வெள்ளி, 8 நவம்பர், 2013

அமலி( அருள்மொழி)சொல்லாமல் போனதென்ன?


அமலி( அருள்மொழி)சொல்லாமல் போனதென்ன? 8.11.13 சாலை நடந்த கோர விபத்தில் என் ப்ரியமான தோழி அமலி என்கிற அருள்மொழியும் அவரது கணவரும் பலியானார்கள் என்ற செய்தி கேட்டதும் துடிதுடித்துப்போனேன்! திருகண்ணபுரம் என்றால் நினைவுக்கு வரும் நினைவுகளில் ஒன்று அமலியின் நினைவு. அந்த நினைப்பே இப்படி மரணித்துவிடும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. கடந்த 10 தினங்களுக்கு முன்பு கூட பேஸ்புக்கில் என் மகனின் புகைப்படத்தைப் பார்த்து விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கு மறுமொழி கூட நான் இன்னும் இடவில்லை! அதற்குள் இப்படி நடந்து விட்டதே! அமலியைப் பற்றி எழுத ஆயிரம் உண்டு. எழுதி என்ன செய்ய? அவர் படிக்கவா போகிறார்? என்னுடைய பிரார்த்தனை எல்லாம் அமலியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். என்றென்றும் இறைவன் திருபாதத்தில் இளைப்பாற வேண்டும் என்பதே!

திங்கள், 4 நவம்பர், 2013

பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? - தேவராஜன்.


பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? - தேவராஜன். நாளைக்குத் தீபாவளி பண்டிகை! புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே அமர்க்களப்படும். தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு ஜாலியான பகுதி பட்டாசு வெடித்து மகிழ்வதுதானே! இப்படி ஜாலியாக பட்டாசு வெடிக்கும் போது, காயமடையாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது? என்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்குக்காக தரப்பட்டுள்ளது. படித்து தீபாவளியை தித்திக்க தித்திக்க கொண்டாடுங்க குட்டீஸ்! பாதுகாப்பாக வெடி வெடிப்பது எப்படி? நெருக்கமான வீடுகள், மக்கள் அடர்த்தி மிக்க இடங்களில் இருந்தால், அங்கே பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள். பட்டாசு வெடிக்கும் இடம் திறந்தவெளியாக இருக்கட்டும். வெடிகளை வெடிக்கும் முன் ஒரு வாளி தண்ணீர், மணல் போன்ற தீயணைப்புப் பொருட்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குழந்தைகள் என்பதால், அருகில் கட்டாயம் பெரியவர்கள் இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணி அணிந்து இருப்பதும் அணிந்திருக்கும் உடை பருத்தி ஆடைகளாக இருப்பதும் முக்கியம். உங்கள் வீரத்தைக் காட்ட கையில் பிடித்தவாறு பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள். கம்பி மத்தாப்புக்களைக் கொளுத்தி முடித்ததும் அந்தக் கம்பிகளைத் தண்ணீரில் போட வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது? உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது கண்களில் பட்டாசுத் துகள்கள் பட்டாலோ உடனே தண்ணீரில் தொடர்ந்து கழுவ வேண்டும். எரிச்சல் குறையும் வரை கழுவிவிட்டு, உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். உடலில் தீ பட்ட இடத்தில் துணிகள் ஒட்டிக்கொண்டு இருந்தால் உடனே அதை வேகமாக கழற்றக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது சிறிய அளவில் புண் ஏற்பட்டுவிட்டால், அந்த இடத்தில் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவினாலே போதும். அவசர உதவிக்கு 108 எண்ணுக்குச் சுழற்றுங்கள்! எச்சரிக்கையை கவனிங்க! ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பைக் கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து, அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பட்டாசையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம். இங்கெல்லாம் வேண்டாம்! தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது தயாரிக்கப்படும் இடங்களைத் தவிர்த்து, குறிப்பாக விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்தவெளிகளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே நல்லது. இதெல்லாம் கூடாது! ஒரேநேரத்தில் ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்துக்குக் காரணமாகலாம். நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம். மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்தக்கடாது. இப்படி செய்யுங்க! நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். இப்படிச் செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு பட்டாசை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. நீங்கள் பட்டாசை பற்றவைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதை எல்லாம் தவிர்க்கலாமே! வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக சேர்த்து வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்கள் மீதோ, தெருவிலோ வீசி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப்போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால், பெரிய விபத்துகளை தவிர்க்கலாம். தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம். குடடீஸ்க்கு தீபாவளி வாழ்த்துகள்! பாதுகாப்பான தீபாவளியே அனைரும் விரும்புவது! பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்! குட்டீஸ் அனைவருக்கும் ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

எல்லாம் கொடுத்தது... சொல்வதெல்லாம் உண்மை - லட்சுமி ராமகிருஷ்ணன்.


( தினமலர் தீபாவளி (2.11.2013) சிறப்பு மலரில் இடம் பெற்ற எனது பேட்டி கட்டுரை) எல்லாம் கொடுத்தது... சொல்வதெல்லாம் உண்மை - லட்சுமி ராமகிருஷ்ணன். தமிழ் சினிமாவின் அழகான அம்மா, சினிமா இயக்குநர், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். 17 வயதில் திருமணம் முடிந்து, 3 பெண் குழந்தைகளின் அம்மாவாக இருக்கிறார். சினிமாவில்அம்மாவாக நடித்துக் கொண்டிருந்த லட்சுமிராமகிருஷ்ணன், ஆரோகணம் படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். இப்போது ஜீதமிழ் டி.வி.யில்‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார். * சினிமாவுக்கு வந்தது எப்படி? சிறுவயது முதல் எனக்குள் ஒரு தேடல் இருந்தது. அது என்னதென்று புரியாமல் இருந்தேன். என் தேடல் பற்றி புரிவதற்குள் 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. பிறகு, கணவன், குழந்தைகள், குடும்பம் என்று காலம் கடந்தது. துபாயில் மஸ்கட் நகரத்தில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட்டாக 12 ஆண்டுகள் இருந்தேன். 2006ல் சென்னை வந்தேன். எனக்கு சினிமாத்துறையில் ஈடுபடவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. நான் சினிமாத்துறைக்குச் செல்ல வீட்டில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். என் லட்சியம் டைரக்ஷன் தான். அதை அடைய சினிமாத்துறையினர் பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவே நடிக்கிறேன் என்றேன். சம்மதித்தனர். அதன்படி 2006ல் மலையாளத்தில் முதலில் நடித்தேன். அதன்பிறகு தமிழில் பல படங்கள் நடித்தேன். தொடர்ந்து 40 படங்கள் வரை நடித்து கொண்டிருந்தேன். திரையுலகினர் பலரது நட்பு கிடைத்தது. தொடர்புகளை வளர்த்துக்கொண்டேன். ஐந்து ஆண்டுகள் ஓடியபிறகு, இதுதான் தக்க தருணம் என்று முப்பது லட்சரூபாயில் ‘ஆரோகணம்’ படம் திட்டமிடப் பட்டது. முதல் இலக்கு, தயாரிப்பாளரைக் காப்பாற்றுவது. இந்த எண்ணத்தில் படம் தொடங்கப்பட்டது. முப்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவானால் நான் என் கைக்காசிலிருந்து செலவழிப்பேன் என்றேன். இது என்னிடம் பணம் உள்ளது என்று காட்ட அல்ல. அதை விட அதிகம் செலவழிக்க மாட்டேன் என்று காட்டத்தான், அப்படிச் சொன்னேன். சொன்னபடியே முடித்து விட்டேன். படம் ஆரம்பித்தது முதல் ஏழெட்டு மாதங்கள் குடும்பத்தை மறந்து உழைத்தேன். முப்பது லட்சத்தில் படத்தை முடித்தேன். யாருக்கும் இழப்பு தராத படம் ‘ஆரோகணம்’. ¬*முதல் படித்தின் அனுபவம் எப்படி இருந்தது? நல்ல அனுபவம் கொடுத்தது. கே.பி., பாரதிராஜா, விஜய் போன்ற இயக்குனர்கள் பாராட்டினார்கள். குறிப்பாக பாரதிராஜா பாராட்டியது மறக்க முடியாதது. “இந்தப் படத்தை இதுவரை நான் பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன். சத்யஜித்ரே , அடூர் கோபாலகிருஷ்ணன் போன்று வாழ்க்கையை அப்படியே படமெடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் எனது சிந்தனை திசைமாறி விட்டது. இந்தப் படத்தை இவ்வளவு நேர்த்தியாக , வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே அதே நேரத்தில் மிகவும் சுவராஸ்யமாக லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அவரது முதல் படம் என்று சொல்கிறார் என்னால் நம்பவே முடியவில்லை..” என்று வாழ்த்தினார் பாரதிராஜா. *சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி... நான் ஆரோகணம் படம் இயக்கிக்கொண்டிருந்தபோது அந்த வாய்ப்பு வந்தது. நேரமின்மையால் அதை மறுத்து விட்டேன். அரோகணம் இயக்கி முடித்தப்பிறகு மீண்டும் அந்த வாய்ப்பு வந்தது. யோசித்தேன். வீடுவரை தேடி வந்த வாய்ப்பை ஏன் மறுக்க வேண்டும்? வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். வீட்டில் எல்லாரும் தடுத்தனர். டி.வி. நிகழ்ச்சி எல்லாம் உன்னால் சாமார்த்தியமாக செய்ய முடியாது. அது ரொம்ப ரிஸ்க் என்றனர். சவாலாக எடுத்துக்கொண்டேன். இப்போ இந்த நிகழ்ச்சி 200வது எபிசோட் வரை கடந்து விட்டது. * இந்த நிகழ்ச்சிக்கு அதிகமாக எந்தப் பிரச்னைகளுடன் வருகிறார்கள்? பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அதிலும் கூலி தொழிலாளர்கள் குடும்பத்தில்தான் அதிக பி ரச்னைகள் இருக்கிறது. கள்ளக்காதல், சமூக மரபுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டு அதன் விளைவாக பயங்கர விமர்சனங்கள் கண்டவர்கள், பெண் கொடுமை, மாமியார் மருமகள் பிரச்னை இப்படி பல கோணங்களில் பல உறவு சிக்கல், தொல்லைகளுடன் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி வழியாக பெண்களை கொடுமைப்படுத்தும் ஆணாதிக்கம் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. * அடுத்தவர்களுடைய அந்தரங்கத்தை இப்படி மேடை ஏற்றி விவாதிப்பது நியாயமா? தப்புதான்! இருந்தாலும், அவர்களுடைய அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்து, அவர்களுக்குத் தீர்வு சொல்கிறோம். அவர்களுடைய நிலைமையை டி.வி.யில் பார்த்து பல உதவ முன்வருகிறார்களே! இது அவர்களுக்கு கிடைத்த நன்மைதானே! பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபுணர்கள் மூலம் கவுசிலிங்க் கொடுத்து, அவர்களைத் தெளிவானவர்களாக அனுப்பி வைக்கிறோமே! ஆக, ஒரு கெட்டதில் 9 நன்மைகள் இருப்பதால் இந்நிகழ்ச்சி நியாமானதுதான்! எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. *இந்த நிகழ்ச்சி மூலம் உங்கள் கவனத்துக்கு வந்த அநேக பிரச்னைகளுக்கு மூலமாக இருப்பது எதுவென்று அறிந்திருக்கிறீர்களா? பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக இருப்பது நமது கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை மறந்து, புதுமைக்குத் திரும்பியதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் என்பதை அறிந்திருக்கிறேன். தகவல் பரிமாற்றம் சாதனமாக இருந்த தொலைப்பேசியும் செல்போனும், எப்போது பொழுதுபோக்கு சாதனமாக மாறியதோ அப்போதே பல தொல்லைகள் எழுந்துவிட்டன. சமூகத்தில் பல குற்றங்களுக்கு, பிரச்னைகளுக்கு முக்கிய துணையாக இருப்பது இந்தச் செல்போன்தான்! முக்கியமாக கள்ளக்காதல், பள்ளிப்பருவத்தில் காதல்கொண்டு ஓடிபோதல், குடும்பப் பிரச்னைகளுக்கு இந்தச் செல்போன்தான் கருவியாக இருந்திருந்ததை அறிந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல; நேருக்கு நேரான உறவுகள் வருகை, விசாரிப்புகள் எல்லாம் இந்தச் செல்போனால் காணாமல் போய்விட்டது. எது உண்மையான பெண் சுதந்திரம், எது உண்மையான பெண் முன்னேற்றம்? என்று புரிந்து கொள்ளாமல் பெண்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கே தொல்லையாக முடிந்திருப்பதையும் அறிந்திருக்கிறேன். * இந்த நிகழ்ச்சி தந்த மறக்க முடியாத அனுபவம் பற்றி... நிறைய அனுபவம் கொடுத்திருக்கிறது. 40 படங்களில் நடித்த, ஒரு நல்ல படம் இயக்கியதில் கிடைக்காத பெருமை, புகழ், கவுரவம், விளம்பரம் எல்லாம் இந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ கொடுத்திருக்கிறது. என்னைப் பார்ப்பவர்கள் கை எடுத்து கும்பிடும் அளவுக்கு மரியாதையைக் தந்திருக்கிறது. இதில் எனக்கு பூர்ணமான சந்தோஷம்தான்! ஒரு முறை ஒரு ஆட்டோவில் வந்தேன். இறங்கியதும் பணம் கொடுத்தேன். அதை வாங்க மறுத்துவிட்டார் அந்த ஆட்டோகாரர். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ‘ என் மகள் இன்று நல்ல நிலைமைக்கு வர காரணம், உங்கள் நிகழ்ச்சியை பார்த்ததால்தான். என் மகள் பக்கத்து வீட்டு பையனுடன் பழகியிருக்கிறாள். ஒரு நாள் அவனுடன் ஓடிப்போக திட்டமிட்டிருக்கிறாள். அந்தச் சமயத்தில் உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்ததும், ஓடிப்போவதால் ஏற்படும் தனக்கும் குடும்பத்துக்கும் ஏற்படும் அவமானங்களை உணர்ந்து, திருந்தியிருக்கிறாள்’ என்று கண்ணீர் வழிய சொன்னார். இப்படி பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இன்னொரு மறக்க முடியாத விஷயம். என்னைப்பற்றிய அவதுõறு செய்தி. இந்நிகழ்ச்சி மூலம் என்னைப் பிடிக்காத யாரோ எவரோ காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாமல், என் கேரட்டர் மீது கை வைத்திருக்கிறார்கள். இந்த வயதில் என்னை ஒரு நடிகருடன் தொடர்ப்பு படுத்தி வதந்தீ கிளப்பியது என்னை வேதனைப்பட வைத்தது. உங்களில் அடுத்து இலக்கு? டிசம்பர் மாதத்தில் என் மூத்த மகளுக்குத் திருமணம். அது முடிந்ததும் மீண்டும் ஒரு படம் இயக்க இருக்கிறேன். மிகுந்த சமூகப் பொறுப்புடன், தேசிய அளவில் பேசக்கூடிய அளவுக்கு ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அந்த நல்ல செய்தியை விரைவில் உங்களை எல்லாம் அழைத்துச் சொல்லாமல் இருப்பேனா என்ன! - தேவராஜன்.

‘பி.எம். என்றால் பேசாத மந்திரி!’ - எஸ்.வி. சேகரின் கலகல காமெடி நாடக அனுபவங்கள்


(தினமலர் தீபாவளி (2.11.2013) சிறப்பு மலரில் இடம் பெற்ற எனது கட்டுரை) ‘பி.எம். என்றால் பேசாத மந்திரி!’ - எஸ்.வி. சேகரின் கலகல காமெடி நாடக அனுபவங்கள் நாடக சூப்பர் ஸ்டார் எஸ்.வி. சேகர். இவர் நடத்திய நாடகங்கள் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவை. இவர் நாடகத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. நிமிடத்துக்கு நிமிடம் பட்டாசு போல் நகைச்சுவை வெடி வெடித்து கொண்டே இருக்கும்.வாய் விட்டு சிரிக்க இவர் நாடகம் உத்திரவாதம் தரக்கூடியவை. “என்னோட நாடகத்தைப் பார்க்க வர்றவங்க 100 நிமிஷத்துல 200 தடவை சிரிக்கணும் இதுதான் என்னோட லட்சியம்!- என்று சொல்லும் எஸ்.வி. சேகர், அவர் நடத்தி, நடித்த நாடகங்களில், அவருக்கு ஏற்பட்ட நகைச்சுவை அனுபவங்களை வாசகர்களுக்குப் பட்டாசு கணக்காய் கொளுத்தி போட்டிருக்கிறார். அதை அப்படியே உங்களுக்குத் தருகிறோம்... அது ஒரு நாடகம். அந்த நாடகம் முடிந்ததும், ஒரு ரசிகர் எழுந்து, “சார் நீங்க கணக்குல ரொம்ப வீக்!”- என்றார். “ எதை வைச்சு சொல்றீங்கன்னு” கேட்டேன். “ நீங்க 100 நிமிஷத்துல 200 தடவை சிரிக்க வைப்பேன்னு சொல்லியிருந்தீங்க. ஆனா நான் எண்ணிப்பார்த்தேன 210 தடவை சிரிக்க வைச்சிருக்கீங்களே!” என்றார். உடனே நான், “ அப்ப இன்னொரு நுõறு ரூபாய் கொடுத்துடுங்கன்னு”ன்னு சொன்னேன். அந்த ரசிகரின் சிரிப்பு அடங்க பல நிமிடங்கள் ஆனது. இந்தச் சம்பவம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ந்தது. அன்னைக்கு மாலை 6.45 மணிக்கு ஆரம்பிக்க வேண்டி நாடகம் கொஞ்சம் தாமதமானது. ஒரு ரசிகர் எழுந்து கேட்டார். “ நீ எப்போதும் சொன்ன நேரத்துக்கு நாடகம் ஆரம்பிக்கிறதே இல்லை. மணி இப்போ 7.15 ” என்றார். “ அதுக்கெல்லாம் நீங்க வருத்தப்படாதீங்க சார்! நாங்க எவ்வளவு லேட்டா ஆரம்பிச்சாலும் கரெட் டைத்துக்கு நாடகத்தை முடிச்சுடுவோம்” என்றேன். அவர் வயிறு குலுங்க சிரித்ததைக் கேட்கவா வேணும்! இது ஒரு நாள் நடந்த சம்பவம். குழந்தைகள் படுத்திய களேபரம் அது. அன்னைக்கு நாடகம் ஆரம்பித்து நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. இந்த நாடகத்திற்கு கை குழந்தைகளுடன் தாய்மார்கள் சிலர் வந்திருக்காங்க போல. நாடகத்தில் முக்கியமான சீன் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆடியன்ஸ் பக்கத்தில் இருந்து ஒரு குழந்தை ‘வீல்’ன்னு பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டு. அதை பார்த்த மத்த குழந்தைகளும் அழ ஆரம்பிச்சுட்டு. அந்த நேரத்தில் ஹீரோயின் “ முதல்ல எங்க அப்பா, அம்மாவை சமாதானப்படுதுங்க. அப்பதான் நம் கல்யாணம் நடக்கும்” என்று ஹீரோவான என்னைப் பார்த்து ரொம்ப சீரியஸா டயலாக் பேசறங்க. உடனே நான், “முதல்ல இங்கே அழுவுற குழந்தைகளை சமாதானப்படுத்துறேன். அப்புறம் உங்க அம்மா அப்பாவை சமாதானப்படுத்துறேன். இப்ப இவங்களை சமாதானப்படுத்தலேன்னா நாம பேசறது யாருக்குமே கேட்காதுன்னு” டைமிங் வசனம் பேசினேன். இதைக் கேட்டு அரங்கேமே அதிர்ந்தது. குழந்தையின் அழுகையும் சட்டென்று நின்றது. இது ஒரு பயங்கர கலாய்ப்பு சம்பவம். எனக்கே ரசிகர்கள் அல்வா கொடுக்க முயற்சித்த சம்பவம். அந்த நாடகத்திற்கு சில இளைஞர் மது அருந்து விட்டு, போதை தலைக்கேறி நாடகம் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் வேண்டும் என்றே கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். ஒவ்வொரு காட்சியிலும் நான் வசனம் பேசுவதற்கு முன்பாக ‘ஹேக்கே பொக்க... ஹேக்கே’ என்று சிரித்து அடிக்கடி என்னை வெறுப்பேத்திக்கொண்டிருந்தனர். பொறுத்து பொறுத்துப் பார்த்த நான், “ நானும் உங்களை கவனச்சுட்டுதான் இருக்கேன். உங்களுக்கு ரொம்ப நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கு. நீங்க இந்த நாடகத்தின் ஷெட்டரை துõக்கறதுக்கு முன்பு இருந்தே சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க.இங்க வந்திருகிருவங்க எல்லாம் காசு கொடுத்து நாடகத்தை ரசிக்க வந்திருக்காங்க. நான் பேசின பின்னாடி நல்லா இருந்தா சிரிப்பாங்க. நீங்க நான் பேசுவதற்கு முன்னாலே ஹேக்கே ஹேக்கே என்று பயங்கரமாக சிரிக்கிறீங்க. இதனால் இங்க நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறவங்க என்னோட தீவிர ரசிகர்கள் சிலர் உங்க மேல கோபப்பட்டு, அடித்துவிட்டால் எனக்கு வருத்தமாயிடும். அது நடந்துவிடக்கூடாதுன்னு இறைவனை பிரார்த்தனை செய்துகிறேன்னு” சொல்லி முடித்தேன். உடனே ஆடியசில் சிலர் எழுந்து ‘அடே ய் அவனுங்கள வெளியே துõக்கி போடுங்கடான்’னு குரல் கொடுத்ததும் அந்த மது போதை ரசிகர்கள் வெளியேறி விட்டார்கள். இந்தச் சம்பவம் ரொம்ப கலாட்டாவாக ஆயிடுச்சி. அந்தச் சுவாரஸ்யத்தைச் சொல்றேன் கேட்டுக்குங்க. மற்ற நாடகங்களில் நல்லா நடிக்கிற ஒரு நடிகர் , அந்த நாடகத்தில் ரொம்ப சீரியஸாக கதையோடு ஒன்றி போய் நடித்து கொண்டிருந்தார். நகைச்சுவை நாடகம் என்று நினைத்து வந்த ரசிகர்கள் சுவாரஸ்யம் இல்லாததால் கூச்சல் போட்டனர். உடனே அவர், “ நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இடியட்ஸ், தைரியம் இருந்தால் என்னை மாதிரி நடிச்சுக்காட்டுங்க பார்ப்போம்” என்று கோபப்பட்டு சொல்லி விட்டார். அவர்சொல்லி முடித்த அடுத்த நிமிஷமே, ‘ ஸ்டேஜில் வந்து 50 பேர் நிற்கிறாங்க. நான் நடிக்கிறேன்! நான் நடிக்கிறேன்னு மைக்கைப் பிடிச்சுக்கிட்டு ‘கண்ணே மணியே...’ என்று டயலாக் பேசி, உங்களோட நல்லா நடிக்கிறேனான்னு கேட்கிறாங்க. இதுல என்ன வேடிக்கைனா ஆடியன்ஸ்களுக்கு சீரியஸ் கதையில் இடையில் இப்படியொரு சுவாரஸ்யம் நடக்க, அதுபிடிச்சுபோய் ஒன்மோர் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. உண்மையிலே அந்த நாடகம் ரொம்ப சீரியஸா போச்சு. ஆனால், கடைசியில இப்படி சிரிக்கற அளவு வந்துட்டு. அந்தச்சபாவில் ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்துல 1300 பேர் இருக்காங்க. நல்ல கூட்டம். நாடகம் ஆரம்பமானது. கடைசி ரோவில் இருந்து ‘கேட்கல! கேட்கல! கேட்கல!’ என்று ஒரே கூச்சல் போட்டனர். எனக்குத் திடுக்கிட்டது! பொதுவாக என் நாடகத்தில் நாலு லைட்டும் எட்டு மைக்கும் நல்லா இருக்கும். நல்லா டெஸ்ட் பண்ணிட்டுத்தான் நாடகமே ஆரம்பிப்பேன். அடிப்படையில் நான் ஒரு சவுண்ட் என்ஜினியர். எனக்குத்தெரியாதா, இவங்க வேணும் என்று கலாட்டா செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். “ கடைசி ரோவ் வரைக்கும் நாங்க பேசறது கேட்கணும்தான் ஆசைபடுவோம். இருந்தாலும் இப்பவே மைக்கை டெஸ்ட் பண்றேன்னு சொல்லி வால்யூமே கூட்டி. “இப்ப கேட்குதான்னு கேட்டேன்”. கோரசாக “கேட்கலைன்னு” கத்தினாங்க. மறுபடியும் புல்லா வால்யூமை கூட்டி வைத்து விட்டு கேட்டேன். மறுபடியும் அவங்க ‘கேட்கலை!’ கத்தினாங்க. மறுபடியும் வால்யூமை சுத்தமாக குறைத்துவிட்ட இப்ப கேட்குதான் கேட்டேன். கேட்கலைன்னு சொன்னாங்க. கேட்கலையான்னு கேட்ட கேள்விக்குத்தான் நீங்க கேட்கலைன்னு பதில் சொல்லி இருக்கிங்க. அப்ப கடைசி ரோவ் வரை நான் பேசறது கேட்கிறது. இங்க இருக்கிற ஸ்பீக்கரில் கேட்கிறதுல கோளாறு இருந்தா நான் சரிபண்ணிடுவேன். ஆனால் உங்க காதுல இருக்கிற ஸ்பீக்கர்ல கோளாறு இருந்தா உங்களை சாமிகிரி சித்தர்கிட்டதான் கூட்டிட்டுப்போகணும் சொன்னேன். அப்படி நான் சொன்னதும் ஆடியன்ஸ் எழுப்பிய கரவொலி சபா முழுவதும் நிறைந்தது. இப்ப, நான் சொல்றது எல்லாம் என் நாடகத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த டைமிங் காமெடிகள். அந்த நாடகம் நடக்கும் சமயம் நிதித்துறை மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், உள்துறை மந்திரியாக ஆன சமயம். அந்த நாடகத்தில் எனக்கு அரசியல்வாதி வேஷம். ஒரு பத்திரிகை நிருபர் கேட்கிறார். “சார், பைனான்ஸ் மினிஸ்டரை ஹோம் மினிஸ்ட்டராக மாத்திடாங்களே! அவரு தீவிரவாதத்தை ஒழித்து விடுவாரான்னு” கேட்டார். உடனே நான், “ கண்டிப்பார் ஒழிப்பார் சார்! ஷேர் மார்க்கெட்டையே ஒழித்தவர். இதை ஒழிக்க மாட்டாரான்னு ”கேட்டேன். இதைக் கேட்டதும் ஆடியன்ஸ் எழுந்து நின்னு கைதட்டினாங்க! இது ஒரு நாடகம். “சார் மோடியை இந்தியாக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே! கேட்கிறார் ஒருத்தர். “ரொம்ப சந்தோஷப்படாதே. அவர் லலித்மோடி!” ‘ஒருத்தர் என் குழந்தைக்கு நாலு வயசு ஆச்சு. இன்னும் பேச்சே வரல. போகாத கோயில் இல்ல; பார்க்காத டாக்டர் இல்ல. நீங்க தான் ஏதாவது செய்யணும்”னார். “இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க. 600 கோடி செலவு செய்து பல உலக நாடுகளுக்குப் போய்ட்டு வந்த நம் பிரதம மந்திரிக்கே பேச்சு வரல. பாருங்க உங்க பையன் வருங்காலத்துல பி.எம்.மா வருவான்”னு சொன்னேன். அவர் பி.எம். என்னான்னு கேட்டார். நான் பேசாத மந்திரின்னு சொõன்னேன். 2004ம் ஆண்டு பசுவதை தடுப்புச் சட்டம் வந்தது. அந்தச் சமயத்தில் வந்த டைமிங் காமெடி இது. அய்யா ஏன் பசுவதை தடுப்புச் சட்டத்தை எதிர்க்கிறான்னு கேட்டார். பசு மாடு அம்மான்னு கத்துதே அதனால்தான் ஐயாவுக்கு பிடிக்கலை! நான் சொல்வேன். அப்போ ஒரு சாமியார் பெண்கள் விவகாரத்தில் கைதான சமயம். “என்னால மாமியார்,பெண்டாட்டி தொல்லையை என்னால சமளிக்கவே முடியல. ஏதாவது ஆசிரமத்துல சாமியாரா சேர்ந்திடலாம்னு இருக்கேன்” என்பார். “இங்கே ரெண்டு பொம்பளைங்களேயே உன்னால சமாளிக்க முடியலை. ஆசிரமத்துல ஆயிரக்கணக்கான பொம்பளைகள எப்படி சமாளிப்பே?”ன்னு கேட்பேன். இது ஆந்திராவில் பெண்கள் விவகாரத்தில் அப்போது இருந்த கவர்னர் பதவி இழந்த சமயம். ‘ஐயோ, எனக்குத் தலைசுத்துங்க!’ ‘அதுக்கு நான் காரணமில்ல. நான் காரணமாயிருந்தா ஐதராப்பாத்துக்கு என்னை கவர்னர் ஆக்கியிருப்பாங்க.’ என்றேன். சபையில் சிரிப்பொலி அடங்கவே இல்லை. என்ற எஸ்.வி.சேகர், பேட்டி எடுத்த எங்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்பி வைத்தார். - தேவராஜன்.