செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஆன்மிகம்

முடிவுகள் முடிவதில்லை...1.(11.9.2011)

(தினமலர் வாரமலர் இதழில் நான் எழுதி வரும் ஆன்மிகம் தொடர் கட்டுரையின் முதல் பாகம் 1)

வாழ்க்கையில் தோல்வி, துயரம், ஏமாற்றம், இழப்பு இவை விதிக்கப்பட்டு நமக்கு ஏற்பட்டவை இல்லை. நம் முயற்சிகளின், ஆசைகளின் பயணத்தில் ஏற்பட்ட ஒரு சிறு இடர் காரணமாகவே வருபவை.
யாருக்குத்தான் ஆசை இல்லை? முயற்சி இல்லை? அடைய வேண்டிய ஒருஇலக்கு இல்லாமலா இருக்கிறது?
சிலர் அதிகம் முயற்சி செய்யலாம்; சிலர் குறைவாக முயற்சி செய்யலாம்; ஆனால், எல்லாரும் எப்பொழுதும் ஏதாவது முயற்சி செய்துகொண்டே தான் இருக்கிறோம் என்பதே உண்மை.
ஒவ்வொரு முயற்சிக்கும் செயலுக்கும் ஒரு பலன் இருக்கத்தான் செய்யும். காரணம் இல்லாமல் காரியம் நிகழ வாய்ப்பில்லை.
பலரும் ஏதாவது ஒரு பலனை மனதில் எதிர்பார்த்தே செயல் புரிகிறார்கள். அந்த செயலை விரும்பி செய்கிறார்கள். நாம் செய்கின்ற செயல்களுக்கு ஏற்ப, பலன்களும் பலவகையாக இருக்கும்.
நம் எல்லாருக்கும் ஒரு தலை இருகை, இரு கால் ஒரு சாண் வயிறுதானே இருக்கிறது? ஆனால் தேவைகளும், ஆசைகளும் வெவ்வேறாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆசைகளோடு, செயல்களோடு இருப்பதால் வெவ்வேறு பலன்களைத் தேடிச் செல்கிறோம். அதனால் நம் புத்தியும் பலகிளைகள் கொண்டது போன்றுள்ளது.
எதைத் தேடினாலும், பணமோ, பட்டமோ, பதவியோ, இன்பமோ அதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லாமல் உள்ளது. இது ஏன்?
எதை விரும்புகிறோம், எதைத்தேடுகிறோம், என்ன பலனை எதிர்பார்த்து என்ற நிச்சயம் இல்லாதவர்களின் மனம் பேதலித்து நதி போன்று வளை நெளிந்து அலைகிறது.
விரும்பும் பலன்களோ பல பல; அவற்றை அடையும் வழிகளோ பலபல; அவற்றைக் குறித்த சிந்தனைகளோ பல பல. அதற்கான முயற்சிகளும் பல பல.
நாம் தேடும் பொருள் அல்லது இன்பம் நம்மிடமிருந்து விலகி இருக்கும் பொழுது அந்தப் பொருளை அடைய பல வழிகளில் தேடி செல்வதால் தேடுவதற்கு முடிவே இல்லை.
பணம் அல்லது பதவியை உதாரணம் எடுத்துக்கொண்டு பார்த்தால், அவற்றை அடைய நேர் வழி, குறுக்கு வழி என எத்தனை வழிகள்? அதனால் அந்த வழிகள் எல்லாம் நீண்டு கொண்டே செல்கின்றன. இம்மாதிரியே இன்பங்களும் பல. அவற்றைத் தேடும் வழிகளும் பல. இது தான் நிலமை; இது தான் பலன்; இது தான் வழி; இது தான் முயற்சி என்று ஒருமனதாக நினைத்து விட்டால் அப் போது அடைய வேண்டியதில் எது முன்னுரிமை பெற வேண்டும், முயற்சிகளில் எது முக்கியமானது என்பது பற்றி மனதானது தெளிவு பெறும். மனதில் தெளிவு இருந்து விட்டால் குழப்பங்கள் விலகி,இலக்கு கண் முன்னே தெரிந்துவிடும். இதை குறிகோள் என்கிறோம்.
அடைய வேண்டியது எது, அதைப் பெறும்வழி எது என்பதில் தெளி வு உள்ளவர்களுக்கு ஒரே புத்திதான் இருக்கும். அதாவது எது நிலையற்றது எது நிலையானது என்று பகுத்து அறியும் திறமை வந்துவிடும். எது நிலையானது என்ற உண்மை உணரத் தொடங்கி விட்டால் மயக்கம் என்கிற திரை விலகி விடும். ஞானம் வெளிச்சத்தை தரிசிக்கலாம். அந்த ஞானத்திலேயே மூழ்கினால் இறைவனின் திருக்காட்சி கண்டு பேரின்பம் பெறலாம்!
தேவராஜன்.
***

கடமையிலும் கடவுள் பார்க்கலாம்! 2 (18.9.2011)

சும்மா இருப்பது ஒருநிலை. செயலாற்றுவது ஒருநிலை. இவ்விரு நிலையிலும் இறை உணர்வுடன் இருக்கலாம். சும்மா இருப்பது என்பது மனசு சும்மா இருத்தல் நிலை. அது ஞானியர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். அது சாதாரண ஆசாபாசம் உள்ள நம்மால் இயலாத காரியம்.
நாளும் பொழுதும் நம் அனைத்து செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யலாம். பூ, பழம், உணவு போன்றவற்றை இறைவனுக்கு அர்ப்பணம் செய்யலாம். ஆனால், நிற்பது , நடப்பது, பேசுவது , துõங்குவது இது போன்ற செயல்களை எல்லாம் எப்படி அர்ப்பணிப்பது என்று கேள்வி எழும். அதற்கும் பதிலுண்டு. புரியும் படி சொல்கிறேன்:
தர்மம் என்பது சாதாரண தர்மம், சிறப்பான தர்மம் என இருவகை. சாதாரண தர்மம் என்பது எல்லாருக்கும் பொதுவானது. அது உண்மை பேசுதல், உதவி செய்தல், பிறரை துன்புறுத்தாமல் இருப்பது போன்ற எதையெல்லாம் மற்றவர் நமக்குச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று விரும்புகிறோமோ அது அனைவருக்கும் பொதுவான தர்மம்; அடிப்படையான தர்மம். இதற்கு விதிவிலக்கில்லை. எல்லாரும் கடைபிடிக்க வேண்டும்.
சாதாரண தர்மத்திலிருந்து விரிவு கொண்டது சிறப்பு தர்மம். சாதாரண தர்மமாகி அஸ்திவாரம் பலமாக இருந்தால் தான் கட்டடம் என்கிற சிறப்பு தர்மம் எழுப்ப முடியும்.
சிறப்பு தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், குறிப்பிட்ட வாழ்க்கை நிலையில் நாம் ஏற்றிருக்கும் உறவு நிலையை ஒட்டி அதாவது அப்பாவா, கணவனா, மகனா போன்ற பாத்திரத்தில் நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வதுதான் சிறப்பு தர்மம்.
ஒவ்வொரு சூழ்நிலையும் நம்மிடமிருந்து சில கடமைகளை எதிர்பார்க்கிறது. அதை நேர்மையாக, உண்மையாக, இறைவனின் பார்வையில் செய்ய வேண்டும். அது தான் நமக்கான சிறப்பு தர்மம்.
உண்மை பேசுதல், அன்பாக இருத்தல் முதலான சாதாரண தர்மமும், நமக்கு விதிக்கப்பட்ட கடமையை நேர்மையாக செய்வதுமான சிறப்பு தர்மமும் இந்த இரண்டுமே கடவுளின் வெளிபாடுதான். இறைவனிடமிருந்து எவ்வகையிலும் வேறுபட்டதல்ல. தர்மத்தையே இறைவன் வெளிபாடு என்றும், தர்மம் வேறு கடவுள் வேறெல்ல என்ற மனபக்குவத்தில் செய்யப்படும் ஒவ்வொரு செயல்களும் இறைவனுக்கு அர்ப்பணித்தலுக்கு சாத்தியமாகிறது.
அவரவர் மேலே சொன்ன இருவித தர்மத்தை கடைபிடித்து, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யும்போது, ஒவ்வொரு சந்தர்ப்ப, சூழ்நிலையிலும் தன்னை எதிர்நோக்கி இருக்கும் கடமைகளைச் செய்யும்போது அதுவே இறைவனுக்கு பூஜையாகிறது. இவ்வாறு தன் தினசரி கடமைகளையே இறைவனுக்கு அர்ப்பணமாக செய்தால் மனம் துõய்மையடைகிறது. துõய்மையடைந்த மனம் தெய்வீக தன்மையை அடைகிறது.
தேவராஜன்.
***

வாரமலர்/ஆன்மிகம்/3/ (25.9.11)

வேண்டுதல் வேண்டாமை வேண்டும்

பக்தி , ஆன்மிகம் என்பது நம் தேவைகள், ஆசைகள், விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள உதவும் சாதனம் என்று நம்மில் பலர் நினைக்கிறார்கள்.
அது உண்மை என்பது போலவே கோயில்களில் கூட்டம் பெருகிவருகிறது.
எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும், எத்தனை கடவுள்களைப் பார்த்தாலும் முதல் பிரார்த்தனை இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்பதுதான்.
இப்படி கடவுளிடம் கோரிக்கைகள் வைப்பது என்பது அறியாமையே.
நம் கஷ்டங்கள், துயரங்கள், தேவைகள் பற்றி கடவுளிடம் முறையிடும்போதே, நம்மை பற்றி கடவுளுக்கு எதுவும் தெரியாது. நாம் தான் ஞாபகப்படுத்தி, நியாயப்படுத்தி கேட்டுபெற வேண்டும் என்ற மனோபாவம் இருக்கிறது.
நாம் நம் குறையையோ தேவையையோ கடவுளிடம் சொல்லிக் கேட்காவிட்டால் எதுவும் நமக்கு கிடைக்காது என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்கிறோம்.
நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் உறவானது
காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, காதலனின் மன மானது காதலியிடம் எப்படி போய் கலந்துகொள்கிறதோ, நதியானது கடலில் கலந்து விடுகிறது போல், கட வுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அருள் செய்கிற கடவுளிடத்தில், நம்மைஅறியாமல் போய் நிற்க வேண்டும். அதற்கு எவ்வித காரணமும் இருக்கக் கூடாது.
காரணம் என்று வந்தால் அது பக்தி வியாபாராமாகி விடும். கடவுளிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்!
ஒன்றை கொடுத்து வேறு ஒன்றை பெறுவதுபோல ,செல்வ த்தைக் கொடு, பக்தி செய்கிறேன் என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும்.
அது மட்டுமல்ல; கடவுளின் எல்லாம் அறிந்த ஞானத்துக்கு குறை உண்டாக்குகிறோம். இந்தக் கஷ்டத்தைப் போக்கு என்கிற போது நாம் கேட்டுத்தான் கடவுள் ஒன்றை நமக்கு செய்கிறான் என்றும் ஆகிறது. அதாவது தானாக அருளும் கடவுளின் கிருபைக்குக் குறை உண்டாக்கிவிடுகிறோம்.
அப்படியில்லாமல் எதையுமே நினைக்காது, கடவுளிடத்தில் போய் சேருவதையே லட்சியமாய் நினைத்து தன்னை அறியாமல் நமக்குள் நினைப்பு இருக்கிறதே, அதற்கு தான் பக்தி என்று பெயர்.
சரி, கடவுளிடம் இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்டு பிரார்த்திக்கக்கூடாதா என்று சந்தேகம் எழுந்தால், அது தவறல்ல.
இப்படிப்பட்ட பிரார்த்தனையால், நம்முடைய மனச்சுமை தற்காலிகமாகவாவது இலேசாகி, கொஞ்சம் சாந்தி பிறக்கும்.
ஒருவேளை கடவுளும் நாம் அவனுடைய ஞானத்துக்கும் கருணைக்கும் குறை உண்டாக்கியதைக்கூட பொருட்படுத்தாமல் நம் கர்மாவையும் மீறி பிரார்த்தனையை நிறைவேற்றினாலும் நிறைவேற்றலாம்.
இருந்தாலும் இவ்வகை பிரார்த்தனையால்
ஒரு கஷ்டம் தீர்ந்தால் இன்னொரு கஷ்டம் என்று வாழ்க்கையில் வந்து கொண்டேதான் இருக்கும். நம் பிரார்த்தனைக்கு முடிவு இல்லாமல் தான் இருக்கும்.
அதனால், நானாக எதுவும் கேட்கமாட்டேன். நீ என்ன கொடுக்க விரும்புகிறாயோ அதை தா! என்று சரணாகதி செய்வதுதான் பக்தி.
தேவராஜன்.
***

உங்களைத் தேடி இறைவன் வருவான்! 4 (2.10.11)

இறைவன் பஞ்ச பூதங்களாக இருக்கிறான், மந்திரமாக இருக்கிறான். அவன் கோயிலில் இருக்கிறான், புண்ணிய தீர்த்தங்களில் இருக்கிறான், புனித மலைகளில் இருக்கிறான், மசூதியில் இருக்கிறான், சர்ச்சில் இருக்கிறான் என்றெல்லாம் நம்பும் மக்கள் அவனைத் தேடி தேடி பிரார்த்திக்கிறார்கள். தங்கள் துன்பம், துயரங்களை எல்லாம் கொட்டித்தீர்க்கிறார்கள்.
நீங்கள் தேடும் அதே இறைவன் உண்மையில் இருக்கிறான், தர்மத்தில் இருக்கிறான், நேர்மையில் இருக்கிறான், செய்யும் தொழிலில் இருக்கிறான் என்பதையோ; இறைவன் அவரவர் உள்ளத்தின் உள்ளே இருக்கிறான் என்பதை உணராமலும் இருக்கிறார்கள்.
கோயில்களில் மட்டுமல்ல ஏனையவற்றிலும், நம் உள்ளத்திலும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை வர வேண்டுமானால் நாம் உண்மையே பேச வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும். தர்மம் செய்ய வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். இவையெல்லாம் நாம் செய்ய இயலாமல் இருப்பதால் தான் இறைவனை கோயில்களில் மட்டுமே இருப்பதாக நினைத்துவிடுகிறோமோ, என்னவோ?
வெளியே என்ன இருக்கிறது வெளியே என்ன இருக்கிறது என்றே நாம் வாழ்க்கையில் வெளியேயே தேடிக்கொண்டிருப்பதால், உள்ளே என்ன இருக்கிறது உள்ளே என்ன இருக்கிறது என்று தேடுவதில் நாட்டமில்லாமல் இருக்கிறோம்.
நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறோம். பயன்படுத்தும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்கிறோம். நாம் உடுக்கும் ஆடையை துவைத்து சுத்தமாக வைத்திருக்கிறோம். தினமும் குளிக்கிறோம். பல் துலக்குகிறோம். இதையெல்லாம் மிக சரியாக, பிறர் சொல்லாமலே செய்யும் நாம் நம் உள்ளத்தை மட்டும் அழுக்குப்படிந்த குப்பை கூடையாக வைத்திருக்கிறோமே!
பொறாமை, பேராசை,போட்டி, கோபம், அகங்காரம்,வெறுப்பு, காமம், பொய், புரட்டு, தில்லுமுல்லு என்று பலபல அழுக்குகளை உள்ளத்தில் நாளும் சேர்த்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் யோசித்து பாருங்கள் இத்தனை அழுக்குகள் சேர்ந்தால் என்னவாகும். துயரம், தோல்வி, ஏமாற்றம், அமைதியின்மை போன்ற கிருமிகள் எழுந்து, ஆத்மாவை நோய்வாய்ப்படுத்தும். இதனால் நாளும் கவலை, கஷ்டம்,நிம்மதியில்லாத வாழ்க்கை சூழல் ஏற்படச்செய்யும்.
இவ்வளவு குப்பையாக உள்ளத்தை வைத்துக்கொண்டால் உள்ளத்தில் இறைவன் எப்படி இருப்பான்?
தியானம், நல்ல நூல்களைப் படித்தல், மேலோரின் நட்பு, சத்சங்கம், ஆத்மவிசாரம், சுயநலமில்லாத நற்செயல்கள் என இப்படி பல நல்ல செயல்களை உங்கள் இயல்பிற்கு ஏற்றவாறு ஏதோ ஒன்றை உறுதியாய் தேர்ந்தெடுந்து, அதை வாழ்க்கையில் தினமும் விடா முயற்சியுடன் பின்பற்றுங்கள்.
இதனால் உங்கள் உள்ளம் உங்களால் தூய்மையாகும். பின்பு நல்லனவெல்லாம் வரும். இறுதியில் கோயிலில் தேடும் அந்த இறைவன் உங்களைத் தேடி வருவான்.
***

தனிமைக்கு துணை பக்தி! 5 ( 9.10.2011)

ஒரு மனிதனுக்கு கடைசி காலத்தில் ஏற்படும் தனிமை விரக்தியை நீக்குவது எது? நிம்மதி தருவது எது? துணையாக இருப்பது எது? இப்படி ஒரு கேள்வி எழுந்தால், பதில் பல வரும். சொத்து, சுகம், பந்தம், பாசம்...
பணி ஓய்வுக்குப் பிறகு அல்லது முதுமையில் தனிமையை போக்க பலர் பல வழிகளைத் தேடுகின்றனர்.
வீட்டு செல்ல பிராணிகளான நாய், பூனை வளர்ப்பது, அவற்றை கொஞ்சி மகிழ்வது பிடிக்கும்.
வீட்டில் செடி, கொடிகள் வளர்ப்பதும் அவற்றின் மீது கவனம் செலுத்துவோர் உண்டு.
நாளிதழ், புத்தகங்கள் படிப்பது, கதைகள் படிப்பது, எழுதுவது இப்படி சிலர் தனிமையைக் கழிப்பர்.
டி.வி., சினிமா,பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்த்து தங்களின் தனிமையை போக்குபவர்களும் உண்டு.
உற்றார், உறவினர், நண்பர்களிடத்தில் பேசி, சிரித்து தனிமையை விரட்டிக்கொள்வதாக கூறுவோரும் இருக்கிறார்கள்.
நவீன கண்டுபிடிப்புகளான வீடியோ கேம், இன்டர்நெட், ஐபாட், மொபைல் போன் போன்ற பல டிஜிட்டல் சமாச்சாரங்களும் ஒருவரின் தனிமையை போக்குவதில் பங்கு பெறுகின்றன.
தனிமை என்பது வலி தரக்கூடிய ஓர் உணர்வு. அதை தாங்க முடியாதவர்கள் எப்போதும் விரக்தியாக, மனம் பேதலித்தவர்கள் போலவும் இருப்பர். இப்படி பட்டவர்கள் சீக்கிரமே தனிøயில் இருந்து விலகி இருக்க புகைபிடித்தல், குடி போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி போதையில் தன்னை மறந்து இருப்பதையும் அறியாமையால் விரும்புகின்றனர்.
மேலே சொன்னவை எல்லாம் தனிமையை போக்கும் தற்காலிக வழிமுறைகள். நிரந்தரமாக தனிமையை போக்க ஒரு அருமையான வழி இருக்கிறது. அது கடவுள் பக்தி!
இந்து சமயத்தில் வயதனாவர்கள் குடும்ப பொறுப்புகளை எல்லாம் பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, தலம், தீர்த்தம், மூர்த்தி என்று கிளம்பிவிடுகின்றனர்.
வீட்டில் வயதானவர்கள் ஏதாவது தொந்தரவு செய்தால் கூட, "கடைசி காலத்தில் சிவனேன்னு இருக்கக்கூடாதா?' என்றுதானே சொல்கிறோம்.
கடவுள் பக்தி தான் தனிமையை போக்கும் அருமருந்து. முதுமையில் தனிமைப்படும் போது, தான் விரும்பும், நம்பும் கடவுளோடு ஒன்றிப்போவதால், கடவும் எப்போதும் தன்னுடன் வசிப்பவர் போல நினைப்பதும், அவருக்கு உணவு படைத்து, அவர் சாப்பிடுவது போலக் கூட நம்புவதும் தனிமையில் பெறக்கூடிய பெரிய ஆறுதலான விஷயமாகும். இந்த நம்பிக்கையை யாரும் சிதைக்க முடியாது. அதனால் தான், கடவுள் பக்தி உள்ளவர்கள், கடைசி காலத்தில் எதற்கும் பயப்படாமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தாங்கள் தனிமையில் இருப்பது போன்ற ஓர் உணர்வே இல்லாமல் இருக்க முடிகிறது.
கடவுள் பக்தி செய்வதன் மூலம் நாமா கீர்த்தனம், பஜனை செய்வது, ராமாயணம், பாகவதம், புராணம் போன்றவற்றை பாராயணம் செய்யும் போது நம்முடைய தனிமை வலி போவதோடு, ஆத்ம திருப்தி கிடைக்கிறது. புண்ணியம் சேர்கிறது. நம் பிரார்த்தனைகள் நம் சந்ததிகளை வாழவைக்கிறது. அதுவே கடவுளின் அருளுக்குப் பாத்தியமாகிறது.
தேவராஜன்.
***

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்கள்! 6 ( 16.10.2011)

உலகையும் சகல <உயிர்களையும் இறைவன் படைத்தான் என்று நம்பினால், இறைவனுடைய படைப்புகள் ஒவ்வொன்றையும் நாம் நேசிக்க வேண்டும். ஆனால், நாம் அப்படியா செய்கிறோம்?
பிறரிடத்து கோபம், பொறாமை, பழிவாங்கல் இப்படி பல துச்ச செயல் செய்ய எப்படி முடிகிறது?
நாம் வாழும் இடத்தில் நல்லவர்களும், கெட்டவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்களால் நன்மை. கெட்டவர்களால் தீமை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.
நாம் தீமைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் ஆளாகாமல் வாழ, நம்மைச் சுற்றியுள்ள கெட்டவர்கள் மீது ஜாக்கிரதையாக இருக்கணும் என்ற எண்ணம் தானாக உள் மனதில் எழுந்து விடுகிறது.
இது தப்பா? என்று கேட்பது எதார்த்த கேள்வி தான். ஆனால், இறைவன் படைத்த மனிதனில் ஒருவன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் இருப்பது எப்படி? தெரிந்தே தான் இறைவன் படைத்தானா என்ற சந்தேகம் நமக்கு வரும்.
இறைவன் பேதம் பிரிக்கவில்லை. அவனவன் கர்ம பலனை அனுபவிக்க எடுத்துக்கொண்ட குணவேறுபாடுகள் அவை.
கெட்ட குணம் என்பது நிரந்தரமல்ல. அது மாறக்கூடியது.
நம்மை சுற்றியிருப்பவர்கள் யாவரும் நல்லவர்களே, நம் நண்பர்களே என்று நாம் நம்பி பழகினால் போதும். இப்படி நாம் எண்ணும் எண்ணமே அவர்களை உண்மையிலேயே நமக்கு நல்லவர்களாகவும், நண்பர்களாகவும் ஆக்கிவிடும்.
ஒருவன் கெட்டவன் என்று கண்கூடாகத் தெரிந்தும் அவனை நல்லவன் என்று எப்படி நம்பலாம்? கெட்டவனை நல்லவன் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகுமே என்று சந்தேகமோ குழப்பமோ வரலாம்.
இங்கு யாரும் முழுமையான நல்லவர்களோ, கெட்டவர்களோ கிடையாது. ஒவ்வொருவரிடத்திலும் நற்குணங்களும், தீக்குணங்களும் கலந்தே இருக்கும்.
நற்குணங்கள் அதிகமாகவும், தீயக்குணங்கள் குறைவாகவும் உள்ளவர்களை நல்லவர்கள் என்றும்,
தீயக்குணங்கள் அதிகமாகவும், நற்குணங்கள் குறைவாகவும் உள்ளவர்களை தீயவர்கள் என்கிறோம். நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் இவ்வளவுதான் வேறுபாடு.
இந்த வேறுபாட்டு அளவை சமன்படுத்தும் காரியத்தை பண்ணும் பக்குவம் நமக்கு வேண்டும். அந்தப் பக்குவம் வரவேண்டுமானால் எல்லாரும் இறைவன் குழந்தைகள் என்று கருதவேண்டும். அவரவர் கூடா குணத்திலிருந்து விடபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அதே பக்தி சிந்தனைகளோடு,
கெட்டவர்களிடம் உள்ள ஒன்றிரண்டு உயர் பண்புகளை மட்டும் கருத்திற்கொண்டு, அவர்களோடு நாம் நெருங்கிப் பழகுவோமாயின் அவர்கள் நம்மைப் பொறுத்தவரையில் நல்லவர்களாக நடந்து கொள்வார்கள். நாளடைவில் தம்முடைய தீயபண்புகளிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு உலகத்திற்கும் அவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள்.
நல்லவர்களிடம் காணப்படுகிற ஒன்றிரண்டு தீயக்குணங்களை சுட்டிக்காட்டி அவர்களையும் அரவணைத்துச் சென்றால், நாளடைவில் அவர்கள் முழுமையான நல்லவர்களாகிவிடுவர்.
எல்லாரும் நல்லவர்களாகிவிட்டால் உலகில் பகையும் பூசலும் போரும் இல்லாமல் போய்விடாதா, என்ன?
தேவராஜன்.
***

துயரத்தை துடைத்து போடலாம்! 7 ( 22.10.2011)
எனக்கு மட்டும் துன்பம் ஏன் என்று நினைப்பது தவறானது. மனிதர்களில் ஒவ்வொருக்கும் ஏதாவதொரு கவலை, துன்பம் இருக்கிறது.
இன்பம் கடவுள் கொடுத்தது என்றால், துன்பமும் கடவுள் கொடுத்தது என்று நினைக்கும் பக்குவம் நம்மில் எத்தனை பேருக்கு உண்டு?
" நீ சிரிக்கும் போது கடவுளை நினைத்தால், நீ அழும்போது கடவுள் உன்னை நினைப்பான் என்ற நம்பிக்கையில் இறைவனை மனதார வணங்கி துன்பத்தை துரத்துங்கள்.
நாம் அனுபவிக்கும் துன்பம் நம் ஆத்மாவில் சேர்த்துள்ள பாவ அழுக்கை நீக்கும் சோப்பாகும்.
நாம் வாழும் காலம் கொஞ்சம். அந்த கொஞ்ச வாழ்நாளில் நம்மால் முடிந்தவரை எல்லாருக்கும் நல்லது செய்யவேண்டும். நாம் மறைந்த பின்னர் நம்மோடு வருவது காசு,பணம், தங்கம் அல்ல. நாம் செய்த பாவ,புண்ணியங்கள்தான்.
இந்த ஞானத்தை மனதில் நிரப்புங்கள். துன்பம் துõரபோகும். அல்லது அதை தாங்கிக் கொள்ளும் மன உறுதியாவது கிடைக்கும்.
எதையும் அடைந்தே தீர்வது என்று விடாபிடியாக இருக்காதீர்கள்.சிலர் பணம், பதவி, அதிகாரம் வேண்டும் என்று நினைக்கின்றனர்.
பணம், பதவி, புகழ் இப்படி ஒவ்வொன்றும் பெற்றவுடன் ஆணவம் தலைதுõக்குகிறது. ஆணவம் துன்பத்தை கூட்டி வருகிறது.
பணமே இல்லை என்றாலும் துன்பம், அளவுக்கு மீறி பணம் இருப்பதும் துன்பம். பட்டினியும் துன்பம். அதிகமான உணவும் துன்பம். ஆக அளவோடிருப்பதும்தான் ஆனந்தம்.
இந்த உண்மை உணர்ந்த மனது எந்த நிலையிலும் தடுமாறுவதில்லை. சலனம், சபலங்களுக்கு அலைபாயும் மனதை கட்டிப் போடுங்கள். துன்பத்தின் கடிவாளம் உங்கள் கைகளில் வந்துவிடும்.
எல்லாம் எனக்கே என்று ஆசை கொண்ட ஒருவன் இறுதியில் துன்பத்தில் துவண்டான். மலைமீது ஏறி தற்கொலை செய்து கொள்ள சென்றான்.
அவன் தலைக்கு மேலே வானில் ஒரு பருந்து இறைச்சித் துண்டை கவ்வியவாறே வேகமாய்ப் பறந்தது.
அந்தப் பருந்திடமிருந்து இறைச்சியைக் கைப்பற்றுவதற்காக பல பறவைகள் அப்பருந்தினைத் தாக்கியபடி பின் தொடர்ந்தன. எங்கெங்கோ பாய்ந்து பறந்தும் பருந்தால் மற்ற பறவைகளின் தாக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இறைச்சித் துண்டைக் கீழே நழுவ விட்டது.
உடனே இன்னொரு பறவை அதனைக் கவ்விக் கொண்டது. எல்லாப் பறவைகளும் பருந்தை விட்டுவிட்டு இறைச்சித் துண்டினைக் கவ்விய பறவையைத் தாக்க ஆரம்பித்தன.
மீண்டும் விண்ணிலே பறவைகளின் சண்டை.
இறைச்சியை நழுவ விட்ட பருந்தோ நிம்மதியாகப் பறந்தது.
இதை கவனித்தவனுக்கு மனதில் ஒரு ஞானம் பிறந்தது.
இறைச்சித் துண்டினைப் பற்றியிருந்த பறவைத் தாக்கப்படுவதைப் போல உலகப்பொருட்களின் மீது பற்று வைத்திருப்பவர்களையே துன்பம் அதிகமாகத் தாக்குகிறது.
இறைச்சியை விட்டுவிட்ட பருந்து நிம்மதியாகப் பறப்பதைப் போல உலக சுகங்களை விட்டவர்கள் மன நிம்மதியை அடைகின்றனர். அவர்களை எப்போதும் துன்பம் துரத்துவதில்லை என்பதை உணர்ந்தான்.
துன்பம் என்று சொல்பவர்கள் எல்லாம் இறைச்சி துண்டை கவ்வியிருக்கும் பருந்து போலதான். இறைச்சி துண்டை விடுவதற்கு மனசு இருந்தால் போதும்.
தேவராஜன்
***

வெளிச்சத்தில் தேடுங்கள்! 8 (30.10.2011)
கடவுள், எங்கும் இருக்கிறார். நம் கண்ணுக்கு தெரியவில்லை அதற்காக, அவர் இல்லை என்று சொல்லிவிட முடியாது. நம் கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதாலே அந்த முடிவுக்கு வரக்கூடாது.
இருட்டில் இருக்கும் பொருள் கண்ணுக்கு தெரிவதில்லை. வெளிச்சம் இருந்தால் பொருளை காணலாம்.
இருட்டு நம் அஞ்ஞானம். பொருள் என்பது கடவுள். வெளிச்சம் தான் ஞானம். அஞ்ஞானம் என்ற இருட்டை, ஞானம் என்ற வெளிச்சத்தால் அகற்றினால், கடவுள் என்ற பொருளை காணலாம்.
கடவும் எங்கும் இருக்கிறார். எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வருவார். அவரை புரிந்து கொள்ளவும், அறிந்து கொள்ளவும் ஞானம் வேண்டும். எங்கும், எதிலும் கடவுள் இருக்கிறார் என்ற <உறுதியான நம்பிக்கையும் எல்லாமே கடவுளின் அம்சம் என்ற உண்மை புரிந்து விட்டால், கடவுளை எந்த ரூபத்திலும் காணலாம்.
அது பிரகலாதனுக்குப் புரிந்தது. ஆனால், இரண்யகசிபுக்கு தெரியவில்லை.

""உன் நாராயணன் எங்கே இருக்கிறார்?' என்று கேட்டான் இரண்ய கசிபு.
அதற்கு, ""அவர் எங்கும் இருக்கிறார்; அவர் இல்லாத இடமே இல்லை!' என்றான்
பிரகலாதன்.
""இந்த துõணில் இருக்கிறாரா?' எகத்தாளமாய் கேட்டு சிரித்தான் இரணிய கசிபு.
"" துõண் மட்டுமல்ல துரும்பிலும் இருக்கிறார்!' என்றான் உறுதியாக பிரகலாதன்.
அந்த துõணை, இரண்ய கசிபு வெட்ட, அதிலிருந்து, நரசிம்மமாக வெளியே வந்தார் நாராயணன்.
பகவான் நாராயணனை காணவேண்டும். அதற்கு எதாவது உபாயம் உண்டா? என்று ஒரு சீடன் தன் குருநாதரிடம் கேட்டான்.
சீடனுக்கு தாரக மந்திரத்தை உபதேசித்து, நாளும் பொழுதும் செய்யும்படி சொன்னார் குரு.
"" இந்த தாரக மந்திரம் நிச்சயம் பகவானைக் காட்டினால், அதை தியானிக்க இப்போதே ஆரம்பிக்கிறேன்'' என்று சொன்ன சீடன், ""நிச்சயமாக பகவானை பார்க்க முடியும் அல்லவா?' என்று கேட்ட சீடனுக்கு, ""நிச்சயம் வருவார்; ஆனால், அவர் தான் பகவான் என்று கண்டு கொள்ளவது உனக்கிருக்கும் ஞானத்தைப் பொறுத்தது என்றார் குரு.
பகவானைக் காணவேண்டும் என்ற ஆவலில் சீடன் தாரக மந்திரத்தை சிரத்தையாக உச்சரிக்க தொடங்கினான். மாதங்கள் ஓடியது.
அன்று பகவான் இன்று வரவேண்டும்; தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்று பகவானை வேண்டிக் கொண்டு தியானித்தான்.
வீட்டில் ஆச்சாரத்தோடு தடபுடலாக விருந்து தயார் செய்தான். பகவான் இன்று வீட்டுக்கு வருவார் என்ற ஆசையில் விதவித பலகாரங்கள் தயார் செய்தான்.
வீட்டு வாசலில் ஒரு முதியவர் குரல்.
என்ன என்று கேட்டான் சிஷ்யன்.
பசிக்குது என்றார் முதியவர்.
கொஞ்சம் பொறு. பகவான் என் வீட்டுக்கு வருகிறார். அவர் சாப்பிட்டதும் உனக்கும் விருந்து தருகிறேன் என்றான்.
நேரம் ஓடியது. முதியவர் பொறுத்து பொறுத்து பார்த்தார்.
"தம்பி, பசி தாங்க முடியவில்லை. நான் வேறு வீட்டைப் பார்க்கிறேன்' என்று கிளம்பி போய்விட்டார்.
இரவு வந்து விட்டது. பகவான் வரவே இல்லை என்ற ஏமாற்றத்தில் குருநாதரிடம் சென்றான் சிஷ்யன்.
நடந்ததை சொன்னான்.

அதற்கு, குருநாதர் சிரித்துக் கொண்டே, ""பகவான் உன் வீட்டுக்கு வந்தார். சாப்பிட ஆசையாக இருந்தார். நீதான் அதை புரிந்து கொள்ளாமல், அவரை கண்டுகொள்ளவே இல்லையே! கால்கடுக்க நின்று பார்த்து, கடைசியில் என் வீட்டுக்கு வந்து சாப்பிட்டு போய்விட்டார்'' என்றார் குரு.
"அப்படியா!' என்று வியந்தவனிடம்,
"" பகவான் உன் வீட்டுக்கு ஒரு முதியவராக வந்தார். நீ அவர் தான் பகவான் என்று நம்பவில்லை; உணரவில்லை. அதனால் நீ ஏமாந்து விட்டாய்!' என்றார் குரு.
தேவராஜன்.
***

வீடுதோறும் கீதை இருக்கட்டும்! 9 ( 6.11.2011)
மகாபாரதத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த இதிகாசத்திலிருந்து விதுர நீதி என்கிற தர்ம சாஸ்திர நுõலையும், பகவத்கீதையையும், விஷ்ணு சஹஸ்ர நாமத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்.

இது மகாபாரதத்தின் கதைப்போக்கில் தானாகவே நிகழ்ந்த ஓர் அற்புதம். குறிப்பாக, பகவத் கீதையில் சொல்லப்பட்ட பல விஷயங்கள் மானுட வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதாகும்.

வேதங்கள், உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் இவைகளில் அடங்கி உள்ள மேன்மை மிக்க மெய் ஞானப்பொருள் விளக்கத்தை கடைகோடி மானிடனும் கடைத்தேற உதவுவது ஸ்ரீமத் பகவத் கீதை.

மேலே குறிப்பிட்ட நான்கு நுõல்களை உள்ளடக்கியதை பிரஸ்தானத்திரயம் என்று கூறுவார்கள். அதாவது முடிவான ஆதாரம் என்பது இதன் பொருளாகும்.
வேதங்களும், உபநிஷதங்களும் அவ்வளவு விரைவில் எல்லோரும் கற்று தேர்ந்துவிட முடியாது. எனவே தான் அனைவரும் எளிமையான பரம்பொருளின் ரகசியத்தை புரிந்து கொள்வதற்கு நமது குருமார்கள், ஆன்மிக பெரியோர்கள் ஸ்ரீமத் பகவத்கீதையை படித்து, உணர்ந்து அதன் வழி நடந்தாலே போதும் என்கிறார்கள்.

நாம் எங்கே அவர்கள் பேச்சை காது கொடுத்து கேட்டிருக்கிறோம்? அப்படி கேட்டிருந்தால் வீடுதோறும் கீதை இருந்திருக்கணுமே! <
இந்து மதத்தின் புனித நுõல் கீதை என்பதை நம்மில் எத்தனை பேர் அறிந்து இருக்கிறோம். பகவத் கீதை புத்தகத்தை தொட்டுக்கூட பார்க்காதவர்களும், அதில் ஒருவரிக்கூட படிக்காதவர்களும் நம்மில் எத்தனையோ பேர் இருக்கிறோம்.
கீதை என்றால் அது பெரிய ஞான நுõல். அதை எல்லாம் குடும்பஸ்தர்கள் படித்து என்னவாக போகிறது? அதை படித்தால் சாமியார்களாகிவிடுவோம் என்றே பலர் நினைக்கிறோம்.

பகவத் கீதையை துறவிகளும், சாமியார்களும், ஆன்மிக சொற்பொழிவு செய்பவர்கள் மட்டும் படித்தால் போதும் என்றோ, அவர்கள் மட்டும் படிக்க வேண்டிய கடமை என்றோ நாம் நினைக்கிறோம்.

பொருள் தேடுவதில் எப்போதும் குறியாக இருக்கும் நமக்கு,இன்னது செய்தால் உனக்கு இன்னது கிடைக்கும் என்றால் மட்டுமே அதில் கவனம் செலுத்துகிறோம்.
சராசரி மனிதனின் அன்றாட பிரச்னைகள், குழப்பங்கள், கஷ்டங்களை
எது தீர்த்து வைக்குமோ அல்லது உடனடி தீர்வுகள் கிடைக்குமோ அதை தேடித்தான் மக்கள் அதிகம் செல்கிறார்கள்.

குடும்ப பந்தத்தில் தத்தளிப்பவர்களுக்கு கீதை தோணியாக இருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அதுபோல் அன்றாட குடும்ப சிக்கல்களை தீர்த்து வைக்கவும், உடல் உபாதைகளுக்கும் கீதை வழி செய்கிறது.

<கீதையில் இருக்கும் எத்தனையோ உன்னதமான மந்திரங்கள்
வாழ்வில் அன்றாடம் ஏற்படும் பிரச்சனைகளைத்துடைக்கின்றன. கீதையை பாராயணம் செய்து மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட அந்த நோயிலிருந்து விடுபட்டு இருக்கிறார்கள்.
கீதை ஒரு அட்சயப்பாத்திரம். கேட்டவருக்கு கேட்டதை கொடுக்கக்கூடியது. கீதை வழி நடந்தால் ஞானம் கிடைக்கும். நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியம் கிடைக்கும். புண்ணியம் கிடைக்கும். ஐஸ்வர்யம் கிட்டும். ஆரோக்கியம் கிட்டும். எல்லாம் கிடைக்கும். ஆதலால் இனி வீடுதோறும் கீதை இருக்கட்டும். அதை படித்து, அதன்படி நடக்கும் மனமெல்லாம் மலரட்டும்!
தேவராஜன்.
***

அறம் அச்சம் போக்கும். 10 ( 13.11.2011)
பாரதம் உலகிற்கே மனித நேயத்தை, தத்துவத்தை, அன்பை, அமைதியை சொல்லிக் கொடுத்தது. இன்று நாம் மேலைநாட்டு நாகரிகத்தைஇறுக பற்றிக்கொண்டு பணம் சம்பாதிக்கும் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அளவோடு வாழ்வதுதான் நம் பண்பாடு. அளவோடு வாழ்வது என்பது அறவாழ்க்கை.அளவோடு வாழத்தெரிந்தவர்களிடம் செயலில், சொல்லில், சிந்தனையில் அறஉணர்ச்சி இருந்துகொண்டே இருக்கும்.
அளவுக்கு மீறிய வாழும் வாழ்க்கை போட்டி, பொறாமை, பேராசை, திருட்டு, புரட்டு எல்லாவற்றையும் இழுத்து வந்து நம் மனதில் நிரப்பிவிடுகிறது.
போதுமான பணம் சேர்த்தால் அது வாழ்வதற்கு பயன்பட்டு தீர்ந்து போய்விடும். அளவுக்கு அதிகமாக சம்பாதித்து வைத்திருப்பவர், தேடி பணத்தை பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். களவு போய்விடுமோ என்று பயம் ஏற்படும். இப்படி ஒவ்வொன்றிலும் பயம்
எப்போதும் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால் போதுமென்ற மனம் கொண்டவர்களுக்கும், எளிய வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், இறைவன் படைப்பு நியதிகளுக்கு கட்டுப்பட்டு, உண்மையாக,நியாயமாக, நேர்மையாக, உறுதியாக இருப்பவர்கள் எதற்கும் எப்போதும் அஞ்சுவதில்லை. ஏனென்றால்,
அஞ்சாமையால் உண்மை அரும்பும்; உண்மையால் உணர்வு பிறக்கும்; உணர்வால் சுயசிந்தனை வளரும். சுய சிந்தனையால் தன்னை அறியலாம். வாழும் பூமியை அறியலாம். முடிவில் தன்னையும் பூமியையும் படைத்த இறைவனை அறியலாம்.
ஒரு மன்னரின்அரண்மனை அது. அரண்மனை கிடுகிடுத்தது. மகாராணியின் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. மகாராணியின் கூச்சலால் அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க கட்டளையிட்டார்.
சிலம்பை ஒரு வாரத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக தரப்படும். அதற்கு பிறகு யாரிடமாவது சிலம்பு இருப்பது தெரியவந்தால் மரண தண்டனை'' என்று அறிவிக்க சொன்னார்.
அந்த ஊருக்கு புதிதாக வந்தார் ஒரு துறவி. அவர் கையில் சிலம்பு கிடைத்தது.
அந்த சிலம்பு பற்றி மக்களிடம் விசாரித்தார்.
உடனே கொடுத்தால் பரிசு, ஒரு வாரத்திற்குப் பிறகு கொடுத்தால் மரண தண்டனை'' என்றனர்.
துறவி அந்தச் சிலம்பை மன்னரிடம் உடனே ஒப்படைக்க வில்லை. ஒரு வாரம் கழிந்தது. பின்னர் அரண்மனைக்கு சிலம்புடன் சென்றார் துறவி.
"இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்' என்றார் மன்னர்.
அந்த துறவி சொன்னார்:
"சிலம்பை கண்டெடுத்ததும் உடனே வந்து தந்திருந்தால் நான் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும். மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும். சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும்.அதான் தாமதமாக கொண்டு வந்தேன்' என்றார்.
" அதெல்லாம் சரி, இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே' என்றார் மன்னர்.
துறவி கம்பீரமாக மன்னரைப் பார்த்து "அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது' என்று கூறினார்.
துறவியின் அஞ்சாமையைக்கண்டு மன்னர் தலைவணங்கி, துறவியை அனுப்பி வைத்தார்.
***

நேர்மையிலும் கடவும் இருக்கிறார் 11 ( 20.11.2011)

நேர்மை என்பது ஒருவர் உண்மைக்கு ஆதரவாகவும் தெரிந்தே பொய்க்கு ஆதரவாக இல்லாமல் நேர்வழியில் நடந்துக்கொள்வதாகும். இது நம் செயல்களின் தன்மையை வெளிப்படுத்தும் மனித குண இயல்பு.
பக்திக்கும் நேர்மைக்கும் நெருங்கிய தொடர்பு <உண்டு. நேர்மை இல்லாத பக்தி புண்ணியத்தை தராது.
மனசுத்தம், மனசாட்சிக்கு பயப்படுவது எல்லாம் நேர்மை வழி நடப்பவர்களின் பண்பு.
மேலோட்டமாக ஒருவர் நேர்மையானவர் என்பதை அவர் உருவ அமைப்பை வைத்தோ, கல்வி அறிவை வைத்தோ, தொழில் அல்லது இருக்கும் பதவியை வைத்தோ மதிப்பிட முடியாது.
ஒருவர் நடந்துக்கொள்ளும் குண இயல்பை பொறுத்து தானாகவே வெளிப்படும் தன்மை கொண்டது.
ஒருவேளை ஒருவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ சரியானது என கருதிய ஒன்று, தவறு என தெரிய வரும்போது, தனது தவறை மனதளவிலேனும் ஏற்று திருத்திக்கொண்டு, நேர் வழியில் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.
அன்றாட வாழ்க்கையில், சமூகத்தில் சகமனிதர்களில்
நேர்மையாக நடந்துக்கொள்ளும் ஒருவரை நேர்மையாளர், நேர்மையானவர், நேர்மையான மனிதர் என்று சிறப்பாக, மதித்து சொல்வதுண்டு.
நேர்மை என்பது மனிதர்களிடம் மட்டுமல்லாமல் தான் மேற்கொள்ளும் செயல்கள், நடவடிக்கைகள், அமைப்புகள், அரசுகள் போன்றவற்றிடமும் நிச்சயமாக இருக்க வேண்டும்.
பொதுவாக நேர்மை எங்கு, எவரிடம் காணப்படுகின்றதோ அவர் செயலுக்கும் அவருக்கும் மக்களிடையே என்றும் மதிப்பும் மரியாதையும் இருக்கும்.
தெரிந்தே ஒருவர் பிழைசெய்வது, பிழையை ஆதரிப்பது,தவறை உணர மறுப்பது, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தனது கருத்துக்களை, செயல்பாடுகளை மாற்றிகொள்வது, அதனையே நியாயமென நிறுவ முனைவது எல்லாம் நேர்மையின்மையின் வெளிப்பாடுகள் தான். இப்படி எதிலும் நேர்மை இல்லாமல் செயல்படுபவர்கள் தங்களையும், தங்களை நம்பியுள்ளவர்களையும் எல்லாவற்றையும்விட தன்னை படைத்த இறைவனையும் ஏமாற்றுகிறார்கள் என்று அர்த்தம்.
தனக்கு காரியம் ஆகவேண்டும் என்பதற்காக, ஒருத்தரை "நீங்க ரொம்ப நல்லவர்' என்று சொல்லும் சிறிய பொய்யால் அவருக்கு ஒன்று ஆகிவிடாது. ஆனால், அது உங்கள் மனதில் ஒரு புள்ளியாய் கறைப்படுத்தும்!
நேர்மையற்றவராய் இருப்பது நமக்குள் நம்மை அறியாமலேயே ஒரு குற்ற உணர்வை உருவாக்கிவிடும்.
நம்மைச் சுற்றி இருக்கின்ற மக்கள் காட்டும் தவறான வாழ்க்கை முறை, நேர்மையற்றவர்கள் நாம் வாழும் காலத்தில் சுகபோகமாக வாழ்தல் இவை எல்லாம் நம்மை நேர்மையிலிருந்து விலகிட ஆசையூட்டினாலும், நாம் உறுதியுடன் நேர்மை வழியை கடைபிடிக்கணும்.
குழந்தைகளுக்கு நேர்மையைப் பற்றிப் போதித்து விட்டு, நாமே நேர்மையற்றவர்களாய் இருந்தால் அடுத்த தலைமுறை நேர்மை என்பதை அடுத்தவருக்கு அறிவுரை கூற மட்டுமே என்று எண்ணிவிடுவர். எனவே,
குடும்பம், உறவினர், நட்புகளிடையே நேர்மையாக, நேசமுடன் நடந்து கொள்வோம். அதுவே ஒரு பிரார்த்தனை போலத்தான். பிரச்சினைகள் வருமோ என நினைத்து நேர்மையை விட்டு வாழ்வதை விட, நேர்மையாய் வாழ்ந்து பிரச்னைகளைச் சமாளிப்பதே சிறந்தது. அதற்கு இறைவனும் துணை இருப்பார்.
தேவராஜன்.
***

என் கடன் பணி செய்து கிடப்பதே! 12 (27.11.2011)
தானும், தன் குடும்பமும் நலமாய் சுகமாய் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள் எப்போதும் இறைவனுக்கு வெகு துõரத்தில் இருக்கிறார்கள். இவர்களால் மக்களுக்கோ, அவர்களைப்படைத்த இறைவனுக்கோ எந்த பெருமையும் இல்லை.
நம்முடைய குடும்ப நலனில் அக்கறை கொள்வதும் அவசியம். அப்படி இருந்தால் தான் இல்லறம் சிறக்கும். தன் குடும்ப நலனுக்காக மற்றவர்களின் நலனை அழிக்கத் துணிவது, பொதுநலச் சிந்தனையின்றிக் குறுகிய வட்டத்திற்குள் முடங்கிக் கொள்வது தர்மவழியான வாழ்க்கை இல்லை.
ஈவு, இரக்கம், துõய அன்பு, சேவை மனப்பான்மை, சுய நலத் தியாகம் ஆகியவற்றிற்காகவே ஒரு இல்லறவாசியின் வாழ்க்கை அமைக்கப்பட்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன.
இவ்வுலகில் தோன்றிய எத்தனையோ ஞானிகள், சித்தர்கள், முனிவர்கள், விஞ்ஞானிகள் எல்லாம் தங்களையே தியாகம் செய்தவர்கள். தங்கள் தியாகத்தால் இந்த உலகம் பயனுற வேண்டும் என்று ஆசைபட்டவர்கள்.
தியாகம் என்பது பெரிய தர்மம். அது தெய்வீகத்தின் அம்சம். ஒருவருக்காக ஒருவர் தமது சுகங்களைத் துறப்பதும், ஒருவருக்காக ஒருவர் தமது வாழ்க்கையில் சுக போகங்களை இழப்பதும் சாதாரண விஷயமில்லை. அதற்கெல்லாம் ஒரு வைராக்கியம், மனதிடம் வேண்டும்.
நல்ல மனம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களின் நலனைப் பற்றிச் சிந்திக்க முடியும். உயர்ந்த உள்ளங்களில் இருந்தே உன்னதமான சிந்தனைகள் எழுந்து வருகின்றன. அத்தகைய உள்ளங்களில் போட்டி, பொறாமை, பகை, துவேசம் ஆகியவற்றிற்கு இடமில்லை.
மாறாக, ஒவ்வொரு சிந்தனைகளிலும் அன்பும், இரக்கமும் வெளிப்படும்.
சுய நலத் தியாகத்தை விட, இந்த உலகில் பெரிய தர்மமோ, புண்ணியமோ இருப்பதில்லை.
தியாகம் என்பது அன்பு, கருணை, பக்தி ஆகியவற்றின் உச்சநிலை.

தியாகம் செய்வதற்குப் படிப்பறிவு தேவையில்லை. வேதசாஸ்திரங்களை கரைத்துக் குடித்த ஞானியாராக இருக்க வேண்டும் என்பதில்லை. அன்பு உள்ளம் இருந்தால் போதும்.

உங்கள் நண்பரோ, உறவினரோ யாரவது நோய்வாய்ப்பட்டிருக்கிறார்களா? அவர்களுக்காக ஒரு நாளைக்கு ஒருமுறையாவது பிரார்த்தனை செய்யுங்கள். இயன்ற அளவு பொருள் உதவி செய்யுங்கள். அதுவும் இயலாவிட்டால் நாலு வார்த்தை அன்பாய், ஆறுதலாய் கூறுங்கள். இதுவும் ஒருவகை சேவை தான். பிரார்த்தனையும் கூட.

சாலையில் ஒருவன் பசியால் மயங்கி கிடப்பதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், உங்கள் கையிலிருக்கும் உணவைக் கொடுங்கள். உங்களுக்கு இறைவன் மூன்றுவேளை உணவு <உண்ணும் பாக்கியத்தைக் கொடுத்திருக்கிறான். ஆனால், இந்த மனுஷனுக்கு அதுவும் நிச்சயமில்லையே! என்று நினைத்து ஒருவேளை உணவை நீங்கள் கொடுத்து உதவுங்கள். உணவில்லை என்றால் கொஞ்சம் தண்ணீராவது கொடுங்கள். மக்கள் தொண்டும் மகேசன் தொண்டே!
படிக்க வசதியற்ற ஏழைக்குப் பணம் உதவுங்கள்.
வாடிய பயிரைக்கண்ட வள்ளலார் மனதுடன் ஏழைகள், துக்கப்படுவோரின் கண்ணீரைத் துடைப்பதற்கு உதவுங்கள். மற்றவர்களுக்காக,ஒரு பொதுநன்மைக்காக நீங்கள் எதையாவது இழந்து பாருங்கள். நீங்கள் இறைவனுக்கு பிரியமானவர்களாகிவிடுவீர்கள்.
தேவராஜன்.
***

மூன்று வகை பக்தி! 13 (4.12.2011)
நீரளவே நீராம்பல் என்பது ஒரு பழமொழி. இது பக்திக்கும் பொருந்தும். எல்லோரும் தான் இறைவனை வழிபடுகிறோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியாகவா அருள் கிட்டுகிறது? ஒரே மாதிரியாகவா ஞானம் கிடைக்கிறது? இல்லை, ஏன்? அவரவர் வழிபாட்டில் இறைவன் மீது வைத்திருக்கும் திடமான நம்பிக்கை மற்றும் அன்பைப் பொறுத்தே இறைவனுக்கும் பக்தனுக்கும் ஆன இடைவெளி அமைகிறது. மேலும்,
வழிபடும் பக்தனின் மன உறுதிக்கும்,பக்குவத்திற்கு ஏற்ப பிரார்த்தனையின் வீரியமும் நோக்கமும் வித்தியாசப்படுகிறது. இறைவனை மனிதன் வழிபடும் வகை மூன்று நிலையில் இருக்கிறது. அவை, உத்தம பக்தி, மத்யம பக்தி, மந்தபக்தி .
மந்த பக்தி என்பது இறைவனிடம் பூரண நம்பிக்கை இல்லாத ஒரு நிலை. அல்லது சந்தேகத்திற்கு உரிய நிலை. அதாவது ஏதோ கும்பிட்டு வைப்போம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என்று ஒருவர் வழிபடும் வகைதான் அவர் இறைவன் மீது வைத்திருக்கும் மந்த பக்தி. இது இப்படியும் இருக்கலாம் தனக்கு எப்பொழுது இறைவன் துணை தேவைப்படுகிறதோ அப்பொழுது வழிபாடு செய்தல்.
பிடித்த தோஷங்கள், கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்பதற்காகவோ ஏதாவது ஆசைப்பட்டபொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ,திருமணம் தடை விலக வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், ஆரோக்கியம் வேண்டும், நல்தொரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக வழிபாடு செய்வது மந்த பக்தி.
இது பக்தியே இல்லை என்பர் சிலர். இது சுயநலம் கொண்டது என்பர்.
மத்யம பக்தி என்பது மந்த பக்திக்கு சிறிது முன்னேறிய நிலை. இந்நிலையில் பக்தன் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்றோ, பொருள்கள் வேண்டும் என்றோ வழிபடுவதில்லை. தான் முக்தி அடைய வேண்டும். ஞானம் பெற வேண்டும். பிறவிப் பயனை அடைய வேண்டும். தன்னுடைய பிரார்த்தனை எல்லாம் இறைவனை அடைவதை குறிகோளாக கொண்டு இருக்கும். இந்த வகை பக்தியில் இவ்வுலக வாழ்க்கைப்பற்றிய ஆசைகள் பிரார்த்தனையாக இருக்காது. எனவே இந்த நிலைக்கு மத்ய பக்தி என்று பெயர்.
மூன்றாவது உத்தம பக்தி என்பது உயர்ந்த பக்தி. எல்லோருக்கும் கிடைத்துவிடாத பெருமை பெற்றது. இந்த உத்தம பக்தி செய்பவர்கள் இறைநிலையை ஒத்த ஞானிகள், சித்தர்கள் ஆவர். இவர்கள் தான் வேறு இறைவன் வேறு என இருப்பதில்லை. இறைவனும் பக்தனும் ஒன்றிவிட்ட பேரானந்த நிலை.
உத்த பக்தியின் நிலையில் இருக்கும் ஞானி வழிபாடு செய்கிறார். ஆனால், அவர் எதையும் வேண்டுவதில்லை. எனவே, அவர் செய்கின்ற வழிபாடு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இவ்வகை உத்தம பக்தி செலுத்தும் பக்தன் தானும் ஒருநிலையில் இறைவனாகிவிடுகிறான்.
நாம் மந்த பக்தியில் இருந்து கொண்டே மத்ய பக்திக்கு முன்னேறுவோம். "அவன் அருளாளே அவன் தாள் வணங்கி' என்ற மாணிக்கவாசகர் வார்த்தைக்கேற்ப உச்சநிலையான உத்தம பக்திக்கு நம்மை அந்த இறைவனே அழைத்துச் செல்வான்.
தேவராஜன்.
***

அருளின் அருமை! 14 ( 11.12.2011)
ஒருவன் நன்கு படித்துப் பட்டம் பெற்று நல்ல வேலை கிடைத்தால், அது அவனுடைய படிப்பால் கிடைத்தது என்றாகிறது.
ஒருவர் கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்தால், அது உழைப்பால் கிடைத்தது என்றாகிறது.
10 பேர் கலந்து கொண்ட போட்டியில் 8 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டால், அது புத்திசாலித்தனத்தால் கிடைத்ததாகும். போதிய தகுதி இல்லை என்றாலும் "தான் ஆதரவற்றவன்' என்பதை சொல்லி உதவி பெற்றால் அது அனுதாபத்தால் நிகழ்ந்தது. அதே போல் அதிர்ஷ்டத்தால் நிகழ்பவை சில.
சில நல்ல செயல்கள் தவிர்க்க முடியாதபடி ஏற்படுகின்றன. நான்கு வயது பூர்த்தியானால் பள்ளிக்கூடம் செல்வதும், வாலிப வயதில் வேலைக்குச் செல்வதும், வயது வந்தபின் திருமணமாவதும் இயல்பான செயல்களாகும்.
மேலே சொன்ன எதுவும் இல்லாமல் சில பெரிய காரியங்கள் நடந்தால் "இது இறைவன்அருளால் நடந்தது' என்றுகிறோம். தெய்வச் செயல், எப்படி நடந்தது என்று புரியவில்லை என்று சொல்கிறோம். இறைவனின் ஐந்து தொழில்களில் ஒன்று அருளல். இந்த அருளால் உலக உயிர்கள் எல்லாவற்றுக்கும் கிடைக்கக்கூடியதே. ஆனால், அதை பெறும் தகுதியை உயிர்கள் பெற்று இருக்க வேண்டும்.
அருளல் என்பது இறைவனின் செயல் என்றால், இறைவன் படைத்த மனிதர்களாகிய நமக்கு அருளலின் கிளைகளான பரிதாபப்படுதல், அனுதாபப்படுதல் செயல் செய்யமுடியும்.
ஒருவர் படும் கஷ்டத்தை நமக்குப் பார்க்க முடியவில்லை, பார்த்துச் சகித்துக்கொள்ள முடியாமல் அவருக்கு நாம் உதவி செய்வது பரிதாபத்தால் ஏற்படுவது. இந்த உணர்வு சக மனிதர்களிடம் காட்டாவிட்டால் நமக்கு இறைவனின் அருள் கிடைப்பது என்பது அரிதாகிவிடும்.
பிறர் கஷ்டப்படக்கூடாது, அது பாவம் என்று செயல்படுவது அனுதாபம்.
பரிதாபம் நமக்காகச் செயல்படுகிறது. அனுதாபம் பிறருக்காகச் செயல்படுகிறது.
இந்த இரு செயல்களை அடுத்து கிருபை என்ற செயல் இருக்கிறது. அது
உயர்ந்தது. அது நமக்காகவோ, பிறருக்காகவோ செயல்படுவதில்லை. எவரும் துன்பப்படக்கூடாது என்பதே அதன் கொள்கை. துன்பப்படுபவன் நல்லவனா, கெட்டவனா என்பதையும் பார்ப்பதில்லை. மனிதன் துன்பப்படக்கூடாது என்று செயல்படுவது கிருபை. இது ஞானியர்களுக்கும் யோகியர்களுக்கும் ஏற்படுவது.
இரண்டு பேருக்கு சண்டை. அடித்து கொண்டதில் ஒருவருக்கு மண்டையை உடைகிறது. டாக்டர் இருவருக்கும் சிகிச்சை செய்கிறார். நல்லவனுக்குத் தான் சிகிச்சை, கெட்டவனுக்குச் சிகிச்சை இல்லை என்பதில்லை. அதே போல் மனிதனாகப் பிறந்தவன் துன்பம் அடையக்கூடாது என்று கிருபை செயல்பட்டுத் துன்பத்தைத் துடைத்து விடுகிறது.
இவற்றை எல்லாம் கடந்த இறைவனின் அருள் உயர்ந்த கட்டத்தில் செயல்படுகிறது. துன்பத்திற்கே இங்கே இடமில்லை என்பது அருளின் வழி. துன்பமே உலகில் இருக்கக்கூடாது என்பது அருளின் விருப்பம்.
மனிதனை துன்பத்திலிருந்து விடுவிக்க முயல்வதைவிட, துன்பத்தையே அழிக்க முயல்வது அருள். அப்படி இறைவனின் அருள் செயல்பட, மனிதர்களாகிய நாம் நியாயமான, நேர்மையான, தர்ம வாழ்க்கை வாழவேண்டும்.
இறைவன் நினைப்போடு, தினமும் ஆத்ம திருப்தியோடு வாழ்ந்து கொண்டிருந்தால், இறைவனின் அருள் நம் துன்பத்தை மட்டுமல்ல, உலகின் துன்பத்தையே துடைத்து விடும்.
தேவராஜன்.
***

உலகம் ஒரு கண்ணாடி 15 ( 18.12.2011)
எதை விதைக்கிறோமோ, அதைத்தான் அறுவடைச் செய்யமுடியும். இந்த உலகில் நாம் வாழும் காலத்தில் நாம் எதையெல்லாம் பெற நினைக்கிறோமோ, அதையெல்லாம் நாம் பிறருக்கு கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
நீங்கள் ஒரு கண்ணாடி முன்பு என்ன செய்கிறீர்களோ அதை அப்படியே அந்த பிம்பம் செய்யும்.
இந்த உலகமும் ஒரு கண்ணாடி போலதான். நீங்கள் என்ன செய்துள்ளீர்களோ அதையே அது உங்களுக்கு கொடுக்கும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற சங்கப் பாடல் வரி உணர்த்துவதும் அதுதான்.
எதுவெல்லாம் நமக்கு கஷ்டத்தையும், வருத்தத்தையும் கொடுக்கும் என்று நினைக்கிறோமோ அவற்றை எல்லாம் நாம் பிறருக்குச் செய்யக்கூடாது என்று நினைத்து விட்டால், உலகமே இன்பச் சோலையாகிவிடாதா, என்ன? நல்லதே நினைப்பது, நல்லதே செய்வது, நல்லதே பெறுவது என்று மனிதன் வாழ்க்கையில் பின்பற்றத்தொடங்கிவிட்டால் அந்த பக்குவமே நம்மை இறைவனைப் புரிந்து கொள்ள துõண்டிவிடும்.
ஜென் குருவை தேடி, ஒரு இளைஞன் வந்தான். ஜென் கொள்கைப்படி அவன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தான். மேலும் தன் வாழ்க்கை சுகமாக அமைய ஜென் போதனைகள் அவனுக்கு தேவைப்பட்டன. அதனால் தான் ஜென் குருவிடம் வந்தான்.
அவரை வணங்கிய அவன், ""குருவே! நானும் ஒரு ஜென் மாணவன் தான். எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தங்களிடம் கேட்கலாமா?'' என்றான்.
""கேள்!'' என்றார் ஜென் குரு.
""முதலில் உன்னை நீ நேசி அப்போதுதான் உன்னால் மற்றவர்களை நேசிக்கமுடியும். தயவு செய்து இந்த விளக்கத்தை தாங்கள் எனக்குக் கூறவேண்டும்! என்றான் இளைஞன்.
ஜென் குரு மெல்லப் புன்னகைத்தார்.
"நீ பிறர் மீது வெறுப்பாகவோ, கோவமாகவோ, எதிர்ப்பாகவோ, இருக்கிறாய் என வைத்துக்கொள். அதனால் முதலில் பாதிக்கப்படுவர் யார்?'' என்று கேட்டார் ஜென் குரு.
அந்த இளைஞன் சிறிது யோசித்துவிட்டு, ""முதலில் பாதிக்கப்படுவது என்றால், அது நானாகத்தான் இருக்க முடியும்!'' என்றான்.
குரு மேலும் புன்னகைத்தார்.
""சரியாக சிந்தித்திருக்கிறாய். உன் எதிர்மறைச் செயலால் முதல் முதலில் பாதிக்கப்படுவது உன் எதிரியல்ல, நீதான். அதுபோல, உன்னிடம் நீ நல்ல எண்ணங்களையும், செயல்களையும் வளர்த்துக் கொண்டால், உன்னை நீ நேசித்தால், உன் மீதே நீ அன்பு செலுத்தினால் அவற்றையேதான் நீ பிறர் மீதும் செலுத்துவாய். ஒத்துக் கொள்கிறாயா?'' என்றார் ஜென் குரு.
""ஒத்துக் கொள்கிறேன் குருவே!'' என்றான் இளைஞன்.
""இப்போது புரிகிறதா, உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதைத்தான் நீ பிறருக்குத் கொடுக்க முடியும். நீ என்ன பிறருக்கு கொடுக்கிறாயோ அதை தான் நீ அவர்களிடம் பெற முடியும்"" என்றார் குரு.
தெளிவான சிந்தனையுடன் அந்த இளைஞன், ஜென் குருவிடமிருந்து விடைபெற்றான்.
தேவராஜன்.
***

கரம் குவித்து வணங்குதல் செய்வோம்! 16 (25.12.2011)

"கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க!' என்பார் மாணிக்க வாசகர்.
கை கூப்பி வணங்கி நிற்கும் அடியார்களின் பணிவால் இறைவன் மகிழ்ச்சி அடைகிறான் என்பது இந்த வரியின் மேலோட்டமான பொருள். அப்படி மகிழும் இறைவனின் பாதங்களுக்கு வெற்றி உண்டாகுக என்கிறார் மாணிக்க வாசகர்.
நம் பாரத கலாசாரத்தின் உன்னதமான பண்புகளில் ஒன்று ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, மரியாதை நிமித்தமாக வணக்கம் செய்தல்.
அப்படி சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கைகுவித்து வணங்குகின்றனர்.
கை கூப்பி வணக்கம் செலுத்துதல் என்பது இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்தல். இது பிற மனிதரின் வரவை, இருப்பை மதித்துக் கவனத்தில் எடுத்துக்கொண்டதற்கான அடையாளம்.
மரியாதை நிமித்தமாக வணக்கம் செலுத்துதலில் கூட, நம் மதம் பெரிய வாழ்வியல் கோட்பாட்டை எளிமையாக சொல்லிக்கொடுக்கிறது.
என்னை ஆட்டிப்படைக்கும் ஐந்து புலன்களை கட்டுக்கோப்பில் வைத்திருக்கிறேன் என்பதை அடையாளப்படுத்துகிறேன் என்பது ஆன்மிக தத்துவம்.
இன்னொரு ஆழமான தத்துவமும் இருக்கிறது.
உலகம் என்பது பஞ்ச பூதங்களின் தொகுப்பு. மனிதனும் பஞ்ச பூதங்களின் கலவைதான். உடம்பு என்பது பஞ்ச கோசங்களால் ஆனது என்பர். நம் கையில் இருக்கும் ஐந்து விரல்கள் அந்த ஐந்து கோசங்களை குறிக்கிறதாம். அவை அன்னமய கோசம், மனோமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்.
மனித உடல் அன்னத்தால் ஆனது. இதை குறிப்பது அன்னமய கோசம். காற்றை சுவாசிப்பதால் உடம்பு வளர்கிறது. இது பிராணமய கோசம். மன எண்ணங்களால் உருவாவது அதனால் அது மனோமய கோசம்.
புத்தியால் அமைவது விஞ்ஞானமயகோசம். இந்த கோசங்களால் மனிதன் பெறும் நிலைத்த இன்பம் ஆனந்தமயகோசம் ஆகும்.
மனிதர்கள் ஐந்து கோசங்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் எல்லோரிடமும் உள்ளது 'ஆத்மா' என்ற ஒன்றுதான் என்பதை உணர்த்துவது தான் கரம் குவித்து வணங்குதல்.
ஒரு கை தன்னுடைய ஐந்து கோசங்கள்; மற்றொரு கை அடுத்தவரது ஐந்து கோசங்கள் இரண்டையும் இணைப்பது ஆத்மா என்ற ஒன்றே என்பதை உணர்த்துகிறோம். அதாவது நீயும் நானும் ஒன்றே என்றே உணர்த்துவது.
இவ்வளவு ஆழமான நம் தமிழ் கலாசாரத்தின் வணக்கம் செலுத்தும் முறையை மறந்து விட்டு, மேலை நாட்டினரின் பழக்கமான கை குலுக்குதல், சல்யூட் செய்தல் முறையை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.
இந்த மேலை நாட்டினரின் பழக்கம் அர்த்தம் உள்ளவையா, இல்லையா என்பதற்குள் நாம் செல்ல வேண்டாம். நம்முடைய அர்த்தமுள்ள கரம் குவித்து வணங்கும் முறையை பின்பற்றலாமே! இதில் என்ன தயக்கம்?
கடவுளைத்தொழும்போது, இரு கரங்களையும் கூப்பி, தலைக்கு மேல் வைத்து, ஒவ்வொரு விரலும் மற்ற கைகளின் விரல்களை தொடும்படி வைத்து வணங்கவேண்டும். வயதில் பெரியவர்களை முகத்திற்கு நேராகவும், வயதில் சிறியோர்களை, இதயத்திற்கு நேராகவும் வைத்து தொழவேண்டும்.
கரம் குவித்து வணக்கம் செலுத்தினால் கடவுளே மகிழ்கிறார் என்றால், மனிதர்கள் மட்டும் மகிழமாட்டார்களா, என்ன?
தேவராஜன்.
***

ஒரு வினாடி வாழ்க்கை! 17 (1.1.2012)

கடந்த ஆண்டு வீடு கட்டினேன். ஆறு மாதத்துக்கு முன்பு முக்கிய நகரத்தில் இரண்டு கிரவுண்ட் நிலம் வாங்கினேன். போன மாதம் சேமிப்பில் எதிர்ப்பார்த்ததைவிட அதிகம் சேர்த்துள்ளேன். கார் இருக்கு, வீடு இருக்கு, நல்ல மனைவி, பிள்ளைகள் இதுவல்லவா ஒரு வாழ்க்கை என்று
சென்ற ஆண்டின் உங்கள் செயல்பாடுகள் பற்றிய பெருமை பேசிக்கொள்வதல்ல நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை.
அதே சமயம் ஏழ்மையாலோ, அல்லது பல பிரச்னைகளாலோ பாதிக்கப்பட்டதை நினைத்து புலம்பிக் கொண்டிந்ததை நினைத்து நினைத்து பேசுவதும் வாழ்க்கை அல்ல.
இப்புத்தாண்டில் எப்படி வாழப்போகிறோம், எப்படி வாழ வேண்டும் என்று நினைக்கும் சிந்தனையே புத்தாண்டு வழிபாடாக அமையட்டும்.
நீங்கள் நினைத்தப்படி ஒரு நிகழ்வு நிகழவில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம்.
வீட்டில் இருக்க பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை, மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்தது ஒன்றாவது நிச்சயம் கிடைக்கும்.
இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசியுங்கள். அந்தந்த வினாடியில் வாழ்வது என்பதே பேரானந்தம். நேற்றும் வாழ்க்கையல்ல; நாளையும் வாழ்க்கையல்ல. இன்று இந்த வினாடி நேரம் வாழும் வாழ்க்கைத் தான் வாழ்க்கை. அந்த ஒரு வினாடி வாழ்க்கையில் தவம், தியானம், பிரார்த்தனை, முக்தி இப்படி எல்லாமே அடங்கி விடுகிறது.
வாழ்க்கை என்பதன் முழு அர்த்தம் என்ன என்பதை தன் சீடர்களுக்கு விவரித்தார் புத்தர்.
"நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?' என்று கேட்டார் புத்தர்.
அவரது சீடர்கள் யோசித்தார்கள். "என்ன கேட்கறீங்க? சரியாப் புரியலையே!'
"ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?'
"நுõறு வயசு?' என்றார் ஒரு சிஷ்யர்.
"ம்ஹூம். இல்லை!' என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்.
"அப்படீன்னா? 90 வயசு?'
"அதுவும் இல்லை!'
"80? 70? 60?' இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, புத்தர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் "நீங்களே சொல்லுங்க' என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.
"ஒரு நல்ல வாழ்க்கைங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!' என்றார் புத்தர்.
"என்ன சொல்றீங்க குருவே? ஒரு விநாடியில என்ன பெரிசாச் செஞ்சுடமுடியும்? குறைந்தபட்சம் முப்பது, நாற்பது வருஷமாவது வாழ்ந்தால்தானே மனுஷ வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்கும்?'
"அப்படியில்லை. ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது. அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது. சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை' என்றார் புத்தர்.
தேவராஜன்.
***

நீயும் பொம்மை, நானும் பொம்மை! 18 (8.1.2012)

இறைவன் தீராத விளையாட்டுப்பிள்ளை! விளையாடுவதற்கு பொம்மைகள் வேண்டும். விளையாட இடமும் வேண்டும் அல்லவா? அதற்கு பொம்மைகளாக இருப்பவர்கள் நாம். விளையாட்டுகளம் பூமியும், கைலாச( வைகுண்ட)மும் தாõன். இவற்றை படைத்தவனும் இறைவனே!
ஒரு சிறிய உதாரணத்துடன் விளக்குகிறேன்.
ஒரு விளையாட்டு. அது கிரிக்கெட் என்று வைத்து கொள்வோம்.
இந்த விளையாட்டுக்கு இரு அணிகள் தேவை. இந்த இரு அணிகளும் விளையாடுவதைப் பார்த்து, ரசித்து மகிழ்கிறான் ஒரு பார்வையாளன். பார்வையாளன் இறைவன் என்பதால் அந்த மகிழ்ச்சிக்கு பெயர் லீலாரஸம்.
இரு அணிகள் சேர்ந்து விளையாடும் சமயத்தில் அதைப் பார்த்து சந்தோஷப்படும் நேரத்தில் அந்த சந்தோஷத்தைத் தருவதற்கு காரணமாக இருப்பது இரு அணிகள் சேர்ந்து விளையாடும்போது ஒரு அணி அடையும் வெற்றி, இன்னொரு அணி பெறும் தோல்வியாகும்.
இந்த வெற்றி, தோல்விகளைப் பார்த்து பார்வையாளரான இறைவன் சந்தோஷம் அடைகிறான்.
இறைவனுக்கும் போக விபூதி, லீலாவிபூதி உண்டு. போகத்துக்காக வைகுண்ட லோகம். லீலாரஸத்துக்காக இந்த பூலோகம்.
இரண்டு லோகங்களை ஏற்படுத்தி, அவற்றின் மூலமாகப் போகரஸம், லீலாரஸம் ஆனந்தங்களை அனுபவிக்கிறான்.
நாம் எல்லாரும் இறைவனின் லீலாரஸத்துக்கு கருவியாக இவ்வுலகில் பிறந்து இருக்கிறோம். அதாவது நம்மை வைத்துக்கொண்டு லீலாரஸத்தை இறைவன் அநுபவிக்கிறான்.
விளையாடுகிறவனுக்கு எப்படிப் பந்து லீலாரஸத்துக்குக் கருவியாக ஆகிறதோ, அப்படியே நாமும் இருக்கிறோம்.
எப்படிப் பந்து அடிக்கப்பட்டபொழுது பவுண்டரியாகவோ சிக்ஸராகவோ செல்லுகிறதோ, அதுபோல நாமும் செய்த நமது புண்ணிய, பாவங்களுக்கு ஏற்ப நரகத்திலும் பூலோகத்திலும் சொர்க்கத்திலும் இறைவனால் தள்ளப் பட்டுப் போகிறோம்,
பிறந்த மனிதர்களாகிய நாம் நல்லது, கெட்டது இவற்றில் எதைச் செய்தாலும் அது இறைவனின் லீலாரஸத்துக்கு கருவியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விளையாட்டில் வெற்றி, தோல்வி இருந்தால் தானே அந்த விளையாட்டில் சுவாரஸ்யம் இருக்கும்.
இறைவனை சந்தோஷப் படுத்த பொம்மைகளாக இருக்கும் நாம் கெட்ட காரியங்களைச் செய்தால் அதனால் இறைவன் கோபம் கொண்டு நரகத்தில் தள்ளுகிறான். அதன் மூலம் நமக்கு நரக வேதனை ஏற்படும். நாம் அனுபவிக்கும் கஷ்டத்தைப் பார்த்தும் இறைவன் லீலாரஸத்தை அடைகிறான்.
நற்காரியங்களைச் செய்யும்போது நமக்கு சொர்க்கத்தைக் கொடுக்கிறான். அதைப் பார்த்தும் லீலாரஸத்தை அனுபவிக்கிறான். ஆகையால் இவ்விரு வகையாலும் அவனுக்கு நாம் லீலோபகரணமாக ஆன போதிலும், நமக்கு இன்பம், துன்பம் வருகிறதே!
இதற்கு நாம் என்ன செய்வது? நரகத்திற்கு நம்மை இழுத்துச் செல்லக்கூடிய எவ்வகை தீய செயல்களையும் மனம், வாக்கு, காயத்தால் செய்யாது இருக்க வேண்டும். அடுத்து, என்னென்ன நற்காரியங்கள் செய்தால் புண்ணியம் கிட்டுமோ அந்தக் காரியங்களை சாஸ்திரப்படி செய்ய வேண்டும்.
அப்படி வாழ்ந்தால் நம் வாழ்க்கை இறைவனுக்கும், நமக்கும் எப்பிறவியிலும் நீடித்த இன்பத்தையே தரும்.
தேவராஜன்.
***

உலகம் நலம் பெற வேண்டும்! 19 (16.1.2012)
எல்லாம் அவன் செயல் என்ற உறுதியான நம்பிக்கையில் பக்தி செய்ய வேண்டும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற மன பக்குவ வேண்டும். அப்படிச் செயல்படுவதுதான் பக்தி.
இப்படிபட்ட பக்தியை எப்படி செய்வது? வீட்டில் பூஜை , விரதம், மவுன விரதம் மேற்கொள்ளலாம். அமைதியாக நாமஜெபம், குழுவாய் சேர்ந்து நாம ஸங்கீர்த்தனம் பண்ணலாம். தியானம் செய்யலாம். இப்படி தினமும் பக்தி செய்து வந்தோமானால், நம் மனம் அங்கும் இங்கும் அலைபாயாமல் ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும். அப்படி ஒரு மனக்கட்டுப்பாடு ஏற்பட்டு விட்டால், " இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!' என்று மாணிக்க வாசகர் கூற்றுபடி இறைவன் நினைவு நம் நெஞ்சை விட்டு அகலாமல் இருக்கும். இதே பக்குவம் நீடித்து வந்தால் நாம் வேறு, இறைவன் வேறு என்ற எண்ணம் எழாது.
அடுத்து, பக்தியோடு கடமையை செய்வது மிக உத்தமம். கீதையில் கண்ணன் சொன்னது போல் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ய வேண்டும். அப்படி செய்யப்படும் கடமை ஒரு குறிக்கோளை கொண்டிருக்க வேண்டும்.
இன்னது செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு, சுயநலம் இல்லாது இருக்க வேண்டும்.

"லோகா: ஸமஸ்தா: ஸுகினோ பவந்து'

உலகில் எல்லோரும் சுகமாக இருக்க வேண்டும் என்பது இதன் பொருள். " எல்லோரும் இன்புற்றிருக்க அல்லால் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே!' என்பார் தாயுமானவர்.
உலகின் எல்லோர் சுகத்தையும் நலனையும் முன்னிட்டுச் செய்யும் ஒரு காரியம், செய்யப்படுபவருக்கு எந்த தீங்கையும் தராது. அந்த காரியத்தால் எந்த பாவ, புண்ணியமும் சேராது.
பாவ, புண்ணியம் சேராமல் பல காரியங்கள் செய்து கொண்டிருந்தால், பிறவிக்கு பிறப்பு, இறப்பு என்ற நிலை மாறி மாறி வந்துக்கொண்டிருக்காது.
உலகம் தான் இறைவன். இறைவன் தான் உலகம் என்பதை விநாயகர் மூலம் திருவிளையாடல் புரிந்து உணர்த்திருக்கிறார் ஈசன்.
உலகம் நலமாக இருந்தால் இறைவனும் நலமாக இருக்கிறான் என்று பொருள். நாமும் நலமாக இருக்கிறோம் என்பது உள்ளார்ந்த அர்த்தம்.
உலகம், உயிர், இறைவன் இந்த நேர்க்கோட்டுப் புள்ளிகள் அன்பு என்ற ஈர்ப்பு சக்தியால் உருவாக்கப்பட்டுள்ளன.
இறைவனிடம் காட்டும் அன்பு தான் "பக்தி" ஆகிறது. சக மனதர்களிடம் காட்டும் அன்பு மனித நேயமாகிறது. இந்த இரண்டிலும் சுயநலம் இல்லாமல், நான் என்ற அகந்தை இல்லாமல், நம்மை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு அவனே நம் வாழ்வின் சூத்திரக்காரி என்ற அனுபவத்தை பெறுவதுதான் ஞானம்.
இதை எல்லாம் எப்படி நம்புவது? என்று அறிவுபூர்வமாக யோசித்தால் அதற்கு நித்திய சாட்சியாக இருப்பவை முன்னோர்கள் அவர்கள் ஸமாதி நிலையிலிருந்து உணர்ந்ததை நமக்குத் தந்திருக்கிறார்கள். அவை
வேதாந்தம், உபநிஷத், புராணம், இதிஹாசம் போன்ற கிரந்தங்கள். அவைகளுக்கு விளக்கம் தந்து பாஷ்யங்களாக அமைத்துத் தந்துள்ளார்கள் வியாசர், ஆதி சங்கரர், மத்வாசாரியார்முதலிய ஆசார்யர்கள். இவர்கள் எடுத்துச் சொன்னதை நாம் படித்தறிந்து, அதன்படி வாழ்க்கையை அமைக்க வேண்டியது நமக்கு மட்டுமல்ல, நம்மை படைத்த இறைவனுக்கும் பூர்ண ஆனந்தத்தை தரும்.
தேவராஜன்.
***

சாஸ்திரபடி வாழலாம்! 20 ( 23.1.2012)
எல்லா உயிர்களுக்கும் தாயை போன்றவன் இறைவன். தாயிடம் பிள்ளைகள் பாசமாக இருப்பது இயல்பு. அந்த இயற்கையான உணர்வு நமக்கிருக்கிறதா என்பதை நாம் நம்மை விசாரிப்பது தான் பக்தியின் வெளிபாடு.
இறைவனை வணங்கவும், இறையுணர்வு பெறவும் மனிதப் பிறவியினால் மட்டுமே முடியும்.
மனித உருவம் எடுத்தவர்கள் எல்லாம் மனிதர்கள் அல்ல. வள்ளுவர் கூட மாக்கள் என்று கோபம் கொண்டதுண்டு. மனிதனாக பிறப்பவர்கள் அநேகம். மனிதனாக வாழ்ந்து, மனிதனாக இறப்பது என்பது சிலரே!
அப்படி என்றால், ஒரு மனிதன், மனிதன் என்று சொல்லும்படி எப்படி வாழ்வது?
அதற்கு வழிகாட்டுகிறார் குருமார்கள், யோகியர்கள், சமய சான்றோர்கள். அவர்கள் எல்லாம் நமக்கு சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதை நமக்கு எடுத்துக்கூறுகிறார்கள்.
சாஸ்திரங்களில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று பல வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன.
சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள சின்ன சின்ன விஷயங்களில் கூட ஆழமான பொருள் நிறைந்திருக்கும். அவை எல்லாம் நமக்கு நன்மைகள் தரக்கூடிய வழிகளைக் காட்டும்.

ஒருவரின் தினசரி வாழ்க்கை தொடங்குவது காலை வேளை. அந்த தொடக்கத்தை நல்லவிதமாக தொடங்க, சூரிய உதயத்திற்கு முன்பாக கண் விழிக்க வேண்டும். அப்படி விழித்ததும் முதலில் மங்கல கரமான பொருட்களை பார்க்கவேண்டும். அல்லது கண் விழித்தவுடன் உள்ளங்கையை பார்க்கலாம்.
அடுத்து காலைக்கடன்கள் செய்ய வேண்டும். பல் துலக்க வேண்டும். நாக்கு வழிக்காமல் இருந்தால் அது சுத்தக்குறைவு என்கிறது சாஸ்திரம்.
நன்றாக குளிக்கணும்.
குளிக்கும் போது கங்கா, யமுனை, சரஸ்வதி, காவேரி போன்ற புனித நதிகளை நினைக்க வேண்டும். பிறகு, இறைவன் நாமங்களை சொல்லிக் கொண்டே குளிக்கவேண்டும்.

குளித்து முடித்து சுத்தமான ஆடை உடுத்தி, நெற்றியில் திருநீறு, குங்குமம், நாமம், சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்ளலாம்.
உணவு உண்ணும் போது இறைவன் நாமங்களை நினைத்துக் கொண்டு இறைவன் அளித்த பிரசாதமாக நினைத்து உண்ணவேண்டும்.

கொலை, களவு, கள், காமம், பொய் சொல்லுதல் போன்றவற்றை பஞ்சமா பாதகம் என சாஸ்திரம் கூறுகிறது. அவற்றை எல்லாம் செய்யாதிருத்தல் வேண்டும்.

செய்யும் பணியில் நேர்மை, திறமை, சேவை, முழுமையாக இருக்க வேண்டும். செய்யும் பணி வழிபாட்டுக்குச் சமம் என சாஸ்திரம் கூறுகிறது.
உழைப்பில்லாத செல்வம் பாவம். குறுக்கு வழியில், ஏமாற்றுதல், பிறரை வஞ்சித்து சேர்க்கும் செல்வத்தால் அவர்களது குடும்பமே நலிந்து போய்விடும் என சாஸ்திரம் எச்சரித்துள்ளது.
மாலையில் பெண்கள் வீட்டில் நல்விளக்கேற்றி வைத்து, நமஸ்காரம் செய்யவேண்டும். விளக்கு ஏற்றுவதால் மகாலட்சுமியின் அருள் இல்லம் முழுவதும் நிறையும்.
மாலையில் இறைவனது திருப்பாடல்களை தனியாகவோ, கூட்டாகவோ பாடினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
இப்பிறவியிலேயே, நாம் சாஸ்திரங்களில் கூறுபட்டுள்ளப்படி வாழ்ந்தால் பிறவி பயன் எய்தலாம்.
தேவராஜன்.
***



அஹம் பிரம்மாஸ்மி! 21 (29.1.2012)
இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது. எல்லா உயிரினங்களும் கடவுளாலேயே படைக்கப்பட்டுள்ளன. எல்லா உயிர்களும் கடவுளாகவே இருக்கின்றன.
இத்தகைய அனுபவத்தைப் பெற்று வாழ்வதுதான் மனிதப்பிறவியின் அர்த்தம்.
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்ற தத்துவத்தை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளுக்கு நீங்கள் மனதளவில் நெருக்கமாக, உண்மையாக இருக்கும் வரையில் உங்களுக்குத் எந்தத்தொல்லையும் இல்லை. நம்மை படைத்தவனை அலட்சியப்படுத்தியோ, மறந்தோ வழிமாறும் போதுதான் நம் வீட்டு வாசல்படியில் அழையா விருந்தாளியாக துயரங்கள் வந்து குடித்தனம் நடத்துகின்றன. கடவுள் இல்லா இடங்களில் பாவங்கள் படர்கின்றன.
மனிதர்களை ஏமாற்றுவது போல நீங்கள் கடவுளை ஏமாற்ற முடியாது. அவர் எப்போதும் எங்கேயும் எல்லோரையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் இந்த உலகின் நிரந்தர சாட்சி!
கடவும் உன்னிடம், என்னிடம், எவரிடமும் இருக்கிறார்.
நீங்கள் எதுபெற்றாலும் அது கடவுளிடத்தில் இருந்துதான் பெற்றிருக்க முடியும்.
உங்களுடையது என்று எதையும் சொந்தம் கொண்டாடுவது, நான்
அது செய்தேன், இது செய்தேன் என்று மமதையில் தம்பட்டம் அடிப்பது எல்லாம் முட்டாள் தனம்.
எதையும் கடவுளே செய்கிறான்; தருகிறான். நான் வெறும் கருவி மட்டுமே என்று நினைக்க வேண்டும்.
கடவுளே செய்கின்றான். அதன் பலனையும் அவனே அனுபவிக்கின்றான். இங்கு எல்லாமே கடவுளின் ஆட்சி. அது நிரந்தரமான ஆட்சி! நமக்கு எது நடந்தாலும், அது லாபமோ, நஷ்டமோ, துன்பமோ, மகிழ்ச்சியோ எதுவாக இருந்தாலும், இறுதியில் நன்மையையே தரும் என்ற உறுதியான நம்பிக்கையை கொள்வோம்.
இத்ததைய அனுபவம் தான் ஞானம். இந்த ஞானத்தை வீட்டிலிருந்தே நாம் பெறலாம்.
நமக்கு ஏற்படம் தடைகளும், துன்பங்களும் கடவுள் நம் உள்ளத்தைத் துõய்மையாக்கத் தேர்ந்தெடுக்கும் வழிகள் என நம்புங்கள்.
இறைவன் என்ன செய்தாலும், அதன் பின்னணியில் ஒரு காரணம் இருக்கும். காரண காரியத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளாமல், சிலர் தங்கள் கஷ்டங்களுக்கு கடவுளைத் துõற்றுகிறார்கள். கடவுள் நமக்கு துணைபுரியவில்லை என்று பிதற்றுகிறார்கள்.
துன்பமோ, இன்பமோ எது வந்தாலும் அதற்குக் காரணம் நாம் செய்யும் செயல்கள் தான் என்பதை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்' சங்க பாடல் வரிக்க ஏற்ப எல்லா இடமும் கடவுள் குடிகொண்டுள்ள தலமாக பாவிப்போம். எல்லோரையும் உறவாக நினைப்போம். நேசிப்போம். அன்பு செய்வோம். ஏனெனில் கடவுள் என்னும் ஒரே ஆத்மா தான் எல்லோருள்ளும் நிறைந்து காணப்படுகிறது.
உங்களை யாராவது வெறுத்தால் நீங்கள் அவரை வெறுக்காதீர்கள். காரணம் என்னவென்றால், சிலநேரங்களில் கடவுள் நடத்தும் திருவிளையாட்டுகள் அனேகம் உண்டு. கடவுளே அடிப்பார். அவரே அடிபடவும் செய்வாõர்.
இந்த விளையாட்டைப் புரிந்து கொண்டால் போதும் நாம் எப்போதும் கடவுளின் அரவணைப்பில் சுகித்திருக்கலாம்.
தேவராஜன்.


கழுதையிடம் கற்ற ஞானம்! 22 (5.2.2012)

எந்த மனிதன் மனதுக்குள் துயரமில்லை சொல்லுங்கள்? அவரவருக்கு சொல்லிக் கொள்ள துன்பங்கள் உண்டு; காயங்கள் உண்டு. தனக்கு மட்டுமே கஷ்டம், துன்பம் என்று அலறுவதும், என்ன இந்த வாழ்க்கை என்று நொடிந்து போவதும் எதற்காக?
இன்பத்தில் துன்பம்; துன்பத்தில் இன்பம் இது இயற்கை வகுத்த நியதி. கடவுளின் விதி. இதை புரிந்து கொண்டு வாழத்தான் பக்தி ஒரு கருவியாக உதவுகிறது.
நாமோ கருவியை ஆயதமாக்கிகொள்ள ஆசைப்படுகிறோம். அதனால் தான் நம்முடைய பிரார்த்தனைகளில் ஏதோ ஒரு கோரிக்கை இருந்தும் கொண்டும், அது நீண்டு கொண்டும் செல்கிறது.
கடவுள் பஞ்சபூதங்களின் கலவை. இந்த உலகம் பஞ்சபூதங்களின் தொகுப்பு. வாழும் உயிர்களும் பஞ்சபூதங்களால் உருவானவை. பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இயல்புடையவை. அதனால் தான் உலகில் கோடை, வாடை என பருவங்கள் மாறி மாறி வருகின்றன.
எனக்கு வெயில்தான் பிடிக்கும் மழைப்பிடிக்காது என்று அடம்பிடிப்பது பேதமை.
வெயிலை அனுபவிக்கனும். பனியை ரசிக்கனும். மழையையும் ஏற்றுக்கொண்டுதான் வாழனும். அதான் வாழ்க்கை. அதுபோல, வாழ்க்கையிலும் துன்பம், தோல்வி, சந்தோஷம், வெற்றி, அமைதி, நிம்மதி என மாறி மாறி வரும் போது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவம். இந்த அனுபவத்தின் முதிர்ச்சி தான் ஞானம்.
இப்படி வாழ்க்கையில் மாறி மாறி வரும் சூழ்நிலைகளை எதிர்க்கொள்ள மன வலிமையையும், அசராத நம்பிக்கையையும் கொடுக்கும்படி கடவுளிடம் முறையிடலாம். அதைவிட்டு விட்டு எனக்கு துன்பமே வரக்கூடாது. கஷ்டமே ஏற்படக்கூடாது. தோல்வியே காணக்கூடாது என்று கடவுளிடம் கோரிக்கை வைத்தால் கடவுள் என்ன செய்ய முடியும்?
ஒரு சிஷ்யர், " ஞானம் என்பது என்ன? அது எப்படி இருக்கும்? அதை எப்படி புரிந்துகொள்வது?' என்று தன்னுடைய குருவிடம் கேட்டார்.
இப்படி கேள்வி கேட்ட சிஷ்யரைப் பார்த்து அர்த்தத்தோடு சிரித்த குரு சொன்னார்.
"ஒரு சாலைப்பயணம் என்றால் கூட, மேடு, பள்ளம் என்று இருக்கும். மலைப்பயணம் என்றால் ஏற்றம் இறக்கம் இருக்கும். அதை அனுசரித்துதான் போகணும். வாழ்க்கையிலும்
இன்பத்தில் மகிழ்ச்சி அடையாமலும், துன்பத்தில் சோர்வடையாமலும் இருப்பதுதான் ஞானம்' என்றார் குரு.
சிஷ்யர் விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டார்.
அதற்கு ஞானி அருகில் மேய்ந்து கொண்டிருந்த சலவைத்தொழிலாளியின் கழுதையை காட்டி," இதை காலையிலும் மாலையிலும் பார்த்தால் உனக்கு புரியும்' என்றார்.
குருநாதர் கூறிய படியே சிஷ்யரும் காலையும், மாலையும் கழுதையை கவனித்தார்.
கடைசிவரை சிஷ்யருக்கு ஒன்றும் புரியவில்லை.
குருவிடமே மீண்டும் விளக்கம் கேட்டார்.
குரு அவருக்குப் புரியும்படி, "இந்தக் கழுதைக்கு, காலையில் தன் முதுகில் அழுக்கு மூட்டையை சுமந்து செல்கிறோமே என்ற வருத்தம் இல்லை, மாலையில் சுத்தம் செய்த துணிகளை சுமந்து செல்கிறோமே என்ற மகிழ்ச்சியும் இல்லை. இதை பார்த்து தான் நான் அத்தகைய ஞானம் பெற்றேன் என்றார்.
துன்பத்தில் துவளாமலும், இன்பத்தில் இறுமாப்பு கொள்ளாமலும் மனதை இயல்பாக சமநிலையில் வைத்திருப்பதே ஞானம் என்பதை உணர்ந்தார் அந்த சிஷ்யர்.
தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக