செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இப்படிதான் வாழணும்

***************************************** இப்படிதான் வாழணும்!/75/10.01.2013/ எப்படியும் வாழ்வது வாழ்க்கை அல்ல. இப்படிதான் வாழவேண்டும் என்பதற்கு வரையறைகள் உண்டு. அதனால் தான் மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்பதற்கு சாஸ்திரங்கள் பல வழிமுறைகளை கூறுகின்றன. சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறை படுத்தும் போது மனிதனுடைய வாழ்வு சிறக்கும். இறை உணர்வும் மிகும். குடும்பமே ஒரு கோயிலாகும். தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கண் விழித்து எழுந்து விடவேண்டும். பிறகு மங்களகரமான பொருட்களைப் பார்க்கவேண்டும். மனிதன் உறங்குவது இறப்பு என்றும், உறங்கி விழிப்பது பிறப்பு என்கிறார் வள்ளுவர். உறங்கியவன் காலையில் எழுந்துவிடுவான் என்பதற்கு எவ்வித நிச்சயமும் இல்லை. ஆதலால், எழுந்ததற்கு நன்றி கூறும் விதமாக குளிக்கும் போது இறைவன் நாமங்களை சொல்லிக் கொண்டே குளிக்கவேண்டும். இறைவன் நாமத்தை சொல்வதால் உள்ளம் சுத்தமாகும். பெண்கள் அவசியம் மஞ்சள் தேய்த்து குளிக்கவேண்டும். குளித்து முடித்தவுடன் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து நின்று கொண்டு உலகத்தில் அனைத்தும், அனைத்து உயிர்களும் நல்ல படியாக இருக்கட்டும் எனக் கூறி இரண்டு கைகளில் நீர் எடுத்து அர்க்கியம் கொடுக்கவேண்டும். குளித்து முடித்து சுத்தமான ஆடை உடுத்தி, நெற்றியில் அவரவர் பழக்கப்படி திருநீறு, குங்குமம், நாமம், சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்ளலாம். உணவு உண்ணும் போது இறைவன் நாமங்களை நினைத்துக் கொண்டு இறைவன் கொடுத்த பிரசாதமாக நினைத்து உண்ணவேண்டும். தானங்களில் சிறந்தது அன்னதானம். உணவை சிறிது கூட வீணாக்க கூடாது. உணவை இறைவனை நினைத்துக் கொண்டு உட்கொண்டால் உடலும், உள்ளமும் ஆத்மசக்தி பெறும். செய்யும் தொழிலில் நேர்மையும், முழுமையும் வேண்டும். செய்யும் தொழில் தெய்வ ஆராதனை, வழிபாட்டுக்கு சமம் என சாஸ்திரம் கூறுகிறது. மனிதன் துõங்கி எழுந்தது முதல் இறை உணர்வுடன் செயல்படவேண்டும்.< இறைவன் திருநாமம் மனதில் நிறைந்திருந்தால் தீய எண்ணங்கள் வராது. மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்யவேண்டும். விளக்கு ஏற்றுவதால் மகாலட்சுமியின் அருள் இல்லம் முழுவதும் நிறையும். மாலை இறைவனது திருப்பாடல்களை தனியாகவோ, கூட்டாகவோ பாடினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். இரவில் துõங்கச் செல்லும் போது அன்றைய பொழுதினை நல்ல படியாக கழிக்க உதவிய இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.< தினமும் இறைவனை தியானிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கவேண்டும். வயிற்றுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதைவிட மனதிற்கு தியானம் அவசியம். இறைவன் பற்றிய நினைப்பு ஒன்றே மனித மனத்திற்கு நிம்மதி அளிக்கும்.அதற்கு நம்மை தயார்படுத்தவே சாஸ்திரங்கள் உதவுகின்றன. -தேவராஜன் ************************************ இறைசக்தி!/76/17.2.2013/ இந்த உலகத்திற்கு ஒரு ஒழுக்கு முறை இருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும்,பொருளையும் இயக்குகின்ற ஒரு சக்தி இருக்கிறது. அது எல்லா உயிர்கள் மீதும் ஆட்சி நடத்துகிறது அதுதான் இறைசக்தி. இது வார்த்தையால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு அதிசய சக்தி. இந்த அதிசய சக்தி உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் நிறைந்து நிற்கிறது. கண்ணால் காண முடியாது. ஆனால் உணரும்படி இருக்கிறது. நமது புலங்களால் அறியக்கூடிய பொருள்கள் போல் எந்த வகையிலும் நிருபிக்கப்பட முடியாதபடி முற்றிலும் புலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இந்த தெய்விக சக்தி உயிரினங்களின் நன்மைக்காக உலகமெங்கும் பரவி நிற்கிறது. மனிதனுக்கு அச்சம் இருக்கிறது. சிறிது கண் மூடியதும் ஏதாவது கடித்து விடுமோ, திருடர் வந்து தாக்குவாரோ என்ற அச்சத்தில் அவன் தலை மாட்டில் ஒரு தடியை வைத்துகொள்கிறான். தடி பக்கத்தில் இருப்பது நல்லது.திருடன் வந்தால் அடித்து விரட்டு உதவும் என நினைக்கிறான். திருடன் அந்த தடியை எடுத்து அவன் தலையில் போட்டால் என்னவாகும்? யாருடைய தைரியத்தில் துõங்குகிறாய் ! இச்சமயத்தில் இறைவன் கையில் இருக்கிறாய். நீ விழித்து எழுந்தால் அல்லவா உன்னை பாதுகாத்து கொள்ள முடியும்? உறக்கத்தில் உன்னை பாதுகாப்பவர் யார் ? நாம் ஏதோ ஒரு சக்தியை நம்பி துõங்குகிறோம். எந்த சக்தியின் நம்பிக்கையில் சிங்கம்,பசு முதலிய பிராணிகள் உறங்குகின்றனவோ அதை நம்பியே நாமும் உறங்குகின்றோம். தாயின் மடியில் குழந்தை கவலை இல்லாமல் துõங்குகிறது. நீங்களும் நானும் எங்கும் பரவி உள்ள அந்த இறை சக்தி தாயின் மடியில் உறங்குகிறோம் என்ற நம்பிக்கை பெற வேண்டும். எந்த சக்தியின் அடிபடையில் நம் வாழ்க்கை முழுமையும் நடந்து கொண்டு இருகிறதோ, அதை நாம் மேன்மேலும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த சக்தியில் நமக்கு எவ்வளவு அதிக நம்பிக்கை தோன்றுமோ,அந்தளவுக்கு அதிக பாதுகாப்பும் நமக்கு ஏற்படும். நமக்கு அந்த சக்தியின் அனுபவம் எந்த அளவுக்கு நமக்குஅதிகமாகுமோ அந்த அளவுக்கு நாம் ஆனந்தம் பெறலாம். இந்த இறைசக்தி என்பது ஒரு பொருள் அல்ல. அப்படி இருந்தால் அதை இன்றைய விஞ்ஞானம் விட்டு வைத்து இருக்காது. அது ஒரு பொருளில் மட்டும் இயங்குவது இல்லை. இந்த உலகத்தில் அனைத்திலும் அது முழுமையாக செயல்படுகிறது. அதனால் தான் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை. இதை விஞ்ஞானத்தால் ஒருக்காலும் பிரிந்து கொள்ளவும் முடியாது.உணரத்தான் முடியும். - தேவராஜன். ************************** நடப்பது நடக்கட்டும்/77/24.02.2013/ ‘நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது. என்ன பண்றது?’ இப்படி சிலர் அலுத்துக்கொண்டு சொல்வதுண்டு. நாம் செய்கிற செயல்கள் எதிர்வினையாவது இறைவன் கட்டளைப்படி அல்ல. அது நாம் செய்த முற்பிறவி கர்ம பலன்கள். முற்பிறவியின் கர்ம பலனுக்கு ஏற்ப அனைவருக்கும் பிறவி ஏற்படுகிறது. ஆதலால் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அனைவரும் செய்தாக வேண்டும். பலன் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணர் சொன்ன நுட்பமான கருத்தும் அதுதான். அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்து வரவேண்டும். செய்யும் கடமையில் நிறைய பிரச்னைகள் , தடங்கல்கள், தோல்விகள் வரலாம். அதை எல்லாம் கண்டு பயந்து ஓடிவிடக்கூடாது. அப்பாடா! பட்டது போதும்... நான் சாமியாராக போகிறேன் என்று ஏதோ காட்டுக்கோ, மலைக்கோ சென்று தியானம் செய்வதால் யாரும் பிறவியில் இருந்து தப்பிக்க முடியாது. கடமையை செய்யாமல் ஓடினால் பாவம் மேலும் சேரும். யார் ஒருவருக்கு செய்வதற்கு கர்மங்கள் இல்லையோ அவரால் யாரும் பாதிக்கபட வில்லையோ, அவரை நம்பி யாரும் இல்லையோ, அப்படி பட்ட ஒருவர் பக்குவபட்ட மனத்துடன் இறை வழியில் துறவியாகலாம். நாம் எதிர்ப்பார்த்தபடியே எல்லாம் நடப்பதில்லை. அது நம் கர்மவினைபடிதான் நடக்கும். ஒரு குட்டிக்கதை: ஒரு பாம்பாட்டி கையில் ஒருபெரிய பாம்பு ஒன்று சிக்கியது. அதன் வீரியம்,அதன் துடிப்பு அவனுக்கு கட்டுக்கு அடங்கவில்லை. ஆகவே அதன் வீரியத்தை குறைப்பதற்காக ஒரு பெட்டியில் வைத்து பட்டினி போட்டான். சில நாட்களுக்குள் தன் வசப்படும் என நினைத்தான். அதன்பின் அதைவைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்திருந்தான். சில நாட்கள் சென்றன. பாம்பு உணவு இன்றி மிகவும் மெலிந்து,வலிமை குறைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இனிபிழைக்கமாட்டோம் என அது வருந்தியது. அச்சமயத்தில் ஒரு எலி பசியுடன் அந்தப்பெட்டியை பார்த்தது. நமக்கு உணவு இதில் இருக்கும் என எண்ணி, பெட்டியை துளையிட்டு உள் புகுந்தது. உள்ளே பாம்பு இருக்க கண்டு பயம் கொண்டு அஞ்சி நின்றது. பாம்பு அந்த எலியை சாப்பிட்டது. எலி வந்த துளையின் வழியாக வெளியே தப்பி விட்டது. ஆக பாம்பாட்டி ஒரு விதமாக நினைத்தது நடக்கவில்லை. உயிர் பிழைக்க மாட்டோம் என நினைத்த பாம்பு எலியை தின்றுவிட்டு பிழைத்து விட்டது. பாம்பு பெட்டிக்குள் உணவு கிட்டும் என எண்ணிய எலி மாய்ந்தது. இந்தக் கதையில் எல்லாஉயிர்களும் தனக்கு உண்டான கருமத்தை செய்தது. இது விதியின் செயலால் வேறுவிதமாக நடந்து விட்டது. ஆதலால் நடப்பது நாராயணன் செயல். முடிந்தது ஈசன் செயல் என்று மனப்பக்குவம் பெற்றால் எந்த வினைக்கும் அஞ்சவேண்டாம். - தேவராஜன். ************************ மன நிறைவு வேண்டும்!/78/3.3.2013/ ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதுதான் தவறு. உன் விதிபடி கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் பணத்தைத்தேடு. அதே சமயம், போதும் என்ற மனமே பொன் செய்யும் என்பதையும் நினைவில் கொள். இது ஆறுதலுக்காக சொல்லப்பட்டவை அல்ல. அதிலும் ஆழமான ஆன்மிக தத்துவம் பொதிந்திருக்கிறது. கோடி கோடியாய் சம்பாதிக்க முடிந்தால் நல்லது. சந்தோஷப்படு. அதே சமயம் அது உன்னால் இயலாவிட்டால் அதற்காக வருதப்படாதே என்பதற்க்காகவே இருவேறு கருத்துக்களை நம் சமயம் எடுத்துரைக்கிறது. உனக்கு என்ன கிடைக்கிறதோ, எவ்வளவு கிடைக்கிறதோ அதை திருப்தியோடு, மன நிறைவோடு ஏற்றுக் கொள். மன நிறைவு மிகவும் முக்கியமானது. பக்தி வழியில் இருப்பவர்கள், இறைவனை முழுமையாக நம்புகிறவர்கள் மனநிறைவோடு, உற்சாகத்தோடு காரியம் செய்பவராக இருக்க வேண்டும். இதற்கான வழிகள் வேதத்திலும், உபநிஷத்திலும், கீதையிலும் சொல்லப்பட்டுள்ளன. பல நுõற்றாண்டுகளாக தோன்றி கொண்டிருக்கும் யோகிகளும், ஞானிகளும் மத ஆச்சார்யர்களும் தங்களுடைய தவ வலிமையினாலும், அறிவின் வன்மையினாலும் கடவுளின் தன்மையையும் உலகின் இயல்பையும் நன்றாக அறிந்து, புரிந்து நமக்கு சுலபமாக புரிந்து கொள்ளும் வகைளும் கஷ்டமில்லாமல் இலகுவாக செய்யக்கூடியம் வழிகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கிறார்களே! எதை பின்பற்றுவது? இறைவன் ஒருவன்தான் என்றால் ஏன் இத்தனை போதனைகள், வழிமுறைகள் என்ற சந்தேகங்கள் எழலாம். ஆனால், அவர்கள் சொல்லியதன் நுட்பத்தைப் புரிந்துகொண்டால் குழப்பம் எழாது. பல வழி முறைகளை ஏற்படுத்தியவர்கள் இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அவரவர்களுக்கு எது உகந்ததாகப் படுகிறதோ அந்த முறையைப் பின்பற்றலாம். இதுதான் நம் இந்து மதத்தின் ஒரு தனிச் சிறப்பு. இந்து மதம் தனிப்பட்ட ஒருவருக்கு எந்த முறை எளிதாகவும் உபயோகமாக படுகிறதோ அதாவது ஒத்து வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. இதைப் பின்பற்றித்தான் உருவ வழிபாட்டிலும் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப வணங்குகிறார்கள். ஆன்மிகத்தில் ஈடுபட யோகம் ஒரு வழி, பக்தி மற்றொரு வழி. மனிதர்கள் இதை பின்பற்றியே எவ்வளவு பிறவி எடுக்க வேண்டுமோ அவைகளை எடுத்து கடவுளைச் சேரலாம். பக்தி செலுத்தி கடவுளின் அருளைப் பெறலாம். விரைவாக யோக முறையில் கடவுளின் அருளை அடையலாம். யோக முறை சிறிது கடினமானது. எல்லாராலும் பின்பற்ற முடியாது. யோகமோ, பக்தியோ எதை பின்பற்றினாலும் வாழ்க்கையில் மனநிறைவு, எதைச் செய்தாலும் மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு இரு. வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் திருப்தியோடு மன நிறைவோடு இருந்தால் அர்த்தத்தோடு வாழ்ந்து செல்லலாம்! - தேவராஜன் ********************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக