திங்கள், 3 ஜூன், 2013

ஆன்மிகத்தின் பெருமை!/92/ 9.6.13/

ஆன்மிகத்தின் பெருமை!/92/ 9.6.13/ மெய்ஞானம் என்பது அகத்தாய்வு செய்தல். விஞ்ஞானம் என்பது புறத்தாய்வு செய்தல். வெளியில் என்ன இருக்கிறது என்பதை அறிய, சூரியன், சந்திரன், நட்சத்திரம், சூரிய குடும்பம், பால் வெளிகளுக்கு விண்கலம் அனுப்பி அல்லது தொலை நோக்கி கருவியால் பார்த்து ஆராய்ச்சி செய்வது விஞ்ஞானம். மனதை ஒருநிலைப்படுத்தி, தவம், தியானம் செய்வது என்பது அகத்தாய்வு. நாம் கண்களை மூடி ஆராய்ச்சி செய்கிறோம். அதாவது நமது பார்வையை உள் செலுத்தி ஆய்வு செய்கிறோம். உடல் எனும் மெய்யை அல்லது மெய்யின் மூலம் ஆய்வு செய்து பிரபஞ்ச ரகசியத்தை, ஞானத்தை பெறுவதால் அகத்தாய்வு செய்பவர்களை மெய்ஞானி என்கிறோம். விண்ணில் பார்வையை செலுத்தி விண்ணை பற்றிய ஞானம் பெறுதலால் அறிவியலாளர்களை விஞ்ஞானி என்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன உள்ளதோ, அது மனிதனின் உடலிலும் உள்ளது. இந்த உலகம் எப்படி பஞ்ச பூதங்களான நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றால் ஆனதோ, அதேபோல் நமது உடலும் இதனால் தான் ஆனது. அதுமட்டுமல்ல; உலகில் உள்ள அனைத்து பொருளுக்கும் நமக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும். அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது . சின்ன உதாரணம்: அணுவுக்குள் என்ன இருக்கிறதுஎன்று அறிய, அணுவை அதை விட நுட்பமான ஆல்பா கதிர்களால் துளைத்துப்பார்த்தார்கள் விஞ்ஞானிகள். அணுவுக்குள் உள்ளே பெரும்பாலும் வெட்ட வெளியாக இருப்பதையும் மையத்தில் கரு போல சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றியபடி சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைக் கண்டனர். அணுவைப் பிளந்த விஞ்ஞானம் உள்ளே இருக்கும் துகள்களை சக்தியின் வெளிப்பாடான பல வடிவங்களாகக் கண்டது. அவை சதா சஞ்சரித்துக்கொண்டிருப்பதையும், ஒன்றுடன் ஒன்று உறவாடுவதையும், தத்தம் சக்திகளைப் பரிமாறிக்கொள்வதையும் விஞ்ஞானிகள் கண்டனர். விஞ்ஞானத்தின் புறத்தாய்வை அறிந்தோம். இதோ மெய்ஞானத்தின் அகத்தாய்வையும் தெரிந்துகொள்ளலாம். சாண்டோக்கிய உபநிடதத்தில் பிரபஞ்சத்தின் மூலத்தை விளக்க ஒரு குட்டிக்கதை. ஒரு குரு தன் சிஷ்யனிடம் ஒரு ஆலமரத்தின் பழத்தைக் கொண்டு வரச்சொன்னார். ‘இந்தாருங்கள் குருவே!’ ‘அதை உடை’ ‘உடைத்தேன்குருவே’ ‘உள்ளே என்ன இருக்கிறது?’ ‘மிக நுணுக்கமான சில துகள்ப்பொடிகள்’ ‘அதையும் உடை’ ‘உடைத்தேன் குருவே’ ‘அதனுள் என்னப்பார்க்கிறாய்?’ ‘ஒன்றும் இல்லையே குருவே’ ‘உன் கண்ணுக்குப் புலப்படாத அந்த சூட்சும சூனியத்தில் தான் அந்தப் பெரிய ஆலமரத்தின் மூலம் இருக்கிறது. அந்த மூலத்தை ஒளித்து வைத்து, ஒளிந்திருப்பவன்தான் இறைவன்’ என்றார் குரு. அணுவை உடைத்து விஞ்ஞானிகள் கண்டதும் இதையேதான் அல்லவா? - தேவராஜன். ***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக