புதன், 10 ஜூலை, 2013

ஆடி மாதம் பக்தி மாதம்!/98/ 21.7.2013

ஆடி மாதம் பக்தி மாதம்!/98/ 21.7.2013/ ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில், தமிழ் மாத பிறப்பு என்பது சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாதப் பிறப்பாகும். ஆடி மாதம் நம் எண்ணங்கள் எல்லாம் இறைவனோடு வைத்துக் கொள்ள உதவும் கருவியாக இருக்கிறது. கண்ணனுக்கு மார்கழி மாதம் போல, ஆடி மாதம் பெண்களுக்கு உகுந்த மாதம் என்றே கூறலாம். அதனால் தான் இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். ஆடி மாதத்தில் வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும் விரத வழிபாடுகளும் களைகட்டும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று எங்கும் பக்தி தான்! ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ஆடிவெள்ளி அன்று அம்மன் வழிபாடு மிகப் பிரசித்தம். இது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். குழந்தைப் பேறு கிடைக்கும். ஆடி ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்களையும், பிரார்த்தனைகளையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது. அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பையும் ஆர்வத்தை ஏற்படுத்தி தருவது ஆடி மாதம் என்றால் மிகையில்லை! இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும். இந்த மாதத்தில் வரும் சிறப்பு நாட்களில் கோயிலுக்குச் சென்று வந்தாலே போதும் புண்ணியம் தான்! ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நம் முன்னோர்களை வணங்கி, திதி கொடுப்பதும் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் இம்மைக்கும், மறுமைக்கும் புண்ணிய பலன்களை சேர்க்கும் என்பது ஐதீகம். ஆடி 18 மிக சிறப்பான நாள். இது இயற்கையை வழிபடும் நன்னாள். ஆற்றிலும், நதியிலும் நுரை பொங்க புரண்டு வரும் நீரை வணங்குதல் மரபு. இப்போது ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. ஆதலால், கடற்கரைகளில் மக்கள் கூடுகிறார்கள். இந்த நாளில், கன்னிப் பெண்கள் திருமணம் கூடிவர அம்மனை வேண்டி கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள். இத்தனை சிறப்புகள் கொண்டுவரும் ஆடி மாதத்தில், நாம் இறை பக்தி செலுத்தி இறைவன் அருள் பெறுவோமாக! - தேவராஜன். *************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக