புதன், 30 அக்டோபர், 2013

திருக்கோயில்களில் திருமுறைகள் பாடும் முதல் பெண் ஓதுவார்!


திருக்கோயில்களில் திருமுறைகள் பாடும் முதல் பெண் ஓதுவார்! (தினமலர்- பெண்கள் மலரில் வெளியான கட்டுரை) தமிழகத்தின் திருக்கோயில்களில் பன்னிரு திருமுறைகளைப் பாடுகிறவர்களை ‘ஓதுவார்’ என்பர். பன்னிருதிருமுறைகளைக் கோயில்களில் பெரும்பாலும் ஆண்களே பாடுவர். ஆச்சரியமாக! சென்னையில் செவ்வேள் கோட்டத்தில் தேவார- திருவாசகப்பாடல்கள் மிக இனிமையான பெண்குரலில் ஒலிக்கிறது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் எம். அருள்மொழி. இவர் , தொண்டு மனப்பான்மையோடு தொடர்ந்து பத்தாண்டுகளாக ஓதுவார் பணியை செய்துவருகிறார்! இவரைப்பற்றி... சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். பார்த்தசாரதிப் பெருமாள் மீது நல்ல பக்திக் கொண்டு, சனிக்கிழமைதோறும் சுப்ரபாத சேவையும், மார்கழி மாதத்தில் திருப்பாவை சேவையும் செய்துவந்தவர். “ ஆண்கள் மட்டும் ஓதுவார் பணியில் ஈடுபடுவார்கள். நீங்கள் எப்படி?” என்று கேட்டதற்கு,“ அதற்கு காரணமாக இருந்தது திருவல்லிக்கேணியில் இருக்கும் இந்து உயர்நிலைப்பள்ளிதான்! அங்குதான் நான் படித்தேன். கோடை காலத்தில், பள்ளியில் பக்தி சொற்பொழிவுகள் நடக்கும். கிருபானந்தவாரியார், கீரன், நீடாமங்கலம் சாஸ்திரிகள், வேளுக்குடி கிருஷ்ணன், முக்கூர் நரசிம்ம சாஸ்திரிகள் போன்றோர் பள்ளிக்கு வந்து சொற்பொழிவு செய்வார்கள். அதை எல்லாம் நான் விரும்பி கேட்பேன். சிறுவயதிலேயே பெருமாள் மீது பக்தி கொண்டிருந்ததால், சுப்ரபாதம் வரிகளை கொஞ்சம் கொஞ்சமாக மனப்பாடம் செய்தேன். அதைப் பாடிவந்தேன். ஆண்டுகள் ஓடியது. திருமணம் ஆனது. புகுந்தவீடு சூளை. வீட்டுக்கு அருகில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில். தினமும் காலையில் சுப்ரபாதம் சேவை செய்து வருகிறேன். இது பத்து ஆண்டுகளாக தொடர்கிறது” என்றார். “ சுப்ரபாதம் பாடி வந்த நீங்கள் எப்படி திருமுறைகள் பாடும் ஓதுவார் ஆனது எப்படி?” என்று கேட்டோம். கொஞ்சம் யோசித்தவர். “ அது தற்செயலாக நடந்த சம்பவம். ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயிலில் நான் சுப்ரபாதம் பாடியதைக் கேட்ட ஒரு பெரியவர். பக்கத்தில் இருக்கும் முருகன் கோயிலில் திருப்புகழ் பாடும்படி கேட்டார். எனக்கு வைணவமும் வைணவ கடவுள் பற்றித்தான் தெரியும். சைவம் பற்றி எதுவும் தெரியாது. இதை அவரிடம் விளக்கினேன். அவர் பிடிவாதமாக இருந்தார். பிறகு, முறைபடி பன்னிரு திருமுறைகள் படித்து பயிற்சி பெற்றேன். அதன் பிறகு சைவக்கோயில்களில் ஓதுவார் பணியை திறமையாக செய்து, பலர் பாராட்டுகளையும், பட்டங்களையும் பெற்றேன்!” என்றார். “கடவுள் மீது இவ்வளவு பக்தி கொண்டு, ஓதுவார் பணியும் செய்து வருகிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்டு தெய்வீக அனுபவம் ஏதாவது ஏற்பட்டது உண்டா” என்று ஆர்வமாய் கேட்டதற்கு. “ உண்டு. குறிப்பிட்டு சொல்ல இரண்டு சம்பவத்தைச் சொல்கிறேன். ‘ திருவாடுதுறை ஆதினம் நடத்திய சைவ சிந்தாந்தம் சமயப்பயிற்சி பெற்றபோது, ஒரு தேர்வில இறைத்தன்மையும் இறைஅனுபவமும்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதை திருத்தி மதிப்பிட்ட, வைத்தியநாதன் ஆசிரியர் 99 அரை மார்க்க போட நினைத்தாராம். அப்போது, அவர் முதுகில் தட்டி, ‘வைத்தியநாதா நுõறு மார்க் போடு!’ என்று உத்தரவிட்டதாம் ஒரு குரல். திரும்பி பார்த்தால் யாருமில்லை. அவரும் நுõறுமார்க் போட்டார். அவர் முதுகை தட்டி சொன்னது முருகன் என்பது பிறகு புரிந்து கொண்டார். இது ஒரு அனுபவம். 2011ல் என் தலைமையில் கயிலைப் பயணம் புறப்பட்டோம். என் குழுவில் இருந்தவர்கள் எல்லாம் ஓதுவார் கூட செல்வதால் நிச்சயம் நமக்கு கயிலையில் இறைக்காட்சி கிடைக்கும் என்று என்னை முழுமையாக நம்பி வந்தனர். எனக்கு அச்சம் ஏற்பட்டது. ஓடிப்போய் முருகன் சந்நிதியில், ‘முருகா, இது என்ன சோதனை! கயிலையில் எனக்கு இறைக்காட்சி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், என்னுடன் வருபவர்களுக்கு ஏமாற்றாமல் இறைக்காட்சி கொடுத்து விடு!’ என்று அழுது, புலம்பி பிரார்த்தனை செய்தேன். கயிலை பயணத்தில் என்ன ஆச்சரியம்! எனக்கும் என் குழுவினருக்கும் மலையில் ஈசன் 18 விதமாக காட்சி கொடுத்தார்!” என்று சிலிர்த்துக்கொண்டார் அருள்மொழி. “வாசகர்களுக்கு வாழ்வில் அறிவுரை இருந்தால் சொல்லுங்கள்!” என்றதற்கு, “ தாராளமாய்” என்ற புன்னகைத்தவர். “ பெண்கள் பொறுமையாக இருக்கணும். தினமும் காலை மாலை நல்விளக்கேற்றணும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இறைவனை நினைக்கணும். நம் இந்திய கலாசாரத்தையும் பண்பாட்டையும் நிலைநிறுத்தணும். குடும்பத்தில் எப்போதும் இனிமையாக பேசணும். நம் செயல் எல்லாம் நம் வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது தரக்கூடியதாக இருக்கணும்!” என்றார் முத்தாய்ப்பாய் அருள்மொழி. - தேவராஜன். படங்கள்: செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக