புதன், 4 ஜனவரி, 2012

" ஆன்மிக தென்றல்'

*1*சரணாகதி! 3.09.2011

( தினமலர் பெண்கள் மலரில் 3.9.2011 இருந்து 7.01.2012 வரை " ஆன்மிக தென்றல்' என்ற தலைப்பில் நான் எழுதிய தொடர் கட்டுரையின் தொகுப்பு.)

எல்லாரும் தான் கடவுளை வணங்குகிறோம். பிரார்த்தனை செய்கிறோம். எல்லாருடைய வேண்டுதல்களும் நிறைவேறிவிடுகிறதா, என்ன? அப்படி என்றால் மனிதர்களைப்போலவே கடவுளும் அருள்வதில் உயர்வு, தாழ்வு, பேதம் பார்க்கிறாரா, என்ன?
எதில் ஒருவருக்கு முழுமையாக நம்பிக்கை இல்லையோ, அதில் சந்தேகம் எழுவது இயல்பு.
கடவுள் ஓரவஞ்சனை செய்யக்கூடியவரா? இல்லை என்றால், எல்லாருடைய வேண்டுதல்களும், கோரிக்கைகளும் பலித்துவிடவேண்டுமே! ஏன் அப்படி இல்லை என்று ஒரு சாதாரண பக்தனுக்கு சந்தேகம் வருவது நியாயம் தான்!
இந்த சந்தேகத்தின் அடிப்படையாக இருப்பது இரண்டு. ஒன்று கடவுள். இன்னொன்று பக்தன். இந்த இரண்டில் ஏதோ ஒன்றில் தான் பிரச்னை இருக்கிறது.
கடவுள் பரிபூர்ணமானவர். அவரிடத்தில் குறை, கறை எல்லாம் ஒருபோதும் இருப்பதில்லை. பக்தனிடத்தில் தான் ஏதோ குறை உள்ளது.
அந்தக்குறை என்னவெனில், அவன் எந்தளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறான். பக்தி செய்கிறான் என்பதை பொறுத்தே இருக்கிறது.
ஒருவன் தான் பக்திமான் என்பது எல்லாருக்கும் தெரிய வேண்டும். தன் பக்தியை பிறர் மெச்ச வேண்டும் என்பது அவன் விருப்பம். அதற்காக, தினமும் கோயிலுக்குச் செல்கிறான். அர்ச்சனை செய்கிறான். மந்திரம் ஜெபிக்கிறான். நெற்றி நிறைய விபூதி பூசிக்கொள்கிறான்.
இன்னொருவன் வேலை பலுகாரணமாக கோயிலுக்குச் செல்ல முடிவதில்லை. காலையில் எழுந்ததும் கடவுளை நினைத்துக் கொள்கிறான். வீட்டிலேயே நல்விளக்கேற்றி சிறிது நேரம் மனஒறுமையுடன் பிரார்த்தனை செய்கிறான். வேலைக்குச் செல்கிறான். மாலை தியானம் செய்கிறான். தன் பக்தி பற்றிய பிறர் விமர்னங்கள் பற்றிய சிந்தனை இல்லாமல் இருக்கிறான்.
இந்த இருவரும் செய்வது பக்தி தான்!
இந்த இருவரில் யாருக்கு கடவுள் உடனே அருள்புரிவார்?
முதலாம் நபருக்குத்தான் என்று சட்டென்று பதில் தருவோம்.
நானோ, இல்லை இரண்டாம் நபருக்குத்தான் கடவுள் உடனே அருள்புரிவார் என்கிறேன்.
அது எப்படி சாத்தியம்?
உதாரணம். நல்ல பாரதக்கதையில் ஒரு நிகழ்ச்சி.
துரியோதனனிடம் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்கள் ராஜ்யத்தைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களை வனவாசத்திற்கு அனுப்பினான் துரியோதனன்.
பாண்டவர்கள்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் பத்து ஆண்டு வனவாசத்தை ஏற்கிறார்கள்.
காட்டில் வசிக்கையில் குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தினமும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபெறுவதில்லை.
ஒருநாள் " நீ மிகப்பெரிய பலசாலிதான். இருந்தாலும், பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணம் இல்லாமல் இருக்கிறாயே! உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று?' என்று கோபித்தார் தருமர். இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து, பிரார்த்தனையில் கலந்து கொள்வான் பீமன் என்று நினைத்தார் தருமர்.
பீமன் மாறவே இல்லை. வழக்கம் போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுந்தான்.
ஒருநாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, நகுலனை கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தனர். நகுலன் திரும்பி வந்து, "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்.' என்றான்.
"நீங்கள் எல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணர் வரமாட்டார் நான் போய் அழைத்து வருகிறேன் என்று நம்பிக்கையுடன் சென்று, கிருஷ்ணரை விருந்துக்கு வருமாறு அழைத்தான். அர்ஜூனன். அதற்கு கிருஷ்ணர், " என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே' என்றார். ஏமாற்றத்துடன் திரும்பினான் அர்ஜூனன். எல்லாரும் கவலையாக இருந்தனர்.
வழக்கம் போல தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த பீமன், " ஏன் எல்லாரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?' என்று கேட்டான். அப்பொழுது தருமர் " ஒற்றும் இல்லை. கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம். அவர் வேறு வேலை இருப்பதாக கூறி விட்டார்' என்றார்.
இதைக் கேட்ட பீமன், "ப்பூ... இவ்வளவுதானா நான் போய் அழைக்கிறேன்' என்றான்.
"நாங்கள் எல்லாம் அழைத்தும், வரமுடியாத கிருஷ்ணர் நீ கூப்பிட்டதும் வந்துவிடுவாரா?' என்று அர்ஜூனன் கேலி செய்தான்.
பீமன் தனது கதையை துõக்கிக்கொண்டு புறப்பட்டான். " பாஞ்சாலி நீ விருந்து தயார் செய். கிருஷ்ணருக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை. என்று கூறி சென்றான்.
காட்டில் சிறிது சென்றவன் தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான். "கிருஷ்ணா நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்.' என்று கத்தினான்.
உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்தார். பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார்.
பீமனோடு கிருஷ்ணர் வருவதை கண்டு, கேலி செய்தவர்கள் தலை குனிந்தனர்.
பீமனின் பக்திதான் சிறந்தது. அவன் தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் கிருஷ்ணனுக்காக உயிரையும் விட சித்தமாக இருந்தான். இந்த சரணாகதி பக்தியே வேண்டியதை வெல்லும்!
தேவராஜன்.


*2* சுயமாய் இரு! சுகமாய் இருக்கலாம்! 10.9.2011

குழந்தை, ஞானி இவர்களைத்தவிர, யாரும் சுகமாய் இருப்பதில்லை. அவரவர்களுக்கு வித விதமான கவலை, சோகம்...
ஏன் இப்படி?
சிலர் வாழ, சிலர் வாட பேதம் பிரித்தா இறைவன் மனிதனை படைத்தான்?
களி மண் ஒன்றுதான். அது பிடிக்கப்படும் மனிதனின் எண்ணம், ஆசை, கற்பனைகளுக்கு ஏற்ப மாறுபடுவது போல, மனிதனின் வாழ்க்கையும் அவன் மனதில் நிரப்பப்படும் சிந்தனைகளுக்கு ஏற்ப, அமைந்து விடுகிறது.
சுய அறிவு, சுயதேடல், சுய அனுபவம் இவற்றின் மூலம் உண்மை தன்மையை இயல்பாய் பெற்றால் யாரும் சுகமாய் இருக்கலாம்!
இந்த உண்மையை உணருவது தனிமனித ஆன்மிக தேடல்.
நம்மில் பலர் ஒப்பீடு கலாசார வாழ்க்கை பாதையில் நடந்து செல்வதால் சிலர் வழுக்கி விழுந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
ஏற்கெனவே போதிக்கப்பட்ட, நிலை நிறுத்தப்பட்ட எண்ணங்களில் நம்மை திணித்துகொள்வதும், பிறர் சென்ற வழி என்பது எல்லாம் பொருளாதார வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கலாம். ஆனால் சுகமாய் வாழ்வதற்கு அவை பொருந்தாது.
நம் வாழ்வில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம் எல்லாம் காரணம் நமது மனம். அந்த மனதில் நிரப்பப்பட்ட எண்ணங்கள் அடிப்படையில் இரவல் வாங்கப்பட்டவையாக இருக்கின்றன. சுகம் துக்கம், போட்டி, பொறாமையாக தோன்றுபவை நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட அல்லது பாரம்பரியமாக நம் மனம் பழக்கப்படுத்தப்பட்ட மேல் பூச்சுகளால் வந்த தொல்லையால் தான் அது! தன்னை உணரும் தேடலின்றி புறவயமான நோக்கில் சுகமும் துக்கமுமாய், பெருமையும், சிறுமையுமாய் விழுந்தும், எழுந்தும் அலை பாய்ந்து ஒரு ஊடாடும் வெறுமையாய் இருக்கிறது மனித வாழ்க்கை.
அந்த கடவுளை வழிபட்டால் கோரிக்கை நிறைவேறும். இந்த கடவுளை நம்பினால் போதும் பிரச்னை தீரும். அவர் அந்த வழிபாட்டு முறையில் அந்த கடவுளை வழிபட்டு சுகமாய் இருக்கிறாரே, நாமும் அவர் நம்பும் கடவுளையே வணங்கி சீக்கிரமே நம் பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளலாம் என்று, போகாத கோயில் இல்லை; வணங்காத தெய்வமும் இல்லை என்றாகி விடுகிறது சிலருக்கு.
நம் சுய விருப்பம், அறிவு, தேடலை பிறரின் கருத்துகளில், சிந்தனைகளில் அடமானம் வைத்துவிட்டு, வாழ்க்கையில் சுகம் களவாடப்பட்டது என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
ஒரு சின்ன உதாரணம்.
அவன்
"பிறப்பில் கண் பார்வை இல்லாமற் போன ஒரு மாற்றுத்திறனாளி. அவன் வசிக்கும் ஊரில் பாதைகளைப் பழகி இருப்பதாலும், தாம் நிறைய நடமாடிய அனுபவத்தில் அந்த பாதைகளில் ஒரு குச்சியின் உதவியுடன் நடப்பான்.
தன் அனுபவத்தில் அவன் நடந்தவரை தொல்லை ஏதுமில்லை. ஒரு நாள் எப்போதும் வந்து, செல்லும் தெரு வழியே அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு வீட்டிலிருந்து "தம்பி நில்லப்பா' என்ற ஒரு பெரியவர்,
""இந்த இருட்டில் எப்படி நடக்கிறாய்?'' என்று கேட்டார்.
""ஐயா, நீங்கள் சொல்லித்தான் எனக்கு இப்போது இருட்டு என்பதே தெரியும். கண்பார்வை அற்ற நான் பழக்கத்தில் அடிப்படையில் நடந்து சென்று வருகிறேன்.'' என்றான் அந்த இளைஞன்.
"" உன் அனுபவம் சில நேரம் காலை இடறிவிடுமப்பா. இந்த விளக்கை கையில் கையில் எடுத்துச் சென்றால், எதிரே வருபவர் ஒதுங்கிச் செல்ல ஏதுவாக இருக்கும்.'' என்றார் பெரியவர்.
" வேண்டாம். குச்சியை ஒரு கையிலும், விளக்கை மறு கையிலும் கொண்டு செல்வது சிரமம்'' என்றான்.
"" பகலில் வெளிச்சம் இருக்கும் போது குச்சி மட்டும் போதலாம். ஆனால், இது இரவு நேரம். இப்போது விளக்கு அவசியம்.'' என்றார்.
அந்த இளைஞனும் வேறுவழியின்றி பெரியவரிடமிருந்து அந்த விளக்கை வாங்கிகொண்டு, மறு கையில் குச்சியையும் சரியாக ஊன்ற முடியாமல் அந்த இளைஞன் தடுமாறிச் சென்றான்.
அப்படிச் செல்லும் போது, வழியில் ஒருவர் அவர் மீது மோதினார்.
"" என் கையில் விளக்கு இருக்கிறதே. நீங்கள் கவனிக்க வில்லையா?'' என்று கேட்டான் இளைஞன்.
""விளக்கா அது எண்ணை தீர்ந்து அணைந்தது கூடத் தெரியாமல் நீ நடக்கிறாயா? நீ இதை ஏற்றும் போது கவனம் கொண்டிருந்தால் நீண்ட நேரம் வந்திருக்குமே'' என்றார் அந்த வழிபோக்கர்.
""ஐயா, இது என்னுடையது இல்லை. இரவல் விளக்கு'' என்ற இளைஞனிடம்,
""இரவலா? அதான் துன்பப்படுகிறாய்!'' என்றார் அந்த வழிபோக்கர்.
அந்த இளைஞர் சுயமாய் தன் அனுபவத்தில் நடந்த வரை பயமில்லை; குழப்பம் இல்லை. அந்தப் பெரியவர் தந்த இரவல் விளக்கு வந்தப்பிறகு தான் வந்தது தொல்லை.
தேவராஜன்.

பாக்ஸ் மேட்டர்

எல்லாம் துறந்துவிட்டதாக நினைத்த பட்டினத்தார் குளக்கரை பக்கம் கற்களைப் போட்டு அதில் தலைவைத்து படுத்திருந்தார். அதைப்பார்த்த ஒரு பெண், "இங்கே பார்டி, இந்த சாமியார் எல்லாத்தையும் துறந்த துறவியாம்! பார்! கல்படுக்கையில் சுகமாய் படுத்திருப்பதை' என்றாள்.
உடனே பட்டினத்தார் விருட்டென்று எழுந்து கல்லைத் துõக்கி எறிந்து விட்டு, ஒரு துண்டை உதறி தரையில் போட்டு படுத்தார்.
திரும்பி வருகையில் அதே பெண், "அடியே பாரேன். இந்தச் சாமியார் இன்னுமும் விரிப்பதற்கு ஒரு துண்டு வேண்டியிருக்கே' என்றாள். சரேலென அதையும் துõக்கி எறிந்தார் பட்டினத்தார்.
உடனே அந்தப் பெண் சிரித்துக்கொண்டே, "" இவர் என்ன சாமியார்? போற வர பொண்ணுங்க பேச்சை எல்லாம் கேக்குறாரே! இவரு என்னத்த ஞானம் பெற்றார்?'' என்றாள்.
இந்த சம்பவம் பட்டினத்தாரின் சுய அறிவுச் சுடர் துõண்டப்படல சிவஞான மெய்தினார் என்பார்கள்.



*3* எப்படியும் வாழ்வது வாழ்வல்ல! 17.9.11


மிகுந்த புண்ணியங்களை செய்ததால்தான், இந்த மனிதப்பிறவி கிடைத்துள்ளது. மானிடப் பிறவி கிடைத்தும், எவர் இறை சிந்தனை இல்லாமல் இருக்கிறார்களோ, பிறவி நோக்கம் புரியாமல் இருக்கிறார்களோ அவர்கள் மனிதர்களாக பிறந்ததில் அர்த்தமில்லை. பறவையாகவோ விலங்குகளாகவோ பிறந்திருக்கலாம்.
ஏனெனில், மனிதர்களுக்குத்தான் சாஸ்திர, சம்பிரதாயங்கள் , பாவம் புண்ணியம், செய்யத்தகுந்தவை, செய்யத்தகாதவை என்றெல்லாம் உள்ளது. விலங்குகளுக்கு இதெல்லாம் கிடையாது. அதனால், சாஸ்திர, சம்பிரதாயங்களை அனுசரித்து நடப்பது தான் மனிதனின் வாழ்க்கைக் கடமை.
வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலம் தான். இந்த குறுகிய வாழ்நாளில் எப்படி வாழ்ந்தால் நல்லது, எப்படி வாழவேண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. மனிதன் நேர்மையான வழியில் தேவையான அளவு சம்பாதித்து, குடும்பத்தையும் ஆதரித்து, தான, தர்மங்கள் செய்து,இறைவனை நினைத்தபடி இந்த வாழ்நாளை நிம்மதியுடன் கழிக்க வேண்டும்.
வளரும் தலைமுறையினர் சத்தியத்தின் சக்தி , ஒழுக்கத்தின் மேன்மை, எளிமையின் இனிமை, தான, தர்மத்தில் திருப்தி, இறைவழிபாட்டின் ஆனந்தம் பற்றிய எவ்வித அபிப்ராயமும் இல்லாமல் இருக்கிறார்கள். தர்ம சாஸ்திரத்திற்கு புறம்பாக செய்யப்படும் எந்தச் செயலும் பாவம் என்று எண்ணும் மனோபாவம் இல்லாமல் இருக்கிறார்கள்.
கடவுள் பிரார்த்தனைக்கூட தன்னுடைய கோரிக்கைகள் வைப்பதற்கு என்றே கடைபிடிக்கிறார்கள்.
ஏன் இப்படி இருக்கிறார்கள்?
அவர்களுடைய பெற்றோர் பணம், பொருள் ஆகியவற்றின் மீது தீராத ஆசை கொண்டிருக்கிறார்கள். நிறையை சம்பாதிக்க வேண்டும். சேர்த்துவைக்க வேண்டும். இதற்காக ஓய்வில்லாமல் ஓடித்திரிவதும், கவலைப்படுவதும் என காலம் கழிகிறார்கள். சம்பாதித்தது போதும்; சேர்த்து வைத்தது போதும் என்று எத்தனை பேர் சொல்கிறோம்? பணம் சேர சேர ஆனந்தம்.
பொருள் சேர்ப்பதில் தவறில்லைதான். அதை எப்படி சேர்க்கவேண்டும் என்பதில் நியதிகள் இருப்பதை பின்பற்ற வேண்டும்.
சென்னையில் வசிக்க ஓர் இடம் வாங்க வேண்டும் என்று ஆசைபடுவதில் நியாயம் உண்டு. ஆசைக்காக சென்னையையே வாங்க வேண்டும் என்பது பேராசை!
பிள்ளைகளுக்காக பொருள் சேர்க்கும் ஆசாபாசத்தில் தங்கள் சுகத்தை இழப்பவர்கள் எத்தனை பேர். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பொருள் மட்டுமே போதும் என்று கருதிவிடும் பெற்றோர்களை என்னவென்று சொல்வது?
நம் குடும்ப பாரம்பரியம், அண்டை அயலாரிடத்து அன்பு, அண்டி பிழைக்கும் பிராணிகளிடம் இரக்கம், மத சடங்குகள், சாஸ்திர சம்பிரதாயங்களைக் கட்டிக்காக்கும் பொறுப்பை அவர்கள் சுமக்க சொல்லாமல் மேலும் பொருள் ஈட்ட வகை செய்யும் ஏட்டுக்கல்வியைத்தான் அவர்களை பொதியாய் சுமக்கவைத்து அழகு பார்க்கிறோம்.
இப்படி பெற்றோர் இருந்தால், அவர்கள் வாரிசு எப்படி இருப்பார்கள்?
தன் முயற்சியால், கடும்உழைப்பால் தேடிய செல்வங்களை தனக்கென்று போதுமான அளவு வைத்து கொண்டு, தான் இருக்கும் போதே தேவை உள்ளவர்களுக்கு கொடுத்தால் அவர்களும் பயன்பெற்று சந்தோஷப்படுவர். தனக்கும் ஒரு திருப்தி , மகிழ்ச்சி கிடைக்கும். " நிறைய சம்பாதித்தான் எல்லாருக்கும் கொடுத்தான் புண்ணியவான் அவனுக்கு நல்லகதி கிடைக்கட்டும்!' என்று உற்றாரும் சுற்றாரும் நண்பர்களும் சொல்லும்படி வாழ்ந்து விட்டுபோவமே! இது நம் வாரிசுகளுக்கும் ஒருபாடமாக அமையட்டுமே!
பணம் படைத்தவன் ஏழ்மை நிலையில் உள்ள சுற்றதாருக்கு உதவி செய்யாவிடில் அது பெரும் பாவம் என்கிறது தர்ம சாஸ்திரம்.
இதை நாம் வாழும் முறையில்தான் நம் பிள்ளைகளுக்கு புரியவைக்க வேண்டும்.
ஓஹோ என்று தர்மம் செய்ய முடியாவிட்டாலும் கூட, ஓரளவு தானம் செய்ய இயலாமல் போனாலும் கூட குறைந்த பட்சம் காலையில் உண்ணும் உணவில் ஒருபிடி சோறு காக்கைக்கு வைக்கும் தர்ம சிந்தனை அவர்கள் மனதில் விதைப்போம்.
ஸ்ரீ குரு தஷண் சுவாமிஜி

பாக்ஸ் மேட்டர்:
ஒரு நாத்திகரும், ஆத்திகரும் நல்ல நண்பர்கள். நாத்திகர் பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை என்ற கருத்துடையவர். ஆத்திகர் அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை என்ற கொள்கை உடையவர்.
இருவரும் சேர்ந்து தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வர்.
நாத்திகர் கையில் தனது செல்ல நாய் குட்டியை பிடித்தபடி வருவது வழக்கம்.
ஆத்திகர் நடைபயிற்சியின் போது வழியில் இருக்கும் அரச மர விநாயகரை வழிபட்டு விட்டு நடையை தொடர்வார். ஒருசமயம் நாத்திகர் கிண்டலாக," நண்பரே இது என்ன முட்டாள் தனம் . தினமும் இந்த கல்லை வணங்கலாமா? அதற்கு பதில் உயிர் உள்ள இந்த நாய்குட்டியை வணங்கலாமே. இது தான் என் சாமி' என்றார்.
ஆத்திகர் கொஞ்சம்கூட கோபப்படாமல் மாறாக புன்சிரிப்புடன், "நண்பரே உங்கள் நாய் குட்டியை சாமியை என் விநாயகர் சாமி மீதி போடுங்கள். என் சாமியை உங்கள் சாமி மீது போடுகிறேன். எது சக்தி வாய்ந்தது என பின்னர் தெரியும். பிறகு, எந்த சாமியை நாம் நம்பலாம் என்பதை முடிவு செய்யலாம்' என்றார் ஆத்திகர்.
கடவுளை எந்த பொருளிலும் காணலாம். ஆனால் இதில் தான் நீ காணவேண்டும் என சொல்வது அகங்காரத்தின் அதிகாரம்!


*4* எதையும் செய்வார் கடவுள்! 24.9.11

பூ சொரிந்து வழிபட்ட பக்தனுக்கும், கல் எறிந்து வழிபட்ட பக்தனுக்கும் அருள் செய்தவர் இறைவன். வழிபாடு எதுபற்றி வேண்டுமானாலும் இருக்கலாம், வழிபாடு செய்யும் முறை உண்மையாக, உறுதியாக இருக்க வேண்டும்.
உங்களின் அசைக்க முடியாத, உறுதியான பக்திக்காக இறைவன், உங்களுக்காக எதுவேண்டுமானாலும் செய்வான். அதற்கு ஒரு உதாரண கதை:
பண்டரீபுரத்தில் சேனாய் என்ற பக்தன் இருந்தான். அவன் பாண்டுரங்க பெருமாள் மீது அளவில்லா பக்தி கொண்டவன்.
அவனுடைய தொழில் நாவிதம் பார்ப்பது. ஊரில் அவனுக்கு நல்ல பெயர். அதனால் மன்னருக்கு சிகை அலங்காரம் செய்யும் வேலை கிடைத்தது. அரண்மனையில் இருந்து ஓராண்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் அவன் வீட்டுக்கு வந்துவிடும். அதனால் குடும்பத்தில் பிரச்னை இல்லை.
காலையில் மன்னருக்கு சிகை அலங்காரம் செய்துவிட்டு வந்தால், பிறகு எந்த வேலையும் இருக்காது. பிறகு சதாகாலமும் நாமா சொல்லிக்கொண்டிருப்பதும், நாமசங்கீர்த்தனம் செய்வதும், பஜனைக்கு போவதும் என பாண்டுரங்கன் நினைப்பாகவே இருப்பான் சேனாய்.
அந்த ஊரில் இருக்கும் சக நாவிதர்கள் சேனாயைப் பார்த்து பொறாமை கொண்டனர். அரண்மனை உத்தியோகம். சுகபோக வாழ்க்கை. எப்போதும் பஜனை என்று இருக்கிறான். இவனை எப்படியாவது கெடுத்துவிடவேண்டும். என்று கங்கணம் கட்டி திரிந்தனர்.
ஒரு நாள் காலை மன்னருக்கு சிகைஅலங்காரம் செய்ய புறப்பட்டான் சேனாய். வரும் வழியில் பாண்டுரங்கனை போற்றிபாடியபடி பஜனைக்கூட்டம் வந்து கொண்டிருந்தது.
கொஞ்ச நேரம் பஜனையில் இருந்துவிட்டு, அரண்மனைக்கு போகலாம் என்று நினைத்தபடி பஜனைக்கூட்டத்தோடு சேர்ந்து விட்டான் சேனாய் .
கொஞ்சம் கொஞ்சமாக பஜனையில் ஒன்றிவிட்டான். அரண்மனையை மறந்தான்; மன்னரை மறந்தான்; தான் செய்யும் தொழிலை மறந்தான் கடைசியாக தன்னையே மறந்து பாண்டுரங்கன் நினைப்பில் ஒன்றிவிட்டான்.
இதை கவனித்த சக தொழில் போட்டியாளர்கள். "இன்று சேனாய் பஜனையில் ஒன்றிவிட்டான். இனி அவனால் குறித்த நேரத்திற்கு அரண்மனைக்குச் செல்ல முடியாது. அவனை பழிவாங்க இது தான் தருணம்' என்று முடிவு செய்து, அரண்மனையை நோக்கி ஓடினர்.
"மன்னா, உங்களுக்கு சிகை அலங்காரம் செய்ய வராமல், கொஞ்சம் கூட உங்கள் மீது பயமில்லாமல் சேனாய் பஜனை செய்து கொண்டிருக்கிறான். அவன் இப்போதைக்கு அரண்மனைக்கு வரவாய்ப்பில்லை. நான் வேண்டுமானால், இன்று சிகையலங்காரம் செய்துவிடட்டுமா?' என்று கேட்டான்.
"" சேனாய் அப்படி செய்யமாட்டானே! நீ எனக்கு சிகையலங்காரம் செய்ய வேண்டாம். நான் நாளைக்கு சேனாயிடமே செய்து கொள்கிறேன். இப்போதே சென்று சேனாயை உடனே சபைக்கு அழைத்துவா!' என்று மன்னர் கட்டளையிட்டார்.
மன்னர் குளிப்பதற்காக கிணறு பக்கம் போனார். அங்கே, சேனாய் பவ்யமாய் நின்று கொண்டிருந்தான். இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மன்னர், " சேனாய் நீ முன்பே வந்துவிட்டாயா? நீ பஜனை செய்துகொண்டிருப்பதாக உன்னை குறை சொன்னார்களே! சரி, வா சீக்கிரம் சிகை அலங்காரம் செய்துவிடு' என்றார் மன்னர்.
கையில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து மன்னர் தலையில் தெளித்து வலது கையை தலையில் வைத்தான்.
சேனாய் கை பட்டதுமே உச்சந்தலை குளுகுளு என்று குளிர்ந்தது. உடம்பெல்லாம் ஏதோ சொல்லத் தெரியாத கிளர்ச்சி, பேரானந்தமாக இருந்ததை மன்னர் உணர்ந்தார்.
"சேனாய் இன்று என்ன உன் கை பட்டதுமே இப்படி ஒரு சுகம். ம்ம்ம்... கையை அப்படியே தலையில் வைத்துகொண்டே இரு. எனக்கு ஆனந்தமாக இருக்கிறது' என்றார் மன்னர்.
பின்னர், சேனாய் மன்னருக்கு சிகை அலங்காரம் செய்து முடித்தார்.
குனிந்தபடி இருந்த மன்னர் நிமிர்ந்த போது, எதிரே பட்டு பீதம்பரம் உடுத்தி சாட்சாத் அந்த பாண்டுரங்கனே காட்சி தந்தார்.
"பாண்டுரங்கா! நீயா எனக்கு இத்தனை நேரம் சிகை அலங்காரம் செய்தாய்? நீ சேனாய் இல்லையா?' என்று வியந்து, நெடுசாண்கிடையாக பாண்டுரங்கனின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கினான் மன்னர்.
அரண்மனைக்கு சேனாய் இழுத்துவரப்பட்டான்.
"மன்னா, மன்னித்துவிடுங்கள். பாண்டுரங்கன் பஜனையில் என்னை அறியாமல் இருந்து விட்டேன். இந்த ஒருமுறை மன்னியுங்கள்'' என்று கெஞ்சினான் சேனாய்.
"" நீ தான் என்னை மன்னிக்க வேண்டும். உனக்காக, அந்த பாண்டுரங்கனே இங்கு வந்து எனக்கு சிகை அலங்காரம் செய்துவிட்டார். தன் பக்தன் தன் நினைவில் இருப்பதால், அவன் செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டுமே என்று உன் உருவத்தில் பாண்டுரங்கன் எனக்கு எல்லாம் செய்துவிட்டார்! நான் கொடுத்து வைத்தவன். புண்ணி பண்ணியிருக்கேன். அதனால் அந்த பெருமாளின் திருக்காட்சி கிடைத்தது.'' என்று உள்ளம் பூரித்தார் மன்னர்.
பின்னர் நடந்ததை சேனாயிடம் விளக்கினார் மன்னர்.
இதைக்கேட்டு சேனாய், "பாண்டுரங்கா! என்பொருட்டு நீங்கள் எனக்காக நாவிதம் செய்திருக்கிறீகளே! உன் பக்தனை காப்பாற்றதானே இதை செய்தீர்கள்?'' என்று கைகூப்பி பாண்டுரங்கன் இருக்கும் திசை நோக்கி கும்பிடுபோட்டான் சேனாய்.
முழு நம்பிக்கை, ஆர்வத்தோடு கடவுளிடம் பக்தி செய்தால், தன் பக்தனுக்காக கடவுள் எதையும் செய்வார் . நாவிதம் செய்யக்கூட தயங்க மாட்டார் என்பது தெரிகிறதல்லவா?

பாக்ஸ்:
ஒருமுறை உலகத்தைச் சுற்றிவிட்டு திரும்பிய நாரதரிடம், "உலகில் நீ பார்த்த ஆச்சரியமான விஷயம் ஏதாவது உண்டா?' என்று பிரம்மா கேட்டார்.
"உண்டு. எல்லாரும் பாவத்தின் விளைவை எண்ணி பயப்படுகிறார்கள். அப்படி இருந்தும் பாவம் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் புண்ணியத்தின் விளைவை கண்டு அதன் மேல் விருப்பம் கொள்கிறார்கள். ஆனால் புண்ணிய செயல் செய்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். இதுதான் எனக்கு வியப்பாக இருந்தது என்றார் நாரதர்.
ஸ்ரீகுரு தஷண் சுவாமிஜி


*5* வீட்டிலும் சிவ சக்தி 1.10.2011

இந்தியா பெண்களை கவுரவப்படுத்தும் நாடு. இந்து மதம் பெண்களை உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடும்.
வீட்டில் சிறு குழந்தை இருந்தாலும் கூட, வாசலில் யாசகம் கேட்கும் முதியவர் "அம்மா, அன்னமிடு தாயே!' என்றுதான் கேட்பார். இது நம் பாரம்பரியத்தின் சிறப்பு.
அதே சமயம் பெண்களை அடிமைப்படுத்தி, அச்சுறுத்தும் ஆண் வர்க்கத்தை பயமுறுத்தவே, பெண் பாவம் மட்டுமல்ல, அவர்களது கோபமும் பொல்லாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கும்.
எந்த ஒரு வீட்டில் பெண்களுக்கு மதிப்பளிக்கப்படவில்லையோ, அங்குள்ளவர்கள் பல ஜென்மங்கள் எடுத்து, நரகத்தையே அடைவர் என்று புராணங்கள் பயமுறுத்துகின்றன.
அதனால் தான் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், நம் முன்னோர் சில பண்டிகைகளையும், விரதங்களையும் உருவாக்கினர். அதன் மூலம் பெண்களும் ஆன்மிகத்தில் பங்குகொள்ளவும், ஆன்மிக விருபத்தை ஏற்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கப்பட்டது.
பெண்கள் குடும்பத்தை கோயிலாக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது குடும்ப வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படவில்லை.

பெண்களுக்கு இயற்கையாகவே மன தைரியம் அதிகம். உடல் வலிமை ஆண்களை விட குறைவுதான். இருந்தாலும் ஆணும் பெண்ணும் ஆன்மிகத்தில் சமபலம் பெற்றவர்கள் தான் என்பதை புரியவைக்கவே, நாம் வழிபடும் கோயில்களில் சிவன், பெருமாள் தனித்து இருப்ப தில்லை; அம்பாள் மற்றும் தாயாருடனேயே இருக்கும்.
சமயபுரம், புன்னைநல்லூர், பெரியபாளையம், மயிலாப்பூர், சோட்டாணிக்கரை இன்னும் பல அம்மனுக்கென தனிக்கோயில்கள் உள்ளன.
பெண்கள் தனித்து வாழ்ந்தாலும் கூட, ஆன்மிகத்தில் முன்னேற முடியும், தெய்வீக தன்மை பெற்று தைரியத்துடனும் வாழ முடியும் என்பதை எடுத்துக்காட்டவே இப்படி செய்தனர்.
இப்போது வீட்டுக்கு வீடு கொலு வைத்து கொண்டாடும் இந்த நவராத்திரி விழா பெண்களிடம் இருக்கும் ஆன்மிகத்தை வெளிக்கொண்டு வருவதில் முதல் விழா என்றே சொல்லலாம்.
அழகான கோலமிடல், வீட்டை அழகு படுத்துதல், தெய்வ பொம்மைகளை சேர்த்தல், அலங்கரித்தல், பஜனை செய்தல், பூஜை செய்தல், நாம சங்கீர்த்தனம் பண்ணுதல், வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களை வரவேற்று உபசரித்தல், அன்பு போற்றுதல், புதிய நட்பினை பெறல் இப்படி ஆன்மிக தொடர்பான அனுபவங்களை அடிக்கடி புதுப்பித்துகொள்ளவும், வளர்த்துக்கொள்ளவும் பெண்கள் நவராத்திரி போன்ற விழாக்களை அனுபவ வாழ்கை பெறும் வகுப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆண்களைப் போல யோக மார்க்கத்தில் பெண்கள் அதிகம் ஈடுபடுவதில்லை என்று பொதுப்படையான கருத்து இருப்பதுண்டு. சூரியநமஸ்காரம், யோகாசனம் எல்லாம் பெண்கள் செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு உடல் வலிமை இல்லை என்றும், இது பெண்கள் ஆன்மிக சாதனையில் முன்னேற தடைகற்களாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
அது உண்மையில்லை. என்னை பொறுத்தவரை பெண்களின் அன்றாட வாழ்க்கை முறை செயல்பாடுகளே பல ஆயிரம் யோகாசன முறைகளுக்கு ஒப்பாகும்.
பெண்கள் வீட்டு வேலையில் முழுமையாக ஈடுபடுகிறபோது,
துணி துவைத்துப் பிழிதலில் கை அழுத்தப் பயிற்சியும்,
குனிந்து, நிமிர்ந்து வீட்டை பெருக்குதல், துடைத்தலில் இடுப்புப் பயிற்சியும், தண்ணீர் எடுத்தல், பாத்திரம் கழுவுதலில் கைப் பயிற்சியும் பெறுகின்றனர்.
சப்பாத்தி போடும் போது முழங்கை அசைவுப் பயிற்சியும்,
மாவு பிசையும் போது விரல்களுக்கான பயிற்சியும்,
தேங்காய் துருவுதலில் தோல் பயிற்சியும்,
தோசை செய்து உபசரித்தலில் ஓட்டப் பயிற்சியும் பெறுகின்றனர்.
வீடு ஒட்டடை அடித்தலில்கழுத்துப் பயிற்சியும்,
பொருட்களை இறக்குதல், ஏற்றுதலில் கணம் துõக்கும் பயிற்சியும் பெறுகின்றனர்.
குழந்தைகளை குளிப்பாட்டுதலில் அடிவயிற்றுப் பயிற்சி,
மொட்டை மாடி ஏறி, வற்றல் போடுதலில் மூட்டுப் பயிற்சி,
பால்கணக்கு, மளிகை கணக்கு போடுதலில் மூளைக்கு பயிற்சி,
பாடம் சொல்லித் தருதலில் நினைவுப் பயிற்சி,
மாமனார், மாமியார், நாத்தனார்களிடம் திட்டு வாங்கும் போது சகிப்புத்தன்மை, பொறுமை காத்தல், மற்றும் இதயம் வலுவாக்கும் பயிற்சி என இன்னும் எத்தனையோ பயிற்சிகளை பெண்கள் வீட்டிலேயே பெற்றுவிடுகின்றனர். இப்படி இருக்கும் போது ஆன்மிகத்தில் ஆண்களைப் போல முழுமையாக ஈடுபட யோகாசனம் ஒன்றும் அவசியமில்லை தானே?
வீட்டையே கோயிலாக்கும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்களும் வீரத்துறவிகளே!
அவர்கள் காடு, மேடு, மூர்த்தி, தலம், தீர்த்தம் சென்று தவமிருந்துதான் அந்த நிலையை எட்ட வேண்டும் என்ற அவசியமில்லை!

பாக்ஸ் மேட்டர்:

கொங்கணவ முனிவர் காட்டில் செல்கையில் அவர் மீது ஒரு கொக்கு எச்சமிட்டுவிட்டது. அவர் கோபத்தோடு மேலே பார்த்தார். அவரது தவவலிமையால் கொக்கு எரிந்து சாம்பலாகிவிட்டது.
பசியோடு வந்தவர், ஒரு வீட்டில் பிச்சை கேட்டு நின்றார். நெடு நேரமாகியும் அன்னமிட யாரும் வரவில்லை. அந்தக் குடும்ப பெண் கணவருக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தார்.
பிறகு, அன்னமிட வந்த போது, முனிவர் அதே கோபத்தோடு அந்தப் பத்தினி பெண்ணை பார்த்தர். ஆனால், அவர் கோபம் அந்த பெண்ணை எரிக்கவில்லை.
அவள் சிரித்துக்கொண்டே, "கொக்கு என்று நினைத்தாயோ கொங்கணவா?' என்று கேட்டராம். முனிவர் அதிர்ந்தாராம்!
முனிவரின் தவ வலிமையைவிட, கடமையைச் செய்யும் பெண்ணுடைய தவ வலிமை பெரிது என்பதை உணர்ந்தார்.
ஸ்ரீகுரு தஷண் சுவாமிஜி.


*6* நம்பிக்கை,
பக்தி,
இடையறாத இறைச்சிந்தனை... 8.10.2011


நம்பிக்கை, பக்தி, இடையறாத தெய்வச் சிந்தனை இவை மூன்றும் ஒரு பக்தனை நிச்சயம் இறைவனின் பார்வைக்கு கொண்டுச் செல்லும்.
"நம் பிரார்த்தனை எல்லாம் நிச்சயம் நிறைவேற்றும் சக்தி இறைவனுக்கு உண்டு உறுதியாக நம்புவது நம்பிக்கை.
எந்த ஒரு செயலை தொடங்கும் முன் இறைவனை மனத்தால் வணங்கி செய்வது பக்தி.
" இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!' என்று மாணிக்கவாசகர் சொல்வது போல் நம் சிந்தனை சதாகாலமும் இறைவனிடம் வைத்திருப்பது இடையறாத தெய்வச் சிந்தனை.

பல சம்பவங்களின் தொடர்ச்சிதான் இந்த வாழ்க்கை. செயல்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றன. நாம் செய்யும் செயல்களில் இது தான் முடிவு என்று தீர்மானித்த ஒன்றை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் பிரார்த்தனை ஒருவகை. இதில் நம்பிக்கையும், பக்தியும் இருக்க வேண்டும்.
இன்னொரு வகை தினசரி வாழ்க்கையில் உண்பது, உறங்குவது, எழுதுவது, பேசுவது, நடப்பது, உட்காருவது, குளிப்பது, விளையாடுவது போன்றவை. இதில் இடையறாத இறை சிந்தனை இருக்க வேண்டும்.
இந்த இரண்டு செயல்களும் வாழ்க்கையில் நல்லதாய் நடைபெற வேண்டும். அதற்காக நம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
முதல் வகையைச் செயல் நடைபெற பிரார்த்தனைக்கு ஓர் உதாரணம்:
ஒரு வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவது. வீடு கட்டுவதற்கு பல நிலைகள் இருக்கின்றன. வீடு கட்ட வேண்டும் என முடிவெடுப்பது முதல்நிலை. இதையடுத்து பல நிலைகள் உள்ளன. வீடு கட்டுவதற்கு மனை தேட வேண்டும். மனை வாங்கப்போவதை நண்பர்களிடத்தில் ,உறவினர்களிடத்து சொல்லி வைக்க வேண்டும். வாங்கக்கூடிய மனைகளில் நல்ல மனையாக தேர்ந்தெடுக்க வேண்டும். அதை வாங்கக்கூடிய சக்தி நமக்கு இருக்கிறதா என்பதே தீர்மானிக்க வேண்டும்.
மனை வாங்கியப் பிறகு, வீடு கட்டுவதற்கு தேவையான தரமானப் பொருட்களை சேகரிக்க வேண்டும். கட்டிட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். வீடு கட்ட ஆரம்பிக்க வேண்டும். வீட கட்டி முடிக்கும் தேதியை முடிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட தேதியில் கிரகபிரவேசம் செய்யவேண்டும். இப்படி பல நிலைகள் கடந்து தான் வீடு கட்டிமுடிக்கப்படும்.
வீடு கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கும் போது, இந்த வீடு
எவ்விதத் தடையுமின்றி இனிதே முடிய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, "இந்த வேண்டுதலை இறைவன் ஏற்றுக் கொண்டு, அதனை நிச்சயம் நிறைவேற்றிவைப்பார்' என்ற உறுதிபடுவது நம்பிக்கை.
இந்த உறுதியை கெடுக்கும் விதத்தில் அவ்வப்போது சில சோதனைகள், சந்தேகங்கள் எழும்.
அவைகளுக்கு எல்லாம் மனம் தளராமல், அவை ஏன் ஏற்பட்டன? என்பதற்கான காரணங்களை அறிய வேண்டும். தடையோ, சிக்கலோ ஏற்பட்டால் அது இறைவனின் அருள் துணையை நாடாமல் நாம் செயல்பட்டிருப்பதே காரணமாகும் என உணர்ந்து, "நான் செய்தது தவறு' என்று மனப்பூர்வமாக இறைவனிடம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால், நடுவில் வந்த சிக்கலோ அல்லது இடையூறோ விலகிப்போகும். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், மேற்கூறிய சிக்கல்களினால் மனம் குழம்பி, சந்தேகம் எழுந்து, நம்பிக்கை உறுதி இழந்துவிடும் நிலை ஏற்படும்.
அவ்வபோது எழும் சந்தேகங்கள் ஒவ்வொன்றாக மனதை விட்டு நீக்கும்போது, இறைவனிடம் நாம் கொண்ட அந்த உறுதி மேலும் மேலும் வளர்ந்து நம் நம்பிக்கையை முழுமையாக்கிவிடும்.
உண்ணல், உறங்கல், உறங்கி விழித்தல், வீட்டை விட்டு வெளியேறிச் செல்லல், திரும்ப வீட்டுக்கு வருதல், குழந்தை, மனைவி, தாய், தந்தை, சகோதர சகோதரியர், உறவினர், நண்பர் போன்றோரிடம் ஏதேனும் உதவியைப் பெறுதல் அல்லது உதவி செய்தல், நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ வரவேற்று உபசரித்தல், அல்லது வழி அனுப்பி வைத்தல் போன்றவை மிகவும் முக்கியமானவை.
அச்செயல்களை எல்லாம் செய்யும் பொழுது மனதார இறைவனிடம் ஆசிபடி நடக்க வேண்டும் என்று இறைவனை நினைத்தபடிஇருக்கப் பழகிக்கொள்ளவேண்டும். அதன் காரணமாக இடையறாத இறைச் சிந்தனையானது நம்மிடம் நிலைபெற்றுவிடும்.
இப்படி தினசரி வாழ்க்கையில் நாம் செய்ய இருக்கும் செயல்களில் நம்பிக்கை, இறைபக்தி, இடையிறாத இறைச்சிந்தனை இந்த மூன்றையும் பின்பற்றுவர்களுக்கு எந்த நாளும் இன்பமேயன்றித் துன்பமே இல்லை. வெற்றியன்றி தோல்வியே இல்லை.

பாக்ஸ் மேட்டர்:

இமயமலை பாதையில் பாதயாத்ரீகள் கேதார் நாத்தை தரிச்சிக்க சென்று கொண்டிருந்தனர். ஒருவயதான பேர்வழி தட்டுதடுமாறி நடந்தார். " ஏப்பா, ஒழுங்கா நடக்கக்கூடாதா?' என்று ஒருவர் கேட்டார்.
"ஐயா, எனக்குக் கண் பார்வையில்லை அதான் தடுமாற்றம்' என்றார்.
" என்னது கண் தெரியாதா? பார்வையில்லாத நீ மலையேறி என்னத்தைப்ப õர்க்கப் போற' என்றார்.
" நான் கடவுளைப் பார்க்க முடியாவிட்டால் என்ன, என்னை கடவுள் பார்ப்பாரே! அது போதுமே!' என்றார் பார்வையற்றவர்.
ஸ்ரீகுருதஷண் சுவாமிஜி.


*7* புண்ணியம் செய்யலாம் வாங்க! 15.10.11

புண்ணியம்,பாவம் செய்ய பல வழிகள் உண்டு. தெரிந்தோ, தெரியாமலோ இவைகளில் எதைச் செய்தாலும், அதற்கான பலன் உண்டு.
வீடுகளில் துளசி வளர்ப்பது புண்ணியம்.
கிருஷ்ணபட்ச சதுர்த்தி, அஷ்டமி, சோமவாரம் ஆகிய தினங்களில் நல்லெண்ணெய், இளநீர், தேன், பழரசம், பால் இவைகளால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால் கைலாச வாசம் கிட்டும். வாழும் காலத்தில் செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
பகவானின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால், கங்கா ஸ்நான பலன் கிடைக்கும்; சகல பாவங்களும் விலகி, குலம் விருத்தியாகும். தனக்குப் பிரியமான பொருளை பகவானுக்கு நிவேதனம் செய்பவனும், தானம் செய்பவனும் இருபத்தோரு தலைமுறைக்கு நற்கதி பெறுவர்.
புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது, கோபுர தரிசனம், மகான்கள் வாழும், வாழ்ந்த இடங்களுக்குச் சென்று மகான்களை தரிசித்து ஆசி பெறுவது, மகான்களின் சமாதி தரிசனம் செய்வது எல்லாமே புண்ணியம்தான்.
புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது, தீர்த்தக் கரைகளில் பித்ரு காரியங்கள் செய்வது, தான தர்மம் செய்வது எல்லாம் விசேஷ பலன்களைத் தரும்.
வாழ்நாளில் தான் செய்த எல்லா புண்ணியத்தையும் தானமாக கொடுத்து புண்ணியம் தேடிய பாக்கியசாலியின் கதை இது.
பாரதப் போரில் கர்ணன் துரியோதனன் பக்கம்.
பாரதப் போரின் 17வது நாள். கிருஷ்ணன் பார்த்தசாரதியாக தேரை ஒட்டி வருகிறான்.
கிருஷ்ணனிடம், "கர்ணனை கொல்வது மிகக் கடினமாக உள்ளதே?" என்கிறான் அர்ச்சுனன்.
"கர்ணனைக் கொல்வது அவ்வளவு சுலபம் என்று நினைத்தாயா?
அவன் செய்த புண்ணியம் அவனைக் அவ்வளவு எளிதாகக் கொல்ல விடாது. பட்டியல் போடுகிறேன் கேள்!' என்று அர்ச்சுனனிடம் கர்ணனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான் கிருஷ்ணன் .
"எல்லாருக்கும் மாதா, பிதா,குரு தெய்வம் என்று நால்வரும் எப்போதும் துணை இருப்பர். ஆனால், கர்ணனுக்கு ஒருவரும் துணையில்லை. தந்தை சூரியன், குந்திக்கு குழந்தையைக்கொடுத்து விட்டு சென்றுவிட்டான் . குந்தியான தாய், கர்ணனைப் பெற்று ஊருக்கு பயந்து, குழந்தையை ஒரு பெட்டியில் ஆற்றில் விட்டுவிட்டாள்.
குரு பரசுராமரோ எல்லா வித்தைகளையும் சொல்லிக் கொடுத்துவிட்டு,
அவை எல்லாம் மிக முக்கியமான தருணத்தில் மறந்து விடுவாய் என்று கைகழுவி விட்டார்.
இவர்கள் எல்லாம் வஞ்சித்தது போதாதா! கடவுளாகிய நானும் கர்ணனின் புண்ணியத்தை எல்லாம் கடைசி நேரத்தில் கிருஷ்ணனின் வடிவில் யாசகமாக பெறத் தயாராக இருக்கிறேன்.
பெற்றவுடன் தாயால் கைவிடப்பட்டதில் இருந்து கடைசியாக இறக்கும் தருவாய் முடிய எல்லா இடங்களிலும் அவனைக் கைவிட்டவர்கள் பலர். ஆனால், கடைசி வரை கர்ணனை கைவிடாதது அவன் செய்த புண்ணியம் ஒன்றுதான். யார் வந்து கேட்டாலும் இல்லை என்று ஒருபோதும் அவன் சொன்னதில்லை.
அந்தப் புண்ணியம் இருக்கும் வரை அவனை நீயோ, நானோ ஒன்றும் செய்யமுடியாது . எனவே அவனிடம் உள்ள புண்ணியத்தை முதலில் வாங்கிவருகிறேன்" என்று சொல்லிவிட்டு கிருஷ்ணன் யுத்தகளத்தை விட்டு நகர்ந்தான்.
ஒரு வயதான அந்தணர் வடிவத்தை எடுத்துக் கொண்டு, தேர்க்காலில் வீழ்ந்து கிடக்கும் கர்ணனிடம் போய் "கர்ணா, நான் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு புண்ணியம் சேர்த்துக் கொண்டுவருகிறேன்.
அப்போது உன்னிடத்தில் உள்ள புண்ணியத்தை கேட்டு தானம் பெறலாம் என்று வந்துள்ளேன்" என்று கேட்கிறான்.
மரணத் தருவாயில் உள்ள கர்ணன் வந்த வயதான அந்தணரைப் பார்த்து, "பெரியவரே, நல்ல சமயத்தில் தான் வந்திருக்கிறீர்கள்.
இறக்கும் தருவாயில் உங்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை என்று நினைத்திருந்தேன். நீங்களே எனக்கு உதவி உள்ளீர்கள், இப்போதே நான் இதுவரை சம்பாதித்த, இனிமேலும் சம்பாதிக்கும் எல்லா புண்ணியத்தையும் தானமாக கொடுக்கிறேன்'
என்று மார்பில் பாய்ந்திருந்த அம்பினை உருவி, அதில் இருந்து வெளியேறிய குருதியை நீராகப் பயன்படுத்தி கண்ணனுக்கு தானமாகக் கொடுத்தான்.
ஆச்சர்யத்துடன் கர்ணனைப் பார்த்து "கர்ணா, உன்னுடைய இந்தச் செயல் என்னை நெகிழச்செய்துவிட்டது
நீ மிகவும் உயர்ந்து விட்டாய்! நான் உண்மையில் வயதான அந்தணன் இல்லை. நான் கிருஷ்ணன். உனக்கு என்ன வரம் வேண்டும்' என்றான்.
"நான் எப்பிறப்பு எடுத்தாலும் தருமம் என்று கேட்டு என்னிடம் வருபவர்களுக்கு
கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லக்கூடிய
மனத்தை கொடுத்துவிடாதே' என்று கேட்டான் கர்ணன்.
கிருஷ்ணனும் அவ்வாறே தந்தான்.
இவ்வாறு புண்ணியத்தைச் சம்பாதித்தான் கர்ணன்.

பாக்ஸ் மேட்டர்:
நாஸ்திகன் செய்த புண்ணியம்
அவன் நாஸ்திகன். ஆனால் மனிதநேயம் உள்ளவன்.
தன்வீட்டின் வாசலில் திண்ணை ஒன்று கட்டி இருந்தான்.
அதில்,வருபவர் போவர் தங்கட்டும் என்று அமைத்து இருந்தான்.
ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் இரவு தங்கி, துõங்கி விட்டு காலை அங்கிருந்து புறப்படும் போது,"இந்தப் புண்ணியவான் நன்றாக இருக்கட்டும். இரவு தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தபோது, இந்தத் திண்ணைதானே உதவியது,அவன் குலம் வாழட்டும், அவன் நன்றாக இருக்கட்டும்' என்று மனதார வாழ்த்திச் சென்றான்.இதைத் தான் நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறதுஎன்று சொல்வர்.
கடவுள் அவன் நினைக்காமலேயே அவன் கணக்கில்புண்ணியத்தைச் சேர்த்தான்.
ஸ்ரீகுரு தஷண் சுவாமிஜி

*8* உயர்வான பிரார்த்தனை! 21.10.11

ஆன்மிகத்தின் முக்கிய அம்சம் பிரார்த்தனை. இதுவே, கடவுளுடன் நம்மை இணைக்கிறது.
கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பது தான் பிரார்த்தனை செய்பவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
கடவுள், நமது உண்மையான பிரார்த்தனைக்கும் செவி சாய்க்கிறார். தாயானவள், குழந்தை விரும்பியதையெல்லாம் கொடுப்பதில்லை; குழந்தைக்கு எது நல்லதோ அதைத்தானே கொடுக்கிறாள். அதுபோல், அவரவர் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லனவற்றைத் தருகிறார் கடவுள்!


இம்மையில் இவ்வுலகில் சக்தி, செல்வம், சுகம், இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும், மறுமையில் மேலோகத்தில் பாவமன்னிப்பு, மோட்ஷம், நல்ல ஜன்மம் முதலியவைகளும் கிடைக்க வேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் அடிப்படையாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட பிரார்த்தனைக்காக கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது என்று இருக்கிறோம்.
துன்பத்தால் துவளும்போது, கடவுளைப் பிரார்த்திப்பதால் நம் மனோபலம் கூடுகிறது

துன்பம் நீங்க வழிபடுவோர், இன்பம் அதிகரிக்க வழிபடுவோர், பரம்பொருளையே வாழ்வின் பரம லட்சியமாகக் கொண்டு வழிபடுவோர், தனக்கு வேறாகப் பரம்பொருள் இல்லை என்பதை உணர்ந்து வழிபடுவோர் என, என்னுடைய பக்தர்கள் நான்கு விதம்' என்று கீதையில் அருளுகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
கீதையில் கண்ணன் குறிப்பிட்ட பிரார்த்தனை வகைகளில் முதல் இரண்டு வகைகளுக்குத் தான் அதிகமாக பிரார்த்தனை செய்கிறோம்.
இதோ ஒரு வித்தியாசமான பிரார்த்தனை. அதை விளக்கும் ஒரு குட்டி கதை.

சீக்கிய மத குருவான குருநானக் தன் சீடர்களுடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றார். வரும் வழியில் தென்பட்ட ஊர்களில் அறம் செய்ய வேண்டிய அவசியத்தையும் தர்மத்தையும் போதித்தார்.

ஒரு நாள் ஒரு கிராமத்துக்குள் மாலை வேளையில் அவர் வந்தார். அப்போது அவருக்கும், அவருடன் வந்த சீடர்களுக்கும் கடுமையான பசி, நீர் தாகம் வேட்கை இருந்தது.

அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்கள் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. ஒருவரும் உதவவில்லை.

அன்றிரவு முழுவதும் அவர்கள் பசியிலும், தாகத்திலும் குளிரிலும் தவித்தனர். மறு நாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே கிளம்பும் போது, குருநானக் அந்தக் கிராம மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.

"" கடவுளே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்!''

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது.

""ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனை தேவையா?''

""ஏன் இப்படிச் செய்தார் நம் குரு?''

அவர்களுக்கு எதுவும் புரியவில்லை.
அவர்கள் அங்கிருந்து நடக்கத் தொடங்கினர்.

அன்றைய தினம் மாலையில் மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அதற்குள் பலருக்கும் பசிகாதை அடைத்து இருந்தது.

""இங்கு என்ன நிலைமையோ?' என்று பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள்.

அந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் கண்டவுடன், ""வாருங்கள், வாருங்கள்'' என்று அன்புடன் வரவேற்றனர்.

""சாப்பிடுகிறீர்களா, நீர் அருந்துகிறீர்களா?'' என்று கனிவுடன் விசாரித்தனர். சொன்னதோடு நிற்காமல் அவர்களுக்கு உணவும் நீரும் அளித்தனர். தங்குவதற்கு இடமும் அளித்தனர். படுக்கைகளும் தந்தனர். பசியாறிய அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருநானக்கின் உபதேசங்களைக் கேட்க ஊர் மக்கள் திரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.

சீடர்கள் பெருமிதம் அடைந்தனர்.


மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்தார்.

""கடவுளே! இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் திசைக்கொருவராக பிரிந்து போய்விட வேண்டும்!. அதற்கு தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.'' என்றார்.

இந்தப் பிரார்த்தனையையும் கேட்ட சீடர்கள் மனதில் ஆச்சர்யம் உண்டாயிற்று.

முந்தைய கிராமத்தில் இவர் செய்தது ஆசீர்வாதம். இப்போது செய்தது ஆசீர்வாதமல்ல; சாபம். இப்படிச் செய்யலாமா?''

சீடர்களின் மன நிலையை அறிந்தார் குரு.

""சீடர்களே என் பிரார்த்தனை உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கக் கூடும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தையும் அல்லவோ கெடுத்துவிடுவர்.
எனவே, தான் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டும். வெளியேறி விடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன்.
ஆனால், இந்தக் கிராம மக்களோ தெய்வ பக்தி உடையவர்கள், அறநெறிகளைப் பின்பற்றுகின்றனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். பெரியவர்களையும் அறவழியில் செல்லுபவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள். விருந்தினர்களை நன்றாக வரவேற்கத் தெரிந்தவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரே கிராமத்திலே இருப்பதை விட இந்த ஊர் எங்கும்; நகரம் எங்கும்; நாடு எங்கும் பரவி இருக்க வேண்டும். அவ்வாறு பரவி இருந்தால் அவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். இதற்காகத் தான் இவர்கள் திசைக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்,'' என்று விளக்கம் கூறினார்.

இந்த விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் குருவின் நல்ல எண்ணத்தையும் அவருடைய சீரிய சிந்தனையையும் எண்ணி வியந்தனர்.





இறைவா! எனக்கு நீ எதைக் கொடுத்தாயோ அதற்காக ஒருமுறை நன்றி கூறுகிறேன். எதைக் கொடுக்கவில்லையோ, அதற்காக நான் நுõறு முறை நன்றி கூறுகிறேன்' இது பக்குவப்பட்ட பிரார்த்தனை.

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே இது தாயுமானவரின் உயர்ந்த பிரார்த்தனை!

பாக்ஸ்:
***
சுவாமி விவேகானந்தர், நரேந்திரனாக இருந்தபோது நடந்த சம்பவம். ஸ்ரீராமகிருஷ்ணரிடம் சென்று, "எனது குடும்ப வறுமை நீங்க வேண்டும் என்று காளிதேவியிடம் பிரார்த்திக்கக் கூடாதா, நீங்கள்?'' என்று கேட்டாராம்.
""நீயே கேள்'' என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.
காளியின் சந்நிதிக்குச் சென்ற விவேகானந்தரின் மனதில், உயர்ந்த பிரார்த்தனைகளே உதித்தனவாம். ஞானம் மற்றும் தெளிவு வேண்டி பிரார்த்தித்தவர், குடும்ப வறுமையை மறந்தே போனார். இதேபோல் இரண்டு முறை நிகழ்ந்தது. மூன்றாவது முறை, குடும்ப வறுமை நினைவில் இருந்தும், அதுகுறித்துப் பிரார்த்திக்கத் தோன்றவில்லை விவேகானந்தருக்கு. "இந்த அல்பமான விஷயத்தையா இறைவனிடம் கேட்பது?' என்று எண்ணினார்!


*9* ஆடு, பாடு ஆனந்தபடு! 29.10.11

ஒரு வீட்டு முதலாளி கவலையோடு இருக்கிறார். துõக்கம் இல்லாமல் தவிக்கிறார். ஆனால், அவர் வளர்க்கும் நாய் சந்தோஷமாக இருக்கிறது. சுகமாய் துõங்கு கிறது.
வீடு, வாசல், சொத்து பத்து, பந்த பாசம் எல்லாம் இருந்தும் அவருக்கு ஆனந்தமில்லை. எதுவுமே இல்லாமல் அண்டிபிழைக்கும் நாய்க்கு அது இருக்கிறது எப்படி?
நாயை விட மனிதன் பெரும் பாவம் செய்தவனா, என்ன? சிந்தனை மனதை துளைக்கிறது. யோசித்துப் பார்த்தால், ஒரு உண்மை புலப்படுகிறது.
வீட்டில் வளரும் நாய் மாதா மாதம் சம்பளம் கேட்பதில்லை. காலகாலத்துக்கு சோறு போடு என்று கெஞ்சுவதில்லை. போட்ட சோற்றை குறைசொல்வதில்லை. தான் நல்லவன் வல்லவன் என்று பந்தா செய்வதில்லை. மழை பெய்தால் குடை கிடைக்குமா என்று தேடுவதில்லை. குளிர்காலத்தில் போர்வைக்கு அலைவதில்லை. நாளைக்கு வேண்டுமே என்று இன்று கிடைத்த உணவை மிச்சப்படுத்துவதில்லை. யாருக்காக நாம் வேலை செய்கிறோம் என்றோ, இவருக்கு ஏன் நாம் வேலை செய்கிறோம் என்றெல்லாம் யோசிப்பதில்லை. வீட்டில் இருந்தாலும் சரி, ரோட்டி கிடந்தாலும் சரி, திருடனைப் பார்த்தால் நாய் குலைக்கத்தான் செய்யும். அதன் கடமையை அது செய்கிறது. யாரும் உத்தரவு போடாமலே.
பொதுவாக மிருகங்கள் உணவுக்கும் இனப் பெருக்கம் செய்வதற்கு மட்டுமே தம் இனத்துக்குள் சண்டை போடுகின்றன. அவை இயற்கை விதித்திருக்கும் விதி.
மற்றபடி நாய்கள் ஒன்றை ஒன்று பார்த்து, பொறாமைப்படுவது இல்லை, வஞ்சம் கொள்வது இல்லை, சதிச் செயல்களில் ஈடுபடுவது இல்லை.
மனிதன் தான் தன்இயல்பை உணராமல் இருக்கிறான். அவனுடைய தேவைகளுக்காகவும், கூடுதலான வசதிகளுக்காகவும் தன் பெருமைகளுக்காகவும் தன்னை நல்லவனாக காட்டி நடிக்கிறான்.

ஊரை ஏமாற்றி சொத்து சேர்த்தால் ஆனந்தம், அழகான பெண்ணை மணந்து கொண்டால் ஆனந்தம், பிறரிடம் இல்லாத பொருட்களை வாங்கிக் குவித்தால் ஆனந்தம், அடுத்தவன் பொறாமைப்படும் படி வாழ்ந்தால் ஆனந்தம், உன்னை மிஞ்ச ஆளில்லை என்று பலர் புகழ்ந்தால் ஆனந்தம், உயர்படிப்பு, உயர்பதவி இருந்தால் ஆனந்தம் என்றெல்லாம் தவறான கருத்துகளை மனதில் பதிய வைத்து விட்டதால், மனிதன் உண்மையான ஆனந்தம் எது என்பதையே அறியாமல் இருக்கிறான்.
நாமாக கற்பனை செய்து கொண்ட அல்லது பொய்யை அத்திவாரமாகக் கொண்டு எதை அடைந்தாலும் அது நிலைத்து நிற்காது. மேலே சொன்ன தவறான, பொய்யான அனுமானங்களைக் கொண்டு அடையும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் வந்த வேகத்தில் திரும்பி போய்விடும்.
சரி, உண்மையான ஆனந்தம் எது? இதுதான் என்று ஒன்றை சுட்டிக்காட்ட இயலாது. ஆனால் இதுவும் ஒன்று என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.
நேற்று மாலையில் எப்எம் ரேடியோல் தற்செயலாக அந்தப் பாட்டு ஒலித்தது. ஆனந்தம் பற்றி சொல்லிக்கொண்டே கடைசியில் "உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம்' என்று முடிந்தது.
நமக்காக அழுவது சுயநலம்.பிறர்க்காக அழுவது பொதுநலம். அதுதான் ஆனந்தத்தை மனதில் விதைக்கிறது.

அடுத்தவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பதே பிறருக்கும் நமக்கும் ஆனந்தம். அடுத்தவர்களுக்கு துன்பம் அளித்து அவர்களுடைய நிம்மதியை கெடுத்து, அவர்களின்ஆனந்தத்தை பறிப்பதில் நம்மை அறியாமலேயே நம்முடைய ஆனந்தமும் பறிபோவதை நாம் உணராமல் இருக்கிறோம்.
வாடியப் பயிரை கண்டு வாடிய வள்ளலார் உள்ளம் யாருக்கெல்லாம் அமைகிறதோ, அவர்கள் மனமெல்லாம் வாழ்வெல்லாம் ஆனந்தத்தால் தான் நிறைந்திருக்கும்.
தொண்டு செய்வதும் ஒருவகை வழிபாடுதான். அடுத்தவருக்கு உதவி செய்வதும், அடுத்தவர் துன்பம் போக்குவதும், அடுத்தவரிடம் அன்பாக, பணிவாக இருப்பதுமான சூழலில் ஆனந்த காற்று வீசும். அது நமக்கும் நம்மை சேர்ந்தவர்களுக்கும் ஆனந்த குளுமையை அள்ளி வீசும்.


நமக்கு எப்போதெல்லாம் உண்மையான ஆனந்தம் வருகிறது என்று பார்த்தால் நம் வாழ்வில் போதுமென்ற ஆசை கட்டுப்பாடும், நல்ல குறிக்கோளுடன் செயல் படும்போதும், எல்லோரும் இன்புற்றிருக்கயல்லாமல் வேறொன்றும் அறியேன் என்று கருதும் ஒரு ஆன்மிக வாதியை, நாட்டுக்கு உழைக்கும் உத்தமர்களை, தானம், தர்மம் செய்யும் நல்லவர்களை,என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடுபடும் தலைவர்களை, மனித நேயத்தை மதித்து பாரபட்ஷமில்லாமல் நடந்துகொள்ளும் மனிதாபிமான ஆர்வலர்களை, அனைத்து உயிர்களையும் மதிக்கும் பண்பார்களை, தன்னைப்போல பிறரையும் எண்ணி அவர்களின் துன்பத்தைப் போக்கத் தன்னாலான செயல்களைச் செய்யும் பலரை,மக்களையே மகேசனாக கருதும் மாந்தர்களை எல்லாம் கண்டால் ஆனந்தம் கிடைக்கும்.
இதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று பொன்னும்,பணமும் தேடி சேர்ப்பதிலும் காருக்கும் பேருக்கும் ஊருக்கும் ஆசைபடுபவர்களுக்கு கிட்டாத ஆனந்தம் இவற்றை எல்லாம் உதறிதள்ளியவர்களுக்கு அல்லவா கிடைத்திருக்கிறது.
ஆனந்த அந்தப்புரம், பெரிய அரண்மனை, கூப்பிட்டக் குரலுக்கு சேவகம் செய்ய பணியாளர்கள், அறுசுவை உணவு, நல்ல மனைவி, மக்கள் இவை எல்லாம் இருந்தும், இவற்றில் எல்லாம் கிடைக்காத ஆனந்தம் தெருவோர ஒற்றை போதி மரம் அல்லவா புத்தருக்கு ஆனந்தத்தையும் ஞானத்தையும் கொடுத்தது.
பொருள் தேடும் தேடுதலை விட்டுவிட்டு, மலையிலும் குகையிலும் மறைந்து வாழும் எத்தனையோ ஞானிகளும், துறவிகளும் ஆனந்தத்தை அடைந்திருக்கிறார்களே எப்படி?
கொஞ்சம் யோசியுங்கள்...
அம்மா அப்பாவின் ஆனந்த இணைப்பில் பிறந்த நம்முடைய வாழ்க்கை, கடவுள் என்னும் பேரானந்த பரமானந்தத்தின் திருவடியில் சேர்வதுதான் மனித வாழ்க்கையில் பெறக்கூடிய பூரண ஆனந்தம். ஆனந்தத்திலிருந்து பரமானந்தத்தை நோக்கிய ஆனந்த பயணமே இந்த வாழ்க்கை!
ஸ்ரீ குருதஷண் சுவாமிஜி.


*10* வயிறு வெற்றிடமானால்
மனம் அருளால் நிரப்பும்! 5.11.2011


நம் ஆரோக்கியத்திற்கு நோன்பு ஒரு தலைசிறந்த மருந்தாகும். நோன்பினால் மன அழுக்கு நீங்குகிறது. இறைவனின் அருள்கிட்டுகிறது. அதனால் நோன்பு இருப்பதின் அவசியத்தை நம் மதம் வலியறுத்துகின்றது.
நோன்பை இந்து மதத்தில் சைவ சமயத்தினர் பிரதோஷம், பவுர்ணமி, சஷ்டி, கார்த்திகை நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வதும் உண்டு. செவ்வாய், வெள்ளி கிழமைகளில், பெண்கள் விரதம் இருக்கின்றனர்.
வைணவ சமயத்தினர் ஏகாதசி, வரலட்சுமி மற்றும் சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.
நோன்பை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர்.
பசித்திரு; விழித்திரு; தனித்திரு என்பார் வள்ளலார்.
பழங்காலத்தில் இருந்தே நோன்பு இருப்பதின் மகிமையையும், பலனையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கு உதாரணம் மார்கழி மற்றும் தை மாதங்கள். இந்த மாதத்தில் இருக்கும் பாவை நோன்புபற்றி ஆண்டாளும் மாணிக்கவாசகரும் பாடல்களால் பாடிவைத்துள்ளனர்.
இந்த மாதத்தில் இயற்கையையோடு இயைந்த ஒரு நோன்பாக தை நீராடல் கடைபிடிக்கப்பட்டது. இந்த நோன்பு பற்றி சங்கப்பாடல்களில் பரிபாடல் விரிவாக சொல்கிறது.
கடவுள் அருள் பெற ஒரு நல்ல வழியாக நமது முன்னோர்கள் இந்த நோன்பை தை நீராடல் என்று நோற்று வந்தார்கள்.
மணமாகாத பெண்கள் இந்த நோன்பு நோற்பர்.
பாவை போல ஒரு பெண் பிள்ளையின் தாய் கடவுளின்
வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர்.
பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப்
பெறுவர் என்பது நம்பிக்கை. மேலும் நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர்.
தை மாதம் முழுவதும் தரை விளக்கிக் காமதேவனை வழிபட்டுக்
கணவனைப் பெறுவது ஒரு நோன்பாயிற்று.
இந்த நோன்பு ஆண்டாள் கையிலும் , மாணிக்கவாசகர் கையிலும்,
தெய்வ நோன்பாகவும் வளர்ந்தன.
இந்த நோன்பு சங்க காலத்தில் தைநீராடலாக இருந்தது.
திருவெம்பாவை திருப்பாவை தமிழகத்தில் தோன்றிய காலத்தில்
இந்த நோன்பு மார்கழி மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
பெண்கள் அழகை பெற விரும்பி செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு
தருமோத்த புராணம் கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும், அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது.
ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு,அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள் என்று அந்தப் புராணம் கூறுகிறது.
ஆண்டாளும் ,
'' பாலுண்ணோம் நெய்யுண்ணோம்
கோல அணிகலெல்லாம் பூணோம் ''
என்று கூறுகிறார்.
இதிலிருந்து இந்த நோன்பின் கடுமை நமக்கு விளங்குகிறது. அது மட்டுமல்லாதுஅறம் செய்தலையும் வலியுறுத்துகிறது. நோன்பு முடிந்த பின் எல்லா அணிகளையும் அணிவதோடு நெய் ஒழுக சிறந்த உணவை
உண்ணுவதனையும் குறிப்பிடுகிறது.
நம் முன்னோர்கள் வழிபாடெல்லாம் தனி ஒருவர் வழி
பாடாகாமல், சமுதாயத்தின் நலம் கருதிய வழிபாடாகவே அமைந்திருந்தது.
சிலப்பதிகாரத்தில் வரும் வரிப்பாடல்களிலும் குரவைப் பாடல்களிலும் இதைக்காணலாம்.
அதுபோலவே கன்னிப் பெண்கள் நோன்பிலும்
" நாடு முழுதும் வாழ மழை பெய்யவேண்டும் " என்னும் பாட்டாகவே பாவைப் பாட்டு முடிகிறது.
மணிமேகலையில் "காயசண்டிகை விரதம்' பேசப்படுகிறது. கணவனை பிரிந்த கண்ணகியை நோக்கி, "தேவந்தி' என்பாள், "நின் கணவன் பிரிதற்குரிய பிழை இம்மையில் நின்பால் யான் கண்டிலேன். ஆகலின், அவன் பிரிதற்குக் காரணம் நின் பழவினையே! எனவே புண்ணிய தீர்த்தங்களில் மூழ்கி, நோன்பிருந்து தெய்வம் தொழு' என்கிறாள்.
நோன்பு என்பதற்கு மன வலிமை கொள்ளுதல் எனப் பொருள் கொள்ளலாம். துன்பத்தினைத்தாங்குதல் என்றும்கூட அர்த்தம் கொள்ளலாம். இது, தாமே துன்பத்தினை தாங்கிக்கொண்டு, தங்களை நெறிப்படுத்திக்கொள்ளும் நெறியாகும். ஒழுக்கம் இதனைக் குறிக்கோளாகக்கொண்டு உள்ளடக்கியது. எல்லா நோன்புகளுமே குறிக்கோளைக்கொண்டு கடைப்பிடிக்கப்படுகின்றன.
இந்நாளில் நோன்பானது, விரதம் என்று பெயர் மாறி பின்பற்றப்படுகிறது. அதுவே இக்கால சூழ்நிலையில், சடங்குகளின் தோற்றத்திற்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
உதாரணமாக மரத்தில் தொட்டில்கட்டி தொங்கவிடுதல், மண்சோறு சாப்பிடுதல் , மடிப்பிச்சை போன்றவை தெய்வநம்பிக்கை அடிப்படையில் அமைகின்றன. இருப்பினும் இந்த நம்பிக்கையில் மனஅமைதி கிடைக்கிறது. எதிர்பார்த்த பலனும் , பயனும் கிடைக்கிறது. மேலும் ஆரோக்கியம் நிலைக்க, நிம்மதி கிடைக்க, நினைத்தது நடைபெற, செல்வம் பெருக, குலம் சிறக்க இப்படியும்,
மாங்கல்யம் நிலைக்க, குழந்தைவரம் கிடைக்க, பிடித்த தோஷம்நீங்க, திருமணமாக என விரதங்கள் எண்ணிக்கை நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த விரதங்களை எல்லாம் ஆண்களை விட பெண்கள் அதிகம் கடைப்பிடிக்கப்படுகின்றனர்.
பிரார்த்தனை எதுவாக இருந்தாலும் விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன் மிகபலமானது.
நோன்பு எனப்படும் விரதத்தினால் நோயின்மை, மனக்கட்டுப்பாடு, ஒரு நிலைப்படுத்தலில் ஏற்படும் சக்தி, சீரான ஒழுக்கம் என தனி மனித குணம் மேம்படுகிறது.
நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் துõய்மையாகின்றது. கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன.
உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன.
உடல் ஓய்வடைகிறது. எல்லா உறுப்புகளுக்கும் அமைதி கிட்டுகிறது.
துõய சிந்தனைகள்வளர்கின்றன. மனதின் சக்தி அதிகமாகின்றது.
விரதம் இருப்பதில் பல அழுத்தமான காரண காரியங்கள், பொருள்பொருந்திய அர்த்தங்கள் நிறைந்து கிடக்கின்றன. அதை நாமும் புரிந்து கொள்வோம். கடைபிடிப்போம். இறைவனின் அருளைப் பெறுவோம்.
ஸ்ரீகுருதஷண் சுவாமிஜி.


*11* ராதே என் ராதே! 12.11.2011/

சிவன் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்ற கதை நமக்கு பரவலாக தெரியும்.
ஆனால், கிருஷ்ணன் இல்லையேல் ராதை இல்லை. ராதை இல்லையேல் கிருஷ்ணன் இல்லை என்ற கதை பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனால் கிருஷ்ணர் ராதை கதையையும் அது உணர்த்தும் தத்துவத்தையும் இந்த வாரம் சொல்ல நினைத்தேன்; அது தான் இந்தக்கட்டுரை.
இறைவன் படைப்பில் ஆண் உயர்ந்தவனா, பெண் உயர்ந்தவளா? என்ற ஆணவம் தலைதுõக்கிய போது, ஆணும் பெண்ணும் சமம். ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கக்கூடியது. ஒன்று இல்லையேல் மற்றொன்று இல்லை என்ற சாதாரண தத்துவத்தையும் இறைவனும் அவன் படைத்த ஜீவனும் பிரிக்க முடியாதவர்கள். இணைந்தே இருப்பவர்கள் என்ற படைப்பின் ஆழமான ரகசியத்தை உணர்த்துவது தான் சிவ சக்தி திருவிளையாடல்.
இதே தத்துவம் தான் ராதா கிருஷ்ணனிலும்! பரமாத்மாவும் பக்தனும் ஒருபோதும் பிரிந்திருப்பதில்லை. சேர்ந்தே இருப்பவர்கள் தான் என்பதை கண்ணன் ராஸலீலைகள் வழியாக போதிக்கிறான்.
நம் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும் போதும் கூட ராதா கிருஷ்ணன், ராதா மாதவன், ராதாலோலன், ராதாமனோகர், ராதேஷ்யாம், ராதாமோகன், ராதாபியாரே என்று பல பெயர்களை வைத்து மகிழ்கிறோம். அதற்கு காரணமும் இது தான்.
வடநாட்டில் ருக்மிணி, சத்யபாமாவை விட, ராதாவுக்கு மகத்துவம் அதிகம். மதுரா, பிருந்தாவன், துவாரகா போன்ற இடங்களில் எங்கு சென்றாலும் "ராதே கிருஷ்ணா" நாமம்தான்.
வடநாட்டில் எல்லா பிர்லாமந்திர் கோயில்களிலும் பளிங்குக் கற்களில் ராதா கிருஷ்ணன் சிலைகளைக் காணலாம்.
கண்ணன் ஆவணி மாதம், கிருஷ்ணபக்ஷ அஷ்டமியில், நடு இரவில் பிறந்தான்.
ராதாவோ சுக்லபக்ஷ அஷ்டமியில் பகல் 12 மணிக்கு மதுராவில் பிறந்தாள். கிருஷ்ணனின் நட்சத்திரம் ரோஹிணி. ராதையின் நட்சத்திரம் விசாகம். ராதை தந்தையின் பெயர் விருஷபானு. தாயின் பெயர் கீர்த்திதா. அவர்கள் இருந்த இடம் கோவர்த்தன மலைக்கு அருகில் பர்சானா என்ற கிராமம்.
இது கிருஷ்ணர், ராதையின் பயோடேட்டா.
ராதா என்றாலே ராஸலீலை ஞாபகத்துக்கு வருகிறது. ராஸலீலை என்பது மிகப் புனிதமான நடனம் . அது உடலும் உடலும் ஆடி, பாடி, கூடி மகிழும் நடனமல்ல; அந்த நடனம் நிகழ்வு ஆழ்மனதில் புகுந்துபோய் ஆன்மா பரமாத்மாவுடன் சேரும் நடனம். அந்த நடனம் உணர்த்தும் பெரிய தத்துவம் ஒன்று உண்டு. அது
கண்ணன் கடவுள்; அவரது ஆத்மா ராதா! உலகுக்கு ஆற்றலை அளிப்பவன் கண்ணன்; அவனது சக்தி ராதா! இது சிவ சக்திக்கு சமமான தத்துவம்.
நாயக, நாயகி பாவம் என்பது பக்தியில் உயர்ந்த, உன்னதமான நிலை. இந்தநிலையில் சிவனைநாயகியாகவும், நாயன்மார்கள் தம்மை நாயகனாகவும் பாவித்து பாடிய பக்திப் பாடல்கள் ஏராளம். இதில் பாரதியாரின் நாயக, நாயக பாவ பாடல்கள் பிரசித்தம்.
இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவங்களில் ஒன்றான காதல் பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து, அவனுடன் ஓருயிராக இணைந்து, ராஸ லீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப்பிரிய மனமின்றி வாழ்ந்த ராதையின் பக்தி நமக்கெல்லாம் பத்தி செலுத்துவதற்கான இலக்கணத்தைப் போதிக்கும் பாடம்!
பரமாத்வான இறைவனுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா ராதை! அதனால் தான் அவள் பெயரைத் தன்னோடு இணைத்து 'ராதா' கிருஷ்ணன் என்று ஆனார் கிருஷ்ணன்.
கண்ணனின் ஆசைக் காதலியாக, கண்ணனை விட்டப் பிரியாமல் கோகுலத்திலும் பிருந்தாவனத்திலும் ஆடிப்பாடி மகிழ்ந்த ராதை, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம்; தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்து சற்றும் உறங்காமல் இருந்தாள் என்று உத்தவர் பிரஹ்லாத சம்ஹிதையில் கூறுகிறார்.
"கண்ணா உன்னை விட்டு நான் வாழ்வதெப்படி?" என ராதை கேட்க, "நான் என்றும் யுகயுகமாய் உன்னுடன்தான் இருப்பேன்" என்று ஆறுதல் சொன்ன கண்ணன் ராதையை திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவர் ஒருவரானப்பின் திருமணம் எதற்கு? பரமாத்மா ஜீவாத்மாவுடன் கலந்தப்பின் வேறு என்ன புதிய உறவு இருக்கக்கூடும்? ஆனால் இன்று ராதா கல்யாணம் எல்லா இடங்களிலும் விமரிசையாக நடைபெறுகிறது. காரணம் ராதா இல்லாமல் கிருஷ்ணன் இல்லையே!
ஸ்ரீகுருதஷண் சுவாமிஜி.
***

பாக்ஸ்:
ராதையின் கிருஷ்ண பக்தியைப் பற்றிக் கூறும் வேடிக்கையான கதை இது! முன்னொரு காலத்தில் ராஸலீலா வைபவத்திற்காக ராதை, பார்வதியை அழைத்திருந்தாளாம். அது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி.
பார்வதியும் மகாதேவரிடம் அனுமதி கேட்க, சிவனோ, தானும் பெண் வேடத்தில் வந்து கலந்து கொள்வேன் என்று பிடிவாதம் பிடித்து பார்வதியு டன் வந்தார். பார்வதியுடன் அழகான பெண்ணாக வந்த பரமசிவனை அடையாளம் கண்டு கொண்ட கண்ணன், ராதையுடன் செய்து கொண்டிருந்த ராஸலீலையிலிருந்து விலகி வந்து ஈசனை வரவேற்க, தன்னைத் தவிர்த்து வேறொரு பெண்ணுடன் கண்ணன் நடனமாடுவதைக் கண்ட ராதா கோபம் கொண்டு ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டாள். பரமசிவன் அவளை சமாதானம் செய்து தரிசனம் கொடுத்தாராம். இதன் காரணமாக கோபி வடிவத்தில் வந்த ஈசன் 'கோபிநாத் கோபேஸ்வர்' எனப்பட்டார். காலையில் சிவலிங்கத்திற்கு பூஜையும், மாலை தினமும் சிவபெருமான் கோபி ரூபத்திலும் வழிபடப்படுகிறார்.
**


*12* எதுவும் நம் கையில் இல்லை! 19.10.2011

அவர் நல்ல ஆன்மிகவாதி; பண்பாளர்; தர்மசெயல் பல புரிபவர். அவருக்கு ஒரே மகன். நன்கு படித்தவன்; ஒழுக்கமானவன். இருபதின் இளமையில் இருந்தான்.
ஒரு நாள் சாலை விபத்தில் விபத்துக்குள்ளாகி, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தான். மருத்துவர்கள் மிகவும் ஆபத்தான நிலை. எதுவும் சொல்வதற்கு இல்லை. கடவுள் தான் கருணைக்காட்டவேண்டும் என்றனர். இதைக்கேட்டு அவர் வேண்டாத கடவுள் இல்லை. போகாத கோயில் இல்லை. கடைசியில் அவர் மகன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனான்.
புத்திர சோகத்தில் இருந்தவருக்கு, கடவுள் மீது கோபம் ஏற்பட்டது. "ஒரு தெய்வம் கூட என் மகனை காப்பாற்றவில்லையே! நான் செய்த தான தர்மங்கள் கூட மகன் உயிரை மீட்கவில்லையே!' என்று புலம்பிக்கொண்டிருந்தார்.
அவர் மகனை ஒரு தெய்வமோ, அவர் செய்த தான தர்மமோ காக்கவில்லை, ஏன்? காரணம் அவர் மகன் விதி முடிந்தது. இறந்தான். விதியை யார் தான் மாற்றியமைக்க முடியும்? இறப்பும் பிறப்பும் நம் கையில் இல்லையே!
இதை விளக்க மகாபாரதத்தில் இருந்து ஒரு கதை.
பாரதப் போர் முடிந்ததும் போர்க்கள அழிவிற்காக தருமர் வருந்துகிறார். தருமரின் துயரத்தைப் போக்க பீஷ்மர் உரைத்த கதை இது. இது மகனை இழந்தவருக்கு மட்டுமல்ல; எல்லாருக்கும் தான். படிங்க,தெளிவாகுங்க.

முன்னொரு காலத்தில் கவுதமி என்பவளின் மகன் பாம்பு கடித்து இறந்தான். அதைக்கண்ட அர்ச்சுனகன் என்ற வேடன் சினம் கொண்டு கயிற்றால் பாம்பை சுருட்டிக் கொண்டு கவுதமியிடம் வந்து,'இந்த பாம்பை எப்படிக் கொல்லலாம்' என்றான்.
'இந்த பாம்பைக் கொல்ல வேண்டாம். என் மகன் சாவு கர்ம பலத்தால் நேர்ந்தது.பாம்பிற்கும் இவன் சாவிற்கும் தொடர்பில்லை. இது விதி. இந்தப் பாம்பைக் கொல்வதால் மகன் பிழைக்கவா போகிறான்'. என்று கவுதமி கூறினாள்.
வேடன், " விதி கிடக்கிறது. இப்பாம்பை நான் கொன்ற பின் நீ உன் துன்பத்தை விட்டுவிடு' என்றான்.
அதற்கு கவுதமி,"என் துயரத்தை நான் பார்த்துக்கிறேன். இந்த பாம்பின் மீது சினம் கொல்லாதே.' என்றாள்.
"இதைக் கொல்லுவதால் எனக்கு புண்ணியமே உண்டாகும்.' என்றான் வேடன்.
அதற்கு,"பகைவர்களைக் கொல்வதால் என்ன லாபம் கிடைக்கும்?கையில் அகப்பட்ட பகைவனை விடாமல் இருப்பதால் எத்தகைய மகிழ்ச்சியை அடைவாய்?பாம்பின் விஷயத்தில் நான் ஏன் பொறுமையாக இருக்கிறேன் தெரியுமா, இது முக்திக்கு உரிய சாதனம்.ஆதலால் நான் பொறுமை இழக்கவில்லை' என்றாள் கவுதமி.
" தேவேந்திரன் விருத்ராசுரனைக் கொன்று மேன்மை அடைந்தான். சிவபெருமானும் யக்ஞ புருஷனைக் கொன்றார். தேவர்கள் செய்ததை நாமும் செய்தால் என்ன?' என்றான் வேடன்.
என்னதான் வேடன் வற்புறுத்திய போதும் கவுதமி பாம்பைக் கொல்ல உடன்படவில்லை.
சுருக்குக் கயிற்றில் சிக்கித் தவித்த பாம்பு இப்போது பேசத் தொடங்கியது:
"அர்ச்சுனகா. இந்தக் குழந்தையைக் கொன்றதில் நான் செய்த பிழை என்ன?எமன் ஏவலின் படி செய்தேன். இதில் ஏதாவது பாவம் இருந்தால் அது எமனைச் சாரும்' என்று பாம்பு கூறியது.
"பாம்பே, நீ வேறொருவர் கட்டளைப் படி இதைச் செய்திருந்தாலும், இந்தத் தீமையில் உனக்கும் பங்கு உண்டு. ஆதலால் நீயும் குற்றவாளிதான்.' என்றான் வேடன்.
"வேடனே என் மீது குற்றம் காணாதே. குற்றவாளி என என்னை துன்புறுத்துவது நல்லதல்ல.பிழை உண்டு எனக் கருதினால், நான் மட்டுமே காரணமில்லை'என்றது பாம்பு.
"பாம்பே நீ என்ன சொன்னாலும் ஒரு பலனும் இல்லை. இந்தக் கொலையை நீ செய்திருக்கிறாய்.ஆதலால் நீ கொல்லத்தக்கவனே' என்றான்.
"வேடனே, நான் காரணம் என நீ கருதினால், என்னை இந்தக் காரியத்தில் ஈடுபடுத்திய ஒருவன் இருக்க வேண்டுமல்லவா? என்னை மட்டும் கொல்வதால் உனக்கு என்ன லாபம்' என்று கேட்டது பாம்பு.
" குழந்தையைக் கொன்ற கொலை பாதகனாகிய உனக்குப் பேச என்ன தகுதி இருக்கிறது?' என்றான் வேடன்.
அப்போது எமன் அங்கு வந்து,"பாம்பே, நான் காலத்தால் ஏவப்பட்டு உனக்குக் கட்டளையிட்டேன்.இந்தக் குழந்தையின் மரணத்திற்கு நீயும்,நானும் காரணமல்ல. காலம்தான் காரணம்.
சூரியன்,சந்திரன்,நட்சத்திரம்,இந்திரன்,விஷ்ணு,காற்று,ஆகாயம்,பூமி,மேகம்,அக்னி,வசுக்கள்,நதிகள்,கடல்கள்,அதி தேவதைகள் ஆகியவை எல்லாம்காலத்தால்ஆக்கப்படுகின்றன.அழிக்கப்படுகின்றன.இப்படியிருக்க நாம் குற்றவாளியே அல்ல!'என்றது காலம்.
உடனே பாம்பு வேடனை நோக்கி"எமனின் சொல்லைக் கேட்டாயா? நிரபராதி ஆன என்னைக் கொல்வது தகாது' என்றது பாம்பு.
இதற்கு வேடன், "பாம்பே உன் பேச்சையும், எமனின் பேச்சையும் கேட்டேன். என் நிலையில் மாற்றம் இல்லை.இக்குழந்தை இறக்க நீயும் காரணம், எமனும் காரணம். நீ கொல்லப்பட வேண்டியவன்' என்றான்.
இதற்கு வேடனிடம்" எங்கள் கடமை காலம் இட்ட கட்டளையைச் செய்வது தான்.எங்களிடம் குற்றம் இல்லை என்பதை உணர்வாய்' என்றான் எமன்.
இச்சமயத்தில் காலதேவன் நேரில் வந்தான். பாம்பையும்,எமனையும்,வேடனையும் நோக்கிக் கூற ஆரம்பித்தான்.
"வேடனே நானும்,எமனும்,பாம்பும் ,இக்குழந்தை சாவதற்குக் காரணமில்லை.ஆதலால் நாங்கள் குற்றவாளியில்லை.இந்த குழந்தை செய்த வினைதான் எங்களை துõண்டிற்று.இது இறந்ததற்குக் காரணம் வேறு யாரும் இல்லை.தன் வினைப்பயனாலேயே இக் குழந்தை கொல்லப்பட்டது.ஆதலால் நானோ,எமனோ,பாம்போ,நீயோ,கவுதமியோ யாரும் இக்குழந்தையின் இறப்பிற்குக் காரணம் இல்லை.இக்குழந்தையேக் காரணம்' என்றது காலம்.
காலம் அப்படிச் சொன்னதும், கவுதமி சொல்கிறாள், " தான் செய்த கர்மத்தாலேயே இக் குழந்தை காலம் வந்த போது இறந்தது.இனிக் காலதேவனும்,எமனும் செல்லலாம்.வேடனே..நீயும் இந்த பாம்பை விட்டுவிடு' என்றாள்.பின் அனைவரும் பிரிந்து சென்றனர்.

*13* தார்மீக வாழ்கை வாழலாம்! 26.11.2011

எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை முறையல்ல. இப்படிதான் வாழணும் என்ற வரையறைக்குட்பட்டு வாழ்வதுதான் நல்லொழுக்க வாழ்க்கை முறை.
பிறந்தோம் வளர்ந்தோம் இறந்தோம் என்பது வாழ்க்கையின் அடையாளம் அல்ல. பிறவிப்பயனை அடைய எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அவைகளைத் தேடிகொண்டே இருக்க வேண்டும். முதலில் சாத்தியமாகக்கூடிய ஒன்றை தெரிஞ்சுக்கலாம்.
மனிதனாக பிறந்தவன் இவன் தார்மீகன் என்று பெயரெடுத்து வாழ்ந்து செல்ல வேண்டும். இல்லறத்தில் இருப்பவர்கள் தார்மீக வாழ்க்கை வாழ்ந்துக்காட்ட வேண்டும்.
தான தர்மம் என்பது ஏதோ நம்மால் முடிந்ததைப் பிறருக்கு கொடுப்பது என்றோ, நாம் சேர்த்து வைத்திருக்கும் வருமானத்துக்கு அரசுக்கு இன்கம் டாக்ஸ் கட்டவேண்டுமே என்று வயிறு எரிந்து, 80 ஜி வரிவிலக்கு பெற்ற அனாதை ஆசிரமங்களுக்கு நன்கொடை வழங்குவது நம்மளவில் தர்ம வாழ்க்கை என்றாகிவிட்டது.
எப்படியோ வாழ்க்கையில் தானம் தர்மம் செய்கிறார்களே என்று தான் திருப்திபட வேண்டியிருக்கிறது இன்றைய மனிதர்களைப் பார்த்து.
வாழ்க்கையில் தானம் வேறு; தர்மம் வேறு. இது பற்றி தர்ம சாஸ்திரங்கள் விரிவாக சொல்லி உள்ளன.
உயிர்க்கொலை செய்யாமை, பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமை என சகல உயிர்களையும் சக உயிர்களாக நேசித்தல்,
உண்மை பேசுதல் நியாயமாக நடத்தல் போன்ற செயல்களில் இருக்க வேண்டிய சத்யம், பிறர் பொருள் மீது ஆசைபடாது இருத்தல், மனசுத்தம், மனசாட்சிபடி நடந்து கொள்ளுதல், கண், காது, மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளல் என்பனவற்றை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதை தான் தர்ம சாஸ்திரங்கள்
அஹிம்ஸை, சத்யம், அஸ்தேயம், சவுசம், இந்திரிய நிக்ரஹம் ஆகிய ஐந்து விஷயங்களை முன்நிறுத்திக் கொண்ட வாழ்கையை நடத்துதலே தர்ம வாழ்க்கை என்கிறது. இந்த ஐந்தும் சேர்ந்ததுதான் தர்மம், தர்மம் என்னும் இந்த ஐந்துடன் தானமும் கொண்ட வாழ்கை முறைதான் தார்மீக வாழ்க்கை. இப்படியான பண்பட்ட வாழ்க்கை தான் நம்மை ஆன்மிகத்தில் உயர்த்தும்.
தர்ம சாஸ்திரம் வலியுறுத்தும் இந்த ஆறு விஷயங்களை வாழ்க்கையில் எப்படி பின்பற்றலாம் என்பதை உங்களுக்குச் சொல்லித் தருகிறேன். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
சரி, முதலில் அகிம்சை பற்றி தெரிஞ்சுக்கலாம். கிம்சை என்பது துன்புறுத்துதல். அகிம்சை துன்புறுத்தாமை. பிற உயிர்களை உணவுக்காக கொல்லாமை. பிறருக்கு எந்த விதத்திலும் மன வருத்தத்தை ஏற்படுத்தாது இருப்பது என்று அர்த்தம்.
நம்மால் பிறருக்கு பிரச்சனை,மனவருத்தம் ஏற்படும் அல்லது ஏற்படுத்தும் என்று தோன்றுகிற நேரத்தில் அமைதியாக இருப்பது அல்லது அவ்விடத்திலிருந்து விலகி இருப்பது நல்லது இதுதான் அகிம்சை வழி.
அடுத்தது சத்யம். வாய்மையே வெல்லும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் யாரும் அதை கடைபிடிப்பதில்லை. எந்த சூழ்நிலையிலும் எந்தக் காரணத்திலும் பொய் வார்த்தைகளைப் பேச மாட்டோம் என்று இருக்க வேண்டும்.
ஒருவர் முகத்துக்கு நேரே ஒன்று சொல்வது, பிறகு அவர் முதுகு பக்கம் புறம் சொல்வது நமக்கு பாபத்தை அதிகரிக்கும். சத்தியபடி நடத்தல் சத்திய வழி.
ஒப்பீடு ஏற்பட்டுவிட்டால் அங்கே பொறாமை வந்து விடுகிறது. அஸ்தேயம் என்றால் அடுத்தவருடைய எப்பொருளுக்கும் ஆசைப்படாது இருக்கணும்.
நம்மிடம் இல்லாத பொருளை அடுத்தவரிடம் இருக்கக்கண்டு பொறாமைபடுதல், வயிற்றெரிச்சல் படுதல், சந்தர்ப்பம் கிடைத்தால் அபகரிக்க எண்ணதல் கூடாது என்பதின் ஒட்டு மொத்த அர்த்தம் தான் அஸ்தேயம். நமக்கென உள்ளதை பாதுகாத்து, போதும் என்ற மனமே பொன் செய்யும் என்று பக்குவத்தில், நியாயமான வழியில் கிடைப்பதை இறைவன் நமக்கு கொடுத்தது இவ்வளவு தான் என்று திருப்தி பட்டு கொண்டு வாழவேண்டும். பிறருடைய பொருளுக்கு ஆசை கொள்ளாது இருப்பதுதான் அஸ்தேயம் என்கிற வழி.
சவுசம் என்பது சுத்தம் என்று பொருள்படும். அதாவது பவித்ரம்.
அகத்துõய்மை, புறதுõய்மையை உடல் கொண்டிருக்க வேண்டும். மனம் சுத்தம் என்றால் பொய்,தீய எண்ணங்கள், கள்ளம், கபடம் இல்லாமல் இருத்தல். ஒரு குழந்தையின் மனசு போல இருக்க வேண்டும். இதை தான் ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் என்று சொல்வார்கள். மனதை தியானம், இறைச்சிந்தனை என எப்போதும் புடம் போட்டு வைத்திருக்க வேண்டும். உடல் துõய்மைக்கு சனிநீராடல், யோகம் செய்தல் ஆகிய செயல்களால் உடல் துõய்மையாகும்.
இந்த இரு துõய்மைகளை கடைபிடிக்கும் சவுசம் வழி.

இந்திரிய நிக்ரஹம். இது ஐந்து பொறிகளின் செயல்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வித்தை. இந்த இந்திரிய நிக்ரஹம் வழி நடப்பது என்றால் எப்போதும் இறைவனின் நாமத்தையே கேட்க வேண்டும். இல்லை என்றால் காதால் நல்லவற்றை மட்டுமே கேட்க வேண்டும். கண்களால் நல்லனவற்றையே பார்க்க வேண்டும். நாவால் நாமா சொல்ல வேண்டும். உண்மையே பேச வேண்டும். உணவுக் கட்டுப்பாடு வேண்டும். பிரம்மச்சரியம் பேணுதல் என ஐந்து பொறிகளால் அல்லன தவிர்த்து நல்லனவே புரியவேண்டும். இது இந்திரிய நிக்ரஹம் என்கிற ஐந்தாவது வழி.
மனிதர்களாகப் பிறந்த எல்லோருக்கும் உண்டானவை இந்த ஐந்து வழிகள் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. தர்ம வழியில் செல்ல வேண்டும், இறையருளைப் பெற வேண்டும் என்று எண்ணும் எல்லோருக்கும் இவை ஐந்தும் முக்கியம்.
இப்படி வாழ்பவனே தார்மீகன். இப்படி வாழத்தொடங்கிவிட்டால் இறையனுபவம் பெறுதல் சுலபம்.

*14* வழிபட வழிகாட்டலாம்! 3.12.2011

பக்தி செய்வது என்பது என்னவோ சிரமமான காரியம் என்றே பலர் கருதுகிறார்கள். அதற்கெல்லாம் சாஸ்திர சம்பிரதாயத்தையும் அனுஷ்டானங்களையும் கடைபிடிக்க வேண்டும். தீட்ஷை பெற வேண்டும், தியானம் செய்ய வேண்டும், யோகா செய்ய வேண்டும். யாகம் வளர்க்க வேண்டும், நல்ல குருவானவரை அடைய வேண்டும், மந்திரம் சொல்ல வேண்டும் இப்படி பெரிய நீண்ட பட்டியலிட்டு... இந்த பாஸ்ட் புட் அவசரக்காலத்தில் இதெல்லாம் இயலாத காரியம் என்று வழிபடுதலை வாழ்க்கையிலிருந்து பலர் தள்ளி வைத்து விடுகிறார்கள்.

சாப்பிடுதல், துõங்குதல் போல இயல்பாக நடைபெற வேண்டி ஒரு செயல்தான் வழிபாடு என்பதும்.
கால மாற்றத்திற்கு ஏற்ப, வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. நாகரிக வளர்ச்சி மனதை திசை திருப்பி விட்டது. இளம் தலைமுறை நவநாகரீகத்தில் கணினி யுகத்தில் இருக்கிறார்கள். இவர்களுக்கு பக்தி, பூஜை, மந்திரம், விரதம் என்றால் பயந்து ஒதுங்கி விடுவார்கள். இவைகள் செய்வதுதான் பக்தி என்றோ வழிபாடு என்றோ அர்த்தமில்லை. இவைகள் வழிபாட்டின் ஒரு பகுதி. இதுவே பக்தியாகிவிடாது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். நம்மை திடகாத்திரமாக படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக பிரார்த்தனை அமையவேண்டும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.
பக்தியில் பத்தாம்பசலித்தனமாக இல்லாமல் இளம்தலைமுறையினரின் வாழ்க்கை வேகத்திற்கு ஏற்ப, பக்தி செய்வதில் சுலபவழிகளையும், எளிமை வகைகளையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு யுகத்துக்கும் ஒருவழிபாடு முறையை வேதம் வகுத்துள்ளது. இது கலிகாலம். இந்த யுகத்திற்கான வழிபாடு முறையும் மிக சுலபமானது; எளிமையானது. இதை எத்தனையோ குருமார்களும், ஞானிகளும், யோகிகளும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தக் கலிகாலத்தில் விருப்பமான இறைவனின் நாமாவைச் சொன்னாலே போதும். நாமகீர்த்தனம் செய்தாலே போதும் புண்ணியம் கிடைக்கும் என்பதை இளம் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி பக்தி என்பது எளிமையானது என்று அவர்களை பழக்க வேண்டும். காலையில் எழுந்ததும் ஒரு நிமிடமாவது இஷ்ட தெய்வத்தை நினைத்துக்கொண்டு, அந்தத்தெய்வத்தின் நாமாவை சொல்ல சொல்லணும்.
அடுத்ததாக இளம்தலைமுறையினர் பக்தியில் நாட்டம் கொள்ளவும், வழிபாடு செய்ய துõண்டலையும் அதற்கான சூழ்நிலையையும் நாம் தான் அமைத்துகொடுக்க வேண்டும்.
வீட்டில் அவசியம் பூஜை அறை ஒன்று இருக்க வேண்டும். தினமும் பூஜை அறையில் பொழுது புலர்ந்ததும் நல்விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை அறையில் இஷ்டதெய்வங்களின் படங்கள், ஆன்மிக வழிகாட்டி அல்லது குரு ஒருவர் இருப்பின், அவரின் படமும் வைக்க வேண்டும். தினமும் விளக்கேற்றி, மணியடித்து, பால், பழம் வைத்து வழிபடவேண்டும். இதற்காக குறைந்தது பத்து நிமிடமாவது ஒதுக்கி வழிபட குழந்தைகளைப் பழக்க வேண்டும். காலையில் நெற்றியில் திருநீறு, திருமண், குங்குமம் போன்ற ஏதேனும் ஒன்றை இட்டுகொள்ள வேண்டும்.
அடுத்து கோயில் உற்சவங்கள், விரதநாட்கள், புனித நாட்கள், பண்டிகை நாட்களில் கொஞ்சம் சிரத்தை எடுத்து வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இப்படியான முக்கிய திருநாட்களில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருத்தரும் வழிபாட்டில் ஈடுபாடு செலுத்த வேண்டும். அதற்காக ஒவ்வொருத்தரும்
பூஜை அறையச் சுத்தம் செய்தும், வீட்டை ஒழுங்குப்படுத்துவது, தெய்வ படங்களை அலங்கரிப்பது போன்ற செயல்களை கூட்டாக செய்ய வேண்டும். விரதம் என்றால் விரதம் அனுஷ்டிக்கணும். கார்த்திகை, பிரதோஷம், சஷ்டி போன்ற தினங்களில் குடும்பத்துடன் பக்கத்திலிருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
கோயில் புனிதம் மிக்க இடம். தெய்வத்தின் வீடு. ஆகமவிதிமுறைப்படி கட்டப்பட்டு. புனிதமூட்டல், தொடந்தாற் போல் செய்யப்படும் தினசரி பூஜைகள், வேத மந்திரங்கள் ஓதப்பட்டு, நைவேத்தியங்களும் ஏனையவையும் அர்ப்பணிக்கப் பட்டு, இறுதியில் ஆரத்தி தெய்வத்திடம் காண்பிக்கப்படும். மங்கல மணிகள் ஒலிக்க தெய்வத்தின் உருவம் அல்லது மூர்த்தி வழியாக அந்தந்த தெய்வத்தின் பிரசன்னமும் சக்தியும், ஆசீர்வாதமும் அருளும் வேண்டி நிற்கும் பக்தர்களுக்குக் கிடைக்கும் என்பதை உணர்த்த வேண்டும்.
அடுத்ததாக, விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தீர்த்தயாத்திரைகள் செல்ல வேண்டும். இதுவும் வழிபாட்டின் ஒருவகை வெளிபாடு தான்.
ஆண்டிற்கு ஒரு முறையாவது குருமார்கள், ஞானிகள், சித்தர்களைச் தரிசிக்கவோ, கோயில்கள் போன்ற புனித இடங்கள் நோக்கி பயணம் செய்யப்பட வேண்டும்.
தீர்த்த யாத்திரையின் போது லாப, நஷ்டங்கள், கஷ்டங்கள், வருத்தங்கள், ஏக்கங்கள் எனஅனைத்துவித அன்றாட பிரச்னைகளை எல்லாம் ஒதுக்கி வைக்க வேண்டும். யாத்திரையின் போது, வாழ்க்கையின் தினசரி ஈடுபாடுகள் முற்றாக விலக்கி வைக்கப்படுகின்றன. முக்கியமான வேண்டுகோள்களை மனதில் கொண்டு வழிபாடு செய்யும் போது, அதுவும் அது கூட்டுப்பிரார்த்தனையாக அமையும் போது நம் வேண்டுதல் சில நிச்சயம் நிறைவேறும்.
வாழ்க்கையில் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாட்டை இளம்தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும். அது ஒழுக்கம், உண்மை, நியாயம், உதவி, தர்மம் போன்ற குணங்களை அவர்கள் மனதில் விதைக்க வேண்டும்.
ஏழைகளுக்கும், ஊனமுற்றோர்களுக்கும், வயதானவர்களுக்கும் நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். அந்தப் பண்பை நம் வாரிசுகளும் பின்பற்ற வலியுறுத்த வேண்டும்.
நெறியான வாழ்க்கை, நன்நடத்தையும், சுயநலமில்லா வாழ்க்கை, தவறுகளுக்காக வருந்தி திருந்தும் குணம்,
பெற்றோர், வயோதியர், குருமார்கள்ஆகியோருக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை பின்பற்றும் ஒரு மனிதனுக்கு கடவுள், குரு, குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினரின் ஆசீர்வாதங்கள் கிடைக்கப் பெற்று, எப்போதும் இறைவன் அருள்பெற்று வாழ்வாங்கு வாழ்வான்.


*15* இறைவனுக்கு எல்லோரும் பிரியமானவர்கள்! 10.12.2011

இந்தப் பூமியில் பிறக்கையில் எந்தக் குழந்தையும் நல்லக்குழந்தையாகத்தான். அது வளர வளர...
இருக்கும் இடம், வளரும் சூழ்நிலை, பிறவி குணம் எல்லாம் சேர்ந்து தான் அக்குழந்தையின் நடத்தையை, ஒழுக்கத்தை தீர்மானிக்கின்றன.
இடையில் வந்த இந்த மாற்றம் இடையிலேயே செல்லக்கூடியது தான். இதற்காக யாரும் யாரையும் வெறுக்கக்கூடாது; புறந்தள்ளக்கூடாது. ஏளனம் செய்யக்கூடாது. எல்லாரையும் அன்பால் அரவணைக்க வேண்டும்; நேசிக்க வேண்டும். நல்லவன், தீயவன் என்றெல்லாம் பேதம் காணக்கூடாது.
நன்கு பக்குவப்பட்டவர்களும், ஞானிகளும், யோகிகளும் எல்லோரையும் சமமாகவே பார்ப்பார்கள். அவர்கள் சாதி,இனம், அந்தஸ்து பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் அருள்புரிவார்கள்.
எல்லோரையும் சமமாக கருதவேண்டும் என்ற தத்துவத்தை சொல்லாமல் சொல்வது தான் நம் வழிபடும் கடவுள்களின் வாகனங்களாக இருக்கின்றன.
நாம் பசுவை கோமாதாவாக வழிபடுகிறோம். அதே சமயம் பாம்பிற்கும் முக்கியத்துவம் தந்து வழிபடுகிறோம்.
எத்தனையோ விலங்குகள் இருக்கின்றன. ஆனால், குறிப்பாக இந்த பசுவுக்கும் பாம்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுதை நாம் கொஞ்சம் சிந்தித்தால் போதும். யாரும் யாரையும் எதற்காகவும் எப்போதும் வெறுக்க மாட்டோம்.
பசு தன் கன்றுக்கு மட்டுமில்லாமல் மனிதர்களுக்கும் தன் பாலைத் தாராளமாய் கொடுக்கிறது. பால் தரும் பசுவுக்கு நாம் என்ன உதவி செய்கிறோம்? நாம் பயன்படுத்திய கழிவுகளை அல்லவா அதற்கு உணவாகக் கொடுக்கிறோம். நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியை நாம் சமைத்துச் சாப்பிடுகிறோம். நெல்லின் கழிவாகிய தவிடையும், நெற்கதிரின் வற்றிய நாற்றான வைக்கோலையும் பசுவுக்கு உணவாகக் கொடுக்கிறோம்.
தேங்காய்,எள் இவற்றிலிருந்து கிடைக்கும் எண்ணையை நாம் எடுத்துக் கொள்கிறோம். அதன் கழிவாகிய புண்ணாக்கை பசுவுக்குக் கொடுக்கிறோம். ஆக,மனிதன் சாப்பிட்ட உணவின் இயற்கை மிச்சங்களைச் சாப்பிட்டு, மனிதர்களைத் தன் குழந்தைகளாகவே கருதி தன்னலம் கருதாமல் பாலைக் கொடுக்கிறது பசு.
அதனால் தான் பசுவுக்கும், காமதேனு என்ற தெய்வ உருவமும் கொடுத்தார்கள் நம் முன்னோர்.
மகாவிஷ்ணு ஆதிசேஷன் என்ற பாம்பின் மேல் படுத்திருக்கிறார். பரமசிவன் கழுத்தில் பாம்பு அழகாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. விநாயகப் பெருமான் இடுப்பில் பாம்பை சுற்றிக் கொண்டிருக்கிறார். பகவான் கிருஷ்ணர் காளிங்கன் என்ற பாம்பின் மேல் நர்த்தனம் ஆடுகிறார். முருகனின் வாகனமான மயில்கூட வாயில் பாம்பைக் கொத்திக் கொண்டிருப்பது போல் அமைப்புண்டு. இவை எல்லாம் பாம்பிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்.
நாம் வைக்கும் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்புக்குப் புற்றமைத்து பாலையும் ஊற்றி, அதையும் தெய்வமாக வழிபடுகிறோம். ஒரு பக்கம் தன்னலம் கருதாது பால் கொடுக்கும் பசுவும் தெய்வமாகிறது. மறுபக்கம், அந்தப் பசுவின் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழ்ந்து மனிதனுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடிய பாம்பும் தெய்வமாகிறது ஏன் அப்படி ?
நாம் இதை எல்லாம் சிந்தித்து ஞானம் பெற வேண்டும் என்று இறைவன் ஆசைபடுகிறான். நாம் தாம் சிந்திக்கவே மாட்டேங்கிறோம். என்ன செய்வது?
மனிதப் பிறவி பாவங்களும், புண்ணியமும் கலந்த ஒன்றுதான். புண்ணியம் மட்டும் செய்தவன் என்றால் அவன் சாதாரண மனிதனாக பிறக்க வேண்டியதில்லையே! எல்லாரும் மகானாக அல்லவா பிறந்திருப்பார்கள்! பெரும் பாவம் மட்டுமே செய்தவர்கள் என்றால் பாதி பேர் ஈனப் பிறவிகளாக அல்லவா எடுத்திருக்க வேண்டும்? ஆக பிறவி எடுத்தவர்கள் எவருமே முழுமுழுக்க புண்ணியம் பண்ணியவர்கள் கிடையாது. அது போல முழுமுழுக்க பாவம் செய்தவர்களும் கிடையாது என்பதை மனிதர்கள் உணரவேண்டும் என்பதை புரிய வைக்கவும், இறைவன் தான் படைத்த எல்லா உயிர்களுக்கும் அருள்புரிகிறான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டவே இந்த சிறிய உதாரணமாக பசுவையும் பாம்பையும் தான் அரவணைத்திருப்பதன் வழியாக இறைவன் உணர்த்துகிறான்.
மனித உணவின் எச்சத்தை உண்டு, சத்தான பாலைக் கொடுக்கும் பசுவையும், அந்தப் பாலைக் குடித்துவிட்டு நஞ்சை உமிழும் பாம்பையும் ஏற்றுக் கொள்கிறேன். நல்லவனாக, கெட்டவனாக, புண்ணியம் செய்பவனாக, பாவம் செய்பவனாக இப்படி நல்தும் தீயதும் கலந்திருக்கும் மனிதா, உன்னையா நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ? என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது?
நல்லவனுக்கும் சரி, கெட்டவனுக்கும் சரி, ஆத்திகனுக்கும் சரி, நாத்தினுக்கும் சரி இறைவன் ஒன்றுதான் !
எல்லாவற்றிலும் இறையாற்றல் நிறைந்திருக்கிறது எனும் இந்த ஞானத்தை எளியமுறையில் உணர்த்தும் விதமாகத்தான் வழிப்பாட்டில் நாற்றம் குறைந்த மாட்டின் சாணம் வைக்கப்படுகிறது. சாணிப்பிள்ளையார் என வழிபடப்படுகிறது. மலம் மட்டுமல்ல; சிறுநீருமான பஞ்சகவ்யம் என்று பூஜைப்பொருளில் ஒன்றாக இடம் பெறுகிறது.

இந்த உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் இறைவனின் படைப்பே! அவற்றில் அழகு, கம்பீரம் கொண்ட உயிரினங்களைக் கொண்டாடுவதும் மற்றவற்றை அலட்சியப்படுத்துவதும் கூடாது எனும் ஞானத்தை உணர்த்தவே, மனிதனை எவ்வகையிலும் கவராத சுண்டெலி கூட விநாயகருக்கு ஒரு வாகனமாக சிறப்பிக்கப்பட்டது.

இப்படி இறைவன் உணர்த்தும் மறைமுக அறிவுறுத்தல் மூலம் நாம் சக மனிதர்களிடம் நிறபேதம், சாதி பேதம், பொருளாதார பேதம், நல்லவன், கெட்டவன் என குண பேதம் பாராமல் எல்லாரையும் நேசிப்போம். அரவணைப்போம். இறைவனின் ஆணைப்படி நாம் நடந்து கொண்டால் நம்மை இறைவன் நிச்சயமாக அரவணைத்து கொள்வான் என்பது திண்ணம்!
ஸ்ரீகுருதஷண் சுவாமிஜி.


*16* தேடல் என்பது... 17.12.2011

தீப்பந்தத்தை நீங்கள் எப்படி பிடித்தாலும் அதன் சுவாலை மேல் நோக்கி தான் செல்லும். இது தீயின் இயல்பு.
தண்ணீரை எந்த உயரத்தில் இருந்து கொட்டினாலும் தண்ணீர் கீழ் நோக்கிதான் விழும். இது நீரின் இயல்பு.
என்னக்கிடைத்தாலும் அதில் திருப்தி அடையாமல் இன்னொன்றின் மீது தொற்றிக்கொண்டே அலைபாய்ந்து கொண்டிருப்பது மனதின் இயல்பு.
புற உலகில் அதாவது வெளியே என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது? என்று தேடும் மனதின் தேடல் பயணங்கள் முடிவதில்லை.
உள் முகமாக அதாவது நமக்குள் நாம் உள் புகுந்த உள்ளே என்ன இருக்கிறது? என்ன நடக்கிறது? என்று தேடும் மனதில் பயணம் ஏதோ ஒருநிலையில், ஒரு புள்ளியில் தேடப்படுகின்றதும், தேடும் மனசும் கரைந்து ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது.

புற உலகில் எந்த ஒன்றை அடைவதன் மூலம் யாரும் வாழும் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்துவிட்டதாகக் கருத முடியாது. வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும், ஒருசெயலைத் தொடங்கும் முன்பு அதனால் கிடைக்கும் பலன், வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் தேடல்களையும் ஆசைகளையும் தீர்த்துவிடும் என்ற எண்ணம் ஆரம்பத்தில் தோன்றுகிறது. ஆனால், நாம் எதிர்ப்பார்த அந்த ஒரு செயல் நல்லவிதமாக, வெற்றிக்கரமாக முடிந்தவுடன் மன திருப்தி அடைவதில்லை. அப்படியே வந்தாலும், அது அந்த நேரத்தில் தற்காலிக திருப்தியாகத்தான் அமைகிறது. இது இயல்பாக எல்லோரிடம் காணப்படும் சுபாவம் தான்.

குழந்தையாக இருக்கும் போது ஒரு பொம்மைக்கு அழுகிறோம். பொம்மை கிடைத்தவுடன் அந்த நேரத்தில் அழுகை நிற்கிறது. அருகிலேயே வைத்துக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறோம். சில நாட்கள் கழித்தவுடன் பொம்மையின் மேல் இருக்கும் ஆசை குறைந்துவிடுகிறது. பொம்மையால் கிடைத்த மகிழ்ச்சியும் மறைந்துவிடுகிறது. அடுத்து வேறு ஒன்றுக்கு அழத்தொடங்கிவிடுகிறோம்...

பள்ளியில் சேர்ந்ததும் நன்றாகப் படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பது விருப்பமாக, தேடலாக இருக்கிறது. நாம் எதிர்ப்பார்த்தப்படி நினைத்ததும் நடந்து விடுகின்றது. அந்த நேரம் மனதில் மகிழ்ச்சி!
அடுத்து சில நாட்களிலேயே நிறைய மதிப்பெண் எடுத்து, படித்து என்ன பலன்? ஒரு கவுரவமான, கைநிறைய சம்பளம் தரக்கூடிய ஒரு வேலை கிடைக்கலையே! என்ற எண்ணம் வந்து முந்தைய மகிழ்ச்சியை துரத்திவிடுகிறது.
பல நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கிறோம். எதிர்ப்பார்த்த ஒரு வேலையும் கிடைக்கிறது. உடனே மகிழ்ச்சி. சில நாட்களில் அந்த மகிழ்ச்சியை விரட்ட மனதிற்குள் மீண்டும் தேடல் தொடங்குகின்றன. அடுத்தவரை ஒப்பிட்டுப் பார்த்து, இதைவிட நல்ல வேலை, நல்ல நிறுவனம்,நல்ல சம்பளம் கிடைக்காதா என்று மனதில் ஏக்கம் படையெடுக்கின்றன.
இப்படி புற உலகில் மனம் எதையாவது ஒன்றை தேடிக்கொண்டே இருக்கும். அதன் தேடல் பயணங்கள் முடிவதில்லை.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்கிறார் வள்ளுவர்.
அவர் கூற்றுபடி இவ்வுலக வாழ்விற்கு செல்வம் தேவைதான். அதற்கு அவரவர் முயற்சி, உழைப்பிற்கு ஏற்ப பல பட்டங்களைப் பெறுவது, நல்ல வேலையைத் தேடிக்கொள்வது,வாழ்க்கைக்குத் தேவையான வீடு,மனை, நகை என பொருட்களைச் சேர்த்து வைப்பது போன்றவை உங்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் முயற்சிக்காக இருக்கலாம். அது ஒன்றும் தவறில்லை தான். ஆனால், மனதின் தேடல் பொருளுக்காகவே, சிற்றின்பத்துக்காகவே இருந்துவிடக்கூடாது.

தேடல் என்பது அகம் சார்ந்தது. தன்னைத்தானே உணர்வது. பிறந்ததன் பலன், பயன் என்ன என்று அறிவது. நம்மால் என்ன காரியம் நடக்க வேண்டும் என்று அறிவது. இந்த வாழ்க்கையின் ஆதாரமாக விளங்குவது எது என்பது போன்ற ஆத்ம சுயபரிசோதனை யில் ஈடுபடுவதாக மனதின் தேடல் இருக்க வேண்டும்.
இப்படியான தேடலில் தான் மனம் அவரவர் அளவில் அகம் சார்ந்த பல உண்மைகளைக் கண்டுகொள்ளும். இப்படியான மனதின் தேடலுக்கு விடை அறிய முயலும்போது, அதற்கான விடை நிச்சயமாக எழுதிக்காட்டக்கூடிய வார்த்தைகளாக அல்லது அறிவினால் உணர்த்தக்கூடியதாக அது இருக்காது. அது அனுபவ ரீதியாக உணர்வதும் விழிப்புணர்வு கொள்வதுமாக இருக்கும்.

இப்படி ஒரு புரிதல் மனதுக்கும் ஏற்பட அல்லது உருவாக அடிப்படையில் மனம் பல பயிற்சியால் பக்குவப்பட்டிருக்க வேண்டும். மனம் பக்குவம் ஏற்படுவது என்பது கடலில் கப்பல் நிலைக்கொண்டு இருக்க நங்கூரம் ஆதாரமாக இருப்பது போல், வானில் பட்டம் உயரத்தில் பறப்பதற்கு நுõலின் மறுமுனை உறுதியாக ஒன்றை பற்றிக்கொண்டு இருக்க வேண்டும்.
அது போல மனமும் ஏதோ ஒன்றை ஆதாரமாக பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். அது தவமாக இருக்கலாம். தியானமாக இருக்கலாம். பக்தியாக இருக்கலாம். தன்னலம் கருதாத சமூக சேவையாக இருக்கலாம். இப்படியான ஒன்றை மனம் ஆதாரமான பிடித்துக் கொண்டு தேட ஆரம்பித்தால் அந்த தேடல் உண்மையான மனநிறைவை அளிக்கும்.
இந்த உன்னத தேடல் புற உலக பொருட்களின் கவர்ச்சியில், மாயையில் சிக்காமல் உள்முகமாக பயணிப்பதால் மனம்
அன்பு, உண்மை, தர்மம் ஆகியவற்றின் பரிமாணங்களில் அனுபவப்பட்டு " எல்லோரும் இன்புற்றிருக்க அல்லால் வேறொன்றும் அறியேன் பராபரமே!' என்று ஒடுங்கிவிடும்.
நமது உடம்பில் எங்கு காயம் ஏற்பட்டாலும் கண்கள் கண்ணீர் சிந்தும். இது முடிவெடுத்து நடக்கும் செயலல்ல. அது போல மனமும் உலகில் எந்த உயிர் துன்பப்பட்டாலும் உருகும். இந்த நிலையில் மனதின் புற தேடல் பயணம் முடிந்துவிடும். முடிந்த இடத்தில் இறையனுபவம் இறை இன்பத்தை கொட்டும்.
ஸ்ரீகுருதஷண் சுவாமிஜி


*17* இறைவனுக்குப் பிடித்தபடி நடக்கலாம்! 24.12.2011

நாம் இறைவனுக்குப் பிடித்த வகையில் நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். எந்தக் காரியங்களைச் செய்தால் இறைவன் நம்மிடத்தில் திருப்தி அடைந்து அனுக்ரகம் செய்வாரோ அந்த நல்லசெயல்களை செய்து வாழ்வதே ஆனந்த வாழ்க்கை!
எதைச் செய்தால் இறைவனுடைய திருவுள்ளம் சீறுமோஅவ்வகையான காரியங்களை உடனே விட்டொழிக்க வேண்டும்.
எந்த நற்காரியங்கள் செய்தால் இறைவன் மகிழ்ச்சி அடைவான்? எந்த காரியங்கள் செய்தால் இறைவனுக்கு கோபம் உண்டாகும்? என்பதை நம் படிப்பறிவால் தீர்மானிக்க முடியாது.
ஞானிகளும், தவயோகிகளும், அவதார புருஷர்களும் இறைவனுடைய அபிப்பிராயத்தை நேராகவே அறிந்துகொள்ள முடியும். அதன்படி அவர்கள் நடந்து கொள்ள முடியும்.
ஆனால், நம்மை போல சாதாரணமானவர்களுக்கு இறைவனைப்பற்றிய ஞானம் இல்லாததால் இறைவனின் அபிப்பிராயம் இன்னதென்று தெளிவாக தெரிந்து கொள்ள சக்தி இல்லை.
இதற்கு நாம் என்ன செய்ய முடியும்?
நம்மைபோல சாதாரணமானவர்களின் நிலையை புரிந்து கொண்டு தான் இறைவன் தன்னைப்பற்றிய அறிய வேதங்களைப் படைத்துள்ளார். அதுமட்டுமல்ல; தன்னை அறிந்துகொண்ட சித்தர்கள், யோகிகள், ஞானிகள் மூலமாக சாஸ்திரங்கள் பல படைத்துள்ளார்.
ஆதலால், வேதம், புராணம், தர்மசாஸ்திரம் முதலியவற்றைக் கற்றறிந்தோ, அதைக் கற்றவர் சொல்வதைக் கேட்டோ, இது நல்லது, இது தீயது என்று உணர்ந்து காரியங்களைச் செய்ய வேண்டும்.
அல்லது வேத, சாஸ்திரங்களை முழுமையாக கற்றுணர்ந்த குருமார்களை நாடி, வாழ்க்கையில் தெய்வ கைங்கர்யம் எதை எல்லாம், எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொண்டு நடக்க வேண்டும்.
தெய்வத்தன்மை தரும் செயல்கள் என்றும் இறைவனுக்குப் பிடித்த செயல் சிலவற்றை நாம் வாழ்க்கையில் நிச்சயமாக கடைப்பிடிக்க வேண்டும். அந்த நல்ல செயல்கள் எவை என்பதை கீதையில் கண்ணன் பட்டியலிடுகிறான்.
அவற்றில் சில முக்கியாமானவைகள்:
அபயம்: வாழ்வின் யதார்த்த உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். மரணம் பற்றிய அச்சம் இல்லாதிருத்தல் வேண்டும். நேர்மையான நடத்தை இருந்தால் பயம் இருக்காது. ஒவ்வொரு தெய்வமும் அபயக்கரம் காட்டுகிறது. இறைச் சிந்தனையில் வாழ்ந்து வந்தால் எந்த பயமும் இருக்காது.
ஸத்வ ஸம் சுத்தி: வஞ்சம் பொய்யால் <உள்ளம் மாசு படும். பற்றற்ற தொண்டு மற்றும் இறைவழிபாடுமூலம் மனத்துõய்மை கிட்டும்.
ஞானயோக வ்யவஸ்திதி: தான்அறிந்ததற்கு ஏற்ப ஒழுகுதல் யோகம். எது சரி, எது தவறு, எது நித்யம், எது அநித்தியம் என்பதை அறிந்து அதன் படி நடத்தல். வெற்றி தோல்வி, புகழ் இகழ், சுக துக்கம் ஆகியவற்றில் மனம் சமநிலையில் இருக்க வேண்டும்.
தானம்: பாத்திரம் அறிந்து, காலம், தேசம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தானம் அளித்தல் உத்தமம். பூ தானம், கோதானம், ஸ்வர்ண தானம், வஸ்திர தானம், அன்ன தானம், அபய தானம் செய்தல் வேண்டும்.
தமம்: புலன்களை, சுகம் தரும் தத்தம் விஷயங்களில் செலுத்தாமல் கட்டுப்படுத்துவது தமம்.
யக்ஞம்: சுயநலம் மற்றும் ஆணவம் இல்லாமல் கடமைகளை அல்லது செயல்களைச் செய்வதே யக்ஞம். வியாபாரம், அதிகாரம், தொண்டு, விவசாயம் போன்ற தொழில்களையும் யக்ஞமாகக் கருதி செய்திடலாம். தாய், தந்தை, குரு,பசு, அந்தணன், தெய்வம் ஆகியோருக்கு உடல், மனதால் செய்திடும் தொண்டும் யக்ஞம் தான்.
ஸ்வாத்யாயம: தன்னை அறிதல் பொருட்டு உயர்ந்த கருத்துக்களை படித்தலும் கேட்டலும் ஸ்வாத்யாயம்.
தபம்: இடையூறுகளையும் இன்னல்களையும் கஷ்டங்களையும் உளப்பூர்வமாக ஏற்பதே தபம்.
ஆர்ஜவம்: சொல். செயல் எல்லாம் இயல்பாக இருத்தல்.
அகிம்சை: மனம், வாக்கு, காயத்தால் பிறரைத் துன்புறுத்துவதும், பிறருக்கு கேடு விளைவிப்பதும் கூடாது.
சத்யம்: சுயநலம் தவிர்த்து, பிறர் நலனை மனதில் கொண்டு, பார்த்ததை, கேட்டதை, படித்ததை, புரிந்ததை, நினைத்ததை மிகைப்படுத்தாமலோ குறைக்காமலோ அப்படியே சொல்வது.
அக்ரோதம்: பிறருக்கு தீங்கு விளைவிக்கும் எண்ணத்தினால் மனதில்ஏற்படும் கொந்தளிப்பே குரோதம். அவ்வாறு இருக்கக்கூடாது.
தியாகம்: உலக விஷயங்கள் நல்லது, கெட்டது கலந்தவை. இரண்டையும் விடுதலே தியாகம். மனதளவில் நாட்டம், விருப்பம், ஆசையை விடுதல்.
சாந்தி: பற்றுதல் மற்றும் வெறுப்பு ஆகியவை உள்ளத்தில் ஏற்படுத்தும் சலனம் இல்லாமல் இருத்தல்.
அபைசுனம்: ஒருவரைப் பற்றிய குறைகளை, தோஷங்களை மற்றவரிடம் சொல்லாமல் இருத்தல்.
தயாபூதேஷூ: எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளுதல் தயா. பிறருடைய இன்பத்தில் ஆனந்தமும் துன்பத்தில் துயரமும் கொள்ளுதல் தயை. எவ்வளவு இளகிய மனசு என்று சூட்சும ஆணவம் இல்லாதிருக்க வேண்டும்.
அலோலுப்த்வம்: பிறர் சுகம் அனுபவத்துக்கொண்டிருக்கும் போது எனக்கும் வேண்டும் என்ற நாட்டம் இல்லாமல் இருத்தல்.
மார்தவம்: கடினமான, கொடூரமாக இல்லாமல் மனம் மென்மையாக இருப்பதே மார்தவம்.
ஹ்ரீ: நெறிமுறைகள் மற்றும் உலகநியதிக்கு மாறாக நடக்கத் தயங்குவது ஹ்ரீ.
அசாபலம்: சலித்துக் கொள்ளாத மனம்.
க்ஷமா: தண்டிக்கும் ஆற்றல் இருந்தும் தீங்கு இழைப்பவரை மனதார மன்னிப்பது.
த்ருதி: பொறுமை.
ஷெளசம்: புறத்துõய்மை.
அத்ரோஹம்: பழிவாங்க வேண்டும் என்ற உணர்வு இல்லாதிருத்தல்.
நாதிமனிதா: செல்வம், கல்வி, குணம், திறமை, பதவி, புத்தி, வர்ணம், ஜாதி, ஆஸ்ரமம் போன்ற விஷயங்களின் அடிப்படையில் பிறரைக்காட்டிலும் தான் சிறப்பானவன் என்ற எண்ணம் இல்லாதிருத்தல்.
மேலே சொன்ன நெறிபடி ஒருவர் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிம்மதியாக இருக்கும். ஆனந்தமாக இருக்கும். இறையருளும் பூர்ணமாக கிடைக்கும்.
ஸ்ரீ குருதஷண் சுவாமிஜி.

*18* குடும்பம் ஒரு கோயில்! 31.12.2011

நாளை புத்தாண்டு தினம். புதிய முயற்சிகள், புதிய விருப்பங்கள் எல்லாம் புத்தாண்டின் வேண்டுதல்களாக, அவை வெற்றி பெறுவதாக இருக்கட்டும். எல்லோரும் இறைவன் அருள் பூர்ணமாக கிடைக்கட்டும்!

புத்தாண்டு நாளில் கிடைக்கும் சாந்தோஷம், பூரிப்பு, பிரார்த்தனைகள் எல்லாம் எல்லாருக்கும் எல்லா நாட்களிலும் கிடைக்கணும். புத்தாண்டு ஒரு நாள் சந்தோஷத்திற்காக நாம் கோயில் செல்கிறோம். நாளெல்லாம் சந்தோஷமாக இருக்க நம் வீட்டையே கோயிலாக்குவோம்!

கோயில் குடும்பம் இவை இரண்டுமே நம் பாரத தேசத்தின் இரண்டு கண்கள் போன்றவை. இப்படி ஒரு பெருமை மிகு அமைப்பு உலகில் எந்த நாட்டிலும் சிறப்பு பெற்றதாக இருப்பதில்லை.

ஒரே வீட்டில் வசித்து, ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் குடும்பம் என்று பெயர்.

உலகத்தில் ஆயிரம் உறவு முறைகள் இருந்தாலும்,
கணவன் மனைவி உறவு உன்னதமானது. இந்த உன்னத உறவு அமைய காரணமாக இருப்பது குடும்ப வாழ்க்கைத்தான்!

இந்தியாவைப் போல குடும்ப வாழ்க்கை முறையை எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.
இது நமக்குக் கிடைத்த வரம். இந்த வரம் கிடைக்க காரணமாக இருந்தவை நம்மை பக்குவப்படுத்திய வேத,புராண, இதிகாச, மத கொள்கைகளாகும்.

குடும்பம் ஒரு கோயில் என்பர். கோயிலோடு ஒப்பிடும் அளவுக்கு குடும்பம் உன்னதமான இடத்தைப் பெறுகிறது. ஒரு கோயிலில் கிடைக்கக்கூடிய அமைதி, நிம்மதி, புனிதம், புண்ணியம் எல்லாம் ஒரு நல்ல குடும்பத்தில் கிடைக்கும் என்பது தானே பொருள்.

கோயில் போல என்றால் அந்தக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும்? கொஞ்சம் சிந்திப்போமா?

குடும்பம் என்பது ஆசை, பாசம், அன்பு, விருப்பு, வெறுப்பு, சந்தோசம், நிம்மதி, வரவு, செலவு, உறவு, நட்பு எல்லாம் சேர்ந்த ஒரு கலவை. மகிழ்ச்சி, துக்கம்,ஏற்றம், இறக்கம் எல்லாம் குடும்பத்தில் வந்து செல்லக்கூடியவைதான்.

குடும்பத் தலைவன் நன்றாக சம்பாதித்து வீட்டுத்தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே, அந்தக்குடும்பம் நல்ல குடும்பமாகி விடாது. அன்பு, மரியாதை, விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, விருந்தினர் போற்றல், விருந்தோம்பல் புரிதல், அண்டை அயலாருடன் இணக்கமாக இருத்தல்,அண்டிப்பிழைக்கும் பிராணிகளைக் காத்தல் என எல்லாம் சேர்ந்து இருந்தால் தான் அது நல்லகுடும்பம்.

இப்படி பட்ட குடும்பத்தில் எப்போதும் இறைவனின் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இப்படி தெய்வீகம் நிறையும் ஒரு நல்ல குடும்பத்தில் இருந்து தான் கல்விமான்கள், அறிஞர்கள், ஆன்மிகவாதிகள், நல்ல தொழிலாளிகள், கலைஞர்கள் உருவாக்கப்படுகின்றார்கள்.

எந்த மனிதனுக்கும் அவனது குடும்பம் பின்புலமாக இருக்கும். அவனது நற்பண்புகளுக்கும், நற் சிந்தனைகளுக்கும் அந்த நற் குடும்பச்சூழல்தான் பின்புலமாக இருந்து அவனை உயர்த்துகின்றது. உலகத்திற்கு அவனை நல்ல குடிமகனாக அடையாளம் காட்டுகிறது.

நல்ல குடிமகன்களை உருவாக்குவது ஒரு வீடு என்றால், அந்த வீட்டின் தெய்வமாக இருப்பது அன்னைஅல்லவா?
உலகில் மனிதனுக்கு முதல் உறவு, முதலில் தேவைப்படும் உறவு அம்மா. அம்மா என்பவள் பிள்ளையின் துக்கத்தையும், சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்வாள்.

காலை முதல் இரவுவரை ஒரு தாய் தன்னலம் கருதாமல், பிறர்நலம் கருதியே உழைக்கிறாள்; குடும்பத்தாரின் சந்தோஷத்தையே தன் சந்தோஷமாக நினைத்து வாழ்கிறாள். அன்றாட வாழ்வில் அவளின் செயல்பாடுகளே குடும்பத்தாருக்கு பாடங்கள் தான்.

இப்படிப்பட்ட பெருமையை கொண்டிருக்கும் பெண் இனத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதால் தானோ என்னவோ, ஆதி அந்தமில்லாத அந்த ஈசனே காரைக்கால் அம்மையாரை "அம்மையே" என்றழைத்ததாக சமயவரலாறு கூறுகின்றது.
அம்மாதான் அப்பிள்ளைகளுக்கு அன்பு, பொறுமை, கனிவு, நாகரிகம், கலாசாரம், மொழி என பலவற்றை கற்றுக் கொடுக்கிறாள்.
குடும்பத்தில் அம்மா தான் முதன்மையாக இருக்கிறாள்.
ஒரு குடும்பத்தில் இருக்கும் தந்தை, தாய், கணவன், மனைவி, குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் சரியாகச் செய்தால், அந்த வீடு அமைதி, நிம்மதி கொண்டிருக்கும். இவற்றால் தெய்வீகம் மலரும்.
இப்படி ஒரு குடும்பம் ,இப்படி ஒரு இனிமையான சூழ்நிலையில் வளரும் எல்லோரும் நல்லவர்களாக இருந்தால், அந்தக் குடும்பம் நல்ல குடும்பமாக இருக்கும்.

ஒரு வார இதழில் ஒரு கூட்டுக் குடும்பத்தில் 80 பேர் கூடிவாழ்வதாக படித்தேன்.
தேனி மாவட்டம் பெரியகுளம் வைகைக் கரை அருகே உள்ள சிந்தால்புரத்தில் அந்த அழகான கூட்டுக்குடும்பம் இருக்கிறதாம். அவர்கள் மூன்று தலைமுறையாய் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களாம்.
அந்த வீட்டுக் குடும்ப தலைவர் வீரமுத்து, "கூட்டுக் குடும்பம் பெரிய வித்தையெல்லாம் இல்லீங்க. யாரா இருந்தாலும், உண்மையா உழைக்கணும். அவங்க அவங்களுக்கு குடுத்த வேலையை நேர்மையா செய்யணும். மனுஷனுக்கு மனுஷன் வித்தியாசமா இருக்கக்கூடாது. உட்கார்ந்துட்டு ஏமாத்தி பொழைக்கக்கூடாது. உழைக்கணும். உழைப்பும் விட்டுக் கொடுத்துப் போற மனப்பக்குவமும்தான் கூட்டுக் குடும்பத்தை கவுரவப்படுத்தும்' என்றாராம்.
அவர் சொல்வது உண்மைதான். குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடிக்க வேண்டும். அதை இந்த புத்தாண்டு தினத்தில் இருந்து நிச்சயமாக பின்பற்றுவோம் என்பதே நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.
குடும்பத்தைக் கோயில் என்று சொல்லக் காரணமே ஒரு நல்ல குடும்பத்தில் நடக்கக்கூடிய நற்செயல்கள் எல்லாம் பார்த்து இறைவன் அவர்களுக்கு அருள்புரிவான். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் தோணியாகவும் இருந்து உதவுவான்.
ஸ்ரீகுருதஷண் சுவாமிஜி.

***

*19* அன்பே சிவம்! 7.01.2012

உண்மை அன்பு , உண்மை அறிவு, உண்மை ஒழுக்கம் இதை கொண்டுதான் இறைவனை அடைய இயலும் என்றார் வள்ளலார் . அதனால் தான்
"ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்று இறைவனிடம் பிரார்த்தனையாக வைத்தார்.

அன்பு, சிவம் என்பவை இரண்டும் வெவ்வேறு பொருளல்ல ;அன்பே சிவம் என்பதனை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே. அவர்களே ஞானிகள். அவர்கள் கடவுள் தன்மை பெற்றவர்கள் என்கிறார் திருமூலர்.

அன்பின் வடிவமே சிவம் என்பதையும், அன்பு மார்க்கமே சிவத்தை
அடையும் மார்க்கம் என்பதையும் யாரும் அறியார்! அன்பு மார்க்கமே சிவத்தை அடையும் மார்க்கம் என்கிறார் அவர்.

அன்பு என்பது பெற்றோர் <, மனைவி < பிள்ளைகள் ,பிற உறவினர், நண்பர்கள் <என்று பலர் மீதும் கொள்ளும் பற்றை அன்பு என்று சொல்கிறோம். உலக மக்கள் அனைவரிடமும், எல்லா உயிரினங்களிடத்தும்கூட அன்பு செலுத்தவேண்டும் என்று தமிழ் நீதி நுõல்கள்கூறுகின்றன.

அன்பு நிறைந்த உள்ளம் இறைவன் எழுந்தருளும் திருக்கோயில் ஆகும்.
உள்ளத்தில் அன்பை நிறைத்தவர்கள் இறைவனைத் தேடத் தேவையில்லை.
இறைவன் விரும்பும் இருப்பிடமாக உள்ளத்தை ஆக்கியவர்கள் இறைவனை எங்கும் உணர்வார்கள்.
""நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்'
""தொண்டர் அகமலால் கோயில் இல்லை'என அன்புநெறியைச் சொல்வார் திருநாவுக்கரசர்.

அன்பு என்ற உணர்வு உள்மனதிலிருந்து எழ வேண்டும். தாயிடம் காட்டும் உணர்வுபூர்வமான அன்பை இறைவனிடமும் காட்ட வேண்டும்.

எப்போது நாம் கடவுளை வழிபடத் தொடங்குகிறோமோ, அதாவது, அன்பு செலுத்தத் தொடங்குகிறோமோ அப்போதே நாம் நம்மையே நாம் வழிபடத் தொடங்கி விட்டோம் என்று அர்த்தம்.

நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு,
என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் உண்மையான அன்பு அல்ல.

மனிதனின் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை அளிக்கக்கூடியது அன்பு மட்டும்தான். அன்பாக இருப்பது எப்படி என்பதை நாம் உணராமலிருக்கிறோம்.
அன்பை நாம் எப்படி உணர்வது ? அன்பாக இருப்பதுதான் அன்பு என்பதை நாம் உணர ஒரே வழி. மனம் நிறைந்த அன்பு மட்டுமே பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மன மகிழ்வைத் தரும்.

உலகில் அன்பு மூன்று வகை:
மிருக அன்பு :
மிருகங்களிடத்திலும் அன்பு உண்டு. அதிலும் சில மிருகங்கள் மனிதனைவிட அதிகமான அன்பும் நன்றியும் உள்ளதாக இருக்கின்றன.
என்னதான் மிருகங்களிடம் அன்பு காணப்பட்டாலும், அந்த அன்பு பொதுவாக சுயநலம் சார்ந்த அன்பாகவே இருக்கும். தனக்கும் தன் குட்டிகளுக்கும் போகத்தான் எதுவுமே என்ற நிலையில் வாழும். தன்னை வாழ வைப்பது யார், யாரிடம் தஞ்சமாக உள்ளோம், தனக்கு உணவு கொடுப்பது யார் என்ற எந்த ஒரு உணர்வும் இல்லாமல் இருக்கும்.

மனித அன்பு:
மனித அன்பு என்பது பச்சோந்தி போல அவ்வப்பொழுது நிறம் மாறும் தன்மை கொண்டது. ஏழை, பணக்காரன், பெண், ஆண், தொழிலாளி, முதலாளி, என்பதின் அடிப்படையிலும், சுயலாபம், சுயநலத்துடன் மனிதன் பிறரிடத்து அன்பு காட்டுவான்.
அன்புடையவர் தம்மையே பிறருக்குத் தருவார். அன்பிலார் எல்லாம் தமக்கே என்று வாழ்வர் என்று வள்ளுவரும் சுட்டுகிறார்.

தெய்வீக அன்பு:
தெய்வீக அன்பு என்பது தன்னை பற்றி என்றுமே கவலைப்படாது, பிறர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னையே கொடுக்க கூட தயங்காது. ஒருவன் எத்தனை முறை திட்டினாலும், எத்தனை முறை கடன் வங்கி திருப்பிதாராமல் போனாலும், எவ்வளவுதான் துரோகம் செய்திருந்தாலும் அவன் மீதிலும் அன்பு வைக்கும். அந்த நிலையான அன்பே தெய்வீக அன்பு.

இத்தகைய தெய்வீக அன்பு தான் சிவமாகும் என்கிறார் திருமூலர். அன்பு தான் இறைவனின் மொழி. அந்த மொழியை யார் பேசினாலும் அவர்களும் இறைவனாகிவிடுவர்.

தெய்வீக அன்பு மனிதன் நல்லவனா, கெட்டவனா எப்படிப்பட்டவன் என்றெல்லாம் பார்க்காது. தனக்கு ஏதாவது கைமாறு கிடைக்குமா, லாபம் கிட்டுமா என்று பார்க்காது. ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்க்காது. யாரையும் மோசம் செய்யாது. மனம் நோக பேசாது. இருக்கும் சூழ்நிலையை பார்க்காது. ஆனால், பிறருக்கு எவ்விதத்திலாவது உதவ வேண்டும் என்று நினைக்கும். ஏங்கும்.

அன்பு நீடித்த சாந்தமும் தயவும் உடையது. அன்புக்குப் பொறாமையில்லை. அன்பு தன்னைப் புகழாது. இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது. தற்புகழ்ச்சியை நாடாது. சினமடையாது. தீங்கு நினையாது. அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும். சகலத்தையும் விசுவாசிக்கும். சகலத்தையும் நம்பும். சகலத்தையும் சகிக்கும்.
அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அன்பு எதற்கும் அடிபணியும்.

இத்தகை சக்தி, ஆற்றல் உள்ள அன்பு எல்லோர் நெஞ்சிலும் வற்றாத நதியாக உருவாகிறது. அந்த நதி நம்மை இறைவன் என்னும் கடலில் சங்கமம் அடைய நம்மை சுமந்து சென்று சேர்த்துவிடுகிறது.
நாம் அத்தகைய அன்பை பல சுயநல அணைகள் கட்டி அதை வெளியே பாயவிடாமல் செய்து விடுகிறோம். கடைசியில் நமக்கே அது பயன்படாமல் நீர்த்துப் போகவும் செய்துவிடுகிறோம்.

அன்பே சிவம். அன்பே மதம். அன்பே தவம் என்று அன்பு செய்வோம். வாழும் பூமி அன்பு என்ற சக்தியால் சுற்றட்டும். எல்லோர் வாழ்க்கையிலும் அன்பே நிரம்பட்டும். எல்லோர் வீட்டிலும் அந்த இறைவன் வந்து, இருந்து அருள் புரியட்டும்!
ஸ்ரீ குருதஷண் சுவாமிஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக