சனி, 22 மே, 2010

21 . நாலு பேர் காட்டிய வழி! தேவராஜன்

21 . நாலு பேர் காட்டிய வழி! தேவராஜன்
வாழ்க்கையில உருப்படணும், முன்னுக்கு வரவேண்டும் என்றால் நாலு பேர் காட்டிய வழியை கடைப்பிடிக்கணும் என்று ஒரு பேச்சுக்கு பெரியோர்கள் சொல்வார்கள். அந்த பேச்சு வழக்கு வாக்கியம் ரொம்ப அர்த்தம் பொதிந்தவை. அது ஆன்மிகம் சார்பானது. நான் யார்? ஏன் பிறந்தேன்? என்ன செய்ய வேண்டும் என்பதை உணர துõண்டுதலாக இருப்பது நாலு பேர் காட்டிய வழி! சரி. அந்த நாலு பேர் யார்? அந்த நாலு பேர் சொன்ன நாலு வழி எது? என்பது பற்றி இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
நாம் சிவனைப் பற்றுவதற்கு அவனே நான்கு நெறிகளை அமைத்து கொடுத்துள்ளான். அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாம். அந்த நெறிப் பற்றிச் சென்றால் பாலில் நெய்போல உறைந்திருக்கும் சிவனை அடையலாம்.
சரியை
இறைவனான சிவன் லிங்க உருவத்தில் வீற்றிருந்து அருள் வழங்கும் திருக்கோயிலை நாளும் துõய்மை செய்பவர்கள் (உழவாரப்பணி) , நந்தவனம் சென்று மலர் கொய்து வந்து மாலை தொடுத்து, இறைவனுக்குச் சூட்டி மகிழ்பவர்கள் சரியை நெறிச் செல்லும் வீர சைவர்கள் ஆவர். அவர்கள் உடலால் இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள். இந்த சரியை நெறியை கடைப் பிடித்து சிவனின் திருப்பாதம் அடைந்தவர் அப்பர் (நாவுக்கரசர்)பெருமான்.
இவர் "என் கடன் பணி செய்து கிடப்பதே' என்று கூறி சிவாலயங்களில் உழவாரப்பணி செய்து தம்மை இறைவனுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்.இது முதல் வழி! இந்த வழியில் சென்று இறையனுபவம் பெற்றவர் அப்பர்.
கிரியை
சிவன் அபிஷேகப்பிரியர். அபிஷேகம் செய்து வைத்தால் சிவனுக்கு கொள்ளை இன்பம்.
ஆதலால் இறைவனின் திருமேனி தீண்டி, அபிஷேகம், தீபாராதனை, அர்ச்சனை செய்து வித்துத் திருமுறைப்பாடல்களை மனம் உருக பாடி, சிவனின் திருச்செவிகளைக் குளிரச் செய்து உடலாலும், உள்ளத்தாலும் தொண்டு செய்பவர்கள் கிரியை நெறிச் செல்பவர்கள் ஆவர். அவர்கள் உடலில் திறுநீறு பூசி, கழுத்தில் ருத்ராட்சம் சூடி, உள்ளத்தில் ஐந்தெழுத்து மந்திரமான "சிவாய நம' எப்போதும் ஓதிக்கொண்டே இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் கிரியை நெறிச் செல்லும் சைவர் ஆவர். இந்த கிரியை நெறியைக் கடைப்பிடித்து சிவன் உறையும் சிவப்புரத்திற்கு சென்றவர் திருஞானசம்பந்தர். அக வழிபாட்டினாலேயே சிவனருளைப்பெற்றவர் பூசலார். அவர் சிவனை நினைந்து, நினைந்து நினைவாலே கோயில் வடித்தவர். நெஞ்சில் ஓர் ஆலயம் கட்டி அதில் சிவனை உறைய செய்தவர். இது இரண்டாவது வழி. இந்த வழி சென்றவர் திருஞானசம்பந்தர்.
யோகம்
அண்டமே பிண்டம். பிண்டமே அண்டம் என்பர் யோகியர். அகத்துõய்மை, புறந்துõய்மையாகி இயமம், நியமம் முதலாய எட்டு உறுப்புகளைக் கொண்ட அட்டாங்க யோகத்தை, முற்பிறவியின் நற்பயனாய் வாய்த்த குருவின் அருந்துணையால் குற்றமற பயின்று, பின்னர் குற்றமற செய்து பிரணவத்தை தட்டி, குண்டலியை எழுப்பி முடிவில் இறை இன்பத்தில் ஒன்றி சமாதி நிலை கைவரப்பெற் றவர்கள் துõய யோக நெறிச் செல்பவர்கள் ஆவர். இது மூன்றாவது வழி. இந்த வழி சென்றவர் சுந்தரர்.
ஞானம்
ஞானம் என்பது தானே இறைவனாக மாறிவிடும் நிலை. தான் வேறு, இறைவன் வேறு என்று பிரித்து பார்க்க முடியாதபடி இரண்டற கலந்துவிடும் நிலையாகும்.
சிவனைத் தவிர வேறு எண்ணம் இல்லாது, காடு, மலை என்று திரிந்தாலும் கணமும் ஐந்தெழுத்து "நமசிவாய' மந்திரத்தை மறக்காத, உலக இன்பங்களை உதறித் தள்ளிய சிவஞானிகளே சித்தர் பெருமக்கள் ஆவர். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று சொல்வது கூட இதனால் தான். சிவனையும், சித்தனையும் வேறுபடுத்த முடியாது. சித்தனுள் பித்தனும், பித்தனுள் சித்தனும் இரண்டறக்கலந்த நிலையே ஞான நிலையாகும்.
இது நான்காவது வழியான ஞானம். இந்த வழி சென்றவர் மாணிக்க வாசகர்.
இந்த சரியைஅப்பர்; கிரியைதிருஞான சம்பந்தர்; யோகம்சுந்தரர்; ஞானம் மாணிக்க வாசகர்ஆகிய நான்கு பேர் சென்ற நான்கு வழிகளில் ஏதோ ஒரு வழியை நாம் கடைப்பிடித்து ஒழுகினால் இறைவனை அடைவது உறுதி. அதனால் தான் முன்னோர்கள் மேலோட்டமாக நான்கு பேர் காட்டிய வழி என்று சொல்லி வைத்தார்கள்!
இந்த நான்கு வழியும் ஒத்துவராது எனக்கு என்று நினைப்பவர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு உபாயம் சொல்கிறேன். அதுவும் மிக எளிமையானது தான். காலையில் துõக்கத்தில் இருந்து விழித்தவுடனேயே மனதுக்குள் ஈஸ்வரனை நினைத்துக்கொண்டு குறைந்த பட்சம் 18 முறையாவது "ஓம் நமச்சிவாய' என்று மந்திரத்தை ஜெபியுங்கள். அடுத்து, இரவு துõங்கும் முன்பாக கடைசி நினைப்பாக ஈஸ்வரனை நினைத்துக்கொண்டு "ஓம் நமச்சிவாய' என்று 18 முறையாவது ஜெபித்து விட்டு துõங்குங்கள்! உங்களைப் படைத்தற்காக இறைவன் மகிழ்வான்!
தேவராஜன்

22 . இறைவனே மருத்துவர் பிரசாதமே மருந்து தேவராஜன்
னிதர்களுக்கு மூன்று வகையான நோய்கள் வரும். அவற்றிற்கு மூன்று வகையான மருத்துவ முறை உண்டு. மூன்று வகையான மருத்துவர்கள் உண்டு.
உடலுக்கு வருகின்ற நோய்கள் முதல் வகை. அவை காயம்,வலி, ஜூரம் போன்றவை. அடுத்து உயிருக்கு வரும் பாவ நோய்கள் இரண்டாம் வகை. மூன்றாவது மரணம் என்கிற நோய்.
இந்த நோய்களை எல்லாம் குணப்படுத்த மூன்று வகை மருத்துவர்கள் இருக்கிறார்கள். அறிவையும் அறிவியலையும் நம்பி செய்யப்படும் ஆங்கில மருத்துவர். இரண்டாவது மூலிகை கொண்டும் கடவுளின் பிரார்த்தனையுடன் செய்யப்படும் சித்தர் மருத்துவ முறை. மூன்றாவது முறை மாந்திரீக முறை. இவை மந்திர உச்சாடனம் மூலம் குணப்படுத்தும் முறை. இதை செய்பவர்கள் மாந்திரீகர்கள்.
இந்த மூவரும் குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்த மருந்து உண்டா? மருத்துவர் உண்டா? உண்டு என்றால் யார் அது? அதைப்பற்றி இவ்வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போமா?
"என்னால் ஆனதை செய்துவிட்டேன். இனி, கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்' என்று ஒரு எல்லைக்குமேல், தன் சக்திக்கு அப்பாற்படும்போது, ஒருபடித்த மருத்துவன் தன் இயலாமையை வெளிப்படுத்துவதுண்டு. காரணம்? உடலுக்கு உண்டாகிற நோயைத்தீர்க்க நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்வது மருத்துவம். அப்படி செய்யப்படுகின்ற மருந்துக்கு நோயைத்தீர்க்கும் சக்தி உண்டு. அந்த மருந்து சரியான முறையில் செய்யப்பட்டிருந்தால், அது சரியாக செயல்பட்டால், நோய்தீரும். கொடுத்த மருந்து சரியாக செய்யப்பட்டுள்ளதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், அந்த மருந்து சரியாக செயல்படுமா? நோயை குணப்படுத்துமா? என்பது மருந்தைச் செய்தவன் கையிலும் இல்லை. அந்த மருந்தை உண்டவனின் கையிலும் இல்லை. அதற்காக மருத்துவர்களை குறைசொல்ல முடியாது.
சாதாரணநோய்களை குணப்படுத்தக்கூடியவர்கள் தான் இவ்வகை மருத்துவர்கள். ஆனால், கடவுளால் ஒருமனிதனின் ஆத்மாவுக்கு கொடுக்கப்பட்ட பாவ நோய்களைக் குணப்படுத்த மருந்து கண்டுப்பிடிக்கவில்லை. காரணம் நாம் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு தண்டனையாக இந்த பாவ நோய்கள் வருகின்றன. ஆதலால் மருந்தை கண்டுப்பிடிக்கமுடியவில்லை.
அப்படி என்றால் பாவ நோய்களை குணப்படுத்தவே முடியாதா? முடியும். அதைக் குணப்படுத்தும் மருத்துவர் இறைவன். "மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்' என்பது தேவாரம். குணப்படுத்தும் மருந்து பிரசாதம்!
"ஓம் ஸ்ரீ பவ ரோக வைத்யாய நம' எனும் மந்திரம் தான் அதற்கு சாட்சி.
இன்றும் எத்தனையோ வசதிவந்தும், விஞ்ஞான நுட்பங்கள் இருந்தும் மருத்துவர்களால் இனி தேறாது என, கைவிடப்பட்ட வியாதியஸ்தர்கள் இறுதியில் இறைவனே கதி என சரணடைந்து, அவனின் பிரசாதத்தையே உண்டு வந்து குணமடைந்தவர்களை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அறிவியல் அதை "ஆச்சரியம்' என்று ஆச்சரியப்படுகிறது. கேன்சர், டி.பி., நீரிழிவு, குஷ்டம் போன்றவைகளுக்கு டாக்டர்களையும் மிஞ்சிய வைத்தியன் இறைவன் தான்! அவன் தான் மருத்துவர்களுக்கு எல்லாம் மருத்துவன்.அவனின் பிரசாதங்களான பூஜைக்குரிய வில்வம், துளசி, வேம்பு, அருகம் புல், பன்னீர் இலை, பூ, எருக்கம்பூ, திருநீறு போன்றவை. இவை மருந்துகளுக்கு எல்லாம் சிறந்த ஆதி மருந்தாகும்.
திருநீற்றை பூசுவதால் பல நோய்கள் தீருகின்றன. நாவுக்கரசருக்கு சூலை நோயும், நின்ற சீர்நெடுமாறன் பாண்டியனுக்கு வெப்புநோயும் குணமாகி இருப்பது புராணச் செய்தி. பக்தர் ஒருவர் எருக்க இலையில் தயிரன்னத்தை வைத்து சாப்பிட்டவருக்கு குட்ட நோய் குணமானது என்பது சூரியனார் கோயில் தலவரலாறு சொல்லும் உண்மை.
திருச்செந்துõர் பன்னீர் இலைத்திருநீறு
திருச்செந்துõர் பன்னீர் இலைத் திருநீறை பூசினாலும், புசித்தாலும் பல நோய்கள் தீருகின்றன. பன்னீர் இலை அர்ச்சனைக்குரியது. திருச்செந்துõரில் பன்னீர்மரங்களாக இருப்பவர்கள் தேவர்கள். பன்னீர் இலைகளாக இருப்பவை வேதங்கள். எனவே தான் பன்னீர் இலைக்கு தெய்வீகத்தன்மையும்,மருத்துவ சக்தியும் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பன்னீர் இலையிலும் 12 நரம்புகள் ஆறுமுகனின் 12 திருக்கரங்களாக இருக்கின்றன. ஆக பன்னீர் இலையில் வைத்து திருநீற்றை ஏற்பது சாட்சாத் ஆறுமுகனே தன் திருக்கரங்களால் அனைவருக்கும் அருள்வதாகும். விசுவாமித்தரரின் காசநோயை பன்னீர்இலைத்திருநீறால் முருகன் குணப்படுத்தியுள்ளதாக தகவல் உண்டு.
வைத்தீஸ்வரன் கோயில் சாத்துருண்டை
சாத்துருண்டை என்பது சந்தனம், மண், திருநீறு ஆகிய கலவை. சாத்துருண்டை சில நியம விதிகளுக்கு உட்பட்டுசெய்யப்படுகின்றன. சுக்லபட்ச நன்னாளில் அங்க சந்தானதீர்த்தத்தில் இருந்து மண்எடுத்து, ஒரு புதுபாத்திரத்தில் வைத்து, சடாயுகுண்டத்தில் உள்ள இயற்கையான திருநீற்றைச் சித்தாமிர்த தீர்த்த நீருடன் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே கலந்து, முத்துக்குமாரசுவாமியின் முன் குழி அம்மியில் இட்டு அரைத்து, அதை சிறுசிறு உருண்டையாக உருட்டி, தையல்நாயகி அம்மன் முன் வைத்து அர்ச்சனை செய்து சித்தாமிர்த தீர்த்தத்துடன் உண்டால் நோய்கள் குணமாவதாக நம்பிக்கை உண்டு.
மந்திரமாவது நீறு
மந்திரமாவது நீறு என்று திருநீறுபதிகத்தில் ஞான சம்பந்தர் சுவாமிகள் பாடியுள்ளார்கள். அப்படிப்பட்ட திருநீறு உருவாக்கும் போதும், சம்புடத்தில் மாற்றியபின்பும் மந்திரங்கள் உச்சாடனம் செய்து வைக்கின்றனர். இதனால் திருநீறு மந்திரத்திறனையும், இறை சக்தியையும் பெற்றுவிடுகிறது. இன்றும் கிராமப்புறங்களில் பயம், ஜூரம், விஷக்கடிகளுக்கு கடவுளைப்பிரார்த்தனை செய்து விட்டு திருநீறு பூசும் பழக்கம் இருந்துவருகிறது. அதுமட்டுமல்ல திருநீறு தடவி, பேய்,பிசாசு, கழுப்பு,செய்வினை நோய்களை விரட்டுகின்றனர்.
எனவே தான் இறைவனையே மருத்துவர் என்கிறேன். பிரசாதத்தையே மருந்து என்கிறேன். ஆகவே, பாவநோய்கள் தீர, குணப்படுத்த முடியாத நோய்கள் அகல, மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட அபாயநோய்கள் விலக இறைவனே மருத்துவர்: பிரசாதமே மருந்து என உள்ளன்போடு ஏற்றுக்கொண்டு, பக்தியுடன், நம்பிக்கையுடன் இறைவனையும் அவன் பிரசாதத்தையும் ஏற்றுக்கொண்டு வாருங்கள். பலன் உண்டு என்பதில் ஐயமில்லை!
தேவராஜன்

23. கடவுளுக்கு ஒரு கடிதம் தேவராஜன்
சுவாமி, நமஸ்காரம். நீங்கள் படைத்த கோடானுகோடி உயிர்களில் ஒன்றுதான் நான்.தங்களின் அனுக்கிரகத்தால் நான் நலம். மற்ற ஜீவராசிகள் எல்லாம் நலம் என்று திட்டவட்டமாக என்னால் கூறமுடியாது. தாங்கள் படைத்த கோடானு கோடி உயிர்கள் சுகமில்லாமல் இருக்கின்றன. எல்லோரும் நலமாக இருக்க அருள்புரிக சுவாமி, அடியேன் உங்களைப்பார்த்ததில்லை.அதனால் என்ன நீங்கள் தான் என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே! அதுபோதுமே, உங்களுக்கு நான் கடிதம் எழுத.
இறைவா! தினம் தினம் புழு, பூச்சியிலிருந்து பறவைகள், விலங்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் துன்பப்படுவதைப்பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். அடிக்கும் தணலில் புழு, பூச்சிகள் துவண்டு போவதைப்பார்த்ததும் என் கண்களில் சட்டென்று நீர்க்கோர்க்கிறது. இங்கே வீடுகளில், அசைவ ஓட்டல்களில், கோயில்களில் பறவைகளும், விலங்குகளும் கொல்லப்படும் போது அவைகளின் மரணஓலம் கேட்டு என் காதில் ரத்தம் கசிகிறது.
சாலைகளில் மாடுகளும்,குதிரைகளும்,கழுதைகளும் பொதிசுமந்து செல்லும்போது அதுகள் விடும் பெருமூச்சு என் மனதை பதைக்க வைக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கையில் என்ன கொடுமை! என்ன கொடுமை! என்று கூக்குரலிட தோன்றுகிறது. இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்று கண்மூடி யோசிக்கையில் ஒருவேளை நானும் ஏதோ ஒருபிறவியில் இப்படி கஷ்டப்பட்டிருப்பேனோ? தெரிந்தோ, தெரியாமலோ நான் செய்கின்ற பாவங்களால் மறுபிறவியில் இதுகள் போல நான் துயரப்படுவேனோ? தெரியவில்லை. நினைக்கவே அச்சமாக இருக்கிறது. மனதை ஏதோ பிசைகிறது.
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப், பேயாய்க் கணங்களாய்
வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள்
எல்லாப்பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம் பெருமான்'
என்று மாணிக்க வாசகரே சொல்லி சொல்லி புலம்பி இருக்கிறாரே, நான் எம்மாத்திரம்? என் கண்முன்னே உண்ணஉணவு, உடுக்க உடை, இருக்க இடமில்லாமல் எத்தனை பஞ்சபரதேசிகள் கையேந்தி திரிகிறார்கள்... கால் இல்லாதவன்,கையில்லாதவன், கண்ணில்லாதவன், பெருநோய் கண்டவன், நாதியற்ற எத்தனை அனாதைகள் என ஒருபுறம். மறுபுறம் கொலைக் காரன்,தீவிரவாதி, ஏமாற்றிபிழைக்கும் எத்தன்கள்... எப்பப்பா... என்ன கொடுமையடா சாமி! ஏன் இவர்கள் இப்படி ஒரு ஈனப்பிறப்பெடுத்து அல்லல்படுகிறார்கள்? மனசுக்குள் ஆயிரம் கேள்விமுள் தைக்கின்றன. அதே சமயம் அப்பா டா... நாம் இப்படி ஒரு பிறவி எடுக்கவில்லையே! நாம் சகலவிதத்திலும் நன்றாக இருக்கிறோம்; படித்திருக்கிறோம்; நல்லக்குடும்பத்தில் பிறந்திருக்கிறோம்; <உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் தாராளமாய் இருக்கிறது என்று மனம் ஆறுதல் அடைகிறது. இருந்தாலும் நான் வாழும் உலகத்தில் தினம் எங்கோ கொலை நடக்கிறது. நொடிக்குநொடி எவனோ ஒருவன் ஏமாற்றுகிறான். ஒருவன் வஞ்சிக்கப்படுகிறான். ஜாதி,சமய சண்டையில் கொத்து கொத்தாய் மனிதன் செத்துமடிகிறான். மண் ஆசையில் போர் என்ற பெயரில் ஆயிரம் ஆயிரம் உயிர்களை கொன்று குவிக்கிறான். நாட்டில் ஆங்காங்கே நாத்திகர்களும், வன்முறையாளர்களும், அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்கள் பணத்தை கோடி கோடியாய் சுருட்டுகிறார்கள்.
இறைவா! ஏன் இவர்களின் அட்டூழியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்? ஒருவேளை இவர்கள் எல்லாம் அடுத்தப்பிறவியில் ஈனப்பிறவி எடுத்து சொல்லொண்ணா துயர்படப்போகிறார்களோ? இப்படி நாலாப்பக்கமும் பார்த்து,பார்த்து நாம் அப்படி இல்லை. நல்லவனாக இருக்கிறோம். நல்லதே நினைக்கிறோம். நல்லதே செய்கிறோம். உன்னை நினைக்கிறேன். நாளும் பக்தி செய்கிறேன். உனதருளால் காமம்,குரோதம், கோபம், துர்க்குணங்கள் எல்லாம் விட்டொழிக்க விரும்புகிறேன்.
உலகத்தில் சகல உயிர்களும் சுகப்பட, பாவம் தவிர்த்து, புண்ணியம் சேர்க்க நீங்கள் சொன்ன வேதங்களும் அவைகளால் தோன்றிய புராணங்களும் ஒட்டு மொத்தமாக சொல்வது பக்தி செய்யுங்கள்! சத்தியம் தவறாதீர்கள்! தர்மவாழ்க்கை வாழுங்கள்! உத்தமர்களாக இருங்கள்! என்றுசொல்கின்றன. அதை எல்லாம் ஞானிகளும்,சித்தர்களும், சமயகுருமார்களும்,சான்றோர்களும் நாளும் எடுத்துச்சொல்லிக்கொண்டுதானே இருக்கிறார்கள். ஏன் இந்த பாவிமனுஷர்கள் காது கொடுத்து கேட்பதில்லை? உன்னை மறந்து எதையோ தேடி திரிகிறார்களே. இவர்கள் பாவம் கழுவ, அடுத்தப்பிறவி ஈனப்பிறவியாக இல்லாமல் இருக்க என்ன உபாயமிருக்கிறது?
"நாளும் என்னை நினை! எந்நேரமும் பக்தி செய்! என் நாமத்தை எப்போதும் ஓது! ஒழுக்கமாய் இரு! உண்மை பேசு! பிறரை நேசி! சகல ஜீவராசிகளிடம் கருணை கொள்! உனக்குப் பிறவா பேரின்பம் தருகிறேன்!' என்று தானே சொல்வாய். எனக்குத் தெரியும் இறைவா, வேறென்ன சொல்வாய் நீ? அது சரி, இதை இந்த மானிட ஜென்மங்கள் கேட்பார்களா? நீ சொன்னப்படியே நடப்பார்களா? இதுமட்டும் தெரிந்தால் எனக்கு உடனே பதில் கடிதம் எழுதிவிடு. தாமதம் வேண்டாம்.
இப்படிக்கு,
உன்படைப்பில் ஓர் உயிர்.

24. பொருத்தமான இறை தம்பிகள் தேவராஜன்
சபாஷ் சரியான ஜோடி பொருத்தம் என்று நாம் பார்த்து அசந்துபோன தம்பதிகளை சொல்வதுண்டு. பொருத்தம் என்பது கல்வி,ஒத்த குணம், அழகு உள்ளிட்டவை பொருத்தமாக கணவன்,மனைவி கொண்டிருப்பது. ஒரு டாக்டர் ஒரு டாக்டரையோ, ஒரு ஆசிரியர் ஒரு ஆசிரியரையோ மணந்துகொள்வது என்பது ஒத்த தொழில், கருத்து கொண்டிருப்பதன் காரணமாகவே இப்படி ஜோடி பொருத்தம் அமைகிறது. சாதாரண மனிதர்கள் நாமே நட்சத்திரம், ராசி, ரஜ்ஜி என பத்து பொருத்தம் மற்றும் படிப்பு, குணம், குடும்பம் பாரம்பரியம், அந்தஸ்து, குலம், கோத்திரம் என ஆயிரத்தெட்டு பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம். நம்மை படைத்து, காத்து,அழிக்கும் கடவுள்களின் மனைவிமார்கள் எப்படி பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக சிந்திப்போம்!
ஒரு சின்ன குண்டூசியிலிருந்து வானில் சீறிபாயும் ராக்கெட் வரை எதை தயாரிப்பதாக இருந்தாலும் அதற்கு முதலில் அறிவுவேண்டும். எதையும் படைக்கவோ, தயாரிக்கவோ அறிவுதான் அடிப்படை மூலதனமாக இருக்கிறது. அதனால் தான் படைக்கும் கடவுளான பிரம்மா, அறிவுக்கடவுளான சரஸ்வதியை மனைவியாக கொண்டுள்ளார். உலகத்தில் சகல ஜீவராசிகளையும் படைக்கும் பொறுப்பு பிரம்மாவுக்கு உரியது என்பதால் படைப்பதற்கு அறிவுதானே வேண்டும்? அதனால் தான் அறிவே வடிவான சரஸ்வதியை தன் துணைøயாக கொண்டிருக்கிறார். அப்படி என்றால் பிரம்மாவுக்கு அறிவுகிடையாதா என்று கேட்டு விடாதீர்கள். பிரம்மாவுக்கு அந்த ஞானம் எல்லாம் பூர்ணமாக உண்டு. பிறகு ஏன் என்றால் இனம் இனத்தைச் தானே சேரும். அதனால் தான் அறிவு, அறிவுடன் ஒன்றிருக்கிறது போலும்!
நம் கலாசாரபடி வெண்மை நிறத்திற்கு பல அர்த்தக்குறியீடுகள் உண்டு. வெண்மை என்றால் துõய்மை, உண்மை, சமாதானம் மற்றும் அமங்கலத்தையும் குறிக்கும். நம் பாட்டிகள் கணவரை இழந்ததும் வெண்மை ஆடையைதான் அணிந்திருக்கிறார்கள். அந்த நிறம் அவர்களுக்கு அமங்கலத்தை சூட்டியது.
கல்வி தேவதையான சரஸ்வதி தேவியும் முத்துபோல பளபளக்கும் வெண்பட்டு புடவை அணிந்து, கையில் வெண்தாமரையுடன் ஞானப்புன்னகையுடன் இருக்கிறார். சரஸ்வதி தேவி அணிந்திருக்கும் வெண்ணிற ஆடை அமங்கலத்தை சுட்டுவதற்காக அல்ல. அவளிடம் இருக்கும் அறிவு கிஞ்சித்தேனும் கசடு,குற்றம் இல்லாது மிக துõய்மையாக இருக்கிறது என்பதை குறிக்கவே. அடுத்ததாக, அவள் கையில் துõய்மையான மிகத்தெளிவான அடுத்ததுகாட்டும் கண்ணாடி போல ஸ்படிக மாலையை கையில் வைத்திருக்கிறார். ஸ்படிகம் போல அவள் குளிர்ச்சியாக,அறிவில் களங்கமில்லாமல் சுத்தமாக இருக்கிறார் என்பதை காட்டவே. அடுத்ததாக கையில் வீணை எனும் இசைக் கருவியை வைத்திருக்கிறார். அது ஏன் என்றால் வீணையில் இருக்கும் தந்திகள் சரியான அளவில் இழுத்துக்கட்டப்பட்டிருக்கவேண்டும். அதிகமாக இறுகியிருந்தாலும், மிக தளர்வாக இருந்தாலும் அந்த தந்திகளால் வீணைக்கு பலன் கொடுக்காது.அதுபோல அறிவும் ஒரு எல்லைக்குட்பட்டே இருந்தால் தான் அதைப்பெற்றவருக்கு நன்மை. அப்படிப்பட்ட சரஸ்வதியைத்தான் பிரம்மா நாக்கில் வைத்துள்ளார்.பிரம்மாவின் தொழில் படைப்பு என்பதால் படைப்புக்குத் தேவையான அறிவை சரஸ்வதியாக துணைவியாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதும் அர்த்தமுள்ளதாக தானே இருக்கிறது!
அடுத்ததாக அழித்தல் தொழிலை செய்பவர் சிவன். எப்படி படைப்பதற்கு அறிவு அவசியமாக படுகிறதோ, அதுபோல அழிப்பதற்கு சக்தி வேண்டும். சக்தி என்றால் பலம்.
ஒரு சிற்பம் செய்ய அறிவு வேண்டும். அதை துõக்கிப் போட்டு உடைக்க பலம் அதாவது சக்தி வேண்டும். யோசிப்பவன் எதையும் அழிப்பதில்லை. அழிப்பவன் எதையும் யோசிப்பதே இல்லை என்று சொல்வதுண்டு. ஒன்றை அழிப்பதற்கு சூலாயுதம், ஈட்டி, வாள் போன்ற பல ஆயுதங்கள் தேவை. அதனால் தான் அழிக்கும் கடவுளான சிவனும் இத்தகைய ஆயுதங்களைக் கொண்ட சக்தியை துணையாக கொண்டிருக்கிறார்.அழிக்கும் தத்துவத்தை உணர்த்த சுடலையாக மயானத்தில் சாம்பல் பூசி, மண்டையோடுடன் காட்சி தருகிறார். சக்தியானவளும் சூலம், வேல், அம்பு போன்ற ஆயுதங்களை ஏந்திய காளியாகவும் உள்ளாள். சக்தியானது சக்திமானைப்பிரிந்து இயங்காது என்பதால் சக்திமானின் சரீரத்தில் பாதியாகவே சக்தி அர்த்தநாரியாக உள்ளாள். அழிவை உணர்த்தும் சிவப்பு வண்ணத்தை ஆடையாக அணிந்துள்ளாள். ஆக, அழிக்கும் தொழிலைக்கொண்டிருக்கும் சிவனுக்கு அழிப்பதற்கு தேவைப்படும் சக்தியை துணைவியாக கொண்டிருப்பது நியாயம் தானே!
ஆக்கல், அழித்தல் இவற்றிற்கு இடையே காத்தல் என்ற ஒரு தொழிலும் உண்டு. காத்தல் தொழிலை செய்பவர் மகாவிஷ்ணு. காப்பவர் என்றால் வாழவைப்பவர் என்று பொருள்படும். ஒருவர் வாழ்வதற்கு இருக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு, பொன்,பொருள், ஐஸ்வர்யம், வீரம், வெற்றி போன்றவைகள் எல்லாம் தேவைப்படுகிறது. இதை காப்பவர் தானே வழங்க வேண்டும். அதனால் தான் இவைகள் எல்லாம் இருக்கும் தனலட்சுமி,தான்யலட்சுமி,விஜயலட்சுமி,வித்யாலட்சுமி,சந்தான லட்சுமி, பாக்யலட்சுமி,கஜலட்சுமி,தைரியலட்சுமி ஆகியவர்கள் மொத்த உருவான மகாலட்சுமியை திருமால் தன் மார்பில் சுமந்திருக்கிறார். காப்பவர் முதலில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அல்லவா? அதனால்தான் விஷ்ணு அலங்காரப்பிரியராக இருக்கிறார். அதை உணர்த்தும் வகையில் தான் வைஜயந்தி, பீதாம்பரம் அணிந்து கொண்டு செல்வ செழிப்பாக இருக்கிறார்.
ஆக, காக்கும் கடவுளான திருமாலுக்கு எட்டு செல்வங்களைத் தரும் லட்சுமிகளை தன் துணையாக கொண்டிருப்பது சரிதான் அல்லவா?
இந்த உலகம் முறையாக இயங்க படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய தொழில்கள் சரிவர நடக்க வேண்டும்.அந்தந்த தொழில்களை சிறப்பாக செய்ய மூன்று தெய்வங்கள். அந்த தெய்வங்களான பிரம்மாசரஸ்வதி; சிவன்சக்தி; திருமால் மகாலட்சுமி.இந்த இறை தம்பதிகள் பொருத்தம் அர்த்தமுள்ளதாக அமைந்திருப்பதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
தேவராஜன்

25. வாழ்வின் பொருளென்ன நாம் வந்த கதையென்ன? தேவராஜன்
நாம் யார்? ஏன் இவ்வுலகத்திற்கு வந்தோம்? நம்மால் என்ன பயன் நடக்கப்போகிறது? நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? இவற்றை எப்படி அறிவது? அதற்கான முயற்சி எது?
இந்த கேள்விகளுக்கான விடை தேடல் தான் வாழ்க்கை. அதைவிட்டு பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலை தேடினோம், நல்ல அழகான ஜோடியை மணம்முடித்தோம், பிள்ளைக்குட்டிகள் பெற்றோம், அவர்களை வளர்த்து, படிக்க வைத்து, நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணி வைத்தோம், இடைப்பட்ட காலத்தில் வீடுகட்டினோம், கார் வாங்கினோம், சொகுசாக வாழ்ந்தோம் என்பது எல்லாம் வாழ்ந்ததின் அர்த்தமோ, வாழ்வின் அர்த்தமோ அல்ல. அப்படி என்றால் உண்மையான வாழ்வின் பொருளென்ன என்பதை இந்த வார ஆன்மிக சிந்தனையாக பார்ப்போம்!
முன்வினைப்பயனாக செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப பிறப்பு உண்டாகிறது. பிறந்த பிறப்பு, விதித்தப்படி பாவமோ, புண்ணியமோ செய்கிறது. நிர்ணயித்த காலத்தில் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு சென்றுவிடுகிறது இந்த உயிர். இந்த ஓரங்க நாடகக்கூத்திற்கு தான் வாழ்க்கை என்று சொல்லிக்கொள்கிறோம்! இதை புரியும்படி உங்களுக்கு விளக்குகிறேன்.
மழையானது வானத்திலிருந்து புறப்பட்டு பூமிக்கு வருகிறது. அந்த மழை ஏரி, ஆறு,குளம்,குட்டை,கடல் என பல வடிவில் நீர் என்ற உருவில் பூமியில் சிலகாலம் இருக்கிறது. மீண்டும் சூரியனின் வெப்பத்தால் ஆவியாகி மீண்டும் வானத்தை நோக்கி சென்று விடுகிறது நீர். அதுபோல கடவுளின் பிரதேசத்திலிருந்து அனுப்பிவைக்கப்படும் உயிர், பூமியில் சிலகாலம் தங்கிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே சென்று விடும். இந்தச் செயலைத்தான் பிறப்பு இறப்பு என்கிறோம்.
உயிர்களை உலகத்தில் கடவுள் ஏன் மனிதனாகப் படைக்கவேண்டும்? அந்த உயிர் சுகப்படவே. அந்த உயிர் முன் ஊழ்களில் செய்த வினைகளால் ஏற்பட்ட பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப, இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவித்து இருக்கும் வரையில் கடவுள் தந்த பரிசான அறிவைக்கொண்டு நல்லதை நினைத்து, நல்லதை செய்து, ஒழுக்கமாக வாழ்ந்து, முன் ஊழ் பாவங்களை இப்பிறவியில் கழுவி, மீண்டும் பரிசுத்தமாக மாறி கடவுளிடம் செல்லத்தான் இந்த பிறப்பும் வாழ்க்கையும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
அப்படிப்பட்ட வாழ்க்கையில் நமக்கு மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உயிர் என்று விழும்? எங்கே விழும்? ஏன் விழும் என்பதெல்லாம் அவ்வுயிருக்கு முன்கூட்டியே தெரியாது. இது தான் வாழ்வின் ரகசியம்!
நாம் எல்லாருமே இந்த நாட்டில் பிறக்கவேண்டும், அதுவும் இன்னாருக்குத் தான் பிறக்க வேண்டும், இந்த பெயரோடு தான் வாழவேண்டும், இன்ன வயது வரைதான் வாழ வேண்டும், ஆணாகவோ,பெண்ணாகவோ என்பது எல்லாம் தீர்மானிக்கப்பட்டு கடவுளின் ஆசிர்வாதத்தோடு தான் நாம் பூமிக்கு வருகிறோம்.
சாட்டை கடவுளின் கையில். சுற்றும் பம்பரம் மட்டுமே நாம்! எல்லாமே விதித்தப்படி தான் நடக்கும். நான் இன்னாருக்கு, இந்த ஊரில், இந்த நேரத்தில், அழகாக, சிவப்பாக, ஆணாக பிறக்கவேண்டும் என்றெல்லாம் நம் விருப்பப்படி பிறப்பெடுக்க முடியாது.
இதை எல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ நாம் வாழ்வில் ஆடாத ஆட்டம் எல்லாம் போட்டுக்கொண்டிருக்கிறோம்.
எதற்காக நாம் பிறந்தோம், ஏன் கடவுள் நம்மை படைத்தார்? நாம் செய்யவேண்டிய கர்மங்கள் எவைஎவை என்பதை அறிந்து கொண்டு அதை செய்து கடவுளுக்கு நாம் பிரியமானவர்களாக நடந்துகொள்ளாமல், அவரவர் எதை எதையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் உழைப்பால், முயற்சியால் தேடிய எதாவது போகும் போது கொண்டுச் செல்ல முடிகிறதா, என்ன?
இது புரிந்த பிறகும் கடவுள் உலகத்தில் வசிக்க ஏதாவது காரியம் செய்கிறோமா? புண்ணியம் செய்கிறோமா? கடவுளை காதலால் கசிந்துருகி, கண்ணீர் மல்க, அவன் திருத்தாளை நினைந்து, நினைந்து, அவன் திருநாமத்தை சொல்லி, சொல்லி என்றேனும் ஒருநாளாவது வாழ்ந்திருக்கிறோமா?
அப்படி எல்லாம் நாம் எதுவும் செய்யாமல் எதற்காக நாம் பிறந்தோமோ அந்த கடமைகளைச் செய்யாமல், பிறவி துன்பத்தைப் போக்க கடவுள் இட்டகட்டளைகளை மறந்து, கடவுளின் ஆணையை மீறி, படைப்பு தத்துவத்துக்கு முரணாக நம் கற்பனைக்கு, ஆசைக்கு, விருப்பத்திற்கு, அறிவுக்கு, சூழ்நிலைக்கு ஏற்ப இந்த உலகத்தைப் பார்க்கிறோம் அல்லது புரிந்துகொள்கிறோம். நாம் அனைவருமே மனதால் உருவாக்கப்பட்ட கற்பனை உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுள் படைத்த உலகத்தில் வாழ்வதில்லை. அந்த உலகத்தில் நீதி, நியாயம் நேர்மை, தர்மம், கருணை, அன்பு, கடவுளின் ஓங்கார சங்கீதம் இன்னம் என்னன்னவோ இருக்கிறது. அதை எல்லாம் விட்டு, நாம் உருவாக்கிய கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதால், நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் துன்பம் வருகிறது. கவலை வருகிறது. வியாதி வருகிறது. தலைவலி வருகிறது. இவை எல்லாம் வராமலிருக்க போராடவேண்டியிருக்கிறது. பாருங்கள்! எத்தனை தொல்லைகள்... கடவுள் கொடுத்த வாழ்க்கையை அவன் அமைத்த பாதையில் அவன் சொன்ன நெறிபடி வாழாததால் தான் உலகில் ஆயிரமாயிரம் பிரச்னைகள்...
ஆதலால், நாம் வந்த கதையும், வாழ்வின் பொருளும் அறிந்து வாழ்ந்தால் பூவுலக வாழ்க்கையும் நிம்மதி தரும்; வானுலக வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். அதற்கு முதற்படியாக இன்று முதலாய் கடவுள் தந்த வாழ்க்கை நெறிக்கு மாறத் துவங்குவோம்.
தேவராஜன்

26. எண்சாண் உடம்பின் தத்துவம் தேவராஜன்
ஒவ்வொரு உயிரும் இவ்வுலகில் அர்த்தமுள்ள படைப்பாகவே கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது. ஓர் அறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை எல்லாம் தெய்வீகச் சாயல் கொண்ட தெய்வத்தை பிரதிபலிக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன என்பதை, ஆழ்ந்து சிந்திக்கும் போது புலனாகும்.
நம்மில் அவரவர் உயரம் அவரவர் கை அளவில் எண் சாணாக தான் இருக்கும். உலகத்தில் எந்த மனிதரும் அவரவர் கையளவில் எண் சாணை தாண்டி இருப்பதில்லை. ஏன் அப்படி என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா? சிந்தித்துப் பார்த்தால், அதில் பெரிய ஆன்மிக தத்துவம் பொதிந்திருப்பதை அறியலாம்!
எண் சாண் என்பது "ஓம் நமசிவாய' என்பதின் தோற்றமாகும். எப்படி எனில் ஓம் என்பதன் விரிவான அ, உ,ம் இந்த மூன்றெழுத்தோடு நமசிவாய என்ற ஐந்தெழுத்தைக் கூட்டினால், மொத்தம் எட்டெழுத்து வரும். அந்த எட்டெழுத்தே எண்சாண் உடம்பாக நாம் கொண்டிருக்கிறோம். அதனால் தான் "தெய்வம் மனுஷ ரூபாய' என்கிறோமோ?
அடுத்ததாக, இன்னமொரு விரிந்த ஆன்மிக தத்துவமாக இந்த எண் சாண் உடம்பு கொண்டிருக்கிறது. ஒரு சாண் என்பது 12 விரல் அளவாகும். எட்டு சாண் என்பது 96 விரல் அளவாகும். இந்த 96 விரல் அளவுக்கும் 96 வகை ஆன்மிக தத்துவம் இருக்கிறது. அதை உங்களுக்கு புரியும்படியே விளக்குகிறேன்.
நாதம், விந்து, சதாசிவன், ஈச்வரம், சுத்தவித்தை ஆகிய ஐந்தும் சிவதத்துவங்கள்.
கலை, வித்தை, அராகம், காலம், நியதி, புருடன், மாயா இவை ஏழும் வித்யா தத்துவம்
சுவை உணர்தல், ஒளியறிதல், ஓசைகேட்டல், தொடு உணர்வு, மணம் நுகர்தல் இவை ஐந்தும் தன்மாத்திரைகள்.
நிலம், நீர், நெருப்பு,காற்று, ஆகாயம் இவை ஐந்தும் ஐம்பூதங்கள்.
தாமாகவே உணர்வனவான உடல் உறுப்புகளான உடம்பு, வாய், கண் மூக்கு, காது இவை நம் அறிவு துõண்டாமலேயே நாம் கட்டளையிடாமலேயே செய்கையில் ஈடுபடும். இந்த ஐந்து உறுப்புகளுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர்.
நமது அறிவு துõண்டப்பட்டு அல்லது மூளை கட்டளையிட்டப்பிறகு,செயல்படும் உறுப்புகள் கைகள், கால்கள், நாக்கு, மலம்கழிக்கும் வாய், நீர்விடும் குறி .இவை ஏவிய செயல் செய்ய வசதியாக இருப்பதால் இந்த ஐந்து உறுப்புகளுக்கு கன்ம இந்திரியங்கள் என்று பெயர்.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இந்த நான்கும் அந்தக்கரணம் என்று பெயர்.
ஆக, வித்யா தத்துவம்7, சிவ தத்துவம்5, தன்மாத்திரை5, மகாபூதங்கள்5,ஞானேந்திரியம்5, கன்மேந்திரம்5, அந்தக்கரணம்4 சேர்ந்த தொகுப்பாக 36 தத்துவங்கள் ஆகும்.
மீதமுள்ள 60 தத்துவம் எவை என்பதை அறியலாம்;
நிலத்தின் கூறுகளாக மயிர், தோல், எலும்பு, நரம்பு, தசை இவை ஐந்தும், நீர்க்கூறாகும்.
சிறுநீர், உதிரம், மூளை, கொழுப்பு, விந்து ஆகிய ஐந்தும், தீயின் கூறாகும்.
ஊண், உறக்கம், பயம், உடலுறவு, சோம்பல் இவை ஐந்தும், வாய்வின் கூறுகளா கும்.
ஓடல், நிறுத்தல், நடத்தல், கிடத்தல், நின்றல் இந்த ஐந்தும், ஆகாயத்தின் கூறுகளா கும்.
காமம், வெகுளி, செருக்கு, பொறாமை, மயக்கம் இவை ஐந்தும், செயற்கருவிகளா கும்.
கூடுதல், பேசல், நடத்தல், உழைத்தல், கழித்தல் ஆகிய ஐந்தும் வாயுக்கள். பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன்,தேவதத்தன், தனஞ்செயன் ஆகிய பத்தும், நாடிகள். இடைகலை, பிங்கலை, சுழிமுனை, புருடன், காந்தாரி, ஹஸ்திஜிஹ்வை, பிரீதை,யஷை, ஆலம்புஷை, ஹூஹூ, சங்கினி முதலிய பத்தும் குணத்தின் வகைகள். சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம் ஆகிய மூன்றும், வாக்கின் வகைகளான செவியோசை, வாக்கோசை, நினைவோசை, கக்கோசை ஆகிய நான்கும், பற்றுதல் கூறுகளான பொருள்.
பற்று, புத்திரப்பற்று, உலகப்பற்று ஆகிய மூன்றும் சேர்த்து கூட்டினால் மொத் தம் 60 உறுப்புகளாகி 60 தத்துவம் கிடைக்கும். மேலே சொன்ன 36 தத்துவத்தோடு இந்த 60 தத்துவங்களும் சேர 96 தத்துவங்களாகிய நம் எண்சாண் உடம்பாக கடவுள் சிருஷ்டித்துள்ளார்.
இந்த 96 வகை தத்துவங்களான எண்சாண் மனித உடல் எட்டு திசையில் எந்த திசையிலும் பிறக்கலாம்; அஷ்டாங்க யோகம் செய்யலாம்; எட்டு சித்துக்கள் புரியலாம்: கொல்லாமை, ஒற்றுமை, நன்றி, இரக்கம், நல்அறிவு, மெய், தவம், அன்பு ஆகிய எட்டு குணங்களையும் பேணவேண்டும்.
இந்த எண்சாண் உடம்பில் இன்னொரு ஆச்சரியமான தத்துவமும் இருக்கிறது. தமிழில் உயிர் எழுத்து 12; மெய் எழுத்து 18 ஆக 30 எழுத்துகளும் தமிழ் முதல் எழுத்து என்று சுட்டவர்.
சிவதத்துவம்5, வித்யாதத்துவம்7 ஆகிய இரண்டும் சேர்ந்து 12 ஆகும். இது உயிரோடு தொடர்புடையவை. ஆதலால், உயிர் எழுத்து 12க்கும் உயிர் ஒப்புமையாகிறது. அடுத்து மெய் எழுத்து பதினெட்டு. மெய் என்றால் உடல் அதற்கு ஒப்புமையாக அறிவுப்பொறிகள் 5, செயற்பொறிகள் 5, பூதமூலங்கள் 5, மனம், புத்தி, அகங்காரம் 3 ஆகிய பதினெட்டும் உடலுக்கு உரித்தாகிறது. உயிரும் மெய்யும் சேர்ந்தால் 30 எழுத்துகளாகிறது. அதுபோல நம் உடலும் உயிரும் சேர்ந்து 30 தத்துவங்கள் ஆக உள்ளது.
தேவராஜன்

27. வம்சத்தை திளைக்க செய்யும் பித்ரு வழிபாடு தேவராஜன்
இந்தப் பூமியில் பிறந்த மனிதர் யாராக இருந்தாலும் தன் வாழ்நாளில் எதை கடைப்பிடிக்கிறோமோ, இல்லையோ ஆனால் கண்டிப்பாக மூன்று கடமைகளை செய்தே ஆகவேண்டும் என்று இந்து வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அவை தேவயக்ஞம், பித்ருயக்ஞம், பசுயக்ஞம் முதலியனவாகும். இந்த மூன்று கடமைகளை செய்பவர்களே பிறந்ததின் பயனை அடையமுடியும் என்று தர்ம சாஸ்திரங்கள் எடுத்தியம்புகின்றன.
ஸ்தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று சொல்லப்படும் கோயில், புண்ணிய தீர்த்தங்கள் சென்று கடவுளை வழிபடுவது தேவயக்ஞம் ஆகும். அதாவது வாழ்வில் ஒரு முறையாவது புண்ணியதீர்த்தங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டும். காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரவேண்டும். கங்கை, யமுனை புண்ணிய நதிகளில் நீராடி வரவேண்டும்.
நாம் பெற்றோர் சொற்படி கேட்டு, அவர்கள் மனம் நோகாமல் நடந்துகொண்டு, அவர்களுக்கு பணிவிடைகள் செய்து, காப்பது பிள்ளைகளின் கடமையாகும். இது பெற்றோர்கள் வாழும் போது செய்யப்படவேண்டிய கடமைகள். அடுத்து, அவர்களின் மறைவிற்குப் பின் செய்யப்படும் பூஜைகளை பித்ரு யக்ஞம் என்று கூறப்படுகிறது.
அவரவர் இல்லங்களில் இறந்தவர்களின் படங்களை வைத்து வழிபடும் வழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இறந்தவர்களும் அவர்களுடைய வம்சத்தை காப்பதாக நம்பிக்கை. இத்தகைய வழிபாடு முறைக்குதான் பித்ரு வழிபாடு.
அடுத்து நம்மை அண்டிபிழைக்கும் மிருகங்களில் சாதுவான விலங்கும், சகல தேவர்களும் குடிகொண்டிருக்கும் பசுவாகிய கோமாதாவுக்குச் செய்யும் பூஜைகளை பசுயக்ஞம் என்கிறோம்.
எவரும் இந்த மூன்று யக்ஞங்களில் பித்ருயக்ஞத்தை (மூதாதையர் வழிபாடு) விட்டு மற்ற எந்த வழிபாடுகளை செய்தாலும், எவ்வளவு தர்மங்கள் செய்தாலும் நம் வழிபட்டதற்கான பலன் முழுமையாக கிட்டாது என்று தர்ம சாஸ்திரங்களில் எழுதிவைக்கப்பட்டுள்ளன.
இருக்கும் போது ஒருவருக்கு உதவுவது, பணிவிடைகள் செய்வதால், அதை பெறுபவர் சந்தோஷப்படுவர். அதை செய்தவர் திருப்தி காண்பர். ஆனால், ஒருவர் இறந்த பின் அவருக்கு தர்ப்பணம், பூஜைகள் செய்வதால் என்ன கிடைத்து விடும் என்று பலர் எண்ணுகின்றனர். ஆனால் இன்று பெற்றோர் இறந்த நாளில் திதி செய்யாமல் அன்று அனாதை ஆசிரமத்துக்குச் சென்று அன்னதானம் செய்து விட்டு, ஏதோ புண்ணியம் செய்து விட்டோம் என்று நினைக்கின்றனர். அனாதைகளுக்கு அன்னதானம் செய்வது புண்ணியம் தான். ஆனால், அந்த புண்ணியத்தால் இறந்தவர்களுக்கு எந்த பலனும் கிட்டுவதில்லை!
பசித்தவர் ஒருவர் இருக்க, பசித்த இன்னொருவருக்கு அன்னமிடுவதால் எப்படி முன்னவர் பசியாற முடியும்? இதை இன்றைய தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும். இறந்தவர்களுக்கும், முன்னோர்களுக்கும் சிரத்தையுடன் செய்யப்படும் பூஜையை சிராத்தம் என்று அழைக்கின்றனர்.
சிரார்த்தம் ஏன் செய்யப்பட வேண்டும்?
ஒருவர் இறந்தப் பிறகு, கனனம் (மண்ணில் அடக்கம் செய்தல்), தகனம் (எரியூட்தல்), தியாகம் (புண்ணிய நீர் நிலைகளில் சடலத்தை விடல்) இம் மூன்று காரியங்களுக்குள் ஏதாவது ஒன்றை மந்திர பூர்வமாக மரித்த சரீரத்துக்குச் செய்தால் அந்த ஆத்ம ஜீவனுக்கு தனது ஊழ்வினை மூலம் நேரும் பரலோகப் பிராப்தி ஏற்படும். அதுவும் தானிருந்த கூடான உடலை விட்டுச் செல்ல ஆத்மாவுக்கு பிரியாவிடை தரும்படி சஞ்சயனம், பிண்டதானம் முதலிய காரியங்கள் செய்தால் அந்த ஆத்மா வேறொரு சரீரம் எடுக்க உதவுகிறது.
அது எப்படி என்றால் நாம் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், பாஸ்போர்ட் கைவசம் இருந்தாலும் நினைத்த மாத்திரத்தில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட முடியாது. அதற்கு நாம் செல்லும் நாட்டின் அனுமதியான விசா வேண்டும் தானே! அது போல தான் பூமியில் பிறந்து விட்ட ஒரு ஆத்மா, சடலம் உகுத்து தேவலோகம் செல்ல, அந்த ஆத்மாவுக்கு தேவலோக அனுமதிக்கு விசா வேண்டும். அந்த விசா பெறும் முயற்சிதான் சிரார்த்தம்.
அடுத்து சரீரத்தை விட்டு நீங்கிய ஜீவனைக் குறித்து பத்து நாள்கள் செய்யப்படும் பிண்ட தானம், அந்த ஜீவன் அடுத்த சரீரம் எடுக்கும் போது தேவையான உறுப்புகளைப் பெற உதவுகிறது. வீட்டில் ஏதோ ஓரிடத்தில் ஒரு கல்லை வைத்து முதல் நாள் தொடங்கி பத்து நாள் வரை ஒவ்வொரு நாளும் எள்ளு தர்ப்பணமும், பிண்டதானமும் செய்யப்படுகிறது.
நாம் இறந்தவர் குறித்து செய்யப்படும் முதல் நாள் பிண்டதானத்தால் அந்த உயிர் நீத்த ஜீவனுக்கு தலை உண்டாகிறது. 2ம் நாள் பிண்ட தானத்தால் கண்களும், காதுகளும் உண்டாகின்றன. 3ம் நாள் பிண்ட தானத்தால் கைகள், மார்பு, கழுத்து இவை உண்டாகின்றன. 4ம் நாள் பிண்ட தானத்தால் நாபி, குதம், குறி உண்டாகின்றன. 5ம் நாள் பிண்டதானத்தால் தொடை உண்டாகிறது. 6ம் நாள் பிண்ட தானத்தால் தோல் உண்டாகிறது. 7ம் நாள் பிண்டதானத்தால் எல்லா நரம்புகளும் உண்டாகின்றன. 8ம் நாள் பிண்ட தானத்தால் உடம்பிலுள்ள எல்லா ரோமங்களும் உண்டாகின்றன. 9ம் நாள் பிண்ட தானத்தால் வீரியமும், 10ம் நாள் பிண்ட தானத்தால் சரீர திருப்தி உண்டாகிறது.
மேலே சொன்ன சடங்குகளைச் செய்தால் தான் அந்த ஆத்மா சரீரத்தை விட்டதும் மேலோகம் செல்ல அனுமதி கிட்டும். இல்லை என்றால் பூலோகத்திலேயே பேயாய், பிசாசாய் அலையவேண்டி இருக்கும்.
எனவே, ஆண்டுக்கு ஆண்டு அவர்கள் மறைந்த நாளில் அவர்களைக் குறித்து திதி செய்து வரவேண்டும். நம் முன்னோர்கள் அரூபமாய் இருந்து தம் வம்சத்தை கண்காணிக்கின்றனர். வழிநடத்துகின்றனர். மாதந்தோறும் அமாவாசை நாளில் சூக்கும சரீரத்தில் பூவுலகம் வந்து நம்மை பார்க்க வருகின்றனர். வந்தவர்களை வரவேற்று, உபசரித்து, ஆகாரம் கொடுத்து அனுப்பி வைக்கும் செயல் தான் திதி கொடுப்பதன் அர்த்தமாகும்!
நாம் வாழும் வரை வாழ்ந்து சென்றவர்களுக்கு பூஜைகள் செய்தால், சென்றவர்கள் நிம்மதியடைவார்கள். நம்மை எப்போதும் ஆசீர்வதித்துக்கொண்டிருப்பார்கள்!
தேவராஜன்

28. கந்தனுக்கு உகந்த காவடி வழிபாடு தேவராஜன்
நரகாசூரனை கிருஷ்ணன் சம்ஹாரம் செய்த திருநாளை தீபாவளி பண்டிகையாக கொண்டாடி வருகிறோம். தீபாவளிக்கு அடுத்து வரும் திருநாளுக்கு சூரசம்ஹாரம் என்று பெயர். முருகன், சூரன் என்ற அரக்கனை சம்ஹாரம் செய்ததை சூரசம்ஹாரம் என்கிறோம். அந்த சூரன் அழிந்தப் பிறகு, அவனுக்கு குல குருவாக இருந்த இடும்பன் என்பவனின் மூலமாக ஒரு புதிய வழிபாட்டு முறையே உண்டாயிற்று. அது என்னவென்றால் தமிழர்கள் குன்றிருக்கும் இடத்தில் எல்லாம் குமரனாகிய
முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுக்கும் பழக்கம் தொன்றுதொட்டாக இருந்து வருகிறது. காவடியிலும் பால் காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி என்று பல இருக்கிறது. இந்த காவடி எடுத்து வழிபடுவதற்குரிய கடவுள் முருகன் மட்டுமே. ஏனைய தெய்வங்களுக்கு பக்தர்கள் காவடி எடுப்பதில்லை. முருகனுக்கு மட்டுமே உரியதாக காவடி வழிபாடு இருக்கிறது. இது பற்றிய அபூர்வமான செய்தி புராண கதை ஒன்றில் இருக்கிறது.
சூரன் முதலிய அசுரர்களுக்கு அஸ்திரவித்தை எனப்படும் வில், பாணம் முதலிய போர்வித்தைகளை கற்றுக்கொடுத்தவன் இடும்பன். அவன் மனைவி இடும்பி.
சூரன் முதலிய அசுரர்களுக்கும் முருகனுக்கும் போர் ஏற்பட்டது. அந்த போரில் சூரனையும் அவன் வம்சத்தையும் அழித்தான் முருககடவுள். சூரனை சம்ஹாரம் செய்ததால்அது சூரசம்ஹாரம் என்றுபெயர். சூரவம்சத்தை முருகன் அழித்தப்பிறகு அஸ்திரவித்தையை இடும்பன் யாருக்கு சொல்லிக்கொடுக்க முடியும்? அவனுக்கு வேலையில்லாமல் போனது. சூரனுக்கும் அவனைச்சேர்ந்த அரக்கர்களுக்கும் அஸ்திர வித்தை கற்றுக்கொடுத்ததால் வந்த பாவம் கழுவ,சதா காலமும் சிவப்பெருமானை நினைத்து தவம் செய்துவந்தான். அவனின் தவத்தை மெச்சி ஈசன் அவனுக்கு காட்சி தந்து, "இடும்பா, உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்!' என்றார். அதற்கு இடும்பன், " குன்றம் எறிந்த குமரனின் அடியனாய் வாழ அருள் புரிய வேண்டும்' என்ற வரத்தைக்கேட்டான்.
சிவனும் இடும்பன் கேட்ட வரத்தை அருளி, "அப்படியே ஆகட்டும்!' என்றார்.
இடும்பன் சிவனை எண்ணி கடுந் தவம் புரிந்த இடம் இடும்பாவனம். இந்த இடம் தற்போது திருவாரூர் முத்துப்பேட்டை ரயில் மார்க்கத்தில் உள்ளது.
சிவகிரி என்பது ஒரு மலைச் சிகரம். சக்திகிரி மற்றொரு மலைச்சிகரம். இந்த இரண்டு சிகரங்களையும் சிவனாகவும் சக்தியாக பாவித்து வழிபாடு செய்தார் அகத்திய முனிவர். இந்நிலையில் இந்த இருசிகரங்களையும் தாமிருக்கும் பொதிகை மலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினார்.
எப்படி எடுத்துச் செல்வது? அதற்குண்டான உபாயம் எதாவது இருக்கிறதா என்று முருகனிடம் வேண்டினார் அகத்தியர். முருகனும் அதற்கு அருள்புரிந்தார். அகத்தியர் அந்த சிவகிரி, சக்திகிரியை எடுத்துக்கொண்டு வந்தார். வரும் வழியில் திருக்கேதாரத்துக்கு அருகே உள்ள வனத்தில் வைத்து விட்டு அகத்தியர் பொதிகை மலைக்குத் திரும்பிவிட்டார்.
பொதிகைக்கு திரும்பும் வழியில் இடையில் இடும்பனைக்கண்டார். அவர் ஒரு முருக பக்தராச்சே! அகத்தியரை வணங்கினான்." தாங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?' என்று கேட்டான் இடும்பன்.
அதற்கு அகத்தியர்," திருக்கேதாரத்துக்கு அருகே ஒரு வனத்தில் இருமலைச்சிகரங்களை வைத்துள்ளேன். அவை சாட்சாத் அம்மையும் அப்பனும் உறையும் மலை. அளவற்ற பெருமையை உடைத்தது. அவற்றை நீ பொதிகைக்கு கொண்டு வந்தால், உனக்கு பெருமையும், புகழும் கிடைக்கும்' என்றார். மேலும்," அம்மலைகளை துõக்கி வர சக்தி வேண்டும் அல்லவா? அதற்கு சுப்ரமண்ய மூலமந்திரம்" ஓம் சரவணபவ' சொல்லி வழிபாடு செய்து கொண்டுவந்தால் எளிதாக முருகன் அருளால் அந்த மலைகளை நீ இங்கே கொண்டவந்து விடலாம் என்றும் கூறினார்.
அகத்தியரை வழிபட்டு இடும்பன் மலைகள் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டான். போகும் வழியில் அகத்தியர் சொன்ன சுப்ரமண்ய மந்திரத்தை சொல்லிக்கொண்டேசென்றான்.
அப்போது வழியில் அஷ்ட நாகங்களும் கயிறுகளாக இடும்பன் அருகே வந்தன. பிரமதண்டம் புஜதண்டமாக வந்தது.
இதைப்பார்த்து ஆச்சரியபட்டான் இடும்பன். அகத்திய முனிவரின் அருளை நினைத்து வியந்தான். உடனே அஷ்ட நாகங்களையும் இரண்டு உறிபோல் செய்தான். இருமலைகளையும் அவற்றில் கட்டி தொங்க விட்டான். பிரமதண்டத்துடன் இணைத்தான். மூல மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே பிரம தண்டத்தை துõக்கி தன் தோள் களில் வைத்து, முழங்காலை மண்ணில் ஊன்றி எழுந்தான்.
தென்திசை நோக்கி பயணப்பட்ட இடம்பன் திருவாவினன்குடியை அடைந்தப்போது காவடியை கீழே இறக்கி வைத்தான். சற்று இளைப்பாறிவிட்டு மீண்டும் காவடியை எடுத்தப்போது எடுக்கமுடியவில்லை.( இன்றும் காவடி எடுப்பவர்கள் கோயிலை அடையும் வரையில் வழியில் எங்கும் காவடியை கீழே வைப்பதில்லை.) அப்போது கந்தன் சிறுவன் போல வந்து இடும்பன் முன் நின்று கைகொட்டிச் சிரித்தான்.
இடும்பன் ஆவேசப்பட்டு அவனைத்தாக்க, சிறுவன் இடும்பனை மாய்த்தான். இந்நிலையில் இடும்பனின் மனைவி முருகனிடம் அழுது, புலம்பி மாங்கல்ய பிச்சைக்கேட்டாள். அவளுக்கிரங்கி மீண்டும் இடும்பனை உயிரெழச்செய்தான் முருகன்.
பின்னர், "இடும்பா, இந்த இருமலைச்சிகரங்கள் இங்கேயே இருக்கட்டும். இந்த மலையில் நான் வாசம் செய்து, உன்னைப்போல என் தந்தை சிவனையும், தாய் சக்தியையும் வழிபட்டு, அவர்கள் அருளை எனக்கு காவடியாக எடுத்து வந்து, என்னை மகிழ்விப்பவர்களை நான் எப்போதும் அருள்பாலிப்பேன்!' என்று முருகன் வரம்கொடுத்தார்.
அதிலிருந்து தான் பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து வருகிறார்கள். காவடி எடுப்பதின் இன்னொரு நோக்கமும் இருக்கிறது. அது ஞானப்பழத்துக்காக கோபித்துக்கொண்டு ஆண்டியாக கோலம்பூண்டு, அம்மை, அப்பனை பிரிந்து குன்றேறி தன்னந்தனியனாய் இருக்கும் முருகனுக்கு அவனின் தந்தை,தாயான ஈசனையும், ஈஸ்வரியும் காவடி வடிவில் சுமந்து வந்து காட்டுவது அவனை சந்தோஷப்படுத்ததானே! முருகனை சந்தோஷப்படுத்தும் பக்தர்களுக்கு முருகன் பிரதிபலனாக பக்தர்களின் வாழ்க்கை சிறக்க,
உறவு பலப்பட, குடும்ப பிணக்குகள் அகல, ஆயுள்பலம் பெற முருகனை வழிபடுங்கள்.
தேவராஜன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக