக் கொள்ளுங்கள்! வீட்டில் மேஜை ஜாடிகளில் வண்ண வண்ணப்பூக்களை வையுங்கள். அலுவலகம் என்றால் உங்கள் டேபிளில் மலர்கொத்து வைத்துக் கொள்ளுங்கள். வண்ண வண்ணமாய் இருக்கும் பூக்கள் மலர்ந்து, காற்றில் அசைந்தாடும் அழகை நீங்கள் பார்க்கும் போதெல்லாம் உங்கள் மனதில் சட்டென்று மலர்ச்சியும், மகிழ்ச்சியும் தொற்றிக் கொள்ளும். அது மட்டுமல்ல; உங்களை சுற்றியிருப்பவர்களின் மனநிலையையும் குதுõகலப்படுத்தும் சக்தி பூக்களுக்கு உண்டு.

அழகான படங்கள் மகிழ்சியை தரும்:

வீட்டின் சுவரில் அழகான படங்களை மாட்டி வைத்தால் வீடும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதைப் பார்க்கும் போது நம் மனதுக்கும் ஒருஉற்சாகம் கிடைக்கும். மொசுமொசுவென்று இருக்கும் முயல், துள்ளிக்குதிக்கும் புள்ளிமான்கள், விரைந்து ஓடும் குதிரை, செல்லப்பிராணிகளான நாய், பூனைகளின் அழகான படங்களை லே அவுட் செய்து சுவரில் மாட்டி வைத்தால் அதை பார்க்கும் நேரத்தில் எல்லாம் ஆரவாரமான உற்சாகம் பிறக்கும். எதையாவது செய்யணும் என்ற சுறுசுறுப்பும், சாதிக்கவேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். மனதில் இருந்த அழுத்தம், சோர்வு, சுமை, அலுப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். ஆகையால் நீங்கள் சந்தோஷமாக இருக்க உங்கள் வீட்டு சுவரில் அழகான விலங்குகளின் படங்களை ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அக்கம் பக்கம் பாருங்க பரவசமாவீர்கள்:

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், வீடேகதி என்று கிடக்காமல் அவ்வப்போது கொஞ்சம் வெளியே வாருங்கள். உங்களுக்கு சந்தோஷப்பொக்கிஷத்தை சுமந்துகொண்டு வானம் திறந்தே கிடக்கிறது. உங்களுக்கு புன்னகை அள்ளி வழங்க பூங்காக்களில் பூக்கள் மலர்ந்து கிடக்கின்றன. சில்லென்று சிலுசிலுத்து ஓடும் நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. கரைகளோடு கதைப் பேசியபடி, வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும் திரும்பும் போதும் வழியில் பார்த்து மகிழ எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டுக்கருகே அழகான பார்க் இருக்கலாம். ஏரி இருக்கலாம். கோயில் இருக்கலாம். மரங்கள் அடர்ந்த நிழற்சாலைகளில் பறவைகள் கூட்ட கூட்டமாய் பறந்து கொண்டிருக்கலாம். இதை எல்லாம் மனம் திறந்து பார்த்து மகிழப் பழகுங்கள். வீட்டின் மொட்டைமாடியில் மாலையில் மஞ்சள் பூசிய அந்திவானமும், இரவுகளில் ஒளிவீசும் நட்சத்திரங்களும் கூட மனதை லேசாக்கும். பவுர்ணமி நிலவுக்கும் நேரம் ஒதுக்கி விட்டு துõங்கி பாருங்கள். கண்ணை துõக்கம் கவ்வி ஆனந்தத்தில் ஆழ்த்தும்.

உண்ணும் உணவிலும் உற்சாகம் இருக்கிறது:

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த பசி தீர்ந்தால் போதும் அதை விட ஒரு பேரானந்தம் இருக்கிறதா என்ன? வீட்டில் சாப்பிடும் அதே உணவை ஒரு ஓட்டலில் சாப்பிட்டால் கிடைக்கும் சந்தோஷம் வேறுமாதிரியானது. சாப்பாட்டு விஷயத்திலும் இடம்,பொருள், ஏவல் இருக்கிறது. வேலைப்பாடுகள் அமைந்த டைனிங் ஹால், அழகான விரிப்புகள், சுத்தமான தண்ணீர், பளீரென்ற வெள்ளைத்தட்டு இவை எல்லாம் இருந்தால் சாப்பிடும் மூடு தானாகவே வந்துவிடும்.
அடுத்து சாப்பிடும் உணவின் நிறம் வானவில் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தால் போதும், சாப்பாடின் சுவை சாப்பிடும் முன்பாகவே நாவில் வந்து உட்கார்ந்துவிடும். பல வண்ண வகை உணவுகள் மனதில் புதுவித மகிழ்சியை தரும். ஆனால் சிகப்பான நிற உணவு வகைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்திவிடும். எனவே சிகப்பான உணவுகளில் மஞ்சள் நிற சோளப்பொரி, பெப்பர் போன்றவற்றை கலந்து சாப்பிடுங்கள்.

அன்பாக பேசுங்கள்! ஆனந்தம் காணுங்கள்:

நீங்களும் சந்தோஷமாக இருக்க, பிறரும் சந்தோஷமாக இருக்க நீங்கள் செய்யவேண்டியது என்ன வென்றால் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும். உங்கள் உறவினரிடமோ, நண்பர்களிடமோ பேசும் போது உங்க சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் சொல்லி புலம்பாதீர்கள். தேவையில்லாமல் இதயம், ஆத்மா, ரோஸ், மரணம் ஆகிய வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். எப்போதும் சிடுசிடுவென எரிந்து விழுந்து கொண்டும், கோபம் கொண்டும், பதட்டம், டென்ஷன் கொண்டிருந்தால் உங்களை விட்டு சந்தோஷம் போய் தோஷம் மட்டுமே மிஞ்சும். ஆகவே சதா முணுமுணுத்துக் கொண்டேயிருக்காதீர்கள். எப்போதும் எங்கேயும் எந்த நிலையிலும் அமைதியாக,பொறுமையாக அடக்கமாக இருங்கள். கூலாக இருங்கள்.

வாய்நிறைய புன்னகையை கொண்டிருங்கள்:

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்படாமல், பதட்டபடாமல் இருங்கள். பிடிக்காததை பிறரிடம் நாசுக்காக சொல்லப் பழகுங்கள். சட்டென்று மூஞ்சில் அறைந்தார் போல சொல்லி விடாதீர்கள். பிடிக்கவில்லை என்றால் மென்மையாக வேண்டாம் என்று சொல்லிப் பழகுங்கள். தவறுகள் நிகழும் போது தயங்காமல் மன்னிப்பு கேட்க பழகுங்கள். இதையெல்லாம் செய்து வந்தால் நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்.

நறுமணம் கமழும்படி வீட்டை வைத்துகொள்ளுங்கள்:

வீட்டை சுகந்தமாய் வைத்துக் கொள்ள வாசனைத் திரவியங்களை தெளியுங்கள். வீட்டில் நல்ல மணம் வீச துளிசி, மல்லிகைச் செடி, நல்ல வேம்புச்செடி, ஓமம் செடி,வெட்டிவேர், மரிக்கொழுந்து செடிகளை வளருங்கள். அப்புறமென்ன வீடுகமகமக்கும். உங்க மனசும் மகிழ்சியில் குதுõகலப்படும்.
தேவராஜன்
**************************************************


12. குண்டா இருந்தா நோய் உண்டாகும்!

நீங்கள் அதிக கொழுப்பு சத்தினால் பருமனாக இருக்கீங்களா? உஷார்... உங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது. நீரழிவு நோய் வரும் என்று ஒரு ஆய்வு, குண்டு பெண்கள் மீது இப்படி ஒரு குண்டைப் போட்டிருக்கிறது.
"உண்டி சுருங்கின் பெண்டீருக்கு அழகு' என்று ஒரு பழமொழி உண்டு. பொதுவாக பெண்கள் மெலிந்து இருப்பது அழகு மட்டுமல்ல; ஆரோக்கியமும் கூட. ஆனால், இன்றைய நகரத்து பெண்கள் பெரும்பாலானோர் பருமனாகவே இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்களை ஆய்வு செய்து "குண்டாக இருந்தால் பல நோய்கள் ஏற்படும்' என்று ஒரு அதிர்ச்சி தகவலை ஆல் இன்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் டிபார்ட்மென்ட்( அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன துறை) தெரிவித்துள்ளது.
கிராமத்து பெண்களைவிட, நகரத்து பெண்கள் அதிக பருமனாகிவிடுகிறார்கள். அதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும் குறிப்பாக, வாழ்க்கை முறை, உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வசிக்கும் பிரதேசத்திற்கும், தட்பவெட்பநிலை சீதோஷணத்திற்கு ஏற்ற உணவுவகைகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, நம் வாழ்க்கை முறைக்கும், கலாசாரத்துக்கும் எதிரான உணவுவகைகளை சாப்பிடுவதால் தான் ஒருவகையில் நாம் பருமனாகிவிடுகிறோம். நாம் சாப்பிடும் உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாததும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். பருமனாக இருப்பதால் பெரும்பாலனவர்களுக்கு சுகர், மனஅழுத்தம், இதயநோய், தைராய்டு பிரச்னை போன்ற பல நோய்கள் வருகின்றன.
எய்ம்ஸ் ஆய்வில் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் சொல்லப்பட்ட பெண்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது தெரியுமா?
பெண்களில் 64 சதவீதம் நகரத்துப் பெண்களும், 36 சதவீதம் கிராமத்துப் பெண்களும் ஓவர் வெயிட்டாக இருக்கிறார்கள். 64 சதவீதம் நகரத்துப் பெண்களும், 29 சதவீதம் கிராமத்துப் பெண்களும் கனத்த உடல் தொல்லையை அனுபவித்து வருகிறார்கள். 96 சதவீதம் நகரத்துப் பெண்களும், 76 சதவீதம் கிராமத்துப்பெண்களும் உடல்பருமன் காரணமாக இதய நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். 14.5 சதவீதம் நகரத்துப்பெண்களும், 3.7 சதவீதம் கிராமப்புற பெண்களும் உடல் பருமனால் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். 80 சதவீதம் நகரத்துப் பெண்களுக்கும் 25 சதவீதம் கிராமத்துப் பெண்களுக்கும் அனிமியா நோய் உள்ளது. 25 சதவீதம் நகரப் பெண்களும் 13 சதவீதம் கிராமப்புற பெண்களும் அதிக கொலஸ்டிரால் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.
ஜெய்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களில் 68 சதவீதத்தினர் உடல் பருமனாக உள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்களில் பருமனாக இருப்பவர்களில் 82 சதவீதம் பேர் வயிறு பெருத்துக் காணப்படுகின்றனர்.
சரி, பருமனை குறைக்க என்ன செய்வது?
இயற்கை உணவுவகைகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகள் நார்சத்துள்ள காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சத்துள்ள பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேற்கத்திய உணவுவகைகளை சாப்பிடுவதை விலக்கி கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி செய்துவரவேண்டும். முறையாக உடற்பயிற்சி செய்து வரவேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டியை எடை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள ஒருஎளிய வழி என்னவென்றால் உங்கள் உயரத்தை செ.மீ. அளவில் அளந்து கொள்ளுங்கள். அந்த உயர அளவில் நுõறினை கழிக்க வேண்டும். அப்படி கழித்தப்பின் மீதம் இருக்கும் அளவே உங்கள் உயரத்திற்கு இருக்கவேண்டிய சராசரி எடையாகும்.
உதாரணமாக உங்கள் உயரம் 150 செ.மீ. என்றால் 150 லிருந்து 100 கழிக்க மீதம் 50 இருக்கும் அல்லவா? அந்த 50 தான் உங்கள் உயரத்துக்கான சராசரி எடையாகும். இது போல உங்கள் உயரத்துக்கு இருக்க வேண்டிய எடையை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்துக்கேற்ப சராசரி எடை அதிகமாக இருந்தால் உடல் பருமனை குறைக்க முயற்சி செய்யுங்கள். நோய்களிலிருந்து விடுபடுங்கள்.

தேவா
*********************************************


13. வாசகிகளின் கவிதையில்
உருகிய பா.விஜய்!

தினமலர் பெண்கள்மலர், ரத்னா ஸ்டோர்ஸ் ஃபேர்ம் இணைந்து நடத்திய அன்னையர் தின கவிதைப்போட்டிக்கு பெண்கள் மலர் வாசகியிடமிருந்து கவிதைகள் கொட்டோ கொட்டென்று கொட்டிவிட்டது. அன்னையைப்பற்றிச் சொல்ல ஒவ்வொருத்தரிடமும் எத்தனை விதமான வார்த்தைகள் இருக்கின்றன! அடேங்கப்பா.

முதலில் கவிதைகோதாவில் குதித்த அனைத்து வாசகிகளுக்கும் ஒரு சபாஷ்!
எத்தனை எத்தனை கருத்துகளில், வடிவங்களில் கவிதைகள்...

ஒரு கூடை மல்லிகைப்பூவில் எந்தப்பூ நன்றாக மணக்கிறது என்று சொல்வது எப்படி கடினமோ அத்தனை கடினமானது என்பதை நீங்கள் எழுதி குவித்த கவிதைகளில் சிறந்த கவிதையை தேர்ந்தெடுக்கும் போது ஆசிரியர் குழு அனுபவித்தது. இறுதியில், தேர்வான கவிதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் பரிசுக்குரிய 25 கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கவிஞரும், ஞாபகங்கள் பட நாயகனுமான பா.விஜயிடம் ஒப்படைத்தோம்.
ஞாபகங்கள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்தாலும், நம் வாசகிகளுக்காக நேரம் ஒதுக்கி, வாசகிகளின் ஒவ்வொரு கவிதையையும் பொறுமையாக ரசித்துப் படித்தவர் ஆச்சரியப்பட்டுபோய், "ஒரு தேர்ந்த கவிஞர்களைவிட வாசகிகள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்' என்றார்.

"அம்மா!
கையெழுத்திடு, கவிதை கேட்கிறார்கள்!
தெரியாதே மகளே! ரேகை வைக்கட்டுமா?
வை! பரவாயில்லை
ஓவியமும் கேட்கிறார்கள்!'

திருச்சியை சேர்ந்த மாலதி எழுதிய இந்த கவிதையை ரசித்து வாசித்தவர், இந்த கவிதையில் 80 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு கவிஞனின் முதிர்ச்சியும், அனுபவமும் தெரிகிறது என்றார். அவரை கவர்ந்த இன்னொரு கவிதை,

"துõரத்தில் நிலவு அருகில் அம்மா
பக்கத்தில் என் குழந்தை
துõரத்தில் பாட்டியாய்...' வேதாரண்யம் ரமிதா எழுதியது.

"என் பிள்ளைகள் சுகமாய்
இருக்கவேண்டும்!
முதியோர் விடுதியின்
கூட்டுப்பிரார்த்தனையில்
அம்மா!' இது ஈரோட்டிலிருந்து ஆழிலதா எழுதியது.

இப்படி ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்துப் பாராட்டி அவர் சொன்னது. ""என்னைப்பொறுத்தவரை தொழில் முறையாக கவிதை எழுதும் கவிஞர்கள் கவிதை செய்கிறார்கள். ஆனால், இதுபோல வாசகர்கள்தான் கவிதைகளைப்பிரசவிக்கிறார்கள். இவர்களின் படைப்பில் தான் ஜீவனிருக்கும். உணர்வு இருக்கும்.

ஆண்களைப்போல பெண்கள் அதிகமாக கவிதைகள் படைப்பதில்லையே என்று கருத்து கேட்ட போது, அவரிடம் விளக்கம் இருந்தது.

""பெண்கள் அதிகம் கவிதைகள் எழுத முன்வராததற்கு காரணம் அவர்களின் சூழ்நிலை. பதினெட்டு வயதுவரை சுதந்திரமாக இருக்கும் அவர்கள், திருமணம் ஆனவுடன் பொறுப்புகள், சுமைகள் சுமக்கவேண்டியிருப்பதால் இந்த தேக்கம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.

இருந்தாலும், பெண்கள் அதிகம் படிக்கவேண்டும். எழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். ஒருவர் படிக்க படிக்க, படித்த விஷயங்கள் உள்ளே போனதும் அவை உள்ளேயே இருந்து விடாது. அது எழுத்தாகவோ, பேச்சாகவோ வெளியே வந்துவிடும். வெளியே வந்தவை நிச்சயம் நல்ல படைப்புகளாக மலரும். அதனால் தான் பெண்கள் நிறைய படிக்கவேண்டும் என்கிறேன்.

அடுத்ததாக, பெண்களை எழுதவைக்க பத்திரிகைகள் இது போல போட்டிகள் வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி, எழுததுõண்டும் சேவையை செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
உங்களின் அன்னையை பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு, ""என்னுடைய வெற்றிக்கெல்லாம் காரணம் என் அப்பா என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் தான் என் வெற்றிக்கு அப்பா மூலமாக அம்மா இருந்திருந்ததை அறிந்தேன். "தாய்காவியம்' படம் எடுக்க போய் நான் பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த சுமையை சுமக்க முடியாமல் நிம்மதியில்லாமல் இருந்தேன். ஒருநாள் இரவு அசிரிரீ போல என் அம்மாவின் குரல் ஒலித்தது. "மகனே, ஏன் சுமையை சுமந்துகொண்டே இருக்கிறாய். சுமை அழுத்தும் போது எப்படி நடக்க முடியும்? அந்த சுமையை இறக்கி ஓரம் வைத்துவிட்டு வேறு வேலையைப் பார். எல்லாம் சுபமாகும்' என்று கேட்டது.
கொஞ்சம் யோசித்தேன். அம்மாவின் வார்த்தையை வாக்காக எடுத்துக்கொண்டு தாய்காவியம் கசப்பான சம்பவங்களை மறந்து, அந்த பட முயற்சியை துõரவைத்து விட்டு "ஞாபகங்கள்' பட வேலையில் இறங்கினேன். கிடுகிடுவென்று படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அம்மா'' என்று உருகினார் பா.விஜய்.
தேவராஜன்
*************************************************


14. எங்கள் குடும்பம் ஓவியக்குடும்பம்!


""கோட்டு ஓவியம், நவீன ஓவியம் என எத்தனை ஓவியங்கள் வந்தாலும், பாரம்பரிய தஞ்சை ஓவியத்திற்கு உள்ள மவுசே தனி. அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இன்றும் தஞ்சை ஓவியம் வாங்கவும், அதை வரைய கற்றுக்கொள்ளவும் விரும்புகிறார்கள் என்பதால் தஞ்சை ஓவியக்கலை சாகாவரம் பெற்றது என்று தான் சொல்வேன்'' என எடுத்த எடுப்பிலேயே பிரம்மிப்பூட்டுகிறார், மணிமொழி.
சென்னை கே.கே.நகரில் வசிக்கும் மணிமொழி, ஓவியகலைஞர். இவர் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் மதுரை. தனக்கு இருக்கும் ஓவியத்திறமையை வளர்த்துக்கொள்ளவும்,கலையார்வம் உள்ளவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியக்கலையை கற்றுக்கொடுக்கவும் மதுரையிலிருந்து சென்னைக்கு இடப்பெயர்ச்சி செய்துள்ளார்.

உங்களைப்பற்றி சொல்லுங்களேன்?
அன்பான கணவர் அன்பு மணி. எனக்கு எல்லாவகையிலும் ஊக்கியாக இருக்கிறார். ஒருமகள். மதுரையில் இருக்கிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். என்னைப் போலவே மகள், பேத்திகளுக்கும் ஓவியத்தின் மீது ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் எங்கள் குடும்பம் ஓவியக் குடும்பம்.

தஞ்சாவூர் ஓவியக்கலைக்கு உங்களுக்கு அறிமுகமானதைச் சொல்லுங்களேன்?
ஸ்கூலில் படிக்கும் போது தான்தோன்றித்தனமாக ஓவியம் வரைவேன். பள்ளிகளில் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். இதனால்தான் எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது என்று சொல்ல முடியாது. பள்ளிப்படிப்பு முடிந்தப்பிறகு, வீட்டில் சும்மா இருந்தபோது, ஒரு சமயத்தில் எதிர் வீட்டில் உள்ள சக தோழிகள் பொம்மைகள் செய்வது, ஓவியம் தீட்டுவது என இருந்தார்கள். சும்மா இருப்பதற்கு அவர்களைப்போல ஓவியம் வரைந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. நானாகவே ஆர்வமிகுதியால் பல ஓவியங்கள் வரைந்து பழகினேன். ஒருவிழாவில் ஓவியர் முருகேசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் முறைபடி ஓவியம் பழக ஆரம்பித்தேன். பின்னர், எம்பிராய்டு செய்தல், சேலைகளுக்கு டிசைன் செய்தல் என இருந்தேன். என் கணவரின் துõண்டுதலால் பிறருக்கும் சொல்லிக் கொடுக்கலாமே என தீர்மானித்தேன். அதற்கு மதுரை சரிவராது என தோன்றியதால் 2000ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.

தஞ்சாவூர் ஓவியம் தவிர, வேறு வகை பெயிண்டிங் பண்றீங்களா?
பாட், பேப்ரிக், நிப், பதிக், சேன்ட், காஷ்மீரி, ஸ்டெயின், போர்ட்ரய்ட், டைல்ஸ், கட்கிளாஸ், ராஜாஸ்தான், முரல், பேட்ச் ஒர்க், சோலார்வுட், ஸ்டோன் ஒர்க், சாப்ட்பர் டால், கேன்வாஸ், கிளாத் எம்போசிங், மெட்டல் எம்போசிங் என்று நிறைய பெயிண்டிங் செய்யறேன். ஆர்டரின் பேரில் தஞ்சாவூர் பெயிண்டிங் பண்ணிக் கொடுக்கிறேன். கொலுவின் போது அழைப்பின் பேரில் அவரவர்கள் விருப்பப்படி திருவண்ணாமலை கிரிவலம், திருப்பதி மலை, நீர் ஊற்று போன்ற டெக்கரேசன் செய்து கொடுக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு பிராஜக்ட் செய்து கொடுக்கிறேன்.

ஓவியக்கண்காட்சி வைத்திருக்கிறீர்களா?
அசோக்நகரில் ஜெவஹர் வித்யாலயா ஸ்டாலிலும், கே.கே. நகர் ஸ்பென்சர் ஸ்டாலிலும் கண்காட்சி வைத்திருக்கிறேன். ஓவியங்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக, அப்சரா பென்சில் நிறுவனமும், கேமல் நிறுவனமும் ஸ்பான்சர் செய்யும் ஓவியப்போட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்துகிறேன். இந்தப் போட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாணவர்களிடம் ஓவியக்கலையார்வத்தை வளர்த்து வருகிறேன். மேலும் மாணவர்களுக்கு ஸ்டைல் கையெழுத்துப்பயிற்சியும் கற்றுத்தருகிறேன்.

உங்களை மெய்சிலிர்க்வைத்த பாராட்டு?
என்னிடம் பிரபல ஓவியர் மாலி தன் பேத்திக்கு ஓவியம் கற்றுக்கொடு என்று சொல்லி பேத்தியை அனுப்பி வைத்தார். ஒரு நாள் தன் பேத்தி வரைந்த ஓவியத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, கற்றுத்தந்த என்னை மனம் திறந்து பாராட்டினார். அது தான் என்னை கவுரவப்படுத்தியது.

எதிர்கால லட்சியம் என்ன?
வருங்காலத்தில் அரசு அங்கீகாரத்துடன் ஓவியப் பள்ளி தொடங்க வேண்டும் என்பது என் கனவு. மேலும் ஓவிய ஒர்க்ஷாப் வைத்து, ஓவியதொழிலில் மேலும் மேலும் வளரவேண்டும்.
தேவராஜன்
**************************************************


15.அனுதாபம் வேண்டாம், அங்கீகாரம் போதும்!

கல்லுõரிப் பெண்ணைப் போன்ற தோற்றம், பேசும் போது ஒவ்வொரு வார்த்தையோடு புன்னகையையும் சேர்ந்து வந்து விழுகிறது. இதுதான் முத்துச்செல்வி. முத்துச்செல்வியை பிரம்மன் சிருஷ்டி செய்தப்போது, கவனக்குறைவால் கண்ணில் ஒளியை கொடுக்க மறந்து விட்டானோ? என்ற ஆதங்கம் மனதை ஓங்கி அறைந்ததில் தகித்துப் போய் மவுனத்தில் இருந்த நிமிடங்களில், ""பார்வை இல்லை என்பதை ஒருபொருட்டாகவே நான் கருதியதில்லை. இதுவரை கண் தெரியாதவர்கள் யாரும் இந்தியாவில் நீதிபதியானதில்லை. அந்த சாதனையை நான் செய்வேன். அதன் மூலம் நான் பார்க்காத இந்த உலகத்தை, என்னைப் பார்க்கச் செய்வேன்'' என்று தன்னம்பிக்கை மிளிர லட்சிய கனவை முத்துச் செல்வி கூறியதும் அவரைப் பார்த்தது முதல், மனதில் படிந்திருந்த அனுதாப உணர்வை சுத்தமாய் துடைத்துப் போட்டு அவரைப் பற்றி விசாரித்தோம்.

""நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்தான் என் அப்பா, அம்மாவின் பூர்வீகம். இப்போ காட்டாங்குளத்துõரில் எஸ்ஆர் எம் காலேஜ் பக்கத்தில் சொந்த வீட்ல இருக்கோம். அப்பா சப்இன்ஸ்பெக்டர். அம்மா ஹவுஸ் வொய்ப். என் அக்கா வெங்கடேஸ்வரி பிஸியோதெரபிஸ்ட். இப்போ அவளுக்கு ஸ்டேட் பாங்கில் வேலை கிடைச்சிருக்கு. இளையவன் தம்பி மணி லயோலா காலேஜில் சோஷியாலஜி படிக்கிறான். குடும்பத்தில் எங்கள் மூவருக்குமே கண் தெரியாது. எங்க மூணு பேருக்கும் மாறி மாறி சிகிச்சைப் பார்த்து அலுத்துவிட்டார் என் அப்பா'' என்கிறார் முத்துச்செல்வி.

""அம்மாவும், அப்பாவும் நெருங்கிய உறவுக்குள் கல்யாணம் செய்து கொண்டதுதான் நாங்க இப்படி பொறந்ததுக்கு காரணம்னு டாக்டர்கள் சொல்றாங்க. எங்களுக்கு பார்வைதான் இல்ல. ஆனா, தன்னம்பிக்கை நிறைய இருக்கு. அதுக்கு காரணம் எங்களோட பெற்றோர்தான். பார்வையில்லை என்பதை ஒருபொருட்டாகவே நாங்கள் எண்ணாத அளவுக்கு எங்களை வளர்த்து, படிக்க வைத்திருக்கிறார்கள்'' என்று தன் பெற்றோருக்கு நன்றி கூறும் முத்துச்செல்வி பிஎல் ஹானர்ஸ் படித்திருக்கிறார். இப்போது ஜஸ்டீஸ் படிப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்.

""இதுவரை கண் தெரியாதவர்கள் யாரும் இந்தியாவில் நீதிபதியாக இருந்ததில்லை. ஜஸ்டீஸ் பரிட்சையில் பாசாகி, நீதிபதியாக ஆவதே என் லட்சிய பயணம்'' என்கிறார் உறுதியோடு.

தன்னைப்போல் பார்வையில்லாமல் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக முத்துச்செல்வியும், அவரின் தோழிகளும் இணைந்து "டாண்' என்ற டிரஸ்ட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.

""பார்வையில்லாதவர்களில் 90 சதவீதம் பேர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியா உதவி செய்யணும். கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுக்கணும். பார்வை கிடைக்க வழி செய்யணும். என்னோட இந்த ஆசையை எல்லாம் நிவர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் இந்த டிரஸ்ட்டையே ஆரம்பிச்சிருக்கோம். நான் செய்யவேண்டிய பணிகளும், என் லட்சியங்களும் நீண்டுகிடக்கிறது. அதை நோக்கி என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது'' என்கிறார் புன்னகையுடன்.

உங்களின் வருங்கால கணவர் எப்படிப்பட்டவரா இருக்கணும் என்ற நம் கேள்விக்கு, ""என் மீது அனுதாபப்படாமல், என்னை சக மனுஷியாக நினைக்கும் ஆண்தான் எனக்கு கணவராக வரவேண்டும்'' என்று பட்டென்று பதில் வருகிறது முத்துச்செல்வியிடமிருந்து.

தேவராஜன்
படங்கள்: செல்வக்குமார்
***************************************************


16 . முதுகுவலியால் அவதிப்படுபவரா...?

நம் அம்மா, பாட்டிகளின் வாழ்க்கை முறைக்கும் இன்றைய நம் வாழ்க்கை முறைக்கும் வித்தியாசம் உள்ளது.
பாட்டிமார்கள் செய்த வீட்டு வேலைகளே உடற்பயிற்சிகளாக அமைந்து, உடல் வலுவையும் ஆரோக்கியத்தையும் கொடுத்தன. அம்மி, ஆட்டுக்கல், உரல் பயன்படுத்துவது, பெருக்குவது, கோலம் போடுவது, கிணறு, அடி பம்புகளில் தண்ணீர் எடுப்பது போன்ற செயல்களினால் அவர்களுக்கு முதுகு வலி, மூட்டுவலி, தசைப்பிடிப்பு, சுளுக்கு எல்லாம் ஏற்பட்டதில்லை.
ஆனால், இன்று சுவிட்சை தட்டுவது மட்டும்தான் நம் வேலை. மற்றவற்றை அந்தந்த வேலைக்குரிய மிஷின்கள் பார்த்துக் கொள்கிறது. இதனால் நமக்கு குனிந்து, நிமிர வேண்டிய வேலையே இல்லாமல் போய்விட்டது. இதனால் எலும்புகளும், தசைகளும் இறுகி முதுகுவலி, மூட்டுவலி போன்ற வலிகளை ஏற்படுத்துகின்றன.

முதுகு வலி வராமல் இருக்க சில எளிமையான டிப்ஸ்கள்:

1. முதுகு வலி வருவதற்கு முதல் காரணமாக இருப்பவை நாம் படுத்து உறங்க பயன் படுத்தும் படுக்கை தான். படுக்கை மேடு, பள்ளமாக, ரொம்ப தடிமனாக இருக்கக்கூடாது. அதே சமயம் படுக்கை மேற்பரப்பு மிகவும் மென்மையாகவும், கடுமையானதாகவும் இருக்கக் கூடாது.

2. படுத்ததும் ஆழ்ந்த துõக்கம் வருவதற்கு துõங்கும் முறை கவனிக்கப்படவேண்டியவையாக இருக்கிறது.
கொஞ்சம் தளர்வாக, ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, தலைக்கு கீழ் அதிக தடிமன் இல்லாத தலையணை வைத்து கொள்ளவேண்டும். முழங்காலுக்கு இடையில் மென்மையான தலையணை வைத்துக்கொண்டு படுத்தால் முதுகு வலி ஏற்படாது. இருக்கும் வலியும் தீரும்.

3. அதிக எடையுள்ள பொருளை மூச்சைப் பிடித்துக்கொண்டு தள்ளவோ, இழுக்கவோ கூடாது. ஒரே இருக்கையில் ஒரே முறையில் ரொம்ப நேரம் அமர்ந்திருக்கக்கூடாது. அப்படி அமரவேண்டிய நிலை
ஏற்பட்டால் கொஞ்ச நேரம் எழுந்து, நடந்து பிறகு அமரவும். பிறகு படத்தில் காட்டியவாறு பயிற்சி செய்து பழகி வந்தால் முதுகு வலி வராது.

4. முழங்காலிலும், முட்டியிலும் வலி ஏற்பட்டால், அடிப்பட்டு வலி வந்தால், வலிகாரணமாக உடம்பை அசைக்க முடியாமல் இருந்தால், 3 நாளுக்கு மேலும் வலி குறையாமல் இருந்தால் உடனே, உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

5. பளுவான பொருளைத் துõக்கும் போது முதுகு வலி ஏற்படும். அதனால் சற்று குனிந்த நிலையிலோ, கால் முட்டி வளைந்த நிலையிலோ பொருளைத் துõக்கக்கூடாது. அமரும் நிலையில் முதுகு தண்டு நேர் நிலையில் இருக்கும்படி இருந்து பளுவைத்துõக்கினால் முதுகு வலி ஏற்படாது.

7. ஒரே நிலையில் ஒரே இடத்தில் ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தாலும் முதுகு வலி வரும். அதனால், நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்காமல் சற்று தடிமனான கட்டை மீது ஒரு காலின் பாத்தை வைத்து நின்றால் முதுகு வலியை தவிர்க்கலாம்.

8. முதுகுவலிக்கு சில எளிய உடல் பயிற்சிகள்: படம் 1ல் உள்ளது போல ஒரு காலை மடக்கி முட்டி நெஞ்சு பகுதிக்கு வருமாறு வைத்து சிறிது நேரம் கைகளால் அணைத்து கொள்ளவேண்டும். படம்2ல் உள்ளது போல இரு கால்களையும் மடக்கி கைகளால் அணைத்துகொள்ளவேண்டும். படம்3 இருப்பது போல
இரு கைகளை தரையில் நேராக படுமாறும், பின்னர் கால்களை மடக்கி இடுப்பு பகுதியை உயர்த்திக்கொண்டு
இருக்க வேண்டும்.

9. முதுகு வலி ஏற்பட நாம் அணியும் செருப்பும் ஒரு காரணமாக இருக்கிறதாம். ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்தால் முதுகு வலி வரும். படத்தில் உள்ளது போன்று எளிய உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால்
முதுகு வலியை தவிர்க்கலாம்.

10. துõங்கும் போது தலைக்கு கீழ் தலையணையும் தொடைக்கும் முட்டிக்கும் கீழ் அதிக தடிமன் இல்லாத தலையணை வைத்து கொண்டு துõங்க வேண்டும். முதுகு வலி இருக்கிறதே என்பதற்காக இடுப்புக்கு கீழ் தலையணை வைத்துக் கொள்ளக்கூடாது.

11. சேரில் அமரும் போது படத்தில் காட்டியவாறு அமர்ந்து பணி செய்யுங்கள். இருக்கமாக அமராமல் சற்று தளர்வாகவும், எல்போ நிலையிலும், தோள்பாகம் ரிலாக்ஸ் ஆகவும், இடுப்பு பகுதி சேரின் பின்புறம் நன்கு பதியும் படியும், கால் பாதம் தரையில் சமதளமாக படுவது போலும் உட்கார வேண்டும்.
தேவராஜன்
***************************************************


17.பொண்ணுப் பார்க்க போறீங்களா?

பெண்கள்மலரை ஆண்களும்தான் படிக்கிறோம், எங்க சப்ஜெக்ட் ஏதாவது கொடுக்கக் கூடாதா? என்று ஏக்கத்தோடு கேட்கும் ஆண்களுக்குதான் இந்த கட்டுரை.
கல்யாண பருவம் வந்துவிட்டால் பார்க்கும் பெண்கள் எல்லாம் அழகாக இருப்பார்கள், எந்தப் பெண் சிரித்தாலும் சிப்பொனியாகவே கேட்கும். "மணி என்ன?' என்று கேட்பது கூட கவிதையாய் தித்திக்கும். இப்படி பருவம் வருத்தெடுக்கும் போது, இதில் என்னவள் எவள்? அவள் எப்படி இருப்பாள், இந்தப் பெண்ணை போல் இருப்பாளோ, அவளைப் போல இருப்பாளோ என்று ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் திருமணம் ஆகாத ஆண்களுக்கு இந்த கட்டுரை நிச்சயம் உதவும். தொடர்ந்து படியுங்கள்.
"நீங்கள் உங்கள் மனைவியை தேர்ந்தெடுப்பதில் பாதி பங்கு உங்களுடையவை. மீதி பங்கு இறைவனுடையவை' என்று கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கல்யாணம் என்ற பேச்சு வந்ததுமே மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகள் வந்து வண்டு போல துளைத்தெடுத்து விடும். எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்துகொள்வது? அவள் என் குடும்பத்தோடு ஒத்துபோவாளா? எத்தனை முறை சந்தித்து,பேசினால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்? எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம்? இது என் வாழ்க்கை. எனக்கு பிடித்த பெண்ணை தேர்வுசெய்வதில் எனக்கு உரிமையிருக்கிறது. ஆனால் தேர்ந்தெடுப்பதில் எதாவது தவறு செய்துவிடுவேனா? அப்படி என்றால் அந்த தவறுகள் என்னவாக இருக்கும்? இப்படி நீங்கள் குழம்பி இருக்கலாம். உங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள இந்த விதிகளை பின்பற்றுங்கள்.

கல்யாண விதி1

18 வயது வரை பெண்களுக்கு வெளிஉலகம் அவ்வளவாக தெரியாது. 2324 வயதில்தான் படித்து முடித்து, வேலைக்கு செல்வார்கள். இந்த வயதில்தான் தைரியமாக வெளிமனிதர்களிடம் பேசி, பழகுவார்கள். ஆனால் இந்த வயதுடைய பெண்ணை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கொஞ்சம் தொல்லை தான். அவர்களுக்கென்று திட்டவட்டமான ஒரு தீர்மானம், நிலையான விருப்பம் எல்லாம் இருக்காது. எனவே உங்கள் தேடல் முதல் கிளிக்கில் கிளிக் ஆக வேண்டுமென்றால் 2425 வயதுடைய பெண்ணைப் பாருங்கள்.

கல்யாண விதி2

எல்லாருமே உலக அழகி ஐஸ்வர்யாராயை மணமுடிக்க முடியாது என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்கள் அந்தஸ்துக்கு கொஞ்சம் குறைவாகவே பெண்ணை தேர்ந்தெடுங்கள். நல்ல பெண்கிடைப்பது நிச்சயம்.

கல்யாண விதி3

வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை சந்திக்கிறோம்; பழகுகிறோம். எல்லாரையும் சட்டென்று இவர் இத்தகையவர் என்று தீர்மானித்துவிட முடியாது. ஆதலால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணை பல தடவைகள் சந்தியுங்கள், நட்புடன் பேசுங்கள். உதவிக்கு வேண்டுமானால் பெற்றோர், நண்பர்கள், நெட், ஈ மெயில் வசதிகளை பயன்படுத்திகொள்ளுங்கள்.

கல்யாண விதி4

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதை தீர்மானித்தாலும் முதலில் உங்களைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற துணையை தேர்ந்தெடுங்கள்.

கல்யாணம் விதி5

திருமண உறவு ஒரு மனிதனுக்கு கடைசி வரை நிழல் போலவே இருக்கக்கூடியது என்பதால் அடுத்தவர்கள் விருப்பத்திற்காக,வேண்டுகோளுக்காக, கட்டாயத்திற்காக ஒரு பெண்ணை மறந்தும்கூட தேர்ந்தெடுத்துவிடாதீர்கள். யார் எது சொன்னாலும் உங்கள் சொந்த விருப்பத்தின் படியே தேர்ந்தெடுங்கள்.

உங்கள் ஜோடியை தேர்ந்தெடுக்க உதவும் வழிமுறைகள்:

குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு குறையாமல் காலம் எடுத்துகொள்ளவேண்டும். எந்த மாதிரி பெண்ணை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். பல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுங்கள். வெப் சைட்டுகளில் பதிவு செய்யுங்கள். உறவுகள், குடும்ப நண்பர்களிடம் சொல்லிவையுங்கள். இதெல்லாம் செய்து முடித்துவிட்டு உங்கள் வீட்டுக்கதவை திறந்தே வையுங்கள். உங்கள் தேவதை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

தேவா
******************************************************


18. புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்து
மீண்டு சாதித்த மாணவி!

"தன்னம்பிக்கையும் பிறரின் ஊக்கமும் ஒருவருக்கு இருந்தால் போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தான் கொண்டிருக்கும் லட்சியங்களை அடையலாம்' என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் மாணவி பாத்திமா. இவருக்கு ஆறுவயதில் ரத்த புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவர, தொடர்ந்து 99ம் ஆண்டிலிருந்து சிகிச்சை எடுத்து வந்த பாத்திமா தனக்கு இப்படி ஒரு நோய் வந்து விட்டதே, உயிர் பிழைப்போமா, மாட்டோமா என்றெல்லாம் நொந்து, மனம் தளர்ந்து விடாமல், படிப்பை தொடர்ந்து, இப்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 472 மார்க் எடுத்து, அவர் படித்த பள்ளியில் முதல் மாணவியாக தேர்வாகியிருக்கிறார். பாத்திமாவை சென்னை குழந்தை நல மருத்துவமனையில் சந்தித்து உரையாடியதின் தொகுப்பு.

படிப்பில் நீங்க படு சுட்டியா?
ஆமாம். மாநில அளவில் முதல் இடம் எடுக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு தான் படித்தேன். ஆனால், அது பள்ளியளவில் முதல் இடமாகிவிட்டது. எனக்கு அறிவியலும், கணிதமும் ரொம்ப பிடித்த பாடங்கள். பத்தாம் வகுப்பில் கோட்டை விட்ட லட்சியத்தை இதே பிராட்வே சயின்ட் ஆனிஸ் பெண்கள்மேல்நிலைபள்ளியில் தொடர்ந்து படித்து, ப்ளஸ் 2வில் சாதித்துக்காட்டுவேன். பயாலஜி குரூப் எடுக்கவுள்ளேன். என் படிப்புக்கும், உயர்வுக்கும் சக மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் எல்லாம் முழுஒத்துழைப்பு கொடுக்கறாங்க. எனக்கு இருந்த ரத்த புற்று நோய் குணமாகும். நான் நல்லா வருவேன்னு எல்லாருமே ஆறுதல் தந்தாங்க. எனக்கு பலவிதத்திலும் எப்போதும் நம்பிக்கையூட்டிய அவங்களுக்கு எல்லாம் என் நன்றி எப்போதும் உண்டு.

ப்ளஸ்2 பிறகு உங்கள் லட்சியம்?
டாக்டருக்குப் படிக்க வேண்டும். இதுதான் என் ஆசை. சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னால் முடியுமா? என்று பலர் என் காதுபடவே பேசுகிறார்கள். ரத்த புற்றுநோயிலிருந்தே உயிர் பிழைக்க முடிந்திருக்கிறது. டாக்டர் ஆசை மட்டும் நடக்காமலா போகும். நம்பிக்கையிருக்கிறது. கடவுள் வழிநடத்துகிறார். பிறகென்ன எதுவும் சாத்தியம் தானே! ஆறுவயதில் ரத்த புற்று நோய் பாதித்த என்னை கஷ்டப்பட்டு, வைத்தியம் பார்த்து, கண்ணைப்போல காத்து வளர்த்திருக்காங்களே என் அம்மா, அப்பா. அதெல்லாம் எதற்காக? நான் நல்லா இருக்கணும், சாதிக்கணும்தானே இத்தனை கஷ்டங்களையும், பொருள் இழப்புகளையும் தாங்கிக்கிட்டாங்க. அவங்களுக்கு என் சாதனை மூலமாத்தான் நன்றி கடன் செலுத்தணும்.

ரத்த புற்றுநோய் வந்தப் பிறகு உங்க மனநிலை எப்படி இருந்தது?
அப்போ எனக்கு ஆறு வயசு என்பதால அதைப் பற்றிய பயம் தெரியல. 10 வயசுக்கு மேல தான் விவரம் புரிஞ்சது. மருந்து மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால தலைமுடியெல்லாம் கொட்டிடுச்சு. உடம்பு துரும்புபோல ஆயிடுச்சு. என்னோட தோற்றமே மாறிபோச்சு. இருந்தாலும் அம்மா, அப்பாவின் அரவணைப்பும் டாக்டர்கள், நர்சுகள், ஆயாக்களின் ஊக்கமும் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்கிற நம்பிக்கையை விதைத்தது. மேலும் நான் இருந்த வார்டில் என்னைப்போல ரத்த புற்றுநோய் பாதிச்சவங்க எல்லாம் குணமாகி வீடு திரும்பியது எனக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்தது. 99ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததால தான் நான் இப்போ முற்றிலும் இந்த நோயிலிருந்து குணமாகி இருக்கேன்.
தேவராஜன்
படங்கள்: செல்வக்குமார்.
*******

பாக்ஸ்!

பாத்திமாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் திலகவதியிடம், பாத்திமாவுக்கு வந்த நோயின் தன்மை பற்றி கேட்டதற்கு, ""ரத்த புற்றுநோயில் பல வகையிருக்கிறது. பாத்திமாவுக்கு நெஞ்சில் ஒரு கட்டிபோல இருந்தது. அந்த கட்டி சதையை எடுத்து ஆய்வு செய்த போது அவருக்கு ரத்தபுற்று நோய் இருப்பது தெரிய வந்தது. இதே போல ஆண்டுக்கு 100லிருந்து 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்காங்க. நோயாளிகள் ஆரம்பநிலையில் இருக்கும் போது வருபவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் ரத்த புற்றுநோய் குணமாகிறது. பாத்திமா 5 ஆண்டுகள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதால் இந்த நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்திருக்கிறார். இந்த வகை புற்றுநோய் நாம் சாப்பிடும் உணவுவகையில் உள்ள ரசாயனம், சுற்றுசூழல் பாதிப்பு, பரம்பரை வழி ஆகிய காரணங்களாலும், சிலருக்கு காரணங்களே இல்லாமலும் வருகிறது. இருந்தாலும் சிகிச்சைப் பெறுபவர் தரும் தொடர் ஒத்துழைப்பு தான் அவர்கள் குணமடைய அடிப்படை காரணமாக இருக்கிறது'' என்றார்.
சுகாதாரக்கேட்டினால் வரும்
*************************************************

குடல்புழு தொற்றுநோய்!

சிறியவர்கள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் குடல்புழு தொற்று நோய் ஏற்படும். ஆனாலும் பெரியவர்களை விட சிறியவர்களைதான் இந்த நோய் அதிகம் தாக்கும். இந்த தொற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நாம் இருக்கும் இடம், உண்ணும் உணவு, உடுக்கும் உடை இந்த மூன்றும்தான். இந்த குடல்புழு தொற்று நோய் எப்படி, எதனால் ஏற்படுகிறது? அதன் விபரீதம் என்ன? அதை தடுப்பது மற்றும் தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை டாக்டர் கல்பனா ஸ்ரீதரன் விளக்குகிறார்.

வெப்பநாடுகள் மற்றும் மித வெப்பநாடுகளில் உள்ள குழந்தைகளிடம் இந்த தொற்று நோய் அதிகம் காணப்படுகிறது. உருளைப்புழு, கொக்கிப்புழு, ஊசிப்புழு, சாட்டைப்புழு, பட்டைப்புழு ஆகியவை பொதுவாகக்காணப்படும் குடல்புழுக்களாகும்.

19 . குடல்புழு தொற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?

இந்த நோய்க்கு தொற்று நோய் என்று பெயரிடப்பட்டுள்ளதால் வெளியிலிருந்து தான் நமக்குள் தொற்றிக் கொள்கிறது என்பது மேலோட்டமாக தெரிந்த விஷயமாகிவிடுகிறது. சுகாதாரக்குறைவான இடங்களில் வசிக்கின்றவர்களுக்கும், சுகாதாரமற்ற திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் மலத்துடன் புழுக்கள் மண்ணோடு மண்ணாகக் கலக்கின்றன. இது மண்ணில் ஊடுருவி பயிர்கள், காய்கறி செடிகள், நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இந்தப்புழுக்கள் கலந்த பயிர், செடிகளிலிருந்து பெறப்படும் காய்கறி, கீரை, உணவுவகைகள் மற்றும் நிலத்தடி நீரை உட்கொள்ளும் போது புழுக்களும் புழு முட்டைகளும் தானாகவே நம் உடலுக்குள் செல்கின்றன.
அடுத்ததாக நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் மலங்களிலும் புழுக்கள் கலந்து மண்ணோடு மண்ணாகி மக்கி மனிதர்களைப் பாதிக்கின்றன. புழுக்கள் உள்ள மண்ணைத் தொடும் குழந்தைகள் கைகளை வாயில் வைத்து சப்பும் போது புழுக்கள் குழந்தைகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மண்ணை உண்ணும் குழந்தைகளின் உடலிலும் புழுக்கள் செல்கின்றன.
வெறும் காலுடன் நடக்கும் போது கொக்கிப்புழுக்களின் முட்டைகள் கால் சருமம் வழியாக உடலுக்குள் செல்கின்றன. பெண் ஊசிப்புழுக்கள் இரவு நேரத்தில் முட்டையிடும் போது ஆசன வாய் பகுதியில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் அவற்றை சொரியும் போதும் முட்டைகள் கைகளிலும் நகங்களிலும் ஒட்டிக்கொள்கின்றன. வாய் அல்லது சருமம் மூலம் உடலுக்குள் செல்கின்றன.
அடுத்ததாக வெயில் காலத்தில் நாம் உடுத்தும் உடையில் வியர்வை, துõசுகள், அழுக்குகள் படிந்திருக்கும். இதன் காரணமாக நம் உடைகளில் ஊசிப்புழு முட்டைகள் ஒட்டிக்கொண்டு அடுத்தவர்களுக்கு தொற்றுகின்றன.
நாம் சாப்பிடும் உணவில் பச்சை பன்றி இறைச்சி அல்லது மாட்டு இறைச்சி உண்ணும் போது பட்டைப்புழுக்கள் உடலுக்குள் தொற்றிக்கொள்கின்றன.

குடல்புழு தொற்று நோய் அறிகுறிகள்:

குடல் புழு தொற்றுநோய் ஏற்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைவு, பசியின்மை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, ஆசனவாய் அரிப்பு ஆகியவை ஏற்படலாம். குடலில் இருந்து இந்தப் புழுக்கள் ஈரல், நுரையீரல், மூளை ஆகியவற்றிற்கு தொற்றி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

குடல்புழு தொற்றியின் அறியும் வழிகள்:

மலத்தை நுண்நோக்கி மூலம் பரிசோதனை செய்து ஆய்வு செய்து தான் குடல் புழுக்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும். சில சமயம் வாந்தியிலும் புழுக்கள் இருக்கலாம்.

சிகிச்சை முறைகள்:

குடல் புழு தொற்று நோய் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகள் உள்ளன. ஒரு முறை மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டாலே போதுமானது. குழந்தைகள் குடல் புழு தொற்று நோய்க்கான சிகிச்சையை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கவனிக்கும் செவிலியர்கள் குடல்புழு நோய் பரவ முக்கியக் காரணிகளாக இருப்பார்கள். எனவே குடும்ப உறுப்பினர்கள் குடல்புழுக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் போது குழந்தைகளை கவனிக்கும் செவிலியர்களுக்கும் சிகிச்சை அளிப்பது நல்லது.

குடல்புழு தொற்றுநோயை தடுப்பது எப்படி?

* உணவு சமைப்பதற்கு முன்பும் உண்பதற்கும் முன்பும் கைகளை சோப்பினால் நன்றாக கழுவ வேண்டும்.
*கழிவறை சென்று வந்த பிறகும் டயாபர்களை மாற்றிய பிறகும் கைகளைச் சோப்பினால் நன்றாக கழுவ வேண்டும்.
*சமைப்பதற்கு முன்பு காய், கனிகளை தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும்.
*செருப்பில்லாமல் வெறும் காலுடன் நடக்கக் கூடாது. செருப்பு போட்டுதான் எங்கும் நடந்து செல்லவேண்டும்.
*திறந்த இடங்களில் மலம் கழிக்கக்கூடாது.
*வெறும் கைகளினால் மண்ணைத் தொடக்கூடாது. அப்படி தொட்டுவிட்டால் உடனே கையை கழுவவேண்டும்.
*செல்லப்பிராணிகள் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அகற்றப்படவேண்டும்.
*விரல் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நீண்ட நகங்கள் வளர்ப்பது கூடாது.
*உள்ளாடைகள், இரவு உடைகள், கைக்குட்டைகள், டவல்கள், படுக்கை உறைகள் ஆகியவற்றை அடிக்கடி மாற்றவேண்டும். சுடு நீரில் துவைத்து காயவைத்து பயன்படுத்த வேண்டும்.

தேவா
**************************************************


20 . நோய் தீர்க்கும் நம் தோட்டத்துக்காய்கறிகள்

நாம் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் வீட்டில் ஒரு காய்கறி தோட்டம் அமைத்துவிட்டாலே போதும். இயற்கையில் கிடைக்கும் காய்கறி,பழங்களே கடவுள் நமக்களித்த வரபிரசாதம். எந்தெந்த காய்கறி வகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.
கொத்தவரங்காய்:
கொத்து கொத்தாய் காய்க்கும் கொத்தவரங்காய் நார்ச்சத்துள்ள காய்கறி வகை. இந்தகொத்தவரங்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.மலச்சிக்கல் தீரும். மூட்டுவலி தொல்லைகள் தீரும். பெண்களுக்கு கண்கண்ட முக்கியமான உணவு பொருள் இது.
வெண்டைக்காய்:
அரிந்தால் கொலகொலப்பாக இருக்கும் வெண்டைக்காய் பச்சையாக கூட சாப்பிடலாம். தினமும் இதை உணவில் சேர்த்துவர, சோர்வுநீங்கி புத்துணர்வு கிடைக்கும். மூளைவளர்ச்சிக்கு உதவும். உடம்பை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
அவரைக்காய்:
அசைவ உணவில் உள்ள புரதம்,கொழுப்பு சத்துக்களை அவரைக்காய் கொடுத்துவிடும். வளரும் குழந்தைகளுக்கும், பருவ வயதில் இருக்கும் பெண்களுக்கும் உடல் வளர்ச்சி,பொலிவை அவரைக்காய் கொடுக்கும். இதன் விதையான மொச்சையை யும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பச்சைகாய்கறியாக இருக்கும் போதும் பயன்படுத்தலாம். அவியல் செய்து வத்தலாகவும் பயன்படுத்தலாம்.
புடலங்காய்:
பந்தலில் பாம்புபோல காய்த்துத்தொங்கும் புடலங்காய் நீர்சத்துள்ள காய்கறி வகையைச் சேர்ந்தது. புடலங்காயிலுள்ள சத்துகள் உடம்பில் உள்ள எலும்புகளுக்கு வலுவைக்கொடுக்கவல்லது. மேலும் தொற்றுகாய்ச்சல், ஜூரம் வந்தசமயத்தில் புடலங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் காய்ச்சல் குறைந்துவிடும்.
முருங்கைக் காய்:
முருங்கை மரத்திலிருக்கும் இலை,பூ,பிஞ்சி, பிசின், காய் என எல்லாமே உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. முறுங்கைக்கீரையில் அனைத்து வகை சத்துகளும் இருக்கின்றன. இரும்பு சத்து, விட்டமின்கள் என இருக்கின்றன. முறுங்கைக்காய் தினமும் சாப்பிட்டு வர பெண்களின் உதிரப்போக்கு எளிதில் மட்டுபடும். ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி பெருகும். இதனால் ஆண்மைக்குறைவு பிரச்னை தீரும்.
பாகற்காய்:
கசப்புத்தன்மை கொண்ட பாகற்காய் பல வகையில் உடல் நலத்திற்கு நன்மைத் தரக்கூடியவை. குறிப்பாக சரக்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் நல்ல மருந்துபோலவே பலன் அளிக்கும். பாகற்காய் தினமும் சாப்பிட்டுவர உடலில் உள்ள ரத்தக்குழாய்களின் சுவர்களைப் பலப்படுத்தும். பிரோசயனிட்ஸ் என்ற கசப்புப்பொருள் இதில் பெருவாரியாக இருப்பதால் வாரம் மூன்று நாள் சாப்பிட்டுவரலாம்.
வாழைக்காய்:
வாழைக்காய், வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிறு தொடர்பான பிரச்னைகளை களையும். உடம்புக்கு மினுமினுப்பைத் தரும். புரதசத்து, விட்டமின் உள்ளது. நார்சத்து உள்ளதால் செரிமானத்துக்கு உதவுகிறது.
தக்காளி:
தக்காளி இதை பச்சையாகவே சாப்பிடக்கூடிய உணவுப்பொருள். தக்காளி உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை நீக்கும். கேன்சர் நோயை தடுக்கும் அரணாக இருக்கும். தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டோ, ஜூஸ் வைத்து பருகி வந்தால் பெண்களுக்கு உடல் எடை எளிதில் குறையும்.
எலுமிச்சை:
எலுமிச்சை காயை ஊறுகாய்போட்டு சாப்பிட்டால் பித்தம் தெளியும். உடம்புக்கு தேவையான புளிப்பு தன்மையை சீராக வைத்திருக்கும். எலுமிச்சை சாறு பருகி வந்தால் உடல் பருமன் சீராக குறைந்து வரும்.
காராமணி,ஊளுந்து. பயறு:
பயிறுவகைகளான இவைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் புரத சத்துகிடைக்கும். தசை நார்களை வலுபடுத்தும். எலும்புகளுக்கு ஊட்டத்தை அளிக்கும். இளமை தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும். சீக்கரம்முதுமை தோற்றம் அணுகாமல் காக்கும்.
பழவகைகள்:
மாதுளம்பழம்:
மாதுளம் பழம் சாப்பிட்டால் உடம்பு சூடு தணிந்து, குளிர்ச்சியாகும். மூளை விழிப்புணர்வுடன் இருக்க தேவையான உப்பு இந்த மாதுளம் பழத்தில் உள்ளது. மேலும் உணவில் சேர்த்துக்கொள்ளும் பால்,ராகி போன்றவற்றில் உள்ள சுண்ணாம்புச் சத்து உடலில் சேர மாதுளம் பழம் உதவுகிறது.
ஆரஞ்சு பழம்:
ஆரஞ்சு பழம் பெண்களின் அழகை கூட்டவும் மெருகேற்றவும், உடல்பொலிவை கட்டுக்குலையாமல் காக்கவும் உதவுகிறது.உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை, எண்ணை பிசுபிசுப்பை நீக்குகிறது.
திராட்சைப் பழம்: திராட்சைப்பழம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தரக்கூடியவை. மேலும் இதில் உள்ள ஒருவகையான உப்பு மூளைக்கு சுறுசுறுப்பைத் தரக்கூடியது.
மேலே உள்ள நம் தோட்டத்தில் விளையும் காய்கறி, பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இனியாவது வீட்டில் இடமிருந்தால் முதல் வேலையாக தோட்டம் அமைக்க விரும்புங்கள்.
தேவராஜன்.
*************************************************


21. வளர் இளம்பருவப் பெண்களுக்கான சத்தான உணவு
டாக்டர்.வர்ஷா

வளர் இளம் பருவம் என்பது 13 முதல் 17 வயது வரையுள்ள பருவமாகும். இந்தப் பருவத்தில் பெண்களுக்கு உடலில் வேகமான வளர்ச்சி ஒன்பதரை வயதில் தொடங்கி 13 ஆண்டுகள் 6 மாதம் வரை தொடர்கிறது. பொதுவாக 12 ஆண்டு 6மாதங்களில் இவர்கள் பூப்பெய்துகின்றனர். உடலில் பெரியளவிலாவ வளர்ச்சி 19 வயதுக்குள் முடிந்து விடுகிறது. இந்த பருவத்தில் இவர்களுக்கான சத்தான உணவு எவை எவை என்பதை பரிந்துரைக்கிறார் டாக்டர். வர்ஷா. இவர் பிரபலமான சத்துணவு ஆலோசகர் மற்றும் சத்துணவு அறிவியல் நிலையத்தை உருவாக்கியவர்.
வளர் இளம் பருவத்தை 10 முதல் 12 வயது, 13முதல் 15 வயது, 16 முதல் 18 வயது என மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். வளர் இளம் பருவம் தொடங்கும் சமயத்தில் சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதமும், பொதுவான எடையில் 53 சதவீத்ததையும், உடலமைப்பின் வளர்ச்சி 52 சதவீதத்தையும் எட்டியிருப்பார்கள். இந்தப் பருவத்தில் இவர்களின் எடை இருமடங்கா உயரக்கூடும். உயரம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரையும் கொழுப்பு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. உடலில் இருக்கும் கொழுப்பு கருத்தரிக்கும் நேரத்தில் முக்கிய பங்காற்றும். கரு முட்டை உற்பத்தி சுழற்ச்சியையும், கால்சியம் அளவை 300 முதல் 750 கிராம் வரையிலும் பராமரிப்பதற்கு உடலின் எடையில் 22 சதவீதம் கொழுப்பு இருப்பது நல்லது.
குறைவான சக்தியை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், மாதவிலக்கு நேரத்தில் இரும்புசத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். கால்சியம் சத்து தேவையானது எலும்பு வளர்ச்சியால் அதன் தின்மை குறைய நேரிட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பின் வலு குறைந்துப்போகலாம். உடலின் எடையைத்தாங்க முடியாமல் பிரச்னைகள் ஏற்படலாம்.
வளர் இளம்பருவத்தில் இருக்கும் பெண்கள் நாகரீகம் என்கிற பெயரில், பெற்றோரின் உணவுப்பழக்கத்திலிருந்து மாறுபட்ட உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது, ஒல்லியாக இருப்பதுதான் நமக்கு ஏற்ற உடல்வாகு என்று நினைத்து உணவு கட்டுப்பாடு கொள்ளுதல், உணவு மற்றும் சத்து விஷயங்களில் ஆர்வம் காட்டாமை போன்ற பாதிப்புகளை சமூக மற்றும் உயிரியல் காரணங்களால் ஏற்படுகிறது.
அடுத்ததாக, காலை உணவை தவிர்ப்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் சாப்பிடுதல், பாஸ்ட் புட் சாப்பிடுதல், வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடுதல், குளிர்பானங்கள் அருந்துவது, மது, புகை பழக்கம் கொண்டிருப்பது எல்லாம் வளர்இளம்பருவ வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்களாகும்.
வளர் இளம்பருவப் பெண்களுக்கு அந்த வயதில் உடலில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்குத் தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். பூப்பெய்தும் காலத்தைக் கணிப்பது மற்றும் கருத்தடை பயன்பாடு பற்றிய விவரங்களை கேட்டறிந்து அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது, இரும்புச் சத்து குறைப்பாட்டைத் தடுப்பது, அதை சரிசெய்வது, தினமும் சராசரியாக 2000 முதல் 2500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவுவகைகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவை கவனிக்கத்தக்க அம்சங்களாகும்.
5 வகையான உணவுக்குழுக்களுக்கு சமன்படுத்தப்பட்ட உணவுப் பட்டியலின்படி வளர் இளம்பருவப் பெண்களுக்குத் தேவையான உணவுகளின் பட்டியல்:
தானியங்கள், தினை, சாமை:
தினமும் 260320 கிராம் ( 10 முதல் 12 வயதின் முற்பகுதி)
தினமும் 290 350 கிராம் (13 முதல் 15 வயது வரையில் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதி)
புரோட்டீன் சத்துள்ள பயறுகள், பயறுகாய்கள், அவரை வகைகள்
தினமும் 30 70 கிராம் வளர் இளம் பருவம் ( 10 முதல் 12 வயதின் முற்பகுதி)
தினமும் 5070 கிராம் வளர் இளம்பருவம் ( 13 முதல் 18 வயது வரை)
சாப்பாட்டுடன் சேர்க்கப்படும் போது குறைவான அளவு பரிந்துரைக்கப்படும்.
புரோட்டீனுக்கு மாற்று உணவுகள்:
அசைவம் கறி, மீன் மற்றும் முட்டை தினமும் 30 முதல் 60 கிராம் வரை அல்லது முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் எண்ணைய் வித்துகள் நிலக்கடலை போன்றவை தினமும் 30 முதல் 50 கிராம் வரை.
பால் மற்றும் பால் பொருள்கள்:
தினமும் ஒரு லிட்டர் வளர் இளம் பருவம் ( 10 முதல் 18 வயதுவரை)
காய்கறிகள்:
மனித இனத்துக்கு இயற்கையளித்துள்ள டானிக் மினரல்கள், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை பாதுக்காபான உணவகையாகும்.
பச்சை இலை காய்கறிகள்
வேரில் விளைபவை கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம்
கிழங்குகள் உருளை போன்றவை
நீர் மிகுந்த காய்கறிகள் வெள்ளரிக்காய் போன்றவை
பிற காய்கறிகள் பின்ஸ், பயறு வகைகள்
தினமும் 175 கிராம்: வளர் இளம்பருவம் (10 முதல் 12 வயதின் முற்பகுதி)
தினமும் 275 350 கிராம்: வளர் இளம் பருவம் (16 முதல் 18 வயதின் பிற்பகுதி)

பழங்கள்:
உலர் பழங்கள், கொட்டை வகைகள் மற்றும் எண்ணைய் வித்துகள், சக்தி, கொழுப்பு மற்றும் புரோட்டீன் ஆதார சத்துணவை 4 பிரிவுகளாக பிரிக்கலாம்.
ஆரஞ்சு மற்றும் பழங்கள் பப்பாளி, மாம்பழம், வாழைப்பழம்
சிட்ரஸ் பழங்கள் எலுமிட்சை, ஆரஞ்சு பழம்
மற்ற பழங்கள் முந்திரி, பைனாப்பிள், தக்காளி, நெல்லி
உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் எண்ணைய் வித்துகள் அத்திப்பழம், பேரிச்சை,உலர் திராட்சை, விதையில்லா முந்திரிபழம், நிலக்கடலை, தேங்காய், எள் போன்றவை.
அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்களை வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் சுழற்சி முறையில் சாப்பிட வேண்டும்.
வளர் இளம்பருவம் (10 முதல் 18 வயது வரை) தினமும் 50 முதல் 100 கிராம் வரை புதிதாக விளைந்த பழங்கள்
தினமும் 30 முதல் 50 கிராம் கொட்டை வகைகள் மற்றும் எண்ணைய் வித்துகள்.

மேலே சொல்லியபடி உள்ள சத்து உணவு வகைகளை வளர்இளம் பருவத்தில் சாப்பிட்டு வந்தால் பெண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
தேவா
**************************************************8

22.மருத்துவமுறை துõக்கம் கொள்வதெப்படி?

ரொம்ப டல்லாக இருக்கீங்களா? எப்போதும் உங்கள் முகம் பொலிவிழந்து சுறுக்கமாக உள்ளதா? முதுமை தோற்றம் வந்து விட்டதா? கண்களுக்கு கீழே தடித்த கருவளையம் ஏற்பட்டுள்ளதா? டென்ஷன் ஏற்படுகிறதா? இதற்கெல்லாம் மருத்துவ காரணம் எண்ண தெரியுமா? நீங்கள் சரியாக மருத்துவ முறை துõக்கம் கொள்வதில்லை என்பது தான்! அதென்ன மருத்துவ முறை துõக்கம் என்று ஏதும் குழம்பிக்கொண்டு வர்ற துõக்கத்தையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்! சுலபமான வழியில் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வகான இந்த கட்டுரையை படியுங்கள்; படித்ததும் நிச்சயம் துõக்கம் கண்ணை சொக்கவைக்கும். துõங்கி எழுந்ததும் மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் அதுவாக சால்வாகிவிடும்.
இரவு வந்தால் எல்லோரும் தான் துõங்குகிறோம். பிறகென்ன? என்று உங்களுக்குள் ஒரு கேள்வி தோன்றினால், என்னிடம் எதிர்கேள்வியும் இருக்கிறது. அது எத்தனை மணிநேரம் துõங்குகிறீர்கள்? எப்படி துõங்குகிறீர்கள் போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. எவ்வளவு நேரம், எப்படி துõங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து பலன் இருக்கிறது.
துõக்கத்தில் நடப்பது என்ன?
நாம் அசந்து துõங்கும் போது நம் உடல் ஓய்வு எடுத்துக்கொள்கிறது. அந்த ஓய்வு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் சரும வளர்ச்சிக்கான ஹார்மோன் சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் துõண்டுகிறது. சரும ஆரோக்கியத்துக்கு மிகமிக முக்கியத் தேவையான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுக்கப்படவும் துõக்கம் அவசியமாகிறது. துõக்கம் சரியில்லாதவர்களுக்கு சருமபிரச்னைகள் ஏற்பட்டு தோல்வறண்டு, பருக்கள், வெடிப்புகள், கருப்பு திட்டைகள் ஏற்படும்.
பகலில் கடுமையாக உழைத்த உடலுக்கு கட்டாயமாக இரவில் ஓய்வு கொடுப்பது தான் துõக்கம். அப்படி உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் இருந்தால், ரத்த ஓட்டம் சீராக ஓடாமல், உடல் உறுப்புகளுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
எது அளவான துõக்கம்?
எது நல்ல துõக்கம், எத்தனை மணிநேரம் துõங்குவது எல்லாம் நாம் கட்டாயமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயது, உழைப்புக்கு ஏற்ப துõங்கும் நேரம் அளவு மாறுபடும். குழந்தைகள் 16 மணிநேரமும், பருவ வயதில் இருப்பவர்களுக்கு 78 மணிநேரமும், கர்ப்பிணி பெண்கள் 10 மணிநேரமும், வயதானவர் 56 மணிநேரமும் துõக்கம் கொள்ள வேண்டும்.
இந்த அளவான துõக்கம் எடுத்துக்கொள்ளும் போது, உடம்பின் ரத்த ஓட்டம், செல்கள்,திசுக்கள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. சக்தியூட்டப்படுகிறது. புதுபொலிவு ஏற்படுகிறது. உடம்பின் அழுத்தம்,வெப்பம், மூச்சு சுழற்சி எல்லாம் சீராக்கப்படுகிறது. மூளைப்பகுதி குளுமையடைந்து, சிந்திக்கும் திறனையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது.
சுகமான துõக்கம் வர என்ன வழி?
மெத்தை வாங்கினேன். துõக்கத்தை வாங்கலன்னு பலர் படுத்ததும் துõக்கம் வரமால் புலம்பி தீர்ப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.அதே சமயம் படுத்ததும் அசந்து துõங்கி விடுபவர்களும் உண்டு. அவர்கள் கொடுத்தவைத்தவர்கள். துõக்கம் வரவில்லை என்பதற்காக துõக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மிக மோசமான பழக்கம். அதனால் துõக்கம் வர இயல்பான, இயற்கையான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். தினமும் குறித்த நேரத்தில் படுக்கைக்குச் செல்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயம் விழித்துக்கொள்வதையும் குறிப்பிட்ட நேரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாலையில் கொஞ்சம் நடைப்பயிற்சி அல்லது சுலபமான உடற்பயிற்சி, தியானம் போன்றவை செய்யலாம். படுக்கையறை ரம்மியமாக இருக்கவேண்டும். நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். வடக்கு பக்கம் தலைவைத்துப் படுத்தால் நல்ல துõக்கம் வரும். துõங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீரீல் குளித்து விட்டு சென்றால் துõக்கம் வரும். மேலும் பிடித்த புத்தகம், இசை கேட்கலாம்.
துõக்கத்தைக்கெடுக்கும் திரைகள்!
டென்ஷன், கவலை, எதைப்பற்றியாவது சிந்தனை செய்துகொண்டிருப்பவர்களுக்கு படுத்ததும் துõக்கம் வராது. அடுத்ததாக இரவில் தாமதமாக சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, போதைப் பழக்கம் கொண்டிருப்பது, உடல் உபாதைகள் தலைவலி, வயிற்றுவலி, இருமல், நுரையீரல் பாதிப்பு நோய்கள் போன்றவை இருந்தால் துõக்கம் வராது. காபி, குளிர்பானங்கள், சாக்லெட் போன்றவைகளை இரவில் உட்கொண்டால் துõக்கம் காணாமல் போய்விடும்.
தேவராஜன்
**********************************************

என் படைப்புகள்

22. தண்ணீர் நோய்கள் தெரியுமா?
( என் படைப்புகள் : தினமலர் பெண்கள் மலரில் பிரசுரிக்கப்பட்ட பேட்டிகள் கட்டுரைகள்)
முக்கால் பங்கு நீரினால் நிறைந்தது நாம் வாழும் உலகம் மட்டுமல்ல; நம் உடம்பும் தான்!
நாம் பருகும் நீர், உபயோகப்படுத்தும் நீர், நம் வசிக்கும் இடத்தில் இருக்கும் நீர் இவற்றினால் நம் ஆரோக்கியம் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!
ஓரிடத்தில் வசிக்கும் ஒருவர் பிறிதோர் இடத்திற்கு செல்லும் போது அங்கு குளித்தாலோ, அந்த நீரினைப் பருகினாலோ உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. சளி, ஜலதோஷம், இருமல் வந்து, நீருக்கும் நமக்குமான ஆரோக்கியம் சார்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. இதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம்.
மருவத்து துறையைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் மனிதனுக்கும் நீருக்குமான உறவையும் அதனால் விளையும் நன்மை, தீமைகளைப்பற்றியும் ஆராய்ச்சி செய்ததில் மனிதர்களுக்கு பல நோய்கள் வருவதற்கு அடிப்படை வாயில்களாக இருப்பவை நீர் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
விஞ்ஞான ரீதியில் கண்டறியப்பட்ட வாட்டர் பில்டர்கள் மூலம் வடிக்கட்டிய நீரைக் குடிப்பதாலோ, நீரில் குளோரின் கலந்து குடிப்பதாலோ, காய்ச்சி குடிப்பதினாலோ நீரினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும்.
நீரினால் ஏற்படும் நோய்கள் நான்கு வகைகளாக இருக்கின்றன. அவை நீரினால் பரவும் நோய்கள் குறிப்பாக காலரா, ஒவ்வாமை, ஜூரம், சளிபிடித்தல், இருமல் போன்றவை. இரண்டாவது நீரில் இருக்கும் கிரிமிகளால் ஏற்படும் நோய்கள் அதாவது நரம்புச்சிலந்தி போன்ற நோய்கள். இவை நீர் மாசுபடுவதாலும், நீர் இருக்கும் பூமி மாசுபடுவதாலும் கிருமிகள் நீரில் ஊடுருவி நோய்களை ஏற்படுத்துகின்றன. அடுத்ததாக நீரினால் பரவும் நோய்கள் உதாரணமாக மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா போன்றவை. இந்த தொற்றுக்கு காரணம் நீர் தான். எப்படி என்றால் மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு காரணமான பாக்டீரியா, வைரஸ்களை ஏற்படுத்தும் கொசுக்கள் நீர்நிலைகளில்தான் முட்டையிட்டு அதன் மூலம் கிருமிகளை பரப்புகின்றன.
நான்காவதாக நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள் தோல்நோய்கள், படர்தாமரை, தேமல், சொறி போன்றவை. இந்த நோய்களுக்கும் காரணமாக இருப்பவை நீர்தான். மனிதனுக்கு தேவையான தண்ணீர் இல்லாவிட்டாலும் நோய் வருகின்றன. குளிப்பதற்கு தேவையான தண்ணிரில்லாமல் அரைகுறையாக குளிக்கும் போது உடம்பில் அழுக்கு சேர்ந்து சரும தொடர்பான நோய்களை ஏற்படுத்துகின்றன. அணியும் ஆடை சுத்தமாக இல்லாத போதும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
நீரில் நோய்களைப் பரப்பும் கிருமிகள், அதனால் வரும் நோய்களின் பட்டியல் ரொம்பவும் நீளும். உதாரணத்துக்கு சில பார்க்கலாம்.
அனாபிலஸ் என்ற கிருமி கொசுக்களால் பரப்பப்படுகின்றன. இந்த கிரிமிகள் சுத்தமான நீர் நிலைகளான ஆறு, குளம், ஏரி, கிணறு போன்றவைகளிலும், வயல்வெளியிலும் பரவி அது மலேரியாவாக நமக்குள் நுழைகிறது.
கியூலக்ஸ் எனும் கிருமி அழுக்கு நீர், தேங்கிக்கிடக்கும் நீர், சாக்கடை போன்றவற்றில் உருவாகி அந்த நீரை மிதிக்கும் போதோ, தொடும் போது நம்மில் ஊடுருவி யானைக்கால் நோயை ஏற்படுத்துகின்றன.
ஏடிஸ் என்ற கிருமி செயற்கையாக தேங்கும் நீர், குளிர்சாதன கருவிகளிலிருந்தும், பிரிஜ் கழிவு நீரிலும், மொட்டை மாடி, டயர், தேங்காய் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரிலிருந்து பரவி சிக்குன்குனியா, டெங்கு, மஞ்சள்காமாலை போன்ற நோய்களாக வந்து நம்மை வாட்டுகின்றன.
ஆதலால் தண்ணீர் தானே என்று நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. நாம் பருகும் தண்ணீரிலிருந்து, உபயோகப்படுத்தும் தண்ணீர், நம்மைச்சுற்றி இருக்கும் நீர் நிலைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். குளிரூட்டப்பட்ட தண்ணீர், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் இவைகளை பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அடுத்ததாக நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் நீர்நிலைகளில் எடுக்கும் தண்ணீரின் சுகாதாரம் அறிந்து வெளி உபயோகத்துக்குப் பயன்படுத்தவேண்டும்.
ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு இடம் பெயரும் போது அங்கிருக்கும் தண்ணீரின் இயல்பு பற்றி அறிய தண்ணீர் மாதிரி சோதனை செய்து அதில் உள்ள கலவைகள் பற்றி அறிந்து நம் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என்பதை மருத்துவர்களின் ஆலோசனைக் கேட்டு பயன்படுத்த வேண்டும்.
தேவராஜன்
**********************************************

23 .அஞ்சறை பெட்டியில் ஆரோக்கியமிருக்கு...

சமையல் அறையை மருத்துவத்தின் தொட்டில் என்று சொன்னால் அதுமிகையாகாது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை வைத்துக்கொண்டே அனேக நோய்களுக்கு மருந்து செய்தவர்கள் பாட்டிமார்கள். இன்னமும் பாட்டிய வைத்தியத்திற்கு தனி மவுசே உண்டு! அஞ்சறை பெட்டிதான் மருந்தகம்.
நாம் சாப்பிடும் உணவின் அளவு, உணவின் வகை இவைகளை சரியாக கடைப்பிடித்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். அதற்கு இன்னமும் சாட்சிகளாக இருப்பவர்கள் நம் தாத்தா, பாட்டிகள் தான்.
இன்று மருந்துவகைகளின் விலைகளை விட, சமையல் பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நாம் ஆரோக்கியமா இருக்க மருந்துவகைகளை வாங்காமலிருக்க, சமையல் பொருட்களையே மருந்தாக பயன்படுத்துவது எப்படி என்பதை பாட்டிமார்கள் சொல்லிவைத்தவைகளை பார்க்கலாம்.
நம் வீட்டில் அஞ்சறை பெட்டியில் எப்போது இருப்பது இஞ்சி, வெந்தயம், மஞ்சள், கடுக்காய், பூண்டு, சீரகம், பெருங்காயம், மிளகு, கடுகு, கிராம்பு இவைகளும் இன்னம்பிறவும் இருக்கும். இதில் இஞ்சி, மஞ்சள், வெந்தயம், கடுக்காய், பூண்டு, சீரகம் இவைகளை உணவுப்பொருளில் சேர்த்து எப்படி ஆரோக்கியத்தை அடையலாம் என்பதை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.
இஞ்சி:
இஞ்சி சாறுபிழிந்து அதை காலையில் ஜூஸாகப் பருகினால் போதும் வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வாயுவு தொல்லை முதலிய வயிறு தொடர்பான நோய்களின் அவஸ்தையிலிருந்து விடுபடலாம். டீ, காபி, பால் இவற்றிற்கு மாற்றாக தினமும் காலையில் இஞ்சி டீயை பருகிவந்தால் காலைக்கடன் உபாதைகளில் இருந்து மீளலாம். மேலும் கொலஸ்ட்ரால் நிலையை சமசீர்படுத்தும். உண்ட உணவுப்பொருட்களின் செரிமானத்திற்கு பெரிதும் உதவி செய்யும். அதிக புரோட்டின் உணவுவகைகள் செரிமானமாகும். இஞ்சியை வாயில் போட்டு மென்றால் பல் வலி தீரும். காய்ச்சல், நீர்கொண்டதற்கு மருந்தாக இஞ்சி செயல்படும்.
இஞ்சி ஜூஸ் ஆனது எலுமிச்சை சாறு, தேன் இவற்றின் கலவையாக இருக்கவேண்டும்.
வெந்தயம்:
சர்க்கரை வியாதிக்கு மாமருந்து வெந்தயம். இது பாட்டிமார்கள் போட்டுதந்த ஆரோக்கியத்தின் சூத்திரம். பிள்ளைப்பெற்ற தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தேவையான பால் சுரக்காவிட்டால் வெந்தயத்தை உணவுப்பொருளில் சேர்த்துக்கொண்டால் பால் அதிகமாக சுரக்கும். அடுத்ததாக பெண்களின் வீட்டுவிலக்கு நாளில் ஏற்படும் வலி தொல்லைகளுக்கு வெந்தயம் கண்கண்ட மருந்தாக இருக்கிறது. வெந்தயத்தில் இருக்கும் டையோஸ்ஜினின், ஈஸ்ட்ரோஜின் ஆனது பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
மஞ்சள்:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மஞ்சள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மஞ்சளில் ஆன்டிசெப்டிக் மூலப்பொருள் இருப்பதை அறிவியல் உலகமே ஒப்புக்கொண்டுள்ளது.
அடிப்பட்டகாயம், தீக்காயம் இவற்றிற்கு வெளிஉபயோகமாக மஞ்சளை பயன்படுத்தலாம். அல்சர், குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு மஞ்சள் நிவாரணப்பொருள்.ரத்தஓட்டத்தை சீர்படுத்தி, இதயநோய், ஹார்ட் அட்டாக் தடுக்கும். தினமும் ஒருகப் பாலில் கொஞ்சம் மஞ்சள் துõள் கலந்து பருகி வந்தால் நோய்கள் வராமல் தடுப்பு கவசமாக செயல்படும்.
கடுக்காõய்:
கடுக்காய் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ பொருளாக இருக்கிறது. வாந்தி, பித்தம், கபம் இவற்றிற்கு கடுக்காயை ஊரவைத்து அந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி, மலச்சிக்கல், செரிமானமின்மை தொல்லைகளிலிருந்து விடுவிக்கும். மேலும் தேனில் கடுக்காய் துõளை கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக்கொடுக்கும்.
பூண்டு:
பூண்டு பல மருத்துவ குணம் கொண்டதாகும். அதிக சல்பர் கொண்ட பூண்டு நம் ஆரோக்கியத்தின் நண்பனாக இருக்கிறது. உடல் உஷ்ணம், வாய்ப்புண், குடல்புண் இவைகளுக்கு பூண்டு நிவாரணியாக உள்ளது. கொலஸ்ட்ராலை மட்டுப்படுத்தும் சக்தி பூண்டுவுக்கு உண்டு. ஜலதோஷம், உயர் ரத்த அழுத்தம்,குறைந்த கொலஸ்ட்ரால் இவைகளை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
சீரகம்:
சீரகம் செரிமானத்துக்கு உதவும் மருந்தாகும். நிறையசாப்பிட்டவர்கள் கொஞ்சம் சீரகத்தை வாயில் போட்டு மென்னு சாறை விழுங்கினால் உணவு செரிமானம் ஆகிவிடும். அது மட்டுமல்ல வாயுதொடர்பான வலி, தசை பிடிப்பு இவைகளை நீக்கிவிடும். ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகினால் இதயம், யூட்ரஸ் பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படும். குழந்தைப் பெற்ற தாய்மார்கள் சீரகத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் பால் சுரப்பு அதிகமாகும். சீரகத்தில்
புரோட்டின், கொழுப்பு, ஹார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துகள் அடங்கியுள்ளது.
தேவராஜன்
*******************************************

24. இதயத்துக்கு இதமான உணவு!

மனிதர்களுக்கு எந்த முன் அறிவிப்புமின்றி வருவது ஹார்ட் அட்டாக். முதல் ஹார்ட் அட்டாக் வந்து விட்டால் நம் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருவதை எச்சரிக்கும் எச்சரிகை மணி என்றே சொல்லலாம். உயிரின் கவசமான இதயத்தை காப்பது எல்லாருடைய கடமையாகும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகை மூலமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கமுடியும். அப்படிபட்ட உணவு வகை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்!
புரோட்டீன்:
இதயத்தை காக்க மற்ற உணவுவகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன் என்றே சொல்லலாம். முட்டை இதில் பி விட்டமின் இருக்கிறது. மீன் இதில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது.தோலில்லா கோழியிறைச்சி இவைகள் உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான புரோட்டினைத் தந்து காக்கும்.
நல்ல கொழுப்பு:
பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி,பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்துக்கு வேண்டிய கொழுப்பை தந்து இதயத்தை காக்கும்.
காய்கறி மற்றும் பழங்கள்:
பொதுவாக நம் ஆரோக்கியத்துக்கு காய்கறிகள், பழங்கள் உதவிசெய்கின்றன. ஒவ்வொருவரும் ஒரு நாளில் பழச்சாறு பருகுவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். இதயநோய்கள், அட்டாக் இவை வருவதற்கு முதல்காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, விட்டமின்இ, விட்டமின்சி, இவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன.
வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்.
தானியங்கள்:
பார்லி, ஓட்ஸ், சோளமாவு,கோதுமை, கேல்வரகு, கொள்ளு இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவை சமமாக வைத்து இதயத்தை காக்கும்.
புகையிலை பொருட்கள்:
புகையிலை சேர்ந்த எந்தப்பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைபாக்கு போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள். இது தான் இதயத்துக்கு எதிரி.
உடற்பயிற்சி:
தினமும் காலை மாலை நடைபயிற்சி செய்யுங்கள். முடிந்தால் எளிமையான ஏயாக பயிற்சியை செய்து பழகுங்கள்!
தேவா
************************************************

25.பெட்ரூம் பெட்டர் ரூமாகணுமா?

தம்பதிகளிடையே பிரச்னை ஏற்படுவதற்கும், அது விவாகரத்து வரை செல்வதற்கும் காரணமாய் இருப்பது பெரும்பாலும் பெட்ரூம்தான் என்கின்றனர் மனஇயல் நிபுணர்கள். அத்துடன் தம்பதிகள் பெட்ரூமில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பட்டியலிட்டு இருக்கிறார்கள். அந்த பட்டியல் இதோ:

இது ஆண்களுக்கு:
* வியர்வை சொட்ட சொட்ட, உடல் நாற்றமெடுக்க, ஈ என்று இளித்துக்கொண்டு பெட்ரூம் போனால் உங்க பார்ட்னர் அப்செட் ஆயிடுவாங்க. அதனால, பெட்ரூம் போகும் முன் சுத்தமா குளிச்சிட்டு, நறுமணம் கமழும் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கிட்டு சும்மா ஜம்முன்னு இருந்தா, உங்க பார்ட்னர் அசந்துடுவாங்க.
* எதை எதை எங்க செய்யணுமோ, அதை அதை அங்கங்கே செய்ய பழகிட்டாலே பல தொல்லைகள் தீர்ந்துடும். நீங்க ரொம்ப சின்சியரான ஆபிசராக இருக்கலாம்; கடினமான உழைப்பாளியா இருக்கலாம், அதுக்காக பெட்ரூமில் உங்க ஆபிஸ் வேலை எல்லாத்தையும் மூட்டைக் கட்டிட்டு எடுத்துட்டு போய் பொறுப்பா வேலைபார்க்கிறது, அல்லது ஏதாவது தீவிரமா போனில் டிஸ்கஸ் பண்றதெல்லாம் உங்க பார்ட்னரை மூட் அவுட் மட்டுமல்ல எரிச்சலடையவும் வைக்கும்.
* தாம்பத்தியம் என்பது வெறும் உடல் சுகம் மட்டும் கிடையாது. உங்கள் சக பார்ட்டனுருக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

இது பெண்களுக்கு:
*அச்சம், மடம், நாணம், வெட்கம் பெண்களுக்கு இருக்க வேண்டியதுதான். ஆனா அது பெட்ரூமில் அதிகமாக இருந்தால் உங்கள் ஹஸ்பெண்ட் உங்களை சஸ்பெண்ட் செய்துடுவார். அதனால கூச்சம், வெட்கத்தை துõர வைத்து, கணவருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
* கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தேமேன்னு உட்காந்திருந்தா, கணவருக்கு இருந்த மூடெல்லாம் பேய் அறைந்த மாதிரி ஓடிவிடும். அதனால, எப்போதும் பெட் ரூமில் அப்போது பறித்த ரோஜா மலர் பூ போல சிரித்த முகத்துடன் இருங்கள்.
* நிர்வாகத்தில் ராஜகுமாரியாக இருங்கள். ஆனால், பெட்ரூமில் ராஜகுமாரி தோரணையில் கணவரை மிரட்டாதீர்கள். அவர்களின் செயல்களுக்கு மறுப்பு தெரிவிக்காதீர்கள்.
* இரு கை சேர்ந்தால் தான் ஓசை வரும். அது போல இருவரின் ஆசை சேர்ந்தால்தான் இல்லறம் இனிக்கும்.
மேலே சொன்ன சூத்திரங்களை இருவரும் சூட்சகமாக கற்றுக்கொள்ளுங்கள். பிறகென்ன அன்பெனும் ஊஞ்சலில் நாளெல்லாம் சந்தோஷ சங்கீதம் பாடி ஆடலாம்.
தேவா
************************************************


26.திருமண நாளில் நீங்கள் தேவதையாக ஜொலிக்க...

திருமணத்திற்கு வந்தவர்கள் மாப்பிள்ளையை பார்க்கிறார்களோ இல்லையோ, மணப்பெண்ணை நிச்சயம் பார்ப்பார்கள். ஆதலால் மணப்பெண் தன் அழகில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக திருமணத்திற்கு முதல் நாள் பியூட்டி பார்லர் போய் வந்து விட்டால் அழகு வந்து விடும் என்று எண்ணிவிடாதீங்க. அதுக்குன்னு சில வழிமுறைகள் இருக்கு. அதை அப்படியே கடைபிடிச்சா, கல்யாண வைபோகத்தில் நீங்க தேவதையாகலாம்.
3 மாதங்களுக்கு முன்பு...
திருமணம் நிச்சயமான அடுத்த நாளில் இருந்தே நீங்க உங்கள் அழகை பராமரிக்க கவனம் செலுத்த வேண்டும். முகப்பரு, கரும்புள்ளி, படை இருந்தால் குறைந்தது ஆறு வாரங்களுக்கு தோல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு கால்வானிக் மசாஜ் தினமும் எடுத்துக் கொண்டால் முகத்தில் உள்ள கறுப்பு நிறம் நீங்கி, சருமம் மென்மையாக மாறும்.
சுருண்ட பரந்த தலைமுடிக்கு ஹேர் ஸ்பா செய்து கொள்ளலாம். இதனால் முடி பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறும். பேன், பொடுகு தொல்லை இருந்தால் ஹேர் ஸ்மூத்திங், ஆயில் மசாஜ், ஹென்னா சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
2 மாதங்களுக்கு முன்பு...
தொடர்ந்து ஆரஞ்சு கால்வானிக் மசாஜ் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை பெடிக்யூர் முறையில் கை,கால் நகங்கள் மற்றும் விரல்களை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.
முகப்பரு நீங்க பிம்பிள் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். தவிர உணவில் மீன், முட்டை, காய்கறிகளை சேர்த்துக்கொண்டு வரவேண்டும். அதிகமாக தண்ணீரும் பருக வேண்டும். இதனால் உடல் மெலியும், ஒரு வனப்பும் ஏற்படும்.
ஒரு மாதத்திற்கு முன்பு ...
திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பியூட்டி பார்லரில் ஸ்டீம் பாத் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தோலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகும். மேலும் சூரிய கதிர்களால் தோலில் ஏற்பட்ட சுருக்கம், வெடிப்பு ஆகியவை நீங்கி விடும்.
2 வாரத்திற்கு முன்பு ...
ஆரஞ்சு கால்வானிக் மசாஜ் பண்ணியப்பிறகு, உங்களுடைய சருமத்திற்கு பொருத்தமான பேஷியல் செய்துகொள்ளலாம்.
ஒரு வாரத்திற்கு முன்பு...
திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது வேண்டும் உங்களுக்கு எந்த விதமான ஹேர் ஸ்டைல் பிடிக்குமோ அல்லது உங்களுடைய முகத்துக்கு எது அழகாக இருக்குமோ அந்த ஹேர் ஸ்டைல் எது என்பதை தெரிந்து கொண்டு ஹேர் ஸ்டைலில் முடியை தயார் செய்து கொள்ளவும்.
3 நாட்களுக்கு முன்பு...
உடம்பு முழுவதையும் பிளீச் மற்றும் வாக்சிங் செய்து கொள்ளவும். ஸ்கிரப் பண்ணிக்கொள்ளலாம். மேலும் பிரெஞ்சு மெனிக்யூர், பெடிக்யூர் பண்ணிக்கொண்டால் விரல்களும், நகமும் அழகு கூடும்.
திருமணத்திற்கு முந்திய நாள்...
திருமணத்திற்கு முதல் நாள் மெகந்தி போட்டுக்கொள்ளலாம். மெகந்தி போடுவதற்கு முன்பு மெகந்தி போடும் இடத்தில் எண்ணை பூசிவிட்டு பின்னர் மெகந்தி போட்டுக்கொண்டால் அழியாமல் இருக்கும். இன்றைக்கு மெகந்தி டிசைன்கள் பல இருக்கின்றன. குறிப்பாக அராபிக் மெகந்தி, இந்தி மெகந்தி ஆகியவை அனைவராலும் பெரிதும் விரும்பி போடப்படுகின்றன.
மேலே சொல்லப்பட்ட முறைகளை நீங்கள் பின்பற்றினால் திருமணத்தின் போது அழகு அள்ளும் தேவதையாக இருப்பீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!
தேவா.
********************************************************


27. ஹார்ட் அட்டாக் வந்துடுச்சா...
கொஞ்சம் இருமினால் போதும்!

அலுவலகத்தில் தலைக்குமேல் வேலை. டார்கெட்படி எந்த வேலையும் முடியவில்லை. ஒரே டென்ஷன்! டென்ஷன்! ஒருவழியாய் நினைத்த வேலையை கஷ்டப்பட்டு முடித்துவிட்டு, மாலையில் காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறீர்கள். உடம்பெல்லாம் ஒரே அசதி! வியர்வை வேறு நசநசவென்று வடிந்து எரிச்சலடையவைக்கிறது. காரை வேகமாக செலுத்தி வீடுசேரலாம் என்றால் ரோடில் அங்கங்கே டிராபிக் ஜாம்! வெறுத்துபோய் ஆமைவேகத்தில் வீடு வந்து சேர்ந்தது... அப்பாடா! என்று ஷோபாவில் அக்காடான்னு உட்கார்ந்திருக்கிறீர்கள். களைப்பு தீர கொஞ்சம் சூடாக மணக்க மணக்க ஒரு கப் காபி தர வீட்டில் யாருமில்லை. வீட்டின் வெருமை, தனிமை, அசதி, களைப்பு எல்லாம் சேர்ந்து மனசை உறியடிக்க... சட்டென்று நெஞ்சில் ஏதோ ஒரு ஜந்து ஊர்வது போல உணர்கிறீர்கள். அடுத்த சில நொடிகளில் நெஞ்சு வலி வந்து தொலைக்கிறது!
நெஞ்சில் உள்ளங்கையை வைத்து பிசைந்து கொண்டிருக்கிறீர்கள். உதவிக்கு ஆளில்லை! அருகே மருந்து மாத்திரையும் இல்லை! நீங்கள் என்ன செய்வீர்கள்? அவ்வளவு தான் நம் கதையென்று மரணபயம் கொண்டு துடிப்பீர்களா? தலையில் கைவைத்து விதி முடிந்தது என்று என்று கண்கசிவீர்கள்!
இனிமே, அப்படி எல்லாம் நீங்கள் கவலைபடவேண்டாம். நெஞ்சு வலி வந்தா பயப்படவேண்டாம். சட்டென்று நெஞ்சுவலி வந்தா, நீங்க சட்டென்று இருமுங்க! அவ்வளவு தான்! ஹார் அட்டாக் வந்தால் பர்ஸ்ட் எயிட் காப் தான்!
என்ன இருமினால், ஹார்ட் அட்டாக் போயிடுமா? அட, வேடிக்கையாக இருக்குதே என்று தானே நினைக்கிறீங்க.
உண்மையில் நெஞ்சு வலி வந்த சமயத்தில் தொடர்ந்து இருமுங்க; ஒவ்வொரு முறைஇருமினப்பிறகும் ஆழமாக காற்றை இழுத்து சுவாசிங்க. அந்த நேரம் ஹார்ட் அட்டாக்கில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
இதைப் பற்றி இதயநோய் நிபுணர்கள் என்ன கருத்து சொல்றாங்கன்னு பார்க்கலாமா?
தேவா
******************************************

28. பூமியை காக்க, பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!
உமா நாராயணன்

""நீர்கொடுக்கிறது; உணவுக்கொடுக்கிறது; நம்மை காலகாலமாய் சுமந்துக் கொண்டிருக்கிறது, இந்த சுற்றும் பூமி! நம்மையும், நம் வருங்கால சந்ததிகளையும் ஒரு தாய்போல சுமக்கும் இந்த பூமிக்கு நம் வாழ்நாளில் ஏதாவது கைமாறு செய்திருக்கிறோமா? அப்படி என்ன செய்யலாம் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா? இப்படி எல்லாம் உங்களை யோசிக்க வைக்கவும், இந்த பூமி மீதான ஒரு கரிசன நேசப்பார்வையை செலுத்த வைக்கும் ஒரு சிறுமுயற்சிதான் "ஸ்மால் ஸ்டெப்ஸ்' '' என்கிறார், உமா நாராயணன்.
சென்னையில் வசிக்கும் இவரின் அப்பா, அம்மாவுக்கு பூர்வீகம் கேரளா. ஃபோர்டு நிறுவனத்தில் ஹெச்ஆர்டியாக வேலைப் பார்க்கும் உமா ஸ்மால் ஸ்டெப்சில் அம்பாசிடராக இருக்கிறார். உமாவின் கணவர் அருள்தேவ்வும் இவரைப்போலவே ஸ்மால் ஸ்டெப்பில் சேவை செய்து வருகிறார்.

உங்களுக்கு பூமி மீதான இந்த கரிசனம் எப்படி ஏற்பட்டது?
திடீரென்று ஏற்படவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே இந்த உலகத்துக்கான சேவையில் என் பங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்துக் கொண்டுதான் இருந்து வந்தது. அந்தந்த வயசுக்குரிய சக்திக்கு ஏற்ப என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதான் இருந்தேன். இப்போது இளமையும், துடிப்பும், ஆற்றலும் இருப்பதால் என் சேவை எண்ணம் விசாலமடைந்திருக்கிறது. அதற்காக இந்த பூமி மீதான கரிசனம் மட்டும்தான் என் மனதில் இருந்தது என்றெல்லாம் சொல்லமுடியாது. இந்த நிலையில் "ஸ்மால் ஸ்டெப்ஸ்' மூலம் என் சேவை தொடர்ந்தப் போது அது பூமிக்கான சேவையாக மாறிவிட்டது.

"ஸ்மால் ஸ்டெப்ஸ்' பற்றி சொல்லுங்களேன்?
இது, உலகம் மற்றும் மக்களின் நலனுக்கான ஒரு சேவை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறுவனம். இதன் தொண்டர்கள் உலக அளவில் இருக்கிறார்கள். தமிழகத்தில் பாண்டிச்சேரி ஆரோவில் இடத்தில் உபாசனா மையம் இருக்கிறது. ஸ்மால் ஸ்டெப்ஸ், சுனாமி பாதிப்பு மீனவர்களுக்கு உதவிகளும் அவர்கள் அந்த அதிர்ச்சி சம்பவத்திலிருந்து மீள கவுன்சிலிங்கும் முழுமையாக கொடுத்து மீனவர்கள் துயர் துடைத்தது. அடுத்தது பாரம்பரிய நெசவு தொழில் நலிந்த நிலைக்கு சென்றபோது வாரணாசியில் உள்ள நெசவாளர்களையும், நெசவுத்தொழிலையும் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டியது. இப்படி பல சேவைகள் செய்திருக்கின்றது.

ஸ்மால் ஸ்டெப்சில் உங்கள் சேவை என்ன?
உலக சுற்றுப்புறச்சூழல் மாசடைவதை தடுக்கும் விழிப்புணர்வு செய்திகளை மக்களிடத்தில் எடுத்துச்செல்லும் பணி என்னுடையவை. இன்று நாமிருக்கும் பூமியை பெரிதும் மாசுப்படுத்துவது மக்காத குப்பை எனப்படும் பிளாஸ்டிக் பைகள். நம் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 5,600 டன் பிளாஸடிக் பைகள் பூமியில் எறியப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்பை குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனால் பூமியின் அடுக்கில் இதுவும் ஒரு அடுக்காகி விடும். இதனால் ஏற்படும் ஆபத்துகள் ஒன்றெல்ல, இரண்டெல்ல. இந்த பூமிக்கெதிரான தீமையை தடுக்க வேண்டும்; இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும். இதில்தான் என் கவனம் இருக்கிறது.

உங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி எப்படி இருக்கிறது?
முதலில் நானும், என் கணவரும் பிளாஸ்டிக் பைகளை தொடுவது கூட இல்லை. அடுத்ததாக என் வீட்டில் பிளாஸ்டிக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பிளாஸ்டிக் பை உபயோகிப்பதிலிருந்து விடுவித்து விட்டேன். நண்பர்கள், உறவினர்கள், பணிசெய்யம் இடத்தில் ஊழியர்கள் இவர்களிடத்தில் பிளாஸடிக் பைகளை உபயோகபடுத்துவதால் ஏற்படும் தீமைகளைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பொதுமக்களையும், கடைமுதலாளிகளையும் சந்தித்து கேரி பேக்குகளை பயன்படுத்தாதீர்கள் என்றும் அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லியும் அவர்கள் மனதை மாற்றி வருகிறேன். அதற்கு இந்த அம்பாஸிடர் பேக் பெரிதும் உதவுகிறது.

அம்பாஸிடர் பேக்கா? அது என்னது?
இது கையளவில் மடித்து வைத்துக்கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்ட காட்டன் துணி பை. நாம் காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது அதை கேரிபேக்கில் போட்டுதான் கடைகாரர்கள் கொடுக்கிறார்கள். நாம் கேரி பேக்குகளை தவிர்க்க இந்த காட்டன் பைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த பையை பார்க்கும் மற்றவர்களுக்கும் கேரி பேக்குகளை பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும். அதனால் தான் இதை அம்பாஸிடர் பேக் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்த பேக்கை உருவாக்கும் பின்புலத்தில் ஆயிரக்கணக்கான ஏழைபெண்கள் இருக்கிறார்கள்.

பெண்களுக்கு உங்களின் மெசேஜ் என்ன?
பெண்கள்தான் இதற்கு முதல் ரோல்மாடல் என்றுகருதுகிறேன். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இந்த பூமிக்கெதிரான பிளாஸ்டிக் கலாசார யுத்தத்தையும் தடுக்க முடியும்! நம்மால் என்ன முடியும் என்று யோசிக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வரும் எடுத்து வைக்கும் சிறு ஸ்டெப்ஸ் தான் பெரிய பாதையையே உருவாக்கும். அதனால் தான் இந்த இயக்கத்திற்கு"ஸ்மால் ஸ்டெப்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறோம். இன்று நாம் பிளாஸ்டிக்கிற்கு எதிராக எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் நாம் வாழும் பூமியை வளமாக்கும். நம் சந்ததிகளை சுமக்க இருக்கும் இந்த பூமிக்கு நம் பரிசாக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி?

தேவராஜன்
படங்கள்: ராஜன்
*******************************************************


29. மார்பக புற்றுநோய்க்கு கிச்சன் பார்மஸி!

மாறிவிட்ட வாழ்க்கை முறையில் நடைமுறை பழக்கங்கள் எல்லாம் மறைந்து விட்டன. நவீன கலாசார வாழ்க்கையில் உணவு, உடை, இருப்பிட சூழல் எல்லாம் மாறிவிட்டன. இதன் விளைவாக இன்றைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எனும் அபாயகரமான அச்சுறுத்தல் மிரட்டிக்கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவற்றிலிருந்து குணமடைய, விடுபடவும் பல வழிகள் இருக்கின்றன. மார்பக புற்றுநோய் வந்து விட்டால், அவ்வளவு தான் வாழ்க்கை என்று மனம் தளர்ந்து விட வேண்டாம். வீட்டின் கிச்சனையே பார்மஸியாக மாற்றிக்கொள்ளுங்கள். இதுவும் ஒரு வழிதான் கேன்சரை கேன்சல் பண்ண. கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்!
தக்காளி:
தளதளவென இருக்கும் தக்காளி உங்கள் சமையல் அறையில் இருந்தாலே போதும். பெண்களை புற்றுநோய் அணுகிட அச்சப்படும். தக்காளியில் இருக்கும் "லைகோபென்' கேன்சருக்கு செக் வைக்கும் வேகதடையாகும். இந்த லைகோபென் தக்காளியில் அதிகம் இருப்பதால் உணவில் தக்காளியை பிரதான காய்கறியாக பயன்படுத்துங்கள். தக்காளியை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட வேண்டும்.
திராட்சை :
சிவப்பு திராட்சைப் பழம், அதன் விதைகள் கேன்சர் செல்லின் இயக்கத்தை முடக்கிப்போடும் அபார ஆற்றலைக் கொண்டிருக்கிறது. திராட்சையில் ஆன்டிஆஸிடன்ஸ் கேன்சர் செயல்பாட்டை தடுத்து, கேன்சரை தடுக்கும் அரணாக உதவுகிறது.
காலிபிளவர்:
கேன்சர் செல்களை ஒடுக்கக்கூடிய சக்தி விட்டமின் சி மற்றும் இயற்கை அயோடினுக்கு உள்ளது. இந்த விட்டமின் சி நார்சத்துள்ள காய்களான, காலிபிளவர், முட்டைகோசில் உள்ளது. இவ்வகை காய்கறிகளை பெண்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் மார்பக புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
பச்சைக் காய்கறிகள்:
பச்சைக்காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பெண்களின் உடலில் உள்ள தசை செல்களுக்கு ஆரோக்கியமும், திடமும் கொடுப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக கசப்பு சுவையுள்ள பாகற்காய் போன்ற காய்கறிகள் கேன்சரை உண்டுபண்ணும் செல்களை ஆரம்பத்திலேயே தடுக்கின்றன. மேலும் கேன்சருக்கு எதிரான எதிர்ப்பாற்றலை தசை செல்களுக்கு தருகின்றன.
முட்டை, கிரீன் டீ:
முட்டையில் பெரும் பகுதியாக விட்டமின் டி இருக்கின்றது. முட்டையில் இருக்கும் விட்டமின் டி ஆனது பெண்கள் உடம்பில் உள்ள தசை செல்களில் கால்சியம் படிவதை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த விட்டமின் டி நுரையீரல் புற்றுநோயையும், மார்பக புற்றுநோயையும் தடுக்கும் சுவராக இருந்து உதவுகிறது. ஆதலால் பெண்கள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தினமும் காலை சூரிய வெயிலில் சிறிது நேரம் இருக்க வேண்டும். காலை வெயிலில் விட்டமின் டி அதிகளவு இருப்பது குறிப்பிடத்தக்கது. கிரீன் டீ கேன்சர் செல் உடலில் பரவாமல் இருக்க உதவுகிறது.
ஆகவே, பெண்கள் மேலே சொன்ன காய்கறிகளை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.
தேவா
************************************************

30. கிடு கிடு விலைவாசி...
சிக்கனமாக இருப்பதெப்படி?

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள். அந்த இரண்டு பக்கங்கள் சொல்லும் வாழ்வியல் தத்துவத்தை என்றேனும் நீங்கள் காது கொடுத்துக் கேட்டிருக்கிறீர்களா? நாணயத்தின் ஒரு பக்கம் சம்பாதிக்கவும்; மறு பக்கம் சேமிக்கவும் சொல்லிக் கொடுக்கத்தான் நாணயம் இரண்டு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் சம்பாதிக்கிறோம்; சம்பாதிப்பதை கண்ணைமூடிக்கொண்டு தண்ணீர் போல செலவழிக்கிறோம். மாதத்கடைசியில் பிறரிடம் கடன் கேட்கும் நிலைக்கு ஆளாகிறோம்.
விலைவாசி கிடுகிவென உயர்ந்துக் கொண்டே போகிறது. ஆனால், அதற்கேற்ற வருமானம் ஈட்ட நம்மில் பலருக்கு இயலாத காரியமாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இல்லத்தரசிகள் பணத்தை எப்படி நிர்வகிப்பது? எப்படி செலவு செய்வது? எவ்வாறு சேமிப்பது? எவ்வாறு சிக்கனமாக இருப்பது போன்ற குடும்ப சூத்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்!

வீரலுக்கேத்த வீக்கம்:
வரவு எட்டணா ஆனா செலவு பத்தணா என்றால் நம் வாழ்க்கையில் ஆண்டியாகிவிடுவோம். அதனால் தான் "வீரலுக்கு ஏத்த வீக்கம்', "வரவுக்கு ஏற்ற செலவு' என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள். ஆதலால், குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தின் மொத்த வருமானம் , மொத்த செலவு இவைகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். வருமானத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். எது அவசியம், எது அனாவசியம் என்பதில் தீர்க்கமான முடிவை தயங்காமல் எடுக்க வேண்டும். அதற்கு முதல்படி வரவுக்கு ஏற்ற செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அதிலும் மிச்சப்படுத்தும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வருமானத்தை நிர்வகிக்கும் திறமை:
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் பல ஏற்படலாம். எனவே சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடல் வேண்டும். செலவு செய்வதிலும் ஒருகொள்கையை கொண்டிருக்க வேண்டும். அத்யாவசிய பொருள் எல்லாம் யானை விலை, குதிரை விலை விற்கிறது. இந்த நிலையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த நிலைக்கு ஏற்ப நாம் வாழ முடியும். அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளையும், மனபாங்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சேமிக்கும் எண்ணம் வளரவேண்டும்:
நாம் உழைப்பால் ஈட்டும் பணத்தை எந்த வழியில் பெருக்குவது என்று எப்போதும் யோசிக்க வேண்டும். பணத்தை ஒரு வளரும் மரமாகவோ, பொன் முட்டையிடம் வாத்தாகவோ கருத வேண்டும். பணத்தை எதில் முதலீடு செய்வது? என்னென்ன பொருட்களை வாங்குவது போன்ற வழிகளை தீர ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். மாத வருவாயில் குறைந்தது 20 சதவீதமாவது சேமிக்க வேண்டும். அது போல வருமானம் பெருகும் போது சேமிப்பின் தொகையையும் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.

எளிய முறையில் வீட்டில் சிக்கனம் செய்க!
பொதுவாக குடும்பத்தை நிர்வகிக்கும் நாம் தேவையில்லாத செலவுகளை குறைத்துகொள்ளுதல், வீண் விரையங்களைத் தவிர்த்தல் இவைகளில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்திற்கு மேல் ஒருகாலும் செலவு செய்யக்கூடாது. அத்யாவசியப் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை வாங்குவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு என்ன தேவையோ அவைகளை மட்டுமே வாங்க வேண்டும். கொண்டாட்டம், குதுõகலம் இவற்றில் பணத்தை வாரி இறைக்கக்கூடாது.
எலக்டிரிக் பில், போன் பில் போன்ற கட்டணங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி அபராத கட்டணத்தை தவிர்க்க வேண்டும். சம்பளம் வாங்கியதும் வீட்டிற்கு தேவையான ஒரு மாதக்காலத்திற்கான பொருட்களை வாங்க வேண்டும்.
தேவையில்லாமல் டூவீலரை, காரை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஆடம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடாது. தேவையில்லாமல் உடல் நலத்திற்கும், வருமனத்திற்கும் ஆகாத கெட்டப் பழக்கங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வீட்டின் செலவுகளை மட்டுப்படுத்த குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
மேற்கண்டவாறு வருமானத்தை ஈட்டவும், ஈட்டிய வருமானத்தை சிக்கனமாக செலவழிக்கவும், சிறுக சிறுக சேமிக்கவும் பழகிக்கொண்டால், விலைவாசி எவ்வளவு ஏறினாலும் தள்ளாடாமல் குடும்பத்தை நடத்தலாம்.

தேவராஜன்
******************************************************

31 . இதயத்துக்கு இதமான உணவுகள்!

மாரடைப்பு என்ற நோய் முன்பெல்லாம் வயதானால் தான் வரும். ரொம்பவும் பருமனாக இருப்பவர்களுக்கும் வரும். இப்போதைய சூழலில் யாருக்கு, எப்படி, எப்போது வரும் என்று தெரியாமல், சட்டென்று வந்து பொட்டென்று உயிரைக் குடித்துவிடுகிறது ! இந்த அபாயகரமான நோயிலிருந்து விடுபட நாம் முன்னெச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வாழும் வாழ்க்கை முறை, உண்ணும் உணவு பழக்கம்,செய்யும் தொழில் இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தி வந்தால் இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கலாம்.
வாழ்க்கை முறை:
பரபரப்பான வாழ்க்கை முறையை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். காலையில் எழுவதிலிருந்து, இரவு துõங்குவது வரை நேரம் என்பது ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். தேவையில்லாத ஆர்ப்பாட்டம், ஆசை இவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கவலை, இழப்பு, தோல்விகளை மனதில் புதைத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் புதிதாக பிறந்தது போல் புத்துணர்வோடு அன்றைய தினத்தை வாழ வேண்டும். காலையில் சிறிது நேரம் நடைபயிற்சி, தியானம், சந்தோஷமான விஷயங்களில் மனதை செலுத்துதல் என இருக்க வேண்டும். மேற்கண்டவைகளைக் கடைபிடித்தாலே ஓரளவு இந்த அச்ச நோயிலிருந்து விடுபடலாம்.
உணவு முறை:
யாரும் வாழ்வதற்காகதான் சாப்பிடுகிறோம். சாப்பிடுவதற்காக வாழவில்லை! ஆதலால், எதை சாப்பிட்டால் உடல்நலத்துக்கு நல்லது, எதை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு தீங்கு என்பதை அறிந்து அதற்கேற்றவாறு உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தக்காளி: இதில் லிகோபைன் என்கிற திரவம் இருக்கிறது. இந்த திரவம் இதயத்துக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். ஆகையால் தினமும் ஒரு தக்காளியை அப்படியே சாப்பிடுங்க.
திராட்சை: திராட்சையில் ரத்ததிசுக்களை உற்பத்தி செய்யும் சத்து இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதனால் திராட்சை சீசனில் தினமும் கொஞ்சம் திராட்சையை சாப்பிடுங்க.
கேரட், வெங்காயம், சக்கரவள்ளிக் கிழங்கு இவைகளையும் பச்சையாக சாப்பிடலாம். இவைகள் இதயத்துக்கு பாதுகாப்பு தரும்.
கனி,காய்கறி, தானியங்கள்:
விட்டமின் சி, இ இரண்டும் இதயத்தின் நண்பர்கள். இந்த சத்துகள் பழங்களில், காய்கறிகளில், தானியங்களில், சிலபருப்பு வகைகளில் இருக்கின்றன. கோஸ்பெர்ரி, நெல்லிக்காய், கேரட், பாதாம் பருப்பு, சூரியகாந்தி விதைகளில் இவ்வகை விட்டமின்கள் இருப்பதால் தினமும் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆலிவ், சோயா, கடுகு, கடுக்காய் எண்ணைகள் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்லக்கொழுப்பை உடலுக்கு தரும். அதனால் இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஒமேகா3 மற்றும் 6ம் இதயத்திற்கு நல்லது. அதனால் ஒமேகா உள்ள மீன், பருப்பு வகைகளையும் அடிக்கடி சாப்பிடலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்துக்கு முக்கியமான எதிரி. இதை தடுக்க நார்ச் சத்துள்ள காய்கறிகள், நவ தானியவகைகள், பீன்ஸ், ஓட்ஸ், பழுப்பரிசி இவைகளை உணவில் எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பாதிப்பால் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
காலை சூரிய வெளிச்சத்தில் விட்டமின் டி உள்ளது. இந்த விட்டமின் டி இதயத்துக்கு பலத்தைக் கொடுக்கிறது. உயர் ரத்தஅழுத்தம், ரத்தக்கொதிப்பு உபாதைகளில் இருந்து விடுபட விட்டமின் டி தேவை. அதை காலை வெயிலிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவைகளைத்தவிர யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி அவசியம்.
செய்யக்கூடாதவை:
எப்போதும் எதையாவது கொரித்துக்கொண்டிருக்கக்கூடாது. நொறுக்குத்தீனி, சாக்லெட், ஐஸ்கிரீம், பீசா, மாமிச உணவு, புகைப்பிடித்தல், மது அருந்துதல், சோம்பேறியாக இருந்து உடல் பருமனாக்கிக் கொள்ளுதல், டென்ஷன், கவலை இவைகளை எல்லாம் தவிர்த்து வந்தால் ஹார்ட் அட்டாக்கில் இருந்து நீங்கள் விடுபடகூடும்.
தேவராஜன்
**********************************************



32. சாஸ்திரம் பெயரில்
செப்படி வித்தைகள்!

நாம்,நம் சமய, சம்பிரதாயங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதையே சிலர் அந்த நம்பிக்கையை மூலதனமாக கொண்டு பலரிடம் காசு பார்த்து விடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் நான் வசிக்கும் ஊரில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
அது பழங்காலத்து சிவன் கோயில். பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து இருக்கிறது. ஒரு சனிபிரதோஷ நாளில் கோபுரத்தில் இருந்து பழுதடைந்த ஒரு பகுதி இடிந்து தரையில் விழுந்து விட்டது. சனிபிரதோஷத்திற்கு வந்த பக்தர் கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது என்ன கெட்ட சகுனமோ என குழம்பினர். ஊருக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று பயந்தபடி இருந்தனர்.
அந்த பக்தர் கூட்டத்தில் இருந்த தொழில் போனியாகாத சோதிடர் ஒருவர், அந்த நிகழ்ச்சியை தனக்கு சாதகமாகக் கொண்டு, வந்து இருந்தவர்களிடம்,"கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்! அப்படியாகிய கோபுரம் இடிந்து விழுவதைப் பார்த்தால் பல தோஷம் வரும். இதற்கு பரிகாரமாக, ஹோமம் செய்ய வேண்டும். அதற்கு இந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து, கோயிலில் ஹோமம் செய்து பரிகாரம் செய்தால் தோஷம் பாதிக்காது' என்று அந்த நேரத்தில் இன்ஸ்டன் லக்சர் கொடுத்தார்.
அவர் பேச்சை நம்பி ஊரில் எல்லாருமே வீட்டுக்கு 50 ரூபாய் என வசூல் செய்து மொத்தமாக ஒரு தொகை அவரிடம் கொடுத்தனர்.
இதில் நான் மட்டும் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். அது மட்டுமல்லாமல், ஊராரிடம் சோதிடர் சொல்வதெல்லாம் கட்டுக்கதை. வேண்டுமானால், ஊரார் பணம் போட்டு சிதலமடைந்த கோபுரத்தை பழுதுப் பார்க்கலாம். அது தான் புண்ணியம்!' என்றேன்.
யாரும் என் பேச்சைக் கேட்டபாடில்லை. ஒருசில தினங்களில் பேருக்கு ஒரு ஹோமத்தை கோயிலில் செய்து விட்டு, சோதிடர் மக்கள் கொடுத்த பணத்தில் ஒரு தொகையை லம்பாக அபேஸ் செய்துவிட்டார்.
இப்படி தான் நாட்டில் பலர் மக்களின் அதீத நம்பிக்கையையும், மூடநம்பிக்கையையும் தங்களுக்கு சாதகமாகக்கொண்டு அதை வணிக ரீதியாக்கி கையில் காசு பார்த்துவிடுகின்றனர்.
பச்சை சேலை வதந்தி, திருவண்ணாமலை தீபம் அணைந்த வதந்தி, ஸ்ரீரங்கம் கோயில் கோபுர விரிசல் இப்படி பல வதந்திகளால் மக்கள் எதை தின்னால் பித்து தெளியும் என்பது போல போலி வதந்திகளால் ஏமாந்து வருகின்றனர்.
ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள். சாஸ்திரம், சம்பிரதாயம், சகுனம் கடைப்பிடிப்பதெல்லாம் நன்மை பெறும்பொருட்டே அன்றி அவற்றினால் யாதொரு தீங்கும் வராது என்ற திடமான நம்பிக்கை ஏற்படுமானால், நம்பிக்கைகள் ஒரு போதும் மூடநம்பிக்கையாக மாறாது.
*****************************************

33. ஜனாதிபதி பிரதிபா சாதனை!

இந்தியாவின் அதிநவீன ஜெட் விமானம் சுகோய்30. இந்த ஜெட் விமானம் ஒலியின் வேகத்துக்கு சற்று குறைவாக அதாவது மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த ஜெட் விமானம் இந்திய விமானப்படையின் போர் விமானமாகும். இந்த ஜெட் விமானத்தில் தான் 74 வயதான இந்திய ஜனாதிபதி பிரதிபா பறந்து சாதனைப் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு 2006ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் சுகோய்30 ஜெட் போர் விமானத்தில் பறந்து சாதனைப்படைத்தார்.
இந்த சாதனைக்குறித்து பத்திகையாளர், "உங்களுக்கு பயமே இல்லை?' என்ற தற்கு, கலாம்," பயப்படுவதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை.' என்றார்.
இதே போல் போர்விமானத்தில் பறக்க ஜனாதிபதி பிரதிபாவும் விரும்பினார். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றார். இதையடுத்து நவம்பர் 25ம் தேதி புனே விமானப்படை தளத்தில் இருந்து ஜனாதிபதி பிரதிபாவை ஏற்றிக்கொண்டு "சுகோய்30' ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தை விங் கமாண்டர் எஸ். சாஜன் ஓட்டிச் சென்றார். போர் விமானப் பைலட்டுக்கான சிறப்பு உடையை ஜனாதிபதி பிரதிபா அணிந்து கொண்டு, உதவி பைலட் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஜெட் விமானம் வானில் மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் பறந்தது. அதே வேகத்தில் தொடர்ந்து 30 நிமிடங்கள் பறந்தது. இந்த விமானப் பயணம் செய்ததன் மூலம் போர்விமானத்தில் பறந்த முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதிவேக ஜெட் விமானத்தில் பறந்து சாதனைப் படைத்து விட்டு, விமானத்திலிருந்து இறங்கிய அவர்," போர் விமானத்தில் பறந்த போது, போர்விமான பைலட்டாக ஏன் பெண்கள் பணிபுரியக்கூடாது என்ற சிந்தனை மேலோங்கியது. ஒரு காலத்தில் ராணுவம்,விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளிலும் பெண்கள் சேர்க்கப்படவில்லை. பின்னர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு, படைகளில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இப்போது முப்படைகளிலும் பெண்கள் பலர் பணிபுரிகின்றனர்.
ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானப் பைலட்டுகளாகவும் பெண்கள் இருக்கின்றனர். ஆனால், ஏனோ போர்விமானம் ஓட்டும் பைலட்டுகளாக பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
நாடு வளம்பெற முற்போக்கு சிந்தனை தேவை. எல்லா பெண்களும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள். எனவே போர்விமான பைலட்ட்õக பெண்களை நியமிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இதில் தொழில்நுட்ப தேவை, தகுதி, சூழ்நிலை போன்றவற்றை அரசும், விமானப்படையும் பரிசீலித்து முடிவு எடுக்கும். ஏனென்றால், எந்தப்பணி கொடுத்தாலும் அதைப் பெண்கள் மிகச் சிறப்பாகவும், நிறைவாகவும் செய்வார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.' என்றார்.
இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பெண்ணே இருப்பதால், பெண்களின் திறமை, அவர்களின் நம்பிக்கை, சக்தி பற்றி நிச்சயமாக அவருக்குத் தெரியும். எனவே, நாம் வருங்காலத்தில்
எல்லாத் துறையிலும் பங்கேற்று, அதில் பல சாதனைகள் செய்து பெண் இனத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
தேவராஜன்
*****************************************88

34. டீன்ஏஜ் மகள்களிடம் அப்பாக்கள்
எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

டீன் ஏஜ் பருவம் என்பது 1314 வயது. இந்த வயது என்பது ஒரு சிக்கலான, புது அனுபவமான, புரிந்தும், புரியாத உணர்வுகளின் தொகுப்பான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் சிரிப்புக்கும், அழுகைக்கும், கோபத்துக்கும், எரிச்சலுக்கும் அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றால், பெற்றோர்கள் தோற்றுத்தான் போக வேண்டும்.
டீன் ஏஜ் பருவ காலக்கட்டத்தில் உங்கள் மகள் வேகமாக வளர்கிறாள். இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது. இந்த வயதில் அவள் பாதி பெரியவள் ஆகிவிடுகிறாள். இந்த நிலையில் நீங்கள் அவளை குழந்தையாகவே பாவித்துக்கொண்டு உங்கள் ஆளுமையைத் திணித்தால் பிரச்னைகள் வெடிக்கத்தான் செய்யும்.
அறிவுரைகள், போதனைகள், அதை செய்; இதை செய்யாதே என அதிகாரம் செய்யும் போது அது அவர்களின் மனதை, தன்னம்பிக்கையை, அவர்களுக்குண்டான ஆளுமையை தகர்க்கின்றன. டீன் ஏஜ்ஜில் இருக்கும் மகள் பொதுவாக அம்மாவிடமே முன்னைவிடவும் அதிக நெருக்கம் கொள்வாள். அதே சமயம், அப்பா மற்றும் சகோதரர்களிடமிருந்து விலகி இருக்கவே எண்ணுவாள். ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமிருந்தும் தனித்து இருக்கவே விரும்புவாள்.அதை அப்பா என்பவர் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்தக் காலக்கட்டத்தை நினைத்துப்பாருங்கள். மெல்ல மெல்ல பரிணமித்த அவள் குணாதிசயங்களுக்கு ஏற்ப, நீங்கள் உங்கள்ஆளுமைகளை எப்படி எல்லாம் மாற்றிக் கொண்டீர்கள் என்பதையும் எண்ணிப்பாருங்கள். அதுபோல ஒரு மாற்றம் தான் டீன்ஏஜ் பருவமும். இந்தக் காலக்கட்டத்திலும் உங்கள் பிள்ளைகளுக்காக சில விஷயங்களை விட்டுத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் அணுகு முறையை மாற்றித்தான் கொள்ள வேண்டும்.
மேலும் எந்த ஒரு மகளும் தன் டீன்ஏஜ் பருவத்தில் தன்னுடைய அந்தரங்க விஷயங்களை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். தனக்குள் நிகழ்ந்த இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் அறியாது கலக்கப்பட்டிருப்பாள். உடல் வளர்ச்சி மாற்றம், மனதில் எழும் மனவெழுச்சிகளுக்கு அர்த்தம் புரியாமல் இத்தகைய நிலையில் இதை வெளிப்படுத்தாமல் இருக்க, தனிமையை தேடுவாள். பேசுவதைக் குறைத்துக்கொள்வாள். அப்பாவிடம் விலகி இருப்பதையே விரும்புவாள். அதே சமயம் விலகி இருக்கவும் ஆசைப்படும் அவள் அப்பாவின் பாசத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பாள்.
இந்த நேரத்தில் அவள் என்ன செய்கிறாள்? எங்கே போகிறாள்? யாரோடு பேசுகிறாள் என்றெல்லாம் துப்பறிய தொடங்கினால் பெற்றோர் மீது கோபப்பட ஆரம்பித்துவிடுவாள்.
டீன் ஏஜ்ஜிற்கே உரிய குழப்பங்களையும், சந்தேகங்களையும், மனபோராட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உடலிலும் மனதிலும் எழும் மாற்றங்கள் குறித்து அவளுக்கு தோழியாக இருந்து அறிவுறுத்தல் வேண்டும்.
சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை மதிக்கும். இந்த பாசவலையில் பழகிப்போன அப்பா, திடீரென டீன் ஏஜ்ஜில் மகள் தன்னைவிட்டு விலகத் தொடங்குவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதுதான்.
தாய்மகள் முறை என்பது அப்பா மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது. தாயுடன் ஒட்டுதலாக இருக்கும் மகள் தன்னிடம் விலகி இருக்கிறாளே என்ற ஆதங்கம் எந்த ஒரு தகப்பனுக்கும் ஏற்படத்தான் செய்யும். இந்த சூழ்நிலையில் "என் விருப்பப்படிதான் நடப்பேன்! எனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் செய்வேன்! எனக்கு எதை படிக்க வேண்டும் என்று தோணுகிறதோ அதைத்தான் படிப்பேன்' என்று அவள் அடம்பிடிக்கும் போது, குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நடக்கின்ற நிகழ்வுகளின் விளைவுகள் நிச்சயம் குடும்பத்தையும் கலங்கடித்துவிடத்தான் செய்யும்.
எனவே, ஒரு டீன்ஏஜ் மகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒருத்தர் தன்னுடைய அதிகாரத்தை தளர்த்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து கீழ் இறங்கி தோழனாக நடந்து கொள்ள வேண்டும். நல்லது, கெட்டதுகளை அன்புடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, அதே சமயம் அவர்களின் நடவடிக்கைகளில் மேற்பார்வையிட்டு, எந்த விஷயத்தையும் எதிர்க்கொள்ள வேண்டிய மன பக்குவத்தை அவர்களுக்குத் தேவைப்படும் போது தந்து, வழிகாட்டுதலோடு இருந்தால், மகள் அப்பா உறவுமுறை குழப்பத்தை ஏற்படுத்தாது. அச்சத்தை உருவாக்காது.
டீன்ஏஜ் பருவம் என்பது முக்கியமாக பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. பார்க்காததைப் பார்க்கவும், கேட்காததைக் கேட்கவும் ஆவல் மேலிடுகிறது. சிலசமயங்களில் இந்த ஆவல் உணர்ச்சியே டீன்ஏஜ் பிள்ளைகளை பெரிய சிக்கலில் மாட்டிவிடுகிறது. இந்தப் பருவத்தில் இன்னமொரு முக்கிய மான மாற்றம் மொட்டு விடும் பாலியல் உணர்வு. இந்த இனம் புரியாத உணர்வை அவர்கள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் சில சங்கேத மொழியைக் கைக்கொள்வார்கள். தன் விருப்பங்களை, எண்ணங்களை நாசுக்கான குறிப்புகள் மூலம் உணர்த்த தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது போல நடந்து கொள்வார்கள். இதை எல்லாம் கூர்ந்து கவனிக்கும் அப்பாக்கள் சட்டென்று அறிவுரைகளை அள்ளிவிடத்தான் நினைப்பார்கள். ஆனால், அப்படி செய்துவிடாதீர்கள்.
இந்த சூழ்நிலையில் அப்பா என்பவர் மகளுக்கு ரொம்ப அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான தலைமுறை இடைவெளியை மேலும் நீட்டிவிடும் வேளையை இன்றை அவசர உலகமும், மேற்கத்திய பழக்கங்களும், அதிவேக தகவல் தொழில் நுட்பங்களும் கச்சிதமாக செய்து வருகின்றன. இந்த சூழலில் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சில சமயங்களில் பிடிக்காதவர்களாகிவிடுகின்றனர். எனவே, அப்பாக்கள் குடும்பத்தில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் செயலை மிக புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.
வீட்டு வேலைகள், ஏதிர்ப்பார்ப்புகள், வீட்டில் இருக்க வேண்டிய நேரம், வீட்டுப் பாடம் செய்ய வேண்டி நேரம், டி.வி. பார்ப்பது, நண்பர் உள்ளிட்ட செயல்களில் எல்லாருக்குமான ஒரு பொது வரையறைகள் வைத்துக்கொண்டு, டீன்ஏஜ் மகளிடம் அன்பாக நடந்து கொண்டால் எந்த அப்பனுக்கும் பெண் பிடிக்கும். எல்லாப் பெண்களுக்கும் அப்பாவையும் பிடிக்கும்.
தேவராஜன்
*************************************************

34.உணவு முறையே
கிட்னி நோயை விரட்டும்!

உலகில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும், மரண அச்சம் ஏற்படுத்தும், அச்சுறுத்தும் நோய்களாக இருப்பவை புற்று நோய், இதய நோய் அடுத்ததாக இருப்பது சிறுநீரக நோய். உலகின் பெரும் அபாயம் விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் சிறுநீரக நோய் மூன்றாம் இடத்தில் இருப்பதாக ஒரு மருத்தவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் நோயாளிகள் சிறுநீரக பாதிப்பால் உயிரிழக்கின்றனர். மேலும் பத்தில் ஆறு பேருக்கு சிறுநீரக நோயுடன் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த கொதிப்பு நோயம் உள்ளது. ஆதலால், இந்தியாவில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதே மருத்துவ உலகத்தின் முன் உள்ள சவாலாக உள்ளது.
இதற்கு தீர்வாக எவை இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வில், சிறுநீரக நோயை நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறையாலேயே பாதியளவு கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதிகம் சோடியம் உள்ள உப்பு, அதிக பொட்டாசியம் சத்து கொண்ட வாழைப்பழம், தக்காளி, காலிப்ளவர் போன்ற பழங்கள், காய்கறிகள், மாவு சத்தான புரோட்டின் கொண்டுள்ள கிழங்குகளை உணவில் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும். சூப், பழச்சாறு, காய்கறிகளில் உள்ள சாறு, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகிய உணவுப் பொருட்களில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளன. எனவே இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நீண்ட நாட்களாக தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பசித்தப்பிறகு உணவு உண்ணுதல், குறைந்தளவு உணவு உண்ணுதல் நல்லது. நொறுக்குத்தீனி, மேலை நாட்டு உணவு வகை, அதிக எண்ணை சத்துள்ள உணவுப் பொருட்கள், உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுதல் இவை எல்லாம் சிறுநீரகத்துக்கு ஊறுவிளைவிப்பவையாக இருக்கின்றன.
பொதுவாக உணவு பொருட்களில் சோடியம் அதிகம் உள்ள உப்பு தான் சிறுநீரகத்துக்கு எதிரியாக உள்ளது. உயர் ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய்க்கும் காரணியாக இருப்பது சிறுநீரக நோய் என்பது குறிப்பிடதக்கது.
நம் உடம்பில் தேவையான அளவு பொட்டாசியம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பொட்டாசியத்தின் அளவு கூடும் போதும், குறையும் போதும் அது சிறுநீரகத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. அதுபோல பாஸ்பரஸ் அளவும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கால்சியம் சத்தும் அளவில் சரியாக இல்லாத போது அது சிறுநீரக நோயுடன் எலும்பு நோய்களையும் ஏற்படுத்தும்.
எனவே, சிறுநீரக நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வகை அதை சேர்த்துக் கொள்ளும் முறை ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை இவற்றை கட்டுபடுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
அடுத்ததாக புகைப்பிடிக்கும் பழக்கம், மதுஅருந்தும் பழக்கம் இவற்றை விட்டாலும் சிறுநீரகத்தை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தேவா
*******************************************************


35. அன்றாட வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். அதை பெரிய சுமையாக கருதாமல் எளிதல் சமாளிக்க கற்றுக் கொண்டால் ள்ள வேண்டும். சமாளிப்பதும் ஈஸி

சிங் அடைப்பு:

சிங், பேசின், பாத்டப் இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் தேங்கி விடும். அந்த நேரத்தில் நாம் டென்ஷன் ஆகிவிடுவோம். இந்தப்பிரச்னைக்கு கொஞ்சம் பொறுமையாக கவனம் செலுத்தினால் போதும். பிரச்னை தீர்ந்து விடும். சிங் அடைப்பு ஏற்பட்டால் ஒரு பக்கெட் தண்ணீர் கொஞ்சம் உயரத்தில் இருந்து ஊற்றினால் தண்ணீர் அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். டியூப், குழாய் இவற்றின் மூலம் காற்றை செலுத்தினால் அடைப்பு போய்விடும்.

பாத்ரூம் துர்நாற்றம் நீங்க:
ஏர்பிரஷ், சோடா பவுடர் இவற்றை பாத்ரூம் பின் பக்கம் வைத்தால் நாற்றம் இருக்காது.

அசைவ உணவு நாற்றம் நீங்க:
மீன், இறைச்சி இவற்றிலிருந்து வரும் நாற்றத்தை தவிர்க்க ஒரு பாத்திரத்தில் ஒயிட் வினிகர் ஊற்றி கொஞ்ச நேரம் அதில் வைத்திருந்தால் நாற்றம் போய்விடும்.

பர்னிச்சர் அழுக்கு நீங்க:
கண்õடி, கட்டில் , பீரோ இவற்றில் ஸ்டிக்கர் கறை, அழுக்கு போன்ற கரைகளை நீக்க வெஜிடபிள் ஆயில் கொண்டு துடைத்தால் அவை நீங்கிவிடும்.

மூடி, திறக்கும் பொருள் இலகுவாக:

மூடி,திறக்கும்படியான பிரீஜ் போன்ற சாதனங்களில் துõசுபடிந்தால் இலகுவாக மூடி, திறக்க முடியாது. அதற்கு கிராபைட் திரவம் இடுக்குகளில் போட்டு, கொஞ்ச நேரம் இழுத்து, மூடினால் இலகுவாகிவிடும்.

சுவர் பரப்பில் கோடுகள், சிராய்ப்புகள் நீங்க:
மொசைக், பெயிண்டிங் சுவர், வினையல்வால்பேப்பர் இவற்றில் கோடுகள் சிராய்ப்புகள் ஏற்பட்டால் சில்வர் பாலிஷ், சோடா கொண்டு மெதுவாக துடைத்தால் போதும். விடி40 கொண்டு சுவர்பரப்பில் ஸ்பிரே செய்து துøக்கலாம். டிஷ்சோப்பு கொண்டும் துடைக்கலாம்.

ஆடைகளில் சூயிங்கம் ஒட்டியிருந்தால்:

நெயில் பாலிஷ் கொண்டு கறைபட்ட இடத்தில் தடவி பின்னர் வாஷிங் செய்யலாம். ஷாம்பு கொண்டும் கறைபட்ட இடத்தில் தடவி வாஷிங்செய்லாம். பொதுவாக வாஷிங் மிஷினில் ஒரு ஷாம்பு பாட்டில் ஊற்றி, அதில் ஆடைகளை போட்டு வாஷிங் செய்தாலும் சகல கறைகளும் நீங்கிவிடும்.

பேனா இங்க் கறை நீங்க:

பேனா இங்க் , பால்பெயின்ட் இங்க் கறை ஏற்பட்டால் கொஞ்சம் ஆல்கஹால் தடவினால் அந்த கறை நீங்கிடும்.

எண்ணை கறை நீங்க:
மென்மையான ஸ்பான்ச் கொண்டு அதில் தண்ணீர் நனைத்து துடைக்கலாம். ஷாம்பு மற்றும் கிரீஸ் ஆயில் இவற்றைத் தடவி, உலர்ந்தப் பிறகு தண்ணீர் தெளித்து துடைத்தால் எண்ணை கறை நீங்கும்.

குழம்பு, உணவுப்பொருள் கறை நீங்க:

கொஞ்சம் கிளிசரின், கொஞ்சம் சோப் இவை கொண்டு தண்ணீரால் துடைத்தால் இவ்வகை கறைகள் நீங்கிவிடும்.

ரத்தக்கறை நீங்க:

உடையில் ரத்தக்கறை படிந்து விட்டால் உடனே நீக்கிவிட வேண்டும். ரத்த கறை படிந்த இடத்தில் ஷாம்பு தடவி, தண்ணீரில் அலசவேண்டும்.

காயத்தில் ரத்தக்சிவை நிறுத்த:
குளிர்ந்த நீரை ரத்தக்கசிவு இடத்தில் ஊற்றவேண்டும். ஈரத்துணியினால் ரத்தக்கசிவு இடத்தில் அழுத்தி பிடித்தால் ரத்தக்கசிவு நின்று விடும்.

சுவர் சிராய்ப்பு நீங்க:
ஒரு காலன் தண்ணீரில் 3 டிஸ்பூன் டிரைசோடியம் பாஸ்பேட் கலந்து சிராய்ப்புகள் உள்ள இடத்தில் தெளித்து, பின்னர் துடைத்தால் அவை நீங்கி விடும்.

பாத்திரங்களில் கறை நீங்க:

வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டும், உப்பு கொண்டும் செம்பு, பித்தளை பாத்திரங்களை கழுவினால் கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா கொண்டும் கழுவலாம்.



தேவா
********************************************

36.கோடையும், நோய்களும்!

கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதவை. கோடையில் உடல் அதிக வெப்பத்தை பெறுகிறது. அதனால் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இந்த தாக்கத்தை இளம் பருவத்தினரும், நடுத்தர வயதினரும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், குழந்தைகள் மற்றும் முதியோர்களால் இந்த உஷ்ண ஏற்றத்தை தாக்குப் பிடிக்க முடியாது.

கோடை தாக்குதலால் வரும் நோய்கள்:
அதிக உஷ்ணத்தால் எதிர்ப்பு திறன் குறைந்து, ஹீட் கிராம்ப்ஸ் (தோலில் வெடிப்பு ஏற்படுதல்), ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன், சன் ஸ்ட்ரோக் மற்றும் வயிற்றுவலி, தலைவலி, கழிச்சல் உள்ளிட்ட சில நோய்கள் ஏற்படும்.
இதில் ஹீட் கிராம்ப்ஸினால் அதிக பாதிப்பு ஏற்படாது. ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன் என்பது உடலில் இருக்கும் உப்புத்தன்மை குறையும் போது ஏற்படும். கோடையில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியாகிக்கொண்டே இருக்கும். அதில் உப்பும் சேர்ந்து வெளியேறும். வியர்வையோடு வெளியாகும் உப்புபற்றாக்குறையை சமன் செய்ய வேண்டும். அதற்கு வெறுந் தண்ணீரை மட்டும் குடிக்காமல் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து, மோரில் உப்புகலந்து பருகினால் நல்லது.
மூன்றாவது வகையான சன்ஸ்ட்ரோக் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு குறையும். 107 டிகிரி வரை காய்ச்சல் ஏற்படும். நினைவு இழப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்குச் செல்லவும் கூடும். இந்தபாதிப்பு உள்ளானவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிர் இழப்புகூட ஏற்பட வாய்ப்புண்டு.
கோடைகாலத்தில் சுகாதாரமான உணவுப்பொருட்களை சாப்பிடவேண்டும். இல்லை எனில் அதில் உள்ள தொற்று கிருமிகளால் பல நோய்கள் வந்துவிடும். குறிப்பாக சம்மர் டயாரியா எனப்படும் வயிற்றுப் போக்கு வரும். இது அமீபியாசிஸ் கிருமியால் ஏற்படும்.
சிறுவர்கள் கோடையில் நீர்நிலைகளில் விளையாட ஆர்வம் கொண்டிருப்பார்கள். நீர்நிலைகளில் மாசு, தொற்று இருப்பின் அது சிறுவர்களின் காது, மூக்கு , கண்களில் தொற்றி, எரிச்சல், அரிப்பு மற்றும் சரும நோயை ஏற்படுத்தும்.
கோடை வெயிலில் அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தியர்களின் சருமம் பெரும்பாலும் கறுப்புநிறத்தில் இருப்பதால், இந்தக் கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்கமுடிகிறது. உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. செயற்கை ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத்திலான ஆடைகளை அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலில் ஈர்க்கும். ஆதலால், இளநிற ஆடைகளை அணிவது நல்லது. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடர்நிற ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
சூடுகட்டி ஏற்பட்டால் அதனாலும் காய்ச்சல் வரும். கோடைக்காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது வியர்வை காரணமாக உடலில் இருக்கும் தண்ணீர் அளவு குறையும். இதனால் உடலில் தண்ணீர்பற்றாக்குறை ஏற்பட்டு சிறுநீர் வெளியாவதில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக சில வேதிவினையால் சிறுநீரகத்தில் கல்கட்டி உருவாக்கூடும். தண்ணீர், எலுமிச்சை, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகி வந்தால் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டுவந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். கல் தோன்றாது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்தால் காய்ச்சலால் வெளிபடும் உஷ்ணம் மட்டுபடும்.

கோடை பாதிப்பை தவிர்க்க:
* அடிக்கடி தண்ணீர் பருகுங்கள். அது புத்துணர்வைத்தரும்.
* மாலை அல்லது இரவு குளிர்ந்த நீரில் குளியுங்கள். சருமத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்.
*வெயிலில் சுற்றுபவராக இருந்தால் ஜூஸ், மோர், தண்ணீரை அடிக்கடி பருகுங்கள். சோர்வு நீங்கும்.
* இளநீர் அருந்துங்கள். சிறுநீர் இளகுவாக பிரியும்.
*எளிதில் செரிமாணம் ஆகக்கூடிய உணவு வகைகளை சாப்பிடுங்கள்.
* குளர்கண்ணாடி, தொப்பி அணிந்து கொள்ளுங்கள்.
* தண்ணீர் சத்துள்ள பழவகைகளை சாப்பிடுங்கள்.
தேவராஜன்
*************************************************


37 . கோடையை சமாளிக்க
கிச்சன் பார்மஸி!

வந்து விட்டது கோடை! தாக்குது அனல்! கொதிக்குது உடம்பு... கொட்டுது வியர்வை... தலைவலி, வயிற்று வலி, வாய்புண், தோல் வெடிப்புகள், வேர்க்குரு என உடல் ரோதனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன! இதை எப்படி சமாளிப்பது?
கோடையை சமாளிக்க கிச்சன் பார்மஸியே போதும். நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும். அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். அதே சமயம் தண்ணீர்
மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது.
தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது. பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை உண்ணக்கூடாது.
நன்றாக பொரித்த உணவுவகைகளை விலக்குங்கள். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்க வேண்டும். மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது.
உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உருளை, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன் , பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும்.
கோடையை சமாளிக்க ஒரு எளிய வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன்
பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான்
முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு . வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம்.
வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன.
கோடைக்கு குளிர்ச்சித்தருவது வெட்டி வேர். இது புல் வகையைச் சேர்ந்தது. வெட்டி வேர் மிகுந்த மணம் கொண்டது. இது
வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டி வேருடன் சந்தனக் கட்டையை சேர்த்து நீரிட்டு அந்தண்ணீரை அருந்துவது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும், வியர்க்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்தும். வெட்டி வேர் விசிறியை நீரில் நனைத்து விசிறிக்கொள்ள குளிர்ச்சியாக இருக்கும்.
கோடை காலத்திற்கு ஏற்றது இளநீர், தேங்காய் நல்லது. இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம்,
மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன.
கோடைக்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கப் போகும்முன் ஒன்று இரண்டு பழம் சாப்பிட்டு படுக்கலாம். இதனால் மலைச்சிக்கல் தீரும். ஆஸ்துமா, நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்சலுக்கு நல்ல மருந்து. செரிமானத்தை அதிகமாக்கி பசியைத்துõண்டும். குடல்பாதையில் தொற்றை தடுக்கும்.
குளிர்ச்சியான பழம் சாத்துக்குடி. தாகத்தை தணிக்கும்; வீரியத்தைக்கூட்டும். வயிற்று பொறுமல், வாயு, இருமல், வாந்தி, வறட்சி, செரிமானமின்மை போன்ற உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் சாத்துக்குடி. நோய் எதிர்ப்பு ஆற்றலும் சாத்துக்குடிக்கு உள்ளது என்பதால் கோடையில் தினமும் ஒரு சாத்துக்குடியாவது சாப்பிடுவது நல்லது.

தேவராஜன்
**********************************************



38. அம்மா போதித்த ஞானம்!

பாரதி பாஸ்கர்

"எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எவர் மனதையும் புண்படுத்தாமல் பேசும் கலையை எனக்கு கற்றுத் தந்தவர் என் அன்பு அம்மா கற்பகம் கிருஷ்ணன். அதோடு இன்று மேடைபேச்சாளர் என்ற தகுதியை எனக்கு தந்தவரும் அவர்தான்' என்று பூரிக்கிறார் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்.
அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றிருந்த காலக்கட்டத்திலேயே பெற்றோருடன் போராடி, மாநில அளவில் இயற்பியலில் முதுகலைப்பட்டத்தில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். பின்னர் மத்தியரசு பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர் என் அம்மா.
நான் 8ம் வகுப்பு படிக்கும் போதே பேச்சுப்போட்டிக்கு எழுதிக்கொடுத்து, எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி அளித்து என்னை தயார்படுத்தியது என் அம்மாதான். நான் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்வார்கள். ஒருபோதும் பரிசு பெறவேண்டும் கட்டாயப்படுத்திதே இல்லை. பரிசு பெற்றாலும், பெறாவிட்டாலும் அவர்களுடைய அணுகுமுறை ஒரேமாதிரியாகத் தான் இருக்கும்.
என் அம்மாவுக்கு மூன்று பெண்குழந்தைகள். எங்கள் மூவரையுமே இயல்பாக, யதர்த்தமாக, சுதந்திரமாக வளர்த்தார்கள். அந்த சுதந்திரம் தான் என்னை இன்று ஒரு நாடறியும் பெண்ணாக பிரபலபடுத்தியுள்ளது.
இப்போது மட்டுமல்ல; எப்போதும் அம்மா வலியுறுத்திவரும் வார்த்தை வரம் எதுவெனில், வார்த்தை வன்முறைகூடாது என்பதுதான். ஏகே47 துப்பாக்கிக் கொண்டு சுடுவதுதான் வன்முறை என்பதில்லை. அதில் ஏற்படும் காயத்தை கூட மருத்துவத்தில் குணமாக்கிவிடலாம். ஆனால், வார்த்தைகளில் பிரயோகிக்கப்படும் ஆபாசம், ஏளனம், சிடுசிடுப்பு, கர்வம், அதிகாரம் இவைகளினால் பிறர் மனம் புண்படுமானால் அதுவும் வன்முறைதான் என்று எனக்கு போதித்தவர். எதையும் திரும்பி பெறமுடியும் ஆனால், கொட்டி தீர்த்த வார்த்தைகளை திரும்ப பெறவே இயலாது என்று கூறுவார்.
வள்ளுவன் குறள் நெறியான "இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று' இது அம்மா எனக்கு போதித்த ஞானம்!
இன்றும் என் அம்மாவுக்கு நான் குழந்தைதான்! எனக்கு குழந்தைகள் வந்தப்பின்னும் இப்போதும் தினமும் போனில் "சாப்பிட்டாயா? உடம்பு சுகமா?' என்று வாஞ்சை கலந்த பரிவுடன் விசாரிக்கும் தாய் பாசத்துக்கு ஏது ஈடு?
எத்தனை இருந்து என்ன? தாய் வார்த்தை கேட்கும் சுகம், நிம்மதி எதில் உண்டு?
என் அம்மாவுக்கு பிரிதிபலன் செய்ய வேண்டும் என்றால், அவர் பழையபடி எழுந்து நடமாட வேண்டும் என்பதான பிரார்த்தனையைத் தவிர வேறொன்றும் இல்லை!
தேவராஜன்
************************************


39. என் எழுத்துகளில் வாழும் அம்மா!
ராஜேஷ்குமார்

""இன்று இத்தனை புகழும், பாராட்டும் பெற்ற எழுத்தாளனாக நான் இருக்க காரணம் என் அம்மாவின் அன்பும், பரிவும், அவர் தந்த நம்பிக்கையும் தான் முதல் மூலதனம். ஒவ்வொரு நாளும் நான் பேனா எடுத்து எழுதுவதற்கு முன், என் தாயின் படத்தை வணங்காமல் இருந்ததே இல்லை'' என்று அம்மா பற்றிய ஞாபகங்களை நினைவுகூர்ந்து நெகிழ்கிறார், எழுத்தாளர் ராஜேஷ் குமார்.
அம்மா என்றால் தன் பிள்ளைகளுக்கு ஆமை முயல் கதை, நரி கதை, நிலவில்பாட்டி வடை சுட்டக் கதைத்தான் சொல்வார்கள். ஆனால், என் அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் திகில், த்ரில் கதைகள்தான். ஒரு விஷயம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அப்போது எனக்கு 10 வயசு இருக்கும். கோவையில் இருந்து மருத மலைக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். மருத மலை உச்சியில் தனியாக மூன்று கல் இருந்தது. அந்த கல்லைக்காட்டி, "அம்மா, அந்த மூணு கல்லு மட்டும் தனியாக இருக்கே. ஏன்?' என்று கேட்டேன்.
அதற்கு, அம்மா சொன்ன கதை இது. "" ஒரு நாள் நடுநிசி. கும்மிருட்டு. மருதமலை முருகன் கோயில் நிசப்தத்தில் இருந்தது. பலே கில்லாடியான மூன்று திருடர்கள் கோயிலில் புகுந்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணம், காசை எல்லாம் எடுத்து மூட்டைக்கட்டி மலைமேலே ஏறும் போது, முருகன் அந்த மூணு திருடர்களையும் கல்லாகமாற சபித்தார். அப்போதிலிருந்து அந்த திருடர்கள் மூணுபேரும் மலையில் கல்லாகவே இருக்காங்க'' என்று ஒரு குட்டி க்ரைம் கதையை சொன்னார்.
இப்படி என் அம்மா நிறைய எட்டுக்கட்டி கதைகள் சொல்வார். அதையெல்லாம் கேட்டு கேட்டுதான் நான் க்ரைம் எழுத்தாளனாக உருவாகி இருக்கேன்.
1968ல் பட்டம் பெற்றும் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தேன். அப்போது பொழுதுபோக்க நிறைய கதைகளை எழுதி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். ஆனா, எதுவுமே பிரசுரமானதில்லை. அக்கம் பக்கம் இருக்கும் பெண்கள் என் அம்மாவிடம்,"பட்டம் படிச்சவன் இப்படி வேலை வெட்டிக்கு போகாம கதை எழுதுகிட்டு இருந்தா, அவன் எதிர்காலம் என்னாகும்? நீ தான் செல்லம் கொடுத்து உன் பிள்ளையை கெடுக்கற' என்று காதில் கிசுகிசுத்தார்கள். இதைக்கேட்டதும் அம்மா ஆவேசமாய், "என் பிள்ளை ராஜாடி. அவனை பற்றி பேச யாருக்கும் அறுகதை கிடையாது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் அவன் பெரிய ஆளாக வருவான். நான் பார்க்க முடியாவிட்டாலும், நீங்க பார்ப்பீங்க' என்று கோபத்தில் பொரிந்தார்.
அம்மா அன்று சொன்னது அப்படியே எனக்கு பலித்தது. நான் பெரிய எழுத்தாளனதையும் பார்த்து சந்தோஷப்பட்டாங்க. என் எழுத்து ஒவ்வொன்றிலும் என் அம்மா இருக்காங்க'' என்கிறார் ஆத்மார்த்தமாய் ராஜேஷ்குமார்.
தேவராஜன்
************************************


40. சமர்ப்பணம்

காசு பெரிதாகிப் போன கலியுகத்தில் பலருக்கும் வயிறு பெருத்து மனது சுருங்கிப் போய்விட்டது. கருவறையே கொடுத்த அம்மாவுக்கு வீட்டில் சிறு அறை கொடுப்பது கூட பலருக்குக் கஷ்டமாகத் தெரிகிறது. குடும்பம் என்பதே, தான், தன் பெண்டாட்டி பிள்ளைகள் என்கிற குறுகிய வட்டத்தில் முடிவடைந்து போகிறது. நினைவு தெரியாத காலம் முதல் தனக்கு என்ன என்ன காரியங்கள் அம்மா செய்திருப்பாள் என்பதும், என்ன என்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதும் பலருக்கும் மறந்து போய் விடுகிறது.
நான் ஆறாவது படித்த சமயத்தில் கடுமையான டைபாய்டு ஜுரம்... 102... 103 என்று டெம்ப்ரேச்சர். முப்பது நாளைக்கு மேல் படுக்கை... பாத்ரூம் போய்வரக் கூட பலம் இல்லை. அப்படி பலமின்றி ஒருநாள் நான் மயங்கிச் சரியும் தருணத்தில் ""யம்மா... என் புள்ளை'' என்று குலை நடுங்க அலறிய என் அம்மாவின் சத்தம் எமனுக்கு எதிரான ஒரு போர் முரசாக இன்னும் என் காதுகளில் கேட்கிறது. இரவு 2 மணி, 3 மணி என்று எப்போ நான் கண் விழித்தாலும் ஹார்லிக்ஸ் தரவா, பார்லி குடிக்கிறாயா என்று கேட்டபபடி அம்மா விழித்திருப்பாள். ஜுர வேகத்தில் நான் அம்மா என்று முனகும் போதெல்லாம் "என்னப்பா' என்று பதில் கொடுக்கும் அம்மாவின் குரல் M.கு. சுப்புலட்சுமி சங்கீதம் மாதிரி எனக்குக் கேட்கும்.

அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். அப்பாதான் கதைகளைப் படி எடுத்துக் கொடுக்கச் சொல்வார். அலுத்துக் கொள்ளாமல் ஆசை ஆசையாக அதைச் செய்வார் கொஞ்ச நாளில் கதைகளைப் படி எடுக்கும் பணியில் கிடைத்த, தன் அனுபவத்தைப் பயன்படுத்தி கதை பின்னும் கலையையும் கற்று, அந்தக் காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளராக தன்னை உயர்த்திக் கொண்டவர் என் அம்மா.
பகல் எல்லாம் சமையல், வீட்டு வேலை என்று பம்பரமாகச் சுழன்று விட்டு இரவு பத்து மணிக்கு மேல் கதை எழுத உட்காரும் அசுரத்தனம் அம்மாவின் பலம்.
மெத்தப் படித்த பெரிய வீட்டுப் பெண்மணி போலவே பக்குவமாகப் பண்பாடாகப் பேசும் அம்மா எங்களுக்காக யாரிடமாவது சண்டை போட நேர்ந்தால் அப்போது அவளுக்குள் பதுங்கியிருந்த பாண்டி நாட்டு தமிழச்சியின் முழு வெறியும் வெளிப்பட்டு விடும். பள்ளியில் நாடகத்தில் எனக்குக் கிடைத்த ஒரு பரிசை ஏமாற்றி பறித்துக் கொண்டு போன என் நெருங்கிய நண்பர் வீட்டுக்கு, மதுரை தெருக்களில் நடந்த கண்ணகியை விஞ்சும்படி படையெடுத்துப் போய் சண்டை போட்ட ஆவேச அம்மாவின் போர்க்குணம், தாய்மை வெறி மறக்க முடியாதது.
அம்மாவுக்குக் கடலை மிட்டாய் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் தனக்காக ஒரு தண்டச் செலவா என்று தன் ஆசையை அடக்கிக் கொள்வாள். ஆனால் கதை எழுத உட்கார்ந்தால் அவள் கற்பனைக் கார் பறக்க கடலை மிட்டாய்தான் பிரிமீயம் பெட்ரோல்ம்தான் .
அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க அம்மாவை அடிக்கடி அப்பாவிடம் நான் காட்டிக் கொடுத்துவிடுவேன். அதற்காக என் மீது கோபப்பட்டாலும், அதே அப்பாவுக்குத் தெரியாமல் என் சின்னச் சின்ன ஆசைகளை எப்போதும் நிறைவேற்றிய அம்மாவின் அன்பு எனக்கு ஓர் ஆச்சரிய அனுபவம்தான்.
சிக்கனம், கஞ்சத்தனம் இவையெல்லாம் அவளுக்குத் தெரியாதவை. தன் பிள்ளைகளைப் போலவே, பிள்ளைகளின் நண்பர்கட்கும் பண்டம், பலகாரம், சாப்பாடு, பரிமாறும் பாச வெள்ளம் அவள். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்த பிற்பாடு அவளுக்கு tச்ண்tஞு பார்க்கக்கூட எதுவுமே மிஞ்சாது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவள் கவலைப்பட்டதாக எனக்கு நினைவே இல்லை.

சாப்பிடும் போதெல்லாம் சாதாரணமான பருப்பும், நெய்யும் போட்டுப் பிசைந்து புளிக்குழம்பு தொட்டு பெரிய, பெரிய உருண்டையாக கையில் உருட்டிப் போடுவாள் அம்மா. பிசைந்து சாப்பிட்டால் அந்த tச்ண்tஞு வராது. நிஜமாகவே அந்த tச்ண்tஞு இதுவரை எந்த உணவிலும் எனக்குக் கிடைத்ததே இல்லை.
வீடுன்னா ஒவ்வொரு புள்ளை ஒவ்வொன்னு கேக்கததான் செய்யும்... வீடுகளில் நாயும், மாடும்தான் போட்டதைத் தின்னும்... பிள்ளைகள் கேட்டதைத் தின்னும்... இது என் அம்மா கொள்கை.
தீபாவளியன்று இரண்டு மணிக்கே எழுந்து எண்ணெய் சட்டியில் பலகாரத்துடன் தானும் வெந்தபடி பஜ்ஜி, போண்டா, உளுந்தவடை, மசால்வடை என்று சகலமும் செய்வாள் அம்மா. ஏதாவது ஒண்ணு இரண்டு போதாதா என்று எண்ணெயைவிடச் சூடாகக் கொதிப்பார் அப்பா. ""அதெப்படி ஒருத்தனுக்குப் பிடிச்சது மத்தவனுக்குப் பிடிக்காது... ஆளாளுக்குப் புடிச்சதைச் சாப்பிடத் தானே குடும்பம் நடத்தறோம்'' என்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று என்று பத்து, பன்னிரண்டு பலகாரம் செய்யும் அன்னபூரணி அவள். போதாக்குறைக்கு எழுத்தாளர் அகிலன் வீட்டுக்கும், பிரேமா பிரசுரம் அரு. ராமநாதனுக்கும் அம்மாவின் ஸ்பெஷலான இஞ்சிப் பச்சடி வேறு தயாராகும்.
என் திருமணத்திற்கு முன்பு, இரவு சொற்பொழிவுகள் முடித்து எவ்வளவு லேட்டாக வந்தாலும் கொஞ்சம்கூட அலுத்துக் கொள்ளாமல், தோசை சுட்டு போடும் அந்த அம்மா. நீண்ட நாள் வெளியூர் பயணம் முடித்துத் திரும்பினால், "ஏம்ப்பா இப்பிடி இளைச்சிட்டியே' என்று வருத்தப்படும் அம்மா... அப்பாவுக்கு வேறு tச்ண்tஞு, எனக்கு வேறு tச்ண்tஞு என்று ஒரே குழம்பை இரண்டு தினுசாக வைத்திருக்கும் அம்மா ஓர் அற்புத அதிசயம்.உழைக்க அஞ்சாத உற்சாகம் அவள் இயல்பு.
ஒரு மறக்க முடியாத சம்பவம். அடிக்கடி நான் வெளியூர்ப் பயணம் பல நாட்கள் தொடர்ந்து செய்வதால் என் வீட்டு வரவு, செலவு முழுவதும் என் மனைவி நிர்வாகத்தில் இருக்கும். அம்மாவுக்கும் ஏதும் பணம் வேண்டும் என்றாலும், என் மனைவியிடம்தான் கேட்க வேண்டி இருக்கும். இந்திய மாமியார்க்கே உரிய மருமகள் பகை இல்லாவிடினும் அளவுக்கு மீறி என் மனைவிக்கு உரிமை கொடுத்திருப்பதாகக் கோபம் வெடிக்கும். தன் அபிப்பிராயத்திற்கு மாறாக மருமகள் செய்யும் சகல செலவுகளும் என் சம்பாத்யத்தை அழித்தொழிக்கும் ஆடம்பரமாக அம்மா நினைத்து போராடிக் கொண்டே இருந்தாள். அமைதியாக நான் ஒரு நாள் அவளுக்கு விளக்கினேன்.
""அம்மா நீ ஜெயிப்பது முக்கியமா? உன் கருத்து ஜெயிப்பது முக்கியமா?'' என்றேன். சராசரி கோமதிக்குள் இருந்த சமூகப் பிரக்ஞை உடைய எழுத்தாளர் கோமதி விழித்துக் கொண்டாள். ""என் கருத்து ஜெயிப்பதுதான் முக்கியம்'' என்றாள். ""அப்பா உனக்குப் பொருளாதார சுதந்திரம் தரவே இல்லை... ஓர் அடிமை மாதிரி கொடுத்த பணத்திற்குள் குடும்பம் நடத்தச் சொன்னது குறித்து நீ எவ்வளவு குமுறியிருக்கிறாய். மொத்த வரவு, செலவை உன்னிடம் தரவில்லை என்று நீ எத்தனை முறை சண்டை போட்டு அப்பாவிடம் தோற்றுப் போய் இருக்கிறாய்... உன் கருத்தை ஏற்றுக் கொண்ட நான் மனைவியிடம் மொத்த வரவு செலவை ஒப்படைத்திருப்பதை மட்டும் உன்னால் ஏன் ஏற்கமுடியவில்லை? உன் கருத்து ஜெயித்திருப்பதை நீ உணரவேண்டாமா?'' என்றதும் மகிழ்ச்சியோடு அதை ஒப்புக் கொண்டாள் அம்மா. உணர்ச்சிவயப்படும் சராசரி சண்டைக்காரி கோமதியும் அவள்... அறிவுபூர்வமாக விளக்கிச் சொன்னால் தன் தோல்வியை விளங்கிக் கொள்ளும் அறிவு ஜீவியும் அவள்.
எனக்கு அப்பா ஓர் அம்மா மாதிரி... பிள்ளைகளைப் பிரிய பயப்படுவார். அம்மா ஓர் அப்பா மாதிரி... துணிச்சலாக கீடிண்டு எடுப்பாள். அம்மாவுக்கு அப்படி ஒரு நெஞ்சுரம், மனத்துணிவு. அந்தக் காலத்துப் பெண்களுக்குரிய ஜாதீயம் கிடையாது. புதுமை விரும்பி. போராட்ட குணம் உள்ளவள். தான் நினைப்பதைப் பளிச்சென்று எந்த இடத்திலும் பொதுமேடை என்றாலும்கூட தெளிவாகச் சொல்ல அவளால் முடியும்.
சின்ன வயதில் அம்மா சாமி கும்பிடுவதே ரொம்ப அழகாக இருக்கும். நிறைய விரதங்கள் இருப்பாள். பட்டினி அவளுக்கு ஒரு பிரச்சனை அல்ல. நாதவிந்து கலாதீ நமோநம என்ற திருப்புகழை வெள்ளி மணி மாதிரி அவள் பாடிக் கேட்ட காலங்களை என் காதுகளில் கைது பண்ணி வைத்திருக்கிறேன். கோவில் கோவிலாக சாமி விஷயங்களில் காசு விரயம் செய்வது அவள் பலவீனம். அதனால்தானோ என்னவோ கோவில் கோவிலாகப் போய் பேசி அவள் செலவழித்த காசை நான் வசூல் செய்திருக்கிறேன்.
எப்போது நான் வெளியூர் அல்லது வெளிநாடு போகும் போதும் தன் கைகளால் விபூதிபூசி அனுப்புவாள். இப்போதும் (83 வயது) என் நெற்றி எங்கிருக்கிறது என்று குத்துமதிப்பாகத் தன் நடுங்கும் கையாலும், நடுங்காத மனசாலும் விபூதி பூசுவது அவள் பழக்கம். அப்படி அனுப்பினால் அவளே எனக்குத் துணையாகக் கூட வருவது மாதிரி ஒரு நினைப்பு அவளுக்கு. என்ன அர்த்தமோ தெரியாது ஓர் எலுமிச்சம்பழம் கையில் கொடுத்து அனுப்புவாள். இப்போது என் மனைவி, மாமியார் வழியில் எலுமிச்சை கொடுக்கும் மகராசியாக இருக்கிறாள். மற்ற வீடு மாதிரி என் வீட்டில் மாமியார் மருமகள் மனக் கசப்பு கிடையாது. காரணம் என்னைவிட என் அம்மாவுக்கு வேண்டியவள் என் மனைவி. அவளது சகல தேவைகளையும் கவனித்துக் கொள்வதால் நான் என் மனைவியிடம் கடிந்து கொண்டால் கூட மருமகள் சார்பாகத்தான் என்னிடம் பேசுவாள் அம்மா.
முதுமையால் இப்போது அம்மாவுக்கு முதுகு வளைந்துவிட்டது. என்றாலும் இப்போதும் வளையாத முரட்டு மனம் அம்மாவுக்கு. இன்னும் தான் போடுகிற பிளான்படியே எல்லோரும் நடக்க வேண்டும் எதிர்பார்ப்பாள் அவள். ஆனால் தான் நினைத்தபடி நிற்கக் கூட முடியாமல் அப்படியும் இப்படியும் கால் தள்ளாடுகிற முதுமையில், தன் இஷ்டப்படி பிறர் எப்படி நடப்பார்கள் என்பதை இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறாள். அதனால் நடக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாகி விடுகிறாள். லேசலான மரணபயம் அவளுக்கு வந்துவிட்டது. ஆனால் பயப்பட வேண்டியவன் எமனே ஒழிய அம்மா இல்லை. தனியாக இருக்க பயப்படுகிறாள். தன் பெட்ரூம் கதவு திறந்தே இருக்க வேண்டும் என்கிறாள். வீட்டில் நடப்பதைப் பார்த்தபடி, சத்தம் கேட்டபடி இருக்கவே விரும்புகிறாள். சத்தமாக கூ.ங. வைத்துக் கொள்கிறாள்.
ஓர் ஏழை சமயச் சொற்பொழிவாளனாக நான் கழிந்து போகாதபடி ஒரு செல்வாக்கு மிக்க சிந்தனையாளனாக உயர்ந்து வாழ்வு வாழ்வதற்கு அம்மா ஓர் அழுத்தமான காரணம். கார், வீடு என்று அப்பா சேர்க்க முடியாமல் போனவற்றை நான் இன்று சேர்த்து ஜெயித்தமைக்கு அம்மாதான் அஸ்திவாரம்.

தேவராஜன்
****************************************

41. "ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலை 10 காசு'
சாத்தியம் என்கிறார், இளம் விஞ்ஞானி விக்னேஷ்வரி

"சுத்தமான, ஒருலிட்டர் மினரல் வாட்டரை 10 காசுக்கு தரமுடியும். நகம் அளவு சிப் மூலம் ஒரு 40 வாட் பல்புக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். கேன்சருக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க முடியும். இந்த அதிசயங்கள் எல்லாம் நானோ டெக்னாலஜி மூலம் நடக்கும் என்பதை நிரூபிக்கவே என் ஆய்வுகள் தொடருகின்றன' என்று ஆச்சரியப்படுத்துகிறார், நானோ டெக்னாலஜியில் பி.எச்டி., பெற்ற முதல் இந்தியப் பெண்ணான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டாக்டர் விக்னேஷ்வரி.
அவர் சொன்னதைக்கேட்டு, நாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, "எதிர்கால இந்தியாவின் முன்னேற்றம் அது நானோ டெக்னாலஜி வழியில்தான் இருக்கும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், அதற்கு நானோ டெக்னாலஜியின் தயவில்லாமல் சாத்தியப்படாது' என்று கூறி மேலும் ஆச்சரியப்படுத்தியவரிடம், அதென்ன நானோ டெக்னாலஜி, புரியும்படி சொல்லுங்களேன் என்றோம்.
""ஒருவரின் ஒரு தலைமுடியை குறுக்கு வசத்தில் ஒருலட்சம் துண்டுகளாக வெட்டினால், அதில் ஒரு பகுதியின் அளவு எவ்வளவு நுணுக்கமாக இருக்குமோ, அந்த அளவுக்கு நுணுக்கமானது நானோ டெக்னாலஜி. இது விஞ்ஞான அற்புதத்தின் மணிமகுடம் போன்றது.

எப்படி இந்த துறையில் ஆராய்ச்சி செய்ய ஆர்வம் வந்தது?

படிக்கும் போது இந்த துறை மீது ஆர்வம் ஏற்படவில்லை. இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் இயற்பியலில் பெற்று, அடுத்ததாக நெல்லை மனோமணியம் சுந்தரனார் கல்லுõரியில் எம்.பில். பட்டம் பெற்றேன். படித்து முடித்தவுடன் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு கல்லுõரியில் பேராசிரியராக வேலைப் பார்த்தேன். அதன் பிறகு சேலத்தில் உள்ள ஒரு அரசு கல்லுõரியில் சில மாதங்கள் வேலைப் பார்த்தேன். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் "நானோ தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியாவின் பயணம்' என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் மனவளர்ச்சியில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மூளையில் புரோகிராம் சிப் பொருத்தி, கம்யூட்டர் மூலம் கட்டளைகள் கொடுத்து அக்குழந்தையை செயல்படவைக்க முடிகிற மாதிரி கற்பனையாக அந்த கட்டுரை நீளும். இந்தக் கட்டுரையை படித்தப் பிறகுதான் எனக்கு நானோ டெக்னாலஜியில் ஆர்வம் ஏற்பட்டது. அதே சமயம் சென்னை பல்கலைக்கழகத்தில் நானோ டெக்னாலஜியை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்ய முழுநேர ஆராய்ச்சியாளர் தேவை என்ற விளம்பரம் வந்தது. உடனே கல்லுõரி பேராசிரியர் பணியை விட்டு ஆராய்ச்சி செய்ய தொடங்கினேன்.

நானோ டெக்னாலஜியில் உங்கள் பங்கு என்ன?

என் பங்கு இதுதான் என்று இப்பவே எப்படி முற்று புள்ளி வைக்க முடியும்? அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பயணம். இதுவரையில் என் ஆய்வுகள் உலகம் சார்ந்த பார்வையில் உள்ளது. உதாரணமாக மூன்றாவது உலகப்போர் வந்தால் இந்தியா போன்ற நாடுகளில் அடிப்படை வசதிகளான தண்ணீர், மின்சாரம், மருத்துவம் பெருமளவு தேவைப்படும். அதற்கு நிலத்தடி தண்ணீரில் உள்ள மாசுகளை, கிருமிகளை அழிக்க நானோ டெக்னாலஜி பில்டர் மூலம் வடிக்கட்டி பயோ பாக்டீரியா, தேவையில்லாத மினரல்களை நீக்கிவிடலாம். இதன் மூலம் ஒரு லிட்டர் தண்ணீரை 10 காசுக்கு உற்பத்தி செய்யலாம். என்னுடைய இந்த ஆய்வுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. அடுத்ததாக மின்சாரம். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிக சூரிய வெளிச்சம் இல்லாத போதும் அவர்கள் சோலார் சிஸ்டம் மூலம் மின்சார பற்றாக்குறையிலிருந்து மீண்டுவிட்டார்கள். அப்படியிருக்கும் போது இந்தியாவில் ஆண்டுக்கு 10 மாதங்கள் வரை சூரிய உதயம் இருக்கும் போது நாம் ஏன் சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று ஆய்வு செய்தேன். முடிவில் பத்துக்கு பத்து சதுர அடி அளவில் வைக்கப்படும் சோலர் தகட்டின் மூலம் பெறும் வெப்ப ஆற்றலை நானோ டெக்னாலஜி மூலம் நகம் அளவில் சிப் செய்து அதே அளவு வெப்ப ஆற்றலை ஏற்படுத்தும் சிப் வடிவமைத்தேன். பெங்களூரில் உள்ள ஐஎஸ்ஆர்வோ நிறுவனத்திற்கு எரிசக்தியை சேமிக்கும் எடைக்குறைந்த பேட்டரியை வடிவமைத்திருக்கிறேன்.
சங்கரநேத்ராலயாவில் "டார்க்கெட் டிரக் டெலிவரி' என்ற புதிய முறை நானோ டெக்னாலஜி மருந்து கண்டுப்பிடித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வகை மருந்து மூலம் கேன்சரை மிக எளிதாக குணப்படுத்தமுடியும்.

அப்துல் கலாமுடன் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்களேன்?

எனக்கு ரோல் மாடலே கலாம் தான்! 2006ம் ஆண்டு டெல்லியில் சிறந்த இளம் ஆராய்ச்சியாளர்களுடன் கலாம் சந்தித்து உரையாடிய நிகழ்சியில் நானும் இருந்தேன். என்னை வெகுவாக பாராட்டினார். "உனக்கு சமூகத்தில் எந்த பிரச்னை வந்தாலும், எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் ஒருபோதும் ஆய்வுபணியை மட்டும் விட்டுவிடாதே' என்று அறிவுரை கூறினார். மேலும், இந்தியாவின் எதிர்காலம் நானோ டெக்னாலஜியில் தான் இருக்கு. அதற்கு உங்களைப் போன்றவர்கள் தேவை என்றார். ஆய்வுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று கேட்டார். ஆராய்ச்சி செய்ய ஆய்வு பொருள்கள் இல்லை என்றதற்கு, இனி, நீங்கள் ஆய்வு மேற்கொள்ள இந்தியாவில் எந்த ஐஐடியையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெளிநாடுகள் சென்று ஆய்வு செய்ய அரசு உங்கள் செலவினங்களை ஏற்கும் என உறுதியளித்தார்.

உங்களைப்பற்றி, எதிர்காலம் பற்றி சொல்லுங்களேன்?

அப்பா பாலசுப்பிரமணியம். காலேஜ் சூப்பிரடன்டாகயிருந்து ஓய்வு பெற்றவர். அம்மா கிருஷ்ணகிரியில் பிடிஓ அலுவலகத்தில் ஆபிஸ் அசிஸ்டென்டாக பணிபுரிந்து வருகிறார். தம்பி ராஜகணபதி திருச்சியில் வேளாண் மை ஆராய்ச்சி மையத்தில் உதவி பேராசிரியராக இருக்கிறார். என்னோட எதிர்கால லட்சியம் என்றால் என்னைப்போல நிறைய நானோ டெக்னாலஜி ஆராய்சியாளர்களை ஏற்படுத்தணும். வெளிநாடுகளில் இருந்து பல லட்ச சம்பளத்திற்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டேன். என் சேவை இந்தியாவுக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்பதால்தான் காட்டாங்குளத்துõர் எஸ் ஆர் எம் கல்லுõரியில் என்னைப்போல பலரை உருவாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு நானோ டெக்னாலஜி பிசிக்ஸிஸ்ட் ஆக இருக்கிறேன். இதுவே எனக்கு திருப்தி தருகிறது.

தேவராஜன்
படங்கள்: ராஜன்
***************************************

42. ஏழுவகை உணவு சாப்பிடுங்க! நாற்பதிலும் இளமையாக இருங்க!

"எட்டு வயதில் பெண்கள் அழகு, பதினெட்டில் எந்தப் பெண்ணும் அழகு' என்பார்கள். அழகும், இளமையும் பெண்களுக்கு மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவை போல நினைத்து, தங்கள் அழகை, இளமையை காப்பதில் பெண்கள் அதிக அக்கறை காட்டுவார்கள்.
40 வயது கடந்து விட்டாலே பெண்கள் அழகையும் இளமையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றனர். அதற்கு நுõற்றி எட்டு காரணங்கள் இருக்கலாம். நீங்க நாற்பதிலும் சிலிம்மா... கொடியிடையோடு... இளமை ஊஞ்சலாட இருக்கணுமா? அதற்கு ஏழு வகையான உணவு போதும். இந்த ஏழுவகை உணவுபொருட்கள் உங்களுக்கு ஊட்டத்தை கொடுப்பதோடு, கொழுப்பினை குறைத்து உங்களை சிலிம்மாக்கும்.

ஒரு கப் தண்ணீர்; இரண்டு எலுமிச்சை பழம்:

தினமும் காலையில் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் வெந்நீரில், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, ஒருகலக்குகலக்கி கடகடன்னு குடிங்க. அவ்வளவு தான் மேட்டர். இந்த எலுமிச்சை சாறு உள்ளே போனதும் முதல்ல பாஸ்போரிக் அமிலத்துடன் கூட்டு சேர்ந்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கும். அடுத்ததா, ரத்த ஓட்டத்தை சரிபடுத்தும். மேலும் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும். இதன் காரணமாக நமக்கு வருடத்திற்கு சராசரியா ஒருகிலோ எடைகுறையும். கூடுதலா தினமும் 4 கப் தண்ணீர் குடித்து வந்தால் மேலும் ஒருகிலோ எடை குறையுமாம்.

நார்சத்துள்ள தானியங்கள்:

வீட்டில் இருக்கும் தானிய வகைகளே மாமருந்து. கிராமத்தில் இன்றும் தானிய வகைகளை உணவில் பயன்படுத்துகின்றனர். தானியங்களை ஊறவைத்து அதன் தண்ணீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள கொழுப்பு குறையும். அதுமட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள இன்சுலின் சுரப்பு அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அடுத்ததாக நவ தானியங்களை தினமும் அளவுடன் உணவில் சேர்த்து வந்தால் தோல் சுருக்கம், வெளுப்பு வராது. ரத்தசோகை ஏற்படாது. உடம்பு எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதன் காரணமாக சக்தியும், இளமையும் நீடிக்கும்.

கொள்ளு:

கொள்ளு குதிரைக்கு மட்டுமேயான உணவுபொருள் அல்ல. நமக்கும்தான். கொள்ளுவை நாம் உணவில் சேர்த்துவர, உடம்பில் கொழும்பு குறைந்து உடம்பின் வடிவம் உருகுலையாமல் இருக்கும். கொள்ளுவில் இருக்கும் புரதங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டு படுத்தும். ஹார்மோன் உருவாக்கும் ஈஸ்டோஜனை சீர்ப்படுத்துகிறது. மேலும் கொள்ளு சீக்கரமே செரிமானம் ஆகக்கூடிய உணவுபொருள். கொள்ளுவை சூப் வைத்து பருகலாம். சுண்டல் வைத்து சாப்பிடலாம். காரவகைகளில் சேர்த்து கொள்ளலாம். தினமும் ஏதோ ஒருவகையில் கொள்ளுவை உணவில் சேர்த்துக்கொள்ள நீரழிவு நோய், மாரடைப்பு, ரத்தசோகை போன்ற நோய்களின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்கலாம். அது மட்டுமல்ல உடம்பிற்கு வலுவும் கிடைக்கும். உடல் பொலிவும் மெருகேறும்.

பிஸ்தா:

பிஸ்தா பருப்பு உடலுக்கு மிகவும் ஊட்டத்தைக் கொடுக்கக்கூடியது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். பிஸ்தா பருப்பில் உள்ள ஒமேகா3 என்ற சத்து மேனி அழகையும், இளமையையும் கொடுக்கக்கூடியது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. தினமும் 810 பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். உடம்பில் கொழுப்பு சேருவதைத் தடுக்கும். இன்சுலின் அளவை ஒரே அளவில் வைத்திருக்கும். ஆகவே பிஸ்தா சாப்பிடுங்க, பிஸ்தாவா இருங்க.

லவங்கப் பட்டை:

உணவு மணக்க, சுவையாக இருக்க, காரசாரமாக இருக்க உணவில் லவங்கத்தை சேர்த்துக் கொள்கிறோம். இந்த லவங்கம் நம் உடம்புக்கு தேவையான கலோரியைக் கொடுத்து எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். மேலும் உடம்பில் கலோரி இழப்பினைத் தடுத்து சோர்விலிருந்து காக்கும். அதுமட்டுமல்ல, இதயத்துக்கு இதமானது லவங்கம். கொலஸ்ட்ராலை மட்டுபடுத்தி இதயநோயை தடுக்கும் பாதுகாப்பு கவசமாக லவங்கம் இருக்கும்.

பச்சை மிளகாய்சாஸ்:

பச்சை மிளகாய் காரமான ஒரு உணவுபொருள். இதை உணவில் சேர்த்து கொள்வதால் உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்து கரையும். பொதுவாக எல்லாருக்கும் கொழுப்பு தான் எதிரியாக உள்ளது. கொழுப்புதான் உயிர்க்குடிக்கும் நோய்களுக்கு வாயிலாக இருக்கிறது. மேலும் உடல்பருமனுக்கு ஊக்கியாக கொழுப்புதான் இருக்கிறது. அப்படிப்பட்ட கொழுப்புக்கு கடிவாளம் போடக்கூடியது காரவகை சாஸ். காரவகையான மிளகு, கிராம்பு, மிளகாயை தினமும் அளவோடு உணவில் சேர்த்து வந்தால் மேனியழகோடு இருக்கும்.

மீன் உணவு:

அசைவ பிரியர்கள் உணவில் மீன்வகைகளை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள். மீனில் இருக்கும் ஒமேகா3, விட்டமின்ஏ, கால்சியம் போன்ற சத்துகள் உடல்பருமனைத் தடுக்கும். அதுமட்டுமல்ல வயோதிக தோற்றம் ஏற்படுவதை மீன் உணவு தடுக்குமாம். 40 வயதைத் தொடும்போது ஏற்படும் மெனோபாஸ் பிரச்னைகளுக்கு மீன் உணவு ஓரளவு தீர்வாக இருக்கும்.
சைவம் சாப்பிடுவர்கள் கீரைவகைகளும், மீன் மாத்திரைகளும் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்தையும், இளமையையும் காக்கலாம்!
தேவராஜன்
*************************************************


43. இந்த முறையில் வளர்த்தால்
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்!

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும் குழந்தைகளை இப்படித்தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறையிருக்கிறது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். அந்த 12 வழிமுறைகள் இதோ.

1. இளமையில் கல்வி
குழந்தைகளுக்கு இளமைப்பருவம்தான் அவர்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பருவம். ஆதலால், அந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்லதொரு பண்பாட்டை, பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து
விட்டால் அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும். பின்பு அவர்கள் ஒழுக்க நிலையில் இருந்து ஒருபோதும் மாறமாட்டார்கள்.

2. கோபம்
கோபமாக இருக்கும் போது கூட தகாத வார்த்தைகளை குழந்தைகள் முன் பேசிவிடாதீர்கள். முடிந்தளவு குழந்தைகள் முன் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்!
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை தந்தையும் தாயும் இணைந்து தீர்மானிக்கவேண்டும். ஒருவர் கண்டிப்புடனும் இன்னொருத்தர் செல்லத்துடன் குழந்தையை அணுகினால் இருவருக்கும் மத்தியில் குழந்தை தன் வேலையை காட்ட ஆரம்பித்து விடும். மேலும், கண்டிப்பவரை குழந்தை வெறுக்கத்தொடங்கி விடும்.

4. உறுதியாக இருத்தல்!
பெற்றோர்கள் தங்களது கொள்கையில் உறுதியை கடைபிடிக்கவேண்டும். அடிக்கடி சட்டத்திட்டங்களை மற்றும் எதிர்ப்பார்ப்புகளை மாற்றிக்கொண்டால் குழந்தைகள் குழம்பிவிடுவார்கள். எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் போது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா, மாட்டீர்களா? அதனால் கோபமடைவீர்களா என்பதை முடிவு செய்தப்பின் உங்கள் அணுகுமுறையை குழந்தைகளிடம் காட்டுங்கள்.

5.குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்!
குழந்தைகளிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய் பேசாதீர்கள். குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசினால் குழந்தைகள் உங்களை நம்பமாட்டார்கள். உங்களைப் பார்த்து அவர்களும் பொய் பேசக்கூடும்.

6. அடம்பிடிக்கிறார்களா? விட்டுவிடுங்கள்!
எதையோ எதிர்ப்பார்த்து, அதை அடைய அடம்பிடித்து அழுகிறார்களா? அழுகையை நிறுத்த ஏதாவது கொடுத்து சமாதானப்படுத்த வேண்டாம். ஏனெனில் அது விரும்புவதைப்பெற அழ ஆரம்பித்து விடும். அப்படியே விட்டுவிட்டால் அழுகையின் மூலம் எதையும் பெற முடியாது என்பதை உணர்ந்து விடுவார்கள்.

7. தவறு செய்தால் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்!
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அதன்படி கேட்கவும் சொல்லுங்கள்.

8. மன்னித்து விடுங்கள்!
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது என்றால் உடனே மன்னித்து விடுங்கள். அதை வெளிப்படையாகவே குழந்தைகளிடம் தெரியப்படுத்துங்கள். குழந்தை மன்னிப்பு கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கிறது என்பதை உணர்த்துவதாகும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்பு கோருங்கள்!
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள். நான் பெற்றவன். குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் குழந்தைகளிடம் மன்னிப்பு கோருவது மூலம் தவறு யார் செய்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பண்பு குழந்தைகளுக்கு வளரும்.

10. சாதனையாளர்களை சொல்லிக்கொடுங்கள்!
கார்டூன், சக்திமான் போன்ற கதைகளை டி.வி.யில் பார்த்து, கதையில் வருவது போல அமானுஷ்யங்களை செய்ய வேண்டும் என்று நினைத்து ஏமாற்றம் காண்பார்கள். ஆதலால், சமகாலத்து சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு
களை படிக்கச் செய்யுங்கள்.

11. நல்லொழுக்கங்களைக் கற்று கொடுங்கள்!
பள்ளிகளில் ஆண்டுவிழாக்களில் சினிமா பாடல்களுக்கு ஆடும் கலாசாரத்தை கற்றுக்கொடுக்கிறார்கள். அதை ஊக்குவிக்காமல், கட்டுரை, பேச்சு, நாடகம் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12.கீழ்ப்படிதல் செய்ய கற்றுக்கொடுங்கள்!
குழந்தைகளை பயமுறுத்தி, அடிமைப்படுத்த நினைக்காதீர்கள். கீழ்ப்படிதல் என்பது ஒரு கடமை என்பதை உணர்த்துங்கள். பெரியவர்களுக்கு கீழ்படிதலில் எந்த ஈகோவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

மேற்கண்ட 12 பண்புகளையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து வளர்த்தால் எந்த குழந்தையும் ஒழுக்கத்தோடு, நல்ல வர்களாக வளர்வார்கள் என்பது நிச்சயம்.
தேவராஜன்
**************************************************

44. சவாலை சமாளித்த
அஞ்சலி வாக்மேர்!

அஞ்சலி வாக்மேர். இந்தியாவே புருவம் உயர்த்தி, ஆச்சரியத்துடன் பார்த்த இந்தப்பெண், ஒரு வக்கீல்!
அந்தப் பெண்மணியை சுற்றி பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். கேள்வி மேல் கேள்விக்கணைகளை வீசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்மணிக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. கால் நடுங்கியது. வியர்வை கொப்பளித்தது. நாக்கு குளறியது.டென்ஷன்! டென்ஷன்! டென்ஷன்! ஓடிப்போய் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்கிறார். சட்டென்று காதைப் பொத்திக் கொள்கிறார். பின்னர், நெற்றியில் கை பொத்தி, கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சம் யோசனையில் ஆழ்கிறார். சட்டென்று வெறித்து, "பிளீஸ், லீவ் மீ அலோன் நவ்' என்று கெஞ்சி, கூச்சலிடுகிறார். அப்படியே அமைதியாகி விடுகிறார்.
பத்து நிமிடம் கழித்து, ஒரு உத்வேகத்துடன் தொண்டையை செறுமிக்கொண்டு, "இந்த கேசை எடுத்துக்கொள்ள குறிப்பிடும்படியாக எந்த முக்கிய முகாந்திரமும் இல்லை. என்னைப்போல 17 வக்கீல்களில் 7 வக்கீல்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதில் என்னை அந்த கேசை எடுக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரியும், நான் என்ன செய்ய வேண்டும் என்று. நான் ஒரு இந்தியர் என்பதையும் அறிவேன். சட்டத்திற்கு உட்பட்ட என் கடமை என்னவென்றும் அறிவேன். என்னை ஏன் இம்சைப் படுத்துகிறீர்கள்? பிளீஸ் தொல்லை தராதீர்கள்' என்று கெஞ்சி, கூச்சல் போடுகிறார்.
என்னாச்சு? ஏன் இந்தப்பெண் இப்படி உள்ளம் குமுறுகிறார்? யார் இந்தப் பெண்?
அஞ்சலி வாக்மேர் என்ற இந்த பெண் வக்கீலைத்தான் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியை "என் கட்சிக்காரர்' என்று பேசும்படி மகாராஷ்டிர செஷன்ஸ் நீதிமன்றம் பணித்திருக்கிறது. அஞ்சலியின் அந்தக் கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள் என்னென்ன தெரியுமா?
தேசத்துக்கு எதிராக சதி செய்தல், தீவிரவாத செயலில் ஈடுபடுதல், கடத்தல், அத்துமீறி இந்தியாவில் நுழைதல், கொலை முயற்சி, கொலை செய்தல், மும்பை தாக்குதலுக்கு காரணமாக இருத்தல், சதி திட்டமிடல் போன்ற பல குற்ற செயல்கள் புரிந்ததற்காகவும் இந்த தேசத்தின் 9 காவலர்களை சுட்டுக் கொன்றதற்காகவும் 11 ஆயிரம் பக்கங்களுக்கு மேலான சார்ஜ் சீட் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத கும்பலில் ஒருவனான முகமது அஜ்மல் அமீர் என்கிற காசப்தான் அந்த குற்றவாளி.
சென்ற நவம்பர் 26ம் தேதி மும்பை சிவாஜி சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், தாஜ், ஓபராய் ஓட்டலில் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, 18 செக்யூரிட்டி, 26 வெளிநாட்டினர் உட்பட 170 பேரை சுட்டுக்கொன்ற பயங்கர தீவிரவாத கும்பலில் ஒருவன்தான் இந்த காசப்.
இந்தத் தீவிரவாதிக்காக வாதிடத்தான் அஞ்சலி நியமிக்கப்பட்டுள்ளார். வக்கீல் என்ற முறையில் தன் கடமையை செய்யவே முதலில் அஞ்சலி ஒப்புதல் கொடுத்திருந்தார். ஆனால், இந்த செய்தி மும்பையில் காட்டுத்தீயாக பரவ, தேச உணர்வாளர்கள், சிவசேனா கட்சித் தொண்டர்கள் இதற்கு காட்டமான எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் வோலி பகுதியில் இருக்கும் அவர் வீட்டு முன்பாக கூட்டம் கூடி அத்துமீறி நடந்து கொண்டனர். இந்த வழக்கை அஞ்சலி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அச்சுறுத்தினர்; கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில்தான் அஞ்சலி மனஉளைச்சலில், உயிர் பயத்தில் காசப்புக்கு வழக்காடப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். முழு பாதுகாப்பு தரப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனாலும், "என் முடிவை அறிவிக்க ஒருநாள் அவகாசம் கொடுங்க' என்று அஞ்சலி கேட்டிருந்தார்.
மும்பைவாசியான அஞ்சலி, சட்டப்படிப்பை புனேயில் உள்ள சிம்பியாசிஸ் இன்ஸ்டிடியூட்டில் முடித்துள்ளார். 1996 முதல் கிரைம் மற்றும் சிவில் கேஸ்களில் ஏற்று வாதிட்டு வருகிறார். இதுவரை எத்தனையோ வழக்குகளில் ஆஜராகி வந்த இவருக்கு இந்த காசப் வழக்கில்தான் இத்தனை எதிர்ப்புகள். கொலைமிரட்டல்கள்.
ஒரு தீவிரவாதி சார்பில் வக்கீலாக ஆஜராகலாமா? நம் தாய்நாட்டுக்குள் ஊடுருவி கொலைவெறியோடு பலரையும் சுட்டுக் கொன்ற ஒரு தீவிரவாதிக்கு ஆஜராகுவது நாட்டுப்பற்றையே ஒதுக்கி வைத்தது போல் ஆகாதா? மும்பை மக்களின் ஆத்திர உணர்வு நியாயமாக இருக்கும்போது, அதை ஒதுக்கித்தள்ளி விட முடியுமா? இப்படி நிறைய கேள்விகள் அஞ்சலி மனதில் பிறந்ததில் பெரிய அளவில் தடுமாறிப் போனார். நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வாய்ப்பாகுமே என்றுதான் ஒருநாள் அவகாசம் கேட்டார்.
அன்றையதினம் இரவு அவர் மனசுக்குள் எத்தனை போராட்டம் நடந்திருக்கும்...?
சொன்னபடி, மறுநாள் முடிவை அறிவித்து விட்டார். "எஸ். நான் ஆஜராகிறேன்' என்று. தீவிரவாதி தரப்பில் ஒரு வக்கீல் ஆஜராகாவிட்டால் வழக்கு சிக்கலாகுமே என்ற ஒரே நோக்கத்தில் அவர் எடுத்த முடிவு அது. நீதிதேவதையின் முன் காசப்பும், அஞ்சலியும் பாரபட்சமற்றவர்களே என்பதால், தனக்கு விடுக்கப்பட்ட சவாலை எப்படியோ அஞ்சலி சமாளித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

தேவா
*****************************************************

45. பேசும்புத்தகங்கள்
உருவாக்கிய பெண்மணி!


குழந்தைகள் எழுதப்படாத புத்தகம் போன்றவர்கள். குழந்தைகளைப் புரிந்து கொள்ள ஒரே வழி நாமும் குழந்தைகளாக மாறுவதுதான். அவர்கள் உலகம் குதுõகலமானது. அவர்கள் பூக்களைப்போல மலர்ந்து கொண்டிருப்பவர்கள். குழந்தைகளின் வாழ்க்கை, விளையாட்டு மற்றும் கதைகளால் ஆனது. இந்திய பண்பாடு, கலாசாரம், பக்தி, ஒழுக்கம் போன்ற வாழ்வியல் கூறுகளை கதைகளூடே புகுத்தி வளர்த்ததெல்லாம் நம் தலைமுறையோடு போய்விட்டதோ என்ற நம் அச்சத்தை போக்கும் வகையில் பேசும் புத்தகங்களை உருவாக்கி, குழந்தைகளின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறார் ஷோபனா விஸ்வநாத்!

அதென்ன பேசும் புத்தகங்கள். கான்செப்டே வித்தியாசமாக இருக்கிறதே?
இன்றைய நவீன தொழில் நுட்பம், புதிய சிந்தனை, புதிய வடிவம் கொண்டு அச்சு எழுத்து முறையில் கற்பதை அடுத்த தளத்திற்கு கொண்டு போன முயற்சிதான் பேசும் புத்தகங்கள். இதில் படித்தல், கேட்டல், பார்த்தல் மூன்றுசெயல்களும் ஒரே சமயத்தில் நிகழ்வதால் குழந்தைகளுக்கு கற்றல் என்பது இனிமையாகிறது.
குழந்தைகளின் சுபாவம் விளையாட்டு, கதைகேட்டல் இவற்றிலேயே சுற்றி வருகிறது. இந்த வட்டத்திலிருந்து அவர்களை பிரித்து எதையும் அவர்களிடம் நாம் புகுத்திவிடமுடியாது. அதனால் இந்த மூன்று செயல்களை ஒருங்கிணைத்து ஒரு புத்தகம் உருவாக்க முடியுமா என்று யோசித்ததில் உருவானதுதான் இந்த பேசும் வகை புத்தகங்கள்.

அட, இந்த ஐடியா எப்படி வந்தது?
எங்கள் குடும்பம் இசை குடும்பம். நான் யூ எஸ்சில் இருந்தபோது என் மகனுக்கு 3 வயது. அவனுக்கு அருகில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்க நேரம் இல்லாமல் இருந்தது. பாட்டு, விளையாட்டு, இங்கிலீஷ் பாடம் அடங்கிய சிடி கிடைத்தது. அதை வாங்கி வந்து மகனுக்கு கொடுத்தேன். என்ன ஆச்சரியம்! அதைப் பார்த்தே, கேட்டே அவன் பாடங்களை சுயமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான். என் மகனுக்கு ஏற்பட்ட அனுபவமே இந்த ஐடியாவுக்கு அடிப்படை காரணமாக இருந்தது. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்ததும் குழந்தைகளுக்கான பேசும் புத்தகங்களை "கரடி டேல்' என்ற நிறுவனம் தொடங்கி வெளியிட ஆரம்பித்தோம்.

பேசும் புத்தகங்களுக்கான கதைகள், பாடல்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நம் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், பஞ்சதந்திர கதைகள் இவற்றிலிருந்து கருத்துகள் எடுத்து இக்காலத்துக்கு ஏற்ப புதிய வடிவில் பாடல், பின்னணி இசையுடன் கதைகளை வடிவமைத்திருக்கிறோம். மேலும் கதைகளின் கதாபாத்திரங்களின் உரையாடல்களை குழந்தைகளுக்கு பிரபலமான நடிகர்களின் சொந்தக் குரலில் பேசி பதிவு செய்திருக்கிறோம். இதை கேட்கும் போது குழந்தைகள் ஆசையாய், ஆர்வமாய் கற்பதற்கு உதவும்.

கரடி டேல் மூலம் எத்தனை பேசும் புத்தகங்களை உருவாக்கி இருக்கிறீர்கள்?
தமிழ், ஆங்கிலம், இந்தி என பல மொழிகளில் பேசும் புத்தகங்களை உருவாக்கி இருக்கிறோம். மேலும் பல பேசும் புத்தகங்களை உருவாக்கும் ஆயத்த பணியில் இருக்கிறோம். எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. நிறைய பண்ணியிருக்கிறோம்.

உங்களின் இந்த புதிய முயற்சியை பள்ளிகளில் சோதனை செய்திருக்கிறீர்களா?
செய்திருக்கிறோம். சுனாமி பாதிக்கப்பட்ட நாகை, கடலுõர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 40க்கும் மேலான அரசு பள்ளிகளில் அச்சில் இருக்கும் பாடங்களை நாங்கள் அந்த பாடக்கருத்துகளை, படங்கள், பாடல்கள், இசை, உரையாடல் மூலம் வடிவமைத்து கொடுத்து பயிற்சி கொடுத்திருக்கிறோம். மாணவர்களிடம் கற்றலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் அமிர்தானந்தமயி தனியார் பள்ளிகளிலும் எங்கள் தயாரிப்புகளை நடைமுறைபடுத்தியுள்ளோம். மேலும் 80 பள்ளிகளில் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் எங்களின் கரடிடேல் நிறுவனத்தின் கரடி பாதை பேசும் புத்தகங்கள் பாடங்களாக இருக்கின்றன.

வேறென்ன தளங்களில் இயங்குகிறீர்கள்?
இந்த பேசும்புத்தகங்கள் வடிவில் நம் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பிரபலமானவர்களின் குரலில் தயாரித்திருக்கிறோம். உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு நுõலான அக்னிசிறகினை கவிஞர் வைரமுத்துவின் குரலில் உருவாக்கி இருக்கிறோம். காந்தி, ஜே.ஆர்.டி.டாட்டா, காளிதாசனின் சாகுந்தலை போன்ற சில நுõல்களை பேசும் புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறோம். மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடுத்து குழந்தைகளுக்கு அனிமேஷன் படங்கள் எடுத்து பிரபல டிவி சேனலில் தொடராக ஒளிபரப்ப உள்ளோம்.

பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?
குழந்தைகளை வளர்க்கும் முழுபொறுப்பு தாய்மார்களிடம் தான் இருக்கிறது. ஆதலால், முதலில் பெண்கள் நிறைய படிக்க வேண்டும். நாம் நிறைய படிப்பதின் மூலமே நம் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவவும், ரோல்மாடலாகவும் இருக்கமுடியும். நம் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய சொத்து கல்வி. மிக உயர்ந்த பரிசு புத்தகங்கள்.

தேவராஜன்,
படங்கள்: செல்வகுமார்
*****************************************

46. பிரசவத்துக்குப் பிறகு
குண்டாயிட்டீங்களா?

"குழந்தை பிறந்தா அழகு போய்விடும்' என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அது இன்று உண்மையாகியிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு குண்டாகி விடுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கு அதிக ஊட்டம் தேவைப்படுவதால் உணவு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் கருவுற்ற நாள் முதல் கருவின் எடைக்கேற்ப அந்தக் கருவை சுமக்கும் தாயின் உடல் எடை அதிகமாகும்.
நார்மல் டெலிவரியில் குறைந்தது 300 முதல் 350 மி. ரத்தம் இழப்பு ஏற்படுகிறது. இது 500 மி. வரை அதிகரிக்கவும் கூடும். இதனால் ஹீமோகுளோபின் குறைகிறது. பிரசவத்துக்குப் பிறகு உடலுக்கு ஹீமோகுளோபின் தேவை அதிகமாகிறது. ஆக்ஸிஜன் ரத்த ஓட்டத்தில் குறைந்து போவதால் ரத்தசோகை ஏற்படுகிறது. சருமம், முடி வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகின்றன. அடுத்ததாக, குழந்தைக்கு பால் புகட்ட வேண்டியிருப்பதால் தாய்மார்களுக்கு கால்சியம், புரோட்டீன், விட்டமின்களின் தேவைகள் அதிகமாகின்றன. இவைகள் சமச்சீராக பிரசவத்துக்குப் பிறகு கிடைக்காமல் போவதால் உடல் நலத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இது போல பிரச்னைகளிலிருந்து விடுபடவும், பிரசவத்துக்குப் பிறகு எடை குறைந்து பழைய உடல் தோற்றத்தையும், இளமையையும் பெறவும் சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாமா?

உணவு தேவையை ஈடு செய்யுங்கள்!
பொதுவாக மூன்று வேளை சாப்பிடுவது பழக்கம். ஆனால் பிரசவத்துக்குப்பிறகு மூன்று வேளையை ஆறு வேளையாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளைக்கும் சத்தான உணவை கொஞ்ச கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பால், பழங்கள், பழச்சாறு, சூப் இந்த வகை உணவுவகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

காபி அதிகம் பருகாதீர்கள்!
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு கப் காபிக்கு மேல் பருகாதீர்கள். காபியில் உள்ள காபீன் குழந்தைக்கு புகட்டும் பாலில் ஊறு விளைவித்து விடும். தண்ணீர் அடிக்கடி அருந்துங்கள். ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடுங்கள். இவைகள் உடலுக்கு தேவையான கால்சியத்தை கொடுத்துவிடும்.

அதிக கொழுப்பு, வறுத்த உணவை தவிர்த்திடுங்கள்!
உடல் பருமனை குறைக்க கொழுப்பு வகை உணவுகளைத் தவிர்க்கவேண்டும். அதுபோல வறுத்த வகை உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பருப்பு வகைகளில் செய்யப்படும் வடை போன்ற உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

இறைச்சி போதுமான அளவு உண்ணுங்கள்!
கோழி இறைச்சி, மீன் இவைகளை போதுமான அளவு உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைக்கும். இது குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும். பால் கொடுப்பதன் மூலம் இழக்கப்படும் சக்தியை மீட்டுத்தரும். சைவ உணவு சாப்பிடுபவர்கள் தயிர், வெண்ணை, பால், ராகி, சோயா, பழுப்பரிசி போன்ற உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

எளிதில் செரிமானமாகும் உணவு உண்ணுங்கள்!
நுõடூல்ஸ், பிரட் போன்று எளிதில் செரிமானம் ஆகும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பரங்கி, வெண்டைக்காய், பீன்ஸ், காளான் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு தேவையான விட்டமின்களையும் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

உடற்பயிற்சி!
நார்மல் டெலிவரி ஆனவர்கள் 40 நாட்களுக்குப் பிறகு எளிய வகை உடற்பயிற்சியை செய்து வரவேண்டும். சிசேரியன் செய்து கொண்டவர்கள் மருத்துவர்களின் அறிவுரைக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்து வந்தால் தசைகள், நரம்புகள், எலும்புகள் வலுவடையும். தேவையில்லாத கொழுப்பு குறைந்து தேவையில்லாத தசைகள் கரையும்.

நடை பயிற்சி, யோகா, டான்ஸ்...
ஒரு நாளைக்கு காலையிலோ மாலையிலோ குறைந்தது 2030 நிமிடநேரங்கள் நடைபயிற்சி செய்து வரவேண்டும். பிரசவத்துக்குப்பிறகு மீண்டும் பழைய தோற்றத்தையும், இளமையும் பெற யோகா சிறந்த வழிமுறையாகும். யோகாவினால் மூச்சு ஓட்டம் சீராகும். இதனால் சோகை ஏற்படாது. டான்ஸ், இசை இவற்றினால் மனம் இறுக்கம் விலகி சந்தோஷம், குதுõகலம் ஏற்படும். இதனால் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி இளமையையும், வசீகரத்தையும் தரும்.
மேலே சொன்ன வகைகளை தவறாது கடைபிடித்து வந்தால், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் பருமனை குறைக்கலாம்; பழைய தோற்ற பொலிவையும், இளமையையும் பெறலாம்!

தேவராஜன்
**********************************************

47. பன்றிக் காய்ச்சலை
விரட்டும் துளசி!

இன்றைய இளம் தலைமுறையினரில் பலருக்கு கொஞ்சம் வெயிலில் அலைந்தால் தலைவலி வந்துவிடுகிறது. ஒரு நாள் மழையில் நனைந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது, பனியில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் எதுவென்று தெரியுமா? நமக்கெல்லாம் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதுதான்! தொட்டதுக்கெல்லாம் வரும் நோய்களிலிருந்து விடுபட உடலுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். எதிர்ப்பு சக்தியை எப்படி வளர்த்துக்கொள்வது பற்றி விரிவாக அதே சமயம் எளிமையாக புரியும்படி சொல்கிறார், டாக்டர் வேல்விழி.

எதிர்ப்பு சக்தி என்பது என்ன?
உடலில் உள்ள ரத்தத்தில் வெள்ளை அணு மற்றும் சிவப்பணுகள் கலந்து இருக்கின்றன. இந்த அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சமமாக இருந்தால் அது ஆரோக்கியமான உடல்நிலைக்கு உத்திரவாதம் கொடுக்கக்கூடியது. அதே சமயம் வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்களைவிட எண்ணிக்கையில் அதிகமாகவோ, சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்களைவிட குறைவாக இருந்தாலோ எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
உதாரணமாக வெளியில் இருந்து தொற்றும் நோய்கிருமிகள் உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது ரத்தத்தில் உள்ள சிவப்பு, வெள்ளை அணுக்கள் ஒன்று சேர்ந்து கிருமிகளிடம் போராடி, அந்தக் கிருமிகளை அழித்துவிடும். இதனால் நோய்தொற்று ஏற்படுவதில்லை! ஆனால், ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கையில் மாறுபடும் போது கிருமிகள் இந்த அணுக்களை வென்று உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் ஊடுருவி, பல தொல்லைகளை ஏற்படுத்துகின்றன. இதை தான் எதிர்ப்பு சக்தி இல்லை என்றோ, எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றோ வழக்கில் சொல்லி வருகிறோம்.

எதிர்ப்பு சக்தியை தரும் ரத்த அணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன?
உடலில் கல்லீரல், மண்ணீரல், எலும்புமஜ்ஜை ஆகிய உறுப்புகளில் ரத்தம் உற்பத்தியாகிறது. இந்த உறுப்புகளை காக்கும் அல்லது வலுப்படுத்தும் உணவுவகைகளை சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தியாகும் ரத்தத்தில் வெள்ளை அணு மற்றும் சிவப்பணுக்கள் சம அளவில் உருவாகி, எதிர்ப்பு சக்தியை தரும்.

எதிர்ப்பு சக்தியை உருவாக்க என்ன செய்யவேண்டும்?
"பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டில்கூட உணவு சாப்பிடலாம்' என்பார்கள். மிளகு, சீரகம், நவதானியங்கள், நார்சத்துள்ள காய்கறிகள், கீரைகள், கனிகள் இவைகளைஅன்றாடம் உணவில் சேர்த்து வரவேண்டும். குழந்தைப் பருவத்திலேயே இத்தகைய உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் வளர்ந்தப் பிறகு அவர்களுக்கு நல்ல எதிர்ப்புசக்தி கிடைக்கும். இந்த வகையான இயற்கை உணவுகளை பாப்பா பருவத்திலிருந்து பாட்டி பருவம் வரைக் கொடுத்து வரவேண்டும்.
குறிப்பாக அதுவும் முக்கியமாக கொத்துமல்லி, புதினா, இஞ்சி, கருவேப்பிலை, சுக்கு, திப்பிலி, மிளகு, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இவைகளை எந்த வகையிலாவது உணவில் சேர்த்து வந்தால் எதிர்ப்பு சக்தி கூடுதலாகவே இருக்கும். பொதுவாக உணவில் பிடித்த உணவு, ருசி உணவு என்று பார்க்காமல் உடம்புக்கு நல்லது செய்யும் உணவுவகைகளையே சாப்பிட்டு வரவேண்டும்.

எதிர்ப்பு சக்தி குறைய காரணம் என்ன?
இயற்கை உணவுகளைத் தவிர்த்து செயற்கை உணவுகளை நாம் உண்ணும் போது உடம்பில் இருக்கும் கொஞ்ச எதிர்ப்பு சக்தியையும் அது கெடுத்து விடும். பொரித்த உணவு வகைகள், சாலையோர சுகாதாரமற்ற உணவுகள், துரித உணவுவகைகள், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள், ரெடிமேடு பொருட்களை உணவில் பயன்படுத்துதல் இவைகளினால் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல உடல் உறுப்புகள் செயல் இழந்து, ஆபத்தான நோய்களுக்கு இடம் கொடுத்துவிடும். மேலும், சின்ன சின்ன விஷயங்களுக்காக மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்வதாலும் அவை உடம்பில் சேர சேர எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக குறைத்துவிடும்.

தொற்று நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இப்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் ஒரு தொற்று நோய்தான். இது அதிகப்படியாக உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையே பெரிதும் பாதிக்கிறது. உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாததால் உடம்புக்குள் ஊடுருவிய கிருமிகள், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், மூளை ஆகிய உறுப்புகளை பாதிக்கச் செய்கின்றன. இந்த நோய் வராமல் இருக்க எதிர்ப்பு சக்தி நமக்குள் இருக்க வேண்டும். பாரம்பரிய மருந்தான துளிசி, மஞ்சள், வேப்பிலை, கற்பூரவள்ளி இவைகளை கசாயம் வைத்துக் குடித்தாலே தொற்று நோய்களை பெரும்பாலும் தவிர்த்து விடலாம். திரிபலா சூரணம், சோற்றுக்கற்றாழை சூப் இவைகளை நாம் பயன்படுத்தி வந்தால் எந்த தொற்று நோயிலிருந்தும் தப்பிவிடலாம்.

தேவராஜன்
******************************************************