வியாழன், 19 டிசம்பர், 2013


மனிதர்கள் மாயமாகும் மர்ம தீவு! -தேவராஜன் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் புதையலாக புதைந்து கிடக்கிறது. விளக்க முடியாத வியப்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் ரகசியங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது! அவற்றில் ஒன்று மனிதர்களை கொல்லும் மர்ம தீவு! இந்த மர்மத் தீவில் கண்ணுக்கு எட்டிய துõரம் வரை விரிந்த ஏரியும் குட்டி குட்டியாக தீவுகள் இருக்கின்றன. இத்தீவில் ஒன்று ‘என்வைட்டினெட்’. இங்கே காலடி வைக்கும்மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்மத் தீவு கென்யாவில் துர்கானா ஏரி அருகே உள்ளது. துர்கானா ஏரி ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தின் மையத்தில் கென்யாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ருடால்ப் ஏரி. நீண்டு குறுகலான வடிவத்தில் அமைந்திருக்கும் இதன் பரப்பளவு சுமார் 6475 சதுர கி.மீ. இந்த ஏரியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. கி.பி. 1888ம் ஆண்டு ஆஸ்திரிய ஆய்வாளர் கவுண்ட் பால் டெலிக்கி என்பவர் இந்த ஏரியைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரியாவின் இளவரசர் ரூடால்ப் என்பவரின் பெயரால் ரூடால்ப் ஏரி என வழங்கப்படுகிறது. இந்த ஏரியைச் சுற்றி எரிமலைகள் அமைந்துள்ளன. இந்த ஏரியின் நீர் வெளியேற இயலாத நிலை உள்ளது. முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட். கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரைஅனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர, விஞ்ஞானிகள் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை. இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான்அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர். பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா,அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்குவிடை கிடைக்கவில்லை. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை. ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது. பாக்ஸ் : கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்கள் கிடைத்துள்ளன.மிகப் பழமையான மனித உடல்களின் படிமங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு ’மனித குலத்தின் தொட்டில்’ என்ற பெயரே உண்டு. இங்கு கிடைத்துள்ள மனித உடல் படிமங்களை ஆராய்ந்ததில், அவை ஹேமோ சேப்பியன்ஸ் இனத்தின் படிமம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித இனத்தின் இன்னொரு வகையான உயிர் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனித வகையினரின் மூளை மிகப் பெரிதாக இருந்துள்ளதும், தலை நீண்டு இருந்ததும், அதே நேரத்தில் முகம் வட்ட வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக மிக பலமானதாகவும் இருந்ததும் தெரியவந்துள்ளது. மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ், ஹேமோ ஹபிலிஸ் ஆகியவை. இதிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ் என்ற இப்போதைய மனித இனம் உருவானது. ஹோமோ சேப்பியன் மனித இனமும் ஒரே காலகட்டத்தில் வசித்துள்ளனர் என்கிறார் மீவ் லீக்கி. ***************

ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகை! - தேவராஜன்


ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகை! - தேவராஜன் நாம் நேசித்த ஒருவருக்காக நினைவு சின்னம் எழுப்புவது வழக்கமான ஒன்றுதான்! அந்த நினைவுச்சின்னம் யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம். பாசமான அம்மாவுக்காக, அன்பான அப்பாவுக்காக, அண்ணன்- தம்பி, அக்காள்- தங்கை, நண்பருக்காக, காதலுக்காக என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்! ஆனால், பேய் அல்லது ஆவிகளுக்காக ஒரு பிரமாண்ட மாளிகையை யாராவது கட்டுவார்களா? கட்டியிருக்கிறார் ஒருவர்! ஆம் ஆச்சரியமாக இருக்கிறதா? இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? இந்த மாளிகையைப் பற்றி இன்னும் தெரிந்து கொண்டால் நீங்கள் வியப்பின் உச்சத்திற்கே செல்வீர்கள்! அமெரிக்காவில் கலிபோர்னியா நகரில் ஒரு பிரமாண்டமான மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையை ஒருமுறை பார்த்தவர்கள் அப்பாடா! இப்படி ஒரு மாளிகையா! என்பார்கள். இந்த மாளிகைக்குச் சொந்தக்காரர் ஒரு பெண். அந்தப் பெண்ணின் பெயர் சாரா. சாரா 1840 ல் பிறந்தவள். 1862ல் திருமணம். சாராவின் கணவர் பெயர் வின்செஸ்டர். இந்த தம்பதிக்கு இரு மகள்கள். சாரா பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவள். அவள் பெரிய பணக்காரி. 1866ல் தன்னுடைய குழந்தைகளைப் பறிக்கொடுத்தாள்! 1881 தன் கணவனையும் பறிக்கொடுத்தாள். இந்த அடுக்கடுக்கான சோக நிகழ்வுகளுக்குப் பிறகுதான் சாராவுக்கு எப்படியோ இந்த மாளிகையை கட்டிப் பார்க்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தன் வீட்டில் அதிகப்படியான ஒரு அறையைக் கட்டினாள் சாரா. இப்படி தொடர்ந்து 36 ஆண்டுகள் கட்டிக் கொண்டே இருந்தாள் அந்த மாளிகையை! சாரா எதிர்பாராமல் 1922ல் இறந்து விட்டாள்! அவள் இறந்த போது அவள் கட்டியிருந்த மாளிகையை பெரும் நிலப்பரப்பில் பரவி இருந்தது. மாளிகையில் 160 அறைகள் இருந்தன. சாரா வின்செஸ்டரின் வீட்டில் பல அறைகள் பயன்படுத்தப்படவே இல்லை. சில அறைகளின் அகலம் வெகுசில அங்குலங்களே இருந்தன. மாளிகையில் இருக்கும் மாடிப்படிகள் எங்கே போகிறதென்றே தெரியாது. சாளரங்கள் வெற்றுச் சுவரை நோக்கி இருந்தது. எட்டுமாடிக் கட்டடமான இதில் 3 லிப்டுகள். 2,000 கதவுகள். 10,000 ஜன்னல்கள். பல மைல்கள் நீளத்துக்கு ரகசியப் பாதாளப் பாதைகள், கூடங்கள். எப்பப்பா... இன்று வின்செஸ்டர் மாளிகை ஒரு மியூசியம் ஆகிவிட்டது. உலகின் விந்தையான இந்தமாளிகையைக் காண பலரும் வருகின்றனர். வின்செஸ்டர் மாளிகை உருவானது எப்படி? சாரா வின்செஸ்டர் ஒரு இளம்பெண். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தாள். அவள் ஒரு பங்களாவைக் கட்டி வந்தாள். இவளது குழந்தைகள் சிறுவயதிலேயே நோய்வாய்பட்டு இறந்துவிட்டன. அடுத்து அவர் கணவரும் இறந்து விட்டார். அவளை துன்பம் துரத்திக் கொண்டே இருந்தது. சோதனைமேல் சோதனை. இந்த மீளா துயரில் இருந்து மீள்வது எப்படி என்று யோசித்தாள். ஒருநாள் ஒரு பாதிரியாரைச் சந்தித்தாள். அவரிடம் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும் தான் இழந்ததையும் சொல்லி சொல்லி அழுதாள். இதை எல்லாம் கேட்ட அந்த பாதிரியார், “உனக்கு ஒரு சாபக்கேடு இருக்கிறது. உன் கணவர் போர்க்கருவிகள் செய்து கொடுத்ததால் இரண்டாம் உலகபோரில் ஏராளமானவர்கள் கொல்லபட்டனர். அவர்களின் ஆத்மாக்கள் உன் குடும்பத்தை பழி வாங்குகின்றன. அதுதான் உன் குழந்தைகள் இறக்கக் காரணம். அந்த ஆத்மாக்கள்தான் உன் மாளிகையில் வசிக்கின்றன. அந்த மாளிகையை ஆவிகளுக்கு வசதியாகக் கட்டு. மாளிகையை நீ கட்டிக் கொண்டே இருக்கணும். கட்டுவதை இடையில் நிறுத்தினால் நீ இறந்துபோவாய்” என்றார். இதைக் கேட்ட அதிர்ந்தவள் என்ன செய்வது சற்று குழம்பினாள். பிறகு, பாதிரியார் சொன்னதை முழுமையாக நம்பிய சாரா, தனது பங்களா முழுவதும் நுõற்றுக்கணக்கான ஜன்னல்கள், நுõற்றுக்கணக்கான கதவுகளும் வைத்துக் கட்டினாள். அப்படி கட்டிக்கொண்டிருக்கும் போது 1906ம் ஆண்டு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவும் ஆத்மாக்களின் கோபம் என்று எண்ணிய அவள் மேலும் ஜன்னல், கதவுகளின் எண்ணிக்கையை அதிகரித்தாள். மாளிகை முழுமையாக கட்டி முடிக்கும் முன்பே சாரா இறந்துவிட்டாள். இப்படி ஒரு கதை இந்த மாளிகை உருவான விதம் பற்றி கூறப்படுகிறது. இன்றைக்கும் இந்த மாளிகை சுற்றுலா பயணிகளை திகைக்கவும், ஆச்சரியபடவும் வைக்கும் மாளிகையாகத் திகழ்கிறது.

வெள்ளி, 13 டிசம்பர், 2013

அட்லாண்டிஸ் எனும் மாயாலோகம்! - தேவராஜன்


இன்றைய தேதி வரை அட்லாண்டிஸ் பற்றி ஆயிரக் கணக்கில் ஆய்வுகள் , தேடல்கள், புத்தகங்கள், திரைப்படங்கள், கதைகள் என்று கொண்டே இருக்கிறது. கிரீசின் அருகில் ,ஸ்பெயினின் அருகில் , இத்தாலியின் அருகில் என்று எத்தனையோ இடங்களில் அட்லாண்டிசைக் கண்டு பிடித்து விட்டதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இப்படி ஒரு நகரம் இந்த பூமியில் இருந்ததா, இல்லையா? இது ஒரு நல்ல எழுத்தாளனின் மிகப் பெரிய கற்பனையின் வெளிப்பாடா? போன்ற புதிர்களைச் சுமந்து கொண்டுதான் இருக்கிறது இந்த அட்லாண்டிஸ் என்னும் மாயாலோகம். அட்லாண்டிஸ் பற்றிக் கிடைத்த எழுதப்பட்ட ஆவணக் குறிப்பு என்று பார்த்தால் அது பிளாட்டோவின் தைமியஸ் மற்றும் க்ரிடியஸ் உரையாடல்கள் மட்டுமே. கி.மு 428- கி.மு 348 காலப்பகுதியில் கிரேக்கத்தில் வாழ்ந்த தத்துவ அறிஞரான சாக்ரடீசின் மாணவன்தான்பிளேட்டோ . இவர் தான் முதன் முதலில் அட்லாண்டிஸ் பற்றிக் குறிப்பிட்டார். பிளாட்டோ எழுதிய இந்த உரையாடல் சாக்ரடிஸ்,ஹெர்மோகிரெடஸ்,தைமியஸ் மற்றும் க்ரிடியஸ்ஸுக்கு நடுவில் நடக்கிறது. சாக்ரடிஸ் சிறந்த சமூக அமைப்புகள் பற்றிப் பேசியதற்கு பதிலளிக்கும் போது, தைமியஸும், க்ரிடியஸும் அப்படிப் பட்ட சமூகத்தின் ஒரு உண்மையான கதையை சாக்ரடிசுக்கு கூற முன்வருகின்றனர். அட்லாண்டிஸ் பற்றி சொன்னதாக ப்ளாட்டோவின் உரையாடலில் சாக்ரடிஸுக்கு இந்தக் கதையைச் சொல்லும் பேர்வழி குறிக்கப்படும் தைமியஸ் நீங்கலாக இந்த உரையாடலில் குறிப்பிடப் படும் அனைவரும் புராதன கிரேக்கத்தில் இருந்ததற்கான சரித்திரக் குறிப்புக்களும் ஆவணங்களும் இருந்திருக்கின்றன என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். மேலும், பல நூல்களில் இவர்களது வாழ்வும் செயல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.இதனால் இதை முழுவதும் கட்டுக்கதை என்றும் புறந்தள்ள முடியவில்லை என்று கருதுகின்றனர் சில ஆராய்சியாளர்கள். கதையில் சொல்லப்பட்டபடி ,அட்லாண்டிஸின் தலைநகர் மிகச்சிறந்த கட்டிடக்கலை மற்றும் பொறியியலுக்கு உதாரணம். பல அடுக்கு வளையமாக கட்டப்பட்ட மாளிகைகள் , பல கால்வாய்கள், அரங்கங்கள் என அனைத்தும் உண்டு அட்லாண்டிஸில் . நடுவில் உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கோயிலில் கடல் கடவுள் பொசைடான் இறக்கைகளுள்ள ஆறு குதிரைகள் கொண்ட ரதத்தைச் செலுத்துவது போன்ற பெரிய சிலை தங்கத்தில் வடிக்கப்பட்டிருந்தது. இங்கு வாழ்ந்த மக்கள் பெண்களை முதன்மைப் படுத்திய மிகவும் முன்னேறிய சமுதாயமாக இருந்தனர். இப்படிப் போகிறது (பிளாடோவின்) வருணனை. பலர் இதனை ஒரு கட்டுக்கதை என்றும் பிளாட்டோ தன் உரையாடல்களை சுவாரசியமாக்குவதற்காக உருவகப் படுத்தியதென்று சொல்கிறார்கள். மறு தரப்போ சீரியசாக அப்படி ஒரு இடம் இருந்ததென நம்புகிறது. பிளாட்டோ சொன்ன கதை ஒரு புறம் இருக்கட்டும். இன்னொரு கதையும் இருக்கிறது. அது அட்லாண்டிசின் புராணக்கதை. அந்தப்புராண கதையின்சுருக்கம். கிரேக்கக் கடல் கடவுளான பொசைடான் ஒரு தீவில் க்ளெய்டோ என்ற அழகான ஒரு பெண்ணைப் பார்த்து காதல் கொள்கிறார். இருவருக்கும் பத்து குழந்தைகள் பிறக்கின்றன. முதல் குழந்தை பெயர் அட்லஸ். பொசைடான் ஒரு சந்தேகப் பேர்வழி. க்ளெய்டோவைக் கூட நம்பாமல் அந்த இடத்தில் யாரும் நெருங்க முடியாதபடிக்கு கடல் அகழிகள் அமைத்து ஒரு தீவு நகரமாக்கி விடுகிறார். அதுவே அட்லஸின் பெயரால் அட்லாண்டிசாக ஆகி அட்லஸ் முதல் அனைவராலும் ஆளப் பட்டது. இது கடல் கன்னிகளால் காக்கப்படும் நகரமாக இருந்தது. அங்குள்ள உயர்ந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கடல் கடவுள் பொசைடான் கோயில் ஒரு உலக அதிசயம். மேகங்களே கோயிலுக்குள் உலவும் அளவு பிரம்மாண்டம். இப்படிப் போகிறது அட்லான்டிஸ் புராணக் கதை. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக சமீபத்தில் கூட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும், அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். இவ்வாராய்ச்சியை மேற்கொண்டவர் ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் . அட்லாண்டிஸ் இருந்ததற்கான சாத்தியப்பாடுகள் நிறைய இருந்தாலும் அதனை நிரூபிப்பதற்கான விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் கிடைக்காதது ஒரு குறை தான். என்றாலும் அந்தக் குறைக்காக அப்படி ஒரு தேசம் இல்லையென்றே கருதுவது ஏற்புடையதாகாது என்று புவிச்சரிதவியலாளர்கள் கருதுகின்றனர். **********

வியாழன், 5 டிசம்பர், 2013

இத்தாலியில் ஒரு பயங்கர அரங்கம்! - தேவராஜன்.


‘எல்லாச் சாலைகளும் ரோம் நோக்கி’ என்ற வழக்குச் சொல், ஒரு மனிதன் தான் இறப்பதற்குள் ஒரு முறையேனும் ரோம் நகரை பார்த்துவிட வேண்டும் என்ற அர்த்தத்தில்தான்! அப்படிப்பட்ட ரோம் நகரில் இருக்கும் ஒரு பயங்கரமான அரங்கத்தைத் தெரிந்துகொள்வோமா! ஒரு பிறந்த நாள் கேக்கை உள்பகுதியில் குடைந்து வைத்தது போல் இருக்கிறது சிதலமடைந்த அந்த அரங்கம். அதன் பெயர் கொலோசியம். இது ஒரு பயங்கரமான அரங்கம். இத்தாலியின் தலைநகர் ரோமில், கேலியன், எஸ்க்யூலன், பாலட்டைன் மலைகளுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கில் இந்த கொலோசியம் அமைந்துள்ளது. கொலோசியம் என்பது, தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். இது நீள்வட்ட வடிவமான கட்டிடம். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்டம் வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை அம்ஃபிதியேட்டர் எனப்பட்டது. இலத்தீன் மொழியில் வட்டவடிவ அரங்கம் என்று பொருள். அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 மக்கள் இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள். கி.பி 72 ம் ஆண்டில், வெஸ்பாசியன் என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. 217 ம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டு புதுப்பிக்கப்பட்டது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ம் ஆண்டுவரை பயன்பட்டது. 847 மற்றும் 1349 ஆகிய ஆண்டுகளில் புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. நீண்ட காலமாக ஆம்ஃபி தியேட்டர் என்றே அழைக்கப்பட்டு வந்த அந்தரங்கினை பெடெ என்ற வரலாற்று ஆய்வாளர் கொலோசியம் என்று பெயர் மாற்றினார். நீரோ பூங்காவுக்கு அருகில் மிகப்பிரம்மாண்டமாக அமைந்திருந்த நீரோவின் சிலையை ஒட்டி அந்த அரங்கு அமைக்கப்பட்டதால் அந்த பெயர் வந்தது. ஆறு ஏக்கர் நில பரப்பில் 615 அடி நீளமும், 510 அடி அகலமும் உடைய அந்த அரங்கின் சுற்றுச்சுவர் 157 அடி உயரம் கொண்டது. மொத்தம் ஒரு லட்சம் க்யுபிக் மீட்டர் ட்ராவெல்டன் கற்கள் அருகிலிருந்த டிவோலி மலைப்பிரதேசத்திலிருந்து 2,40,000 முறை வண்டிகளில் எடுத்துவரப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கட்டுமானப் பணிகளில் 40 ஆயிரம் யூத அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். இத்தனை சிறப்புகள் கொண்ட கொலோசியம், கட்டப்பட்டதற்கான காரணம் அத்தனை உன்னதமானது இல்லை. மனித மனத்தின் வக்கிர எண்ணங்களுக்கு வடிகாலாய் அந்த காலத்தில் அரசுகளை ஆண்ட மன்னர்களே பல அநீதியான காரியங்களை சட்டப்பூர்வமாக செய்திருக்கின்றனர். அதற்கு உதாரண சாட்சியாக இருப்பதுதான் அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கொலோசியம். கொலோசியம் அரங்குகளில் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளோடு மோதி அவற்றைக் கொல்லும் விளையாட்டுக்களும் உண்டு. டைட்டஸ் காலத்தில் அரங்கின் துவக்க விழா நிகழ்ச்சியின்போது 9000 விலங்குகள் கொல்லப்பட்டிருக்கின்றன. கிறுஸ்துவ சமயம் வேகமாக இத்தாலியில் பரவத்தொடங்கிய பின் க்ளேடியேட்டர் விளையாட்டுக்கள் தடை செய்யப்பட்டு 6ம் நூற்றாண்டில் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. வரலாற்றின் பக்கங்களை கொலோசியம் பயங்கரத்தை நிரப்பினாலும், இத்தாலி நாடு அதன் பயங்கரத்தை அழித்து, அதனை ரோமன் -கிரேக்க கட்டடக்கலைக்கு உதாரணமாக சொல்லும்படி மாற்றிவருகிறது. பெட்டிச்செய்திகள்: இத்தாலிய அரசு 1948 ம் ஆண்டு தனது நாட்டில் மரணதண்டனையை முற்றிலுமாக ஒழித்து சட்டம் இயற்றியது. அதன் அடையாளமாக கொலோசியத்தை அலங்கரித்து பிரகாசிக்கச்செய்து உலகுக்கு அறிவித்தது. மரணதண்டனைக்கு எதிரான குரலை பிரதிபலிக்கும் சின்னமாக கொலோசியத்தை அப்பொழுது பிரகடனப்படுத்தியது. அன்றிலிருந்து எந்த நாட்டில் மரணதண்டனையை ஒழித்து சட்டம் இயற்றினாலும், கொலோசியம் பொன்விளக்குகளால் மின்னும். ஒரு காலத்தில் மரண ஓலங்களால் நிரம்பிய கொலோசியம் இன்று மரணதண்டனைக்கு எதிரான அடையாளச்சின்னமாக கருதப்படுவது விசித்திரமான வரலாற்று முரண்தானே! (20.12,13) ***

செவ்வாய், 3 டிசம்பர், 2013

பாபிலோன் தொங்கும் தோட்டம் சொல்லும் கதை - தேவராஜன்


பழங்கால சிறந்த நகரங்களுள் ஒன்று பாபிலோன். இதுபுகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனை ஹமுராபி என்பவர் சிறப்பாக ஆட்சி செய்தார். ஹமுராபி ஆட்சிக்குப் பிறகு இவரது தளபதி நெபோபலாசர் என்பவர் மன்னரானார். அதன் பிறகு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவர் ஆட்சி காலத்தில் தான் பாபிலோனில் தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டது. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர் நெபுகட்நேசர். இத்தோட்டத்தினை அமைத்ததற்குக் காரணமான ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை. அழகு ராணி. இவளை நெபுகட் நேசர் திருமணம் செய்தார். திருமணத்திற்குப் பிறகு பாபிலோனில் வசிக்கும் போது, அந்த நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே, எப்போதும் வருத்தமாகவே இருந்தார். இதனைக் கவனித்த மன்னன் , ராணியிடம் காரணம் கேட்டார். அதற்கு, ராணி அமிடிஸ், “என் அன்புக்குரிய மன்னா! என் மனதில் இருப்பதைச் சொல்கிறேன். நான் மலைநாட்டு இளவரசி. என் நாட்டில் உயர்ந்த குன்றுகளும், மலைகளும், காடுகளும், நறுமண மலர்களும், கொடிகளும் அழகழகாய், வண்ண வண்ணமாய் கண்ணையும் மனதையும் நிறைத்துக் கொண்டிருக்கும். அப்படி ஒரு சூழ்நிலையில், இடத்தில் நான் வளர்ந்ததால் என் மனம் இயற்கையையே நாடுகிறது. இங்குள்ள பரந்த வயல்வெளிகள், வெற்றிடங்களைப் பார்த்துப் பார்த்து என் மனம் சோர்வடைகிறது” என்றார் சோகமாக. இதனைக் கேட்ட மன்னன், “ அவ்வளவு தானே! இனி கவலை வேண்டாம். உன் ஆசைப்படியே நீ இருக்கும் இடம் அமையும்” என்றார். அரசவையினைக் கூட்டினார். பாபிலோனில் மலைக் குன்றுகளை உண்டாக்க முடியுமா என விவாதித்தார். பலரும் பலவிதமான யோசனைகளைக் கூறினர். எல்லாருடைய ஆலோசனைகளைக் கேட்ட மன்னர், செயலில் ஈடுபட்டார். அரண்மனையின் ஒவ்வொரு அடுக்கின் மேலும் சற்று உட்புறமாக பல மாடிகளைக் கொண்ட சுவர் எழுப்பத் திட்டமிடப்பட்டது. 56 மைல் நீளத்தில், 80- அடி அகலத்தில், 320 அடி உயரத்தில் அமைத்து, இரு சுவர்களுக்குமிடையில் ஏராளமான மண் கொட்டப்பட்டது. சுவரின் உள், வெளிப்புறத்தில் மிக மெல்லிய ஓட்டைகளுடன் கூடிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்டன. இத்தகடு, உட்புற மண் சரிந்து விழுந்துவிடாதபடி மிக கவனமாகப் பலப்படுத்தப்பட்டது. அதற்குமேல் சற்று உட்புறம் தள்ளி இரண்டாவது மாடச்சுவர் கட்டப்பட்டது. இடைப்பகுதியில் மண்போட்டு நிரப்பி அலுமினியத் தகடுகள் பதிக்கப்பட்டன. இப்படியே 8 மாடங்கள் ஒன்றன்மீது ஒன்றாகக் கட்டப்பட்டன. இந்தக் கட்டடச் சுவர்களின் இடையில், பழம் தரும் மரங்கள், செடார், பைன், பர்ச், புரூஸ் போன்ற மரங்களும், பூத்துக் குலுங்கும் வண்ண வண்ண மலர்ச் செடிகளும், கொடிகளும் அமைக்கப்பட்டன. படர்ந்த கொடிகள் மேல் மாடத்திலிருந்து கீழ் மாடத்திற்குப் படர்ந்து ஒரு தொங்கும் தோட்டம்போல் காட்சியளித்தது. பூத்துக் குலுங்கிய வண்ண மலர்கள் பார்ப்பவர்களின் கண்ணிற்கும் மனதிற்கும் விருந்தளித்து நின்றன. திராட்சைக் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டு, பழங்கள் பழுத்துத் தொங்கின. உச்சி மாடத்தில் விருந்தினர் மாளிகை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாடத்திற்கும் செல்ல, உட்புறமும் வெளிப்புறமும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அலுமினியத் தகடுகளிலிருந்து உட்புறத்திற்குத் தண்ணீர் கசிந்துவிடாதபடி கவனமாக வெளியேற்றப்பட்டது. ஒவ்வொரு மாடத்திலும் 4 வாயில்கள் இருந்தன. எட்டாவது திறந்த மாடத்திலும் மாடவெளியிலும் நந்தவனம் அமைக்கப்பட்டிருந்தது. மலர்ச் செடிகளிலும் பழ மரங்களிலும் பலவிதமான பறவைகள் சிறகடித்துப் பறந்தன; வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட்டன. பறவைகளின் இனிய ஓசை மனதிற்கு இதமளித்தது. செயற்கையான முறையில் ஓர் இயற்கைக் காட்சி அழகாக உருவாக்கப்பட்டது. யூப்ரடீஸ் நதியிலிருந்து நீரை மேலே ஏற்றி, தொங்கு தோட்டத்திற்கு நீர் பாய்ச்சினர். இவ்வளவு பெரிய அளவிற்கு மண்ணை ஏற்றினாலும், ஒவ்வொரு மாடமும் சரியாமல் திட்டமிட்டுக் கட்டிய பணி, அக்கால அறிஞர்களின், பொறியியல் வல்லுநர்களின் திறமையை நினைத்துப் பிரமிக்க வைத்துள்ளது. வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் ஹெரடோட்டஸ் எழுதிய தொங்கு தோட்டத்தின் வருணனை மிகவும் புகழ் பெற்றதாகும். கி.மு. 400 ல் பெரோசஸ் என்பவர்தான் முதன் முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம்பற்றி எழுதியதாக கூறப்படுகிறது. இது கி.மு. 600 ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. இப்போது இருக்கும் ஈராக்கின் பாக்தாத் நகருக்குத் தெற்கே முப்பது மைல்கள் துõரத்தில் யூப்ரட்டீஸ் நதிக்கரையோரத்தில் அமைக்கப்பட்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தால் இந்தப் பாபிலோனின் தொங்கும் தோட்டம் அழிக்கப்பட்டுவிட்டது.

இன்கா மக்களின் தொலைந்த நகரம் - தேவராஜன்

இன்கா மக்களின் தொலைந்த நகரம் - தேவராஜன் பெரு நாட்டில் இயற்கையின் அழகின் நடுவே அமைந்திருக்கும் இந்த மச்சு பிச்சு இப்போது உலக அதிசயங்களில் ஒன்று எனும் பெருமையைப் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகர் இன்கா நாகரீக மக்களின் கட்டடக்கலைக்குச் சான்றாகவும், அவர்களுடைய ரசனைக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகிறது. உருபாமா பள்ளத்தாக்கின் அருகே அடர் காட்டில், அருவிகளின் ஆரவாரத்தில், அழகின் உச்சத்தில் இந்த நகர் அமைந்துள்ளது. கஸ்கோ நகரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் இது அமைந்துள்ளது. பளபளப்பாக்கப்பட்ட உலர் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது மச்சு பிச்சு அரண்மனை. இத்தனை ஆயிரக்கணக்கான கற்களை எப்படி இந்த மலை உச்சிக்கு கொண்டு வந்தார்கள் என்பது வியப்பின் உச்சம்! இன்கா நகரின் கதை இந்த நகர் இன்கா மன்னனின் கோட்டையாக இருந்திருக்கலாம் எனவும், ஆயிரம் பேர் இந்த அரண்மனை நகரில் வாழ்ந்திருக்கலாம் எனவும் கருதுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த நகரின் வரலாற்றுக் கதை சிலிர்ப்பும், வியப்பும், அதிர்ச்சியும், சோகமும் கலந்து கிடக்கிறது. பெரு நாட்டின் மீது ஸ்பானிஷ் படைகள் தாக்குதல் நடத்தியதால் தப்பி ஓடிய பெரு நாட்டு இன்கா மக்கள், கஸ்கா நகரை விட்டு அடர் காடுகள், பள்ளத்தாக்குகளில் தஞ்சம் புகுந்தனர். கஸ்கா ஸ்பானியர்களின் ஆக்கிரமிப்புக்குள் போனது. காட்டுக்குள் தங்கிய இன்கா மக்களை ஸ்பானிஷ் படை நெருங்க முடியாமல் விலகி விட்டது. ஆனால் கானகத்தில் நுழைந்த இன்கா மக்கள் தங்களுக்கென ஒரு பெரிய நகரை காட்டுக்குள்ளேயே நிர்மாணித்தனர். வில்கபாம்பா என அவர்கள் அந்த நகருக்குப் பெயரிட்டனர். நகரை நிர்மாணித்த இன்கா மக்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்த ஸ்பானியர்களுக்கு சண்டை, போர் என குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஸ்பானியர்கள் திரும்பித் தாக்கிக் கொண்டே இருந்தார்கள். 36 ஆண்டுகள் இந்த சண்டை விட்டு விட்டு நடந்தது. ஸ்பானியர்கள் கடைசியில் 1572ல் மாபெரும் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தினார்கள். வயது, பாலியல் வேறுபாடு ஏதுமின்றி கண்ணில் பட்ட இன்கா மக்களைபடுகொலை செய்தனர். இன்கா மக்களின் கடைசி மன்னன் துப்பாக் அமாரு சிறை பிடிக்கப்பட்டான். அவனை கஸ்கோ நகருக்குக் கொண்டு வந்து பிளாசா டி ஆர்மாஸ் என்னுமிடத்தில் வைத்து படுகொலை செய்தனர் ஸ்பானியர்கள். என்று சில ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பெரு நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த 1450ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான குஸ்கோ நகரில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது. இதன் மூன்று புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா சக்கரவர்த்தியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது. கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? ஹிராம் பிங்காம் எனும் யேல் பல்கலைக்கழக தத்துவ ஆசிரியருக்கு ஆர்வம் வாய்க்காமல் போயிருந்தால் இந்த மச்சு பிச்சு எப்போது உலகிற்கு அறிமுகமாயிருக்கும் என்று சொல்ல முடியாது. இன்கா மக்களின் கதைகளிலும், அவர்களுடைய கலாச்சார வாழ்க்கை முறையிலும் ஆர்வம் கொண்ட ஹிராம் பிங்காம் 1911ம் ஆண்டு தன்னுடன் சிலரையும் அழைத்துக் கொண்டு கஸ்கோ வை விட்டு காட்டுக்குள் பயணமானார் தொலைந்து போன நகரைக் கண்டுபிடிக்க. இவர்கள் பயணம் துவங்கிய சில நாட்களிலேயே இன்கா மக்களின் நகர் இடிபாடுகள் ஒன்றைக் கண்டனர் அதற்கு பட்டாலக்டா என்று பெயரிட்டனர். அற்புதமாய் கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு நகரே இருந்தது. இதுவே இன்றைய மச்சு பிச்சு ! “இன்கா மக்களின் தொலைந்த நகரம்” என அதை அவர் அழைத்தார். வரலாற்று சின்னம் 1913ம் ஆண்டு மச்சு பிச்சுவுக்கு ஒரு ரயில் பாதை அமைக்கும் பணி ஆரம்பமானது. அது படிப்படியாக நடந்து 35 ஆண்டுகளுக்குப் பின் மச்சு பிச்சுவைச் சென்றடைந்தது. 1981ம் ஆண்டு மச்சு பிச்சு இருக்கும் இடத்தையும் சேர்த்து 325 சதுர கிலோமீட்டர்களை பெரு அரசு வரலாற்று இடமாக அறிவித்தது. யுனஸ்கோவின் அங்கீகாரம் இரண்டு ஆண்டுகளில் கிடைத்தது. 1983ம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 2007ம் ஆண்டில் இது புதிய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகவும் அறிவிக்கப்பட்டது. எத்தனையோ ஆண்டுகால கடின உழைப்பினால் இன்கா மக்களால் உருவான வில்காபாம்பா நகர், சில பத்து ஆண்டுகளிலேயே காலி செய்யப்பட வேண்டுமெனில் ஏதோ ஓர் மிகவும் வலுவான காரணம் இருந்தே ஆக வேண்டும். இடிபாடுகளுடன், சிதைந்து, பாழடைந்து கானகத்தின் சிதைந்த ஓவியமாய், ஓர் இனம் அழிந்த வரலாற்றின் சோகத்தை சொல்லிக்கொண்டிருக்கிறது இன்கா மக்களின் தொலைந்த நகரம்.

வெள்ளி, 8 நவம்பர், 2013

அமலி( அருள்மொழி)சொல்லாமல் போனதென்ன?


அமலி( அருள்மொழி)சொல்லாமல் போனதென்ன? 8.11.13 சாலை நடந்த கோர விபத்தில் என் ப்ரியமான தோழி அமலி என்கிற அருள்மொழியும் அவரது கணவரும் பலியானார்கள் என்ற செய்தி கேட்டதும் துடிதுடித்துப்போனேன்! திருகண்ணபுரம் என்றால் நினைவுக்கு வரும் நினைவுகளில் ஒன்று அமலியின் நினைவு. அந்த நினைப்பே இப்படி மரணித்துவிடும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. கடந்த 10 தினங்களுக்கு முன்பு கூட பேஸ்புக்கில் என் மகனின் புகைப்படத்தைப் பார்த்து விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கு மறுமொழி கூட நான் இன்னும் இடவில்லை! அதற்குள் இப்படி நடந்து விட்டதே! அமலியைப் பற்றி எழுத ஆயிரம் உண்டு. எழுதி என்ன செய்ய? அவர் படிக்கவா போகிறார்? என்னுடைய பிரார்த்தனை எல்லாம் அமலியின் ஆன்மா சாந்தியடைய வேண்டும். என்றென்றும் இறைவன் திருபாதத்தில் இளைப்பாற வேண்டும் என்பதே!

திங்கள், 4 நவம்பர், 2013

பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? - தேவராஜன்.


பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது எப்படி? - தேவராஜன். நாளைக்குத் தீபாவளி பண்டிகை! புத்தாடை, பட்டாசு, பலகாரம் என வீடே அமர்க்களப்படும். தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு ஜாலியான பகுதி பட்டாசு வெடித்து மகிழ்வதுதானே! இப்படி ஜாலியாக பட்டாசு வெடிக்கும் போது, காயமடையாமல் பாதுகாப்பாக இருப்பதற்கு, என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக் கூடாது? என்பதற்கான ஆலோசனைகள் உங்களுக்குக்காக தரப்பட்டுள்ளது. படித்து தீபாவளியை தித்திக்க தித்திக்க கொண்டாடுங்க குட்டீஸ்! பாதுகாப்பாக வெடி வெடிப்பது எப்படி? நெருக்கமான வீடுகள், மக்கள் அடர்த்தி மிக்க இடங்களில் இருந்தால், அங்கே பட்டாசு வெடிப்பதைத் தவிருங்கள். பட்டாசு வெடிக்கும் இடம் திறந்தவெளியாக இருக்கட்டும். வெடிகளை வெடிக்கும் முன் ஒரு வாளி தண்ணீர், மணல் போன்ற தீயணைப்புப் பொருட்களை அருகில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் குழந்தைகள் என்பதால், அருகில் கட்டாயம் பெரியவர்கள் இருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணி அணிந்து இருப்பதும் அணிந்திருக்கும் உடை பருத்தி ஆடைகளாக இருப்பதும் முக்கியம். உங்கள் வீரத்தைக் காட்ட கையில் பிடித்தவாறு பட்டாசுகளைக் கொளுத்தாதீர்கள். கம்பி மத்தாப்புக்களைக் கொளுத்தி முடித்ததும் அந்தக் கம்பிகளைத் தண்ணீரில் போட வேண்டும். தீக்காயங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது? உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டாலோ அல்லது கண்களில் பட்டாசுத் துகள்கள் பட்டாலோ உடனே தண்ணீரில் தொடர்ந்து கழுவ வேண்டும். எரிச்சல் குறையும் வரை கழுவிவிட்டு, உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். உடலில் தீ பட்ட இடத்தில் துணிகள் ஒட்டிக்கொண்டு இருந்தால் உடனே அதை வேகமாக கழற்றக் கூடாது. பட்டாசு வெடிக்கும்போது சிறிய அளவில் புண் ஏற்பட்டுவிட்டால், அந்த இடத்தில் வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைத் தடவினாலே போதும். அவசர உதவிக்கு 108 எண்ணுக்குச் சுழற்றுங்கள்! எச்சரிக்கையை கவனிங்க! ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பைக் கொளுத்தும் முன்பு செய்ய வேண்டிய முதல் காரியம், அதன் அட்டைப் பெட்டியில் குறிப்பிட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அந்த பட்டாசினை பயன்படுத்தும் முறைகளைப் படித்து, அதன்படி பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு பட்டாசையும் பயன்படுத்தும் முறைகள் வெவ்வேறாக இருக்கலாம். அதனைத் தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்தினால் கண் உட்பட எந்த உடல் உறுப்பும் பாதிக்கப்படலாம். இங்கெல்லாம் வேண்டாம்! தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க்குகள், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ள அல்லது தயாரிக்கப்படும் இடங்களைத் தவிர்த்து, குறிப்பாக விளையாட்டு மைதானங்கள் போன்ற திறந்தவெளிகளில் பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே நல்லது. இதெல்லாம் கூடாது! ஒரேநேரத்தில் ஒரு பட்டாசை மட்டுமே கொளுத்த வேண்டும். த்ரில்லிங்க்குக்காக வரிசையாக பல பட்டாசுகளைக் கொளுத்தினால் அது விபத்துக்குக் காரணமாகலாம். நீங்கள் பற்ற வைத்த பட்டாசு வெடிக்க தாமதமானல், ஒருபோதும் அதனை கையில் எடுப்பதற்கோ அல்லது மீண்டும் உடனே பற்ற வைப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது. அந்த பட்டாசு இருமடங்கு வெடித்து விபத்தினை உருவாக்கலாம். மிக அதிகமான ஒளியையும், மிக அதிகமான வெளிச்சத்தையும் வெளிப்படுத்தும் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பயன்படுத்தக்கடாது. இப்படி செய்யுங்க! நீங்கள் உபயோகித்த பட்டாசுகளை ஒரு பக்கெட்டில் போடு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து சிறிது நேரம் கழித்து குப்பைத்தொட்டியில் அப்புறப்படுத்தலாம். இப்படிச் செய்யாமல் அப்படியே குப்பைத் தொட்டியில் போடுவதால் பொது விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு பட்டாசை பற்றவைக்கும்போது கை மற்றும் உடம்பின் எந்த பாகமும் பட்டாசின் அருகில் இருப்பது நல்லது அல்ல. நீங்கள் பட்டாசை பற்றவைக்கும்போது உங்கள் கண்ணை கவசமாக பாதுகாக்கும் விதமாக பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. ஒரு பட்டாசு அல்லது மத்தாப்பினைக் கொளுத்துவதற்கு நீண்ட ஊதுபத்தி அல்லது நீண்ட கம்பி மத்தாபினைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதை எல்லாம் தவிர்க்கலாமே! வெடிக்காத பட்டாசுகளையும், வெடிகளையும் ஒன்றாக சேர்த்து வெடிக்க வேண்டாம். பட்டாசுகளை கொளுத்தி மற்றவர்கள் மீதோ, தெருவிலோ வீசி விளையாடுவதை தவிர்க்க வேண்டும். வாகனங்கள் அருகே அல்லது வாகனங்கள் சாலையில் வரும்போது வெடிகளை கொளுத்திப்போடுவதையும் தவிர்க்க வேண்டும். அதனால், பெரிய விபத்துகளை தவிர்க்கலாம். தரைச் சக்கரம் போன்றவற்றை வீட்டின் உள்ளே விடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துகளையும் வீட்டின் தரை பாழாவதையும் தவிர்க்கலாம். குடடீஸ்க்கு தீபாவளி வாழ்த்துகள்! பாதுகாப்பான தீபாவளியே அனைரும் விரும்புவது! பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுங்கள்! குட்டீஸ் அனைவருக்கும் ஒளிமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்!

எல்லாம் கொடுத்தது... சொல்வதெல்லாம் உண்மை - லட்சுமி ராமகிருஷ்ணன்.


( தினமலர் தீபாவளி (2.11.2013) சிறப்பு மலரில் இடம் பெற்ற எனது பேட்டி கட்டுரை) எல்லாம் கொடுத்தது... சொல்வதெல்லாம் உண்மை - லட்சுமி ராமகிருஷ்ணன். தமிழ் சினிமாவின் அழகான அம்மா, சினிமா இயக்குநர், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளினி என பன்முகம் கொண்டவர் லட்சுமி ராமகிருஷ்ணன். 17 வயதில் திருமணம் முடிந்து, 3 பெண் குழந்தைகளின் அம்மாவாக இருக்கிறார். சினிமாவில்அம்மாவாக நடித்துக் கொண்டிருந்த லட்சுமிராமகிருஷ்ணன், ஆரோகணம் படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். இப்போது ஜீதமிழ் டி.வி.யில்‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிறார். * சினிமாவுக்கு வந்தது எப்படி? சிறுவயது முதல் எனக்குள் ஒரு தேடல் இருந்தது. அது என்னதென்று புரியாமல் இருந்தேன். என் தேடல் பற்றி புரிவதற்குள் 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது. பிறகு, கணவன், குழந்தைகள், குடும்பம் என்று காலம் கடந்தது. துபாயில் மஸ்கட் நகரத்தில் ஈவன்ட் மேனேஜ்மெண்ட்டாக 12 ஆண்டுகள் இருந்தேன். 2006ல் சென்னை வந்தேன். எனக்கு சினிமாத்துறையில் ஈடுபடவேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. நான் சினிமாத்துறைக்குச் செல்ல வீட்டில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். என் லட்சியம் டைரக்ஷன் தான். அதை அடைய சினிமாத்துறையினர் பரிச்சயம் வேண்டும் என்பதற்காகவே நடிக்கிறேன் என்றேன். சம்மதித்தனர். அதன்படி 2006ல் மலையாளத்தில் முதலில் நடித்தேன். அதன்பிறகு தமிழில் பல படங்கள் நடித்தேன். தொடர்ந்து 40 படங்கள் வரை நடித்து கொண்டிருந்தேன். திரையுலகினர் பலரது நட்பு கிடைத்தது. தொடர்புகளை வளர்த்துக்கொண்டேன். ஐந்து ஆண்டுகள் ஓடியபிறகு, இதுதான் தக்க தருணம் என்று முப்பது லட்சரூபாயில் ‘ஆரோகணம்’ படம் திட்டமிடப் பட்டது. முதல் இலக்கு, தயாரிப்பாளரைக் காப்பாற்றுவது. இந்த எண்ணத்தில் படம் தொடங்கப்பட்டது. முப்பது லட்ச ரூபாய்க்கு மேல் செலவானால் நான் என் கைக்காசிலிருந்து செலவழிப்பேன் என்றேன். இது என்னிடம் பணம் உள்ளது என்று காட்ட அல்ல. அதை விட அதிகம் செலவழிக்க மாட்டேன் என்று காட்டத்தான், அப்படிச் சொன்னேன். சொன்னபடியே முடித்து விட்டேன். படம் ஆரம்பித்தது முதல் ஏழெட்டு மாதங்கள் குடும்பத்தை மறந்து உழைத்தேன். முப்பது லட்சத்தில் படத்தை முடித்தேன். யாருக்கும் இழப்பு தராத படம் ‘ஆரோகணம்’. ¬*முதல் படித்தின் அனுபவம் எப்படி இருந்தது? நல்ல அனுபவம் கொடுத்தது. கே.பி., பாரதிராஜா, விஜய் போன்ற இயக்குனர்கள் பாராட்டினார்கள். குறிப்பாக பாரதிராஜா பாராட்டியது மறக்க முடியாதது. “இந்தப் படத்தை இதுவரை நான் பார்க்காமல் இருந்ததற்கு வருந்துகிறேன். சத்யஜித்ரே , அடூர் கோபாலகிருஷ்ணன் போன்று வாழ்க்கையை அப்படியே படமெடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் பணம் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் எனது சிந்தனை திசைமாறி விட்டது. இந்தப் படத்தை இவ்வளவு நேர்த்தியாக , வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே அதே நேரத்தில் மிகவும் சுவராஸ்யமாக லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அவரது முதல் படம் என்று சொல்கிறார் என்னால் நம்பவே முடியவில்லை..” என்று வாழ்த்தினார் பாரதிராஜா. *சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பற்றி... நான் ஆரோகணம் படம் இயக்கிக்கொண்டிருந்தபோது அந்த வாய்ப்பு வந்தது. நேரமின்மையால் அதை மறுத்து விட்டேன். அரோகணம் இயக்கி முடித்தப்பிறகு மீண்டும் அந்த வாய்ப்பு வந்தது. யோசித்தேன். வீடுவரை தேடி வந்த வாய்ப்பை ஏன் மறுக்க வேண்டும்? வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன். வீட்டில் எல்லாரும் தடுத்தனர். டி.வி. நிகழ்ச்சி எல்லாம் உன்னால் சாமார்த்தியமாக செய்ய முடியாது. அது ரொம்ப ரிஸ்க் என்றனர். சவாலாக எடுத்துக்கொண்டேன். இப்போ இந்த நிகழ்ச்சி 200வது எபிசோட் வரை கடந்து விட்டது. * இந்த நிகழ்ச்சிக்கு அதிகமாக எந்தப் பிரச்னைகளுடன் வருகிறார்கள்? பெண்கள்தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வருகிறார்கள். அதிலும் கூலி தொழிலாளர்கள் குடும்பத்தில்தான் அதிக பி ரச்னைகள் இருக்கிறது. கள்ளக்காதல், சமூக மரபுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டு அதன் விளைவாக பயங்கர விமர்சனங்கள் கண்டவர்கள், பெண் கொடுமை, மாமியார் மருமகள் பிரச்னை இப்படி பல கோணங்களில் பல உறவு சிக்கல், தொல்லைகளுடன் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சி வழியாக பெண்களை கொடுமைப்படுத்தும் ஆணாதிக்கம் எல்லா மட்டத்திலும் இருக்கிறது. * அடுத்தவர்களுடைய அந்தரங்கத்தை இப்படி மேடை ஏற்றி விவாதிப்பது நியாயமா? தப்புதான்! இருந்தாலும், அவர்களுடைய அந்தரங்கத்தில் மூக்கை நுழைத்து, அவர்களுக்குத் தீர்வு சொல்கிறோம். அவர்களுடைய நிலைமையை டி.வி.யில் பார்த்து பல உதவ முன்வருகிறார்களே! இது அவர்களுக்கு கிடைத்த நன்மைதானே! பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபுணர்கள் மூலம் கவுசிலிங்க் கொடுத்து, அவர்களைத் தெளிவானவர்களாக அனுப்பி வைக்கிறோமே! ஆக, ஒரு கெட்டதில் 9 நன்மைகள் இருப்பதால் இந்நிகழ்ச்சி நியாமானதுதான்! எனக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. *இந்த நிகழ்ச்சி மூலம் உங்கள் கவனத்துக்கு வந்த அநேக பிரச்னைகளுக்கு மூலமாக இருப்பது எதுவென்று அறிந்திருக்கிறீர்களா? பல பிரச்னைகளுக்கு அடித்தளமாக இருப்பது நமது கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை மறந்து, புதுமைக்குத் திரும்பியதில் ஏற்பட்ட தடுமாற்றங்கள் என்பதை அறிந்திருக்கிறேன். தகவல் பரிமாற்றம் சாதனமாக இருந்த தொலைப்பேசியும் செல்போனும், எப்போது பொழுதுபோக்கு சாதனமாக மாறியதோ அப்போதே பல தொல்லைகள் எழுந்துவிட்டன. சமூகத்தில் பல குற்றங்களுக்கு, பிரச்னைகளுக்கு முக்கிய துணையாக இருப்பது இந்தச் செல்போன்தான்! முக்கியமாக கள்ளக்காதல், பள்ளிப்பருவத்தில் காதல்கொண்டு ஓடிபோதல், குடும்பப் பிரச்னைகளுக்கு இந்தச் செல்போன்தான் கருவியாக இருந்திருந்ததை அறிந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல; நேருக்கு நேரான உறவுகள் வருகை, விசாரிப்புகள் எல்லாம் இந்தச் செல்போனால் காணாமல் போய்விட்டது. எது உண்மையான பெண் சுதந்திரம், எது உண்மையான பெண் முன்னேற்றம்? என்று புரிந்து கொள்ளாமல் பெண்கள் செய்யும் சில செயல்கள் அவர்களுக்கே தொல்லையாக முடிந்திருப்பதையும் அறிந்திருக்கிறேன். * இந்த நிகழ்ச்சி தந்த மறக்க முடியாத அனுபவம் பற்றி... நிறைய அனுபவம் கொடுத்திருக்கிறது. 40 படங்களில் நடித்த, ஒரு நல்ல படம் இயக்கியதில் கிடைக்காத பெருமை, புகழ், கவுரவம், விளம்பரம் எல்லாம் இந்த ‘சொல்வதெல்லாம் உண்மை’ கொடுத்திருக்கிறது. என்னைப் பார்ப்பவர்கள் கை எடுத்து கும்பிடும் அளவுக்கு மரியாதையைக் தந்திருக்கிறது. இதில் எனக்கு பூர்ணமான சந்தோஷம்தான்! ஒரு முறை ஒரு ஆட்டோவில் வந்தேன். இறங்கியதும் பணம் கொடுத்தேன். அதை வாங்க மறுத்துவிட்டார் அந்த ஆட்டோகாரர். காரணம் கேட்டேன். அதற்கு அவர், ‘ என் மகள் இன்று நல்ல நிலைமைக்கு வர காரணம், உங்கள் நிகழ்ச்சியை பார்த்ததால்தான். என் மகள் பக்கத்து வீட்டு பையனுடன் பழகியிருக்கிறாள். ஒரு நாள் அவனுடன் ஓடிப்போக திட்டமிட்டிருக்கிறாள். அந்தச் சமயத்தில் உங்கள் நிகழ்ச்சியைப் பார்த்ததும், ஓடிப்போவதால் ஏற்படும் தனக்கும் குடும்பத்துக்கும் ஏற்படும் அவமானங்களை உணர்ந்து, திருந்தியிருக்கிறாள்’ என்று கண்ணீர் வழிய சொன்னார். இப்படி பல நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இன்னொரு மறக்க முடியாத விஷயம். என்னைப்பற்றிய அவதுõறு செய்தி. இந்நிகழ்ச்சி மூலம் என்னைப் பிடிக்காத யாரோ எவரோ காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாமல், என் கேரட்டர் மீது கை வைத்திருக்கிறார்கள். இந்த வயதில் என்னை ஒரு நடிகருடன் தொடர்ப்பு படுத்தி வதந்தீ கிளப்பியது என்னை வேதனைப்பட வைத்தது. உங்களில் அடுத்து இலக்கு? டிசம்பர் மாதத்தில் என் மூத்த மகளுக்குத் திருமணம். அது முடிந்ததும் மீண்டும் ஒரு படம் இயக்க இருக்கிறேன். மிகுந்த சமூகப் பொறுப்புடன், தேசிய அளவில் பேசக்கூடிய அளவுக்கு ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அந்த நல்ல செய்தியை விரைவில் உங்களை எல்லாம் அழைத்துச் சொல்லாமல் இருப்பேனா என்ன! - தேவராஜன்.

‘பி.எம். என்றால் பேசாத மந்திரி!’ - எஸ்.வி. சேகரின் கலகல காமெடி நாடக அனுபவங்கள்


(தினமலர் தீபாவளி (2.11.2013) சிறப்பு மலரில் இடம் பெற்ற எனது கட்டுரை) ‘பி.எம். என்றால் பேசாத மந்திரி!’ - எஸ்.வி. சேகரின் கலகல காமெடி நாடக அனுபவங்கள் நாடக சூப்பர் ஸ்டார் எஸ்.வி. சேகர். இவர் நடத்திய நாடகங்கள் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவை. இவர் நாடகத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. நிமிடத்துக்கு நிமிடம் பட்டாசு போல் நகைச்சுவை வெடி வெடித்து கொண்டே இருக்கும்.வாய் விட்டு சிரிக்க இவர் நாடகம் உத்திரவாதம் தரக்கூடியவை. “என்னோட நாடகத்தைப் பார்க்க வர்றவங்க 100 நிமிஷத்துல 200 தடவை சிரிக்கணும் இதுதான் என்னோட லட்சியம்!- என்று சொல்லும் எஸ்.வி. சேகர், அவர் நடத்தி, நடித்த நாடகங்களில், அவருக்கு ஏற்பட்ட நகைச்சுவை அனுபவங்களை வாசகர்களுக்குப் பட்டாசு கணக்காய் கொளுத்தி போட்டிருக்கிறார். அதை அப்படியே உங்களுக்குத் தருகிறோம்... அது ஒரு நாடகம். அந்த நாடகம் முடிந்ததும், ஒரு ரசிகர் எழுந்து, “சார் நீங்க கணக்குல ரொம்ப வீக்!”- என்றார். “ எதை வைச்சு சொல்றீங்கன்னு” கேட்டேன். “ நீங்க 100 நிமிஷத்துல 200 தடவை சிரிக்க வைப்பேன்னு சொல்லியிருந்தீங்க. ஆனா நான் எண்ணிப்பார்த்தேன 210 தடவை சிரிக்க வைச்சிருக்கீங்களே!” என்றார். உடனே நான், “ அப்ப இன்னொரு நுõறு ரூபாய் கொடுத்துடுங்கன்னு”ன்னு சொன்னேன். அந்த ரசிகரின் சிரிப்பு அடங்க பல நிமிடங்கள் ஆனது. இந்தச் சம்பவம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிகழ்ந்தது. அன்னைக்கு மாலை 6.45 மணிக்கு ஆரம்பிக்க வேண்டி நாடகம் கொஞ்சம் தாமதமானது. ஒரு ரசிகர் எழுந்து கேட்டார். “ நீ எப்போதும் சொன்ன நேரத்துக்கு நாடகம் ஆரம்பிக்கிறதே இல்லை. மணி இப்போ 7.15 ” என்றார். “ அதுக்கெல்லாம் நீங்க வருத்தப்படாதீங்க சார்! நாங்க எவ்வளவு லேட்டா ஆரம்பிச்சாலும் கரெட் டைத்துக்கு நாடகத்தை முடிச்சுடுவோம்” என்றேன். அவர் வயிறு குலுங்க சிரித்ததைக் கேட்கவா வேணும்! இது ஒரு நாள் நடந்த சம்பவம். குழந்தைகள் படுத்திய களேபரம் அது. அன்னைக்கு நாடகம் ஆரம்பித்து நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. இந்த நாடகத்திற்கு கை குழந்தைகளுடன் தாய்மார்கள் சிலர் வந்திருக்காங்க போல. நாடகத்தில் முக்கியமான சீன் நடந்து கொண்டிருந்தது. அப்போது ஆடியன்ஸ் பக்கத்தில் இருந்து ஒரு குழந்தை ‘வீல்’ன்னு பயங்கரமா அழ ஆரம்பிச்சுட்டு. அதை பார்த்த மத்த குழந்தைகளும் அழ ஆரம்பிச்சுட்டு. அந்த நேரத்தில் ஹீரோயின் “ முதல்ல எங்க அப்பா, அம்மாவை சமாதானப்படுதுங்க. அப்பதான் நம் கல்யாணம் நடக்கும்” என்று ஹீரோவான என்னைப் பார்த்து ரொம்ப சீரியஸா டயலாக் பேசறங்க. உடனே நான், “முதல்ல இங்கே அழுவுற குழந்தைகளை சமாதானப்படுத்துறேன். அப்புறம் உங்க அம்மா அப்பாவை சமாதானப்படுத்துறேன். இப்ப இவங்களை சமாதானப்படுத்தலேன்னா நாம பேசறது யாருக்குமே கேட்காதுன்னு” டைமிங் வசனம் பேசினேன். இதைக் கேட்டு அரங்கேமே அதிர்ந்தது. குழந்தையின் அழுகையும் சட்டென்று நின்றது. இது ஒரு பயங்கர கலாய்ப்பு சம்பவம். எனக்கே ரசிகர்கள் அல்வா கொடுக்க முயற்சித்த சம்பவம். அந்த நாடகத்திற்கு சில இளைஞர் மது அருந்து விட்டு, போதை தலைக்கேறி நாடகம் பார்க்க வந்திருந்தனர். அவர்கள் வேண்டும் என்றே கலாட்டா செய்ய ஆரம்பித்தனர். ஒவ்வொரு காட்சியிலும் நான் வசனம் பேசுவதற்கு முன்பாக ‘ஹேக்கே பொக்க... ஹேக்கே’ என்று சிரித்து அடிக்கடி என்னை வெறுப்பேத்திக்கொண்டிருந்தனர். பொறுத்து பொறுத்துப் பார்த்த நான், “ நானும் உங்களை கவனச்சுட்டுதான் இருக்கேன். உங்களுக்கு ரொம்ப நகைச்சுவை உணர்வு அதிகமாக இருக்கு. நீங்க இந்த நாடகத்தின் ஷெட்டரை துõக்கறதுக்கு முன்பு இருந்தே சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க.இங்க வந்திருகிருவங்க எல்லாம் காசு கொடுத்து நாடகத்தை ரசிக்க வந்திருக்காங்க. நான் பேசின பின்னாடி நல்லா இருந்தா சிரிப்பாங்க. நீங்க நான் பேசுவதற்கு முன்னாலே ஹேக்கே ஹேக்கே என்று பயங்கரமாக சிரிக்கிறீங்க. இதனால் இங்க நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறவங்க என்னோட தீவிர ரசிகர்கள் சிலர் உங்க மேல கோபப்பட்டு, அடித்துவிட்டால் எனக்கு வருத்தமாயிடும். அது நடந்துவிடக்கூடாதுன்னு இறைவனை பிரார்த்தனை செய்துகிறேன்னு” சொல்லி முடித்தேன். உடனே ஆடியசில் சிலர் எழுந்து ‘அடே ய் அவனுங்கள வெளியே துõக்கி போடுங்கடான்’னு குரல் கொடுத்ததும் அந்த மது போதை ரசிகர்கள் வெளியேறி விட்டார்கள். இந்தச் சம்பவம் ரொம்ப கலாட்டாவாக ஆயிடுச்சி. அந்தச் சுவாரஸ்யத்தைச் சொல்றேன் கேட்டுக்குங்க. மற்ற நாடகங்களில் நல்லா நடிக்கிற ஒரு நடிகர் , அந்த நாடகத்தில் ரொம்ப சீரியஸாக கதையோடு ஒன்றி போய் நடித்து கொண்டிருந்தார். நகைச்சுவை நாடகம் என்று நினைத்து வந்த ரசிகர்கள் சுவாரஸ்யம் இல்லாததால் கூச்சல் போட்டனர். உடனே அவர், “ நடிக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? இடியட்ஸ், தைரியம் இருந்தால் என்னை மாதிரி நடிச்சுக்காட்டுங்க பார்ப்போம்” என்று கோபப்பட்டு சொல்லி விட்டார். அவர்சொல்லி முடித்த அடுத்த நிமிஷமே, ‘ ஸ்டேஜில் வந்து 50 பேர் நிற்கிறாங்க. நான் நடிக்கிறேன்! நான் நடிக்கிறேன்னு மைக்கைப் பிடிச்சுக்கிட்டு ‘கண்ணே மணியே...’ என்று டயலாக் பேசி, உங்களோட நல்லா நடிக்கிறேனான்னு கேட்கிறாங்க. இதுல என்ன வேடிக்கைனா ஆடியன்ஸ்களுக்கு சீரியஸ் கதையில் இடையில் இப்படியொரு சுவாரஸ்யம் நடக்க, அதுபிடிச்சுபோய் ஒன்மோர் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. உண்மையிலே அந்த நாடகம் ரொம்ப சீரியஸா போச்சு. ஆனால், கடைசியில இப்படி சிரிக்கற அளவு வந்துட்டு. அந்தச்சபாவில் ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்துல 1300 பேர் இருக்காங்க. நல்ல கூட்டம். நாடகம் ஆரம்பமானது. கடைசி ரோவில் இருந்து ‘கேட்கல! கேட்கல! கேட்கல!’ என்று ஒரே கூச்சல் போட்டனர். எனக்குத் திடுக்கிட்டது! பொதுவாக என் நாடகத்தில் நாலு லைட்டும் எட்டு மைக்கும் நல்லா இருக்கும். நல்லா டெஸ்ட் பண்ணிட்டுத்தான் நாடகமே ஆரம்பிப்பேன். அடிப்படையில் நான் ஒரு சவுண்ட் என்ஜினியர். எனக்குத்தெரியாதா, இவங்க வேணும் என்று கலாட்டா செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். “ கடைசி ரோவ் வரைக்கும் நாங்க பேசறது கேட்கணும்தான் ஆசைபடுவோம். இருந்தாலும் இப்பவே மைக்கை டெஸ்ட் பண்றேன்னு சொல்லி வால்யூமே கூட்டி. “இப்ப கேட்குதான்னு கேட்டேன்”. கோரசாக “கேட்கலைன்னு” கத்தினாங்க. மறுபடியும் புல்லா வால்யூமை கூட்டி வைத்து விட்டு கேட்டேன். மறுபடியும் அவங்க ‘கேட்கலை!’ கத்தினாங்க. மறுபடியும் வால்யூமை சுத்தமாக குறைத்துவிட்ட இப்ப கேட்குதான் கேட்டேன். கேட்கலைன்னு சொன்னாங்க. கேட்கலையான்னு கேட்ட கேள்விக்குத்தான் நீங்க கேட்கலைன்னு பதில் சொல்லி இருக்கிங்க. அப்ப கடைசி ரோவ் வரை நான் பேசறது கேட்கிறது. இங்க இருக்கிற ஸ்பீக்கரில் கேட்கிறதுல கோளாறு இருந்தா நான் சரிபண்ணிடுவேன். ஆனால் உங்க காதுல இருக்கிற ஸ்பீக்கர்ல கோளாறு இருந்தா உங்களை சாமிகிரி சித்தர்கிட்டதான் கூட்டிட்டுப்போகணும் சொன்னேன். அப்படி நான் சொன்னதும் ஆடியன்ஸ் எழுப்பிய கரவொலி சபா முழுவதும் நிறைந்தது. இப்ப, நான் சொல்றது எல்லாம் என் நாடகத்தில் ரசிகர்கள் மிகவும் ரசித்த டைமிங் காமெடிகள். அந்த நாடகம் நடக்கும் சமயம் நிதித்துறை மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், உள்துறை மந்திரியாக ஆன சமயம். அந்த நாடகத்தில் எனக்கு அரசியல்வாதி வேஷம். ஒரு பத்திரிகை நிருபர் கேட்கிறார். “சார், பைனான்ஸ் மினிஸ்டரை ஹோம் மினிஸ்ட்டராக மாத்திடாங்களே! அவரு தீவிரவாதத்தை ஒழித்து விடுவாரான்னு” கேட்டார். உடனே நான், “ கண்டிப்பார் ஒழிப்பார் சார்! ஷேர் மார்க்கெட்டையே ஒழித்தவர். இதை ஒழிக்க மாட்டாரான்னு ”கேட்டேன். இதைக் கேட்டதும் ஆடியன்ஸ் எழுந்து நின்னு கைதட்டினாங்க! இது ஒரு நாடகம். “சார் மோடியை இந்தியாக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே! கேட்கிறார் ஒருத்தர். “ரொம்ப சந்தோஷப்படாதே. அவர் லலித்மோடி!” ‘ஒருத்தர் என் குழந்தைக்கு நாலு வயசு ஆச்சு. இன்னும் பேச்சே வரல. போகாத கோயில் இல்ல; பார்க்காத டாக்டர் இல்ல. நீங்க தான் ஏதாவது செய்யணும்”னார். “இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க. 600 கோடி செலவு செய்து பல உலக நாடுகளுக்குப் போய்ட்டு வந்த நம் பிரதம மந்திரிக்கே பேச்சு வரல. பாருங்க உங்க பையன் வருங்காலத்துல பி.எம்.மா வருவான்”னு சொன்னேன். அவர் பி.எம். என்னான்னு கேட்டார். நான் பேசாத மந்திரின்னு சொõன்னேன். 2004ம் ஆண்டு பசுவதை தடுப்புச் சட்டம் வந்தது. அந்தச் சமயத்தில் வந்த டைமிங் காமெடி இது. அய்யா ஏன் பசுவதை தடுப்புச் சட்டத்தை எதிர்க்கிறான்னு கேட்டார். பசு மாடு அம்மான்னு கத்துதே அதனால்தான் ஐயாவுக்கு பிடிக்கலை! நான் சொல்வேன். அப்போ ஒரு சாமியார் பெண்கள் விவகாரத்தில் கைதான சமயம். “என்னால மாமியார்,பெண்டாட்டி தொல்லையை என்னால சமளிக்கவே முடியல. ஏதாவது ஆசிரமத்துல சாமியாரா சேர்ந்திடலாம்னு இருக்கேன்” என்பார். “இங்கே ரெண்டு பொம்பளைங்களேயே உன்னால சமாளிக்க முடியலை. ஆசிரமத்துல ஆயிரக்கணக்கான பொம்பளைகள எப்படி சமாளிப்பே?”ன்னு கேட்பேன். இது ஆந்திராவில் பெண்கள் விவகாரத்தில் அப்போது இருந்த கவர்னர் பதவி இழந்த சமயம். ‘ஐயோ, எனக்குத் தலைசுத்துங்க!’ ‘அதுக்கு நான் காரணமில்ல. நான் காரணமாயிருந்தா ஐதராப்பாத்துக்கு என்னை கவர்னர் ஆக்கியிருப்பாங்க.’ என்றேன். சபையில் சிரிப்பொலி அடங்கவே இல்லை. என்ற எஸ்.வி.சேகர், பேட்டி எடுத்த எங்களையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து அனுப்பி வைத்தார். - தேவராஜன்.

புதன், 30 அக்டோபர், 2013

சின்னச் சின்ன தகவல்கள்


கண்களை இமைப்பதன் ரகசியம் மழை பெய்யும் பொழுது கார், பஸ்சில் சென்றால் நாம் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். காரின் கண்ணாடியில் இருக்கும் ‘வைப்பர்’ அசைந்து அசைந்து கண்ணாடி மீது விழும் நீர்த் துளிகளைத் துடைத்து , டிரைவர் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. இந்த வைப்பர் நம் கண் இமைகளுக்கு நிகரானது. நம் கண் இமைகள் மேலும் கீழும் அசைந்து வைப்பரை போல் பணிபுரிகின்றன. மெல்லிய தோலால் ஆன இமைகள் நமது பார்வையைத் தடுக்காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே தமது பணியைச் செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோம். அதாவது மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான். இமையில் உள்ள முடிகள் விரிவாக அமைந்தவை. அதன் பணி, துõசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை பெய்யும்போதோ, காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடிக்கொள்கின்றன. மழைநீர், வியர்வை ஆகியவை கண்களில் விழாமல் ஒரு பக்கமாக வடியும்படி புருவங்கள் தடுப்பாக இருக்கின்றன. மேலும், இமைப்பதால் கண்கள் ஈரத்துடன் இருக்கவும், எளிதில் சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது, முப்பது சிறு சுரப்பிகள் உள்ளன. இமைகளுக்கு இடையே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இமைகள் மூடும்போது இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர், கண்களுக்கு நன்மை பயக்கிறது. கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள கண்ணீர் இவ்வாறுதான் பயன்படுகிறது. அதனால் ஒவ்வொரு முறை இமைக்கும்போதும் நாம் அழுகிறோம் என்றே கூறலாம். * சிப்பியின் வயது வளையங்கள் மரத்தின் வயதைக் கண்டுபிடிக்க மரத்தை அறுத்து அதன் உள்ளே இருக்கும் வளையங்களைக் கணக்கிட்டு வளையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வயது தீர்மானிப்பர். சிப்பியின் வயதைக் கண்டுபிடிக்கவும் அதன் மேல் படிந்திருக்கும் வளையங்கள் உதவுகின்றன. சிப்பியின் மேல் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கையை வைத்து அதன் வயதைக் கணக்கிடும் முறையை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த டாக்டர். இடா தாம்ப்ஸன் என்பவர் கண்டறிந்தார். இதற்காக அவர் பத்து ஆண்டுகள் ஆய்வு செய்தார். அவரின் ஆய்வுபடி சிப்பியின் மேல் ஓட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு வளையம் உருவாகிறதாம். கடற்கரையின் நீர்ப்பரப்பில் கிடைக்கும் சிப்பிகளில் இந்த வளையத்தைக் காணமுடியும். * தினமும் புயல்தான்! நாம் வசிக்கும் ஊரில் எப்போதாவதுதான் புயல் அடிக்கும். அதையே நம்மால் தாக்குபிடிக்க முடியாது. அண்டார்க்டிகாவில் உள்ள காமன்வெல்த் விரிகுடா பகுதியில்தான் தினசரி புயல் அடிக்கிறதாம். உலகிலேயே அதிகமாக காற்றடிக்கும் இடமும் இதுதானாம்! இப்பகுதியில் வீசும் கடுமையான காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 200 மைல்! * ஸ்கூலுக்கு போறீங்களா? பள்ளிக்கூடத்தை ஸ்கூல் என்று சொல்கிறோம். இந்தச் சொல் கிரக்க மொழியில் இருந்து வந்திருக்கிறது. கிரேக்க மொழியில் இதன் பொருள் ஓய்வு நேரம் என்பதைக் குறிக்கிறதாம்! * ஆடும் நாற்காலி நம்மூர் காரர்கள் சாய்வு நாற்காலியை கண்டுபிடித்தனர். ஆடும் நாற்காலியைக் கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? அவர் தான் பெஞ்சமின் பிராங்க்ளின். * வரி வித்தியாசம்! நம் ஒவ்வொருவருக்கும் கை ரேகையில் வித்தியாசம் காணப்படுவது போல வரிக்குதிரையின் வரிகளும் வித்தியாசப்படும். வரிக்குதிரை உடலில் உள்ள வரிகள் அனைத்து வரிக்குதிரைக்கும் ஒன்றுபோல இருக்காது. ஒவ்வொரு குதிரைக்கும் ஒவ்வொரு விதமாக இருக்குமாம்! ************** ஒரு மா மரத்தின் கதை முடிகொண்டான் ஆற்றங்கரையோரம் ஒரு பெரிய மா மரம் இருந்தது. தன் அப்பாவுடன் வயலுக்கு வரும் சிறுவன் சீனு, அந்த மாமர நிழலில் விளையாடுவது வழக்கம். அந்த மரத்திற்கும் சீனுவை மிகவும் பிடிக்கும். சீனு மரத்தைச்சுற்றி ஓடி விளையாடுவான். மரத்தில் இரும் விழும் மாம் பழங்களை உண்ணுவான். பின் அந்த மரத்தடியிலேயே படுத்து உறங்குவான். மாலையில் அப்பாவுடன் வீடு திரும்புவான். சில ஆண்டுகளுக்குப்பிறகு சீனு வளர்ந்துவிட்டான். ஒரு நாள் மரத்திடம் வந்தான். அந்த மரம் வந்து என்னுடன் விளையாடு என்றது. எனக்கு உன்னுடன் மட்டும் விளையாடமுடியாது எனக்கு விளையாட்டுப்பொருட்கள் வேண்டும் என்று கேட்டான் சீனு. “ என்னிடம் பணமில்லை நீ வேண்டுமானால் என் பழங்களை விற்று, அதில் வரும் காசில் விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக்கொள்” என்றது. சீனு மகிழ்ச்சியுடன் அனைத்துப் பழங்களையும் பறித்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அதன்பின்னர் அவன் அந்தப்பக்கம் வரவே இல்லை. சில ஆண்டுகள் உருண்டோடின. வாலிபனாக வளர்ந்திருந்தான் சீனு. மரத்திடம் வந்தான். “வா வந்து என்னுடன் விளையாடு” என்றது மரம். “உன்னுடன் விளையாட எனக்கு நேரமில்லை. நான் எனது குடும்பத்தைக்காப்பாற்றவேண்டும் அதற்கு உழைத்து பணம் திரட்ட வேண்டும். நானும் என் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க ஒரு இடம் வேண்டும் நீ எனக்கு உதவி செய்வாயா?” என்று கேட்டான். “என்னிடம்இருப்பிடம் ஏதும் இல்லை நீ என் கிளைகளை வெட்டி வீடு அமைத்துக்கொள்” என்றது மரம். உடனே அவனும் அனைத்துக்கிளைகளையும் வெட்டியெடுத்துக்கொண்டு போய்விட்டான். மீண்டும் சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் சீனு வந்தான், இப்போது முதியவனாக. மரமும் வழக்கம்போல வந்து என்னுடன் விளையாடு என்றது, ”எனக்குவயதாகிவிட்டது, உன்னுடன் விளையாட முடியாது, நான் எனது முதுமைகாலத்தில் ஓய்வெடுக்க ஒரு படகு வேண்டும்” என்றான். “என்னிடம் ஏது படகு இதோ என் உடலைவெட்டி படகு செய்துகொள்” என்றது மரம். அவனும் மரத்தை வெட்டி படகு செய்து கொண்டான். மேலும் சிலகாலங்கள் உருண்டோடின. மாமரம் பட்டுபோய் இருந்தது. வேர்ப்பகுதி மட்டுமே இருந்தது. தள்ளாடித்தள்ளாடி அந்த முதியவர் வந்தார். அந்த மரம், “ தம்பி மன்னித்துவிடு. என்னிடம் இப்போது தருவதற்கு எதுவுமில்லை” என்றது. அதற்கு அவன் “எனக்கு நடந்து வந்தது மிகவும் களைப்பாக இருக்கிறது, ஓய்வெடுக்க இடம்வேண்டும்” என்று அந்த மரத்தின் வேர்ப்பகுதியில் அமர்ந்துகொண்டான்! *************** பறக்கும் அணில் பறவைகள் பறப்பது சகஜம்! விலங்குகள் பறக்குமா? அப்படி பறந்தால் அது அதிசயம்தானே? ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் அணிகள் மரம் விட்டு மரம் தாவி பறக்கிறதாம்! ஆஸ்திரேலியா அணில்களுக்கு சிறகுகள் உண்டா என்ற கேள்வி கேட்க வேணாம். அதற்கு சிறகுகள் எல்லாம் கிடையாது. அப்புறம் எப்படி பறக்கிறது? என்று சந்தேகம் வருகிறதுதானே! அதற்கு விடை இதோ! இந்த அணில்கள் பறப்பது என்பது சிறகுகளால் அல்ல. காற்றடிக்கும் திசையில் நழுவிச் சென்று ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு செல்லும். இந்த பறக்கும் அணில்களுக்கு அதன் உடலின் தோல் பகுதியைச் சுற்றி பெரிய சிறகு போன்ற அமைப்பு இருக்கிறது. இது முன்னங்கால்களையும், பின்னங்கால்களையும் இணைக்கிறது. ஒரு மரத்திலிருந்து இன்னொரு மரத்துக்கு தாவும் போது, அதனுடைய கால்களை நன்றாக விரித்துக் கொள்ளும். அதனுடைய தோல் சிறகும் விரிந்து ஒரு பாராசூட்போல விரிகிறது. இந்த பாராசூட் உடல் அமைப்பால் காற்று போக்கில் அது பறக்கிறது. இதுதான் அந்த அணிலின் பறக்கும் டெக்னிக்! இந்தவகை அணில்களால் 40 முதல் 50 மீட்டர் துõரம் வரை பறக்க முடியுமாம்! * குரங்குக்கு இரண்டு மூளை! மரம் விட்டு மரம் தாவும் குரங்குகளின் சேட்டைகளை சொல்லி மாளாது. குறும்புக்கார குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டாம்! ஒரு மூளை அதன் உடலைக் கட்டுப்படுத்துகிறாதாம். இன்னொரு மூளை அதனுடைய வாலைக் கட்டுப்படுத்துகிறாதாம்! மாதத்துக்கு ஒரு முட்டைதான்! பெட்டை வான் கோழிகள் ஆண்டு ஒன்றுக்கு 12 முட்டைகள் இடுகின்றதாம்! அதாவது மாசத்துக்கு ஒண்ணே ஒண்ணு! சிக்கனக்கார வான்கோழிகள்! ****** தெரிஞ்சுகோங்க! *மிகச் சிறிய மீன்! சுமத்ரா தீவில் உள்ள பேடோசைபிரிள் என்ற ஒரு வகை மீன், சேற்றுத் தண்ணீரில் வாழ்கிறது. 79 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த மீன், உலகிலேயே முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மிகவும் சிறிய உயிரினமாகும். *மரத்தில் ஏறும் மீன்! பிலிப்பைன்ஸ் நாட்டில் அனபாஸ், ஸ்காண்டன்ஸ் என்னும் இரண்டு வகை அபூர்வ மீன்கள் காணப்படுகின்றன. இவை மரத்தில் ஏறக் கூடியவை. பெரும்பாலான நேரங்களில் நீரில் வாழ்ந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு மரத்தில் ஏறி ஜாலியாக ஓய்வு எடுக்கின்றன. பின்னர் அப்படியே நீருக்குள் பாய்ந்து விடுகின்றன. *தொட்டா சிணுங்கி தொட்டா சிணுங்கி என்பது தரையில் படரும் ஒரு வகைச் செடி. இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொள்கின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன. *ஆ... அப்படியா? * நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது. * யானைக்கு குதிக்கத் தெரியாது. *கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது. *கோலா கரடிகள் தினமும் 22 மணி நேரம் துõங்கியே பொழுதைக் கழிக்கின்றன. * பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை. * ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை. * குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது. * காகம் தனது இடது காலைத்தான் அதிகமாகப் பயன்படுத்தும். ********************************* நீர் மூழ்கி கப்பல் * உலகில்முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலுக்கான வடிவ வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே. இவர் இங்கிலாந்துக்காரர். 1578ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். இருப்பினும் , முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் இவர், நெதர்லாந்து நாட்டுக் காரர். இவர்,1620ம் ஆண்டு நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்தார். அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். பல வசதிகளுடன் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும், சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன. ********* வெங்காயம்! *வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. **** அட அப்படியா! மங்கோலியர்கள் இந்தியாவை ‘தெய்வத்தின் நாடு’ என்பர். இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில். இந்தியாவில் முதலில் உருவான மாநிலம் உத்திரப்பிரதேசம். இந்தியாவில் காபி பானம் 1600ல் அறிமுகமானது. இந்தியாவில் கம்ப்யூட்டர் 1986ல் அறிமுகமானது. இந்திய மொழிகளில் முதல் கலைக் களஞ்சியம் தமிழில்தான் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அதிக ஆயுள் கொண்டவர்கள் பஞ்சாபியர்கள். இந்தியாவில் ஆண்களே பெண்களைவிட அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள். இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா 1912 வரை இருந்தது. ***************** தெரிந்து கொள்ளுங்கள். தமிழகத்தில் சில சிறப்புகள் * தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்துõர் ஆண்டாள் கோபுரம் * தமிழகத்தின் நுழைவாயில் – துõத்துக்குடி * தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்துõர் *மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி) * மிகப் பெரிய பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் ) *மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர் *மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை *மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை * மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் * மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம் * மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி) * மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா *மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை * மிக நீளமான ஆறு – காவிரி * மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை *மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை * மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம் * கோயில் நகரம் – மதுரை *தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி) *மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம் *மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி) — ****************** *சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு. *இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது *ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. *இந்தியாவில் தமிழில் தான் “பைபிள் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. *வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . * கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். * பிரேசில் நாட்டு தேன் கசக்கும். முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். *************** ஊர் புகழ் பொருட்கள்! ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு, ஒவ்வொரு ஊரின் பெயரையும் குறிப்பிட்டு அந்த ஊரில் எதற்கு சிறப்பான அந்தஸ்து வழங்கப் ப டுகிறது என்பதன் பட்டியல் இது: அரியலூர் – கொத்தமல்லி ஆலங்குடி – நிலகடலை ஆடுதுறை – நெல் ஆற்காடு – பிரியாணி ஆரணி – லுங்கி ஈரோடு – மஞ்சள் உறையூர் – சுருட்டு உடன்குடி – கருப்பட்டி ஊட்டி – ஆப்பிள் ஊத்துக்குளி – வெண்ணை காஞ்சிபுரம் – பட்டு காரைக்குடி – சமையல் குடியாத்தம் – நுங்கு கொடைக்காணல் – பேரிக்காய் கோவில்பட்டி – கடலை மிட்டாய் கோவை – பஞ்சு சாத்துõர் – காரசேவு சிவகாசி – வெடி சேலம் – மாம்பழம் தஞ்சாவூர் – கதம்பம் தருமபுரி – புளி திருநெல்வேலி – அல்வா திருவல்லிபுத்தூர் – பால்கோவா திருப்பதி – லட்டு திருப்பூர் - பனியன் திருப்பாச்சி – வீச்ச?ரிவாள் கும்பகோணம் – வெற்றிலை திருவாரூர் - தேர் திண்டுக்கல் – பூட்டு துõத்துக்குடி – முத்து நாகை - கோலா மீன் நாமக்கல் – முட்டை நீலகிரி - தைலம் பழனி – பஞ்சாமிர்தம் பத்தமடை – பாய் பண்ருட்டி – பலாபழம் பவானி – ஜமுக்காளம் பாண்டிச்சேரி – மது பொள்ளாச்சி – தேங்காய் மார்த்தாண்டம் – தேன் மணப்பறை – முறுக்கு மதுரை – மரிக்கொழுந்து, மல்லிகை மாயவரம் – கருவாடு மானாமதுரை – மல்லிகைப்பூ விழுப்புரம் - கொய்யா வேதாரணியம் – உப்பு ராஜபாளையம் - நாய் ********************* *மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது. *நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும். *நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும். *ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம். *மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. *கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன. *ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும். *பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன. *நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன. *ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும். *புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது. *காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன. *பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு. *உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான். *கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். அதிசய ஆங்கில வாக்கியம்: “கச்ஞிடு ட்தூ ஞணிது தீடிtட ஞூடிதிஞு ஞீணித்ஞுண டீதஞ்ண் ணிஞூ டூடிணுதச்ணூ” இது ஓர் அதிசயமான ஆங்கில வாக்கியம் ஆகும்! என்ன என்கிறீர்களா? மேற்கண்ட வாக்கியத்தில் ஆங்கில எழுத்துகள் 26ம் அடங்கி இருப்பதுதான் அந்த அதிசயம். “கூஏஅNஓ ஙுOக்” நன்றி கூறுவதை சட்டமாக்கியிருக்கும் நாடு எது தெரியுமா? சுவீடன். ************************ *அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது. *மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார். *முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். ************* புரட்சி! பசுமைப் புரட்சி என்பது விவசாய உற்பத்தியை பெருக்குவதாகும். இளஞ்சிவப்புப் புரட்சி என்பது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும். நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதாகும். வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும். மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும். **************** ஆஹா! நீங்கள் உங்கள் கைவிரல்களை ’நெட்டி’ முறிக்கும்போது ஏற்படும் சத்தத்திற்கு காரணம் என்ன தெரியுமா? நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடையும் சத்தமாகும். ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம் கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது. *************** அணைகளும் மாநிலங்களும் 1. நாகர்ஜூன சாகர் நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம் ) - கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இந்த நீர்த்தேக்கத் திட்டம் பயன்படுகிறது. 2. கக்கார்பாரா நீர்த்தேக்கம் (ஆந்திர மாநிலம்)- தபதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. விவசாயத்திற்காக கட்டப்பட்டுள்ளது. 3. கோஷி நீர்த்தேக்கம் (பீகார் மாநிலம்)- கோஷி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் அபாயகரமான வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கும், நீர்மின்சக்தித் திட்டத்துக்கும் இந்த நீர்த்தேக்கம் பயன்படுகிறது. 4. சபரிகிரி நீர்த்தேக்கம் (கேரள மாநிலம்)- பம்பா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தித் திட்டத்துக்காக பயன்படுகிறது. 5. சாராவதி நீர்த்தேக்கம் (கர்நாடக மாநிலம்)- ஜோக் நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள சாராவதி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி உற்பத்திக்காக இத்திட்டம் பயன்படுகிறது. 6. மகாநதி டெல்டா நீர்த்தேக்கம் (ஒரிசா மாநிலம்)- மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.விவசாய பயன்பாட்டிற்காக படுகிறது 7. பக்ராநங்கல் நீர்த்தேக்கம் (ஹிமாச்சலப் பிரதேசம்)- சட்லஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் சந்திப்பு எல்லையில் கட்டப்பட்டுள்ளது, விவசாயம், நீர்மின்சக்தி உற்பத்திக்காக இது பயன்படுகிறது. 8. தாமோதர் பள்ளத்தாக்கு நீர்த்தேக்கம் – தாமோதர் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இந்த அணையின் நீரை மேற்கு வங்களாமும் பகிர்ந்துகொள்கிறது. வெள்ள நீரை தடுப்பதற்காகவும்,விவசாயத்திற்கும் இந்த அணை பயன்படுகிறது. 9. சர்தார் சரோவர் நீர்த்தேக்கம் – நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் இந்த நீர்த்தேக்கம் மூலம் பயன்பெறுகின்றன. விவசாயம் மற்றும் நீர்மின்சக்திக்காக இது பயன்படுகிறது. 10. மேட்டூர் (தமிழ்நாடு)- காவேரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. நீர்மின்சக்தி மற்றும் விவசாயத்திற்காக பயன்படுகிறது. ************** *மிகச் சிறிய மீன்! சுமத்ரா தீவில் உள்ள பேடோசைபிரிள் என்ற ஒரு வகை மீன், சேற்றுத் தண்ணீரில் வாழ்கிறது. 79 மில்லி மீட்டர் நீளமே உள்ள இந்த மீன், உலகிலேயே முதுகெலும்பு உள்ள உயிரினங்களில் மிகவும் சிறிய உயிரினமாகும். *மரத்தில் ஏறும் மீன்! பிலிப்பைன்ஸ் நாட்டில் அனபாஸ், ஸ்காண்டன்ஸ் என்னும் இரண்டு வகை அபூர்வ மீன்கள் காணப்படுகின்றன. இவை மரத்தில் ஏறக் கூடியவை. பெரும்பாலான நேரங்களில் நீரில் வாழ்ந்தாலும் கூட சிறிது நேரத்திற்கு மரத்தில் ஏறி ஜாலியாக ஓய்வு எடுக்கின்றன. பின்னர் அப்படியே நீருக்குள் பாய்ந்து விடுகின்றன. *தொட்டா சிணுங்கி தொட்டா சிணுங்கி என்பது தரையில் படரும் ஒரு வகைச் செடி. இதன் இலைகளைத் தொட்டால் அவை அசைகின்றன. இவ்வாறு அசையும்போது, காம்பு செல்களில் இருக்கும் நீர் தண்டிற்குள் செல்கிறது. இதனால் செல்கள் சுருங்கி, விரிந்திருந்த இலைகள் மடிந்து ஒட்டிக் கொள்கின்றன. சிறிது நேரத்திற்குப் பின் அவை தானாக சரியாகி இலைகள் மறுபடியும் விரிந்து விடுகின்றன. * நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது. * யானைக்கு குதிக்கத் தெரியாது. *கண்களை இமைக்காமல் தவளையால் இரையை விழுங்க முடியாது. *கோலா கரடிகள் தினமும் 22 மணி நேரம் துõங்கியே பொழுதைக் கழிக்கின்றன. * பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை. * ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை. * குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது. * காகம் தனது இடது காலைத்தான் அதிகமாகப் பயன்படுத்தும். ********************************* தமிழகத்தில் உள்ள பறவைகள் காப்பகங்கள் *பழவேற்காடு பறவைகள் சரணாலயம் சென்னையில் இருந்து 90 கி.மீ., தொலைவிலும், பொன்னேரியில் இருந்து 19 கி.மீ., தொலைவிலும் பழவேற்காடு பறவைகள் காப்பகம் அமைந்துள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் சரணாலயத்தைக் காண ஏற்ற நாடகளாகும். *வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆண்டின் கடைசி நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான மாதங்களில் காணலாம். *கரிக்கிலி பறவைகள் சரணாலயம் மதுராந்தகம், செங்கல்பட்டிற்கு அருகில் கரிக்கிலி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. செப்டம்பர் மாத துவக்கம் மற்றும் மார்ச், ஏப்ரல் வரை பறவைகள் காணப்படுகின்றன. *கரைவெட்டி பறவைகள் சரணாலயம் தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் கரைவெட்டி சரணாலயம் அமைந்துள்ளது. டிசம்பர், சனவரி ஏற்ற மாதங்கள் ஆகும். *உதயமார்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் திருவாருரில் இருந்து 65 கி.மீ., தொலைவில் உதயமார்தாண்டபுரம் அமைந்துள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்கள்ஏற்ற காலமாகும். *வடுவூர் பறவைகள் சரணாலயம் தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. ஆகஸ்ட் துவங்கி டிசம்பர், சனவரி வரையிலான காலத்தில் பறவைகள் இங்கு வந்து செல்லும். *சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் வட்டத்தில் சித்திரன்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. பறவைகளை காண சனவரி மாதம் ஏற்ற காலமாகும். *கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீட்டரில் அமைந்துள்ளது கூந்தன்குளம், ஆண்டுதோறும் டிசம்பர், சனவரி மாதங்களில் பூநாரைகள் தமிழத்தை நோக்கி வருகின்றன. *மேல்செல்வனூர் - கீழ்செல்வனூர் பறவைகள் சரணாலயம் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் அமைந்துள்ள மேல்-கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம். *கஞ்சிரன் குளம் பறவைகள் சரணாலயம் முதுகுளத்தூரில் இருந்து 8 கி.மீ., தொலைவில் கஞ்சிரன் குளம் அமைந்துள்ளது.ஆண்டு தோறும் குளிர் காலங்களில் இங்கு வந்து செல்கின்றன. *வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் காரைகுடியில் இருந்து 32 கி.மீ., தொலைவில் வேட்டங்குடி அமைந்துள்ளது. *வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் செங்கல்பட்டில் இருந்து 30 கி.மீ., தொலைவில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் பறவைகளை காண ஏற்ற காலங்களாகும். *கோடியக்கரை பறவைகள் சரணாலயம் வேளாங்கண்ணியில் இருந்து 28 கி.மீ., தூரத்திலும், வேதாரண்யத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவிலும் கோடியக்கரையில் இந்தச் சரணாலயம் உள்ளது. **************************** ஏ.கே.47 ரக துப்பாக்கிக்கு ஏ.கே.47 என்று பெயர் வந்தது சுவாரஸ்யமானது. இந்தத் துப்பாக்கியைக் கண்டு பிடித்தவர் ஆட்டோமேட்டிக் கோ- காலஸ் என்பவர். அப்போது அவருக்கு வயது 47. அதனால், அவர் வயதை குறிக்கும்படி ஏ.கே. 47 என்று பெயர் வைத்து விட்டார்கள்! ***** ஒரு ஊருக்கு 12 பெயர்கள்! உலகிலேயே 12 பெயர்கள் கொண்ட ஒரு ஊர் உண்டு. அது தமிழகத்தில் சிதம்பரத்திற்கு அடுத்து இருக்கும் சீர்காழி என்ற ஊர்தான்! இதற்கு, பிரம்மரம், வேணுபுரம், புகலி, பெரிய வெங்குருகு, திருத்தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், வரும்புருவம், கண்பை நகர், வளரும் காழி, கொச்சைவயம், திருக்குழுமலம் ஆகியனவாகும். ***** ***அப்படியா!*** மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம். நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம். நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம். நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும். ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம். வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன. ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும். **** ****விடுகதை*** * அடி மலர்ந்து நுனி மலராத பூ எது? * காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன? * காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? *சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன? * ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? * நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? விடைகள்: *வாழைப்பூ * பேனா * நாவல் பழம் * காய்ந்த மிளகாய் * பம்பரம் *பூனை ************************* அதிசய தொங்கும் பாலம்! படத்தில் காணப்படுவது ஜப்பான் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘அகாசி கைக்ஜோ‘தொங்கு பாலம். அகாசி கைக்ஜோ பாலம் உலகின் மிக நீளமான தொங்கு பாலம். இந்த பிரமாண்டமான பாலத்திற்கு பவள பாலம் என்ற பெயரும் உண்டு. ஜப்பான் நாட்டின் முதன்மை நிலப்பகுதியிலுள்ள அகாசி பிரதேசத்தினையும் அவாஜி தீவினையும் இணைப்பதற்காக அகாசி நீரிணை மேலாக இந்த அகில புகழ் பாலமானது கட்டப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் இரு நிலப்பகுதிகளை ஊடறுக்கும் 4 கி.மீ. அகலமான நீரிணை சர்வதேசத்திலும் உள்ளூரிலும் மிகவும் பிரசித்தமானது. இராட்சத பால கட்டுமானம். பலவருட திட்டமிடலின் பின்னர் 1986 ம் மே மாதம் தொடங்கிய கட்டுமான வேலைகள் 1998 ம் ஏப்பிரல் 5 இல் முடிவுற்றது (12 வருடங்கள்). ஆரம்பத்தில் தொடர்வண்டி பாதையும் அமைப்பதாக இருந்த போதிலும் பூர்த்தியான பாலம் கார்களுக்கான 3 வழி (போக , வர மொத்தம் 6 வழி) பாதைகளை மட்டும் கொண்டுள்ளது. ‘அகாசி கைக்ஜோ‘ தற்போது சுற்றுலா பயணிகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் இருந்து வருவதனால் அதுசார்ந்த துறைகள் பெருமளவில் பாலத்தின் சுற்றுவட்டத்தில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. *** யுர்நோ ரூபிக் 1974 ம் வருடம் ஹங்கேரி நாட்டினைச் சேர்ந்த பல்கலைக்களக பேராசிரியர் யுர்நோ ரூபிக் என்பவரால் உலகப் புகழ்பெற்ற ‘ரூபிக்‘ (படத்தில்) எனும் பொழுதுபோக்கு (விளையாட்டு) கருவி கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிடகலைஞரும் வடிவமைப்பாளருமான ‘யுர்நோ ரூபிக்‘ தனது காப்புரிமம் செய்யப்பட்ட ரூபிக் விற்பனை மூலமாக பெருமளவு பணத்தினையும் புகழையும் பெற்றுள்ளார். 30 வருடங்களின் மேலாக உலகின் எல்லா மட்டங்களிலு முள்ள மக்களையும் ஈர்த்துவிட்ட ரூபிக் பற்றிய சுவையான தகவல்கள் வருமாறு. 1974 ம் வருடம் பல்கலைக்களகத்தில் முப்பரிமான கற்பித்தல் தேவைக்கு வடிவமைக்கப்பட்ட மாதிரி காட்சிபொருள் ‘ரூபிக்‘ எனும் புரட்சிகர கண்டுபிடிப்பாக வரலாற்றில் மாறியது. ரூபிக் கட்டையானது 9 சிறு சதுரங்களைக் கொண்ட 6 வித்தியாசமான வர்ணங்களிலால் ஆக்கப்பட்ட முப்பரிமான சதுர குற்றியாகும். ஆரம்பத்தில் ‘மஜிக் கியூப் என அழைக்கப்பட்ட போதிலும் 1980 ம் வருடத்திலிருந்து ‘ரூபிக்ஸ் கியூப்‘ (கீதஞடிடு’ண் இதஞஞு) எனும் பெயர் மாற்றம் பெற்று விற்பனைக்கு வந்தது முதல் இன்றுவரை மாறாது நிலைத்துவிட்டது. 1982 ம் வருடம் ஒக்ஸ்போர்ட் அகராதியில் ‘கீக்ஆஐஓ‘ எனும் சொல் முதல்முதலாக சேர்க்கப்பட்டது. ஹங்கேரிய நாட்டில் 1982 ம் வருடம் நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த நபர் (Mடிணட கூடச்டி) 22.95 செக்கனில் ரூபிக் தீர்வுகண்டதன் மூலம் முதலாவது உலகசாதனை பதிவு செய்தார். ரூபிக் ஆர்வம் காரணமாக பல தொலைக்காட்சி , மேடை நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் சர்வதேசரீதியில் நடைபெறு வருகின்றது. அத்துடன் ரூபிக் பற்றியதான பல மில்லியன் கணக்கிலான புத்தகங்களும் இதுவரை வெளியாகியுள்ளமை இதன் மகிமையை காட்டுவதாக உள்ளது. 1981 ம் வருடம் 12 வயது பிரித்தானிய மாணவன் (கச்tணூடிஞிடு ஆணிண்ண்ஞுணூt) எழுதி வெளியிட்ட ‘உங்களாலும் ரூபிக் புதிர் செய்ய முடியும்‘ (ஙுணித இச்ண ஈணி tடஞு இதஞஞு) எனும் புத்தகம் மட்டும் 1.5 மில்லியன் பிரதிகள் விற்பனையானது குறிப்பிடத்தக்க செய்தி. உலக வரலாற்றில் இந்த புதிர் கட்டை மட்டு மே விளையாட்டு பொருட்களில் அதிகம் விற்பனையானது என்ற சாதனையை படைத்துள்ளது *** *முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும். *நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலுõட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும். * இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள டெப்டும் லுõசிடம்( tச்ணீஞுtதட் டூதஞிடிஞீதட்) என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான். *கிரீச்லி ( எணூடித்த்டூதூ ஆஞுச்ணூ), இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது. * பூனைகளால் தாடையினை வல இட புறமாக அசைக்க முடியாது. * உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும். * தெள்ளு பூச்சி (ஊடூஞுச்) அதன் உடலின் நீளத்தை போல் சுமார் 350 மடங்கு நீளத்தை தாண்டும். அதாவது ஒருமனிதன் ஒரு கால்பந்து மைதானத்தை ஒரே நேரத்தில் தாண்டுவதற்கு சமம். * நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது. * தீ கோழிகள் சுமார் 70 வருடம் வரை உயிர் வாழும், சுமார் 50 வருடங்கள் வரை முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.*முதலைகளால் நாக்கை அசைத்து உணவை சுவைக்கமுடியாது. முதலையின் வயிற்றில் உருவாகும் ஜீரண நீரினால் சிறிய இரும்பு ஆணியை கூட ஜீரணிக்க முடியும். *நீர்யானைகளின் பிரசவம் நீருக்கடியில் தான் நடக்கும். குட்டி பிறந்ததும் சுவாசிப்பதற்காக அடிக்கடி நீரின் மேலேவந்து செல்லும். குட்டிகளுக்கு பாலுõட்டுவதும் நீருக்கடியிலேயே நடைபெறும். * இரவில் பூனைகளின் பார்வை திறன் மனிதனின் பார்வையைவிட ஆறு மடங்கு அதிகம். ஏனென்றால் அதன் கண்ணின் விழித்திரையில் உள்ள டெப்டும் லுõசிடம்( tச்ணீஞுtதட் டூதஞிடிஞீதட்) என்னும் சிறப்பு பகுதி உள்ள செல்கள் அதிகமாக ஒளியினை உள்வாங்குவதால்தான். *கிரீச்லி ( எணூடித்த்டூதூ ஆஞுச்ணூ), இந்த கரடியினம் குதிரைகளுக்கு இணையான வேகத்தில் ஓடும் திறனுடையது. * பூனைகளால் தாடையினை வல இட புறமாக அசைக்க முடியாது. * உலகில் வாழும் மிகப்பெரிய பறவை ஆண் தீ கோழிகள்தான். இதன் எடை சுமார் 175 கிலோ இருக்கும். ************************** சுட்டி ரோபோ! குழந்தையைப்போல உணர்ச்சிகளைக் காட்டும் ரோபோவை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இந்த ரோபோவை கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹான்சன் என்பவர் தயாரித்துள்ளார். ஒன்னரை வயது குழந்தையைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு டியாகோசான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ரோபோ குழந்தையை போன்று அழுவது, சிரிப்பது, கோபப்படுவது, மகிழ்ச்சி அடைவது போன்று பல உணர்ச்சிகளை இந்த ரோபோ வெளிப்படுத்துகிறது. இந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்றாற் போன்று நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளை வைத்து ரோபோவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு செயற்கை அறிவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்களாம்! ** பசுமை சுவர் பிரிட்டனில், 68 அடி உயர சுவர் முழுவதும், 20க்கும் மேற்பட்ட, தாவரங்களை பயிர் செய்து, “பசுமை சுவர்’ வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையின் கொடையான தாவரங்களை காக்கவும், சுற்றுச் சூழல் சீர்க்கேட்டை கட்டுப்படுத்தவும் நகரின் உயரமான கட்டடங்களின் பக்கச் சுவர்களில், ஏராளமான அரிய வகை தாவரங்களை நட்டு வைத்து, பராமரிக்கும், புதிய பசுமை புரட்சி திட்டத்தை லண்டன் மேயர் அறிமுகம் செய்துள்ளார். ஒரு கோடி ரூபாய் செலவில், லண்டன் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள, பிரபல நட்சத்திர ஓட்டலின், பக்க சுவர்களில், தாவரங்களை நட்டு வைத்து புதுமை செய்துள்ளனர். விக்டோரியா நிலையம் அருகில், சுற்றுலா பயணிகள் செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள, “ரெட் கார்னேஷன்’ ஓட்டலை தேர்வு செய்து, கடந்த ஓராண்டாக, ஓட்டல் சுவர்களில் தோட்டம் அமைக்கும் பணிகள் நடத்தப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. பல நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் தங்கும், ரெட் கார்னேஷன் ஓட்டலின், 68 அடி உயர சுவரில், தோட்டம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக. 16 டன் வளமான மண் சேகரிக்கப்பட்டது. அதன் பின், சுவரில், பக்கவாட்டில் மண் கொட்டுவதற்கான விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அதில், 20க்கும் மேற்பட்ட பல அரிய வகை தாவரங்கள் நட்டு வைக்கப்பட்டன. ஒரே நேரத்தில், 10 ஆயிரம் லிட்டர் நீரை உறிஞ்சி சேமித்து வைத்துக்கொள்ளும் வகையில், இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ‘லண்டன் நகரம் முழுவதும், இது போன்ற பசுமை சுவர்கள் அமைக்கப்படும். கட்டடங்களுக்காக, தாவரங்கள் அழிப்படுவதால், கட்டடங்களிலேயே, தாவரத்தை வளர்க்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம். உலகின் பல நாடுகளும் இந்த முறையை பின்பற்றினால், உலகம் வெப்பமயமாதலை தவிர்க்கலாம். இவ்வகை தோட்டங்கள், மழைநீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இதில் வளர்க்கப்படும் தாவரங்களுக்கு அதிக நீர் தேவைப்படாது. வெள்ளம் ஏற்படும் காலங்களில், கட்டடத்தின் சுவர்கள் பாதிப்படையாமலும், சுவர் அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த தாவரங்கள் உதவி புரியும்’- என்கிறார் லண்டன் மேயர், போரிஸ் ஜான்சன். ****************** கண்களில் விநோதம்! * மனிதர்களுக்கு ஒரு கண்ணில் ஒரு லென்ஸ் மட்டுமே உள்ளது . ஆனால், தட்டான் பூச்சிகளுக்கு ஒரே கண்ணில் ஆயிரக்கணக்கான லென்ஸ்கள் உண்டு ! * தேனீக்கு மொத்தம் 5 கண்கள் . இரண்டு கூட்டுக் கண்கள் . மூன்று ஒற்றைக் கண்கள் . ஒற்றைக் கண்களால் அருகில் உள்ள பொருள்களைக் காணலாம் . கூட்டுக் கண்கள் தொலைவில் உள்ள பொருள்களின் தன்மையை அறியப் பயன்படுகின்றன . * நம் கண்களின் மேல் இமையில் 90 முதல் 160 முடிகளும், கீழ் இமையில் 75 முதல் 80 முடிகளும் இருக்கும் . இமை முடி வளர 30 நாட்களாகும் . வாழ்நாள் வெறும் 5 மாதங்கள்தான் . *சூரியனை நேருக்கு நேர் பார்க்கக்கூடிய ஒரே பறவை கழுகு. கொடியும் சின்னமும்! *தனது நாட்டு தேசியக்கொடியில் கோவிலைக் கொண்டுள்ள நாடு கம்போடியா (அங்கோர் வாட் கோவில் கொடியில் உள்ளது.) *உலகில் தேசியக் கொடிகளில் அதிக அளவில் இடம்பெற்றுள்ள சின்னம் நட்சத்திரம். இதனை 44 நாடுகளின் தேசியக் கொடியில் காணலாம். *பூவரசம்பூவை தேசிய சின்னமாக வைத்திருக்கும் நாடுகள் ஹங்கேரி, ருமேனியா. *ஜனவரி முதல் தேதியை சுதந்திர தினமாக கொண்டாடும் நாடு சூடான். ********************* அதிசய பன்றி! குவாண்டமாலா நாட்டில் உள்ள சிறிய கிராமம் ஒன்றில் அதிசயமான பன்றிக் குட்டி ஒன்று பிறந்துள்ளது. அதன் தலை மற்றும் அதன் தோற்றம் பன்றி போல இல்லாமல் விசித்திர முகம் கொண்டதாக இருந்தது. இக் கிராமத்தில் அடிக்கடி வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்வதாக ஊர்மக்கள் சொல்லுகின்றனர். வேற்றுக்கிரக வாசிகள் வந்துசெல்லும் பறக்கும் தட்டைத் தாம் கண்டதாவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் உள்ள பண்ணைகளில் இரவுநேரங்களில் வேற்றுக் கிரக மனிதர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இதன் காரணமாகவே இப் பன்றிக் குட்டி இவ்வாறு பிறந்திருக்கிறது என அக் கிராம மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இப் பன்றிக்குட்டி வேற்றுக்கிரக மனிதர்களின் ஆராய்ச்சியால் அல்லது அவர்களின் பறக்கும் தட்டில் இருந்து வெளிப்பட்ட கதிரியக்கத்தால் இப்படி பிறந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. நெற்றியில் மூக்கு! சீனாவை சேர்ந்த ஜியோலியன் என்பவருக்கு நெற்றியில் மூக்கு வளர்ந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு ஒரு சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் குருத்தெலும்பு முற்றிலுமாக சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. இதனை மருத்துவர்களால் சரிசெய்ய முடியவில்லை. அதற்காக தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கை உருவாக்க முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. நெற்றியில் மூக்கு முளைத்த அந்த அதிசய மனிதனைத்தான் படத்தில் பார்க்கிறீர்கள். இந்த மூக்கு முழு வளர்ச்சியடைந்ததும், அந்த இடத்தில் இருந்துவிரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு பொருத்தப்பட உள்ளதாம்! அபூர்வ கிளி! சாதாரண கிளிகள், பஞ்சவர்ண கிளிகள், வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளை, நீல வண்ண சிறிய கிளிகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை, பலர் தொழிலாக கொண்டுள்ளனர். ஆப்ரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி ஒரு அபூர்வமான கிளி. பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்ரிக்க காடுகளில் வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை. 120 வகையான ஒலிகளை எழுப்பக் கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம், 80 முதல், 95 ஆண்டு. ஒரு வயதான சாம்பல் கிளி விலை, 35 ஆயிரம் ரூபாய். நன்கு வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில் அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் வாஸ்துக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றனர் ******************* நீர் மூழ்கி கப்பல் * உலகில்முதன் முதலாக நீர்மூழ்கி கப்பலுக்கான வடிவ வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே. இவர் இங்கிலாந்துக்காரர். 1578ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். இருப்பினும் , முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் இவர், நெதர்லாந்து நாட்டுக் காரர். இவர்,1620ம் ஆண்டு நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்தார். அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது. ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். பல வசதிகளுடன் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும், சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன. ********* வெங்காயம்! *வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. **** அட அப்படியா! மங்கோலியர்கள் இந்தியாவை ‘தெய்வத்தின் நாடு’ என்பர். இந்தியாவின் வரைபடத்தை வரைந்தவர் டா ஆன்வில். இந்தியாவில் முதலில் உருவான மாநிலம் உத்திரப்பிரதேசம். இந்தியாவில் காபி பானம் 1600ல் அறிமுகமானது. இந்தியாவில் கம்ப்யூட்டர் 1986ல் அறிமுகமானது. இந்திய மொழிகளில் முதல் கலைக் களஞ்சியம் தமிழில்தான் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் அதிக ஆயுள் கொண்டவர்கள் பஞ்சாபியர்கள். இந்தியாவில் ஆண்களே பெண்களைவிட அதிக நாட்கள் உயிர் வாழ்கிறார்கள். இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா 1912 வரை இருந்தது. **************** சின்ன சின்ன தகவல்கள் *கடல் உயிர்கள்: கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும். ஆனால் கடலில் வாழும் உயிரினங்கள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, அல்கா, நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும். கடல் அல்லி: கடல் அல்லி என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுத்துகின்றன. பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய வகை உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும். கடல் தாமரை கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச் சுற்றிக் காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர் ஈரடுக்கு உயிரி. முனிவன் எனப்படும் உயிரியோடு இது கூட்டு வாழ்க்கை நடத்துகிறது. இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின் ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நன்டு நகர்ந்து செல்லும் இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது. அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும். எதிரிகளை அழிக்கவும் முடியும். அட, அப்படியா! *யானைகள் யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை! யானைக்கு கிட்டப் பார்வை மட்டும்தான் உள்ளதாம். இந்திய பெண் யானைகளுக்கு தான் தந்தம் கிடையாது. ஆனால் ஆபிரிக்க பெண்யானைகளுக்கு தந்தம் உள்ளது. பொதுவாகவே பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதே கிடையாதாம். யானைகளுக்கு என்று ஒரு மருத்துவமனை கேரளாவில் உள்ளது. யானையின் இரண்டு தந்தங்களும் சம அளவில் இருப்பதில்லை. யானைக் குட்டிக்கு 3 முதல் 5 வயதுக்குள் தந்தம் முளைக்கிறது. *************** பாம்பு புராணம்! *பாம்புக்கு காது கிடையாது.ஆனால் நம்ம எல்லாரையும் விட அதிகமா சப்தங்களை உணரும் சக்தி பாம்புக்கு உண்டு. *பாம்புகளுக்கு மூக்கு கிடையாது, ஆனால் வாசனை/ நாற்றங்களை மிகச்சரியாக உணரும் திறன் கொண்டிருக்கும்! *பாம்புகள் உணவே இல்லாமல் பல மாதங்கள் வாழ மட்டுமல்ல, வளரவும் செய்யுமாம்! *உலகத்தில் ரொம்பச் சின்ன பாம்பை 2008-ல் “பார்படோஸ்” இடத்துல கண்டுபிடிச்சாங்களாம். அதோட அளவு 10 செ.மீ தானாம்! *சில வகை நல்ல பாம்புகளை “துப்பும் நாகம்”அப்படின்னு சொல்றாங்க. இந்த வகை நல்ல பாம்புகள், விஷத்த கிட்டத்தட்ட 2 மீட்டர் துõரம் வரை துப்பக்கூடியது. அதுமட்டுமல்ல; இந்த பாம்பு கண்ணைக் குறி வச்சுத்தான் விஷத்தத் துப்புமாம். துப்புற விஷம் கண்ணுல பட்டா, உடனே கண் குருடாயிடுமாம்! *மலைப்பாம்பு தன்னோட இரை முழுசையும் (எலும்பு கூட!) தின்றுவிடுமாம்! மலைப்பாம்புகள் மாசக்கணக்கில் சாப்பிடாமலே இருக்குமாம்.அதேசமயத்துல, சாப்பிடும்போது ஒரு சின்ன துண்டு கூட விடாம, அப்படியே சாப்பிடுமாம்! அதுக்கு காரணம், இந்தப்பாம்புகளுக்கு எலும்பைக்கூட செரிக்க வைக்கிற அளவுக்கு சிறப்பான உடலமைப்பாம்! *ஒரு வகை பாம்பு 50 அடி துõரம் வரை பறக்குமாம்! ************** ****விடுகதை*** * அடி மலர்ந்து நுனி மலராத பூ எது? * காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன? * காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? *சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன? * ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? * நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? விடைகள்: *வாழைப்பூ * பேனா * நாவல் பழம் * காய்ந்த மிளகாய் * பம்பரம் *பூனை ** ****மிகப்பெரிய வியாழன் கிரகம்*** சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய கிரகம் எ?ன்ற பெருமையைப் பெற்றது வியாழனாகும். மிகப்பெரிய கிரகமாக விளங்கும் வியாழனை, ஆங்கிலத்தில் ரோமானிய ஆட்சிக் கடவுளான ஜூபிடரின் பெயரால் அழைக்கப்படுகிறது. சூரியனிலிருந்து ஐந்தாவதாக உள்ள வியாழன் கிரகம், விண்வெளியில் சூரியன், நிலா, வெள்ளி கிரகங்களுக்கு அடுத்தபடியாக பிரகாசமாகத் தெரியக் கூடிய கிரகமாகும். வியாழனின் சுற்றளவு பூமியைப் போல 11 மடங்கு அதிகமாகும். வியாழன் கிரகத்திற்கு உள்ளத் துணைக் கிரகங்களில் இதுவரை 28 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிரகம் முழுவதும் வாயுக்களால் நிரம்பி உள்ளது. இந்த வாயுக்களின் பிரதிபலிப்பால்தான் இந்த கிரகம் பிரகாசமாகக் காட்சி அளிக்கிறது. ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற கனமற்ற வாயுக்கள் நிரம்பியிருப்பதால் பூமியை விட வியாழன் அடர்த்தி குறைவானதாக உள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அனுப்பிய கலீலியோ விண்கலத்தில் இருந்த சென்ற ஆய்வுக்கலம், வியாழன் கிரகத்தின் உள்பகுதி படங்களை எடுத்து அனுப்பியது. ** ***அப்படியா!*** மலைப்பாம்பு இறகு, முடி தவிர மற்ற அனைத்தையும் ஜீரணித்து விடுமாம். நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கக் கூடியதாம். நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டுமாம். நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும். ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம். வண்ணத்துப் பூச்சிகள் தன் பின்னங்கால்களால்தான் சுவையை அறிகின்றன. ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும். ************************************ இரண்டு தலை ஆமை! அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் சான் ஆண்டனியோ என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அவ்வப்போ ஒன்று 2 தலை விலங்கு பிறக்குமாம். இங்கு, சமீபத்தில் கடல் ஆமை 2 தலையுள்ள குட்டி போட்டது. அது நல்ல உடல்நலத்துடன் இருப்பதால் பார்வைக்கு வைக்க கால்நடை மருத்துவர்கள் சிபாரிசு செய்தனர். அந்த அரிய விலங்கினை சிறுவர்கள் முதல் முதியோர் வரையில் கண்டுகளிக்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்த பூங்காவில் இதற்கு முன்பு 2 தலை எலி, 2 தலை பாம்பு ஆகியவை பிறந்து பார்வையாளர்களை கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ** பேசும் யானை! தென் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசுகிறது. அதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுகின்றனர். கசகஸ்தான் நாட்டில் யானை ஒன்று மனிதர்களை போலவே பேசியது குறித்து தகவல்கள் வெளியாயின. அந்த யானை ரஷ்ய மற்றும் கசக் மொழியில் சில வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்டது. ஆனால், யானை பேசுவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தென் கொரியாவின் எவர்லேண்ட் வன விலங்கு உள்ள பூங்காவில் உள்ள கோஷிக் என்ற ஆசிய யானை மனிதர்களை போலவே மிமிக்ரி செய்து வருகிறது. இந்த யானை கொரிய மொழியில் ஹலோ, நோ, சிட் டவுன், குட் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கிறது. தனது துதிக்கையை வாய்க்கு திணித்து ஒலி எழுப்புவதாக கூறுகின்றனர். இதுகுறித்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொரிய மொழியில் சில வார்த்தைகளை கோஷிக் யானை பேசினாலும், அதன் அர்த்தம் அதற்கு தெரியவில்லை. *** பாலப்பழம் கணக்கு சங்க காலத்திலேயே எழுதப்பட்ட கணக்கதிகாரம் என்ற நூலில் பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது. ‘பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே வேறெண்ண வேண்டாஞ் சுளை.‘ - கணக்கதிகாரம் விளக்கம் : பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் ! ******************* 07/06/13/ சிறுவர்மலர்/ தெரிஞ்சுகுங்க நமது உடல் ஆச்சரியங்கள்! *குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும். *நமது உடல் எடையில் 14சவீதம் எலும்புகளால் ஆனது. * உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு. * உடல் எடையில் 7 சதவீதம் ரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் ரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது. *உடலில் உள்ள ரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் ரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன. *நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம். *நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. *நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் ரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு. *மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது. *ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் ரத்தத்தை ரத்த குழாயில் செலுத்துகிறது. *மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன. *நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20 சதவீதம் மூளைக்கு செல்கிறது. *நமது மூளை 80 சதவீதம் நீரால் ஆனது. *நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான். *மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது. *மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம், கண்கள் 31 நிமிடங்கள் , மூளை 10 நிமிடங்கள் , கால்கள் 4 மணி நேரம், தசைகள் 5 நாட்கள் , இதயம் சில நிமிடங்கள் மட்டுமே! **** முட்டை சிறிது குஞ்சு பெரிது! முட்டையில் இருந்து வெளிவந்தப்பின் முதலைக்குட்டி, தான் இருந்த முட்டையைவிட மூன்று மடங்கு பெரிதாக இருக்குமாம்! நீல நிறம் தெரியும்! பறவைகளில் ஆந்தைகளுக்கு மட்டும்தான் நீல நிறத்தைப் பார்க்க முடியும்! ********************** அப்படியா! *உலகத்தில் இயற்கையாக இறப்பவர்களைவிட விபத்துகளினால் கூட்டம் கூட்டமாக உயிரிழப்பு ஏற்பட்டுகொண்டிருகிறது . இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் இதுபோன்று விபத்துக்கள் அதிகமாக எந்த நாளில் ஏற்படுகிறது என்பதையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள். உலகத்தில் அதிகமான விபத்துக்கள் சனிக்கிழமைகளில்தான் ஏற்படுகிறதாம் . * ஜப்பானீஷ் கிரேன்ஸ். இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். மனிதர்களில் நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே . *உலகத்தில் உள்ள விலங்கினகளில் கேட் பிஷ்வகை விலங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27, 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் . *இந்தியாவின் பெருமைகள் 1) உலகிற்கு முதன்முதலில் யோகா கலையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா 2) உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா 3) ஒரே நிறுவனத்தில் உலகில் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் இடத்தினைக் கொண்ட நாடு இந்தியா- இந்தியன் ரயில்வே . 4) உலகில் மிக உயரத்தில் அமையப்பெற்ற பாலத்தினைக் கொண்ட நாடு இந்தியா .பெய்லி பாலம்(இமயமலை பிராந்தியம்) 5) உலகில் மிக உயரமான கற்கோபுரத்தினைக் கொண்ட நாடு இந்தியா - குதுப் மினார் 6) உலகில் மிகப் பெரிய பாடசாலையினைக் கொண்ட நாடு இந்தியா - குணிதtட கணிடிணt ஏடிஞ்ட குஞிடணிணிடூ 7) உலகில் மிகப் பெரிய அரசியலமைப்பு சட்டத்தினைக் கொண்ட நாடு இந்தியா 8) உலகில் மிக நீளமான சாலையினைக் கொண்ட நாடு இந்தியா- (சென்னை- கொல்கத்தா இடையிலானது) 9) உலகில் மிக உயரமான மலைத்தொடரினைக் கொண்ட நாடு இந்தியா - இமய மலை 10) உலகிற்கு முதன்முதலில் இலக்க முறையினை அறிமுகப்படுத்திய நாடு இந்தியா ************** ஆ... ஆச்சரியம்! *கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே துõங்கும். *குவாரின் என்ற பறவை மல்லாந்து துõங்கும். *வாத்துக்கள் நீரில் வட்டமடித்துக் கொண்டே துõங்கும். *ராபின் இனப்பறவை பாடிக் கொண்டே துõங்கும். *பாம்புகள் கண்களைத் திறந்து கொண்டேக் கூட துõங்கும். *டால்பின்கள் ஒரு கண்ணை மட்டும் திறந்து கொண்டே துõங்கும். *வரிக்குதிரை நின்று கொண்டேத் துõங்கும். *மாடுகள், ஒட்டகங்கள் அசை போட்டுக் கொண்டேத் துõங்கும். *கோழிகள் நின்று கொண்டேத் துõங்கும். *குரங்குகள் மரத்தில் தொங்கியபடியேத் துõங்கும். * நாய்க்கு நிற வேறுபாடு தெரியாது. * யானைக்கு குதிக்கத் தெரியாது. * பாம்புக்கு கேட்கும் சக்தி இல்லை. * ஈமு, கிவி பறவைகளுக்கு பறக்கும் சக்தி இல்லை. * குதிரைக்கு படுத்து உறங்கத் தெரியாது. அப்படியா! *பல்லி போன்ற ஊர்ந்து செல்லும் பிராணிகள் தங்களின் நாக்கினால் பூச்சிகளைச் சுண்டி இழுத்துப் பிடிக்கும். சில நேரம் நாக்கில் ஊறும் திரவத்தால் தரையைத் தொட்டு உணவைச் சேகரித்துக் கொள்ளும். பாம்பு, உடும்பு போன்ற பிராணிகளும் உணவு தேடிக்கொள்ள நாக்கை வெளியே சுழற்றிக் கொள்கின்றன. *அட்லான்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது. *முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். *மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். ******************* *மானின் கொம்புகள் ஆண்டுக்கு ஒருமுறை விழுந்து முளைக்கிறது. *நாய் மகிழ்ச்சியில் வால் ஆட்டும். பூனையோ கோபம் வந்தால்தான் வாலை ஆட்டும். *நீர் யானைக்குக் கோபம் வந்தால் கொட்டாவி விடும். *ஆமையின் மூளையை எடுத்து விட்டாலும் அது உயிருடன் இருக்குமாம். *மனிதனுக்கு இணையான அறிவாற்றல் டால்பினுக்கு உண்டு. *கோழி முட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம் நுண் துளைகள் இருக்கின்றன. *ஆந்தையால் ஒரே நேரத்தில் இரு கண்களாலும் இருவேறு காட்சிகளைக் காண முடியும். *பூனைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்குகின்றன. *நண்டுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டையை (மேல்தோல்) உரிக்கின்றன. *ஒரு ஜோடி எலி ஒரே ஆண்டில் 800 குட்டிகள் வரை போட்டு விடும். *புழுவை இரண்டாகத் துண்டித்துப் போட்டாலும் அது சாகாது. *காண்டாமிருகத்தின் காலில் மூன்று பாதங்கள் இருக்கின்றன. *பூச்சி இனங்களில் அறிவாற்றல் அதிகமுடையது எறும்பு. *உலகில் அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான். *கடல் பிராணியான ஆக்டோபஸின் இரத்தம் நீல நிறத்தில் இருக்கும். அதிசய ஆங்கில வாக்கியம்: “கச்ஞிடு ட்தூ ஞணிது தீடிtட ஞூடிதிஞு ஞீணித்ஞுண டீதஞ்ண் ணிஞூ டூடிணுதச்ணூ” இது ஓர் அதிசயமான ஆங்கில வாக்கியம் ஆகும்! என்ன என்கிறீர்களா? மேற்கண்ட வாக்கியத்தில் ஆங்கில எழுத்துகள் 26ம் அடங்கி இருப்பதுதான் அந்த அதிசயம். “கூஏஅNஓ ஙுOக்” நன்றி கூறுவதை சட்டமாக்கியிருக்கும் நாடு எது தெரியுமா? சுவீடன். ************************