செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஆன்மிகம்

முடிவுகள் முடிவதில்லை...1.(11.9.2011)

(தினமலர் வாரமலர் இதழில் நான் எழுதி வரும் ஆன்மிகம் தொடர் கட்டுரையின் முதல் பாகம் 1)

வாழ்க்கையில் தோல்வி, துயரம், ஏமாற்றம், இழப்பு இவை விதிக்கப்பட்டு நமக்கு ஏற்பட்டவை இல்லை. நம் முயற்சிகளின், ஆசைகளின் பயணத்தில் ஏற்பட்ட ஒரு சிறு இடர் காரணமாகவே வருபவை.
யாருக்குத்தான் ஆசை இல்லை? முயற்சி இல்லை? அடைய வேண்டிய ஒருஇலக்கு இல்லாமலா இருக்கிறது?
சிலர் அதிகம் முயற்சி செய்யலாம்; சிலர் குறைவாக முயற்சி செய்யலாம்; ஆனால், எல்லாரும் எப்பொழுதும் ஏதாவது முயற்சி செய்துகொண்டே தான் இருக்கிறோம் என்பதே உண்மை.
ஒவ்வொரு முயற்சிக்கும் செயலுக்கும் ஒரு பலன் இருக்கத்தான் செய்யும். காரணம் இல்லாமல் காரியம் நிகழ வாய்ப்பில்லை.
பலரும் ஏதாவது ஒரு பலனை மனதில் எதிர்பார்த்தே செயல் புரிகிறார்கள். அந்த செயலை விரும்பி செய்கிறார்கள். நாம் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப, பலன்களும் பலவகையாக இருக்கும்.
நம் எல்லாருக்கும் ஒரு தலை இருகை, இரு கால் ஒரு சாண் வயிறுதானே இருக்கிறது? ஆனால் தேவைகளும், ஆசைகளும் வெவ்வேறாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளோடு, செயல்களோடு இருப்பதால் வெவ்வேறு பலன்களைத் தேடிச் செல்கிறோம். அதனால் நம் புத்தியும் பலகிளைகள் கொண்டது போன்றுள்ளது.
எதைத் தேடினாலும், பணமோ, பட்டமோ, பதவியோ, இன்பமோ அதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லாமல் உள்ளது. இது ஏன்?
எதை விரும்புகிறோம், எதைத்தேடுகிறோம், என்ன பலனை எதிர்பார்த்து என்ற நிச்சயம் இல்லாதவர்களின் மனம் பேதலித்து நதி போன்று வளை நெளிந்து அலைகிறது.
விரும்பும் பலன்களோ பல பல; அவற்றை அடையும் வழிகளோ பலபல; அவற்றைக் குறித்த சிந்தனைகளோ பல பல. அதற்கான முயற்சிகளும் பல பல.
நாம் தேடும் பொருள் அல்லது இன்பம் நம்மிடமிருந்து விலகி இருக்கும் பொழுது அந்தப் பொருளை அடைய பல வழிகளில் தேடி செல்வதால் தேடுவதற்கு முடிவே இல்லை.
பணம் அல்லது பதவியை உதாரணம் எடுத்துக்கொண்டு பார்த்தால், அவற்றை அடைய நேர் வழி, குறுக்கு வழி என எத்தனை வழிகள்? அதனால் அந்த வழிகள் எல்லாம் நீண்டு கொண்டே செல்கின்றன. இம்மாதிரியே இன்பங்களும் பல. அவற்றைத் தேடும் வழிகளும் பல. இது தான் நிலமை; இது தான் பலன்; இது தான் வழி; இது தான் முயற்சி என்று ஒருமனதாக நினைத்து விட்டால் அப் போது அடைய வேண்டியதில் எது முன்னுரிமை பெற வேண்டும், முயற்சிகளில் எது முக்கியமானது என்பது பற்றி மனதானது தெளிவு பெறும். மனதில் தெளிவு இருந்து விட்டால் குழப்பங்கள் விலகி,இலக்கு கண் முன்னே தெரிந்துவிடும். இதை குறிகோள் என்கிறோம்.
அடைய வேண்டியது எது, அதைப் பெறும்வழி எது என்பதில் தெளி வு உள்ளவர்களுக்கு ஒரே புத்திதான் இருக்கும். அதாவது எது நிலையற்றது எது நிலையானது என்று பகுத்து அறியும் திறமை வந்துவிடும். எது நிலையானது என்ற உண்மை உணரத் தொடங்கி விட்டால் மயக்கம் என்கிற திரை விலகி விடும். ஞானம் வெளிச்சத்தை தரிசிக்கலாம். அந்த ஞானத்திலேயே மூழ்கினால் இறைவனின் திருக்காட்சி கண்டு பேரின்பம் பெறலாம்!
தேவராஜன்.
***

கடமையிலும் கடவுள் பார்க்கலாம்! 2 (18.9.2011)

சும்மா இருப்பது ஒருநிலை. செயலாற்றுவது ஒருநிலை. இவ்விரு நிலையிலும் இறை உணர்வுடன் இருக்கலாம். சும்மா இருப்பது என்பது மனசு சும்மா இருத்தல் நிலை. அது ஞானியர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். அது சாதாரண ஆசாபாசம் உள்ள நம்மால் இயலாத காரியம்.
நாளும் பொழுதும் நம் அனைத்து செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யலாம். பூ, பழம், உணவு போன்றவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஆனால், நிற்பது , நடப்பது, பேசுவது , துõங்குவது இது போன்ற செயல்களை எல்லாம் எப்படி அர்ப்பணிப்பது என்று கேள்வி எழும். அதற்கும் பதிலுண்டு. புரியும் படி சொல்கிறேன்:
தர்மம் என்பது சாதாரண தர்மம், சிறப்பான தர்மம் என இருவகை. சாதாரண தர்மம் என்பது எல்லாருக்கும் பொதுவானது. அது உண்மை பேசுதல், உதவி செய்தல், பிறரை துன்புறுத்தாமல் இருப்பது போன்ற எதையெல்லாம் மற்றவர் நமக்குச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விரும்புகிறோமோ அது அனைவருக்கும் பொதுவான தர்மம்; அடிப்படையான தர்மம். இதற்கு விதிவிலக்கில்லை. எல்லாரும் கடைபிடிக்க வேண்டும்.
சாதாரண தர்மத்திலிருந்து விரிவு கொண்டது சிறப்பு தர்மம். சாதாரண தர்மமாகி அஸ்திவாரம் பலமாக இருந்தால் தான் கட்டடம் என்கிற சிறப்பு தர்மம் எழுப்ப முடியும்.
சிறப்பு தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட வாழ்க்கை நிலையில் நாம் ஏற்றிருக்கும் உறவு நிலையை ஒட்டி அதாவது அப்பாவா, கணவனா, மகனா போன்ற பாத்திரத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதுதான் சிறப்பு தர்மம்.
ஒவ்வொரு சூழ்நிலையும் நம்மிடமிருந்து சில கடமைகளை எதிர்பார்க்கிறது. அதை நேர்மையாக, உண்மையாக, இறைவனின் பார்வையில் செய்ய வேண்டும். அது தான் நமக்கான சிறப்பு தர்மம்.
உண்மை பேசுதல், அன்பாக இருத்தல் முதலான சாதாரண தர்மமும், நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நேர்மையாக செய்வதுமான சிறப்பு தர்மமும் இந்த இரண்டுமே கடவுளின் வெளிபாடுதான். இறைவனிடமிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதல்ல. தர்மத்தையே இறைவன் வெளிபாடு என்றும், தர்மம் வேறு கடவுள் வேறெல்ல என்ற மனபக்குவத்தில் செய்யப்படும் ஒவ்வொரு செயல்களும் இறைவனுக்கு அர்ப்பணித்தலுக்கு சாத்தியமாகிறது.
அவரவர் மேலே சொன்ன இருவித தர்மத்தை கடைபிடித்து, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யும்போது, ஒவ்வொரு சந்தர்ப்ப, சூழ்நிலையிலும் தன்னை எதிர்நோக்கி இருக்கும் கடமைகளைச் செய்யும்போது அதுவே இறைவனுக்கு பூஜையாகிறது. இவ்வாறு தன் தினசரி கடமைகளையே இறைவனுக்கு அர்ப்பணமாக செய்தால் மனம் துõய்மையடைகிறது. துõய்மையடைந்த மனம் தெய்வீக தன்மையை அடைகிறது.
தேவராஜன்.
***

வாரமலர்/ஆன்மிகம்/3/ (25.9.11)

வேண்டுதல் வேண்டாமை வேண்டும்

பக்தி , ஆன்மிகம் என்பது நம் தேவைகள், ஆசைகள், விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள உதவும் சாதனம் என்று நம்மில் பலர் நினைக்கிறார்கள்.
அது உண்மை என்பது போலவே கோயில்களில் கூட்டம் பெருகிவருகிறது.
எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும், எத்தனை கடவுள்களைப் பார்த்தாலும் முதல் பிரார்த்தனை இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்பதுதான்.
இப்படி கடவுளிடம் கோரிக்கைகள் வைப்பது என்பது அறியாமையே.
நம் கஷ்டங்கள், துயரங்கள், தேவைகள் பற்றி கடவுளிடம் முறையிடும்போதே, நம்மை பற்றி கடவுளுக்கு எதுவும் தெரியாது. நாம் தான் ஞாபகப்படுத்தி, நியாயப்படுத்தி கேட்டுபெற வேண்டும் என்ற மனோபாவம் இருக்கிறது.
நாம் நம் குறையையோ தேவையையோ கடவுளிடம் சொல்லிக் கேட்காவிட்டால் எதுவும் நமக்கு கிடைக்காது என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்கிறோம்.
நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவானது
காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, காதலனின் மன மானது காதலியிடம் எப்படி போய் கலந்துகொள்கிறதோ, நதியானது கடலில் கலந்து விடுகிறது போல், கட வுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அருள் செய்கிற கடவுளிடத்தில், நம்மைஅறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு எவ்வித காரணமும் இருக்கக் கூடாது.
காரணம் என்று வந்தால் அது பக்தி வியாபாராமாகி விடும். கடவுளிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்!
ஒன்றை கொடுத்து வேறு ஒன்றை பெறுவதுபோல ,செல்வ த்தைக் கொடு, பக்தி செய்கிறேன் என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.
அது மட்டுமல்ல; கடவுளின் எல்லாம் அறிந்த ஞானத்துக்கு குறை உண்டாக்குகிறோம். இந்தக் கஷ்டத்தைப் போக்கு என்கிற போது நாம் கேட்டுத்தான் கடவுள் ஒன்றை நமக்கு செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாக அருளும் கடவுளின் கிருபைக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம்.
அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, கடவுளிடத்தில் போய் சேருவதையே லட்சியமாய் நினைத்து தன்னை அறியாமல் நமக்குள் நினைப்பு இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.
சரி, கடவுளிடம் இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்டு பிரார்த்திக்கக்கூடாதா என்று சந்தேகம் எழுந்தால், அது தவறல்ல.
இப்படிப்பட்ட பிரார்த்தனையால், நம்முடைய மனச்சுமை தற்காலிகமாகவாவது இலேசாகி, கொஞ்சம் சாந்தி பிறக்கும்.
ஒருவேளை கடவுளும் நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூட பொருட்படுத்தாமல் நம் கர்மாவையும் மீறி பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம்.
இருந்தாலும் இவ்வகை பிரார்த்தனையால்
ஒரு கஷ்டம் தீர்ந்தால் இன்னொரு கஷ்டம் என்று வாழ்க்கையில் வந்து கொண்டேதான் இருக்கும். நம் பிரார்த்தனைக்கு முடிவு இல்லாமல் தான் இருக்கும்.
அதனால், நானாக எதுவும் கேட்கமாட்டேன். நீ என்ன கொடுக்க விரும்புகிறாயோ அதை தா! என்று சரணாகதி செய்வதுதான் பக்தி.
தேவராஜன்.
***

உங்களைத் தேடி இறைவன் வருவான்! 4 (2.10.11)

இறைவன் பஞ்ச பூதங்களாக இருக்கிறான், மந்திரமாக இருக்கிறான். அவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், சர்ச்சில் இருக்கிறான் என்றெல்லாம் நம்பும் மக்கள் அவனைத் தேடி தேடி பிரார்த்திக்கிறார்கள். தங்கள் துன்பம், துயரங்களை எல்லாம் கொட்டித்தீர்க்கிறார்கள்.
நீங்கள் தேடும் அதே இறைவன் உண்மையில் இருக்கிறான், தர்மத்தில் இருக்கிறான், நேர்மையில் இருக்கிறான், செய்யும் தொழிலில் இருக்கிறான் என்பதையோ; இறைவன் அவரவர் உள்ளத்தின் உள்ளே இருக்கிறான் என்பதை உணராமலும் இருக்கிறார்கள்.
கோயில்களில் மட்டுமல்ல ஏனையவற்றிலும், நம் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை வர வேண்டுமானால் நாம் உண்மையே பேச வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். இவையெல்லாம் நாம் செய்ய இயலாமல் இருப்பதால் தான் இறைவனை கோயில்களில் மட்டுமே இருப்பதாக நினைத்துவிடுகிறோமோ, என்னவோ?
வெளியே என்ன இருக்கிறது வெளியே என்ன இருக்கிறது என்றே நாம் வாழ்க்கையில் வெளியேயே தேடிக்கொண்டிருப்பதால், உள்ளே என்ன இருக்கிறது உள்ளே என்ன இருக்கிறது என்று தேடுவதில் நாட்டமில்லாமல் இருக்கிறோம்.
நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறோம். பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்கிறோம். நாம் உடுக்கும் ஆடையை துவைத்து சுத்தமாக வைத்திருக்கிறோம். தினமும் குளிக்கிறோம். பல் துலக்குகிறோம். இதையெல்லாம் மிக சரியாக, பிறர் சொல்லாமலே செய்யும் நாம் நம் உள்ளத்தை மட்டும் அழுக்குப்படிந்த குப்பை கூடையாக வைத்திருக்கிறோமே!
பொறாமை, பேராசை,போட்டி, கோபம், அகங்காரம்,வெறுப்பு, காமம், பொய், புரட்டு, தில்லுமுல்லு என்று பலபல அழுக்குகளை உள்ளத்தில் நாளும் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் இத்தனை அழுக்குகள் சேர்ந்தால் என்னவாகும். துயரம், தோல்வி, ஏமாற்றம், அமைதியின்மை போன்ற கிருமிகள் எழுந்து, ஆத்மாவை நோய்வாய்ப்படுத்தும். இதனால் நாளும் கவலை, கஷ்டம்,நிம்மதியில்லாத வாழ்க்கை சூழல் ஏற்படச்செய்யும்.
இவ்வளவு குப்பையாக உள்ளத்தை வைத்துக்கொண்டால் உள்ளத்தில் இறைவன் எப்படி இருப்பான்?
தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என இப்படி பல நல்ல செயல்களை உங்கள் இயல்பிற்கு ஏற்றவாறு ஏதோ ஒன்றை உறுதியாய் தேர்ந்தெடுந்து, அதை வாழ்க்கையில் தினமும் விடா முயற்சியுடன் பின்பற்றுங்கள்.
இதனால் உங்கள் உள்ளம் உங்களால் தூய்மையாகும். பின்பு நல்லனவெல்லாம் வரும். இறுதியில் கோயிலில் தேடும் அந்த இறைவன் உங்களைத் தேடி வருவான்.
***

தனிமைக்கு துணை பக்தி! 5 ( 9.10.2011)

ஒரு மனிதனுக்கு கடைசி காலத்தில் ஏற்படும் தனிமை விரக்தியை நீக்குவது எது? நிம்மதி தருவது எது? துணையாக இருப்பது எது? இப்படி ஒரு கேள்வி எழுந்தால், பதில் பல வரும். சொத்து, சுகம், பந்தம், பாசம்...
பணி ஓய்வுக்குப் பிறகு அல்லது முதுமையில் தனிமையை போக்க பலர் பல வழிகளைத் தேடுகின்றனர்.
வீட்டு செல்ல பிராணிகளான நாய், பூனை வளர்ப்பது, அவற்றை கொஞ்சி மகிழ்வது பிடிக்கும்.
வீட்டில் செடி, கொடிகள் வளர்ப்பதும் அவற்றின் மீது கவனம் செலுத்துவோர் உண்டு.
நாளிதழ், புத்தகங்கள் படிப்பது, கதைகள் படிப்பது, எழுதுவது இப்படி சிலர் தனிமையைக் கழிப்பர்.
டி.வி., சினிமா,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்த்து தங்களின் தனிமையை போக்குபவர்களும் உண்டு.
உற்றார், உறவினர், நண்பர்களிடத்தில் பேசி, சிரித்து தனிமையை விரட்டிக்கொள்வதாக கூறுவோரும் இருக்கிறார்கள்.
நவீன கண்டுபிடிப்புகளான வீடியோ கேம், இன்டர்நெட், ஐபாட், மொபைல் போன் போன்ற பல டிஜிட்டல் சமாச்சாரங்களும் ஒருவரின் தனிமையை போக்குவதில் பங்கு பெறுகின்றன.
தனிமை என்பது வலி தரக்கூடிய ஓர் உணர்வு. அதை தாங்க முடியாதவர்கள் எப்போதும் விரக்தியாக, மனம் பேதலித்தவர்கள் போலவும் இருப்பர். இப்படி பட்டவர்கள் சீக்கிரமே தனிøயில் இருந்து விலகி இருக்க புகைபிடித்தல், குடி போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி போதையில் தன்னை மறந்து இருப்பதையும் அறியாமையால் விரும்புகின்றனர்.
மேலே சொன்னவை எல்லாம் தனிமையை போக்கும் தற்காலிக வழிமுறைகள். நிரந்தரமாக தனிமையை போக்க ஒரு அருமையான வழி இருக்கிறது. அது கடவுள் பக்தி!
இந்து சமயத்தில் வயதனாவர்கள் குடும்ப பொறுப்புகளை எல்லாம் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, தலம், தீர்த்தம், மூர்த்தி என்று கிளம்பிவிடுகின்றனர்.
வீட்டில் வயதானவர்கள் ஏதாவது தொந்தரவு செய்தால் கூட, "கடைசி காலத்தில் சிவனேன்னு இருக்கக்கூடாதா?' என்றுதானே சொல்கிறோம்.
கடவுள் பக்தி தான் தனிமையை போக்கும் அருமருந்து. முதுமையில் தனிமைப்படும் போது, தான் விரும்பும், நம்பும் கடவுளோடு ஒன்றிப்போவதால், கடவும் எப்போதும் தன்னுடன் வசிப்பவர் போல நினைப்பதும், அவருக்கு உணவு படைத்து, அவர் சாப்பிடுவது போலக் கூட நம்புவதும் தனிமையில் பெறக்கூடிய பெரிய ஆறுதலான விஷயமாகும். இந்த நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது. அதனால் தான், கடவுள் பக்தி உள்ளவர்கள், கடைசி காலத்தில் எதற்கும் பயப்படாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தாங்கள் தனிமையில் இருப்பது போன்ற ஓர் உணர்வே இல்லாமல் இருக்க முடிகிறது.
கடவுள் பக்தி செய்வதன் மூலம் நாமா கீர்த்தனம், பஜனை செய்வது, ராமாயணம், பாகவதம், புராணம் போன்றவற்றை பாராயணம் செய்யும் போது நம்முடைய தனிமை வலி போவதோடு, ஆத்ம திருப்தி கிடைக்கிறது. புண்ணியம் சேர்கிறது. நம் பிரார்த்தனைகள் நம் சந்ததிகளை வாழவைக்கிறது. அதுவே கடவுளின் அருளுக்குப் பாத்தியமாகிறது.
தேவராஜன்.
***

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள்! 6 ( 16.10.2011)

உலகையும் சகல <உயிர்களையும் இறைவன் படைத்தான் என்று நம்பினால், இறைவனுடைய படைப்புகள் ஒவ்வொன்றையும் நாம் நேசிக்க வேண்டும். ஆனால், நாம் அப்படியா செய்கிறோம்?
பிறரிடத்து கோபம், பொறாமை, பழிவாங்கல் இப்படி பல துச்ச செயல் செய்ய எப்படி முடிகிறது?
நாம் வாழும் இடத்தில் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்களால் நன்மை. கெட்டவர்களால் தீமை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
நாம் தீமைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளாகாமல் வாழ, நம்மைச் சுற்றியுள்ள கெட்டவர்கள் மீது ஜாக்கிரதையாக இருக்கணும் என்ற எண்ணம் தானாக உள் மனதில் எழுந்து விடுகிறது.
இது தப்பா? என்று கேட்பது எதார்த்த கேள்வி தான். ஆனால், இறைவன் படைத்த மனிதனில் ஒருவன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் இருப்பது எப்படி? தெரிந்தே தான் இறைவன் படைத்தானா என்ற சந்தேகம் நமக்கு வரும்.
இறைவன் பேதம் பிரிக்கவில்லை. அவனவன் கர்ம பலனை அனுபவிக்க எடுத்துக்கொண்ட குணவேறுபாடுகள் அவை.
கெட்ட குணம் என்பது நிரந்தரமல்ல. அது மாறக்கூடியது.
நம்மை சுற்றியிருப்பவர்கள் யாவரும் நல்லவர்களே, நம் நண்பர்களே என்று நாம் நம்பி பழகினால் போதும். இப்படி நாம் எண்ணும் எண்ணமே அவர்களை உண்மையிலேயே நமக்கு நல்லவர்களாகவும், நண்பர்களாகவும் ஆக்கிவிடும்.
ஒருவன் கெட்டவன் என்று கண்கூடாகத் தெரிந்தும் அவனை நல்லவன் என்று எப்படி நம்பலாம்? கெட்டவனை நல்லவன் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகுமே என்று சந்தேகமோ குழப்பமோ வரலாம்.
இங்கு யாரும் முழுமையான நல்லவர்களோ, கெட்டவர்களோ கிடையாது. ஒவ்வொருவரிடத்திலும் நற்குணங்களும், தீக்குணங்களும் கலந்தே இருக்கும்.
நற்குணங்கள் அதிகமாகவும், தீயக்குணங்கள் குறைவாகவும் உள்ளவர்களை நல்லவர்கள் என்றும்,
தீயக்குணங்கள் அதிகமாகவும், நற்குணங்கள் குறைவாகவும் உள்ளவர்களை தீயவர்கள் என்கிறோம். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இவ்வளவுதான் வேறுபாடு.
இந்த வேறுபாட்டு அளவை சமன்படுத்தும் காரியத்தை பண்ணும் பக்குவம் நமக்கு வேண்டும். அந்தப் பக்குவம் வரவேண்டுமானால் எல்லாரும் இறைவன் குழந்தைகள் என்று கருதவேண்டும். அவரவர் கூடா குணத்திலிருந்து விடபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அதே பக்தி சிந்தனைகளோடு,
கெட்டவர்களிடம் உள்ள ஒன்றிரண்டு உயர் பண்புகளை மட்டும் கருத்திற்கொண்டு, அவர்களோடு நாம் நெருங்கிப் பழகுவோமாயின் அவர்கள் நம்மைப் பொறுத்தவரையில் நல்லவர்களாக நடந்து கொள்வார்கள். நாளடைவில் தம்முடைய தீயபண்புகளிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு உலகத்திற்கும் அவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள்.
நல்லவர்களிடம் காணப்படுகிற ஒன்றிரண்டு தீயக்குணங்களை சுட்டிக்காட்டி அவர்களையும் அரவணைத்துச் சென்றால், நாளடைவில் அவர்கள் முழுமையான நல்லவர்களாகிவிடுவர்.
எல்லாரும் நல்லவர்களாகிவிட்டால் உலகில் பகையும் பூசலும் போரும் இல்லாமல் போய்விடாதா, என்ன?
தேவராஜன்.
***

துயரத்தை துடைத்து போடலாம்! 7 ( 22.10.2011)
எனக்கு மட்டும் துன்பம் ஏன் என்று நினைப்பது தவறானது. மனிதர்களில் ஒவ்வொருக்கும் ஏதாவதொரு கவலை, துன்பம் இருக்கிறது.
இன்பம் கடவுள் கொடுத்தது என்றால், துன்பமும் கடவுள் கொடுத்தது என்று நினைக்கும் பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு?
" நீ சிரிக்கும் போது கடவுளை நினைத்தால், நீ அழும்போது கடவுள் உன்னை நினைப்பான் என்ற நம்பிக்கையில் இறைவனை மனதார வணங்கி துன்பத்தை துரத்துங்கள்.
நாம் அனுபவிக்கும் துன்பம் நம் ஆத்மாவில் சேர்த்துள்ள பாவ அழுக்கை நீக்கும் சோப்பாகும்.
நாம் வாழும் காலம் கொஞ்சம். அந்த கொஞ்ச வாழ்நாளில் நம்மால் முடிந்தவரை எல்லாருக்கும் நல்லது செய்யவேண்டும். நாம் மறைந்த பின்னர் நம்மோடு வருவது காசு,பணம், தங்கம் அல்ல. நாம் செய்த பாவ,புண்ணியங்கள்தான்.
இந்த ஞானத்தை மனதில் நிரப்புங்கள். துன்பம் துõரபோகும். அல்லது அதை தாங்கிக் கொள்ளும் மன உறுதியாவது கிடைக்கும்.
எதையும் அடைந்தே தீர்வது என்று விடாபிடியாக இருக்காதீர்கள்.சிலர் பணம், பதவி, அதிகாரம் வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பணம், பதவி, புகழ் இப்படி ஒவ்வொன்றும் பெற்றவுடன் ஆணவம் தலைதுõக்குகிறது. ஆணவம் துன்பத்தை கூட்டி வருகிறது.
பணமே இல்லை என்றாலும் துன்பம், அளவுக்கு மீறி பணம் இருப்பதும் துன்பம். பட்டினியும் துன்பம். அதிகமான உணவும் துன்பம். ஆக அளவோடிருப்பதும்தான் ஆனந்தம்.
இந்த உண்மை உணர்ந்த மனது எந்த நிலையிலும் தடுமாறுவதில்லை. சலனம், சபலங்களுக்கு அலைபாயும் மனதை கட்டிப் போடுங்கள். துன்பத்தின் கடிவாளம் உங்கள் கைகளில் வந்துவிடும்.
எல்லாம் எனக்கே என்று ஆசை கொண்ட ஒருவன் இறுதியில் துன்பத்தில் துவண்டான். மலைமீது ஏறி தற்கொலை செய்து கொள்ள சென்றான்.
அவன் தலைக்கு மேலே வானில் ஒரு பருந்து இறைச்சித் துண்டை கவ்வியவாறே வேகமாய்ப் பறந்தது.
அந்தப் பருந்திடமிருந்து இறைச்சியைக் கைப்பற்றுவதற்காக பல பறவைகள் அப்பருந்தினைத் தாக்கியபடி பின் தொடர்ந்தன. எங்கெங்கோ பாய்ந்து பறந்தும் பருந்தால் மற்ற பறவைகளின் தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறைச்சித் துண்டைக் கீழே நழுவ விட்டது.
உடனே இன்னொரு பறவை அதனைக் கவ்விக் கொண்டது. எல்லாப் பறவைகளும் பருந்தை விட்டுவிட்டு இறைச்சித் துண்டினைக் கவ்விய பறவையைத் தாக்க ஆரம்பித்தன.
மீண்டும் விண்ணிலே பறவைகளின் சண்டை.
இறைச்சியை நழுவ விட்ட பருந்தோ நிம்மதியாகப் பறந்தது.
இதை கவனித்தவனுக்கு மனதில் ஒரு ஞானம் பிறந்தது.
இறைச்சித் துண்டினைப் பற்றியிருந்த பறவைத் தாக்கப்படுவதைப் போல உலகப்பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவர்களையே துன்பம் அதிகமாகத் தாக்குகிறது.
இறைச்சியை விட்டுவிட்ட பருந்து நிம்மதியாகப் பறப்பதைப் போல உலக சுகங்களை விட்டவர்கள் மன நிம்மதியை அடைகின்றனர். அவர்களை எப்போதும் துன்பம் துரத்துவதில்லை என்பதை உணர்ந்தான்.
துன்பம் என்று சொல்பவர்கள் எல்லாம் இறைச்சி துண்டை கவ்வியிருக்கும் பருந்து போலதான். இறைச்சி துண்டை விடுவதற்கு மனசு இருந்தால் போதும்.
தேவராஜன்
***

வெளிச்சத்தில் தேடுங்கள்! 8 (30.10.2011)
கடவுள், எங்கும் இருக்கிறார். நம் கண்ணுக்கு தெரியவில்லை அதற்காக, அவர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதாலே அந்த முடிவுக்கு வரக்கூடாது.
இருட்டில் இருக்கும் பொருள் கண்ணுக்கு தெரிவதில்லை. வெளிச்சம் இருந்தால் பொருளை காணலாம்.
இருட்டு நம் அஞ்ஞானம். பொருள் என்பது கடவுள். வெளிச்சம் தான் ஞானம். அஞ்ஞானம் என்ற இருட்டை, ஞானம் என்ற வெளிச்சத்தால் அகற்றினால், கடவுள் என்ற பொருளை காணலாம்.
கடவும் எங்கும் இருக்கிறார். எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வருவார். அவரை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் ஞானம் வேண்டும். எங்கும், எதிலும் கடவுள் இருக்கிறார் என்ற <உறுதியான நம்பிக்கையும் எல்லாமே கடவுளின் அம்சம் என்ற உண்மை புரிந்து விட்டால், கடவுளை எந்த ரூபத்திலும் காணலாம்.
அது பிரகலாதனுக்குப் புரிந்தது. ஆனால், இரண்யகசிபுக்கு தெரியவில்லை.

""உன் நாராயணன் எங்கே இருக்கிறார்?' என்று கேட்டான் இரண்ய கசிபு.
அதற்கு, ""அவர் எங்கும் இருக்கிறார்; அவர் இல்லாத இடமே இல்லை!' என்றான்
பிரகலாதன்.
""இந்த துõணில் இருக்கிறாரா?' எகத்தாளமாய் கேட்டு சிரித்தான் இரணிய கசிபு.
"" துõண் மட்டுமல்ல துரும்பிலும் இருக்கிறார்!' என்றான் உறுதியாக பிரகலாதன்.
அந்த துõணை, இரண்ய கசிபு வெட்ட, அதிலிருந்து, நரசிம்மமாக வெளியே வந்தார் நாராயணன்.
பகவான் நாராயணனை காணவேண்டும். அதற்கு எதாவது உபாயம் உண்டா? என்று ஒரு சீடன் தன் குருநாதரிடம் கேட்டான்.
சீடனுக்கு தாரக மந்திரத்தை உபதேசித்து, நாளும் பொழுதும் செய்யும்படி சொன்னார் குரு.
"" இந்த தாரக மந்திரம் நிச்சயம் பகவானைக் காட்டினால், அதை தியானிக்க இப்போதே ஆரம்பிக்கிறேன்'' என்று சொன்ன சீடன், ""நிச்சயமாக பகவானை பார்க்க முடியும் அல்லவா?' என்று கேட்ட சீடனுக்கு, ""நிச்சயம் வருவார்; ஆனால், அவர் தான் பகவான் என்று கண்டு கொள்ளவது உனக்கிருக்கும் ஞானத்தைப் பொறுத்தது என்றார் குரு.
பகவானைக் காணவேண்டும் என்ற ஆவலில் சீடன் தாரக மந்திரத்தை சிரத்தையாக உச்சரிக்க தொடங்கினான். மாதங்கள் ஓடியது.
அன்று பகவான் இன்று வரவேண்டும்; தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று பகவானை வேண்டிக் கொண்டு தியானித்தான்.
வீட்டில் ஆச்சாரத்தோடு தடபுடலாக விருந்து தயார் செய்தான். பகவான் இன்று வீட்டுக்கு வருவார் என்ற ஆசையில் விதவித பலகாரங்கள் தயார் செய்தான்.
வீட்டு வாசலில் ஒரு முதியவர் குரல்.
என்ன என்று கேட்டான் சிஷ்யன்.
பசிக்குது என்றார் முதியவர்.
கொஞ்சம் பொறு. பகவான் என் வீட்டுக்கு வருகிறார். அவர் சாப்பிட்டதும் உனக்கும் விருந்து தருகிறேன் என்றான்.
நேரம் ஓடியது. முதியவர் பொறுத்து பொறுத்து பார்த்தார்.
"தம்பி, பசி தாங்க முடியவில்லை. நான் வேறு வீட்டைப் பார்க்கிறேன்' என்று கிளம்பி போய்விட்டார்.
இரவு வந்து விட்டது. பகவான் வரவே இல்லை என்ற ஏமாற்றத்தில் குருநாதரிடம் சென்றான் சிஷ்யன்.
நடந்ததை சொன்னான்.

அதற்கு, குருநாதர் சிரித்துக் கொண்டே, ""பகவான் உன் வீட்டுக்கு வந்தார். சாப்பிட ஆசையாக இருந்தார். நீதான் அதை புரிந்து கொள்ளாமல், அவரை கண்டுகொள்ளவே இல்லையே! கால்கடுக்க நின்று பார்த்து, கடைசியில் என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போய்விட்டார்'' என்றார் குரு.
"அப்படியா!' என்று வியந்தவனிடம்,
"" பகவான் உன் வீட்டுக்கு ஒரு முதியவராக வந்தார். நீ அவர் தான் பகவான் என்று நம்பவில்லை; உணரவில்லை. அதனால் நீ ஏமாந்து விட்டாய்!' என்றார் குரு.
தேவராஜன்.
***

வீடுதோறும் கீதை இருக்கட்டும்! 9 ( 6.11.2011)
மகாபாரதத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த இதிகாசத்திலிருந்து விதுர நீதி என்கிற தர்ம சாஸ்திர நுõலையும், பகவத்கீதையையும், விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்.

இது மகாபாரதத்தின் கதைப்போக்கில் தானாகவே நிகழ்ந்த ஓர் அற்புதம். குறிப்பாக, பகவத் கீதையில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் மானுட வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகும்.

வேதங்கள், உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் இவைகளில் அடங்கி உள்ள மேன்மை மிக்க மெய் ஞானப்பொருள் விளக்கத்தை கடைகோடி மானிடனும் கடைத்தேற உதவுவது ஸ்ரீமத் பகவத் கீதை.

மேலே குறிப்பிட்ட நான்கு நுõல்களை உள்ளடக்கியதை பிரஸ்தானத்திரயம் என்று கூறுவார்கள். அதாவது முடிவான ஆதாரம் என்பது இதன் பொருளாகும்.
வேதங்களும், உபநிஷதங்களும் அவ்வளவு விரைவில் எல்லோரும் கற்று தேர்ந்துவிட முடியாது. எனவே தான் அனைவரும் எளிமையான பரம்பொருளின் ரகசியத்தை புரிந்து கொள்வதற்கு நமது குருமார்கள், ஆன்மிக பெரியோர்கள் ஸ்ரீமத் பகவத்கீதையை படித்து, உணர்ந்து அதன் வழி நடந்தாலே போதும் என்கிறார்கள்.

நாம் எங்கே அவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்டிருக்கிறோம்? அப்படி கேட்டிருந்தால் வீடுதோறும் கீதை இருந்திருக்கணுமே! <
இந்து மதத்தின் புனித நுõல் கீதை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்து இருக்கிறோம். பகவத் கீதை புத்தகத்தை தொட்டுக்கூட பார்க்காதவர்களும், அதில் ஒருவரிக்கூட படிக்காதவர்களும் நம்மில் எத்தனையோ பேர் இருக்கிறோம்.
கீதை என்றால் அது பெரிய ஞான நுõல். அதை எல்லாம் குடும்பஸ்தர்கள் படித்து என்னவாக போகிறது? அதை படித்தால் சாமியார்களாகிவிடுவோம் என்றே பலர் நினைக்கிறோம்.

பகவத் கீதையை துறவிகளும், சாமியார்களும், ஆன்மிக சொற்பொழிவு செய்பவர்கள் மட்டும் படித்தால் போதும் என்றோ, அவர்கள் மட்டும் படிக்க வேண்டிய கடமை என்றோ நாம் நினைக்கிறோம்.

பொருள் தேடுவதில் எப்போதும் குறியாக இருக்கும் நமக்கு,இன்னது செய்தால் உனக்கு இன்னது கிடைக்கும் என்றால் மட்டுமே அதில் கவனம் செலுத்துகிறோம்.
சராசரி மனிதனின் அன்றாட பிரச்னைகள், குழப்பங்கள், கஷ்டங்களை
எது தீர்த்து வைக்குமோ அல்லது உடனடி தீர்வுகள் கிடைக்குமோ அதை தேடித்தான் மக்கள் அதிகம் செல்கிறார்கள்.

குடும்ப பந்தத்தில் தத்தளிப்பவர்களுக்கு கீதை தோணியாக இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல் அன்றாட குடும்ப சிக்கல்களை தீர்த்து வைக்கவும், உடல் உபாதைகளுக்கும் கீதை வழி செய்கிறது.

<கீதையில் இருக்கும் எத்தனையோ உன்னதமான மந்திரங்கள்
வாழ்வில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகளைத்துடைக்கின்றன. கீதையை பாராயணம் செய்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட அந்த நோயிலிருந்து விடுபட்டு இருக்கிறார்கள்.
கீதை ஒரு அட்சயப்பாத்திரம். கேட்டவருக்கு கேட்டதை கொடுக்கக்கூடியது. கீதை வழி நடந்தால் ஞானம் கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் கிடைக்கும். புண்ணியம் கிடைக்கும். ஐஸ்வர்யம் கிட்டும். ஆரோக்கியம் கிட்டும். எல்லாம் கிடைக்கும். ஆதலால் இனி வீடுதோறும் கீதை இருக்கட்டும். அதை படித்து, அதன்படி நடக்கும் மனமெல்லாம் மலரட்டும்!
தேவராஜன்.
***

அறம் அச்சம் போக்கும். 10 ( 13.11.2011)
பாரதம் உலகிற்கே மனித நேயத்தை, தத்துவத்தை, அன்பை, அமைதியை சொல்லிக் கொடுத்தது. இன்று நாம் மேலைநாட்டு நாகரிகத்தைஇறுக பற்றிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அளவோடு வாழ்வதுதான் நம் பண்பாடு. அளவோடு வாழ்வது என்பது அறவாழ்க்கை.அளவோடு வாழத்தெரிந்தவர்களிடம் செயலில், சொல்லில், சிந்தனையில் அறஉணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும்.
அளவுக்கு மீறிய வாழும் வாழ்க்கை போட்டி, பொறாமை, பேராசை, திருட்டு, புரட்டு எல்லாவற்றையும் இழுத்து வந்து நம் மனதில் நிரப்பிவிடுகிறது.
போதுமான பணம் சேர்த்தால் அது வாழ்வதற்கு பயன்பட்டு தீர்ந்து போய்விடும். அளவுக்கு அதிகமாக சம்பாதித்து வைத்திருப்பவர், தேடி பணத்தை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். களவு போய்விடுமோ என்று பயம் ஏற்படும். இப்படி ஒவ்வொன்றிலும் பயம்
எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் போதுமென்ற மனம் கொண்டவர்களுக்கும், எளிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், இறைவன் படைப்பு நியதிகளுக்கு கட்டுப்பட்டு, உண்மையாக,நியாயமாக, நேர்மையாக, உறுதியாக இருப்பவர்கள் எதற்கும் எப்போதும் அஞ்சுவதில்லை. ஏனென்றால்,
அஞ்சாமையால் உண்மை அரும்பும்; உண்மையால் உணர்வு பிறக்கும்; உணர்வால் சுயசிந்தனை வளரும். சுய சிந்தனையால் தன்னை அறியலாம். வாழும் பூமியை அறியலாம். முடிவில் தன்னையும் பூமியையும் படைத்த இறைவனை அறியலாம்.
ஒரு மன்னரின்அரண்மனை அது. அரண்மனை கிடுகிடுத்தது. மகாராணியின் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. மகாராணியின் கூச்சலால் அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க கட்டளையிட்டார்.
சிலம்பை ஒரு வாரத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக தரப்படும். அதற்கு பிறகு யாரிடமாவது சிலம்பு இருப்பது தெரியவந்தால் மரண தண்டனை'' என்று அறிவிக்க சொன்னார்.
அந்த ஊருக்கு புதிதாக வந்தார் ஒரு துறவி. அவர் கையில் சிலம்பு கிடைத்தது.
அந்த சிலம்பு பற்றி மக்களிடம் விசாரித்தார்.
உடனே கொடுத்தால் பரிசு, ஒரு வாரத்திற்குப் பிறகு கொடுத்தால் மரண தண்டனை'' என்றனர்.
துறவி அந்தச் சிலம்பை மன்னரிடம் உடனே ஒப்படைக்க வில்லை. ஒரு வாரம் கழிந்தது. பின்னர் அரண்மனைக்கு சிலம்புடன் சென்றார் துறவி.
"இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்' என்றார் மன்னர்.
அந்த துறவி சொன்னார்:
"சிலம்பை கண்டெடுத்ததும் உடனே வந்து தந்திருந்தால் நான் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும். மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும். சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும்.அதான் தாமதமாக கொண்டு வந்தேன்' என்றார்.
" அதெல்லாம் சரி, இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே' என்றார் மன்னர்.
துறவி கம்பீரமாக மன்னரைப் பார்த்து "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது' என்று கூறினார்.
துறவியின் அஞ்சாமையைக்கண்டு மன்னர் தலைவணங்கி, துறவியை அனுப்பி வைத்தார்.
***

நேர்மையிலும் கடவும் இருக்கிறார் 11 ( 20.11.2011)

நேர்மை என்பது ஒருவர் உண்மைக்கு ஆதரவாகவும் தெரிந்தே பொய்க்கு ஆதரவாக இல்லாமல் நேர்வழியில் நடந்துக்கொள்வதாகும். இது நம் செயல்களின் தன்மையை வெளிப்படுத்தும் மனித குண இயல்பு.
பக்திக்கும் நேர்மைக்கும் நெருங்கிய தொடர்பு <உண்டு. நேர்மை இல்லாத பக்தி புண்ணியத்தை தராது.
மனசுத்தம், மனசாட்சிக்கு பயப்படுவது எல்லாம் நேர்மை வழி நடப்பவர்களின் பண்பு.
மேலோட்டமாக ஒருவர் நேர்மையானவர் என்பதை அவர் உருவ அமைப்பை வைத்தோ, கல்வி அறிவை வைத்தோ, தொழில் அல்லது இருக்கும் பதவியை வைத்தோ மதிப்பிட முடியாது.
ஒருவர் நடந்துக்கொள்ளும் குண இயல்பை பொறுத்து தானாகவே வெளிப்படும் தன்மை கொண்டது.
ஒருவேளை ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சரியானது என கருதிய ஒன்று, தவறு என தெரிய வரும்போது, தனது தவறை மனதளவிலேனும் ஏற்று திருத்திக்கொண்டு, நேர் வழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில், சமூகத்தில் சகமனிதர்களில்
நேர்மையாக நடந்துக்கொள்ளும் ஒருவரை நேர்மையாளர், நேர்மையானவர், நேர்மையான மனிதர் என்று சிறப்பாக, மதித்து சொல்வதுண்டு.
நேர்மை என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தான் மேற்கொள்ளும் செயல்கள், நடவடிக்கைகள், அமைப்புகள், அரசுகள் போன்றவற்றிடமும் நிச்சயமாக இருக்க வேண்டும்.
பொதுவாக நேர்மை எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவர் செயலுக்கும் அவருக்கும் மக்களிடையே என்றும் மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
தெரிந்தே ஒருவர் பிழைசெய்வது, பிழையை ஆதரிப்பது,தவறை உணர மறுப்பது, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தனது கருத்துக்களை, செயல்பாடுகளை மாற்றிகொள்வது, அதனையே நியாயமென நிறுவ முனைவது எல்லாம் நேர்மையின்மையின் வெளிப்பாடுகள் தான். இப்படி எதிலும் நேர்மை இல்லாமல் செயல்படுபவர்கள் தங்களையும், தங்களை நம்பியுள்ளவர்களையும் எல்லாவற்றையும்விட தன்னை படைத்த இறைவனையும் ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்.
தனக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக, ஒருத்தரை "நீங்க ரொம்ப நல்லவர்' என்று சொல்லும் சிறிய பொய்யால் அவருக்கு ஒன்று ஆகிவிடாது. ஆனால், அது உங்கள் மனதில் ஒரு புள்ளியாய் கறைப்படுத்தும்!
நேர்மையற்றவராய் இருப்பது நமக்குள் நம்மை அறியாமலேயே ஒரு குற்ற உணர்வை உருவாக்கிவிடும்.
நம்மைச் சுற்றி இருக்கின்ற மக்கள் காட்டும் தவறான வாழ்க்கை முறை, நேர்மையற்றவர்கள் நாம் வாழும் காலத்தில் சுகபோகமாக வாழ்தல் இவை எல்லாம் நம்மை நேர்மையிலிருந்து விலகிட ஆசையூட்டினாலும், நாம் உறுதியுடன் நேர்மை வழியை கடைபிடிக்கணும்.
குழந்தைகளுக்கு நேர்மையைப் பற்றிப் போதித்து விட்டு, நாமே நேர்மையற்றவர்களாய் இருந்தால் அடுத்த தலைமுறை நேர்மை என்பதை அடுத்தவருக்கு அறிவுரை கூற மட்டுமே என்று எண்ணிவிடுவர். எனவே,
குடும்பம், உறவினர், நட்புகளிடையே நேர்மையாக, நேசமுடன் நடந்து கொள்வோம். அதுவே ஒரு பிரார்த்தனை போலத்தான். பிரச்சினைகள் வருமோ என நினைத்து நேர்மையை விட்டு வாழ்வதை விட, நேர்மையாய் வாழ்ந்து பிரச்னைகளைச் சமாளிப்பதே சிறந்தது. அதற்கு இறைவனும் துணை இருப்பார்.
தேவராஜன்.
***

என் கடன் பணி செய்து கிடப்பதே! 12 (27.11.2011)
தானும், தன் குடும்பமும் நலமாய் சுகமாய் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் எப்போதும் இறைவனுக்கு வெகு துõரத்தில் இருக்கிறார்கள். இவர்களால் மக்களுக்கோ, அவர்களைப்படைத்த இறைவனுக்கோ எந்த பெருமையும் இல்லை.
நம்முடைய குடும்ப நலனில் அக்கறை கொள்வதும் அவசியம். அப்படி இருந்தால் தான் இல்லறம் சிறக்கும். தன் குடும்ப நலனுக்காக மற்றவர்களின் நலனை அழிக்கத் துணிவது, பொதுநலச் சிந்தனையின்றிக் குறுகிய வட்டத்திற்குள் முடங்கிக் கொள்வது தர்மவழியான வாழ்க்கை இல்லை.
ஈவு, இரக்கம், துõய அன்பு, சேவை மனப்பான்மை, சுய நலத் தியாகம் ஆகியவற்றிற்காகவே ஒரு இல்லறவாசியின் வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன.
இவ்வுலகில் தோன்றிய எத்தனையோ ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், விஞ்ஞானிகள் எல்லாம் தங்களையே தியாகம் செய்தவர்கள். தங்கள் தியாகத்தால் இந்த உலகம் பயனுற வேண்டும் என்று ஆசைபட்டவர்கள்.
தியாகம் என்பது பெரிய தர்மம். அது தெய்வீகத்தின் அம்சம். ஒருவருக்காக ஒருவர் தமது சுகங்களைத் துறப்பதும், ஒருவருக்காக ஒருவர் தமது வாழ்க்கையில் சுக போகங்களை இழப்பதும் சாதாரண விஷயமில்லை. அதற்கெல்லாம் ஒரு வைராக்கியம், மனதிடம் வேண்டும்.
நல்ல மனம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களின் நலனைப் பற்றிச் சிந்திக்க முடியும். உயர்ந்த உள்ளங்களில் இருந்தே உன்னதமான சிந்தனைகள் எழுந்து வருகின்றன. அத்தகைய உள்ளங்களில் போட்டி, பொறாமை, பகை, துவேசம் ஆகியவற்றிற்கு இடமில்லை.
மாறாக, ஒவ்வொரு சிந்தனைகளிலும் அன்பும், இரக்கமும் வெளிப்படும்.
சுய நலத் தியாகத்தை விட, இந்த உலகில் பெரிய தர்மமோ, புண்ணியமோ இருப்பதில்லை.
தியாகம் என்பது அன்பு, கருணை, பக்தி ஆகியவற்றின் உச்சநிலை.

தியாகம் செய்வதற்குப் படிப்பறிவு தேவையில்லை. வேதசாஸ்திரங்களை கரைத்துக் குடித்த ஞானியாராக இருக்க வேண்டும் என்பதில்லை. அன்பு உள்ளம் இருந்தால் போதும்.

உங்கள் நண்பரோ, உறவினரோ யாரவது நோய்வாய்ப்பட்டிருக்கிறார்களா? அவர்களுக்காக ஒரு நாளைக்கு ஒருமுறையாவது பிரார்த்தனை செய்யுங்கள். இயன்ற அளவு பொருள் உதவி செய்யுங்கள். அதுவும் இயலாவிட்டால் நாலு வார்த்தை அன்பாய், ஆறுதலாய் கூறுங்கள். இதுவும் ஒருவகை சேவை தான். பிரார்த்தனையும் கூட.

சாலையில் ஒருவன் பசியால் மயங்கி கிடப்பதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்கள் கையிலிருக்கும் உணவைக் கொடுங்கள். உங்களுக்கு இறைவன் மூன்றுவேளை உணவு <உண்ணும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறான். ஆனால், இந்த மனுஷனுக்கு அதுவும் நிச்சயமில்லையே! என்று நினைத்து ஒருவேளை உணவை நீங்கள் கொடுத்து உதவுங்கள். உணவில்லை என்றால் கொஞ்சம் தண்ணீராவது கொடுங்கள். மக்கள் தொண்டும் மகேசன் தொண்டே!
படிக்க வசதியற்ற ஏழைக்குப் பணம் உதவுங்கள்.
வாடிய பயிரைக்கண்ட வள்ளலார் மனதுடன் ஏழைகள், துக்கப்படுவோரின் கண்ணீரைத் துடைப்பதற்கு உதவுங்கள். மற்றவர்களுக்காக,ஒரு பொதுநன்மைக்காக நீங்கள் எதையாவது இழந்து பாருங்கள். நீங்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாகிவிடுவீர்கள்.
தேவராஜன்.
***

மூன்று வகை பக்தி! 13 (4.12.2011)
நீரளவே நீராம்பல் என்பது ஒரு பழமொழி. இது பக்திக்கும் பொருந்தும். எல்லோரும் தான் இறைவனை வழிபடுகிறோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா அருள் கிட்டுகிறது? ஒரே மாதிரியாகவா ஞானம் கிடைக்கிறது? இல்லை, ஏன்? அவரவர் வழிபாட்டில் இறைவன் மீது வைத்திருக்கும் திடமான நம்பிக்கை மற்றும் அன்பைப் பொறுத்தே இறைவனுக்கும் பக்தனுக்கும் ஆன இடைவெளி அமைகிறது. மேலும்,
வழிபடும் பக்தனின் மன உறுதிக்கும்,பக்குவத்திற்கு ஏற்ப பிரார்த்தனையின் வீரியமும் நோக்கமும் வித்தியாசப்படுகிறது. இறைவனை மனிதன் வழிபடும் வகை மூன்று நிலையில் இருக்கிறது. அவை, உத்தம பக்தி, மத்யம பக்தி, மந்தபக்தி .
மந்த பக்தி என்பது இறைவனிடம் பூரண நம்பிக்கை இல்லாத ஒரு நிலை. அல்லது சந்தேகத்திற்கு உரிய நிலை. அதாவது ஏதோ கும்பிட்டு வைப்போம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று ஒருவர் வழிபடும் வகைதான் அவர் இறைவன் மீது வைத்திருக்கும் மந்த பக்தி. இது இப்படியும் இருக்கலாம் தனக்கு எப்பொழுது இறைவன் துணை தேவைப்படுகிறதோ அப்பொழுது வழிபாடு செய்தல்.
பிடித்த தோஷங்கள், கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவோ ஏதாவது ஆசைப்பட்டபொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ,திருமணம் தடை விலக வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், ஆரோக்கியம் வேண்டும், நல்தொரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபாடு செய்வது மந்த பக்தி.
இது பக்தியே இல்லை என்பர் சிலர். இது சுயநலம் கொண்டது என்பர்.
மத்யம பக்தி என்பது மந்த பக்திக்கு சிறிது முன்னேறிய நிலை. இந்நிலையில் பக்தன் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்றோ, பொருள்கள் வேண்டும் என்றோ வழிபடுவதில்லை. தான் முக்தி அடைய வேண்டும். ஞானம் பெற வேண்டும். பிறவிப் பயனை அடைய வேண்டும். தன்னுடைய பிரார்த்தனை எல்லாம் இறைவனை அடைவதை குறிகோளாக கொண்டு இருக்கும். இந்த வகை பக்தியில் இவ்வுலக வாழ்க்கைப்பற்றிய ஆசைகள் பிரார்த்தனையாக இருக்காது. எனவே இந்த நிலைக்கு மத்ய பக்தி என்று பெயர்.
மூன்றாவது உத்தம பக்தி என்பது உயர்ந்த பக்தி. எல்லோருக்கும் கிடைத்துவிடாத பெருமை பெற்றது. இந்த உத்தம பக்தி செய்பவர்கள் இறைநிலையை ஒத்த ஞானிகள், சித்தர்கள் ஆவர். இவர்கள் தான் வேறு இறைவன் வேறு என இருப்பதில்லை. இறைவனும் பக்தனும் ஒன்றிவிட்ட பேரானந்த நிலை.
உத்த பக்தியின் நிலையில் இருக்கும் ஞானி வழிபாடு செய்கிறார். ஆனால், அவர் எதையும் வேண்டுவதில்லை. எனவே, அவர் செய்கின்ற வழிபாடு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இவ்வகை உத்தம பக்தி செலுத்தும் பக்தன் தானும் ஒருநிலையில் இறைவனாகிவிடுகிறான்.
நாம் மந்த பக்தியில் இருந்து கொண்டே மத்ய பக்திக்கு முன்னேறுவோம். "அவன் அருளாளே அவன் தாள் வணங்கி' என்ற மாணிக்கவாசகர் வார்த்தைக்கேற்ப உச்சநிலையான உத்தம பக்திக்கு நம்மை அந்த இறைவனே அழைத்துச் செல்வான்.
தேவராஜன்.
***

அருளின் அருமை! 14 ( 11.12.2011)
ஒருவன் நன்கு படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலை கிடைத்தால், அது அவனுடைய படிப்பால் கிடைத்தது என்றாகிறது.
ஒருவர் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தால், அது உழைப்பால் கிடைத்தது என்றாகிறது.
10 பேர் கலந்து கொண்ட போட்டியில் 8 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டால், அது புத்திசாலித்தனத்தால் கிடைத்ததாகும். போதிய தகுதி இல்லை என்றாலும் "தான் ஆதரவற்றவன்' என்பதை சொல்லி உதவி பெற்றால் அது அனுதாபத்தால் நிகழ்ந்தது. அதே போல் அதிர்ஷ்டத்தால் நிகழ்பவை சில.
சில நல்ல செயல்கள் தவிர்க்க முடியாதபடி ஏற்படுகின்றன. நான்கு வயது பூர்த்தியானால் பள்ளிக்கூடம் செல்வதும், வாலிப வயதில் வேலைக்குச் செல்வதும், வயது வந்தபின் திருமணமாவதும் இயல்பான செயல்களாகும்.
மேலே சொன்ன எதுவும் இல்லாமல் சில பெரிய காரியங்கள் நடந்தால் "இது இறைவன்அருளால் நடந்தது' என்றுகிறோம். தெய்வச் செயல், எப்படி நடந்தது என்று புரியவில்லை என்று சொல்கிறோம். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்று அருளல். இந்த அருளால் உலக உயிர்கள் எல்லாவற்றுக்கும் கிடைக்கக்கூடியதே. ஆனால், அதை பெறும் தகுதியை உயிர்கள் பெற்று இருக்க வேண்டும்.
அருளல் என்பது இறைவனின் செயல் என்றால், இறைவன் படைத்த மனிதர்களாகிய நமக்கு அருளலின் கிளைகளான பரிதாபப்படுதல், அனுதாபப்படுதல் செயல் செய்யமுடியும்.
ஒருவர் படும் கஷ்டத்தை நமக்குப் பார்க்க முடியவில்லை, பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாமல் அவருக்கு நாம் உதவி செய்வது பரிதாபத்தால் ஏற்படுவது. இந்த உணர்வு சக மனிதர்களிடம் காட்டாவிட்டால் நமக்கு இறைவனின் அருள் கிடைப்பது என்பது அரிதாகிவிடும்.
பிறர் கஷ்டப்படக்கூடாது, அது பாவம் என்று செயல்படுவது அனுதாபம்.
பரிதாபம் நமக்காகச் செயல்படுகிறது. அனுதாபம் பிறருக்காகச் செயல்படுகிறது.
இந்த இரு செயல்களை அடுத்து கிருபை என்ற செயல் இருக்கிறது. அது
உயர்ந்தது. அது நமக்காகவோ, பிறருக்காகவோ செயல்படுவதில்லை. எவரும் துன்பப்படக்கூடாது என்பதே அதன் கொள்கை. துன்பப்படுபவன் நல்லவனா, கெட்டவனா என்பதையும் பார்ப்பதில்லை. மனிதன் துன்பப்படக்கூடாது என்று செயல்படுவது கிருபை. இது ஞானியர்களுக்கும் யோகியர்களுக்கும் ஏற்படுவது.
இரண்டு பேருக்கு சண்டை. அடித்து கொண்டதில் ஒருவருக்கு மண்டையை உடைகிறது. டாக்டர் இருவருக்கும் சிகிச்சை செய்கிறார். நல்லவனுக்குத் தான் சிகிச்சை, கெட்டவனுக்குச் சிகிச்சை இல்லை என்பதில்லை. அதே போல் மனிதனாகப் பிறந்தவன் துன்பம் அடையக்கூடாது என்று கிருபை செயல்பட்டுத் துன்பத்தைத் துடைத்து விடுகிறது.
இவற்றை எல்லாம் கடந்த இறைவனின் அருள் உயர்ந்த கட்டத்தில் செயல்படுகிறது. துன்பத்திற்கே இங்கே இடமில்லை என்பது அருளின் வழி. துன்பமே உலகில் இருக்கக்கூடாது என்பது அருளின் விருப்பம்.
மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க முயல்வதைவிட, துன்பத்தையே அழிக்க முயல்வது அருள். அப்படி இறைவனின் அருள் செயல்பட, மனிதர்களாகிய நாம் நியாயமான, நேர்மையான, தர்ம வாழ்க்கை வாழவேண்டும்.
இறைவன் நினைப்போடு, தினமும் ஆத்ம திருப்தியோடு வாழ்ந்து கொண்டிருந்தால், இறைவனின் அருள் நம் துன்பத்தை மட்டுமல்ல, உலகின் துன்பத்தையே துடைத்து விடும்.
தேவராஜன்.
***

உலகம் ஒரு கண்ணாடி 15 ( 18.12.2011)
எதை விதைக்கிறோமோ, அதைத்தான் அறுவடைச் செய்யமுடியும். இந்த உலகில் நாம் வாழும் காலத்தில் நாம் எதையெல்லாம் பெற நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
நீங்கள் ஒரு கண்ணாடி முன்பு என்ன செய்கிறீர்களோ அதை அப்படியே அந்த பிம்பம் செய்யும்.
இந்த உலகமும் ஒரு கண்ணாடி போலதான். நீங்கள் என்ன செய்துள்ளீர்களோ அதையே அது உங்களுக்கு கொடுக்கும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற சங்கப் பாடல் வரி உணர்த்துவதும் அதுதான்.
எதுவெல்லாம் நமக்கு கஷ்டத்தையும், வருத்தத்தையும் கொடுக்கும் என்று நினைக்கிறோமோ அவற்றை எல்லாம் நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்று நினைத்து விட்டால், உலகமே இன்பச் சோலையாகிவிடாதா, என்ன? நல்லதே நினைப்பது, நல்லதே செய்வது, நல்லதே பெறுவது என்று மனிதன் வாழ்க்கையில் பின்பற்றத்தொடங்கிவிட்டால் அந்த பக்குவமே நம்மை இறைவனைப் புரிந்து கொள்ள துõண்டிவிடும்.
ஜென் குருவை தேடி, ஒரு இளைஞன் வந்தான். ஜென் கொள்கைப்படி அவன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தான். மேலும் தன் வாழ்க்கை சுகமாக அமைய ஜென் போதனைகள் அவனுக்கு தேவைப்பட்டன. அதனால் தான் ஜென் குருவிடம் வந்தான்.
அவரை வணங்கிய அவன், ""குருவே! நானும் ஒரு ஜென் மாணவன் தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தங்களிடம் கேட்கலாமா?'' என்றான்.
""கேள்!'' என்றார் ஜென் குரு.
""முதலில் உன்னை நீ நேசி அப்போதுதான் உன்னால் மற்றவர்களை நேசிக்கமுடியும். தயவு செய்து இந்த விளக்கத்தை தாங்கள் எனக்குக் கூறவேண்டும்! என்றான் இளைஞன்.
ஜென் குரு மெல்லப் புன்னகைத்தார்.
"நீ பிறர் மீது வெறுப்பாகவோ, கோவமாகவோ, எதிர்ப்பாகவோ, இருக்கிறாய் என வைத்துக்கொள். அதனால் முதலில் பாதிக்கப்படுவர் யார்?'' என்று கேட்டார் ஜென் குரு.
அந்த இளைஞன் சிறிது யோசித்துவிட்டு, ""முதலில் பாதிக்கப்படுவது என்றால், அது நானாகத்தான் இருக்க முடியும்!'' என்றான்.
குரு மேலும் புன்னகைத்தார்.
""சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். அதுபோல, உன்னிடம் நீ நல்ல எண்ணங்களையும், செயல்களையும் வளர்த்துக் கொண்டால், உன்னை நீ நேசித்தால், உன் மீதே நீ அன்பு செலுத்தினால் அவற்றையேதான் நீ பிறர் மீதும் செலுத்துவாய். ஒத்துக் கொள்கிறாயா?'' என்றார் ஜென் குரு.
""ஒத்துக் கொள்கிறேன் குருவே!'' என்றான் இளைஞன்.
""இப்போது புரிகிறதா, உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நீ பிறருக்குத் கொடுக்க முடியும். நீ என்ன பிறருக்கு கொடுக்கிறாயோ அதை தான் நீ அவர்களிடம் பெற முடியும்"" என்றார் குரு.
தெளிவான சிந்தனையுடன் அந்த இளைஞன், ஜென் குருவிடமிருந்து விடைபெற்றான்.
தேவராஜன்.
***

கரம் குவித்து வணங்குதல் செய்வோம்! 16 (25.12.2011)

"கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!' என்பார் மாணிக்க வாசகர்.
கை கூப்பி வணங்கி நிற்கும் அடியார்களின் பணிவால் இறைவன் மகிழ்ச்சி அடைகிறான் என்பது இந்த வரியின் மேலோட்டமான பொருள். அப்படி மகிழும் இறைவனின் பாதங்களுக்கு வெற்றி உண்டாகுக என்கிறார் மாணிக்க வாசகர்.
நம் பாரத கலாசாரத்தின் உன்னதமான பண்புகளில் ஒன்று ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்தல்.
அப்படி சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கைகுவித்து வணங்குகின்றனர்.
கை கூப்பி வணக்கம் செலுத்துதல் என்பது இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்தல். இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம்.
மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்துதலில் கூட, நம் மதம் பெரிய வாழ்வியல் கோட்பாட்டை எளிமையாக சொல்லிக்கொடுக்கிறது.
என்னை ஆட்டிப்படைக்கும் ஐந்து புலன்களை கட்டுக்கோப்பில் வைத்திருக்கிறேன் என்பதை அடையாளப்படுத்துகிறேன் என்பது ஆன்மிக தத்துவம்.
இன்னொரு ஆழமான தத்துவமும் இருக்கிறது.
உலகம் என்பது பஞ்ச பூதங்களின் தொகுப்பு. மனிதனும் பஞ்ச பூதங்களின் கலவைதான். உடம்பு என்பது பஞ்ச கோசங்களால் ஆனது என்பர். நம் கையில் இருக்கும் ஐந்து விரல்கள் அந்த ஐந்து கோசங்களை குறிக்கிறதாம். அவை அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்.
மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம். மன எண்ணங்களால் உருவாவது அதனால் அது மனோமய கோசம்.
புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். இந்த கோசங்களால் மனிதன் பெறும் நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.
மனிதர்கள் ஐந்து கோசங்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற ஒன்றுதான் என்பதை உணர்த்துவது தான் கரம் குவித்து வணங்குதல்.
ஒரு கை தன்னுடைய ஐந்து கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது ஐந்து கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா என்ற ஒன்றே என்பதை உணர்த்துகிறோம். அதாவது நீயும் நானும் ஒன்றே என்றே உணர்த்துவது.
இவ்வளவு ஆழமான நம் தமிழ் கலாசாரத்தின் வணக்கம் செலுத்தும் முறையை மறந்து விட்டு, மேலை நாட்டினரின் பழக்கமான கை குலுக்குதல், சல்யூட் செய்தல் முறையை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
இந்த மேலை நாட்டினரின் பழக்கம் அர்த்தம் உள்ளவையா, இல்லையா என்பதற்குள் நாம் செல்ல வேண்டாம். நம்முடைய அர்த்தமுள்ள கரம் குவித்து வணங்கும் முறையை பின்பற்றலாமே! இதில் என்ன தயக்கம்?
கடவுளைத்தொழும்போது, இரு கரங்களையும் கூப்பி, தலைக்கு மேல் வைத்து, ஒவ்வொரு விரலும் மற்ற கைகளின் விரல்களை தொடும்படி வைத்து வணங்கவேண்டும். வயதில் பெரியவர்களை முகத்திற்கு நேராகவும், வயதில் சிறியோர்களை, இதயத்திற்கு நேராகவும் வைத்து தொழவேண்டும்.
கரம் குவித்து வணக்கம் செலுத்தினால் கடவுளே மகிழ்கிறார் என்றால், மனிதர்கள் மட்டும் மகிழமாட்டார்களா, என்ன?
தேவராஜன்.
***

ஒரு வினாடி வாழ்க்கை! 17 (1.1.2012)

கடந்த ஆண்டு வீடு கட்டினேன். ஆறு மாதத்துக்கு முன்பு முக்கிய நகரத்தில் இரண்டு கிரவுண்ட் நிலம் வாங்கினேன். போன மாதம் சேமிப்பில் எதிர்ப்பார்த்ததைவிட அதிகம் சேர்த்துள்ளேன். கார் இருக்கு, வீடு இருக்கு, நல்ல மனைவி, பிள்ளைகள் இதுவல்லவா ஒரு வாழ்க்கை என்று
சென்ற ஆண்டின் உங்கள் செயல்பாடுகள் பற்றிய பெருமை பேசிக்கொள்வதல்ல நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை.
அதே சமயம் ஏழ்மையாலோ, அல்லது பல பிரச்னைகளாலோ பாதிக்கப்பட்டதை நினைத்து புலம்பிக் கொண்டிந்ததை நினைத்து நினைத்து பேசுவதும் வாழ்க்கை அல்ல.
இப்புத்தாண்டில் எப்படி வாழப்போகிறோம், எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் சிந்தனையே புத்தாண்டு வழிபாடாக அமையட்டும்.
நீங்கள் நினைத்தப்படி ஒரு நிகழ்வு நிகழவில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம்.
வீட்டில் இருக்க பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை, மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்தது ஒன்றாவது நிச்சயம் கிடைக்கும்.
இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசியுங்கள். அந்தந்த வினாடியில் வாழ்வது என்பதே பேரானந்தம். நேற்றும் வாழ்க்கையல்ல; நாளையும் வாழ்க்கையல்ல. இன்று இந்த வினாடி நேரம் வாழும் வாழ்க்கைத் தான் வாழ்க்கை. அந்த ஒரு வினாடி வாழ்க்கையில் தவம், தியானம், பிரார்த்தனை, முக்தி இப்படி எல்லாமே அடங்கி விடுகிறது.
வாழ்க்கை என்பதன் முழு அர்த்தம் என்ன என்பதை தன் சீடர்களுக்கு விவரித்தார் புத்தர்.
"நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?' என்று கேட்டார் புத்தர்.
அவரது சீடர்கள் யோசித்தார்கள். "என்ன கேட்கறீங்க? சரியாப் புரியலையே!'
"ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?'
"நுõறு வயசு?' என்றார் ஒரு சிஷ்யர்.
"ம்ஹூம். இல்லை!' என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்.
"அப்படீன்னா? 90 வயசு?'
"அதுவும் இல்லை!'
"80? 70? 60?' இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, புத்தர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் "நீங்களே சொல்லுங்க' என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.
"ஒரு நல்ல வாழ்க்கைங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!' என்றார் புத்தர்.
"என்ன சொல்றீங்க குருவே? ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்? குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்?'
"அப்படியில்லை. ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது. அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை' என்றார் புத்தர்.
தேவராஜன்.
***

நீயும் பொம்மை, நானும் பொம்மை! 18 (8.1.2012)

இறைவன் தீராத விளையாட்டுப்பிள்ளை! விளையாடுவதற்கு பொம்மைகள் வேண்டும். விளையாட இடமும் வேண்டும் அல்லவா? அதற்கு பொம்மைகளாக இருப்பவர்கள் நாம். விளையாட்டுகளம் பூமியும், கைலாச( வைகுண்ட)மும் தாõன். இவற்றை படைத்தவனும் இறைவனே!
ஒரு சிறிய உதாரணத்துடன் விளக்குகிறேன்.
ஒரு விளையாட்டு. அது கிரிக்கெட் என்று வைத்து கொள்வோம்.
இந்த விளையாட்டுக்கு இரு அணிகள் தேவை. இந்த இரு அணிகளும் விளையாடுவதைப் பார்த்து, ரசித்து மகிழ்கிறான் ஒரு பார்வையாளன். பார்வையாளன் இறைவன் என்பதால் அந்த மகிழ்ச்சிக்கு பெயர் லீலாரஸம்.
இரு அணிகள் சேர்ந்து விளையாடும் சமயத்தில் அதைப் பார்த்து சந்தோஷப்படும் நேரத்தில் அந்த சந்தோஷத்தைத் தருவதற்கு காரணமாக இருப்பது இரு அணிகள் சேர்ந்து விளையாடும்போது ஒரு அணி அடையும் வெற்றி, இன்னொரு அணி பெறும் தோல்வியாகும்.
இந்த வெற்றி, தோல்விகளைப் பார்த்து பார்வையாளரான இறைவன் சந்தோஷம் அடைகிறான்.
இறைவனுக்கும் போக விபூதி, லீலாவிபூதி உண்டு. போகத்துக்காக வைகுண்ட லோகம். லீலாரஸத்துக்காக இந்த பூலோகம்.
இரண்டு லோகங்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலமாகப் போகரஸம், லீலாரஸம் ஆனந்தங்களை அனுபவிக்கிறான்.
நாம் எல்லாரும் இறைவனின் லீலாரஸத்துக்கு கருவியாக இவ்வுலகில் பிறந்து இருக்கிறோம். அதாவது நம்மை வைத்துக்கொண்டு லீலாரஸத்தை இறைவன் அநுபவிக்கிறான்.
விளையாடுகிறவனுக்கு எப்படிப் பந்து லீலாரஸத்துக்குக் கருவியாக ஆகிறதோ, அப்படியே நாமும் இருக்கிறோம்.
எப்படிப் பந்து அடிக்கப்பட்டபொழுது பவுண்டரியாகவோ சிக்ஸராகவோ செல்லுகிறதோ, அதுபோல நாமும் செய்த நமது புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப நரகத்திலும் பூலோகத்திலும் சொர்க்கத்திலும் இறைவனால் தள்ளப் பட்டுப் போகிறோம்,
பிறந்த மனிதர்களாகிய நாம் நல்லது, கெட்டது இவற்றில் எதைச் செய்தாலும் அது இறைவனின் லீலாரஸத்துக்கு கருவியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விளையாட்டில் வெற்றி, தோல்வி இருந்தால் தானே அந்த விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கும்.
இறைவனை சந்தோஷப் படுத்த பொம்மைகளாக இருக்கும் நாம் கெட்ட காரியங்களைச் செய்தால் அதனால் இறைவன் கோபம் கொண்டு நரகத்தில் தள்ளுகிறான். அதன் மூலம் நமக்கு நரக வேதனை ஏற்படும். நாம் அனுபவிக்கும் கஷ்டத்தைப் பார்த்தும் இறைவன் லீலாரஸத்தை அடைகிறான்.
நற்காரியங்களைச் செய்யும்போது நமக்கு சொர்க்கத்தைக் கொடுக்கிறான். அதைப் பார்த்தும் லீலாரஸத்தை அனுபவிக்கிறான். ஆகையால் இவ்விரு வகையாலும் அவனுக்கு நாம் லீலோபகரணமாக ஆன போதிலும், நமக்கு இன்பம், துன்பம் வருகிறதே!
இதற்கு நாம் என்ன செய்வது? நரகத்திற்கு நம்மை இழுத்துச் செல்லக்கூடிய எவ்வகை தீய செயல்களையும் மனம், வாக்கு, காயத்தால் செய்யாது இருக்க வேண்டும். அடுத்து, என்னென்ன நற்காரியங்கள் செய்தால் புண்ணியம் கிட்டுமோ அந்தக் காரியங்களை சாஸ்திரப்படி செய்ய வேண்டும்.
அப்படி வாழ்ந்தால் நம் வாழ்க்கை இறைவனுக்கும், நமக்கும் எப்பிறவியிலும் நீடித்த இன்பத்தையே தரும்.
தேவராஜன்.
***

உலகம் நலம் பெற வேண்டும்! 19 (16.1.2012)
எல்லாம் அவன் செயல் என்ற உறுதியான நம்பிக்கையில் பக்தி செய்ய வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மன பக்குவ வேண்டும். அப்படிச் செயல்படுவதுதான் பக்தி.
இப்படிபட்ட பக்தியை எப்படி செய்வது? வீட்டில் பூஜை , விரதம், மவுன விரதம் மேற்கொள்ளலாம். அமைதியாக நாமஜெபம், குழுவாய் சேர்ந்து நாம ஸங்கீர்த்தனம் பண்ணலாம். தியானம் செய்யலாம். இப்படி தினமும் பக்தி செய்து வந்தோமானால், நம் மனம் அங்கும் இங்கும் அலைபாயாமல் ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும். அப்படி ஒரு மனக்கட்டுப்பாடு ஏற்பட்டு விட்டால், " இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!' என்று மாணிக்க வாசகர் கூற்றுபடி இறைவன் நினைவு நம் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கும். இதே பக்குவம் நீடித்து வந்தால் நாம் வேறு, இறைவன் வேறு என்ற எண்ணம் எழாது.
அடுத்து, பக்தியோடு கடமையை செய்வது மிக உத்தமம். கீதையில் கண்ணன் சொன்னது போல் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ய வேண்டும். அப்படி செய்யப்படும் கடமை ஒரு குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும்.
இன்னது செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு, சுயநலம் இல்லாது இருக்க வேண்டும்.

"லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து'

உலகில் எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். " எல்லோரும் இன்புற்றிருக்க அல்லால் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே!' என்பார் தாயுமானவர்.
உலகின் எல்லோர் சுகத்தையும் நலனையும் முன்னிட்டுச் செய்யும் ஒரு காரியம், செய்யப்படுபவருக்கு எந்த தீங்கையும் தராது. அந்த காரியத்தால் எந்த பாவ, புண்ணியமும் சேராது.
பாவ, புண்ணியம் சேராமல் பல காரியங்கள் செய்து கொண்டிருந்தால், பிறவிக்கு பிறப்பு, இறப்பு என்ற நிலை மாறி மாறி வந்துக்கொண்டிருக்காது.
உலகம் தான் இறைவன். இறைவன் தான் உலகம் என்பதை விநாயகர் மூலம் திருவிளையாடல் புரிந்து உணர்த்திருக்கிறார் ஈசன்.
உலகம் நலமாக இருந்தால் இறைவனும் நலமாக இருக்கிறான் என்று பொருள். நாமும் நலமாக இருக்கிறோம் என்பது உள்ளார்ந்த அர்த்தம்.
உலகம், உயிர், இறைவன் இந்த நேர்க்கோட்டுப் புள்ளிகள் அன்பு என்ற ஈர்ப்பு சக்தியால் உருவாக்கப்பட்டுள்ளன.
இறைவனிடம் காட்டும் அன்பு தான் "பக்தி" ஆகிறது. சக மனதர்களிடம் காட்டும் அன்பு மனித நேயமாகிறது. இந்த இரண்டிலும் சுயநலம் இல்லாமல், நான் என்ற அகந்தை இல்லாமல், நம்மை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அவனே நம் வாழ்வின் சூத்திரக்காரி என்ற அனுபவத்தை பெறுவதுதான் ஞானம்.
இதை எல்லாம் எப்படி நம்புவது? என்று அறிவுபூர்வமாக யோசித்தால் அதற்கு நித்திய சாட்சியாக இருப்பவை முன்னோர்கள் அவர்கள் ஸமாதி நிலையிலிருந்து உணர்ந்ததை நமக்குத் தந்திருக்கிறார்கள். அவை
வேதாந்தம், உபநிஷத், புராணம், இதிஹாசம் போன்ற கிரந்தங்கள். அவைகளுக்கு விளக்கம் தந்து பாஷ்யங்களாக அமைத்துத் தந்துள்ளார்கள் வியாசர், ஆதி சங்கரர், மத்வாசாரியார்முதலிய ஆசார்யர்கள். இவர்கள் எடுத்துச் சொன்னதை நாம் படித்தறிந்து, அதன்படி வாழ்க்கையை அமைக்க வேண்டியது நமக்கு மட்டுமல்ல, நம்மை படைத்த இறைவனுக்கும் பூர்ண ஆனந்தத்தை தரும்.
தேவராஜன்.
***

சாஸ்திரபடி வாழலாம்! 20 ( 23.1.2012)
எல்லா உயிர்களுக்கும் தாயை போன்றவன் இறைவன். தாயிடம் பிள்ளைகள் பாசமாக இருப்பது இயல்பு. அந்த இயற்கையான உணர்வு நமக்கிருக்கிறதா என்பதை நாம் நம்மை விசாரிப்பது தான் பக்தியின் வெளிபாடு.
இறைவனை வணங்கவும், இறையுணர்வு பெறவும் மனிதப் பிறவியினால் மட்டுமே முடியும்.
மனித உருவம் எடுத்தவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல. வள்ளுவர் கூட மாக்கள் என்று கோபம் கொண்டதுண்டு. மனிதனாக பிறப்பவர்கள் அநேகம். மனிதனாக வாழ்ந்து, மனிதனாக இறப்பது என்பது சிலரே!
அப்படி என்றால், ஒரு மனிதன், மனிதன் என்று சொல்லும்படி எப்படி வாழ்வது?
அதற்கு வழிகாட்டுகிறார் குருமார்கள், யோகியர்கள், சமய சான்றோர்கள். அவர்கள் எல்லாம் நமக்கு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதை நமக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.
சாஸ்திரங்களில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள சின்ன சின்ன விஷயங்களில் கூட ஆழமான பொருள் நிறைந்திருக்கும். அவை எல்லாம் நமக்கு நன்மைகள் தரக்கூடிய வழிகளைக் காட்டும்.

ஒருவரின் தினசரி வாழ்க்கை தொடங்குவது காலை வேளை. அந்த தொடக்கத்தை நல்லவிதமாக தொடங்க, சூரிய உதயத்திற்கு முன்பாக கண் விழிக்க வேண்டும். அப்படி விழித்ததும் முதலில் மங்கல கரமான பொருட்களை பார்க்கவேண்டும். அல்லது கண் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாம்.
அடுத்து காலைக்கடன்கள் செய்ய வேண்டும். பல் துலக்க வேண்டும். நாக்கு வழிக்காமல் இருந்தால் அது சுத்தக்குறைவு என்கிறது சாஸ்திரம்.
நன்றாக குளிக்கணும்.
குளிக்கும் போது கங்கா, யமுனை, சரஸ்வதி, காவேரி போன்ற புனித நதிகளை நினைக்க வேண்டும். பிறகு, இறைவன் நாமங்களை சொல்லிக் கொண்டே குளிக்கவேண்டும்.

குளித்து முடித்து சுத்தமான ஆடை உடுத்தி, நெற்றியில் திருநீறு, குங்குமம், நாமம், சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்ளலாம்.
உணவு உண்ணும் போது இறைவன் நாமங்களை நினைத்துக் கொண்டு இறைவன் அளித்த பிரசாதமாக நினைத்து உண்ணவேண்டும்.

கொலை, களவு, கள், காமம், பொய் சொல்லுதல் போன்றவற்றை பஞ்சமா பாதகம் என சாஸ்திரம் கூறுகிறது. அவற்றை எல்லாம் செய்யாதிருத்தல் வேண்டும்.

செய்யும் பணியில் நேர்மை, திறமை, சேவை, முழுமையாக இருக்க வேண்டும். செய்யும் பணி வழிபாட்டுக்குச் சமம் என சாஸ்திரம் கூறுகிறது.
உழைப்பில்லாத செல்வம் பாவம். குறுக்கு வழியில், ஏமாற்றுதல், பிறரை வஞ்சித்து சேர்க்கும் செல்வத்தால் அவர்களது குடும்பமே நலிந்து போய்விடும் என சாஸ்திரம் எச்சரித்துள்ளது.
மாலையில் பெண்கள் வீட்டில் நல்விளக்கேற்றி வைத்து, நமஸ்காரம் செய்யவேண்டும். விளக்கு ஏற்றுவதால் மகாலட்சுமியின் அருள் இல்லம் முழுவதும் நிறையும்.
மாலையில் இறைவனது திருப்பாடல்களை தனியாகவோ, கூட்டாகவோ பாடினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
இப்பிறவியிலேயே, நாம் சாஸ்திரங்களில் கூறுபட்டுள்ளப்படி வாழ்ந்தால் பிறவி பயன் எய்தலாம்.
தேவராஜன்.
***



அஹம் பிரம்மாஸ்மி! 21 (29.1.2012)
இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. எல்லா உயிரினங்களும் கடவுளாலேயே படைக்கப்பட்டுள்ளன. எல்லா உயிர்களும் கடவுளாகவே இருக்கின்றன.
இத்தகைய அனுபவத்தைப் பெற்று வாழ்வதுதான் மனிதப்பிறவியின் அர்த்தம்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற தத்துவத்தை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு நீங்கள் மனதளவில் நெருக்கமாக, உண்மையாக இருக்கும் வரையில் உங்களுக்குத் எந்தத்தொல்லையும் இல்லை. நம்மை படைத்தவனை அலட்சியப்படுத்தியோ, மறந்தோ வழிமாறும் போதுதான் நம் வீட்டு வாசல்படியில் அழையா விருந்தாளியாக துயரங்கள் வந்து குடித்தனம் நடத்துகின்றன. கடவுள் இல்லா இடங்களில் பாவங்கள் படர்கின்றன.
மனிதர்களை ஏமாற்றுவது போல நீங்கள் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் எப்போதும் எங்கேயும் எல்லோரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த உலகின் நிரந்தர சாட்சி!
கடவும் உன்னிடம், என்னிடம், எவரிடமும் இருக்கிறார்.
நீங்கள் எதுபெற்றாலும் அது கடவுளிடத்தில் இருந்துதான் பெற்றிருக்க முடியும்.
உங்களுடையது என்று எதையும் சொந்தம் கொண்டாடுவது, நான்
அது செய்தேன், இது செய்தேன் என்று மமதையில் தம்பட்டம் அடிப்பது எல்லாம் முட்டாள் தனம்.
எதையும் கடவுளே செய்கிறான்; தருகிறான். நான் வெறும் கருவி மட்டுமே என்று நினைக்க வேண்டும்.
கடவுளே செய்கின்றான். அதன் பலனையும் அவனே அனுபவிக்கின்றான். இங்கு எல்லாமே கடவுளின் ஆட்சி. அது நிரந்தரமான ஆட்சி! நமக்கு எது நடந்தாலும், அது லாபமோ, நஷ்டமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும், இறுதியில் நன்மையையே தரும் என்ற உறுதியான நம்பிக்கையை கொள்வோம்.
இத்ததைய அனுபவம் தான் ஞானம். இந்த ஞானத்தை வீட்டிலிருந்தே நாம் பெறலாம்.
நமக்கு ஏற்படம் தடைகளும், துன்பங்களும் கடவுள் நம் உள்ளத்தைத் துõய்மையாக்கத் தேர்ந்தெடுக்கும் வழிகள் என நம்புங்கள்.
இறைவன் என்ன செய்தாலும், அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும். காரண காரியத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தங்கள் கஷ்டங்களுக்கு கடவுளைத் துõற்றுகிறார்கள். கடவுள் நமக்கு துணைபுரியவில்லை என்று பிதற்றுகிறார்கள்.
துன்பமோ, இன்பமோ எது வந்தாலும் அதற்குக் காரணம் நாம் செய்யும் செயல்கள் தான் என்பதை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்' சங்க பாடல் வரிக்க ஏற்ப எல்லா இடமும் கடவுள் குடிகொண்டுள்ள தலமாக பாவிப்போம். எல்லோரையும் உறவாக நினைப்போம். நேசிப்போம். அன்பு செய்வோம். ஏனெனில் கடவுள் என்னும் ஒரே ஆத்மா தான் எல்லோருள்ளும் நிறைந்து காணப்படுகிறது.
உங்களை யாராவது வெறுத்தால் நீங்கள் அவரை வெறுக்காதீர்கள். காரணம் என்னவென்றால், சிலநேரங்களில் கடவுள் நடத்தும் திருவிளையாட்டுகள் அனேகம் உண்டு. கடவுளே அடிப்பார். அவரே அடிபடவும் செய்வாõர்.
இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டால் போதும் நாம் எப்போதும் கடவுளின் அரவணைப்பில் சுகித்திருக்கலாம்.
தேவராஜன்.


கழுதையிடம் கற்ற ஞானம்! 22 (5.2.2012)

எந்த மனிதன் மனதுக்குள் துயரமில்லை சொல்லுங்கள்? அவரவருக்கு சொல்லிக் கொள்ள துன்பங்கள் உண்டு; காயங்கள் உண்டு. தனக்கு மட்டுமே கஷ்டம், துன்பம் என்று அலறுவதும், என்ன இந்த வாழ்க்கை என்று நொடிந்து போவதும் எதற்காக?
இன்பத்தில் துன்பம்; துன்பத்தில் இன்பம் இது இயற்கை வகுத்த நியதி. கடவுளின் விதி. இதை புரிந்து கொண்டு வாழத்தான் பக்தி ஒரு கருவியாக உதவுகிறது.
நாமோ கருவியை ஆயதமாக்கிகொள்ள ஆசைப்படுகிறோம். அதனால் தான் நம்முடைய பிரார்த்தனைகளில் ஏதோ ஒரு கோரிக்கை இருந்தும் கொண்டும், அது நீண்டு கொண்டும் செல்கிறது.
கடவுள் பஞ்சபூதங்களின் கலவை. இந்த உலகம் பஞ்சபூதங்களின் தொகுப்பு. வாழும் உயிர்களும் பஞ்சபூதங்களால் உருவானவை. பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்புடையவை. அதனால் தான் உலகில் கோடை, வாடை என பருவங்கள் மாறி மாறி வருகின்றன.
எனக்கு வெயில்தான் பிடிக்கும் மழைப்பிடிக்காது என்று அடம்பிடிப்பது பேதமை.
வெயிலை அனுபவிக்கனும். பனியை ரசிக்கனும். மழையையும் ஏற்றுக்கொண்டுதான் வாழனும். அதான் வாழ்க்கை. அதுபோல, வாழ்க்கையிலும் துன்பம், தோல்வி, சந்தோஷம், வெற்றி, அமைதி, நிம்மதி என மாறி மாறி வரும் போது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவம். இந்த அனுபவத்தின் முதிர்ச்சி தான் ஞானம்.
இப்படி வாழ்க்கையில் மாறி மாறி வரும் சூழ்நிலைகளை எதிர்க்கொள்ள மன வலிமையையும், அசராத நம்பிக்கையையும் கொடுக்கும்படி கடவுளிடம் முறையிடலாம். அதைவிட்டு விட்டு எனக்கு துன்பமே வரக்கூடாது. கஷ்டமே ஏற்படக்கூடாது. தோல்வியே காணக்கூடாது என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தால் கடவுள் என்ன செய்ய முடியும்?
ஒரு சிஷ்யர், " ஞானம் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? அதை எப்படி புரிந்துகொள்வது?' என்று தன்னுடைய குருவிடம் கேட்டார்.
இப்படி கேள்வி கேட்ட சிஷ்யரைப் பார்த்து அர்த்தத்தோடு சிரித்த குரு சொன்னார்.
"ஒரு சாலைப்பயணம் என்றால் கூட, மேடு, பள்ளம் என்று இருக்கும். மலைப்பயணம் என்றால் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதை அனுசரித்துதான் போகணும். வாழ்க்கையிலும்
இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சோர்வடையாமலும் இருப்பதுதான் ஞானம்' என்றார் குரு.
சிஷ்யர் விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த சலவைத்தொழிலாளியின் கழுதையை காட்டி," இதை காலையிலும் மாலையிலும் பார்த்தால் உனக்கு புரியும்' என்றார்.
குருநாதர் கூறிய படியே சிஷ்யரும் காலையும், மாலையும் கழுதையை கவனித்தார்.
கடைசிவரை சிஷ்யருக்கு ஒன்றும் புரியவில்லை.
குருவிடமே மீண்டும் விளக்கம் கேட்டார்.
குரு அவருக்குப் புரியும்படி, "இந்தக் கழுதைக்கு, காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை, மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை. இதை பார்த்து தான் நான் அத்தகைய ஞானம் பெற்றேன் என்றார்.
துன்பத்தில் துவளாமலும், இன்பத்தில் இறுமாப்பு கொள்ளாமலும் மனதை இயல்பாக சமநிலையில் வைத்திருப்பதே ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த சிஷ்யர்.
தேவராஜன்.

புதன், 4 ஜனவரி, 2012

தேவராஜனின் மேஜிக் மேஜிக்!

தேவராஜனின் மேஜிக் மேஜிக்!

1 . சாக் பீஸ் புள்ளி மேஜிக்!

தேவையானப் பொருள்: சாக் பீஸ்
செய்முறை: முதலில் நீங்கள் ஒரு மேஜை முன்பு நின்று கொள்ளுங்கள். பார்வையாளர்களைப் பார்த்து, "இப்போது நான் செய்யப்போகும் மேஜிக் ரொம்ப வித்தியாசமானது. இந்த மேஜிக் உங்களில் ஒருவரை அழைத்து செய்து காட்டுகிறேன்' என்று கூறிவிட்டு, பார்வையாளர்களில் ஒருத்தரை அழையுங்கள். வந்தவர் கையை விரிக்கச் சொல்லி, அவரின் கட்டை விரலில் ஒரு சாக் பீஸ் புள்ளியை வைத்து விடுங்கள். இதை பார்வையாளர்களிடம் காட்டச் சொல்லுங்கள். பின்னர், உங்கள் கையையும் விரித்து பார்வையாளர்களிடம் காட்டி என் கையில் ஒன்றும் இல்லை என்பதை நீரூபியுங்கள். அடுத்து, அந்த நபரின் கட்டை விரலில் இருந்த சாக் பீஸ் புள்ளியை அழித்துவிடச் சொல்லுங்கள். அதை பார்வையாளர்களிடம் காட்டச் சொல்லுங்கள். இப்போது "ஜூம்சூம் ஜூம்ஹ' என்று சொல்லிவிட்டு "இப்போ அவர் விரலில் அழித்த சாக் பீஸ் புள்ளி என் கட்டை விரலுக்கு வரும் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு கையை விரித்து காட்டுங்கள். உங்கள் கட்டைவிரலில் சாக்பிஸ் புள்ளி இருப்பதைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்பு சாக்பீஸ் முனையில் தண்ணீர் நனைத்து டேபிளின் ஓரத்தில் அழுத்தமாக ஒரு புள்ளி வைத்துக்கொள்ளுங்கள். மேஜிக் செய்யும் போது மின்னல் வேகத்தில் அதை கட்டை விரலில் ஒத்திக் கொள்ளவும். அல்லது மேஜிக் செய்யும் போது உங்கள் கட்டை விரலை ஈரப்படுத்தி, நாமக்கட்டிபவுடரில் ஒத்திக்கொள்ளவும். ஈரம் காய காய வெள்ளை புள்ளியாகத் தெரியும்!


2 . எலுமிச்சை பழத்தில் ரத்தம் !


தேவையானப் பொருட்கள்: எலுமிச்சம் பழம், சிவப்பு மை, கத்தி, ஊசி (சிரின்ஞ்)

செய்முறை: ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து, அதை பார்வையாளர்களிடம் காட்டி விட்டு, ""இந்த எலுமிச்சம் பழத்தில் இருந்து ரத்தம் சொட்ட செய்கிறேன் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, எலுமிச்சம் பழத்தை உள்ளங்கையில் வைத்து உருட்டுங்கள். பிறகு, எலுமிச்சம் பழத்தை டேபிளில் வைத்து, கண்களை மூடிக்கொண்டு, நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு,"" "ஜூம் ஜூம் ஜூம் ஜூஹா' ரத்தமே இந்த பழத்தில் இருந்து வந்துடு!'' என்று கூறிவிட்டு, பார்வையாளர்களில் ஒருத்தரை எலுமிச்சம் பழத்தை கத்தியால் வெட்டச் சொல்லுங்கள். அவர், பழத்தை வெட்டியதும் அதில் இருந்து ரத்தம் சொட்டும். பார்வையாளர்கள் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்யும் முன்பாக ஒரு ஊசி(சிரின்ஞ்)யில் சிவப்பு மையை உறிஞ்சி அதை எலுமிச்சம் பழத்தின் உள்ளே செலுத்த வேண்டும். பார்வையாளர்களுக்குத் தெரியாமல் இந்த ரகசியத்தை காப்பாற்றுவது தான் இந்த மேஜிக் டெக்னிக்!
உள்ளங்கையில் வைத்து எலுமிச்சையை உருட்டும் போது பழத்தில் பாய்ச்சிய சிவப்பு இங்க் சாறுடன் கலந்து சிவப்பாக உள்ளே மாறி இருக்கும். அதை வெட்டியதுமே சிவப்பாக சாறு வெளியே வரும்.


3. நிமிர்ந்து நிற்கும் கர்சீப்

தேவையான பொருட்கள்: கர்சீப், செல்லோ டேப், சைக்கிள் செயின்

செய்முறை: மூன்று கர்சீப்களை தனிதனியாக கயிறு போல திரித்துக்கொள்ளவும். மேஜிக் செய்யும் போது ஒவ்வொரு கர்சீப்பாக எடுத்து, வலது கையில்அடிமுனையையும், இடது கையில் மேல் முனையையும் பிடித்துக்கொள்ளவும். நண்பர்கள் முன் இடதுகை பிடித்திருக்கும் கர்சீப் முனையைவிட்டுவிடவும். சட்டென்று கர்சீப் கீழே மடிந்து விழும். இதுபோல இரண்டு கர்சீப்களை செய்துகாட்டவும். கடைசியாக ஒரு கர்சீப்பை எடுத்து,"" இதோ, இந்த கர்சீப் மேல் முனை பிடிமானத்தை விட்டுவிடுகிறேன். ஆனால் அது கீழே விழாது பாருங்கள்'' என்று சொல்லி இடதுகை பிடித்திருப்பதை விட்டுவிடுங்கள். கர்சீப் கீழே மடிந்து விழாமல் செங்குத்தாக நிற்கும். இதை பார்த்து நண்பர் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: ஒரு சைக்கிள் செயின் துண்டு ஒரு அடி நீளம் எடுத்துக்கொண்டு அதன் மேல் கர்சீப் சுற்றி, பிரியாமல் இருக்க செல்லோ டேப்பால் ஒட்டிவிடவும். இந்த கர்சீப்பை மற்ற கர்சீப்புடன் சேர்த்து வைத்து கொள்ளவும். கடைசியில் மேஜிக் செய்யும் போது சைக்கிள் செயின் உள்ள கர்சீப்கயிறை எடுத்து பக்கவாட்டு வசத்தில் பிடிமானத்தை விட்டால் மடிந்து விழும். ஆனால் செங்குத்து வசத்தில் பிடித்து கொண்டு பிடிமானத்தை விட்டால் கீழே விழாது. இதில் சீக்ரெட் சைக்கிள் செயின் பக்கவாட்டில் மட்டுமே நிமிந்து நிற்காது. நேர் வசத்தில் நிமிந்து நிற்கும். இந்த மேஜிக் செய்யும் போது கைபிடிமானத்தை விடுமுன் நேர் வசத்தில் திருப்பிக்கொள்ள வேண்டும்.

4 . மஞ்சள் சிவப்பாகும் கலர் மேஜிக்!

தேவையான பொருட்கள் : மஞ்சள் துõள், மஞ்சள் நிற துணி, சுண்ணாம்புத் துõள், தண்ணீர்

செய்முறை:
இந்த மேஜிக் வித்தை ஒரு தந்திர விளையாட்டுத்தான். இதை மிகுந்த முன்னேற்பாடுடன் செய்ய வேண்டும்.
உங்கள் நண்பர்களிடம் ஒரு மஞ்சள் நிற முள்ள துணியை காட்டுங்கள்."" இந்த மஞ்சள் நிற துணியை உங்கள் கண்முன்பே சிவப்பு கலராக மாற்றுகிறேன் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, மஞ்சள் நிற துணியை எடுத்து நன்றாக விரித்துக் காட்டி, உதறுங்கள். பின்னர் தண்ணீர் உள்ள பாத்திரத்தை எல்லாருக்கும் காட்டுங்கள். பிறகு அந்த துணியை பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போட்டு,"" ஓம் கிரீம் கிரீம் ... க்லிம் க்லிம் ... மஞ்சள் துணியே சிவப்பு நிறமாக மாறிவிடு! ம்ம்ம்... கலிம் கிரீம்...'' என்று மந்திரம் போட்டு விட்டு பாத்திரத்தில் இருக்கும் துணியை வெளியே எடுங்கள். மஞ்சள் துணி சிவப்பு துணியாக மாறி இருக்கும் இதைப் பார்த்து பார்வையாளர்கள் அசந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்வதற்கு முன்பாக மஞ்சள் துõளை நீரில் கலந்து கலக்கி, அதில் ஒரு மஞ்சள் நிற துணியை நனைத்து ஊறவைத்து, வெயிலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். அடுத்து தண்ணீர் பாத்திரத்தின் அடியில் ஒரு செ.மீ. அளவு சுண்ணாம்பு எடுத்து பூசி வைத்து கொள்ள வேண்டும். அந்த பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொள் வேண்டும். இந்த தண்ணீரில் மஞ்சள் துணியை போட்டு விட்டு, அதை எடுக்கும் போது சுண்ணாம்பு தண்ணீரில் கலக்கும் படி ஒரு கலக்குகலக்கி அதில் துணியை அமுக்கி எடுத்தால் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்ததும் மஞ்சள் துணி சிவப்பாக மாறும்!
இதில் மேஜிக் சீக்ரெட் மஞ்சள் சுண்ணாம்பு!

5. கண்ணால் வெட்டுப்படும் வாழைப்பழம்

தேவையானப் பொருட்கள் : வாழைப்பழம், ஊசி
செய்முறை:
ஒரு வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வாழைப்பழத்தை பார்வையாலேயே இரண்டாக வெட்டுவேன் என்று சொல்லுங்கள். பார்வையாளர்கள் பார்வையாலேயே நீங்கள் எப்படி வாழைப்பழத்தை இரண்டாக வெட்ட முடியும்? என்று ஆச்சரியமாக கவனிப்பார்கள்! நீங்கள் வாழைப்பழத்தை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலில் பிடித்துக் கொண்டு, "" என் கண்களையே பாருங்கள். என் கண் இப்போது கத்தியாகி இந்தப்பழத்தை வெட்டப்போகிறது. இதோ வெட்டி விட்டது.'' என்று சொல்லி விட்டு, வாழைப்பழத்தோலை உரியுங்கள். தோலை உரித்ததுமே பழம் பாதியாக வெட்டப்பட்டு கீழே விழும்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பே வாழைப்பழத்தை மிக நெருக்கமாக ஊசியால் சரியாக நடுப்பக்கத்தை சுற்றி குத்தி கொள்ளவேண்டும். இவ்வாறு ஊசியால் குத்துவதால் உள்ளே இருக்கும் சுளை இரு பாகமாக வெட்டப்படும். தோலை உரித்ததும் அது பாதியாக உடைந்து விழுந்து விடும். இது சீக்ரெட். இந்த மேஜிக் செய்யும் போது பார்வையாளர்கள் உங்கள் கண்களையே பார்க்குமாறு செய்ய வேண்டும்.


6. மேஜிக் பலுõன்!

தேவையானப் பொருட்கள் :
மூன்று பலுõன்கள் ( பெரியது1; சிறியது1; அதை விட சிறியது1)
நுõல், குண்டு ஊசி, ஜிகினாத் துõள்.
செய்முறை :
பார்வையாளர்கள் முன்பு நின்று கொண்டு கையில் இருக்கும் பலுõனை எடுத்து, வாயில் வைத்து ஊதி காற்றை நிரப்புங்கள்! பின்னர், வாய் பகுதியை இறுக்கத் திருகி, ஒரு நுõல் கொண்டு கட்டுங்கள்.
பார்வையாளர்களைப் பார்த்து, " இப்போ இந்த பலுõனை குண்டூசியில் குத்தப்போகிறேன்' என்று கூறி மெல்ல ஊசி முனையால் குத்துங்கள். பலுõன் "பட்'வெடிக்கும். ஆனால், கையில் காற்று நிரம்பியஒரு பலுõன் இருக்கும். மீண்டும் அதையும் குண்டூசியால் மெல்ல குத்தவும். அந்த பலுõனும் "பட்' என்று வெடிக்கும். ஆனால், கையில் காற்று நிரம்பிய பலுõன் ஒன்று இருக்கும். மீண்டும் அந்த பலுõனை குண்டூசியால் மெல்ல குத்துங்கள். "பட்' சப்தத்துடன் பலுõன் வெடித்து, கலர்கலராய் ஜிகினாய் துõளை விசிறியடிக்கும்!
இப்போது நீங்கள், "பார்த்தீர்களா! ஒரே பலுõன் வெடித்தும் மூன்று முறை மாயமாய் பலுõன் என் கையில் வந்த அதிசயத்தை' என்று ஆச்சரியப்படுத்துங்கள்!
மேஜிக் சீக்ரெட்:
முதலில் ஒரு பெரிய பலுõனை எடுத்து அதில் சிறிய பலுõனைத் திணித்துக்கொள்ளவும். அடுத்து, அந்த பலுõனுக்குள் இன்னொரு சிறிய பலுõனைத் திணித்து அதில் ஜிகினாத் துõளைப் போட்டு வைத்துக்கொள்ளவும். இந்த சீக்ரெட் வித்தையை மேடை ஏறுவதற்கு முன்பாக செய்து கொண்டுச் செல்லவும்!


7 . இருட்டில் தெரியும் வானவில்!

தேவையானப் பொருட்கள்:
முகம் பார்க்கும் கண்ணாடி, கண்ணாடி பாத்திரம், தண்ணீர், சூரிய வெளிச்சம்

செய்முறை:
பொதுவாக வானில் வானில் பகலில் மட்டுமே தெரியும். அதுவும் மழைத்துõறல் உள்ள நேரத்தில் தான் பெரும்பாலும் தோன்றும். அப்படித் தோன்றுவது இயற்கை வானவில். ஆனால், இந்த வாரம் மேஜிக் முறையில் இருட்டிலும் வானவில்லை தோன்றச் செய்யலாம்.
ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முக்கால் பாகம் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அதில் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை வைக்கவும்.
பின்னர், அந்த தண்ணீர் பாத்திரத்தை சூரிய ஓளிப்படுகின்ற இடத்தில் வைக்கவும். அப்போது சூரிய ஒளி தண்ணீர் பாத்திரத்தில் விழும். பாத்திரத்தில் படரும் சூரிய ஒளி அதில் இருக்கும் கண்ணாடியில் பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் சூரிய ஒளியை ஒரு இருட்டு அறையில் செலுத்தினால், அங்கே வானவில்லில் உள்ள ஏழு வண்ணங்களையும் காணமுடியும்.
மேஜிக் சீக்ரெட்:
பொதுவாக சூரிய ஒளியில் ஏழு வண்ணங்கள் உள்ளன. அத்தகைய சூரிய ஒளியை நீரில் பாதி மூழ்கி உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியில் விழச் செய்து அதனை கண்ணாடி மூலம் பிரதிபலிக்கச் செய்வதால் சூரிய ஒளியில் உள்ள ஏழு வண்ணங்கள் தெரியும்.

8 . மேஜிக்! சீட்டுக்கட்டு!

தேவையானப் பொருள்: புதிய சீட்டுக்கட்டு

செய்முறை:
ஒரு புது சீட்டுக்கட்டை எடுத்து, அதை விரித்து உங்கள் நண்பனிடம் கொடுங்கள். பின்னர், நீங்கள் கண்ணை இறுக மூடிக்கொண்டு திரும்பிக்கொள்ளுங்கள். பிறகு, நண்பனிடம் இந்தச் சீட்டுகட்டிலிருந்து ஒரு சீட்டை எடுக்கச் சொல்லுங்கள். அந்த சீட்டில் உங்கள் நண்பனின் பெயரை எழுதச் சொல்லுங்கள். அதை அப்படியே கண்களை மூடிக்கொண்டே வாங்கி, சீட்டுக்கட்டில் கலந்து விடுங்கள். பின்னர் நண்பனிடமே கொடுத்து நன்றாக கலக்கச் சொல்லுங்கள். அப்படி நன்றாக கலக்கி கொடுத்த சீட்டுக்கட்டை நீங்கள் வாங்கி, ஒவ்வொரு சீட்டாக எடுத்துக் கொண்டே வாருங்கள். ஏதோ ஒரு சீட்டை எடுத்து, இது தான் நீ பெயர் எழுதிய சீட்டு என்று எடுத்துக்கொடுங்கள். சீட்டை திருப்பிப் பார்த்து நண்பர் அதில் அவர் போட்ட கையெழுத்து இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவார்!
மேஜிக் சீக்ரெட்!
உங்கள் நண்பர் பெயர் எழுதி கொடுத்த சீட்டை வாங்கும் போதே கண் இமைக்கும் நேரத்தில் அந்தச் சீட்டில் மேல் புறத்தில் உங்கள் கட்டை விரல் நகத்தால் ஒரு அழுத்தம் கொடுங்கள். நீங்கள் கொடுத்த அழுத்தம் தழும்பாக அதில் பதிந்து விடும். பின்னர், சீட்டுக்கட்டை கலுக்கி ஒவ்வொன்றாக எடுக்கும் போது, அந்த தழும்பு உள்ள சீட்டு வரும் போது, அதை எடுத்து கொடுத்து நண்பரை அசத்துங்கள்!

9 . நீராவிக் கப்பல்!

தேவையானப் பொருட்கள்: காலி பல்பொடி டப்பா, சோப்பு பாக்ஸ் மேல் மூடி, மெழுகு வர்த்தி, நுõல், ஒரு அகல பாத்திரம்.
செய்முறை:
ஒரு அகல பாத்திரத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு காலி சோப்பு டப்பாவின் மேல் மூடியில் ஒரு காலி பல்பொடி டப்பாவை இணைத்துக் கட்டி, அதை பெரிய பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, சோப்பு டப்பா மூடியை மிதக்க விடுவும். இது தான் நீராவிக்கப்பல்.
பின்னர், பார்வையாளர்களைப் பார்த்து, " இப்போ இந்த நீராவிக்கப்பல் இந்தப் பாத்திரத்தில் ரவுண்டு அடிக்க வைக்கிறேன் பாருங்கள்! ச்சூ ஜிகத் ஜகா! ஜாத் ஜகா ச்சூ!' என்று சொல்லி ஒரு தீக் குச்சியை கொளுத்தி சோப்பு டப்பாவில் போட்டு விட்டு,உங்கள் கையை கப்பலுக்கு மேலே வைத்துக்கொள்ளுங்கள்! சில நிமிடங்களில் அந்த சோப்பு டப்பா மூடி தண்ணீரில் வட்டமடிக்கும்! இதைப் பார்த்து, பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்! :
மேஜிக் செய்வதற்கு முன்பு, நீங்கள் சோப்பு டப்பாவில் ஒரு மெழுகுவர்த்தியை ஒட்டவைத்துக்கொள்ளவும். மெழுகு முனையில் கொஞ்சம் சூடத்தை திணித்துக்கொள்ளவும்.அடுத்ததாக, பவுடர் டப்பாவில் கொஞ்சம் தண்ணீர் நிரப்பி வைத்துக்கொண்டு சோப்பு டப்பா மூடியையும், பல்பொடி டப்பாவையும் இறுக கட்டிக்கொள்ளவும். நீங்கள் கொளுத்திப் போட்ட தீக்குச்சி சோப்பு டப்பாவில் விழுந்ததும், சூடத்தில் பற்றி, மெழுகு வர்த்தி எரியத் தொடங்கும். சூடு ஆக, ஆக தண்ணீர் ஆவியாகி அது வெளியேறும் போது அந்த சோப்பு டப்பா கப்பல் தண்ணீரில் வட்டமடிக்கும்!

10 . நகரும் மேஜிக் புள்ளி!

தேவையானப் பொருட்கள்: நோட்டு, ஸ்கெட்ச் பென்
செய்முறை: ஒரு புத்தகத்தை எடுத்து முதல் பக்கத்தில் ஒரு புள்ளியை வைத்து, அந்தப் புள்ளி ஒவ்வொரு பக்கமாக மேலே நகரும் என்று சக நண்பர்களிடம் சொல்லி, படத்தில் காட்டியவாறு புத்தகத்தின் பக்கத்தை புரட்டுங்கள். புள்ளி சர்ர்... என்று மேலே நகர்ந்து செல்லும். அதைப் பார்த்து நண்பர்கள் மகிழ்வார்கள்!



மேஜிக் சீக்ரெட்!
ஒரு பாட புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் புத்தகத்தில் ஒரு ஓரமாக படம் 1ல் காட்டியவாறு, கீழ் இருந்து மேலாக ஒவ்வொரு பக்கமாய் புள்ளி வைத்துக்கொண்டு வரவும்.
அல்லது மேல் இருந்து கீழாகவும் ஒவ்வொரு பக்கத்திலும் புள்ளி வைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது புத்தகத்தை மறுபக்கம் திருப்பி கீழ் பக்கம் மட்டும் ஒரே ஒரு புள்ளி வைத்துகொள்வும்.
ஒரு ஒரு புள்ளி வைத்த பக்கத்தை மட்டும் காட்டி விட்டு, அந்த புள்ளி மேலே செல்லுவதாக சொல்லி, புத்தகத்தை திருப்பி கடைசி படத்தில் இருப்பது போல காட்டினால் புள்ளி கீழ் இருந்து மேலே நகருமாதிரி தெரியும்!

11 . மந்திரச் சீப்பு!

தேவையானப் பொருட்கள்:
சீப்பு, சிறிது சிறிதாக கிழித்த காகித துண்டுகள், சிறிதாக உடைத்த குச்சிகள்
செய்முறை:
பார்வையாளர்கள் முன்பு சீப்பைக்காட்டி விட்டு, தலை முடியை மெல்ல சீவுங்கள். பின்னர் சீப்பை உள்ளங்கையில் ஒரு சில விநாடிகள் வைத்து விட்டு, டேபிளில் இருக்கும் காகித துண்டுகள் அருகே கொண்டு போங்கள். இப்போது சீப்பில் அந்த காகித துண்டுகள் ஒட்டாது. பின்னர், பார்வையாளர்களிடம் இப்போ சில மந்திரம் சொல்வேன். இதே சீப்பு இங்கே உள்ள காகித துண்டுகளை இழுக்கும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு,
மறுபடியும் சீப்பால் தøமுடியை சீவுங்கள். சீவிய சீப்பை ஓரமாக பிடித்துக்கொண்டு, உடனே காகிதத்தின் அருகே கொண்டு போங்கள். காகிதத் துண்டுகளை சீப்பு கவர்ந்து இழுக்கும். பார்வையாளர்கள் இதைப்பார்த்து அசந்துபோவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:
ஒரு பொருளுக்கு உராய்வு காரணமாக வெப்பம் ஏற்படுகிறது. வெப்பம் காரணமாக ஒவ்வொரு பொருளும் மின்சக்தி தன்மையை பெறுகின்றன.
சீப்பை பலமுறை தலைமுடியில் ஒரே திசையில் தேய்க்கும் போது சீப்பிலுள்ள அணுக்களில் இருக்கும் எதிர் மின் அணுக்கள் வெளியேறவோ அல்லது தேய்க்கப்படும் பொருளில் உள்ள மின் அணுக்களை ஏற்கும்.
இந்நிலையில் சீப்பினை துண்டுகாகிதங்கள் அருகே கொண்டு சென்றால் அப்பொருளின் நுனியிலுள்ள மின் அணுக்களை ஈர்க்கும் அல்லது தன்னிடமுள்ள மின் அணுக்களை அவற்றிற்கு கொடுக்கும். இதன் காரணமாகதான் சீப்பில் காகிதங்கள் ஒட்டுகின்றன.
இதில் மேஜிக் என்னவெனில் முதலில் சீவும் சீப்பில் ஏறிய வெப்பத்தை உள்ளங்கையில் வாங்கிக்கொள்ள வேண்டும். இதனால் சீப்பில் காகிதத்துண்டுகள் ஒட்டது. இரண்டாவது முறை சீவும் போது சீப்பை ஓரமாய் பிடித்துக்கொண்டு சட்டென்று சீப்பில் ஏறி வெப்பத்தை காகித்ததுக்கு அருகே கொண்டு சென்றால் போதும். உங்கள் மேஜிக் வெற்றிதான்!

12 . தண்ணீர் மறைய வைக்கும் மேஜிக்!

தேவையானப்பொருட்கள்:

1 மெழுகுவர்த்தி
2 தீப்பெட்டி
3 ஒரு ரூபாய் நாணயம்
4 சமமான தட்டு
5 காலி கண்ணாடி டம்பளர்
6 சிறிதளவு தண்ணீர்
செய்முறை:
ஒரு தட்டை எடுத்துக்கொள்ளவும். அதன் மையப்பகுதியில் மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொள்ளவும். பிறகு, தட்டில் கொஞ்சம் தண்ணீர் விடவும். தண்ணீரில் இங்க் அல்லது கலர் சாயம் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். தண்ணீரில் மூழ்கும்படி ஒரு ரூபாய் காசைப் போடவும்.
இப்போது பார்வையாளர்களிடம் தட்டையும், அதில் இருக்கும் தண்ணீரையும் காட்டுங்கள்! பின்னர், இப்போது தட்டில் இருக்கும் தண்ணீரை மாயமாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லி, காலி கண்ணாடி டம்ளரை மெழுகுவர்த்தி மீது கவிழ்த்து வையுங்கள்! கொஞ்ச நேரத்தில் தட்டில் உள்ள தண்ணீர் எல்லாம் கவிழ்த்து வைத்து கண்ணாடி டம்ளரில் சேர்ந்து விடும்.
மேஜிக் சீக்ரெட்:
எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி மீது காலி கண்ணாடி டம்ளரை கவிழ்க்கும் போது காற்று இல்லாமல் மெழுகுவர்த்தி அணைந்து விடும். கண்ணாடி டம்ளரில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப வெளிக்காற்று உறிஞ்சப்படும் போது தட்டில் உள்ள தண்ணீர் டம்ளரில் சேர்ந்து விடும். தண்ணீர் மாயம் ஆனதைக் கண்டு பிடிக்க காசு தண்ணீரில் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டவும்.

13 . அறுந்த விழாத காசு!

தேவையானப் பொருட்கள்:
மெழுகு வர்த்தி, தீப்பெட்டி , நுõல், பழைய அலுமினிய காசு(10 காசு)

செய்முறை:

கெட்டியான நுõலில் பழைய 10 காசை இறுக கட்டிக் கொள்ளவும். பின்னர் நுõலை செங்குத்தாக நிற்குமாறு பிடித்துக்கொள்ளவும். பிறகு, ஒரு மெழுகு வர்த்தியை ஏற்றி கொள்ளவும். பார்வையாளர்களிடம்""இப்போது இந்த மெழுகுவர்த்தியால் இந்தக் காசை சூடேற்றுவேன். ஆனால், காசு மேல் சுற்றி இருக்கும் நுõல் எரியாமல் இருக்கும். அது மட்டுமல்ல நுõலில் இருந்து காசு அறுந்து விழாமலும் இருக்கும்'' என்று சொல்லி விட்டு மெழுகு சுடரை காசின் மேல் காட்டுங்கள். சில நிமிடங்கள் கழித்தும் நுõல் எரியாமல் இருக்கும். காசும் நுõலில் இருந்து அறுந்து விழாமல் இருக்கும். இதைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
மெழுகு வர்த்தியின் சுடரை காசுக்கு பக்கவாட்டில் காட்ட வேண்டும். அப்போது சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் காசை முழுவதுமாக தாக்காது. அடுத்ததாக, பத்துகாசு அலுமினியத்தால் ஆனதால் அதன் வெபட்ப ஏற்புதிறன் மிகவும் அதிகம். எனவே சூடேற்றும் போது, கொடுக்கப்படும் வெப்பத்தை காசு முழுவதுமாக பெற்றுக்கொள்வதால், நுõல் அந்த வெபட்பத்தை சிறிதளவே ஏற்பதால், நுõல் வெப்பத்தால் கரிபடிந்து கருப்பாகி இறுகிவிடும். அதன் மேல் தீச்சுடர்பட்டும் நுõல் எரியாமல் இருக்கும். எனவே நுõலில் இருந்து காசு அறுவாமல் இருக்கும்.

14 .பேப்பர் மேஜிக்!

தேவையானப் பொருட்கள்: அரை அங்குலம் நீளமுள்ள இரண்டு பேப்பர் துண்டுகள், கம்

செய்முறை: இரண்டு துண்டு பேப்பரைக் கொண்டு அதில் ஒன்றில் மட்டும் படத்தில் காட்டியதுப் போல கம் கொண்டு ஒன்றின் மீது ஒன்றாக சரியாக ஒட்டிக் கொள்ளவும்.
பிறகு, படம் நான்கில் உள்ளதைப் போல் மடிக்கவும், படம் 5 ல் இருப்பது போல் நமது கை கட்டை விரலில் அடங்கும் அளவிற்கு மடித்துக் கொள்ளவும்.
பிறகு, பார்வையாளர்களிடம் பேப்பரை திருப்பிக் காட்டவும். மடித்த பகுதி எக்காரணத்தைக் கொண்டும் வெளியே தெரியக்கூடாது.
இப்பொழுது பார்வையாளர்களின் முன் பேப்பரை இரண்டு துண்டுகளாக கிழித்து, முன்பு மடித்ததைப்போல் பேப்பரை மடித்து கையின் முன் ஏதோ மந்திரம் செய்வதைப் போல் செய்து, படம் 10 ல் இருப்பதைப் போல் திருப்பிக்கொள்ளவும்.
பின்னர், பார்வையாளர்களின் முன் கிழிந்த பேப்பரை பிரித்துக்காட்டவும்.
மேஜிக் சீக்ரெட்:
இது ஒருவகை தந்திர மேஜிக். மேஜிக் செய்யும் முன்பாக அந்த பேப்பரில் இன்னொரு பேப்பரை பிறருக்கு தெரியாதவாறு ஒட்டிக் கொள்ளவும். ஒட்டியப் பேப்பர் வெளியே தெரியாதவாறு மடித்துக்கொள்ள வேண்டும். கிழிக்கும் போது மேலே உள்ள பேப்பரைக் கிழிக்க வேண்டும். மேஜிக் செய்து முடித்தப்பிறகு, அடியில் உள்ள பேப்பரை பிரித்துக் காட்டவும்.


15. தொட்ட கல்லை தொட்டுக் காட்டுவது

இது ஒரு தந்திரமான மேஜிக் விளையாட்டு. இந்த மேஜிக்கை செய்ய வேண்டுமானால், உங்களுக்கு நம்பகமான ஒரு நண்பர் தேவைப்படும். இந்த மேஜிக்கை எப்படி செய்வது என்று பார்க்கலாம்!

செய்முறை:

பள்ளியில் நண்பர்கள் மத்தியில் இந்த மேஜிக்கை செய்யுங்கள். மேஜிக் செய்வதற்கு முன்பு, படத்தில் இருப்பதைப் போல ஸ்டார் படம் வரைந்து கொள்ள வேண்டும். அந்த ஸ்டாரில் இரு கோடுகள் சந்திக்கும் புள்ளிகளில் வெவ்வேறு வண்ண கற்களை வைக்க வேண்டும். மேஜிக் விளையாட்டு விளையாட வரும் நண்பரை அழைத்து, உங்கள் கண்களை துணியால் இறுக கட்டச் சொல்லுங்கள். பின்னர், அந்தப்படத்தில் ஏதேனும் ஒரு வண்ணக் கல்லைத் தொடச் சொல்லுங்கள்.(உதாரணமாக அவர் சிவப்பு கல்லைத் தொட்டிருக்கிறார்) பின்னர், தொட்ட விரலை எடுத்து விட்டு தள்ளிச் செல்ல சொல்லுங்கள்.
நண்பரிடம் எனக்கு இப்போது கண் தெரியாது. இருந்தாலும் நீ எந்த கல்லைத் தொட்டாய் என்று துள்ளியமாக சொல்கிறேன். என்று கூறி,
உங்கள் கண்கட்டை அந்த நண்பரையே அவிழ்க்கச் சொல்லவும்.கண் கட்டு அகற்றியதும், ஸ்டார் படத்தின் முன் குனிந்து, கையை விரித்து அப்படியே மூன்று முறை படத்தை சுற்றவும். "ஜூம்ஜூம் ஜூம் ஜஹா! தொட்டக் கல்லே கண் முன் வா' என்று பில்டப் கொடுத்துவிட்டு,உங்கள் நண்பர் தொட்டக் கல் சிவப்பு என்று சொல்லுங்கள். நண்பர் அசந்து போய்விடுவார்.
மேஜிக் சீக்ரெட்:
உங்களின் நண்பகமான நண்பர் மேஜிக் விளையாடியவர் சிவப்பு கல்லைத் தொட்டால் கட்டை விரலையும், பச்சைக் கல்லைத் தொட்டால் சுண்டு விரலையும், கருப்பு கல்லைத் தொட்டால் ஆள்காட்டி விரலையும் காட்ட வேண்டும் என்று சொல்லி வையுங்கள். உங்கள் கண் கட்டு அவிழ்ந்ததும், நண்பர் எந்த விரலைக் காட்டுகிறார் என்பதை தெரிந்து அதை சொல்லவும்.

16 . மாயமாய் வெடிக்கும் பலுõன்!

தேவையானப் பொருட்கள்:
இரண்டு பலுõன், சிறிது மண்ணெண்ணை, கொஞ்சம் பஞ்சு அல்லது காட்டன் துணி

செய்முறை: முதலில் இரண்டு பலுõன்களையும் ஊதிக்கொள்ளவும். அடுத்ததாக, பஞ்சில் கொஞ்சம் மண்ணெண்ணையை நனைத்துக்கொள்ளவும். ஒரு பலுõனை உங்கள் நண்பரிடம் கொடுங்கள்.
இன்னொரு பலுõனை நீங்கள் கையில் வைத்து கொள்ளவும். இப்போது உங்கள் நண்பர் கையில் உள்ள பலுõனை மேஜிக் மூலம் வெடிக்கச் செய்கிறேன் என்று சொல்லி உங்கள் கையில் இருக்கும் பலுõனை அப்படியே சில வினாடிகள் உற்று பாருங்கள். உங்கள் நண்பர் கையில் இருக்கும் பலுõன் "பட்டென்று' வெடிக்கும். இந்த விந்தையைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக்கின் சீக்ரெட் மண்ணெண்ணை. பலுõனில் தெளிக்கும் மண்ணெண்ணை பலுõன் ஊதப்படும் போது காற்றால் நிறைகிறது. அப்போது மண்ணெண்ணையில் உள்ள வேதிப்பொருள் ரப்பருடன் வேதிவினை புரியும் போது சூடு ஏற்பட்டு ரப்பர் இளகும். இளகிய இடத்தில் காற்று வெளியேற முயலும் போது பலுõன் வெடிக்கும்.
மேஜிக் செய்யும் முன் எந்த பலுõனை வெடிக்கச் செய்ய வேண்டுமோ அந்த பலுõன் மீது யாருக்கும் தெரியாமல் மண்ணெண்ணையை தடவிவிட வேண்டும். இந்த தந்திரம் தான் மேஜிக்கின் ஹைலைட் ஆகும்.

17 . சுவரில் ஒட்டும் பலுõன்!

தேவையானப்பொருட்கள் : பலுõன், கம்பளி துணி அல்லது ரப்பர் துண்டு

செய்முறை: முதலில் பலுõனை ஊதி அதனுள் காற்றை நிரப்பவும். பிறகு, நுõலினால் வாய் புறத்தை இறுக கட்டி விடவும். அதாவது காற்று வெளியேறாமல் பார்த்துக்கொள்ளவும்.இப்போது பார்வையாளர்களைப் பார்த்து,""இந்த மேஜிக் பலுõன் எந்த பிடிமானமும் இல்லாமல் சுவற்றில் ஒட்டி நிற்கும். பாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு, கம்பளி துணியால் பலுõன் மேல் புறத்தில் தேய்க்கவும். தேய்த்த கையோடு பலுõனை சுவற்றின் மீது வைத்து கொஞ்சம் அழுத்தி விட்டு, கையை எடுத்து விடவும். இப்போது பலுõன் சுவற்றில் அப்படியே நிற்பதை பார்த்து பார்ப்பவர்கள் ரசிப்பார்கள்.
மேஜிக் சீக்ரெட்: பலுõனை கம்பளி துணியால் தேய்க்கும் போது உராய்வு ஏற்படுகிறது. உராய்வினால் வெப்பம் ஏற்ப்டடு மின்னோட்டம் உருவாகி எலக்ட்ரான் ஈர்ப்பு சக்தி பெற்றுவிடுவதால் பலுõன் சுவற்றில் சிறிது நேரம் ஒட்டி நிற்கும். இந்த மேஜிக் செய்யும் போது பாலுõனில் எந்தப்பகுதியில் கம்பளி துணியால் தேய்த்தோமோ, அந்த பகுதி சுவரில் ஒட்ட வேண்டும். இல்லாவிட்டால் பலுõன் சுவரில் ஒட்டாது.

18 . தண்ணீரை ஈர்க்கும் பலுõன்!

தேவையானப்பொருட்கள்:
பலுõன், கம்பளி துணி

செய்முறை: பாலுõனில் காற்றை ஊதி பெரிதாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், பாலுõனின் வாய்ப்புறத்தை நுõலினால் இறுக கட்ட வேண்டும். அடுத்து, கம்பளி துணியால் பலுõனின் மேல் புறத்தைத் தேய்க்க வேண்டும். தேய்த்த சூட்டோடு, குழாயில் மெலிதாக விழும் தண்ணீர் அருகே கொண்டுச் செல்ல வேண்டும். அப்படிக் கொண்டுச் சென்றதும், குழாயிலிருந்து விழும் தண்ணீரை பலுõன் தன்னை நோக்கி ஈர்க்கும் மாயத்தை நீங்கள் ரசிக்கலாம்.
மேஜிக் சீக்ரெட்:
பலுõனின் மீது கம்பளி துணியால் தேய்ப்பதால் அந்த உராய்வின் காரணமாக பலுõன் மீது மின் காந்தம் ஏற்றப்படுகிறது. பலுõன் தேய்த்த சூட்டோடு கீழ் நோக்கி மெல்ல விழும் தண்ணீர் அருகே கொண்டுச் செல்லும் போது பலுõனின் மேல் புறத்தில் உள்ள மின் காந்த சக்தி தண்ணீரை தன் பக்கம் ஈர்க்கும். இது தான் பலுõன் தண்ணீரை ஈர்க்கும் மேஜிக்!


19 . தண்ணீர் பாலாகும் மேஜிக்!


தேவையானப் பொருட்கள்: பால், துõய வெள்ளைத்துணி, ஜெக், தண்ணீர்

செய்முறை:
இது ஒரு சுவாரஸ்யமான மேஜிக் தந்திர விளையாட்டு. இதை உங்கள் நண்பர்களிடம் செய்து காட்டி அசத்துங்கள்.
உங்கள் நண்பர்கள் முன்பாக ஒரு பிளாஸ்டிக் ஜெக் எடுத்துக்கொள்ளவும். அதை தலைகீழாக கவித்து காட்டி ஜெக்கில் ஒன்றும் இல்லை என்பதை உறுதிபடுத்தவும். அடுத்து, அவர்கள் பார்வைபடும்படி ஜெக்கில் தண்ணீர் ஊற்றவும். தண்ணீருடன் இருக்கும் ஜெக்கை எல்லாரிடமும் காட்டவும். பிறகு, ஒரு வெள்ளை கர்சீப் எடுத்து அந்த ஜெக்கில் உள்ளே விட்டு நனைத்து வெளியே எடுத்து காட்டவும். இப்போது கர்சீப்பில் இருந்து தண்ணீர் சொட்டும்.
அடுத்து, பார்வையாளர்களிடம், "" இப்போது இந்த ஜெக்கில் இருக்கும் தண்ணீர் பாலாக மாறும் பாருங்கள்!" மேஜிக் மேஜிக் தண்ணீரே பால் ஆக மாறு ஜூம் ஜூம் ஜஹா!' என்று சொல்லி விட்டு மீண்டும் கர்சீப்பை ஜெக்கில் விட்டு நனைத்து வெளியே எடுக்கவும். இப்போது கர்சீப்பில் பால் சொட்டு சொட்டாக சொட்டும். ஜெக்கில் இருக்கும் தண்ணீரும் பாலாகமாறி இருக்கும். இதைப்பார்த்தவர்கள் பிரமிப்பார்கள்! ஒருவரை அழைத்து ஒரு சொட்டு பாலை நாக்கில் விட்டு ருசி பார்க்கவும் சொல்லலாம்!
மேஜிக் சீக்ரெட்:
வெள்ளைக் கர்சீப்பில் பாதி அளவு பாலில் நனைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். அந்தக் கர்சீப்பை மேஜிக் செய்யும் போது முதலில் பால் நனையாத பகுதிவெளியேயும், பால் நனைத்த பகுதி உள்ளங்கையில் சுருட்டி அமுக்கி கொள்ளவேண்டும்.முதல் பகுதி கர்சீப்பை தண்ணீரில் நனைக்க வேண்டும். 2 முறை நனைக்கும் போது பால் நனைத்து காய வைத்த பகுதி உள்ளங்கையில் சுருட்டி உள்ளதை தண்ணீரில் நனைக்கவேண்டும். பால் நனைத்த கர்சீப் தண்ணீரில் நனைத்ததும் அதில் உள்ள பால் தண்ணீரில் கலந்து பாலாக தெரியும்.


20 . கண்ணீர் விட்டு அழும் காசு...


தேவையானப்பொருட்கள்: காசு, பஞ்சு, தண்ணீர்

செய்முறை:
ஒரு ரூபாய் காசு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொள்ளவும். பிறகு, அந்தக் காசை பார்வையாளர்களிடம் காட்டுங்கள். காட்டியப்பிறகு, "" இந்தக் காசுக்கும் சில பிரச்னைகள் உண்டு. துன்பம் உண்டு. இது நம்மை போல வாய்விட்டு அழும். ஆனால், அது சொல்லும் கஷ்டத்தை காது கொடுத்துக் கேட்டால் தான் கண்ணீர் விட்டு அழும்.'' என்று கூறிவிட்டு, காசை காது புறம் எடுத்துச் சென்று,"" ஒரு ரூபாய் காசே! உன் கஷ்டத்தை நான் காது கொடுத்து கேட்கிறேன். சொல்ல வேண்டிதை சொல்லிவிட்டு அழு!'' என்று கூறவும். சிறிது நேரத்தில் காசு கண்ணீர் விட்டு அழும். அந்த கண்ணீர் உங்கள் உள்ளங்கையில் இருந்து வழியும். இதை பார்வையாளர்கள் பார்த்து "அட, காசு அழுகிதே!' என்றுஅசந்து போவார்கள்.
மேஜிக் சீக்ரெட் :
பார்வையாளர்களுக்குத் தெரியாமல் பஞ்சை முன்னதாகவே தண்ணீரில் நனைத்து காதின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு காசை உள்ளங்கையில் வைத்து கொண்டு அனைவரிடமும் காட்ட வேண்டும். இப்பொழுது கையை காதின் பக்கம்கொண்டு போய் மந்திரம் போடுவது போல பேசிக்கொண்டே பஞ்சை அழுத்த வேண்டும். பஞ்சை அழுத்தியதுமே தண்ணீர் காசு வழியாக கொட்டும். திறமையாக செய்தீர்களானால் யாரும் நம்பித்தான் போவார்கள். அதுவும் உப்புத் தண்ணீர் என்றால் சுவைத்துப்பார்த்தால் உப்பு கரிக்கும்.

21 . வாயில் குடித்த பால் காதில் வழி வரும் மேஜிக்

தேவையான பொருட்கள்

பீடிங் பாட்டில் ( பால்புட்டி), பால். வொயிட் பெயிண்ட்

செய்முறை:
ஒரு பீடிங் பாட்டிலை எடுத்து நண்பர்களிடம் காட்டுங்கள். பிறகு, பீடிங்பாட்டிலில் பாதியளவு பாலை நிரப்புங்கள். அதை நண்பர்களிடம் காட்டிவிட்டு, பாட்டிலில் இருக்கும் பாலை உதட்டில் வைத்து உறிஞ்சு குடியுங்கள். பாட்டிலில் பால் தீர்ந்து போனதும், பாட்டிலை காதுபுறம் கொண்டுச் சென்று கொஞ்சம் தலையை சாயத்துக்கொண்டு,"" நண்பர்களே! இந்தப் பாட்டிலில் இருந்து குடித்த பாலை எல்லாம் இப்போது காது வழியாக கொண்டு வருகிறேன்... "வாயில் சென்ற பாலே காது வழி வந்துடு... வந்துடு... வந்துடு!' என்று சொல்லிக்கொண்டே பாட்டிலைத் திருப்புங்கள் குடித்த பால் எல்லாம் காது வழியே வந்து பாட்டில் வந்து இருக்கும். இதை பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் ஒரு தந்திரமானது. மேஜிக் செய்யும் முன் பாட்டிலில் ஒரு பக்கம் பாதியளவு வெள்ளை பெயிண்ட் அடித்துக்கொள்ள வேண்டும் மேஜிக் செய்யும் போது பாட்டில் இருக்கும் பாலை கொஞ்சம் குடிக்க வேண்டும். அப்படியே தலைகீழாக கவிழ்த்தால் மீதி பால் பீடிங் ரப்பரில் நிரம்பிவிடும். அப்படியே செங்குத்து வசத்தில் பாட்டிலை காது புறம் கொண்டு சென்று நிமிர்த்தினால் பாட்டிலில் ரப்பரில் நிரம்பிய பால் பாட்டிலில் அடித்தளத்திற்கு வரும். உடனே பாட்டிலை காதில் இருந்து எடுத்து நண்பர்களிடம் காட்டும் போது, வெள்ளை பெயிண்டிங் அடித்தப் பக்கத்தைக்காட்டுங்கள். பால் பாட்டில் முன்பு இருந்தளவே காட்டும். இதில் சீக்ரெட் பெயிண்டிங் பகுதிதான். பாலும் வெள்ளை, பெயிண்டும் வெள்ளை என்பதால் பார்வையாளர்களுக்கு பாட்டிலில் பால் பாதியளவு இருப்பதுபோலவே தெரியும்!

22 . சீட்டு கட்டில் சீக்ரெட் விளையாட்டு!

தேவையானப்பொருள்: புதிய சீட்டு கட்டு ( பிளேயிங் கார்டு)

செய்முறை: உங்கள் நண்பர்கள் முன்பு ஒரு புதிய சீட்டு கட்டை நன்றாக களைத்து, குலுக்குங்கள். பின்னர், அந்த சீட்டுக்கட்டை நண்பரிடம் கொடுத்து இதில் ஒரு சீட்டினை நினைத்துக்கொள். நீ நினைத்த சீட்டை சரியாக நான் சொல்கிறேன் என்று சொல்லுங்கள். உங்கள் நண்பர் சீட்டு கட்டிலிருந்து ஒரு சீட்டை எடுத்து அது என்ன வென்று பார்த்து திருப்பி அந்த சீட்டை கட்டில் மூடிவைத்துவிடுவார்.
நண்பரிடமிருந்து வாங்கிய சீட்டு கட்டை அவர் முன்பாகவே நன்றாக களைத்து குலுக்குங்கள். பின்னர், ஒவ்வொரு சீட்டாக கீழே வைத்து கொண்டே வாருங்கள். அப்படி வைத்துக்கொண்டே வரும் போது சட்டென்று ஒரு சீட்டை கீழே வையுங்கள். இது தான் நீங்கள் நினைத்த சீட்டு என்று கூறுங்கள். உங்கள் நண்பர் அந்த சீட்டை புரட்டிப் பார்த்து, தான் நினைத்த சீட்டு இதுதான் என்று ஆச்சரியப்பட்டுபோவார்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் விளையாட்டில் புத்திசாலிதனம், தந்திரம்தான் முக்கியம். புதிய சீட்டுகட்டு என்பதால் சீட்டின் மேற்பரப்பு பளீச்சென்று இருக்கும். நண்பர் நினைத்து கொண்டு கொடுத்த சீட்டில் சீட்டின் ஓரத்தில் உங்கள் நகத்தால் அழுத்தமாக சிறுகுறி வைத்து விடுங்கள். அது யாருக்கும் சட்டென்று தெரியாது. பிறகு, சீட்டை குலுக்கி ஒவ்வொன்றாக கீழே வைத்துகொண்டே வரும் போது, அந்த நகக்குறி அடையாளத்தைக் கொண்டு அந்த சீட்டை இது தான் என்று காட்டுங்கள்!
இன்னொரு வழியும் இருக்கிறது. இந்த மேஜிக் செய்யும் போது சீட்டு வைக்கும் இடத்தில் கண்ணாடி கிளாஸ், கண்ணாடி பொருட்கள் எதாவது வைத்திருந்தால், நண்பர் சீட்டை திருப்பி பார்க்கும் போது அதன் பிம்பம் கண்ணாடி பொருள்களில் பிரதிபலிக்கும் அதை உற்று கவனித்தும் இந்த மேஜிக் செய்யலாம்!

23 . மேஜிக் எண் விளையாட்டு

தேவையானப் பொருட்கள்: வெள்ளைத்தாள், பேனா

செய்முறை:
படத்தில் இருப்பது போல 2 ஸ்டார்களை வரைந்து கொள்ளுங்கள். பின்னர், ஸ்டார் படத்தில் ஒவ்வொரு புள்ளியிலும் உள்ள எண்களை எழுதிக்கொள்ளவும். இப்போது உங்கள் நண்பர்களை அழைத்து இந்த மேஜிக் எண் விளையாட்டை விளையாடுங்கள்!
படத்தில் இருக்கும் நட்சத்திரத்தில் எந்த கோட்டில் உள்ள எண்களை கூட்டினாலும் கூட்டுத்தொகை மொத்தம் 26 தான் வரும். கார்னர்கள் எண்களை கூட்டினாலும் கூட்டுத்தொகை 26 தான் வரும்.
இந்த விளையாட்டை நண்பர்களை விளையாடச்சொல்லுங்கள். அவர்கள் ஒவ்வொரு கோட்டிலும் இருக்கும் எண்களை கூட்டிப் பார்த்து 26 வருவதை பார்த்து அசந்து போவார்கள்.
உதாரணம்:
1. 1+5+11+9 = 26
2. 4+12+8+2 =26
3. 1+10+12+3 =26
4. 7+11+6+2 =26
5. 9+6+8+3 =26
6. 4+10+5+7 =26
கார்னர்ஸ் 7+9+2+3+4+1 = 26
மாயா சக்கரம்:
படத்தில் இருப்பது போல கட்டங்கள் உள்ள சதுரம் வரைந்து கொண்டு அதில் ஒவ்வொரு கட்டத்திலும் நிரப்பப்பட்டுள்ள எண்ணை எழுதிக்கொள்ளவும். இதிலும் நேராக, குறுக்காக, கீழ் மேலாக, மேல் கீழாக எப்படி கூட்டினாலும் கூட்டுத்தொகை 15 தான் வரும்.

24. நீரைத்தாங்கும் தாள்!

தேவையானப்பொருட்கள்:

கண்ணாடி டம்ளர், நீர், தாள் அல்லது அட்டை

செய்முறை:
ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு, அதன் வாயை காகிதத்தால் மூடிவிடவும், மூடிய காகிதத்தை மெதுவாக தாங்கிப் பிடித்து, டம்ளரை தலைக்கீழாகக் கவிழ்க்கவும். பின்னர் காகிதத்தைத் தாங்கிய கையை சட்டென்றுஎடுத்து விடவும். டம்ளரில் உள்ள நீர் கீழே கொட்டிவிடும்.
பார்வையாளர்களைப் பார்த்து, இப்போது இதே டம்ளரில் நீர் நிரப்பி, தலைக்கீழாக கவிழ்க்கப் போகிறேன். ஆனால், நீர் கொட்டாது. பாருங்கள் என்று கூறிவிட்டு,
அதே டம்ளரில் நீரை விட்டு, அதன் வாய் பகுதியில் காகிதத்தை வைத்து நன்றாக அழுத்தி மூடவும். பின்னர் மெதுவாக அழுத்திய காகிதத்தின் பகுதியில் அணைத்தப்படியே தாங்கிப் பிடித்துக்கொண்டு, டம்ளரை தலைக்கீழாக கவிழ்க்கவும். பின்னர் அணைத்துக்கொண்டிருந்த காகிதத்திலிருந்து கையை ஒரே சீராக மெல்ல எடுக்கவும். இப்போது டம்ளரில் இருந்து நீர் கொட்டாமல் இருக்கும். நீரை காகிதம் தாங்கிக்கொண்டு இருக்கும். இதைப் பார்த்து, பார்வையாளர்கள் அசந்து போவார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
காற்றின் மேல் நோக்கி அழுத்தும் விசையின் காரணமாக டம்ளரில் உள்ள நீர் சொட்டுவதில்லை. காகிதமும் கீழே விழுவதில்லை! இது தான் மேஜிக்கின் அடிப்படை வித்தை! ஆனால், இதை செய்யும் போது முதலில் வேகமாகவும், அடுத்த முறை செய்யும் போது கவனமாக, மெல்ல செய்ய வேண்டும். இவ்வளவுதான் மேஜிக் ரூல்!

25 . டான்ஸ் ஆடும் உருண்டை!


தேவையானப்பொருட்கள்:
1.ஆப்ப சோடா 2.ரசக்கற்பூரம்(பாச்சை உருண்டை)3. வினிகர் (எலுமிச்சை சாறு)4. கண்ணாடி டம்ளர்
செய்முறை:
ஒருகண்ணாடி டம்ளரில் சிறிதளவு ஆப்ப சோடவை போடவும், பின் அதில் பாச்சை உருண்டைகளைப் போடவும். பின்னர் வினிகர் அல்லது எலுமிச்சை சாறுகொஞ்சம் டம்ளரில் விடவும். பார்வையாளர்களைப்பார்த்து, "ச்சூ... ஜக்கா ஜூம்' என்று கூறி கண்ணாடி டம்ளர் மீது உள்ளங்கையை மேலும் கீழும் காட்டிவிட்டு, "இப்போ டம்ளரைப் பாருங்கள் அதிலிருக்கும் உருண்டைகள் மேலும் கீழும் வந்து, போய் டான்ஸ் ஆடுவதை' என்று கூறுங்கள். டம்ளரில் உள்ள உருண்டைகள் மேலே வருவதும் கீழே போவதுமாக இருக்கும்.
மேஜிக் சீக்ரெட்:
ஆப்ப சோடா என்பது சோடியம் பை கார்பைனேட். இதனுடன் வினிகர் எனும் அசிட்டிக் அமிலம் வினைபுரியும் போது, சோடியம் பை கார்பைனேட்டில் உள்ள கார்ப்பன்டை ஆக்சைடு விடுவிக்கப்படும். இந்த கார்ப்பன்டை ஆக்சைடு பாச்சை உருண்டை மீது குமிழ் குமிழாக படிந்து அதன் கன அளவை அதிகரிக்கும். இதனால் நீரின் எடையை விட உருண்டை எடையிழப்பதால் மேலே வரும். மேலே வந்ததும் அந்தக் குழிழ்கள் வெளிக்காற்றுப்பட்டு வெடித்து விடுவதால், மீண்டும் எடைகூடி தண்ணீரில் மூழ்கும். மீண்டும் கார்ப்பன்டை ஆக்சைடு சேர, லேசாகி மேலே வரும். குழிழ்கள் உடைய மீண்டும் கீழே செல்லும். இந்த அறிவியல் நுணுக்கம் பார்வையாளர்களுக்குத் தெரியாததால் நீங்கள் இதை மேஜிக் என்று செய்து அவர்களை அசத்தலாம்!

26 . நீரில் மிதக்கும் ஊசி!

தேவையானப் பொருட்கள்:
ஒருகண்ணாடி டம்ளர், ஒரு டிஸ்யூ பேப்பர், ஒரு ஊசி

செய்முறை:
ஒரு கண்ணாடி டம்ளரில், முக்கால் பாகம் நீரை நிரப்பவும். அதில் மேல்பரப்பில் டிஸ்யூ பேப்பரை படத்தில் காட்டியவாறு மிதக்கவிடவும். அதன் மீது ஊசியை வைக்கவும். பிறகு, பார்வையாளர்களைப்பார்த்து," எல்லாரும் பாருங்க. இந்த டம்ளரில் மிதக்கும் இந்த பேப்பர் துண்டு தண்ணீரில் மூழ்கும். ஆனால், ஊசி மட்டும் தண்ணீர் மேல் பரப்பில் மிதக்கும். நல்லா பாருங்க' என்று சொல்லிவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு கை நெஞ்சில் வைத்து விட்டு "ச்சூ' கையை கண்ணாடி டம்ளர் மீது மூன்று முறை சுற்றி விட்டு, கையை மேலே துõக்குங்கள். டம்ளரில் காகிதம் மூழ்கும், ஊசி மட்டும் மிதக்கும். இதை பார்த்தவர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
நீரில் மிதக்கும் டிஸ்யூ பேப்பர் நீரில் நனைவதால் அடர்த்தி அதிகமாகி அதன் காரணமாக நீருக்குள் மூழ்கிவிடும். ஆனால், அதன் மீது வைக்கப்பட்ட ஊசி நீரின் பரப்பு இழுப்பு விசையின் காரணமாக நீரில் மூழ்காமல் மிதக்கும். இந்த அறிவியல் உண்மை பார்வையாளர்களுக்குத் தெரியாமல் இருப்பது தான் மேஜிக் தந்திரம்!


27 . மேஜிக் ஓவியம்!


தேவையானப் பொருட்கள்:
1 சார்ட் அல்லது வெள்ளை தாள்
2 பிளிச்சிங் பவுடர்
3 பிரஸ்
4 இங்க்
5 ஒரு கிண்ணம்

செய்முறை:

ஒரு வெள்ளை சார்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள். அதை பார்வையாளர்களிடம் காட்டி, அவர்கள் முன்பாக அதில் ஒருபடம் வரையுங்கள். வரைந்த படத்தைக்காட்டுங்கள். பின்னர் வரைந்த படத்தின் மீது கருப்பு மை கொண்டு முழுவதுமாக அழித்து விடுங்கள். இப்போது ஒரே கருப்பாக இருக்கும் சார்ட்டைக் காட்டி "ச்சூ... ஜங்..ஜிங்... ஜாங்... வந்துடு, வந்துடு மறைந்த படமே வந்துடு' என்று சொல்லிவிட்டு சார்ட்டை டேபிளில் வைக்கவும். 5நிமிடம் கழித்தப்பின் சார்ட்டை எடுத்துக்காட்டுங்கள். அந்த சார்ட்டில் கருப்பு பரப்பிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்த போன படம் தெரிய ஆரம்பிக்கும்! அதை பார்த்து பார்வையாளர்கள் அசந்து போவார்கள்!
மேஜிக் சீக்ரெட்!
மேஜிக் செய்வதற்கு முன்பாக, இரு சார்ட்கள் எடுத்துக்கொண்டு, முதல் சார்ட்டில் முழுவதுமாக கருப்பு மையை தடவிக்கொள்ள வேண்டும். பிறகு, ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் பிளிச்சீங் பவுடர் போட்டு கலக்கிக் கொள்ளவும். அந்த கலவை நீர் தெளிந்ததும் அந்த தண்ணீரைக் கொண்டு பிரஸினால் ஒரு ஓவியம் வரைந்து கொள்ளவும். தண்ணீரால் வரைந்ததால் அந்தப் படம் பார்வைக்குத் தெரியாது. இதே போல பார்வையாளர்கள் முன்பும் வரையும் போதும் இதே படத்தை வரைந்து காட்டவும்.
பின்னர் பார்வையாளர்களுக்கு காட்டும் போது பிளிச்சிங்கில்படம் வரையப்பட்ட சார்ட்டை காட்டவும். ஈரம் காய, காய படம் பளீச் சென்று வெள்ளை நிறத்தில் தோன்றும்.

28 . பறக்கும் பறவை!


தேவையானப் பொருட்கள்:
1. சார்ட் அல்லது பேப்பர்
2. பெஜ்சில்
3. ஸ்கெட்ச் பென்
4. கலர்ஸ்
செய்முறை:
சார்ட் அட்டையில் நீள வாக்கில் படத்தில் உள்ளது போல தேவையான அளவில் வெட்டிக்கொள்ளவும்.
அவ்வாறு கட் செய்த அந்த அட்டையை படத்தில் காட்டியவாறு சரிசமமாக மடித்து கொள்ளவும்.
சார்ட்டின் முதல் அட்டைமேல் பக்கத்தில் பறவை இறக்கையை மடித்து இருப்பது போல வரைந்து கொள்ளவும். உதவிக்குப் படத்தைப் பார்த்துக்கொள்ளவும். பிறகு, சார்ட்டின் பின் அட்டை உட் பகுதியில் பறவை இறக்கை விரிப்பதுபோல வரைந்து கொள்ளவும்.
இவ்வாறு சரியாக செய்து கொண்டு, உங்கள் நண்பர்களிடம் இந்த சார்ட் அட்டையைக்காட்டி," இதையே உற்று பாருங்கள். இப்போது இந்தப் பறவை சிறகடித்து பறக்கும்' என்று சொல்லி மூடி,திறந்து, திறந்து, மூடிக்காட்டுங்கள். பறவை சிறகடித்து பறப்பதைப் பார்த்து நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்!

மேஜிக் சீக்ரெட்!
சார்ட்டில் ஒரே அளவு, ஒரு மாதிரி தோற்றம் தருமாறு பறவையை உள்ளும், வெளியும் வரைந்து கொண்டு, அதில் ஒரு பறவை சிறகு மடிப்பது போலவும், இன்னொரு பறவை சிறகு விரிப்பது போலவும் வரைந்து கொள்ளவும். இதை மின்னல் வேகத்தில் மடக்கி, பிரித்துக் காட்டவேண்டும். இவ்வாறு அதி வேகத்தில் திறந்து மூடி காட்டும் போது அந்தப் பறவை அசைவது போல ஒரு மாய தோற்றத்தை பார்ப்பவர் கண்ணுக்கு தெரியும்!

29 . மேஜிக் தண்ணீர் பாட்டில்!

தேவையானப் பொருட்கள்: காலி பிளாஸ்டிக் பாட்டில், ஒரு மக் தண்ணீர், ஒரு கூர்மையான ஆணி
செய்முறை:
முதலில் ஒரு காலி பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து, பார்வையாளர்கள் முன்பு அடிப்பாகத்தில் ஒரு அங்குலம் இடைவெளி விட்டு ஆணியால் ஓட்டைப் போடவும். பின்னர் அந்தப் பாட்டில் தண்ணீரை நிரப்பவும். தண்ணீர் விட்டதுமே பாட்டிலின் அடிப்பாகத்தில் இருந்து தண்ணீர் ஒழுகும். அதை பார்வையாளர்களிடம் சுட்டிக்காட்டி விட்டு, பாட்டிலிருக்கும் தண்ணீரை மக்கில் ஊற்றவும். மீண்டும் காலி ஓட்டைப் பாட்டிலை பார்வையாளர்களிடம் காட்டி விட்டு, "ச்சூ... லடகுட லடலக ச்சூ! தண்ணீரே ஓட்டையிலிருந்து ஒழுகாதே!' என்று சொல்லிக்கொண்டே பாட்டிலில்தண்ணீர் ஊற்றவும். பாட்டில் முக்கால் பகுதி நிரம்பியதும் மூடி போட்டு அழுத்தமாக மூடி விடவும். இப்போது பாட்டிலை பார்வையாளர்களிடம் திருப்பி, திருப்பி காட்டுங்கள். தலைக்கீழாக கவிழுங்கள்! தண்ணீர் ஓட்டையிலிருந்து ஒழுகாது! இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
முதல் முறை பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போது பாட்டிலின் ஓட்டையை விரலால் அடைத்துக்கொள்ள வேண்டாம். இரண்டாவது முறை பாட்டிலில் தண்ணீர் ஊற்றும் போது ஓட்டையை விரலால் அடைத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி, மூடியை இறுக மூடிவிடவும். மூடியவுடன் ஓட்டையிலிருந்து விரலை எடுத்து விடவேண்டும். இவ்வாறு செய்யும் போது தண்ணீர் காற்றழுத்தத்தால் ஒழுகாது.

30 . மேஜிக் படம்!

தேவையானப் பொருட்கள்:
ஒரு வெள்ளை சார்ட், பிளாக் இங்க், வெள்ளை கிரையான், பிளாட் பிரஸ்

செய்முறை:
ஒரு பிளைன் வெள்ளை சார்ட் அட்டையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை எல்லோரிடமும் காட்டி, " நல்லா பாருங்க. இந்த வெள்ளை அட்டையில் எதுவுமே இல்ல. ஆனால், இப்போ இந்த அட்டையிலிருந்து ஒரு மேஜிக் படம் வர வைக்கிறேன் பாருங்கள்!' என்று கூறுங்கள்.
பின்னர், வெள்ளை அட்டையின் மீது கருப்பு இங்க் கொண்டு பிரஸினால் முழுவதுமாக தடவுங்கள்! இப்போது நீங்கள் கருப்பு இங்க் கொண்டு தடவ, தடவ குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இங்க் ஒட்டாமல் அந்த இடத்தில் பளீச்சென்று ஒரு படம் தெரியும். அதைப் பார்த்து எல்லாரும் அசந்துபோவார்கள்!
மேஜிக் சீக்கிரெட்!
மேஜிக் செய்வதற்கு முன்பு, வெள்ளை சார்ட்டில் வெள்ளை கிரையான் கொண்டு ஒரு படம் வரைந்து கொள்ளுங்கள். சார்ட்டும் வெள்ளை, நீங்கள் வரைந்த வெள்ளை கிரையான் படமும் வெள்ளை என்பதால் யாருக்கும் சார்ட்டில் படம் வரையப்பட்டிருப்பது தெரியாது.
அதில் கருப்பு இங்க் கொண்டு பிரஸ் பண்ணும் போது, கிரையான் உள்ள இடத்தில் மட்டும் இங்க் ஒட்டாமல், மற்ற இடங்களில் பரவும். இதன் காரணமாக நீங்கள் வரைந்த படம் மேஜிக் முறையில் தெரியும்!

31 . கை மணிக்கட்டில் ஆடும் தீக்குச்சி!

தேவையானப் பொருட்கள்: தீக்குச்சி, வரைப்பலகை ஊசி

செய்முறை:
படத்தில் காட்டியுள்ளவாறு வரைப்பலகை ஊசியை ஒரு தீக்குச்சியில் செங்குத்தாகக் குத்தி வைக்கவும். பின்னர், கையை நேராக நீட்டி, படத்தில் உள்ளது போல மணிகட்டில் செங்குத்தாக வைக்கவும்.
பிறகு, பார்வையாளர்களிடம்,"" இதோ, பாருங்கள் . இந்த தீக்குச்சியை என் மந்திர சக்தியால் அங்கும் இங்கும் ஊஞ்சால வைக்கிறேன்'' என்று சொல்லி விட்டு, அந்த தீக்குச்சியை அப்படியே முறைத்துப் பாருங்கள். சில நிமிடங்களில் அந்த தீக்குச்சி விட்டு விட்டு அசைவதை பார்வையாளர்கள் பார்த்து ஆச்சரியப்படுவார்கள்.

மேஜிக் சீக்ரெட்:
கை மணிகட்டின் வழியே செல்லும் ரத்தக் குழாயில் நாடித்துடிப்பு விட்டு விட்டு துடிக்கும். அதன் மேல் தீக்குச்சி இருப்பதால், நாடித் துடிப்புக்கு ஏற்ப தீக்குச்சியும் ஆடுகிறது.
குறிப்பு: விளையாடிவிட்டோ, ஓடி வந்த உடனோ மணிக்கட்டில் தீக்குச்சியை வைத்தால் வேகமா ஆடும்.

32 . காகித கப்பில் சுடுநீர்

தேவையானப்பொருட்கள்: காகித கப், மெழுகு வர்த்தி, ஸ்டேன்டு

செய்முறை:
ஒரு காகித கப்பில் முக்கால் பாகம் நீரை நிரப்பிக்கொள்ளவும். பின்னர், ஒரு ஸ்டேன்டில் காகித கப்பை வைக்கவும். ஸ்டேன்டின் அடிப்பகுதியில் மெழுகு வர்த்தியை செங்குத்தாக நிறுத்தவும். பிறகு, அந்த மெழுகு வர்த்தியை எரியவிடவும்.
இப்போது, பார்வையாளர்களைப் பார்த்து,"" இது மேஜிக் சுடுநீர். பொதுவாக ஒரு காகித கப்பை தீயில் காட்டினால் எரிந்து விடும். ஆனால், நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது காகித கப்பில் தான் சுடு நீர் போடுகிறேன். கீழே மெழுகு வர்த்தி எரிவதைப் பாருங்கள். தீசுவாலை காகித கப்பில் படுவதையும் பாருங்கள். ஆனால், காகித கப் எரியாமல் அதில் இருக்கும் நீர் மட்டும் சூடு ஆவதைப் பாருங்கள்'' என்று கூறிவிட்டு, இப்போது மெழுகு வர்த்தியை அணைத்து விடுங்கள். பார்வையாளரை அழைத்து காகிதக்கப்பில் இருக்கும் நீரைத் தொட்டு பார்க்கச் சொல்லுங்கள். தொட்டவர் நீர் சுடுகிறது என்று சொல்லி உங்கள் மேஜிக் கண்டு அசந்து போவார்.

மேஜிக் சீக்ரெட்:
காகிதம் ஒரு அரிதிற்கடத்தி. அதனுள் நீர் இருக்கும் பொழுது,காகித கப்பில் இருக்கும் நீர் கொடுக்கும் வெப்பத்தை நீரே ஏற்று சூடாகிறது. ஒரு பொருள் எரிய வேண்டுமானால், அது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் இருக்கவேண்டும்.காகித கப் எரியும் வெப்பநிலையை எட்டாமல் இருக்க அதனுள் இருக்கும் நீர் தடுத்து விடுகிறது. ஆதலால் தான் காகித கப் எரிந்து விடாமல் அதில் இருக்கும்நீர் மட்டும் சூடாகிறது. இந்த அறிவியல் டெக்னிக் தான் உங்கள் மேஜிக்கின் வெற்றி!


33 . மேஜிக் தீப்பெட்டி

தேவையானப் பொருட்கள்:
தீப்பெட்டி, தீக்குச்சிகள், கம்,சில்லறைக் காசுகள்

செய்முறை:
பார்வையாளர்களைப் பார்த்து,"" இதோ, இந்த தீப்பெட்டியைப் பாருங்கள்'' என்று கூறி, தீப்பெட்டியை திறந்து காட்டுங்கள். அதில் தீக்குச்சிகள் வரிசையாக நிரப்பப்பட்டிக்கும்.அதைப் பார்த்த ஒரு பார்வையாளரைப் பார்த்து,"" இதில் என்ன இருந்தது?'' என்று கேளுங்கள். அதற்கு, அவர்""தீக்குச்சிகள் இருந்தது'' என்று சொல்வார். பின்னர்,""இந்தப் தீப்பெட்டியில் இருக்கும் தீக்குச்சிகளை மாயமாய் மறைய செய்து, இந்த தீப்பெட்டியில் சில்லறை காசுகளை வரவழைக்கிறேன் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, தீப்பெட்டியை அப்படியும் இப்படியும் குலுக்கிவிட்டு, திறந்து காட்டுங்கள். அதில் சில்லறை காசுகள் இருக்கும். பார்வையாளர்கள் பார்த்து வியந்து போவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்னதாக, படத்தில் காட்டியுள்ளபடி, தீப்பெட்டியில் உள்ள உள் அட்டை வெளியே எடுத்து, அதன் பின்புறம் பெவிக்கால் தடவிய தீக்குச்சிகளை ஒவ்வொன்றாக வரிசையாக ஒட்டிக்கொள்ளவும். அவை உலர்ந்தப் பின் தீப்பெட்டியில் பழையபடி சொருகிவிடவும். தீப்பெட்டியில் முன்புற காலி இடத்தில் காசுகளை போட்டுகொள்ளவும். அப்படி இப்படி குலுக்கும் போது தீபெட்டியின் அடிப்புறத்தை திறந்து காட்டினால் காசு இருக்கும். மேல் புறத்தை திறந்து காட்டினால் தீக்குச்சிகள் இருக்கும்.

34 . தானாக அறுந்து விழும் நுõல்!

தேவையானப் பொருட்கள் : கண்ணாடி பாட்டில், நுõல், கனமான ஒரு சிறிய துண்டு, பூதக்கண்ணாடி

செய்முறை: இது ஒரு மேஜிக் விளையாட்டு. பாட்டிலில் தொங்க விடப்பட்டுள்ள நுõலை வெளியில் இருந்தே அறுப்பதாகும். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ள முதலில் படத்தை கவனமாக பார்த்துக்கொள்ளவும். பிறகு, ஒரு கனமான பொருளை பஞ்சு நுõலின் நுனியில் கட்டிக் கொள்ளவும். அதை கண்ணாடி பாட்டிலில் உள்ளே தொங்கவிட்டு, அதன் மேல் முனையை பாட்டிலின் வெளிபுற வாயில் சுற்றி கட்டிக் கொள்ளவும். பின்னர் மூடி போட்டு இறுக மூடிவிடவும்.
இந்த பாட்டிலை அப்படியே சூரிய வெளிச்சம் படும் இடத்தில் வைத்துக்கொள்ளவும். ஒரு பூதக்கண்ணாடியை எடுத்து, பாட்டிலின் உள்ளே செங்குத்தாக தொங்கும் நுõலின் மையப்பகுதியை நோக்கி பூதக்கண்ணாடி வழியாக செல்லும் ஒளியை ஒரு புள்ளியாக குவிக்கவும்.
இப்படி சில நிமிடங்கள் பூதக்கண்ணாடியைக் காட்டிக் கொண்டே இருந்தால் பாட்டிலில் இருக்கும் நுõல் சட்டென்று அ அறுந்து விழும். இது தான் பாட்டிலுக்குள் இருக்கும் நுõலை அறுத்து விளையாடும் மேஜிக்!

35 . பாட்டிலில் அடைபடும் முட்டை!

தேவையானப்பொருட்கள்:
கண்ணாடி பாட்டில், அவித்த முட்டை, தீப்பெட்டி, காகிதம்
செய்முறை:
முதலில் ஒரு கோழி முட்டையை எடுத்து கொதி நீரில் போட்டு அவித்து, அதன் ஓடுகளை அகற்றிக்கொள்ளவும். பின்னர், ஒரு கண்ணாடி பாட்டில் எடுத்துக்கொள்ளவும். அதில் காகிதத் துண்டுகளை கிழித்து போடவும். இவ்வாறு செய்தப் பிறகு, பாட்டில் தீக்குச்சியைக் கொளுத்திப் போடவும். காகிதம் எரியும். உடனே பாட்டிலின் வாய் பகுதியில் அவித்த முட்டையை கொஞ்சம் அழுத்தி வைக்கவும்.
இப்போது, பார்வையாளர்களைப் பார்த்து, ""இந்த முட்டை அதுவாகவே பாட்டிலின் அடிப்பாகத்திற்கு செல்லும் பாருங்கள் '' என்று கூறி கண்ணை மூடிக்கொண்டு "ச்ச்சூ வந்துடு ஜீசேம்!' என்று சொல்லுங்கள். அடுத்த சில நிமிடங்களில் முட்டை பாட்டிலின் அடிபாகத்திற்கு சென்று விடும்.
மேஜிக் சீக்ரெட்:
காற்றின் வளிமண்டல அழுத்தம் முட்டையை உள்ளே இழுக்கும். பாட்டிலில் அடைபட்டிருக்கும் காற்றை வெளியேற்ற, வாய்ப் பகுதியில் உள்ள முட்டை உறிஞ்சப்படும். இதனால், முட்டை பாட்டிலில் உள்ளே செல்லும்.



தேவராஜனின் மேஜிக் மேஜிக் பாகம் 2 ( 36 50)
( தினமலர் சிறுவர் மலரில் வெளிவரும் என்னுடைய மேஜிக் தொடர்)
36. எலுமிச்சை பந்தாகும் மேஜிக்!
தேவையானப் பொருள்: எலுமிச்சை

செய்முறை:
டேபிள் முன்பாக நின்று கொண்டு ஒரு எலுமிச்சை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டி, இந்த எலுமிச்சையை கீழே வீசி, அதை பந்து போல மேலே எழுப்புகிறேன் என்று சொல்லி விட்டு, எலுமிச்சையை கீழே மெல்ல போடவும். சில நொடிகளில் கீழே விழுந்த எலுமிச்சை துள்ளி மேலே வரும். இதைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்யும் போது இடுப்பிலிருந்து உங்கள் பாதம் வரை மறைவாக இருக்க வேண்டும். அதற்கு முன்பக்கம் மறைப்புள்ள டேபிள் முன்பு மேஜிக் செய்ய வேண்டும். எலுமிச்சையை இடது கையில் எடுத்து மெல்ல தரையை நோக்கி கீழே போடும் போது, அந்த எலுமிச்சை கீழே விழும் முன்பாக வலது கையால் பிடித்து, அப்படி மேலே வீச வேண்டும். டேபிளுக்கு மேல் எலுமிச்சை வந்ததும் சட்டென்று இடது கையால் பிடித்துவிடவேண்டும். இந்த மறைமுக ரகசிய செயலை பல முறை ஒத்திகை பார்த்துவிட்டு யாரா வேண்டுமானாலும் செய்யலாம்!

37 . காலி பாட்டிலில் பால் மேஜிக்!

தேவையானப்பொருட்கள்: பால் பாட்டில், பால்
செய்முறை:
சிவப்புநிற பாட்டிஎடுத்து டேபிளில் வைக்கவும். அதில் பார்வையாளர்கள் முன்பாக பாலை ஊற்றவும். பிறகு, அந்தப் பாட்டிலில் இருந்து பாலை ஒரு டம்ளரில் வடிக்கட்டவும். முழுவதும் பால் வடிந்தப்பிறகு, காலியான பாட்டிலை தலைகீழாக கவிழ்த்து பாட்டிலில் சொட்டு பால்கூட இல்லை என்பதை தெளிவுபடுத்துங்கள். அதை அப்படியே சிறிது நேரம் கையில் வைத்திருங்கள். பிறகு உள்ளங்கையில் வைத்து குலுக்கவும். பாட்டிலை அப்படியே பார்வையில் கூர்மையாக பார்த்துக்கொண்டிருங்கள். பிறகு, பாட்டிலை வாய்ப்பக்கம் கொண்டு வந்து, பாட்டிலே ! பாலைக்கொட்டு! என்று சொல்லிவிட்டு பாட்டிலை தலைகீழாக கவிழுங்கள். பாட்டிலிருந்து பால் கொட்டும்! இதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்யும் முன்பாக பாட்டிலில் கால் பாகம் பாலை ஊற்றி, பிரிட்ஜில் ப்ரீசரில் வைத்து, பால் கட்டியாக ஆகும் வரை வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பாட்டில் கலர் சிவப்பு என்பதால் பால் கட்டியாக உறைந்திருப்பது யாருக்கும் தெரியாது. அதில் பாலை ஊற்றி வடிக்கட்டியதும், தலைக்கீழாக கவிழ்த்தாலும் உறைந்த பால்கட்டி கீழே விழாது. உள்ளங்கையில் வைத்து தேய்க்கும் போது உறைந்திருக்கும் கட்டி உருகிவிடும். இப்படி முழுவதும் உருகியதும் கவிழ்த்தால் பால் பாட்டிலிருந்து கொட்டும். இதில் ஹைலைட் பால் ஐஸ் ஆகி இருப்பதுதான்!

38 . உடல் நீளும் பூனை!


தேவையானப் பொருட்கள்: தீப் பெட்டி, பசை, கலர் ஸ்கெட்ச் பென்
செய்முறை: ஒரு தீப்பெட்டியை எடுத்து அதன் ஒரு பக்கத்தைக் காட்டுங்கள். அதில் பூனையின் தலைப் பகுதி மட்டும் இருப்பதை காட்டுங்கள். பின்னர், இந்தப் பூனையின் உடல் பகுதியை மேஜிக்கினால் காட்டுகிறேன் என்று சொல்லி தீப் பெட்டியை உள்ளங்கையில் வைத்து கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் பூனையின் கழுத்து பகுதியில் வைத்து அப்படியே நீளவாக்கில் நகர்த்துங்கள். நீங்கள் விரலை நகர்த்த நகர்த்த பூனையின் உடல் பாகம் நீண்டு கொண்டு வரும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
தீப்பெட்டியில் வெளிப்புறத்தில் பூனையின் முகப்பகுதியை வரையவும். அதன் உட்புறம் உள்ள அட்டையின் அடிபாகத்தில் மேல் புறத்திற்கு இணையாக பூனையின் உடல் பாகத்தை வரையவும். மேஜிக் செய்யும் போது தீப் பெட்டியை உள்ளங்கையில்வைத்து இடது கை பெருவிரலால் உள்ள புற பெட்டியை தள்ளவும். அப்படி தள்ளும்போது உள் புற பெட்டி வெளியே நீளும் அதை வலது கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டிவிரலால் இழுத்துக் கொண்டே அதே சமயம் பூனையின் படத்தை தவிர மீதி இடத்தை மறைத்துக்கொண்டே இழுத்தால் தீப்பெட்டியின் வெளிபுற படத்தோடு உள்புறத்தில் வரைந்து பெட்டியின் உடல் பாகமும் இணையும். விரலால் உள் பெட்டியை இழுக்க இதனால் பூனையின் உடல் பாகம் நீளுவதுபோல மாயா காட்சியை காட்டும். இதுதான் மேஜிக் சீக்ரெட்!


39 . பறக்கும் காகித பலுõன்!

தேவையானப்பொருட்கள்: பட்டர் சீட், மெல்லிய கம்பி, பசை, நுõல்கண்டு, தீப்பெட்டி, ரிப்பன் துணி
செய்முறை:
பட்டர் சீட்டை படத்தில் காட்டியவாறு வெட்டிக்கொள்ளவும். பிறகு பசை கொண்டு படத்தில் இருப்பது போல பலுõன் வடிவம் வருமாறு ஒட்டி, காயவிடவும்.
அடுத்து, கம்பியை எடுத்து வளைத்து குறுக்கும் நெடுக்குமாக இணைக்கவும். கம்பியின் மையப்பகுதியில் ரிப்பன் துணியை தீபந்தம் போல் சுருட்டவும். இந்த வளைய செட்டப்பில் நீங்கள் செய்த பேப்பர் பலுõனை சுற்றி ஒட்டவும். ஈரம் காய்ந்தப்பின், நண்பரின் உதவியுடன், தீக்குச்சியால் தீப்பந்தத்தை கொளுத்துங்கள்.
இப்பொழுது பலுõன் உப்பலாக விரிவடையும், நன்றாக விரிந்தப்பின் பலுõனிலிருந்து கையை விட்டு விடுங்கள். பலுõன் மாயமாய் சர்ர் என்று மேலே சென்று பறக்கும்! பார்த்து ரசியுங்கள்!
மேஜிக் சீக்ரெட்: காகித பலுõனின் வெற்றிடத்தில் தீ பந்தம் எரியும் போது, அது விரிவடைகிறது. விரியடையும் போது வெப்பம் கீழ்நோக்கி அழுத்தமாக வெளியேறும் போது பலுõன் மேல் நோக்கிச் செல்கிறது. தீ வெப்பம் முழுமையாக வெளியேறியதும் வெளிக்காற்று பலுõனில் உட் சென்று நிலையாக பறக்க வைக்கிறது.

40 . மாயமாகும் கிளாஸ்!

தேவையானப் பொருட்கள்: கண்ணாடி டம்ளர், பேப்பர்

செய்முறை: டேபிளில் கண்ணாடி டம்ளரை ஒன்றை வைக்கவும். அந்த டம்ளரில் மேல் பேப்பரை மூடி அழுத்தவும். அப்படியே இடது புறமும் வலது புறமும் நகர்த்தவும். பின்னர், ""இந்த பேப்பரில் இருக்கும் டம்ளர் மாயமாய் போகும் பாருல்கள் என்று'' சொல்லிவிட்டு, பேப்பர் மீது கையை வைத்து அழுத்துங்கள் பேப்பரில் மறைக்கப்பட்ட டம்ளர் மாயமாய் மறைத்திருக்கும்.
மேஜிக் சீக்ரெட்:
தடிமனான பேப்பரை டம்ளரில் வைத்து அழுத்தும் போது பேப்பரில் டம்ளரின் உருவம் பதியும். அதை டேபிளில் நகர்த்தும் போது லாவகமாக டேபிளின் முனைக்கு கொண்டுவந்து டம்ளரை மட்டும் எடுத்துவிடவேண்டும். பின்னர் டம்ளர் உருவத்தில் இருக்கும் பேப்பரை கண்ணாடி டம்ளர் இருப்பது போல நகர்த்தவேண்டும். பேப்பரை கையால் அழுத்தும் போது பேப்பரில் பதிந்துள்ள உருவம் நசுங்கிவிடும். இந்த செய்கையால் பேப்பரில் மறைத்து வைக்கப்பட்ட கிளாஸ் மாயமாய் மறைந்து விட்டது போல ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட வேண்டும்.

41 . மேஜிக் பணம்!


தேவையான பொருட்கள்:
10 ரூபாய் பணம்2, ஆப்பிள், கர்சீப், குத்துõசி, கத்தி
செய்முறை: 10 ரூபாயை பார்வையாளர்களிடம் காட்டி, ரூபாயில்"மேஜிக்' என்று எழுதி, அதையும் காட்டுங்கள். பிறகு கர்சீப்பில் பணத்தை வைத்து நான்காக மடியுங்கள். டேபிளில் அப்படியே வைத்துவிடுங்கள்.
பிறகு, ஒரு ஆப்பிள் எடுத்து,"" கர்சீப்பில் உள்ள 10 ரூபாய் இந்த ஆப்பிளில் எடுத்துக்காட்டுகிறேன்'' என்று கூறி ஆப்பிளை டேபிளில் வையுங்கள்.
கர்சீப்பை எடுத்து பார்வையாளர்களிடம் உதறிகாட்டுங்கள். அதில் இருந்த பணம் மாயமாய் மறைந்திருக்கும். பிறகு, ஆப்பிளை எடுத்து கத்தியால் வெட்டுங்கள். ஆப்பிளின் மத்தியில் 10 ரூபாய் இருக்கும். அதை எடுத்து அதில் எழுதியிருக்கும் "மேஜிக்' எழுத்தையும் காட்டுங்கள். பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
சீக்ரெட் மேஜிக்: முன் கூட்டியே கர்சீப்பில் ஓரத்தில் ஒரு செ.மீ. அளவுக்கு மடக்கி தைத்துக்கொள்ளவும். அதில் பணம் நுழையும் அளவுக்கு தையலைப் பிரித்துகொள்ளவேண்டும். குத்துõசியில் பணத்தை இறுக சுற்றி, ஆப்பிளின் அடிபாகம் வழியாக உள்ளே நுழைத்து, பிறகு ஊசியை மட்டும் வெளியே இழுத்துவிடவும்.
மேஜிக் செய்யும் போது கர்சீப்பில் பணத்தை வைத்து மடிக்கும் போதே பணத்தை கர்சீப் ஓரத்தில் செருகிவிடவேண்டும். இதனால் கர்சீப்பை எடுத்து உதறும் போது பணம் மாயமாய் மறைந்திருப்பதை பார்ப்பவர்கள் காண்பர். கர்சீப்பில் பணம் மறைத்து வைப்பதும், ஆப்பிளில் பணம் குத்துõசியால் நுழைப்பதும் பிறருக்கு தெரியாதவரை வெற்றிதான்!

42 . காபி குடிக்கும் காசு!


தேவையானப்பொருட்கள்: தட்டு, கண்ணாடி கிளாஸ், மெழுகு வர்த்தி, தீப் பெட்டி, ஒரு ரூபாய் காசு, காபி
செய்முறை:
ஒரு தட்டில் கொஞ்சம் காபியை ஊற்றவும். ஊற்றிய காபியில் ஒரு ரூபாய் காசு விடவும். காசுக்கு அருகில் ஒரு மெழுகு வர்த்தியை எரியவிடவும்.
இப்போது பார்வையாளர்களிடம் இந்த ஒரு ரூபாய் காசுக்கு ரொம்ப டயர்டா இருக்கு. இந்த தட்டில் இருக்கும் காபி யைஒரே மூச்சில் ஊறிஞ்சி குடிக்கும் பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, எரியும் மெழுவர்த்தி மீது கண்ணாடி கிளாசை வைத்து மூடுங்கள். சில நிமிடங்களில் தட்டில் இருந்த காபியை காசு முழுவதுமாக குடித்திருக்கும். கண் எதிரிலேயே தட்டில் இருந்த காபி மாயமாய் மறைந்தததை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: தட்டில் எரியும் மெழுகு வர்த்தியை கண்ணாடி கிளாசால் மூடிவிடுவதால் காற்று இல்லாமல் மெழுகு வர்த்தி அணைந்து அங்கே காற்றில்லாத வெற்றிடத்தை உருவாக்கிடும். அப்போது வெளியில் இருக்கும் காற்றை கண்ணாடி டம்ளரில் காற்றில்லா வெற்றிடம் உறியத்தொடங்கும் அப்போது காற்றுடன் காபியும் கண்ணாடி டம்ளருக்கும் சென்றுவிடும் இது தான் சீக்ரெட். கண்ணாடி டம்ளருக்குள் சென்ற காபியை காசு குடித்துவிட்டதாக நீங்கள் கதைவிடவேண்டும் அதா
ன் இந்த மேஜிக்கின் சாமர்த்தியம்!



43 . மேஜிக் காபி!

தேவையான பொருட்கள்

தண்ணீர், தண்ணீர் பாட்டில், காபி துõள், ஒயிட் நெயில் பாலீஷ்

செய்முறை:

ஒரு காலி பாட்டில் நண்பர்களிடம் காட்டுங்கள். அவர்கள் எதிரிலேயே அதில் பாதியளவு தண்ணீரை ஊற்றுங்கள். அதை நண்பர்களிடம் காட்டுங்கள். "" இந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீர் இப்போது மேஜிக் காபியாக மாறும். பாருங்கள்'' என்று சொல்லி விட்டு, பாட்டிலை தலைகீழாக சில நிமிடங்கள் கவிழ்துக்கொள்ளவும். பிறகு, பாட்டிலை நன்றாக குலுக்குங்கள்! நீங்கள் பாட்டிலை குலுக்க குலுக்க தண்ணீர் கொஞ்ச கொஞ்சமாக காபியாக மாறும். மூடியைத்திறந்து அந்த காபியை முகர்ந்து பார்க்கச் சொல்லுங்கள். காபி மணம் இருக்கும். பருகினாலும் காபி ருசியாக இருக்கும். இந்த மேஜிக் காபியை பார்த்து நண்பர்கள் அசந்துபோவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்பாக காபித்துõளை தண்ணீரில் குழைத்து கெட்டியாக பாட்டில் மூடியில் கால் வாசி உள்ளே பூசுங்கள். பிறகு வெயிலில் நன்றாக உலரவிட்டு, அதன் முகப்பகுதியில் ஒயிட் நெயில் பாலீசை மேற்பரப்பில் பூசுங்கள். இப்படி செய்தால் காபி துõள் இருப்பதாகவே தெரியாது. இயல்பான மூடி போலவே தெரியும்.
பாட்டிலில் தண்ணீரை நிரப்பி குலுக்கும் போது மூடியில் உள்ள காபி துõள் கரைந்து தண்ணீரில் கலக்கும் போது காபியாக மாறிவிடும்! இதில் மூடியில் மறைக்கப்பட்டிருக்கும் காபிதுõள் தான் சீக்ரெட்! இந்த ரகசியம் தெரியாத வரை மேஜிக் வெற்றிதான்!


44 . தண்ணீர் ஐஸ் கட்டியாகும் மேஜிக்!

தேவையான பொருட்கள்: காபி கப், ஸ்பான்ஞ், தண்ணீர், ஐஸ் கட்டி
செய்முறை: ஒரு கப் எடுத்து பார்வையாளர்களிடம் காட்டுங்கள். பிறகு, அதை தலைகீழாக கவிழ்த்துக் காட்டி, கப்பில் ஒன்றுமில்லை என்பதை தெளிவுபடுத்தவும். அடுத்ததாக, கப்பில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கை விரலால் கலக்கவும்.
ஒரு சில விநாடிகள் கழித்து, "இந்த கப்பில் ஊற்றிய தண்ணீர் மாயமாய் மறைத்து அதை ஐஸ் கட்டியாக மாற்றிகாட்டுகிறேன்' என்று சொல்லிவிட்டு கப்பை தலைக்கீழாக கவிழ்க்கவும். கப்பில் இருந்து தண்ணீர் கொட்டாது. பின்னர் கப்பை நிமிர்த்தினால் உள்ளே ஐ கட்டி இருக்கும். இதைக் கண்டு பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பாக கப்பில் கொஞ்சம் ஐஸ் கட்டியை வைத்து, அதன் மேல் ஸ்பான்ஞ் வைத்து அழுத்தமாக திணித்துக்கொள்ள வேண்டும். கப்பை கவிழ்க்கும் போது ஸ்பான்ஞ் கீழே விழாது. அடுத்து தண்ணீர் ஊற்றும் போது அந்தத் தண்ணீரை ஸ்பான்ஞ் உறிஞ்சுவிடுவதால் கப்பில் தண்ணீர் இருக்காது. விரலால் கலக்கும் போது ஸ்பான்ஞ் கொஞ்சம்விலக்கி விடவும். கப்பை கவிழ்க்கும் போது ஐஸ் கட்டி கீழே விழுந்து விடும். இந்த மேஜிக்கை கவனமாக செய்தால் நீங்களும் அசத்திக்காட்டலாம்!


45 . வெட்டிய படம் ஒன்று சேர்க்கும் மேஜிக்


தேவையானப்பொருட்கள்: பேப்பர், ஒரு சிறுமி படம், கத்திரிகோல்
செய்முறை: மடிக்கப்பட்ட ஒரு பேப்பரை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டுங்கள். அடுத்து ஒரு சிறுமி படத்தை எடுத்து பார்வையாளர்கள் கண் முன்பாக அதை மடிக்கப்பட்ட தாளில் உள்ளே செலுத்துங்கள். பின்னர் கத்திரி கோலால் குறுக்கு வசத்தில் வெட்டுங்கள். "" இந்த பேப்பரில் இருக்கும் சிறுமி படத்தையும் சேர்த்து தான் வெட்டுகிறேன். ஆனால் இந்த மேஜிக் கத்திரிகோலால் சிறுமி படம் வெட்டப்பட்டாலும் உடனே ஒன்று சேர்ந்துவிடும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு பாதியாக வெட்டிய பேப்பரை விலக்கி விட்டு, உள்ளே சிறுமி படத்தை வெளியே எடுத்துக்காட்டுங்கள். சிறுமி படம் குறுக்கே வெட்டப்படாமல் இருப்பது கண்டு எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:படம்2ல் காட்டியவாறு ஒரு பேப்பரை எடுத்து ரோலாக வெட்டிக்கொள்ளவும்.படம் 3ல் காட்டியவாறு குறுக்கு வசமாக மடித்து மத்தியில் ஒரு அங்குல இடைவெளியில் இருபுறமும் பாதி வெட்டிக்கொள்ளவும். படம் 4ல் காட்டியவாறு வெட்டப்பட்ட துளையில் சிறுமி படத்தை நுழைக்கவும். படம் 5ல் இருப்பது போல பின்புறம் இருக்க வேண்டும். படம் 6 ல் காட்டியவாறு கத்திரகோலால் வெட்டவும். இவ்வாறு கத்திரி கோலால் வெட்டும் போது நடுவில் இருக்கும் சிறுமி படம் வெட்டப்படாமல் இருக்கும். இதில் மடிக்கப்பட்ட தாளின் அடிபக்கத்தில் வெட்டப்பட்ட இடை வெளியில் கவனமாக சிறுமி படத்தை நுழைப்பது தான் மேஜிக் சீக்ரெட்!



46 . பெரிது சிறிதாகும்; சிறிது பெரிதாகும் மேஜிக்

தேவையானப்பொருட்கள்: தடிமனான இரு அட்டை. ஸ்கெட்ச் பென், ஸ்கேல், பேப்பர்

செய்முறை: சம அளவில் இரு கோடுகள் வரைந்து கொள்ளவும். இருகோடுகளுக்கு வேறு வேறு வண்ணம் தீட்டவும். 1 முதல் கோட்டுக்கு "எ' என்றும் 2 வது கோட்டுக்கு "பி ' என்று குறிப்பிடவும். படத்தில் உள்ளது போல 1 வது கோட்டின் இரு முனைகளில் விரிந்திருக்கும்படி ஆரோ வரையவும். 2 வது கோட்டின் இருமுனையிலும் குவிந்திருக்கும் ஆரோ வரையவும். இரண்டையும் உங்கள் நண்பர்களிடம் காட்டி "" இதில் எ கோடு நீளமா? பி கோடு நீளமா'' என்று கேளுங்கள். அவர்கள் எல்லாரும்' எ' தான் நீளமான கோடு என்பார்கள். அதுபோல "இதில் எந்த கோடு சிறியது?'' என்று கேளுங்கள் "பி' கோடுதான் சிறியது என்பார்கள். நீங்கள் இருபதிலுமே தவறு. இந்த இரு கோடுகளும் சம நீளம் கொண்டவை என்று சொல்லிவிட்டு இருகோடுகளில் உள்ள அம்பு குறிகளை மறைத்து கிடைமட்ட கோட்டை மட்டும் காட்டுங்கள். இரண்டு கோடுகளும் சம அளவில் இருப்பதை பார்த்து வியப்பார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
முதல் கோட்டில் போடப்பட்டுள்ள அம்பு குறி விரிந்த நிலையில் இருப்பதால் நீளமானது போல மாய தோன்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. 2 வது கோட்டில் உள்ளடங்கிய அம்பு குறி அமைப்பு நீளம் குறைவான போல மாய தோற்றத்தை தந்துவிடுகிறது. இதில் பார்வையை கிடைமட்ட கோட்டில் கூர்ந்து கவனம் செலுத்தினால் இரண்டு கோடுகளும் சமமானதுதான் என்பது விளங்கும்.



47 . மாயமாய் மறையும் காசு!
தேவையான பொருள்: 25 பைசா காசு

செய்முறை: பார்வையாளர்களிடம் <உங்கள் இருகைகளையும் படம் 1 உள்ளது போல விரித்து காட்டுங்கள். "" கையில் எதாவது இருக்கிறதா?'' என்று கேட்கவும். அவர்கள் ஒன்றுமில்லை என்பர். பின்னர் படம்2 இருப்பது போல புறங்கையை காட்டுங்கள். ""இப்போதும் கையில் எதாவது உள்ளதா'' என கேட்கவும். பதில் இல்லை என்றுதான் வரும். பிறகு அப்படியே இருகைகளின் விரல்களை மடக்கிக்கொள்ளவும். முதலில் இடது கை விரல்களை விரியுங்கள்."" உள்ளங்கையில் எதாவது இருக்கிறது?'' என்று கேளுங்கள். அவர்கள் ஒன்றுமில்லை என்பர். அடுத்து, வலது உள்ளங்கை விரங்களை விரியுங்கள். உள்ளங்கையில் 25 பைசா காசு இருக்கும். அதைப்பார்த்து பார்வையாளர்கள் வியந்துபோவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் ஒரு தந்திர வித்தை. மேஜிக் செய்யும் முன் ஆள்காட்டி விரல், நடுவிரலுக்கு இடையில் 25பைசாவை வைத்து அதன் விளிம்பு பகுதியில் இறுக்கமாக அணைத்துக்கொள்ளவேண்டும்.இப்போது காசு புறங்கை பக்கம் நீண்டு இருக்கும். நீங்கள் காட்ட வேண்டிய பகுதி உள்ளங்கை பக்கம். புறம் கையை திருப்பும்போது லாவகமாக விரல்களை மெல்ல விலக்கி காசை உள்பக்கம் கொண்டுவந்துவிடவேண்டும். இப்போது காசு உள்ளங்கை பக்கம் நீண்டு இருக்கும். இப்போது நீங்கள் காட்டுவது புறங்கை பக்கம். புறங்கையை மடக்கும் போது விரலுக்கு இடையில் உள்ள காசை உள்ளங்கைக்கு கொண்டு வந்துவிடவேண்டும்.


48 . பூனையை ஏமாற்றும் எலி!


தேவையானப் பொருட்கள்: தீப் பெட்டி, பசை, எலி படம், பூனை படம்
செய்முறை: படத்தில் காட்டியுள்ளது போல் தீப்பெட்டியின் மேல் பகுதியில் பூனையின் படத்தை ஒட்டிக்கொள்வும். பிறகு, தீப்பெட்டியின் உள்ளே இருக்கு டிராயரை வெளியே எடுத்து அதன் அடிப்பகுதியில் எலியின் படத்தை ஒட்டவும். எலி, பூனை படம் எதிரும் புதிருமாக இருக்குமாக படத்தில் உள்ளதுபோல கவனமாக ஒட்டவேண்டும்.
இந்த செயல்கள் முடிந்ததும், பார்வையாளர்களிடம் தீப்பெட்டியைக்காட்டி, " இந்த தீப்பெட்டியில் இருக்கும் பூனை இப்போது ஒரு எலியை பிடிக்கப் போகுது பாருங்கள்' என்று சொல்லி தீப்பெட்டியின் டிராயரை வலது புறம் தள்ளுங்கள். பூனைக்கு எதிராக ஒரு எலி வந்து நிற்கும். பார்வையாளர்கள் ஆச்சரியபடும் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, "இப்போது பாருங்கள் எமகாதக எலி பூனையை ஏமாற்றி ஓடிவிடும்' என்று சொல்லி தீப்பெட்டியின் டிராயரை இடது புறம் தள்ளுங்கள். எலி பூனையின் வால் பகுதியில் இருக்கும். பார்வையாளர்கள் இதைப் பார்த்து வியந்துபோவார்கள்.

மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்வது மிக சுலபமானது. இதில் மேஜிக் சீக்ரெட் தீப்பெட்டியில் ஒட்டப்படும் பூனை, எலி படத்தின் திசை தான்! பூனையும் எலியும் நேருக்கு நேர் பார்க்கும்படி ஒட்டியிருப்பதால் வலது புறம் தள்ளும் போது பூனையும் எலியும் நேரு நேர் தெரியும். இடது புறம் தள்ளும் போது எலி இடது புறம் நகருவதால் பூனையின் வால் பக்கம் சென்றுவிடும்.

49 . தண்ணீரில் தெரியும் மேஜிக் ஸ்டார்!

தேவையான பொருட்கள்:
ஒரு சில்வர் தட்டு அல்லது கப், மிளகு துõள், கொஞ்சம் தண்ணீர், குளியல் சோப்

செய்முறை: சில்வர் தட்டில் கால் பகுதி தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரில் மிளகு துõள் ஒரு டீஸ்பூன் அளவு துõவ வேண்டும். இவ்வாறு செய்தப்பிறகு, நண்பர்களிடம், ""இப்போது பாருங்கள் இந்த தட்டின் தண்ணீர் மேல் பரப்பில் சட்டென்று ஒரு மேஜிக் ஸ்டார் வரும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, பக்கத்தில் இருக்கும் சோப்பில் கை விரலை தேய்த்து விட்டு, அதே விரலால் தட்டில் இருக்கும் தண்ணீரில் நனைத்து விட்டு விரலை எடுத்து விடுங்கள். நீங்கள் விரலை எடுத்ததும், தட்டில் உள்ள தண்ணீர் பரப்பில் மாயமாய் ஒருஸ்டார் உருவாகி பின்பு களைவதைப் பார்க்கலாம். தண்ணீரில் மாயமாய் தோன்றி மறைந்த ஸ்டாரைப் பார்த்து நண்பர்கள் மகிழ்வார்கள்!

மேஜிக் சீக்ரெட்:
மிளகில் இருக்கும் வேதிப்பொருட்கள் சோப்புடன் சேரும்போது தண்ணீருக்கும் மிளகு துõளுக்கும் இடையே இருக்கும் ஒட்டும் தன்மை குறைத்து விடுகிறது. சோப்பில் இருக்கும் வேதிப்பொருள் தண்ணீரின் மேற்பரப்புடென்ஷனை தள்ளுகிறது இந்த தள்ளு விசையால் சோப்பை விட்டு மிளகுதுõள் தண்ணீர் பரப்பில் தத்தி ஓடுகிறது. தண்ணீர் தட்டில் வட்ட அமைப்பில் இருப்பதால் தண்ணீரின் மேற்பரப்பில் ஸ்டார் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.



50 . பென்சில் மேஜிக்


தேவையான பொருட்கள்: பென்சில்
செய்முறை:
பார்வையாளர்களிடம் கை விரித்து காட்டுங்கள். பிறகு இருகையும் சேர்த்து கை தட்டுங்கள். பின்னர், ஒரு பென்சிலை எடுத்துக்காட்டுங்கள். ""இந்த பென்சில் இப்போது எந்தபிடிமானமும் இல்லாமல் உள்ளங்கையில் நிற்கும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு பென்சிலை உள்ளங்கையில் வைத்து இறுக்கிபிடியுங்கள். பிறகு திரும்பிக்கொண்டு ஒவ்வொரு விரலாக விரியுங்கள், முடிவில் எல்லா விரலையும் விரித்துவிடுங்கள். பென்சில் கீழே விழாமல் உள்ளங்கையில் ஒட்டிக்கொண்டு நிற்பதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: வலதுஉள்ளங்கையில் பென்சிலை வைத்து அழுத்தும் போதே மெதுவாக வலது கை மணிகட்டில் இடதுகை வைத்து பிடிமானம் கொடுத்து ஆள் காட்டி விரலை மட்டும் வலது உள்ளங்கையில் உள்ள பென்சில் மேல் அழுத்திபிடித்துக்கொள்ள வேண்டும். நாம் திரும்பி நின்று மேஜிக் செய்வதால் உள்ளங்கை பகுதி தெரியாது. அத்துடன் ஆள்காட்டி விரல் பென்சிலை பிடித்திருப்பதும் தெரியாது. இது தெரியாமல் இருப்பது தான் இந்த மேஜிக்கின் ஹைலைட் சீக்ரெட்!


தேவராஜனின் மேஜிக் மேஜிக் மூன்றாம் பாகம் (51 முதல் 55 வரை)
( தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்து கொண்டிருக்கும் என்னுடைய மேஜிக் தொடர்)
51. அறுந்த நுõல் ஒன்றாகும் மேஜிக்

தேவையானப் பொருட்கள்: ஸ்டிரா, நுõல், கத்தரிக்கோல்
செய்முறை: ஒரு ஸ்டிராவை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டி அதில் ஒன்றுமில்லை என்பதை தெளிவு படுத்துங்கள். பின்னர் அந்த ஸ்டிராவில் ஒரு நுõலை நுழையுங்கள். பிறகு அதை அப்படியே இரண்டாக மடியுங்கள். மடித்த முனையை கத்தரிக்கோலால் வெட்டுங்கள். பார்வையாளர்களிடம், "" இந்த ஸ்டிராவில் உள்ள நுõலோடு இரண்டாக வெட்டி விட்டேன். நுõலும் இரண்டு துண்டாக வெட்டியாகிவிட்டது. இப்போது மேஜிக் செய்து வெட்டப்பட்ட நுõலை ஒன்றாக வெளியே எடுக்கிறேன்' என்று சொல்லி வெட்டப்பட்ட ஒரு ஸ்டிராவிலிருந்து நுõலை இழுக்கவும். நுõல் வெளியே முழுமையாக வந்துவிடும். பிறகு நுõலை இழுத்து காட்டுங்கள் அது வெட்டப்பட்டது இணைந்து இருக்கும். பார்த்த பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன்பாக ஸ்டிராவின் மத்தியில் இரண்டு சென்டிமீட்டர் அளவு நீளவாக்கில் கத்தியால் கிழித்து கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது இரண்டாக மடக்கி, ஸ்டிராவின் இரண்டு முனையிலும் தொங்கும் நுõலை இழுத்தால் வெட்டப்பட்ட பகுதியிலிருந்து நுõல் கீழே இறங்கி விடும். அந்த இடத்தில் நுõல் இருக்காது. ஆதலால் நீங்கள் கத்தரிக்கோலால் வெட்டும் போது நுõல் வெட்டுப்படாது. இது தான் மேஜிக் சீக்ரெட்!

52. மாயமாகும் ஓட்டை!


தேவையான பொருள்: காகிதம்
செய்முறை: நீள் சதுர காகிதத்தை எடுத்து, இரண்டாக மடிக்கவும், அடுத்த அதை இரண்டாக மடிக்கவும். இப்போது சதுர வடிவில் இருக்கும் காகிதத்தை பார்வையாளர்களிடம் காட்டி, அதன் ஒரு முனையை சிறிது கிழித்து கிள்ளி எடுக்கவும். கிள்ளி எடுக்கப்பட்டதுடன் காகித சதுரத்தை பார்வையாளர்களிடம் காட்டி,"" இந்த காகிதத்தில் ஒரு முனையை கிள்ளி எடுத்துவிட்டேன். இதனால் காகிதத்தில் நடுவில் ஓட்டை விழும் பாருங்கள்' என்று சொல்லிவிட்டு, காகிதத்தை விரித்துக்காட்டுங்கள். காகிதத்தின் நடுவில் ஓட்டை இருக்கும்.
பிறகு, இன்னொரு காகிதத்தை எடுத்து முன்பு போலவே இரண்டாக மடிக்கவும். அடுத்தும் இரண்டாக மடித்து அதன் ஒரு முனையை சிறிது கிழித்துவிட்டு, கிள்ளி எடுத்துவிடவும். பின்னர் பார்வையாளர்களிடம், "" இந்த காகிதத்தில் கிள்ளி எடுத்த பகுதியில் ஓட்டை விழாமல் இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லிவிட்டு காகிதத்தை விரித்து காட்டுங்கள்! காகிதத்தின் நடுவில் ஓட்டை இல்லாதிருப்பது கண்டு பார்ப்பவர்கள் ஆச்சரியமடைவார்கள்!
மேஜிக் சீக்ரெட்: நான்காக மடிக்கப்பட்ட காகிதத்தில் ஒரு முனையை சிறிய அளவு கிழிக்கும் போதே, அதை இடது கை ஆள்காட்டி விரலால் பின்பக்கமாக மடித்து கொள்ளவும். ஆனால்வலது கை விரலால் கிள்ளி எறிந்தது போல பாவனைக்காட்டவும். இது தான் மேஜிக் சீக்ரெட்!

53. தண்ணீரில் காசு முளைக்கும்!

தேவையான பொருட்கள்: 50 காசு, தண்ணீர் கிளாஸ், கைக்குட்டை

செய்முறை: இடது கை உள்ளங்கையை விரித்துக்காட்டி கையில் காசு இல்லை என்பதை பார்வையாளர்களிடம் தெளிவுபடுத்தவும். பிறகு ஒரு கை குட்டையை எடுத்து நன்றாக உதறி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவுபடுத்தவும். அடுத்து, ஒரு தண்ணீருடன் உள்ள கிளாசை காட்டி அதிலும் காசு இல்லை என்பதை தெளிவு படுத்தவும்.
பின்னர், இடது உள்ளங்கையில் தண்ணீர் கிளாசை வைக்கவும். தண்ணீர் கிளாசின் மீது கைகுட்டையை போட்டு மூடவும். பார்வையாளர்களிடம், "" இப்போது கைகுட்டை எடுத்தால் தண்ணீர் கிளாசில் காசு இருக்கும் பாருங்கள்!'' என்று சொல்லி விட்டு கைகுட்டையை எடுங்கள். தண்ணீர் கிளாசை காட்டுங்கள் அதில் காசு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் மிக தந்திரமாக செய்து பார்வையாளர்களை ஏமாற்றக்கூடிய மேஜிக் என்பதால் நீங்கள் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். மேஜிக் செய்வதற்கு முன்பு இடது கையின் நடுவிரல், மோதிர விரலுக்கு இடையில் காசு வைத்து காசின் விளிம்பு கால் பகுதி மட்டும் விரல் இடுக்கில் வைத்து மறைத்து கொள்ள வேண்டும். இப்படி மறைத்து வைக்கும் காசு புறங்கை பக்கம் தான் 90 சதவீதம் இருக்கும். உள்ளங்கை பக்கம் தெரியாது.உள்ளங்கையில் கிளாசை வைத்து, அதன் மீது கைகுட்டையை மூடிவிட்டு, விரல் இடுக்கில் இருக்கும் காசை புறங்கை பக்கத்திலிருந்து வலது கையால் தள்ளி, உள்ளங்கைக்கு கொண்டு வந்து, காசின் மீது கிளாஸ் இருக்குமாறு வைத்து கொள்ள வேண்டும். கண்ணாடி கிளாஸ் என்பதால் அடியில் இருக்கும் காசு கண்ணாடி கிளாசில் இருப்பது போல பிம்பத்தைத் தரும். மறைத்திருக்கும் காசை, கண்ணாடி கிளாசின் அடியில் கொண்டுச் சேர்ப்பதுதான் மேஜிக் சீக்ரெட்!


54. பத்து ரூபாய் பிட்டிங் மேஜிக்!

தேவையான பொருட்கள்: பத்து ரூபாய் பணம் இரண்டு

செய்முறை: பத்து ரூபாய் பணத்தை நெடுக்கு வசத்தில் படத்தில் உள்ளது போல மடித்துக்கொள்ளவும். அதே போல் இன்னொரு பணத்தையும் நெடுக்கு வசத்தில் மடித்துகொள்ளவும்.
பிறகு, படத்தில் காட்டியவாறு முதல் பத்து ரூபாயை நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்டதை சரிபாதியாக மடிக்கவும்.
நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில், சரி பாதியாக மடிக்கப்பட்ட பணத்தை நுழைக்கவும். பிறகு, பார்வையாளர்களிடம் படத்தில் காட்டியவாறு நன்றாக இழுத்துக்காட்டவும்.
சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில் இருந்து வெளியே வராது.
பின்னர் நெடுக்கு வசத்தில் உள்ள பணத்தின் இரு முறையிலும் கை இருவிரலை வைத்து அடைத்துக்கொண்டு சரிபாதியாக உள்ள பணத்தை"வந்துடு வந்துடு வெளியே வந்துடு...' என்று சொல்லிவிட்டு இழுக்கவும். சரிபாதியாக மடிக்கப்பட்ட பணம் வெளியே வந்து விடும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.

55. மேஜிக் எழுத்து!


தேவையான பொருட்கள்: வெள்ளை காகிதம், பேனா
செய்முறை: ஒரு அ4 காகிதத்தை படத்தில் காட்டியவாறு நான்கு பாகமாக மடித்துக்கொள்ளவும். நான்கு பாகத்திற்கு 1,2,3,4 என்று பெயரிட்டுக்கொள்ளவும்.
2 மற்றும் 3 ம் பாகத்தின் மத்தியில் மேலிருந்து கீழாக ஆ,ஈ,இ,அ என்று எழுதிக்கொள்ளவும். அடுத்து, படத்தில் காட்டியவாறு 1,2 பாகத்தின் நடுவும் 3, 4ம் பாகத்தின் நடுவும் இணையுமாறு மடிக்கவும். மடித்த பகுதியில் மேலிருந்து கீழாக அ,ஆ,இ,ஈ என்று எழுதவும். பின்னர், பார்வையாளர்கள் முன்பு 1 மற்றும் 4ம் பாகத்தை படத்தில் இருப்பது போல உள்புறமாக மடித்துக்காட்டி, அதில் வரிசை மாறி எழுதப்பட்டிருக்கும் எழுத்தைக் காட்டவும். பிறகு, "" இதில் எழுதப்பட்டிருக்கும் வரிசை மாறிய எழுத்துக்கள் இப்போது வரிசைபடி தோன்றும் பாருங்கள்!'' என்று கூறி இரண்டாக மடிக்கவும். பிறகு பிரித்துக்காட்டுங்கள். எழுத்துக்கள் வரிசைபடி இருக்கும். இதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பர்.
மேஜிக் சீக்ரெட்: 2 மற்றும் 3ம் பாகத்தை பார்வையாளர்களிடம் காட்டியிருப்பதை இரண்டாக மடிக்கும் போது மேல் பக்கம் 4ம் பாகமும் கீழ் பக்கம் 1 ம்பாகமும் இருக்கும். அதை பிரித்துக்காட்டும் போது 2,3, உள் மடித்தும் 1ம் பாகம் 4ம் பாகம் மேல் பக்கமாக விரித்துக்காட்ட வேண்டும்.
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்யும் முன் படத்தில் காட்டியவாறு நெடுக்கு வசத்தில் மடிக்கப்பட்ட பணத்தில் மத்தியில் அரை சென்டி மீட்டர் அகலத்தில் ஜிக்ஜாக் வருமாறு மடித்து கொள்ள வேண்டும். அதை விரலால் மறைத்து கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது, சரிபாதியாக மடிக்கப்பட்ட பணத்தை நெடுக்கு வசமாக மடிக்கப்பட்ட பணத்தில் நுழைக்கும் போது ஜிக்ஜாக்காக மடிக்கப்பட்ட பகுதியில் நுழைத்து விடவேண்டும். ஆனால் பார்ப்பதற்கு பணத்தில் முழுமையாக நுழைப்பது போலவே பாவ்லா கட்ட வேண்டும். இதில் ஜிக்ஜாக் பகுதியில் பணத்தை நுழைத்து எடுப்பது தான் சீக்ரெட்!

மேஜிக் மேஜிக்

56 . மாயமாய் வந்து போகும் ஒயர்!

தேவையான பொருட்கள்: சிறிய ஒயர் துண்டு, செல்லோ டேப்

செய்முறை: இந்த மேஜிக் செய்வது மிக சுலபம். ஆனால், பார்வையாளர்களை தந்திரமாக ஏமாற்றுவது ரொம்ப கடினம். ஆதலால் மேஜிக் சீக்ரெட்டை தந்திரமாக கையாள வேண்டும்.
பார்வையாளர்களிடம் உங்கள் வலது கை உள்ளங்கையை படத்தில் இருப்பது போல காட்டுங்கள். ""கையில் ஏதாவது இருக்கிறதா?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""இல்லை!'' என்று பதில். அடுத்து மின்னல் வேகத்தில் விரல்களை குவியுங்கள். குவித்த விரல்களுக்கு இடையில் ஒரு ஒயர் நீண்டு இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்துகொண்டிருக்கும் போது, மீண்டும் சட்டென்று குவித்த விரல்களை விரியுங்கள். இப்போது அந்த மாயமாய் மறைந்து இருக்கும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பின் உச்சத்துக்குப் போவார்கள்!
சீக்ரெட்:
படத்தில் இருப்பது போல வலது புறங்கை கட்டை விரல் நகப் பகுதியில் துண்டு ஒயரை செல்லோ டேப்பால் ஒட்டிக் கொள்ளவும். புறங்கை பக்கம் இருப்பதால் உள்ளங்கைப் பக்கம் தெரியாது. விரலை குவிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் செங்குத்தாக தெரியும். விரல்களை விரிக்கும் போது கட்டை விரலில் உள்ள ஒயர் புறங்கை பக்கம் இருப்பதால் பார்வையாளர்களுக்கு ஒயர் மாயமாய் மறைந்தது போன்ற பிரம்மையை ஏற்படுத்தும்.

57 . கண்ணை ஏமாற்றும் பூமாராங்!

தேவையான பொருட்கள்: அட்டை, காம்பஸ், பென்சில், கத்தரிக்கோல், கலர் ஸ்கெட்ச் பென்.
செய்முறை:
சற்று தடிமனான இரு அட்டையை எடுத்து, ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கவும். பிறகு, காம்பஸ் உதவியுடன் பென்சிலால் ஒரு ஆர்க் வரையவும். அடுத்து, ஒரு செ.மீ கீழ் நோக்கி இன்னொரு ஆர்க் வரையவும். ஆர்க் கோடு மீது கத்தரி வைத்து நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய ஆர்க் பகுதியை தனியே எடுத்தால் அது படத்தில் காட்டியுள்ளவாறு இருக்கும். மேலே உள்ள அட்டைக்கு சிகப்பு வண்ணமும், கீழே உள்ள அட்டைக்கு மஞ்சள் வண்ணமும் பூசவும்.
வண்ணம் பூசப்பட்ட அட்டை களை படத்தில் காட்டியவாறு ஒரு டேபிளில் முதலில் சிகப்பு அட்டையும் அதன் கீழ் மஞ்சள் அட்டையை வைக்கவும். பார்வையாளர்களிடம் ""இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டையில் எது பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்கள் சிகப்பு அட்டைதான் பெரியது என்பர். பின்னர், மஞ்சள் அட்டைய மேலே வைத்து அதன் கீழ் சிவப்பு அட்டையை வைத்து, "" இப்போது எந்த அட்டை பெரியது?'' என்று கேளுங்கள். பார்வையாளர்களிடமிருந்து ""மஞ்சள் அட்டை'' என்று பதில் வரும். முடிவில் இரண்டு அட்டையையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து அதை பார்வையாளர்களிடம் காட்டிவிட்டு, இரண்டு ஒரே அளவு உள்ள அட்டை தான் என்று சொல்லுங்கள். பார்வையாளர்கள் தங்கள் கண்களை ஏமாற்றிய பூமாராங் அட்டையை நினைத்து ஆச்சரியப்படுவார்கள்!

சீக்ரெட்: சம அளவு உள்ள அட்டை என்ற போதிலும் ஒன்றன்கீழ் ஒன்றாக வைக்கும் போது பார்ப்பவர்கள் கண்கள் மேலே உள்ள அட்டையின் உள் வட்டத்தோடு கீழே உள்ள அட்டையின் வெளி விட்டத்தை ஒப்பீடு செய்வதால் தோன்றும் மாயபிம்பம் தான் பெரிது, சிறிது என்று சொல்ல வைக்கும்

58 .மேஜிக் மேஜிக்
தானாக பாட்டிலுக்குள் செல்லும் காசு!


தேவையான பொருட்கள்: கண்ணாடி பாட்டில், பேப்பர், காசு

செய்முறை: கொஞ்சம் அகன்ற வாய் ( பாட்டில் காசு நுழையும் அளவு) உள்ள பாட்டில் எடுத்துக்கொள்ளவும். பாட்டிலின் வாய் புறத்தின் மேல் மெல்லிய பேப்பரை படத்தில் காட்டியவாறு வைக்கவும். அதன் மீது காசு வைக்கவும்.
பிறகு, பார்வையாளர்களைப் பார்த்து, "இப்போது பாட்டிலின் மேல் இருக்கும் காசு அதுவாக பாட்டிலுக்குள் விழும்' என்று சொல்லி விட்டு பாட்டிலுக்கு மிக அருகில் முகத்தை வைத்துக்கொண்டு, கண்களால் பாட்டில் மேல் உள்ள காசை உற்று நோக்கவும். சில நிமிடங்களில் திடீர் என்று காசு பாட்டிலுக்குள் சென்றுவிடும். இதைக்கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்: இந்த மேஜிக் செய்து காட்டுவது மிக சுலபம். ஆனால், பாட்டிலில் பேப்பரை வைத்து அதன் மேல் காசு வைப்பதில் தான் கொஞ்சம் கவனம் வேண்டும். சிறு அசைவு ஏற்பட்டாலே பேப்பர் நகரும் படி அது இருக்க வேண்டும். மேஜிக் செய்யும் போது, பாட்டிலின் அருகே முகத்தை கொண்டுச் செல்லும் போது பேப்பரின் அடிபாகத்தில் படுமாறு மெல்ல அதே சமயம் தொடர்ந்து சீராக வாயினால் காற்றை ஊதிக்கொண்டே இருக்க வேண்டும். பேப்பர் மீது காற்று பட பட பேப்பர் மெல்ல மெல்ல நகரும். பாட்டிலின் வாய்புறத்தில் சற்று பேப்பர் நகர்ந்தாலே கனமான காசு பாட்டிலின் கீழ்நோக்கி சென்று விடும். இதில் நாம் வாயினால் காற்றை ஊதுவதை பார்வையாளர்கள் உணர்ந்து
கொள்ளாதபடி செய்வதுதான் சீக்ரெட்!

மேஜிக் மேஜிக்

59 . கண் பார்வையில் வளையும் ஸ்பூன்!

தேவையான பொருட்கள்: ஒரு ஸ்பூன், நிக்கல் வில்லை அல்லது 25 காசு

செய்முறை: நேராக இருக்கும் ஒரு ஸ்பூனை எடுத்து பார்வையாளர்களிடம் காட்டவும். அதை டேபிளில் செங்குத்தாக குத்தி அது வளைக்க முடியாதபடி தடிமனாக இருப்பதை உணர்த்துங்கள். பிறகு, ஸ் பூனை படத்தில் காட்டியபடி உள்ளங்கையில் வைத்துக்கொள்ளவும். உள்ளங்கையில் இருக்கும் ஸ்பூனை கொஞ்ச நேரம் அப்படியே உற்றுப் பார்த்துக்கொண்டே, "" இந்த ஸ்பூனை என் கண் பார்வையால் வளைத்துக்காட்டுகிறேன்'' என்று சொல்லி உள்ளங்கையை படம்2, படம் 3 ல் காட்டியபடி திருப்புங்கள். இப்போது ஸ்பூன் வளைந்த தோற்றத்தில் இருப்பதைப் பார்த்து பார்வையாளர்கள் வியந்து போவார்கள்.
மேஜிக் சீக்ரட்:
தந்திரமாக ஏமாற்றும் வித்தை தான் இந்த மேஜிக்! ஸ்பூனை உள்ளங்கையில் வைக்கும் போது கட்டை விரல் முனை,ஆள்காட்டி விரல் முனையில் நிக்கல் வில்லை அல்லது 25 காசை படத்தில் இருப்பது போல வைத்துக்கொள்ளவும். இது பார்வையாளர்களுக்கு ஸ்பூனின் காம்பு முனை போல தோன்றும்.
பிறகு, ஸ்பூனின் காம்பை கொஞ்சம் கொஞ்சமாக சுண்டு விரல் இடத்திலிருந்து சாய்வாக நகர்த்திக்கொண்டே கட்டை விரல் பக்கம் கொண்டு வந்து கை மணிக்கட்டை சாய்வு கோணத்தில் திருப்பினால், ஸ்பூன் தலைப்பகுதி வளைந்து இருப்பது போல தோன்றும். இதில் ஸ்பூனை உள்ளங்கøயில் சாய்வாக நகர்த்துவதுதான் மேஜிக் சீக்ரட்!

60 . மேக்னெட்டிக் கை


தேவையான பொருட்கள்: பிளேயிங் கார்டு 10, கத்தரிக்கோல், பசை
செய்முறை: படம் 1 ல் காட்டப்பட்டது போல கார்டுகளை டேபிளில் பரப்பி வைத்து கொள்ளவும். அந்த கார்டுகளின் மீது உள்ளங்கையை அழுத்தவும். பின்னர், பார்வையாளர்களிடம், "" இப்போ, இதில் ஒரு கார்டு மூலம் இன்னொரு கார்டை என் கை மேக்னெட்டிக் சக்தியில் எடுத்துக்காட்டு கிறேன்'' என்றுö சால்லி ஒரு கார்டை படம் 5 காட்டி உள்ளது போல எடுத்துக்காட்டினால் ஒரு கார்டு இன்னொரு கார்டை இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கும். அந்த கார்டை கொஞ்ச நேரம் கையில் வைத்து கொண்டுவிட்டு, அந்த கார்டை "இப்பூ' ஊதுங்கள் கார்டு கீழே விழுந்து விடும். இதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்!
இந்த மேஜிக் செய்வதற்கு முன் படத்தில் காட்டியுள்ள வாறு ஒரு கார்டில் மத்தியில் ஒரு சதுர செ.மீ அளவுக்கு வெட்டிக் கொள்ளவும். இன்னொரு கார்டை எடுத்து அதன் மத்தியில் குறுக்கு வசத்தில் ஒரு செ.மீட்டருக்கு கொஞ்சம் அதிகமாக ஒரு கோடு கிழித்தது போல் வெட்டிக்கொள்ளவும். பிறகு படத்தில் காட்டியவாறு அந்த கோட்டு இடைவெளியில் இன்னொரு கார்டின் வெட்டிய கதவு போன்ற பகுதியை நுழைத்து பசையால் ஒட்டிக்கொள்ளவும். இந்த ஏற்பட்டினை செய்துக்கொண்டப்பின், மேஜிக் செய்யும் போது கார்டின் கதவுப் பகுதியை நடுவிரல் மற்றும் மோதிர விரலுக்கு மத்தியில் இறுக பிடித்துக்கொண்டு மெல்ல மேலே துõக்கினால் அதன் கீழ் ஒரு கார்டு ஒட்டிக் கொண்டிருப்பது போல தோன்றும். பின்னர், கார்டை ஊதும் போது நடுவிரல் மற்றும் மோதிரவிரல் பிடித்துள்ள கதவு பகுதியை உள்ளங்கை பக்கம் திரும்பிக்கொண்டு, புறங்கை பக்க வழியாக விட்டு விட்டால் கார்டு கீழே விழுந்து விடும். அந்த கார்டில் மத்தியில் கிழிக்கப்பட்டக் கோடு சட்டென்று பார்வையாளர்களுக்குத் தெரியாது. இது தான் மேஜிக் சீக்ரெட்!

61 . மேஜிக் மேஜிக்
மேஜிக் பந்து!


தேவையான பொருட்கள்: மூடிதிறக்கும் பிளாஸ்டிக் பந்து அல்லது ஐ கிரீம் பால், ஸ்டீல் குண்டு, தேன், அட்டை.
செய்முறை:
ஒரு அட்டை அல்லது பலகையை படத்தில் காட்டியுள்ளது போல் சாய்வுதளமாக பொருத்திக் கொள்ளவும். பின்னர், பிளாஸ்டிக் பாலை எடுத்து அந்த சாய்வு பலகையில் மேல் தளத்தில் வைக்கவும். பிறகு, பார்வையாளர்களைப் பார்த்து, "" சாய்வுகாக உள்ள இந்தப் பலகையில் உருண்டை வடிவ எந்தப் பொருளை வைத்தாலும் அது தானாகவே ஒரு சில நொடிகளில் மேலிருந்து கீழ் நோக்கி வந்துவிடும். அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது, இந்தப் பாலை பலகையின் மேல் தளத்தில் வைத்திருக்கிறேன். இப்போது பாலிலிருந்து கையை எடுத்து விடுகிறேன்'' என்று சொல்லி கையை எடுத்து விடவும். பலகையின் மேல் தளத்தில் இருந்து பால் சர்ரென்று கீழ் நோக்கி வராமல் மெல்ல மெல்ல அசைந்து அசைந்து மெதுவாக கீழ் நோக்கிவரும். இந்த செயல்பாட்டை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்:
மேஜிக் செய்வதற்கு முன்பாக, பிளாஸ்டிக் பாலில் படத்தில் காட்டியுள்ளது போல் அதைதிறந்து அதில் ஸ்டீல் குண்டை உள்ளே விடவும். பிறகு, தேன் எடுத்து பால் நிரம்பும் வரை ஊற்றி மூடிவிடவும். ஸ்டீல் குண்டு, தேன் நிரப்பப்பட்ட பாலை மேஜிக் பயன்படுத்தவும்.
பொதுவாக உள்வெற்றிடமாக உள்ள பால் சாய்வுபலகையில் மேலே வைத்தால் வைத்தவுடனேயே சர்ர்ர்... என்று கீழே வந்துவிடும். ஆனால், மேஜிக் பாலில் தேனும் இரும்பு குண்டும் இருப்பதால், பலகையில் பால் கீழ்நோக்கி உருளும் போது பாலின் முன்புறத்தில் இரும்பு குண்டு வரும். அதே சமயம் பின்புறம் உள்ள பாலின் உள் வெற்றிடத்தை தேன் நிரம்பிக்கொள்ளும். இதனால் பாலின் நிலைப்பு நிலை சமமாக இருக்கும். இதனால்தான் பால் மெல்ல மெல்ல உருண்டு கீழ் நோக்கி வரும்.
மேஜிக்! மேஜிக்!

62 . தண்ணீரில் வட்டமடிக்கும் சோப்பு டப்பா!

தேவையானப் பொருட்கள்: சோப்பு பாக்ஸ், சூடம்,ஒரு அகல பாத்திரம்.
செய்முறை:
தண்ணீரில் நிரம்பியஒரு அகல பாத்திரத்தில் படத்தில் காட்டியுள்ளவாறு சோப்பு டப்பாவை மிதக்க விடவும். தண்ணீரில் சோப்பு மிதக்கும். ஆனால், ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும்.
பின்னர், பார்வையாளர்களைப் பார்த்து, " இப்போ இந்த சோப் டப்பா இந்தப் பாத்திரத்தில் தானாகவே ரவுண்டு அடிக்க வைக்கிறேன் பாருங்கள்!' என்று சொல்லி ஒரு தீக் குச்சியை கொளுத்தி சோப்பு டப்பாவில் போட்டு விட்டு,உங்கள் கையை சோப்பு டப்பா மேலே சில விநாடிகள் வைத்து பின்னர் எடுத்து விடுங்கள். சில நிமிடங்களில் அந்த சோப்பு டப்பா தண்ணீரில் வட்டமடிக்கும்! இதைப் பார்த்து, பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரெட்! :
மேஜிக் செய்வதற்கு முன்பு, நீங்கள் சோப்பு டப்பாவில் சூடத்தை திணித்துக்கொள்ளவும்.தண்ணீரில் சோப்பு டப்பாவை போட்டதும் சூடம் தண்ணீரில் கரைந்து கொண்டிருக்கும். தண்ணீரும் சோப்பு டப்பாவில் ஊடுருவிக்கொண்டிருக்கும்.அந்த தண்ணீரில் நீங்கள் கொளுத்திப் போட்ட தீக்குச்சி விழுந்ததும், சூடத்தில் பற்றி, சூடு ஆக, ஆக தண்ணீர் ஆவியாகி அது வெளியேறும் போது அந்த சோப்பு டப்பா தண்ணீரில் வட்டமடிக்கும்!
63. தண்ணீரில் எரியும் விளக்கு!

தேவையான பொருட்கள்: புது பேட்டரி2, சூடம், நுõல், அகல் விளக்கு
செய்முறை: பார்வையாளர்கள் முன்பாக ஒரு அகல் விளக்கில் தண்ணீரை ஊற்றவும். பின்னர், அதில் ஒரு திரி நுõல் போடவும். அடுத்து, தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சி எடுத்து பற்ற வைத்து, "" இப்போது இந்த அகல் விளக்கில் இருக்கும் தண்ணீரில் தீபம் எரியும் பாருங்கள்'' என்று சொல்லி, விளக்கில் இருக்கும் திரி நுõலில் பற்றவைக்கவும். பற்ற வைத்து சில நிமிடங்கள் தண்ணீரில் தீபம் எரியும். அதைப் பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
மேஜிக் சீக்ரெட்:
இந்த மேஜிக் செய்யும் முன்பு தண்ணீரில் இரண்டு புது பேட்டரிகளை போட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அடுத்து, சூடத்தை பவுடராக்கி அதில் திரி நுõலை புரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். மேஜிக் செய்யும் போது பேட்டரி ஊற வைத்த தண்ணீரை அகலில் விட வேண்டும். இந்த தண்ணீர் சாதாரண தண்ணீர் போலதான் இருக்கும். எந்த வேறு வாசனையும் இருக்காது. அதனால் பார்வையாளர்களுக்கு எந்த சந்தேகமும் வராது. திரிநுõலில் சூடப்பவுடர் ஒட்டிக் கொண்டிருப்பதால் பற்ற வைத்தவுடன் திரி நுõல் எரிய ஆரம்பிக்கும். பேட்டரியின் எரிசக்தி தண்ணீரில் கலந்து இருப்பதால் திரி சிறிது நேரம் எரியும். இதை டெக்னிக் பின்புலத்தில் தண்ணீரில் எரியும் தீபம் என்று"கப்சா' விட்டு சாமாளிப்பது உங்கள் சாமர்த்தியம்!

64 . வானவில் குளிர்பானம்!

தேவையான பொருட்கள்.

5 கண்ணாடி கோப்பை, ஜீனி, ஸ்பூன், குளிர்ந்த நீர், உணவு கலர் பவுடர்

செய்முறை: 5 கண்ணாடி கோப்பைகளை டேபிளில் வரிசையாக வைக்கவும். அந்தக் கோப்பைகளில் குளிர்ந்த நீரை ஒவ்வொன்றிலும் கால் பங்கு ஊற்றவும்.
பிறகு, 1ம் கோப்பையில் ஒரு ஸ்பூன் ஜீனியும், 2ம் கோப்பையில் 2 ஸ்பூன் ஜீனியும், 3ம் கோப்பையில் 3 ஸ்பூன் ஜீனியும், 4ம் கோப்பையில் 4 ஸ்பூன் ஜீனியும் போட்டு, ஸ்பூனால் ஒவ்வொரு கோப்பை தண்ணீரையும் நன்கு கலக்கவும்.
பின்னர், ஒவ்வொரு கோப்பையிலும் ஒவ்வொரு கலர் பவுடரை சேர்க்கவும். பிறகு, நன்கு கலக்கவும். இந்த ஏற்பாட்டை செய்தப்பின் பார்வையாளர்களிடம்,
"" இப்போது இந்த நான்கு கலரும் சேர்ந்து வானவில் வண்ணத்தில் குளிர் பானமாக மாறும் பாருங்கள்'' என்று கூறிவிட்டு, 5ம் கோப்பையில் முதல் கோப்பையிலிருந்து ஒரு கலர் தண்ணீரை ஒரு ஸ்பூன் எடுத்துவிடவும்.
அடுத்து, 2ம் கோப்பையிலிருந்து ஒரு ஸ்பூன் கலர் தண்ணீரும், 3ம் கோப்பையில் இருந்து ஒரு ஸ்பூன் தண்ணீரும், 4ம் கோப்பையிலிருந்து ஒரு ஸ்பூன் கலர் தண்ணீரும் எடுத்து வரிசைப்படி ஐந்தாவது கோப்பையில் விடவும்.
இப்போது 5வது கோப்பையில் அடுக்கடுக்காக வண்ணத்தில் தண்ணீர் இருக்கும். இது வானவில் வண்ணத்தில் இருக்கும். இந்தக் கோப்பையில் இருந்து தண்ணீரை பருகும் போது ஒவ்வொரு கலராக படிப்படியாக குறைவதை பார்வையாளர்கள் ரசிப்பார்கள்!
மேஜிக் சீக்ரட்!
நான்கு கோப்பை தண்ணீரிலும் சம அளவு ஜீனியை கலந்திருந்தால் ஐந்தாவது கோப்பையில் விடும் போது எல்லாக் கலரும் ஒன்றாக கலந்துவிடும். ஆனால், ஒவ்வொரு கோப்பையிலும் கூடுதலாக ஜீனி கலந்திருப்பதால் தண்ணீரின் அடர்த்தி, பாகு நிலை அதிகரித்திருக்கும். இதனால் ஒரு கலர் தண்ணீர் அடுக்கிலிருந்து இன்னொரு கலர் தண்ணீர் அடுக்கிற்கு சவ்வூடு பரவல் எளிதில் நடக்காது.இதன்காரணமாக ஒன்றோடு ஒன்று கலக்காமல் தனித்தனியாக இருக்கும். இது தான் மேஜிக் சீக்ரட்!

65 . தண்ணீரில் கலக்காத கோகோகோலா

தேவையான பொருட்கள்:

தண்ணீர்த்ö தாட்டி, கண்ணாடி டம்ளர், கோகோகோலா டின்

செய்முறை:
ஒரு தண்ணீர்த் தொட்டியை எடுத்து கொள்ளவும். அதில் ஒரு கோகோலா மற்றும் ஒரு கண்ணாடி டம்ளரை வைக்கவும். பின்னர் அதில் தண்ணீர் நிரப்பவும். பார்வையாளர்களைப் பார்த்து, ""பொதுவாக தண்ணீரில் எந்த நீர்மப் பொருளை ஊற்றினாலும் தண்ணீரோடு அந்த நீர்மம் பொருள் ஒன்றாக கலந்து விடும். ஆனால், இப்போது தண்ணீருக்குள் தண்ணீர் நிரம்பி இருக்கும் கண்ணாடி டம்ளரில் கோகோகோலாவை ஊற்றுகிறேன். அது தண்ணீரோடு கலக்காமல் இருக்கும் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, தொட்டியில் கையை விட்டு கோகோகோலா டின்னை திறந்து அதை அப்படியே நீருக்குள் நீர் நிரம்பி இருக்கும் கண்ணாடி டம்ளரில் ஊற்றுங்கள். கோகோகோலா டம்ளரில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி, அந்த டம்ளரில் கோகோகோலா நிரம்பி இருக்கும்! ஆ! இது எப்படி சாத்தியம் என்று பார்வையாளர்கள் வியந்து போவார்கள்! பிறகு, டம்ளரை தண்ணீருக்கும் கவிழ்த்தால் கண்ணாடி டம்ளரில் இருக்கும் கோகோகோலா தண்ணீரோடு கலந்து விடும்.
மேஜிக் சீக்ரட்:
தண்ணீருக்குள் மிக கவனமாக செய்ய வேண்டிய மேஜிக் இது! தண்ணீருக்குள் தண்ணீரை கலக்கிவிடமாமல் பொறுமையாக கையை விட்டு, கோகோகோலா டின்னை மிக மிக மெதுவாக திறக்கவும். பின்னர் இன்னொரு கையை தண்ணீருக்குள் நுழைத்து தண்ணீர் நிரம்பியிருக்கும் கண்ணாடி டம்ளரை அலுங்காமல் குலுங்காமல் எடுத்து 45டிகிரி சாய்த்துக்கொண்டு, மெதுவாக அதில் கோகோகோலாவை ஒரே சீராக ஊற்றவேண்டும்.இது தான் முதல் மேஜிக் சீக்ரட். இரண்டாவது சீக்ரட் தண்ணீரைவிட கோகோகோல அடர்த்தி அதிகம் உள்ளது. அதனால் டம்ளரில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி கோகோகோலா டம்ளரில் நிரம்பிவிடும். இந்த மேஜிக் ஒரு சில நிமிடங்களுக்கு மேல் தொடரக்கூடாது. அது உங்கள் சாமர்த்தியம்!

மேஜிக்

66 . மேஜிக் தீக்குச்சி!

தேவையான பொருட்கள்: தீப்பெட்டி, மெழுகு வர்த்தி, ஸ்கெட்ச் பென், கட்டர்.
செய்முறை: ஏற்கெனவே எரிந்து ஒரு தீக்குச்சியை எடுத்து, அதை பார்வையாளர்களிடம் காட்டி, "" இது ஏற்கெனவே பற்றவைக்கப்பட்ட தீக்குச்சி. இந்தக்குச்சியை தீப்பெட்டியில் மீண்டும் உராய்ந்தால் எரியும் பாருங்கள்!'' என்று கூறி, அந்தக் குச்சியை மெழுகில் தோய்த்து எடுத்து, பின்னர், அந்தக் குச்சியை தீப்பெட்டியில் உரசுங்கள் சட்டென்று அது எரியும். இதெப்படி சாத்தியம்? எரிந்த குச்சி மீண்டும் எரிகிறதே! என்று ஆச்சரியப்படுவார்கள்!
மேஜிக் சீக்ரட்!
இது பார்வையாளர்களை ஏமாற்றும் தந்திரவகை மேஜிக்! இந்த மேஜிக்கை சாமார்த்தியமாக செய்யவேண்டும்.
மேஜிக் செய்வதற்கு முன்பாக, தீக்குச்சிகளை எடுத்து, படத்தில் காட்டியபடி தீக்குச்சியின் கந்தக தொப்பிக்கு கீழே ஒரு சென்டி மீட்டர் நீளம் சுற்றிலும் கட்டரால் சீவிக் கொள்ள வேண்டும். அதாவது எரிந்த தீக்குச்சி முனை எப்படி மெல்லியதாகவும், அடிபாகம் தடிமனாக இருப்பது போல சீவிக்கொள்ள வேண்டும். பின்னர் கந்தகத் தொப்பியில் இருந்து சீவிய நீளம் வரை கறுப்பு ஸ்கெட் பென்னால் கறுப்பு வண்ணம் தீட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தப்பின் தீக்குச்சியைப் பார்த்தால் எரிந்த தீக்குச்சி போலவே தோற்றமளிக்கும். இந்தக்குச்சியை தீப்பெட்டியில் உரசும்போது தீக்குச்சியில் இருக்கும் கந்தகம் எரியும். பார்வையாளர்களை குழப்புவதற்குத் தான் மெழுகு தோய்த்துக்கொள்ளவேண்டும்.