திங்கள், 7 ஜூன், 2010

( என் படைப்புகள்-2

1.மரணத்தின் மடியில்
வாழ்ந்த நடிகை!

( என் படைப்புகள் : தினமலர் பெண்கள் மலர் பிரசுரிக்கப்பட்ட பேட்டிகள், கட்டுரைகள்)
மரணம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரிவதில்லை. என்றோ ஒருநாள் அது நிகழும் என்ற உண்மை மட்டும் எல்லாருக்குமே தெரியும். ஆனால் இந்த தாய்க்கு தான் இறந்து விடுவோம் என்று தெரியும். அதனால் தன் பிள்ளைகளிடம், "எப்போதும் உங்க கூடவே இருக்கமாட்டேன். ஆனால் இருப்பது போல உணர்வை, நினைப்பை தந்து கொண்டிருப்பேன். நீங்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தால் பிரகாசமான நட்சத்திரம் மின்னுவதை பார்ப்பீர்கள். அந்த நட்சத்திரமாக நானிருந்து உங்களை நேசித்துக் கொண்டிருப்பேன்' என்று தன் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறி தன் இழப்பு பிள்ளைகளை பாதிக்காத வகையில் அவர்களை தயார் படுத்தியிருக்கிறார். அந்த தாய் ஜேட்கூடி. இவர் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறப்பிற்கு முன் தன் பிள்ளைகளிடம் கூறிய வார்த்தைகள்தான் இவை.
இவரின் பெயரை சொல்வதை விட "பிக் பிரதர்' நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியிடம் இன வெறி பேதத்தை துõண்டும் வகையில் பேசிய பெண் என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.

லண்டனில் பெர்மான்டுசேவில் ஜூன் 6, 1981 பிறந்த இவர், ஆரம்ப காலத்தில் ஏழ்மையிலும், குடும்ப பிரச்னையிலும் தான் வளர்ந்தார். 5 வயதில் லண்டன்ஸ் பர்னிங் என்ற டி.வி. தொடரில் தோன்றினார். பின்னர், ஒரு பல் டாக்டரிடம் செவிலிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். 2002 ல் பிக்பிரதர் டிவி தொடர் நிகழ்சியில் கலந்து கொண்டு ஷில்பா ஷெட்டியிடம் சண்டைப்போட்ட பிறகுதான் மீடியாவின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. ஜேடியின் பேச்சைக் கேட்ட ஷில்பா ஷெட்டி மனம் உடைந்து அழுதார். இந்த நிகழ்ச்சியை லைவ்வாக பார்த்து உலக மக்கள் அதிர்ந்தனர். உலகளவில் பலரின் கண்டனத்துக்கு உள்ளான ஜேட், ஷில்பா ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் அவர் அந்த நிகழ்சியிலிருந்து விலக்கப்பட்டார்.

பின்னர், இந்த கசப்பான சம்பவத்தை மறக்க, இந்தியர்களை அவமானப்படுத்தியதற்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் இந்தியாவிற்கு வந்து தெருவோர குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட நன்கொடை வழங்கினார் ஜேட். பிட்னஸ் வீடியோ மாடலாக நடித்து இவர் வெளியிட்ட அந்த வீடியோக்கள் மிகவும் பிரபலம்.

பிறகு, ரியாலிட்டி ஷோ தொகுப்பாளர் ஜெப்பிராஸியரை காதலித்து, அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். பிறகு ஜெப்பிஸியுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவரை விட்டு விலகினார். குழந்தைகள் இருவரையும் தன்னுடன் வைத்துக் கொண்டார். பின்னர் ரேயன் அமுவுடன் பழகிவந்தார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட, கடைசியாக ஜாக் தாவீத்துடன் நெருங்கி பழகி வந்தார்.

இந்நிலையில்தான் ஜேட்டுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. அதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். ஆனாலும் பலனில்லை. 2009 பிப்ரவரி மாதம் 4ம் தேதி அவரின் உடல் முழுவதும் புற்றுநோய் பரவிவிட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இனிமேல் ஜேட் நீண்டநாள் உயிர் வாழஇயலாது என்று தெரிவித்தனர்.

தன் இறுதி ஆசையாக ஜாக்தாவீத்தை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அவரும் சம்மதிக்க, பிப்ரவரி 22ந் தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களின் திருமண படத்தை ஒரு புகழ் பெற்ற பத்திரிகையின் அட்டைப்படத்திற்காக பெருந்தொகைக்கு ஒப்பந்தம் போட்டிருந்தனர். அதன்மூலம் கிடைத்த பணத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்தார் ஜேட்.

மார்ச் 6ம் தேதி ஜேட்டின் நிலை மோசமானது. அவருக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்த ராயல் மார்ஸ்டன் மருத்துவமனை சோகத்துடன் காணப்பட்டது. ஜேட் குணமடைய வேண்டும் என்று அவரின் நல விரும்பிகள் பிரார்த்திக் கொண்டிருந்தனர். மரணத்தின் விளிம்பில் ஜேட் போராடிக்கொண்டிருந்தார். கடைசியில் டாக்டர்கள் இனிமேல் அவருக்கு எந்த வைத்தியமும் செய்வது பிரயோசனம் இல்லை என கை விரித்து விட்டனர். இதனால், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார் அவரின் கணவர் ஜாக்.

அடுத்ததடுத்த நாட்களில் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்பிய ஜேட் புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடலானார். இப்படியே நாட்கள் நகர்ந்தன. மார்ச் 22ம் தேதியன்று தெற்கு லண்டனில் உள்ள எசக்ஸ் பகுதியில் உள்ள அவரது கனவு இல்லத்தில் ஜேட் சுகமாய் துõங்கிக் கொண்டிருந்தார். பொழுது மலர்ந்தது. ஆனால், ஜேட் எழவில்லை. சுகமான துõக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

இப்போது ஜேட்கூடியின் புதுகணவர் ஜாக் ஜாவீத்தே ஜேட்டின் இரு குழந்தைகளையும் தன் குழந்தைகளாக பாவித்து வளர்த்து வருகிறார். ஆசை மனைவியின் பிரிவு சோகத்தை அந்த இரு குழந்தைகளின் முகத்தைப்பார்த்து ஆறுதல் கண்டு வருகிறாராம்.

தேவராஜன்
***************************************************


2. பெண்கள் மானம்
கப்பலேறி போயாச்சு...

கமர்ஷியல் பிரேக்!
இந்த ஆங்கில வார்த்தை பட்டித்தொட்டி முதல் பட்டணம் வரை, பாப்பா
முதல் பாட்டி வரைக்கும் பழகிப்போன தமிழாகி வார்த்தை! உபயம்:
சின்னத்திரை.
தங்கள் பொருளைப்பற்றி சுயதம்பட்டம் அடித்து கொள்வதற்கு சொல்
லும் அலங்கார வார்த்தைக்குப் பெயர் தான் கமர்ஷியல் பிரேக்!
ஆரம்பத்தில் தங்கள் பொருளின் தரத்தை மிகைப்படுத்தி, உயர்வாக
நுகர்வோரிடம் எடுத்துச் சொல்ல நிறுவனங்களுக்கு விளம்பரம் மிகவும்
அவசியப்பட்டது.
ஆனால், இன்றைய விளம்பரங்கள், உங்களுக்குத் தேவைப்படும் பொருள்
களுக்காக செய்யப்படுவதாக இல்லை. உங்களிடம் அவற்றுக்கான தேவை
யை ஏற்படுத்தும் நோக்கில் இருக்கிறது. தேவையற்றப் பொருள்களை
வாங்க துõண்டும்படி விளம்பரங்கள் அமைந்திருக்கின்றன.
நாங்கள் காட்டும் விளம்பரப்பொருளை வாங்கு. வாங்காமல் போனால்
நீ பத்தாம்பசலி! நாகரிகமானவனல்ல; மலிவான மனிதனாய் சித்தரிக்கப்
படுவாய் என்று நம் வீட்டுக்குள்ளே வந்து பயம் காட்டுகிறது. அதற்கு
தகுந்தாற்போல விளம்பரம் சொல்லும் கருத்துகள் அமைக்கப்படு
கின்றது.
பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை சந்தை வளாகமாக்கி விட்டன.
குறிப்பாக, பெண்களைக் குறிவைத்து பொறிவைத்து பிடித்து அவர்களி
டம் தங்கள் பொருளைத் திணிக்கின்றன.
அதற்காக நம் பெண்களையே விளம்பர மாடல்களாக நடிக்க வைத்து
தங்களின் பொருள்களோடு பெண்களின் அழகு, கவர்ச்சி, தசையைப்பூசி
நம்மிடம் அவர்களின் பொருளை விற்று காசு பார்க்கின்றன.
பெரியத்திரையில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டது போதாது என்று
சின்னத்திரையில் காட்டப்படும் விளம்பரங்களில் மேலும் பெண்களின்
மானம் கப்பலேற்றப்படுகின்றது.
விளம்பரங்களில் பெண்களைக் காட்சிப் பொருளாக்கி, அவர்களின்
உடலை பாகம் பாகமாக பிரித்து காட்டியும், ஒட்டுமொத்தமாக அரை நிர்வாணப்படுத்தியும்
பெண்களை கேவலப்படுத்தி அவர்களின் பொருளை மிகைப்படுத்திக்
காட்டுகின்றன.
இந்திய விளம்பரங்களைப் போன்று வேறெதுவும் இப்படி பெண்களை
ஆபாசப்படுத்தி, கேவலப்படுத்தி சித்தரிப்பதில்லை.

சாம்பிளுக்காக சில விளம்பரங்கள்...

1. ஒரு மருத்துவமனையில் விபத்தில் அடிப்பட்ட இருஇளைஞர்கள் கை,
கால், தலையில் கட்டு போட்டு பெட்டில் படுத்துக் கிடக்கின்றனர்.
அந்த இளைஞர்கள் திட்டமிட்டு, முன் ஏற்பாட்டுடன் ஒருவக்கிரத்தை
அரங்கேற்ற காத்துக் கிடக்கிறார்கள். அப்போது, அழகான,
உயரமான, ஒல்லியான ஒரு நர்ஸ் மருந்து கொடுப்பதற்கு வருகிறாள்.
அந்த நேரத்தில் அந்த இளைஞனின் கால் சட்டைக்குள் இருக்கும் செல்
போன் ரிங் ஆகிறது. அவனால் அதை எடுக்கமுடியவில்லை. அவனுக்கு
உதவ, அந்த நர்ஸ் அவனின் கால் சட்டை பாக்கெட்டுக்குள் கையைவிட்டு துழாவு
கிறாள். இது ஒரு செல்போனுக்கான விளம்பரம்.
பாருங்கள்! ஒரு நர்சை வாயாற சிஸ்டர் என்றழைக்கும் நம் கலாசாரத்தில்
எவ்வளவு வக்கிரமான, கேவலமான, குரூரபுத்தி புகுத்தப்பட்டிருக்கிறது.

2. அடுத்து 50காசு மிட்டாய் விளம்பரம்.
திருமணமான ஒருகவர்ச்சியானப் பெண். அவளை மடக்கிப்போட அவள்
வீட்டுக்கு எதிரே வாலிப பட்டாளம் காத்துக் கிடக்கிறது. அப்போது கோமாளி போலொருவன் சைக்கிளில் வந்து, அந்த மிட்டாயை எடுத்து வாயில் போடுகிறான். அதன் நறுமணம் அவளை நோக்கிப் போகிறது.
அந்த கணமே அவள் புருஷனைவிட்டு அந்த கோமாளியோடு ஓடிப்
போகிறாள். இதே போன்று இன்னொரு குளிர்பான விளம்பரத்தில் ஒரு குளிர்பான
பாட்டிலுக்காக அழகான பெண்ணொருத்தி ஒரு பிச்சைக்காரன்
பின்னால் ஓடுகிறாள்.
கேவலம் 50 காசு மிட்டாய்க்காக மானம், வெட்கம், கற்பை மறந்து கோமாளியோடு ஓடும் பெண்ணா, இந்தியப் பெண்? ஒரு குளிர்பானத்துக்காக இளமங்கை முன்பின்தெரியாத பிச்சைக்காரன் பின்னால் ஓடுகிறாளே! இதுவா இந்தியப் பெண்ணின் லட்சணம்?
இந்த விளம்பரங்களைப்பார்க்கும் உலகினர் நம் நாட்டுப் பெண்களை
அல்பமாக நினைக்க மாட்டார்களா?
3. இன்னொரு விளம்பரம். அது பள்ளிவளாகம். சகமாணவி ஒருத்தி
சைக்கிளில் வந்து இறங்குகிறாள். அந்த நேரத்தில் சக மாணவன் ஒருவன்
பிஸ்கட் பாக்கெட்டை டர்ர்.. என்று கிழிக்கிறான். அந்த சப்தம் கேட்டு,
தான் அணிந்திருக்கும் ஸ்கர்ட் கிழிந்து விட்டதோ என்றஞ்சி பின்புறம்
தடவிப் பார்க்கிறாள். சக மாணவர்கள் இதைப் பார்த்து சிரிக்கிறார்கள்.
ஒருபிஸ்கட் விளம்பரத்திற்காக வயதுக்கு வந்து மாணவி அசிங்கப்
படுத்தப்படுகிறாள்.
4. அடுத்து, ஒருசாக்லட் மனிதன் விளம்பரம். ஒரு இளைஞன் சாக்லட்
மனிதனாக மாறி வீதிவழி போகிறான். போகிற போக்கில் மூக்கை கிள்ளி
பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்ணிடம் கொடுத்து போகிறான். அடுத்து
காபி ஷாப்பில் நுழைகிறான். அவனை மொய்க்கும் பெண்களில் ஒருத்தி
அவன் புட்டத்தைக் கடித்து ருசிக்கிறாள். மற்ற பெண்கள் ஆளாளுக்கு
எதை எதையெல்லாம் கடித்து ருசித்தார்கள் என்பதை எழுத சீச்சீ...
கூச்சமாக இருக்கிறது.
5. அது வாசனைத் திரவியத்துக்கான விளம்பரம். பஸ்சில் மாடர்ன் பெண்
ஸ்லீவ்லஸ் மேலாடை அணிந்திருக்கிறாள். கையைத் துõக்கி கம்பியைப்
பிடித்திருக்கிறாள். அவள் அக்குளுக்குள் மூஞ்சியைக் கொண்டுபோன
இளைஞன் குமட்டி வாந்தி எடுக்கிறான். மறுமுறை விளம்பரத்தில்
காட்டப்பட்ட வாசனைத் திரவத்தை மேலே பூசிக்கொண்டு வருகிறாள்.
இப்போது அந்த இளைஞன் அவளைப் பார்த்து கிறங்கிப் போகிறான்.
இதைவிட கேவலம், இன்னொரு விளம்பரத்தில் பெண்பூசி இருக்கும்
வாசத்தில் சொக்கிப் போயி கார்த்திகை மாத நாய்கூட்டம் போல அவளை
பின்தொடர்ந்து வாலிபர்கள் ஓடுகிறார்கள்.
பெண்விடுதலை, பெண் உரிமை என்றெல்லாம் வாய்கிழிய பேசுகிறோமே!
கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம், சாஸ்திரம் என்றெல்லாம் சொல்கிறோமே!
இந்த விளம்பரங்கள் நம் வீட்டுக்கு வந்து நம்மை அசிங்கப்படுத்து
கிறதே. என்னசெய்தோம். என்னதான் செய்துகொண்டிருக்கிறோம் நாம்?
குழந்தைகளும், பருவப்பெண்களும் கூடி நாம் டி.வி.பார்க்கும் போது
காண்டம், நாப்கின் விளம்பரங்கள் வந்து நம்மை நெளிய வைக்கிறதே!
அந்த விளம்பரங்களைத் தடை செய்ய போராடினோமா? அல்லது டி.வி.
பார்ப்பதைத் தவிர்த்தோமா?
கற்பனைச் செறிவுள்ள, பண்பாட்டுக் கூறுள்ள, கலாசார பதிவுகள் உள்ள
விளம்பரங்களை இவர்களுக்கு எடுக்கத் தெரியாதா? மட்டமான, கீழ்தரமான கற்பனை மட்டும் இவர்களுக்கு எப்படி வருகிறது?
ஒரு அம்மா தட்டில் சாப்பாடு வைத்து மகனை சாப்பிட கூப்பிடுகிறாள்.
அவன் வருவதற்குள், நாய் அந்த உணவை நக்கி, நக்கி சாப்பிடுகிறது.
அம்மா கொஞ்சம்கூட அதைப் பொருட்படுத்தாமல், நாய் நக்கி முடித்ததும்
அந்த தட்டை விளம்பரத்தில் காட்டப்படும் சோப்பைப் போட்டு கழுவி
அதே தட்டில் மகனுக்கு சாப்பாடு போடுகிறாள். அந்த சோப்பு
போட்டால் தட்டு சுத்தமாகலாம். அதற்காக நாயும் செல்ல மகனும் ஒன்றா?
தங்கள் பொருளை உயர்வாக காட்ட எவ்வளவு மட்டமான சிந்தனை இது!
பொதுவாக விளம்பரங்கள் பெண்களை கவர்வதற்காக, பெண்களை
மைய படுத்தியே எடுக்கப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்கள்
தயாரிக்கும் அனேக பொருள்கள் பெண்களுக்கே உரித்தானவை.
அப்படி இருக்கும் போது, வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை
வைத்த கதையாய் பெண்களையே கேவலப்படுத்தி, மானத்தை வாங்கி
விளம்பரங்களில் காட்டி பெண்களிடமே கல்லா கட்டும் இவர்களை
பெண்கள் தான் புறக்கணிக்கவேண்டும். பெண்களை அசிங்கப்படுத்
தும் விளம்பரப் பொருள்களை பெண்கள் வாங்குவதை புறக்கணித்தால்
ஒருவேளை பெண்களை கொச்சைப்டுத்தும் விளம்பர நிறுவனங்கள்
திருந்தாலாமோ?
தையல்நாயகி
***************************************************



3.பெண் இல்லாத வாழ்க்கையும் சில நிஜ அழுகையும்!



ஒரு ஆணின் வாழ்க்கை நெடுகிலும் பெண் என்பவள் தாயாக, தாரமாக, மகளாக, சினேகி
தியாக என பல அவதாரம் எடுத்து அவனை ரட்சித்து, காக்கிறாள். சொல்லப்போனால்
ஒரு ஆணின் வாழ்க்கை பெண்ணில்லாமல் முழுமை பெறாது. இப்படி பெண்ணின்
பல படி நிலைகளில் ஏதோ ஒன்றை இழந்த ஆணின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்
களின் பேழையை வாசகிகளுக்கு தொகுத்துத் தருகிறோம்.


தாயை இழந்ததும் உணர்ச்சியற்ற பொம்மையானேன் ம. திருப்பதி

"தந்தையில்லாமல் வளரும் குழந்தைகள் தறுதலையாக திரியும்; ஆனால் ,தாயில்லாமல் வளரும்
குழந்தைகள் வெறும் பொம்மைகளாக, உணர்ச்சியற்றுதான் இருப்பார்கள். தாயில்லாமல் நான்
வளர்ந்த நாட்களில் பட்ட பசிவேதனையும்,சொந்த பந்தங்களின் உதாசீன துரத்தல்களும்
பாச காயங்களும் என் எதிரிக்கும் வரக்கூடாது'' என்று
கண்ணீர் கசிய சொல்லும் திருப்பதி, ஒரு பள்ளியில் தமிழாசிரியராக இருக்கிறார்.
அவரிடம் தாய் இல்லாமல் வளர்ந்த விதத்தையும் ஒரு மனிதனின் வாழ்வில் பெண்ணின் முக்கியத்
துவம் பற்றி கேட்டபோது, பெண் என்ற வார்த்தையை மூன்று முறை வாய்விட்டு உச்சரித்து விட்டு,
"என்னோட குடும்பம் ரொம்பவும் ஏழ்மையான குடும்பம். அப்பா குடிக்கு அடிமையானவர். என்
தாய்தான் போராடி என்னை வளர்த்தார். அப்போது தாயின் அருமை எனக்குத் தெரியவில்லை.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதுதான் ஒருமழை நாளில் மின்சாரக் கம்பத்தின் கம்பி அறுந்து விழுந்து
என் தாய் இறந்து போனார்கள்.
ஏற்கனவே குடும்பம் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு திண்டாடியது. இந்நிலையில் என் தாயும்
இறந்து போக, என் சித்தப்பா வீட்டில் வளர்ந்தேன். வீட்டில் சமைப்பது, பாத்திரம் தேய்ப்பதுன்னு
ஆயிரத்தெட்டு வேலை செய்து, அவர்கள் வேண்டா வெறுப்பாக ஊத்தும் கஞ்சியைக் குடித்து
வளர்ந்த நாட்களில் பட்ட அவமானங்களும், வேதனையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.
இந்த தொல்லையிலும் அவமானத்திலும் இருந்து தப்பிக்க ஒரு முறை தற்கொலைக்கும் முயற்சி
செய்தேன்.
நான் தாயில்லாமல் அனாதையாக வேதனையில் துடித்தப்போது பொன் வைத்த இடத்தில் பூவைப்பது
போல உலகம்பட்டியில் உள்ள உடற்கல்லி ஆசிரியர் இன்பராஜ் பொன்னுதுரையும் அவரது மனைவி
ஹேமலதா தான் எனக்கு அப்பா, அம்மாவா இருந்து என்னை வளர்த்து, படிக்க வைத்தார்கள்.
அவர்களின் அரவணைப்பில் நன்றாக படித்து 10,12வது அப்பறம் காலேஜ் வரை படித்தேன். அடுத்து
புலவர் பயிற்சி பெற்று இப்போது தமிழாசிரியராக பணி செய்கிறேன்.நான் படித்த நாட்களில்
பல பரிசுகள் மாவட்ட, மாநில அளவில் பெற்றிருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய
ஓலைச்சுவடி கண்டுப்பிடிச்சு கொடுத்ததில் நான் முதல்மாணவனாக கவுரவிக்கப்பட்டேன். இப்போதும்
நுõற்றுக்கு மேலான பழைய நாணயங்கள் சேகரித்து வைத்துள்ளேன்'' என்கிறார்.
உலக பெண்கள் தினம் பற்றி கேட்டப்போது, ""எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே தாயை
இழந்தேன். தம்பியை இழந்தேன். கூடபிறந்த சகோதரிகள் கிடையாது என்பதால் பெண்களின்
அன்பும் பாசமும் அவர்களின் அருமையும் முக்கியத்துவம் என்னைப் போன்றவர்களால் தான்
முழுமையாக உணரமுடியும். வாழட்டும் பெண்இனம் ''என்று வாழ்த்து சொல்லி முடித்தார்,திருப்பதி.
தேவராஜன்

தாரம் வாழ்க்கைக்கு ஆதாரம் சடகோபன்

தாயோடு ருசி போகும்; பசி போகும். சம்சாரம் போனால் சகலமும் போகும் என்பதற்கு உதாரணமாய்
நானே இருக்கிறேன் என்று சோகம்படர சொல்கிறார் சடகோபன். இவர் அரசு பணியில் இருப்பவர்.
உங்கள் வாழ்க்கையில் மனைவியை இழந்தப்பின் நீங்கள் பட்ட பாடுகளும்; மனைவி என்ற ஸ்தானத்தில்
ஈடுசெய்யமுடியாத பெண்ணின் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்களேன் என்றோம்.
"எனக்கு 21 வயசுல கல்யாணம் ஆச்சு. இரண்டு பையன், ஒரு பொண்ணு. தலைப்பிள்ளைக்கு 12 வயசு
இருக்கும் போது என் மனைவி மஞ்சள் காமலை நோய்வாய்ப்பட்டு காலமாகி விட்டாள். மூணு பிள்ளைங்கல
வைச்சுக்கிட்டு நான் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. அம்மா இருந்த வரை என்னையும் குழந்தைகளையும்
பார்த்துக்கிட்டாங்க. பொண்ணு வயசுக்கு வர்ற ஸ்டேஜில அம்மாவும் தவறிட்டாங்க. இப்போ அம்மாவும்
இல்லாம, மனைவியும் இல்லாம இருக்கும் போதுதான் வீட்டுக்கு ஒரு பெண்ணின் அவசியம் என்னன்னு
தெரியுது. வயசும் 50 ஆயிடுச்சு. பசங்க கல்யாண வயசுல இருக்காங்க. அவங்களுக்கு நாலு இடத்துல போய்
பொண்ணு, மாப்பிள்ளை பார்க்ககூட முடியல. மனைவி இருந்தவரைதான் வீடு வீடா இருந்தது. அப்பறம்
வீடே ஒரு ஹோட்டல் போல தான் தோணுது. பையன், பொண்ணுக்கு கல்யாணம் ஆகிட்டா பிறகு என்
அந்திம காலம் எப்படி கழியப்போகுதோண்ணு நினைச்சாலே மனசுக்குள்ள ஏதோ ஒரு பாரம் வந்து அழுத்துற
மாதிரி இருக்கு. என்னைப் பொருத்தவரை வாழ்க்கையில் மனைவி ஆதாரம். மனைவியை இழந்து விட்டால்
வாழ்க்கை சேதாரம் தான்' என்கிறார்.

பிரிவையும் பிரியத்தோடு கொண்டோம் மகேஷ்
"அன்பெனும் ஓர் குடைக்குள் அன்றிலாய்இருந்தோம். இந்த உலகமே எங்களுக்காகப் படைக்கப்பட்டது
போல உணர்ந்தோம். அவளின்றி நானும், நானின்றி அவளும் வாழும் வாழ்க்கை சாத்தியமில்லை என
சத்தியம் செய்து காதலால் கட்டுண்டு காதல்சிறகு விரித்து சந்தோஷமாய்தான் இருந்தோம். ஆனால்....
இன்று அவள் கணவனோடு வாழ்கிறாள். நான் அவள் கனவோடு வாழ்கிறேன்' என விரக்தியோடு
காதலை இழந்தும் கவிதை நடையிலேயே பேசுகிறார், மகேஷ். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில்
கேஷியராக உள்ளார்.
வாழ்க்கையில் காதல் ஒரு அங்கம். அதில் நேசித்தப் பெண்ணின் பிரிவு உங்களை எப்படி பாதித்தது
என்று கேட்டோம்.
"பிரச்னை எங்குதான் இல்லை? எங்களுக்கும் இருந்தது. பிரிவையும் பிரியத்தோடு தான் கொண்டோம்.
கண்ணாடியை சேதப்படுத்தாமல் விலகும் பிம்பம் போல என் காதலி பிரிந்து போனாள். அவ்வளவுதான்
என் வாழ்வே சூன்யமானது. பசியில்லை, துõக்கமில்லை. வாழவும் பிடிக்கவில்லை. ஏதோ இருக்கிறேன்.
அவளும் நானும் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனையில் கோட்டை கட்டியிருந்தோம்.
இன்று அவள் இடத்தில் இன்னொருத்தியை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
பெற்ற தாயால் திருத்த முடியாத என்னை காதலியாக வந்த அவள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விரட்டினாள்.
பட்டப்படிப்பு படிக்க ஊக்கம் தந்தாள். நல்ல வேலையில் சேர நம்பிக்கை தந்தாள். இப்படி அவள் என்
வாழ்க்கையை புரட்டிப்போட்டத்தை அடிக்கிக்கொண்டே போகலாம். இளமையில் காதலி என்கிற
ரோலில் ஒரு பெண்ணின் முக்கியத்துவம் பற்றி சொல்லிமாளாது. சும்மாவா சொன்னர், பாவேந்தர்
மண்ணில் கன்னியர் கடைக்கண் பார்த்து விட்டால் குமாரர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்!' என்கிறார்
மகேஷ்.

மனைவி அமைவதெல்லாம் ... பூபாலன்

"திருமண வயதைக் கடந்தும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கீங்களே' என்று பூபாலனிடம் கேட்டதும், அவர்,
பிரம்மச்சாரி வாழ்கை என்பது கொஞ்சம் சுதந்திரமாக இருந்தாலும், கட்டுப்பாடு இல்லாமல் அல்லவா இருக்கிறது.
பசிக்கும் போது ருசியாய் புசிக்க சாப்பாடு கிடைப்பதில்லை. சுயமாய் சமைத்து சாப்பிடுவதும், ஹோட்டலில்
சாப்பிட்டு வருவதும் நானே என் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்வதாகப் படுகிறது.
துவண்டு வரும்போது தோள் கொடுக்க, அக்கடான்னு டல்லாகி உட்காரும்போது அன்பாய்,அனுசரணையாய்
நடந்துகொள்ள மனைவி இல்லை என்பது என்னவோ நிரப்பப்படாது வெற்றிடமாக வாழ்க்கை நடக்கிறது.
திருமணம் என்பது பெரியவர்கள் பார்த்து முடிவு செய்ய வேண்டியதல்லவா?
வீட்டில் பார்க்கிறார்கள், பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பெண் தகையாமல் இருப்பதற்கு ஆயிரம்
காரணம் பாலத்து ஜோசியன் சொன்னதாக சொல்கிறார்கள்' என்கிறார்கள்.
திருமணம் ஆகிஇருந்தால் இப்போது இருக்கும் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? என்றதற்கு,
ஊதாரிதனம் குறைந்திருக்கும். வங்கியில் சேமிப்பு கூடியிருக்கும். பொறுப்புகள் கூடியிருக்கும்.வாழ்க்கை
சுவாரஸ்யம்மிகுந்ததாக இருந்திருக்கலாம். ஆக வாழ்க்கையில் எல்லாருக்குமே
ஒரு பெண் தாயாக, தாரமாக, மகளாக,சகோதரியாக, தோழியாக இருந்து வாழ்க்கையை அர்த்தம்
ஆக்குவதும் பெண்கள் தான் என்று முடித்தார்,' பூபாலன்.
தேவராஜன்
*******************************************

4. வாங்க,கோடையை கொண்டாடலாம் !

ஆண்டு முழுவதும் வீடு, சமையல், அலுவலகம் என ஓடி, ஆடி சோர்ந்து மன இறுக்கத்தில் ஒரு வட்டத்துக்குள் போராடும் வாழ்க்கையை கொஞ்சம் குதுõகலப்படுத்தவும், குழந்தைகள் கோடை விடுமுறையை கொண்டாடவும் நமக்கு வரப்பிரசாதமாக இருப்பது சுற்றுலா தான். இதை தான் நம்முன்னோர்கள், “மண் மாறினால் மனசு மாறும்’ என்று சொல்லி வைத்தார்கள். சுற்றுலா செல்வது மூலம் வெவ்வேறு இடம்; மனிதர்கள்; சூழ்நிலைகள்; ஆச்சரியங்கள் கண்டு பிரமிப்பான அனுபவங்களை பெறுவதோடு கூடுதலாக மகிழ்ச்சியையும் பெறலாம்.
ஒரு காலத்தில் சுணங்கிக்கிடந்த தமிழ்நாடு சுற்றுலா துறை இப்போது சுறுசுறுப்பாகி வருகிறது.
"விருந்தினர் போற்றுதும்! விருந்தினர் போற்றுதும்!' என்ற தாரக மந்திரத்தோடு சுற்றுலாவாசிகளுக்கு பல சலுகைகள், வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
இன்முகத்துடன் வரவேற்பு, சுற்றுச்சூழல் துõய்மை பேணுதல், பாரம்பரியமிக்க கலைச்செல்வங்களை பேணிக்காத்தல், இயற்கைக்குப் பங்கமில்லாமல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பில் அக்கறை போன்ற சேவைகளை தமிழ் நாடு சுற்றுலா துறை செய்து வருகிறது.

தமிழக சுற்றுலா துறையின் சேவை, அதன் வளர்ச்சி குறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுலாதுறை மக்கள் தொடர்பு அதிகாரி என். ரவி கூறியதாவது:
தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் என்பவை கொஞ்சம் நஞ்சமல்ல. அவற்றில் பிரபலமான சில இடங்களை தேர்ந்தெடுத்து மக்கள் சென்று, பார்த்து, மகிழ பல வசதிகளும், சேவைகளும் செய்து வருகிறோம்.

ஹாப் ஆன் ஹாப் ஆப் டூர்:

உங்கள் விருப்பம் போல ஒரு நாளில் சென்னை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள 13இடங்களை ஏசி பஸ்சில் சென்று பார்த்துவர பஸ் கட்டணம் ரூபாய் 250 மட்டுமே. சொகுசான 18 இருக்கைகள் கொண்ட பஸ்வசதி ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை இருக்கிறது. சென்னையிலிருந்து மாமல்லபுரம் வரை இந்த பஸ் செல்லும். நீங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் ஏறலாம்; இறங்கலாம்; எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பிடித்த இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.

பிளாட்டினம் கார்டு, தங்க கார்டு:

தமிழ்நாடு சுற்றுலா துறையில் ரூபாய் 5000 செலுத்தி உறுப்பினர் ஆவதன் மூலம் நீங்கள் புகைப்படத்துடன் கூடிய பிளாட்டினம் அடையாள அட்டையை பெறலாம். இந்த உறுப்பினர் அட்டை 10 ஆண்டுகள் ஆயுட் காலம் கொண்டது.
இந்த அடையாளஅட்டை வைத்திருப்பவர்களுக்கு கோடைக்காலத்தில், தமிழ்நாடு சுற்றுலா துறைக்கு சொந்தமான ஓட்டல்களில் தங்கும் இடம், உணவு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை உண்டு. மற்ற சீசன்களில் 10 சதவீதம் சலுகை உண்டு.

ரூபாய் 1000 செலுத்தி உறுப்பினர் ஆவதன் மூலம் நீங்கள் புகைப்படத்துடன்
கூடிய தங்க அடையாள அட்டையை பெறலாம். இந்த அட்டை 3 ஆண்டுகள் ஆயுள் காலம் கொண்டது. இந்த அடையாள அட்டை மூலம் தமிழ்நாடு ஓட்டல்களில் தங்கும் இடம், உணவு கட்டணத்தில் கோடைக்காலத்தில் 20 சதவீதம் சலுகை பெறலாம். மற்ற சீசன்களில் 10 சதவீதம் சலுகை பெறலாம்.

மினி டூர்:

சிலர் சனி, ஞாயிறு விடுமுறைகளில் டூர் செல்ல விரும்புகிறார்கள். சிலர் ஞாயிறு ஒரு நாள் மட்டுமே டூர் செல்ல விரும்புகிறார்கள். சிலர் ஒரு வாரம், 15 நாள் என்று டூர் செல்ல விரும்புவதால் சுற்றுலா துறை முக்கியமான, பிரபலமான இடங்களை தேர்வு செய்து ஒருநாள், மூன்று நாள், நான்கு நாள், ஏழு நாள், எட்டு நாள், பதினான்கு நாள் டூர் என வகைப்படுத்தியிருக்கிறோம். மக்களுக்கு கிடைக்கும் விடுமுறை மற்றும் வசதிக்கு ஏற்ப இதில் ஏதாவது ஒரு டூரை பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.

பாக்ஸ்:

ஒரு நாள் சுற்றுலா வகைகள்:

1. மாமல்லபுரம் காஞ்சிபுரம் முட்டுக்காடு ரூ. 385 ஏசி 550
2. திருப்பதி திருமலை திருச்சானுõர் ரூ.715 ஏசி 935
3. திருவண்ணாமலை கிரிவலம் ரூ.385 ஏசி 375
4. மாங்காடு, திருவேற்காடு, திருமுல்லை வாயில், செம்புலிவரம்,
பஞ்சட்டி, மேலுõர், திருவொற்றியூர் ரூ 250 ஏசி 375

மூன்று நாள் சுற்றுலா வகைகள்:
1. நவதிருப்பதிகள் ரூ. 2,200 சிறுவர் ரூ. 1900
2. நவக்கிரக சுற்றுலா ரூ.1,400 ஏசி 2150 சிறுவர் ரூ1,150 ஏசி ரூ 1900
3. பஞ்சபூத ஸ்தலங்கள் சுற்றுலா ரூ. 2050 சிறுவர் 1650

நான்கு நாள் சுற்றுலா:
1. சோழநாட்டு திருப்பதிகள் சுற்றுலா ரூ 1600 சிறுவர்1200

ஏழுநாள் சுற்றுலா:
1. கொல்லுõர் பெங்களூர், வேலுõர், சிருங்கேரி,
உடுப்பி, மைசூர் கர்நாடக தலங்கள் மற்றும் ஒகேனக்கல் ரூ. 2,150
2. ஆந்திரச் சுற்றுலா நாராயண வனம், கோனே அருவி, ஸ்ரீசைலம், காளகஸ்தி ரூ. 5650 ஏசி 8200

எட்டு நாள் சுற்றுலா:
1. தமிழகச் சுற்றுலா ரூ 7,600 ஏசி 12,400
2. கிழக்கு மேற்குக் கடற்கரை சுற்றுலா ரூ 7,700 ஏசி 10, 400
3. கோவா, மந்த்ராலயம், ஸ்ரீசைலம், அஹோபிலம் சுற்றுலா ரூ. 7,250 ஏசி 9,900

பதினான்கு நாள் சுற்றுலா:
1. மும்பை, அஜந்தா, எல்லோரா சுற்றுலா ரூ. 12,000 ஏசி17,300
2. பூரி, கயா, காசி, அலகாபாத் சுற்றுலா ரூ. 13,000 ஏசி 17,400
தேவராஜன்
***************************************************


5. பேர் சொல்லும் பிள்ளைகளைப் பெற்ற மகராசி!
சாந்தா கிருஷ்ணமூர்த்தி

உலக மக்களின் விருப்ப குளிர் பானமான பெப்சி நிறுவனத்தின் பெரும் பதவியான சி இ ஓ பதவியைஅலங்கரிக்கும் தமிழகப் பெண் இந்திரா லுõயியின் தாயார் சாந்தா கிருஷ்ணமூர்த்தியை அன்னையர் தினத்திற்காக சந்தித்து, உரையாடியபோது அவர் முகத்தில் பூத்த பூரிப்பும், வார்த்தைகளில் விழுந்த பெருமிதமும் நமக்கு சொல்லாமல் ஒன்றை சொல்லியது. அது,"ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை(ளை)ச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற வள்ளுவனின் வாக்கு .

உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்?

எங்கள் குடும்பம் பாரம்பரிய குடும்பம். பெருமைக்காக சொல்லவில்லை. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே படிப்பில் அறிவாளிகள், நல்ல கல்விமான்கள் என்று தான் சொல்லுவேன். என் கணவர் கிருஷ்ணமூர்த்தி ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவள் சந்திரிகா, அடுத்தவள் இந்திரா, இளையவன் நாராயணன். இவர்கள் மூன்று பேருமே ஆரம்பத்தில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரர்களாவே இருந்தனர். இவர்களின் தாத்தா அந்தக் காலத்திலேயே மாவட்ட நீதிமன்றத்தில் ஜட்ஜ் ஆக இருந்தவர். அவர், பிள்ளைகளுக்கு நிறைய விசயங்களை சொல்லிக் கொடுப்பார். பள்ளிப் படிப்பிலிருந்து, பட்டப்படிப்பு வரை என் பிள்ளைகள் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர்களாகவே திகழ்ந்தனர். இப்போது மூன்று பேருமே வெளிநாட்டில் நல்ல வேலையில், உயர்பதவியில் இருக்கிறார்கள்.

உங்கள் பிள்ளைகள் இந்தளவுக்கு புகழ் பெற காரணமாக இருந்தது எது?

அவர்களின் அம்மா என்ற முறையில் சொல்வதென்றால் வளர்ப்பு தான் காரணம் என்பேன். எந்த குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே இருக்கிறார்கள். நம் வளர்ப்பு, வழிகாட்டல்தான் அவர்களின் ஏற்றத்திற்கும், பின்னேற்றத்திற்கும் காரணமாக இருக்கிறது. எங்கள் வீட்டில் சங்கீதமும், பக்தியும் எப்போதும் கமழ்ந்து கொண்டிருந்ததால் குழந்தைகளின் மனதில் தெய்வீக தன்மையை ஊட்டிவிட்டிருக்கலாம். அடுத்ததாக, என் பிள்ளைகளுக்கு எது நல்லது, எது கெட்டது? என்பதை அறியும் பக்குவம் வந்தப்பிறகு அவர்களை சுதந்திரமாக முடிவெடுக்கவும், சுதந்திரமாக இருக்கவும் விட்டுவிட்டேன். அதுவே அவர்களுக்கு பிளஸ்பாயிண்டாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன். என் பிள்ளைகள் மூன்று பேருமே எல்லா விஷயத்தையும் என்னிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் விஷயத்தை கேட்டுப்பேனே தவிர முடிவு அவர்கள் இஷ்டம்தான்.

இந்திரா நுõயி பற்றி சொல்லுங்களேன்?

இந்திரா குழந்தைப் பருவத்திலிருந்தே சுட்டிப் பெண்தான். குறு குறுன்னு எப்போதும் ஜாலியாக இருப்பாள். இசையில் நல்ல ஆர்வம் உண்டு. கேள்வி ஞானத்தால் நல்லா பாடுவாள். டான்ஸ் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். பரதநாட்டியம்கூட கற்றுக்கொண்டாள். படிப்பில் ஸ்டேட் ரேங்க் எடுத்திருக்கிறாள். நிறைய டிகிரி வாங்கியிருக்கிறாள். அவளுக்கு பல மொழிகள் தெரியும். ஆரம்பத்தில் இருந்தே ஏதாவது பண்ணணும், சாதிக்கணும் இருந்தாள். அவள் பெப்சிக்கு முன்பு நிறைய நிறுவனங்களில் வேலைப் பார்த்திருக்கிறாள். ஆனால், அத்தனையிலும் உயர்பதவியில் இருந்தாள். ஆனால் அதை எப்போதும் அவள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டாள். பெப்சியில் சிஇஓவான விஷயத்தை என்னிடம் கூட தெரிவிக்கவில்லை. டிவி நியூஸ் பார்த்துதான் நான் தெரிந்து கொண்டேன். பிறகு அவளிடம் போன் செய்து கேட்டதற்கு, "ஆமாம்மா' என்றாள் ரொம்ப சாதாரணமாக. நான்தான் அவளை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். எத்தனை கவுரவம், புகழ் வந்தாலும் இந்திரா, அம்மா பிள்ளை தான்! உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் எனக்கு போன் செய்துவிடுவாள். அது போல நம் கலாசாரத்தை கொஞ்சம்கூட விடாமல் இருக்கிறாள். அவளுடைய மகள்களையும் அப்படியே வளர்க்கிறாள். எந்த விழாவாக இருந்தாலும் அது எங்கு நடந்தாலும் இந்திராவுடன் நான் இருக்கணும் என்பதைதான் அவள் விரும்புவாள். ஒரு முறை என் சகோதரருக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டது. அதனால் நான் வருத்தமாக இருக்கிறேன் என்பதை அறிந்து முக்கியமான மீட்டிங்கை கூட கேன்சல் செய்து விட்டு எனக்கு ஆறுதல் சொல்ல வந்தாள்.

உங்கள் மகள்களால் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் பற்றி?

பெயர், புகழில் உச்சத்தில் இருக்கும் என் மூன்று பிள்ளைகளால் எனக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை பெருமையாகவே கருதுகிறேன். விழாவில், நிகழ்சியில் கலந்துகொள்ளும் போது பலர் "நீங்க இந்திராவின் அம்மா தானே? நீங்க சந்திரிகாவின் அம்மாதானே?' என்று கேட்டு பாராட்டுவதும், காலில் விழுந்து ஆசீர்வாதம் கேட்பதும் எனக்கு பெருமையையும், சந்தோஷத்தையும் கொடுக்கிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் என் பிள்ளைகளை எண்ணி பூரித்துப் போகிறேன். இப்படிபட்ட மகள்களைப் பெற்ற மகராசி என்று எனக்கு விருதுகளும், பத்திரிகைகள் கவுரவப்படுத்துவதும் எனக்கு சங்கடமாக இருந்தாலும், அதை அடைவதில் ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது.

பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ள நினைப்பது?

இப்போதுள்ள பெற்றோர்களுக்கு சொல்ல சில வார்த்தைகள் என்னிடம் இருக்கிறது. இன்றைய குழந்தைகள் பொதுவாகவே புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். அவர்களைப் புரிந்து சரியாக வழிநடத்தினாலே போதும். இப்போதுள்ள பிள்ளைகளில் என் கருத்துபடி பெண் பசங்களை விட, ஆண் பசங்களுக்கு பொறுப்பும், அக்கறையும் இருக்கு என்று நினைக்கிறேன். நம் குழந்தைகளுக்காக பெற்றோர் சில தியாகங்கள் செய்து தான் ஆக வேண்டும். அதன் பலனை பின்னாளில் அடைவோம்.
என் பிள்ளைகள் பள்ளி விட்டு வரும்போது நான் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் அவர்கள் படிக்கும் காலத்தில் எங்கும் வெளியில் செல்ல மாட்டேன். இப்போது மூன்று பேரும், "எங்களுக்கு எங்கேயும் செல்லாமல் இருந்து விட்டீர்கள். இப்போது எங்கு வேண்டுமானாலும் சென்று வாருங்கள்' என்று சொல்கின்றனர். ஆனால் எனக்கு இப்போதும் அவர்களுக்கு பிடித்த சமையலை செய்து வைத்துக் கொண்டு அவர்களுக்காக காத்திருப்பதுதான் பிடித்திருக்கிறது.

தேவராஜன்
படங்கள்: விஜி
*************************************************


6.உன்னதமான உறவு, அம்மா!

நினைத்தால் ஒருமனிதன் நிலவுக்கு மட்டுமல்ல; அதையும் தாண்டி ஒன்பது கோள்களுக்கு கூட சென்று வரலாம். ஆனால், எத்தனை பெரிய விஐபியாக இருந்தாலும், கோடீஸ்வரனாக இருந்தாலும் மீண்டும் ஒரு முறை தாயின் கருவறைக்குச் சென்று வர முடியுமா? முடியாது. தாய் என்ற உறவை ஒப்பிட, நீ ங்கள் தேடி அலைந்தாலும் தாய்க்கு சமமாக ஒன்றை சொல்ல இந்த உலகில் எதுவுமே கிடைக்காது.
தாய் என்பவள் நடமாடும் தெய்வம். அவள் மடிசாய்ந்தால் அதுவே மண்ணில் சொர்க்கம். இப்படியாகி உன்னதமான அம்மாவுடனான அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து, அன்னையர் தினத்துக்கு பெருமை சேர்க்கிறார்கள் சினேகனும், கங்கை அமரனும்.

என் அம்மா பெண் கர்ணன் கவிஞர் சினேகன்:

"என் அம்மா பெயர் மகமாயி! எனக்கு என்றுமே அவள் தான் தெய்வம். அந்த மகமாயி தெய்வம் தான் எனக்கு அம்மாவாக வாய்த்ததோ என எண்ணியோ என்னவோ என்வீட்டில், அலுவலகத்தில், காரில் என என் அம்மாவின் படத்தை தான் வைத்திருக்கிறேன். அது தவிர வேறு எந்த சாமி படங்களும் கிடையாது' என்று அம்மாவை தெய்வமாகவே பாவித்து உருகுகிறார் கவிஞர் சினேகன்.
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் தஞ்சாவூர் பக்கம் உள்ள பசுமையான ஒரு கிராமம். எங்க குடும்பம் பெரிய குடும்பம். மொத்தம் எட்டுபிள்ளைகள். என் அம்மா படிப்பறிவில்லாதவள். ஆனால், எங்களை பண்போடு வளர்த்தவள். கடை ஏழு வள்ளல்கள் பற்றி படிப்பதற்கு முன்னதாகவே என் அம்மாவை குணவதியாக, கருணையுள்ளவளாக, பெண் கர்ணனாக உணர்ந்தேன்.
எங்கள் வீடு பெரிய வீடு என்பதால் வெளியில் திண்ணைகள் உண்டு. எங்கள் ஊரில் தள்ளுவண்டிகளில், சைக்கிள் களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் எல்லாம் என் அம்மா கையில் ஆகாரம் புசித்து மகராசி நீ நல்லா இருக்கணும்ணு வாழ்த்தி விட்டு, திண்ணையில் இளைப்பாறி செல்வது வழக்கம். பொதுவாக எங்கள் வீட்டில் தினமும் பத்துபேருக்கு சாப்பாடு கிடைக்கும். எங்கள் வீட்டுபடியை மிதித்தவர்கள் யாரும் வெறும் கையோடு, பசி வயிறோடு சென்றதில்லை.
திருவிழா, பண்டிகைன்னா எங்கம்மா பித்தளை தவளையில தான் காபி போட்டு எல்லாருக்கும் கொடுப்பாங்க. பசித்தவரை புசின்னு அன்னமிட்டு வாழ்ந்த அன்னையின் குணம் தான் எனக்கும் இருக்கிறது. இன்று நிறைய சம்பாதிக்கிறேன். பல பேருக்கு உதவுகிறேன். கவிஞனாகி விட்டேன். இருந்தும் இதுவரை நான் தனியாக சாப்பிட்டதில்லை. யாரோ ஒருத்தருக்கு உணவு தந்து விட்டுதான் சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்த பழக்கம் என் அன்னையிடம் இருந்து வந்தது.
நான் சினிமாவில் பாட்டெழுத வீட்டை விட்டுகிளம்பும் போது எல்லோருமே தடுத்தார்கள்; எதிர்த்தார்கள். ஆனால், என் அம்மா மட்டும் தான் என் பிள்ளை எங்க இருந்தாலும், எந்த துறையில இருந்தாலும் பெரியாளா வருவான்னு சொல்லி ஆசீர்வாதம் பண்ணாங்க. சினிமாவில் பாட்டெழுத வாய்ப்பு கிடைக்காம ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டு தானிருந்தேன். இந்த நிலையில ஒரு நாள் அம்மா ரொம்ப சீரியசாக இருக்காங்க, பிழைக்கமாட்டாங்க உடனே ஊருக்கு வா ன்னு செய்தி வந்தது. அப்போ என்கிட்ட ஊருக்கு போககூட போது மான பணம் இல்ல. காலையிலிருந்து மாலை வரை பணத்துக்காக நண்பர்களை தேடி அலைந்துகிட்டிருந்தேன். கடைசியா பாஷா என்கிறவரிடம் என் நிலைமையைச் சொன்னேன். அவர் 2000 ரூபா கொடுத்து அனுப்பி வைத்தார். அவர் செய்த உதவியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. இரவெல்லாம் அம்மாவை நினைத்துக் கொண்டு அழுதபடியே பயணம் செஞ்சேன். மறுநாள் காலை உறவு சனம் எல்லாம் நான் எந்த பஸ்சில் வருவேன்னு பஸ் ஸ்டாண்டிலேயே காத்துக்கிடந்தாங்க. வந்த என்னை அவசர அவசரமா அழைச்சுட்டு போனாங்க. நான் அம்மா இறந்துட்டாங்க. அடக்கம் பண்ணிட்டாங்கன்னு நினைச்சுக்கிட்டே வீட்டுக்கு போனேன். என்ன பார்த்ததும் சித்தி, "உன்ன பார்க்கத்தான் உயிர் ஊசலாடிக்கிட்டு இருக்கு' என்று சொன்னதும் அம்மாவின் கை பிடித்து குலுங்கி, குலுங்கி அழுதேன். அப்போது அம்மா என்னைப் பார்த்து, "வந்துட்டீயா? நல்லாயிருக்கியான்னு?' கேட்டாங்க. அவங்க வாயில் அழுதபடி துளசி தண்ணிய விட்டேன். அடுத்த நிமிஷமே அம்மாவின் உயிர் அடங்கிப் போனது.
ஒருத்தர் எப்படி வாழ்ந்தார்னு தெரிஞ்சுக்க அவர் இறுதி சடங்கிற்கு வருபவர்களை வைத்து தெரிஞ்சுக்கலாம்னு சொல்வாங்க. எங்க அம்மாவுக்கு 600க்கும் மேல கோடி துணி போட்டாங்க. அவருக்கு போட்ட மாலையை நாலு வண்டியில ஏத்தலாம்.
எனக்கு என் அம்மா தான் சகலமும். என் முதல் புத்தகம். நுõலகம் எல்லாமே அம்மா தான். என் அம்மா போட்டோவுக்கு கீழே கோபமா ஒரு வாக்கியம் எழுதி வைச்சிருக்கேன். அது "நான் ஜெயிக்ணும்னு நீ நினைச்சப்படி நானிருக்கேன். நான் நினைச்சப்படி நீ இல்லையே'ன்னு எழுதி வைச்சிருக்கேன். ஆனாலும் ஒரு சின்ன ஆறுதல் நான் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த போது அவர் எடுத்து தந்த சேலையை அம்மாவிடம் கொடுத்தேன். அந்த புடவையைதான் அவங்க இறக்கும் போதும் கட்டியிருந்தாங்க. என் அம்மா எனக்கு எந்த வருத்தத்தையுமே கொடுத்ததில்லை. அவர் இறந்துப் போயி தந்த வருத்தத்தை தவிர.
இந்த அன்னையர் தினத்தில் நான் சொல்லிக்க விரும்பறது ஒண்ணுதான். "அம்மா உயிருடன் இருக்கும் போது ஆசைப்பட்டதெல்லாம் செய்யுங்க. கொண்டாடுங்க. இறந்தப் பிறகு கோயில் கட்டறதுல்ல எந்த பிரயோஜனமுமில்ல என்பது என் அனுபவம்' என்று சினேகன் உருக்கமாக சொல்லி முடித்தார்.
தேவராஜன்
******************************************************


7.தாய், தெய்வம் என்பதால் கோயில் கட்டினோம்!
இசையமைப்பாளர் கங்கை அமரன்.

"பெற்ற தாயை தெய்வமாக நினைத்ததால்தான் நானும், அண்ணன் இளையராஜாவும் சேர்ந்து எங்க அம்மாவுக்கு பண்ணப்புரத்துல மலை மீது கோயில் கட்டினோம். அந்த கோயிலில் இருக்கும் தெய்வம் போட்ட பிச்சை தான் இந்த இசையையும், பெருமையான வாழ்க்கையும்' என்று தாய் பக்தியோடு, தன் அம்மாவைப்பற்றி நினைவுகூர்கிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்.
அம்மா நம்மை கர்ப்பத்தில் சுமக்கையில் தன் குழந்தைக்காக ஒரு உணவை சாப்பிடக் கூடாதென்றால் பிள்ளைக்காக அதை ஒதுக்கி வைக்கிறாள். பத்தியம் இருக்கிறாள். சூடான பாலை ஊதிஊதி குழந்தைக்கு புகட்டும் தாய்க்கு, வயதான அவள் நாவிற்கு சுவையாக, இதமாக உணவைத் தரவேண்டியது பிள்ளைகளின் கடமை தானே!
என்னுடைய அம்மாவை கடைசி காலத்தில் ராணியைப் போல கவனித்துக் கொண்டோம். இறந்த அவளின் உடலை புதைத்த இடத்தில் கோயில் கட்டியிருக்கிறோம். கடைசி காலத்தில் சுகமாகவே வாழ்ந்து விட்டுப் போனாள். இப்போதும் எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கிற போதெல்லாம் என்தாயின் கோயிலுக்குச் சென்று துயில் இருப்பேன். ஏனோ அவள் மடி மீது தலைவைத்து உறங்குவது போலவும், அவள் எனக்கு ஆறுதல் சொல்வது போலவும் இருக்கும். எனக்கு பின்னால் என்னுடைய தலைமுறை எங்களை நினைவில் வைத்திருக்குமா தெரியவில்லை. இசையும் இந்த வாழ்க்கையும் அம்மா எங்களுக்கு தந்த பிச்சை. அவள் பாடியவை தான் எங்களுக்குள்ளும் இசையாக பெருகிக் கொண்டிருக்கிறது. அதுபோல இன்று ஒவ்வொரு மகனுக்கும் அவனுடைய தாய் ஊட்டிய அறிவு தான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. பெண்களை பல வயதுகளின் பருவங்களில் வைத்து போற்றுகிறோம். ஆனால், தாய்மை ஸ்தானத்தை தானே கொண்டாடுகிறோம்.' அப்படி தெய்வநிலையில் நான் வைத்து கொண்டாட இரண்டு அன்னைகள் உண்டு. ஒன்று பாண்டிச்சேரி அன்னை. இன்னொன்று என்னைப்பெற்றவள்' என்று முடித்தார்.

செல்வகுமார், தேவராஜன்.
*************************************************



8.அக்னி வெயில் வாட்டினால்
"ஆங்சைட்டி அட்டாக்' வரும்!

"ஆஹா... இது என்ன புது வியாதி? ஹார்ட் அட்டாக் தெரியும். அது என்ன ஆங்சைட்டி அட்டாக்? இருக்கிற ஆயிரத்தெட்டு வியாதியில, புதுசா ஒண்ணு வேறு வந்திருக்கா' என்று பயப்படாதீங்க. இது சாதாரண அட்டாக் தான்! சாதாரண விஷயம்தான். ஆனால், கவனிக்க வேண்டிய விஷயங்க. இப்போ சுட்டெரிக்கும் வெயிலில் எல்லாருமே தகித்துக் கொண்டிருக்கிறோம். கொஞ்ச துõரம் வெயிலில் நடந்து போனாலே தலைசுத்தும். டயர்டாக இருக்கும். இதுல வேற ஆங்சைட்டி அட்டாக் வரும் என்றால் யாருக்குத் தான் பயம் வராம இருக்கும். சரி, ஆங்சைட்டி அட்டாக் யாருக்கு, எப்படி வரும்? வந்தா என்ன பண்ணணும் என்பதை தெரிஞ்சுக்கலாம்.
ஏதோ ஒரு வேலையை செய்துக்கிட்டு இருக்கும் போது, திடீர்ன்னு நெஞ்சு அடைக்கும். நாக்கு வறண்டு போகும். கண்ணு இருண்டு போகும். கை, கால் எல்லாம் நடுங்கி, உதறல் எடுக்கும். வேர்த்து கொட்டி, தலைசுத்தி ஒரு மயக்கம் வரும். இதை தான் மருத்துவதுறை ஆங்சைட்டி அட்டாக் என்று சொல்லுது. இந்த அட்டாக் எதனால வருதுன்னு தெரிஞ்சுக்குங்க.
எல்லாம் மன உளைச்சல் தான்! மனஅழுத்தம், பதட்டம், வேலை சுமைகள் தான் முக்கிய
காரணம். குட்டிப்போட்ட பூனை போல அங்கும் இங்கும் உலாத்திக்கிட்டு, ஒரே டென்ஷன், டென்ஷன் என்று முணு முணுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும், எதற்கெடுத்தாலும் யார் மீதாவது, கோபப்பட்டு, எரிந்து விழுபவருக்கும், பதட்டம், தடுமாற்றம், உணர்ச்சி வசப்படுபவர்களுக்கும் இந்த அட்டாக் வரும். இது மட்டுமல்ல; உடம்பு பருமனாக இருந்தாலும், மன உளைச்சல், நெருக்கடி, கடன் தொல்லை, வேலை சுமை, கவலை, தோல்வி, ஏமாற்றம், வெறி இவை எல்லாம் இருப்பவர்களுக்கு இந்த ஆங்சைட்டி அட்டாக் வருகிறதாம். அதுவும் இந்த கோடை காலம் வேற கூடுதலா காரணமாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் சொல்றாங்க.
ஆங்சைட்டி அட்டாக் வந்துட்டா எந்த டாக்டரைப் பார்க்கணும்? என்ன மருந்து சாப்பிடணும்? அப்படின்னு உங்களுக்கு கேள்வி கேட்க தோணுமே!
இதுக்கு டாக்டர்கள் சொல்றதைக் கேட்டா ஆச்சரிய படுவீங்க. ஏன்னா, இதுக்கு மருந்து
எல்லாம் இல்லையாம்! அதுக்காக மருந்து தான் இல்லையேன்னு சும்மா இருந்து விடக்
கூடாது. இந்த அட்டாக் வந்த தருணத்தில் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கணும். மூச்சை நல்லா இழுத்து விடணும். நல்ல காற்றோட்டமான, நிழல் உள்ள இடத்துக்கு வந்திடணும். பின்னர், விரும்பிய பாட்டு கேக்கலாம். இயற்கையை ரசிக்கலாம். பெயிண்டிங் பண்ணலாம். பிடிச்ச நண்பர்களோடு கொஞ்சம் பேசி, சிரித்து விட்டு வரலாம். கொஞ்ச துõரம் வாக்கிங் போயிட்டு வரலாம். இதை செய்தாலே போதும் என்று டாக்டர்கள் சொல்றாங்க.
பொதுவா, இந்த அட்டாக் அதிகபட்சமா பத்து வினாடியிலிருந்து இரண்டு நிமிஷங்கள் வரைக்கும் தான் இருக்குமாம். பின்னர், எப்போதும் போல நாம சகஜநிலைக்கு வந்துடுவோமாம். அதனால, நாம நார்மலா இருந்தாலே போதும், ஒரு அட்டாக்கும் வராது.
அடுத்ததா, இந்த அட்டாக் ஆண்களைவிட, பெண்களுக்குத் தான் அதிகம் வர சாத்தியம் என்று ஒரு மருத்துவ ஆராய்ச்சி புள்ளி விவரம் கூறுகிறது. பெண்களுக்குத்தான் அதிகமான பொறுப்புகளும், சென்சிடிவ்வான செயல்களும் இருப்பதால், மேலும், வீட்டிலேயே முடங்கி அடைப்பட்டு இருப்பதாலும் மன இறுக்கம், மனஉளைச்சல் ஏற்பட்டு ஆங்சைட்டி அட்டாக் வருகிறது என்று கூறுகிறார்கள்.
ஆகையால், பெண்கள் மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும். அதற்கு தியானம், யோகாசனம் செய்ய பழகிக்கணும். மாலை வேளைகளில் பக்கத்தில் இருக்கும் கோயில், குளம், ஏரி பக்கம் காலார போயிட்டு வரணும். நகரவாசிகளா இருந்தால், பார்க், பீச், ஓட்டல்னு போயிட்டு வந்தீங்கின்னா
மனசு ரொம்ப ப்ரீயா இருக்கும். பிறகென்ன? ஆங்சைட்டி அட்டாக்கை ஒரு சொடுக்கு
போட்டு விரட்டி விடலாம்.
தேவா
*************************************************

9.தண்ணீர் தேசத்தின் ராணி!

"தண்ணீருக்கும் உயிர் உண்டு; சக்தியுண்டு; அது பேசுவதற்கும் சில வார்த்தைகள் உண்டு. நான் தண்ணீரை பார்க்கும் போதெல்லாம் அதை ஒரு சக மனுஷியாகத்தான் பார்க்கிறேன். உலகின் மிக பெரிய ஆதி உயிர் தண்ணீர்தான்! தண்ணீர் உலகின் தாயைப் போன்றவள். நான் ஏரிக்கரைக்கு போகும் போதெல்லாம் தண்ணீரோடு கொஞ்ச நேரம் பேசிவிட்டு தான் வருவேன். அந்த தண்ணீர் எப்போதுமே என்னைப் பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈனசுரத்தில் தேம்பி தேம்பி அழுதபடி "என்னைக்காப்பாற்று! என்னைக்காப்பாற்று' என்று ஒரு தாய், தன் மகளிடம் கெஞ்சிக் கேட்பது போலவே புலம்பும். தண்ணீரின் அழுகையைத் துடைக்க நானும், "தண்ணீரே, தண்ணீரே! நீ எங்களுக்கு எவ்வளவு தந்திருக்கிறாய்... தாகத்துக்கு நீராய், காய்கறி, கனி, அரிசி, பருப்பு என உணவுபொருட்களாக எவ்வளவோ கொடுத்திருக்கிறாய்! எங்களைக் காப்பாற்றியதும், காப்பாற்றிக் கொண்டிருப்பதும் நீ தானே! உனக்காக நான் குரல் கொடுப்பேன்! எங்கள் அடுத்த தலைமுறைகளையும் வாழவைக்கும் உன்னைக் காப்பாற்ற நிச்சயம் போராடுவேன்' என்று சொல்லும் இந்த பெண்மணியின் பெயர் ஜோசபின் மண்டாயின். கனடா நாட்டின் மிகப்பெரிய ஏரியான "தி கிரேட்டர் லேக்' பகுதியில் வசிக்கும் பூர்வகுடி மக்களில் ஒருவர் தான் இவர்!
ஏரிக்கரையில் வசித்து வந்ததாலோ என்னவோ தண்ணீரோடு பழகி,நேசித்து, தண்ணீரை காக்கும் பொருட்டு போராட்டத்தில் ஈடுபடலானார் ஜோசபின் மண்டாயின். அவர் வசித்த ஏரி கனடாவிற்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ளது. உலகின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான தி கிரேட்டர் லேக் ஐந்து பெரிய ஏரிகளாகவும், சிறு சிறு ஏரிகளாகவும், தீவுகளாகவும் பிரிந்து உள்ளது. அதன் ஆழத்தையும், பரப்பளவையும் கணக்கிடவே முடியாது.
இத்தனை சிறப்பு வாய்ந்த ஏரி, சுற்றியுள்ள தொழிற்சாலைகளாலும், எங்கெங்கோ இருந்து வரும் கழிவுநீராலும் மாசுப்பட்டு, அதன் இயல்பிலிருந்து மாறிவருவதை அறிந்து ஆவேசப்பட்டார். இந்த ஏரியை நம்பி எத்தனை குடும்பங்களும், எத்தனை தலைமுறைகளும் இருக்கின்றன என்பதை நினைத்து, சாவின் பிடியில் உள்ள இந்த ஏரித்தண்ணீரை காப்பற்றவேண்டும் என்று தீர்மானித்தார். இனி, இது தான் தன் வேலை என்று முடிவு செய்த ஜோசபின் ஒரு வாளியில் தண்ணீரை எடுத்துக் கொண்டு, இருபாட்டிகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஏரியை சுற்றி வர தொடங்கினார். நம்மூர் ஏரிபோல ஒரு மணிநேரத்திலோ, ஒருநாளிலோ சுற்றி வர முடியாது அந்த ஏரியை. தி கிரேட்டர் லேக்கை ஒரு முறை சுற்றி வருவதென்பது அமெரிக்காவையும், கனடாவையும் கால்பகுதி சுற்றி வருவதற்கு சமமானதாகும். இருந்தும் துணிச்சலோடு வாளி தண்ணீரோடு விழிப்புணர்வு நடைபயணத்தைத் தொடர்ந்தார். ஆரம்பத்தில் இவரின் முயற்சியை எல்லாரும் கிண்டல் செய்தனர். எதிர்ப்பு தெரிவித்தனர். "இதெல்லாம் நடக்கிற விஷயமா என்ன? வயசான காலத்துல வெந்ததை தின்னுட்டு கம்முன்னு கிடக்காம தண்ணீரை காப்பாற்ற கிளம்பிட்டாளாம்' என்று பலர் ஜோசபின் காதுபடவே பேசினர்.
இதையெல்லாம் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் ஏரிக்கரையில் ஜரூராக நடை பயணத்தைத் தொடங்கினார். செல்லும் இடமெல்லாம் மக்களிடம் தண்ணீரின் அருமையை எடுத்துச் சொன்னார். "தண்ணீர் தான் நம் ஜீவ சக்தி. ஆதாரம். உயிர்ப்பிக்கும் ஊக்கி. தண்ணீர் மக்களை ஒன்று சேர்க்கும் வலிமையான தொப்புள் கொடி உறவு. நதிகள் நாடுகளை இணைக்கும் தோழிகள். அது தெரியாமல் நாம் நதிகளைப் பிரித்துப் போட்டு, நாம் பிரிந்துக் கிடக்கிறோம். வானமும் தண்ணீரும் யாவருக்கும் பொது என்பதை நம் சுயநலத்தால் மறந்து விட்டோம். மனிதர்களின் உடம்பில் தண்ணீர் தான் 75 சதவீதம் விரவிக்கிடக்கிறது. பெண் தண்ணீரை சுமப்பவள். கர்ப்பத்தில் குழந்தை தண்ணீரில் தான் வளர்கிறது. எதிர்க்கால தலைமுறையை காப்பாற்ற வேண்டுமானால் தண்ணீரை காப்பாற்ற வேண்டியது நம் கடமை' என்று அழுத்தம் திருத்தமாக கூறினார். இப்படி நடைபயணத்தில் தண்ணீர் மாசுபடுவதையும், அதற்கான காரணத்தையும் விளக்கினார். "படித்தவர், அறிஞர்கள், ஆய்வாளர்கள் செய்ய மறந்ததை நான் செய்கிறேன். தினமும் அதிகாலை 3 மணிக்கு எழுந்து நடக்க ஆரம்பிப்பேன். ' என்று சொல்லும் ஜோசபின் கமாண்டாயின் 17 ஆயிரம் கி.மீ. துõரம் நடைபயணம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஜோசபின் விழிப்புணர்வு போராட்டத்தில் நாளடைவில் பலர் கலந்து கொண்டனர். தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் துணையிருந்தன. அரசின் பார்வையும் இவரது போராட்டத்தின் மீது விழுந்தது. இதன் காரணமாக விவசாயம், நதி நீர் குறித்த தேசிய விழிப்புணர்வு ஆணையத்தை உருவாக்கினார்கள்.
ஜோசபின் மண்டாயின் 30 ஆண்டுகளாக, 30 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஏரித் தண்ணீர் மாசுக்கு எதிராக போராடி மக்களிடையே பெரும்புரட்சியை ஏற்படுத்தியதற்காக, கனடா அமெரிக்க நாடுகள் ஏப்ரல் 24, 2007ம் ஆண்டில் பவுண்டிங் சீப் கமிஷனரி ஆப் தி விமன்ஸ் வாட்டர் கமிஷனின் கமிஷனராக பொறுப்பு கொடுத்து கவுரவித்து தொடர்ந்து அவர் சேவையாற்ற உதவின.
சாதாரண பெண்ணாக இருந்து ஏரிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருந்த ஜோசபின் இப்போது கமிஷனராக இருந்து ஏரியை பாதுகாத்து வருகிறார்.

தேவராஜன்
***************************************************



10.நோய்களை உணர்த்தும் நகங்கள்!

நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய் நாடி, வாய்ப்பச் செய்வது தான் மருத்துவ முறையாகும். அப்படி ஒருவருக்கு மருத்துவம் பார்க்கும் போது, அவருக்கு இருக்கும் நோய்அறிகுறிகள் இன்னதென்று காட்டும் உறுப்பு நகம்.
'அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்' என்ற குறள் போல, அடுத்தது காட்டும் பளிங்கு போல் நோய் கடுத்தது காட்டும் நகம் என்றே சொல்லலாம். நகம் வரும் நோய் மட்டுமல்ல; வந்துப்போன நோயையும் காட்டிவிடும் என்று கூறும் டாக்டர் முருகு சுந்தரம் நகம் காட்டும் அறிகுறிகள், அது உணர்த்தும் நோய்கள் பற்றி விளக்குகிறார்.
பொதுவாக ஒருவருக்கு நகம் மாதத்திற்கு 3 மில்லி மீட்டர் வரை வளரக்கூடியது. நகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப்பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு எப்போதும் நகம் அதிகமாக வளரும். பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும். பொதுவாக எல்லாருக்கும் நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இளம் சிவப்பு நிறத்தில் இருந்து மாறுபடும் நகத்தை வைத்தே அறிவியல் ரீதியாக வைத்திய ஆருடம் கூறிவிடலாம். நகம் மூலம் 40 க்கும் மேலான நோய்களை கண்டறியலாம்.

*ரத்தசோகை நோய்கள் ஒருவருக்கு இருந்தால் அவரின் நகம் ஸ்பூன்போல குழிவிழுந்து மெல்லிதாக காணப்படும்.
*பாதி வெள்ளை பாதி நார்மலான நிறத்தில் நகம் காணப்பட்டால் புரோட்டீன் சத்து குறைபாடுகளால் வரும் நோய்களுக்கான அறிகுறியாகும். சிறுநீரக நோய்கள் இருந்தாலும் நகம் பாதிவெள்ளையாக இருக்கும்.
* நகத்தின் மேற்பரப்பில் அகல வசத்தில் பட்டைக்கோடு போல இருப்பது சிறுநீரக கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
*நகத்தில் பள்ளம் விழுந்தது போல அகலவாக்கில் கோடு காணப்பட்டால், அவருக்கு டைபாய்டு, சிக்குன் குன்யா போன்ற நோய்கள் வந்து குணமடைந்ததற்கான அறிகுறியாகும்.
*நகத்தில் புள்ளி புள்ளியாய் திட்டு திட்டாக குழியிருந்தால் அவர்களுக்கு சொரியாசிஸ் இருப்பதற்கான அறிகுறியாகும். இது சில சமயம் நார்மலாக இருப்பவர்களுக்கும் இருக்கும்.
* கிளி மூக்கு போல நகம் காணப்பட்டால் நுரையீரல் தொடர்பான நோய்கள் இருக்கிறது என்று அர்த்தம்.
*நகத்தின் வேர்ப்பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டால் இதய நோய் இருப்பதற்கான அடையாளமாகும்.
*நகத்தின் வேர்ப்பகுதி சிவப்பாக காணப்பட்டால் கல்லீரல், இதய நோய் இருப்பதற்கான அறிவிப்பாகும்.
* கை,கால் என 20 நகங்களும் வெள்ளையாக வெளுத்துப் போயிருந்தால் அவர்களுக்கு எய்ட்ஸ் இருப்பதற்கான எச்சரிக்கையாகும்.
*நகம் முழுவதும் பட்டுபோயிருந்தாலோ சொத்தை ஏற்பட்டிருந்தாலோ அவர்களுக்கு சுகர், தைராயிடு நோய்கள் இருப்பதற்கு சாத்தியகூறுகளாகும்.
*முழு நகமும் மஞ்சள் நிறத்தில் இருந்தால் நுரையீரல் நோய்கள், மஞ்சள் காமாலை நோய் உள்ளது என்று அர்த்தம்.
*ரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சின் இல்லாவிட்டாலும், ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நகங்கள் நீல நிறத்தில் காணப்படும்.
* மாத்திரை, மருந்துகள் சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கும் நகத்தில் மாற்றம் தெரியும்.
*அவரவர் பணிக்குத் தகுந்தவாறு நகம் நிறம் மாறக்கூடும். போட்டோ டார்க் ரூமில் பணி செய்பவர்கள், கெமிக்கல் பணிசெய்பவர்களுக்கு நகம் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
* வீட்டு வேலை செய்பவர்களுக்கும் எப்போதும் தண்ணீரில் கை வைத்திருப்பவர்களுக்கும், இயந்திரம், மெக்கானிக் போன்ற வேலைகளில் இருப்பவர்களுக்கு நகத்தின் இயல்பான நிறம் காணப்படாது.
*குழந்தைகள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டால் நகங்கள் பட்டுபோகும்.

அடுத்து நகங்களை எப்படி பராமரிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

நகங்களை எப்போதும் துõய்மையாக வைத்திருக்க வேண்டும். நகங்களை பற்களால் கடிக்க கூடாது. அதற்கான கருவிகள் மூலம் கவனமாக வெட்ட வேண்டும். நகங்களுக்கு நெயில் பாலீஷ் போடுவதோ, போட்டத்தை சுரண்டி எடுப்பதோ கூடாது. சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும் போது நகங்களை சுத்தம் செய்யவேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும். நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை,கால் நகங்களை சுத்தமாக கழுவிக்கொள்ளவேண்டும்.
பியூட்டிபார்லர்களில் பெடிகியூர், மெனு கியூர் பண்ணக்கூடாது. பியூட்டி பார்லர்களில் நகத்தை அழகுப் படுத்துவதாக கூறி நகத்தில் உள்ள பாதுகாப்பு வளையமான எனாமலையும், நகத்திற்கும் தசைக்கும் உண்டான இணைப்பு பாண்டையும் சுத்தப்படுத்துவதாக கூறி, அதை கெடுத்துவிடுகிறார்கள். இதனால் நகத்தில் ரத்தக்கசிவு, நகசுத்தி ஏற்படுகின்றன.
நகம் என்பது அழகுபடுத்திக் கொள்வதற்காக அல்ல. அது மனித உடலில் ஒரு முக்கியமான உறுப்பு என்று எண்ணியே பராமரிக்கவேண்டும்.
தேவராஜன்
*************************************************


11.வாங்க, வாழ்க்கையை சந்தோஷமாக்கலாம்!

மகிழ்ச்சி, சிரிப்பு, ஆனந்தம், பூரிப்பு, இன்பம், நிம்மதி இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் உச்சரித்து பாருங்கள்! அந்த கணம் ஒரு மலர்ச்சி மனதிலும் முகத்திலும் ஏற்படும். வார்த்தைகளில் இருக்கும் சந்தோஷத்தை வாழ்க்கையில் கொண்டுவர என்ன செய்ய வேண்டும்? அது ரொம்ப ரொம்ப ஈசிங்க. சந்தோஷமாக இருக்கிறேன் என்று நினைத்து கொண்டாலே போதும் சந்தோஷம் தானாக வந்து விடும். அப்படி வந்த சந்தோஷத்தை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள சில சந்தோஷமான டிப்ஸ்கள். இதை முயற்சி செய்து பாருங்க. வாழ்க்கையை ஆனந்தமாக கொண்டாடலாம்.

மலர்களில் இருக்கிறது மகிழ்ச்சி:

பூக்கள் என்பது புன்னகையின் குறியீடு. வண்ண வண்ணப்பூக்கள் வசந்தங்களின் வாசல்கள். மலர்களின் மலர்ச்சியும், அழகும், வாசமும் யாரையும் வசீகரிக்கக்கூடியவை. பூக்களின் மென்மை நம் மனதை மென்மையாக்கும் வல்லமை கொண்டவைகளாக இருக்கிறது. ஆதலால், வீட்டின் முன் சின்னதாய் மலர் தோட்டம் வைத்துக் கொள்ளுங்கள்! வீட்டில் மேஜை ஜாடிகளில் வண்ண வண்ணப்பூக்களை வையுங்கள். அலுவலகம் என்றால் உங்கள் டேபிளில் மலர்கொத்து வைத்துக் கொள்ளுங்கள். வண்ண வண்ணமாய் இருக்கும் பூக்கள் மலர்ந்து, காற்றில் அசைந்தாடும் அழகை நீங்கள் பார்க்கும் போதெல்லாம் உங்கள் மனதில் சட்டென்று மலர்ச்சியும், மகிழ்ச்சியும் தொற்றிக் கொள்ளும். அது மட்டுமல்ல; உங்களை சுற்றியிருப்பவர்களின் மனநிலையையும் குதுõகலப்படுத்தும் சக்தி பூக்களுக்கு உண்டு.

அழகான படங்கள் மகிழ்சியை தரும்:

வீட்டின் சுவரில் அழகான படங்களை மாட்டி வைத்தால் வீடும் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதைப் பார்க்கும் போது நம் மனதுக்கும் ஒருஉற்சாகம் கிடைக்கும். மொசுமொசுவென்று இருக்கும் முயல், துள்ளிக்குதிக்கும் புள்ளிமான்கள், விரைந்து ஓடும் குதிரை, செல்லப்பிராணிகளான நாய், பூனைகளின் அழகான படங்களை லே அவுட் செய்து சுவரில் மாட்டி வைத்தால் அதை பார்க்கும் நேரத்தில் எல்லாம் ஆரவாரமான உற்சாகம் பிறக்கும். எதையாவது செய்யணும் என்ற சுறுசுறுப்பும், சாதிக்கவேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். மனதில் இருந்த அழுத்தம், சோர்வு, சுமை, அலுப்பு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். ஆகையால் நீங்கள் சந்தோஷமாக இருக்க உங்கள் வீட்டு சுவரில் அழகான விலங்குகளின் படங்களை ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

அக்கம் பக்கம் பாருங்க பரவசமாவீர்கள்:

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்காமல், வீடேகதி என்று கிடக்காமல் அவ்வப்போது கொஞ்சம் வெளியே வாருங்கள். உங்களுக்கு சந்தோஷப்பொக்கிஷத்தை சுமந்துகொண்டு வானம் திறந்தே கிடக்கிறது. உங்களுக்கு புன்னகை அள்ளி வழங்க பூங்காக்களில் பூக்கள் மலர்ந்து கிடக்கின்றன. சில்லென்று சிலுசிலுத்து ஓடும் நதிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. கரைகளோடு கதைப் பேசியபடி, வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும் திரும்பும் போதும் வழியில் பார்த்து மகிழ எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. உங்கள் வீட்டுக்கருகே அழகான பார்க் இருக்கலாம். ஏரி இருக்கலாம். கோயில் இருக்கலாம். மரங்கள் அடர்ந்த நிழற்சாலைகளில் பறவைகள் கூட்ட கூட்டமாய் பறந்து கொண்டிருக்கலாம். இதை எல்லாம் மனம் திறந்து பார்த்து மகிழப் பழகுங்கள். வீட்டின் மொட்டைமாடியில் மாலையில் மஞ்சள் பூசிய அந்திவானமும், இரவுகளில் ஒளிவீசும் நட்சத்திரங்களும் கூட மனதை லேசாக்கும். பவுர்ணமி நிலவுக்கும் நேரம் ஒதுக்கி விட்டு துõங்கி பாருங்கள். கண்ணை துõக்கம் கவ்வி ஆனந்தத்தில் ஆழ்த்தும்.

உண்ணும் உணவிலும் உற்சாகம் இருக்கிறது:

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த பசி தீர்ந்தால் போதும் அதை விட ஒரு பேரானந்தம் இருக்கிறதா என்ன? வீட்டில் சாப்பிடும் அதே உணவை ஒரு ஓட்டலில் சாப்பிட்டால் கிடைக்கும் சந்தோஷம் வேறுமாதிரியானது. சாப்பாட்டு விஷயத்திலும் இடம்,பொருள், ஏவல் இருக்கிறது. வேலைப்பாடுகள் அமைந்த டைனிங் ஹால், அழகான விரிப்புகள், சுத்தமான தண்ணீர், பளீரென்ற வெள்ளைத்தட்டு இவை எல்லாம் இருந்தால் சாப்பிடும் மூடு தானாகவே வந்துவிடும்.
அடுத்து சாப்பிடும் உணவின் நிறம் வானவில் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தால் போதும், சாப்பாடின் சுவை சாப்பிடும் முன்பாகவே நாவில் வந்து உட்கார்ந்துவிடும். பல வண்ண வகை உணவுகள் மனதில் புதுவித மகிழ்சியை தரும். ஆனால் சிகப்பான நிற உணவு வகைகள் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்திவிடும். எனவே சிகப்பான உணவுகளில் மஞ்சள் நிற சோளப்பொரி, பெப்பர் போன்றவற்றை கலந்து சாப்பிடுங்கள்.

அன்பாக பேசுங்கள்! ஆனந்தம் காணுங்கள்:

நீங்களும் சந்தோஷமாக இருக்க, பிறரும் சந்தோஷமாக இருக்க நீங்கள் செய்யவேண்டியது என்ன வென்றால் எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருக்க வேண்டும். உங்கள் உறவினரிடமோ, நண்பர்களிடமோ பேசும் போது உங்க சொந்தக்கதை, சோகக்கதை எல்லாம் சொல்லி புலம்பாதீர்கள். தேவையில்லாமல் இதயம், ஆத்மா, ரோஸ், மரணம் ஆகிய வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள். எப்போதும் சிடுசிடுவென எரிந்து விழுந்து கொண்டும், கோபம் கொண்டும், பதட்டம், டென்ஷன் கொண்டிருந்தால் உங்களை விட்டு சந்தோஷம் போய் தோஷம் மட்டுமே மிஞ்சும். ஆகவே சதா முணுமுணுத்துக் கொண்டேயிருக்காதீர்கள். எப்போதும் எங்கேயும் எந்த நிலையிலும் அமைதியாக,பொறுமையாக அடக்கமாக இருங்கள். கூலாக இருங்கள்.

வாய்நிறைய புன்னகையை கொண்டிருங்கள்:

எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரப்படாமல், பதட்டபடாமல் இருங்கள். பிடிக்காததை பிறரிடம் நாசுக்காக சொல்லப் பழகுங்கள். சட்டென்று மூஞ்சில் அறைந்தார் போல சொல்லி விடாதீர்கள். பிடிக்கவில்லை என்றால் மென்மையாக வேண்டாம் என்று சொல்லிப் பழகுங்கள். தவறுகள் நிகழும் போது தயங்காமல் மன்னிப்பு கேட்க பழகுங்கள். இதையெல்லாம் செய்து வந்தால் நிச்சயம் சந்தோஷம் கிடைக்கும்.

நறுமணம் கமழும்படி வீட்டை வைத்துகொள்ளுங்கள்:

வீட்டை சுகந்தமாய் வைத்துக் கொள்ள வாசனைத் திரவியங்களை தெளியுங்கள். வீட்டில் நல்ல மணம் வீச துளிசி, மல்லிகைச் செடி, நல்ல வேம்புச்செடி, ஓமம் செடி,வெட்டிவேர், மரிக்கொழுந்து செடிகளை வளருங்கள். அப்புறமென்ன வீடுகமகமக்கும். உங்க மனசும் மகிழ்சியில் குதுõகலப்படும்.
தேவராஜன்
**************************************************


12. குண்டா இருந்தா நோய் உண்டாகும்!

நீங்கள் அதிக கொழுப்பு சத்தினால் பருமனாக இருக்கீங்களா? உஷார்... உங்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்பிருக்கிறது. நீரழிவு நோய் வரும் என்று ஒரு ஆய்வு, குண்டு பெண்கள் மீது இப்படி ஒரு குண்டைப் போட்டிருக்கிறது.
"உண்டி சுருங்கின் பெண்டீருக்கு அழகு' என்று ஒரு பழமொழி உண்டு. பொதுவாக பெண்கள் மெலிந்து இருப்பது அழகு மட்டுமல்ல; ஆரோக்கியமும் கூட. ஆனால், இன்றைய நகரத்து பெண்கள் பெரும்பாலானோர் பருமனாகவே இருக்கிறார்கள். இப்படி இருப்பவர்களை ஆய்வு செய்து "குண்டாக இருந்தால் பல நோய்கள் ஏற்படும்' என்று ஒரு அதிர்ச்சி தகவலை ஆல் இன்டியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் டிபார்ட்மென்ட்( அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவன துறை) தெரிவித்துள்ளது.
கிராமத்து பெண்களைவிட, நகரத்து பெண்கள் அதிக பருமனாகிவிடுகிறார்கள். அதற்கு அனேக காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும் குறிப்பாக, வாழ்க்கை முறை, உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வசிக்கும் பிரதேசத்திற்கும், தட்பவெட்பநிலை சீதோஷணத்திற்கு ஏற்ற உணவுவகைகளை சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, நம் வாழ்க்கை முறைக்கும், கலாசாரத்துக்கும் எதிரான உணவுவகைகளை சாப்பிடுவதால் தான் ஒருவகையில் நாம் பருமனாகிவிடுகிறோம். நாம் சாப்பிடும் உணவிற்கு ஏற்ப உடல் உழைப்பு இல்லாததும் உடல் பருமனுக்கு முக்கிய காரணம். பருமனாக இருப்பதால் பெரும்பாலனவர்களுக்கு சுகர், மனஅழுத்தம், இதயநோய், தைராய்டு பிரச்னை போன்ற பல நோய்கள் வருகின்றன.
எய்ம்ஸ் ஆய்வில் கூறியுள்ள புள்ளிவிவரத்தில் சொல்லப்பட்ட பெண்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது தெரியுமா?
பெண்களில் 64 சதவீதம் நகரத்துப் பெண்களும், 36 சதவீதம் கிராமத்துப் பெண்களும் ஓவர் வெயிட்டாக இருக்கிறார்கள். 64 சதவீதம் நகரத்துப் பெண்களும், 29 சதவீதம் கிராமத்துப் பெண்களும் கனத்த உடல் தொல்லையை அனுபவித்து வருகிறார்கள். 96 சதவீதம் நகரத்துப் பெண்களும், 76 சதவீதம் கிராமத்துப்பெண்களும் உடல்பருமன் காரணமாக இதய நோய் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். 14.5 சதவீதம் நகரத்துப்பெண்களும், 3.7 சதவீதம் கிராமப்புற பெண்களும் உடல் பருமனால் நீரிழிவு நோய் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். 80 சதவீதம் நகரத்துப் பெண்களுக்கும் 25 சதவீதம் கிராமத்துப் பெண்களுக்கும் அனிமியா நோய் உள்ளது. 25 சதவீதம் நகரப் பெண்களும் 13 சதவீதம் கிராமப்புற பெண்களும் அதிக கொலஸ்டிரால் கொண்டிருக்கிறார்கள் என்று அந்த புள்ளி விவரம் குறிப்பிட்டுள்ளது.
ஜெய்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களில் 68 சதவீதத்தினர் உடல் பருமனாக உள்ளனர். கொல்கத்தாவைச் சேர்ந்த பெண்களில் பருமனாக இருப்பவர்களில் 82 சதவீதம் பேர் வயிறு பெருத்துக் காணப்படுகின்றனர்.
சரி, பருமனை குறைக்க என்ன செய்வது?
இயற்கை உணவுவகைகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகள் நார்சத்துள்ள காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு சத்துள்ள பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேற்கத்திய உணவுவகைகளை சாப்பிடுவதை விலக்கி கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி செய்துவரவேண்டும். முறையாக உடற்பயிற்சி செய்து வரவேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் உயரத்துக்கு ஏற்ப இருக்க வேண்டியை எடை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள ஒருஎளிய வழி என்னவென்றால் உங்கள் உயரத்தை செ.மீ. அளவில் அளந்து கொள்ளுங்கள். அந்த உயர அளவில் நுõறினை கழிக்க வேண்டும். அப்படி கழித்தப்பின் மீதம் இருக்கும் அளவே உங்கள் உயரத்திற்கு இருக்கவேண்டிய சராசரி எடையாகும்.
உதாரணமாக உங்கள் உயரம் 150 செ.மீ. என்றால் 150 லிருந்து 100 கழிக்க மீதம் 50 இருக்கும் அல்லவா? அந்த 50 தான் உங்கள் உயரத்துக்கான சராசரி எடையாகும். இது போல உங்கள் உயரத்துக்கு இருக்க வேண்டிய எடையை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உயரத்துக்கேற்ப சராசரி எடை அதிகமாக இருந்தால் உடல் பருமனை குறைக்க முயற்சி செய்யுங்கள். நோய்களிலிருந்து விடுபடுங்கள்.

தேவா
*********************************************


13. வாசகிகளின் கவிதையில்
உருகிய பா.விஜய்!

தினமலர் பெண்கள்மலர், ரத்னா ஸ்டோர்ஸ் ஃபேர்ம் இணைந்து நடத்திய அன்னையர் தின கவிதைப்போட்டிக்கு பெண்கள் மலர் வாசகியிடமிருந்து கவிதைகள் கொட்டோ கொட்டென்று கொட்டிவிட்டது. அன்னையைப்பற்றிச் சொல்ல ஒவ்வொருத்தரிடமும் எத்தனை விதமான வார்த்தைகள் இருக்கின்றன! அடேங்கப்பா.

முதலில் கவிதைகோதாவில் குதித்த அனைத்து வாசகிகளுக்கும் ஒரு சபாஷ்!
எத்தனை எத்தனை கருத்துகளில், வடிவங்களில் கவிதைகள்...

ஒரு கூடை மல்லிகைப்பூவில் எந்தப்பூ நன்றாக மணக்கிறது என்று சொல்வது எப்படி கடினமோ அத்தனை கடினமானது என்பதை நீங்கள் எழுதி குவித்த கவிதைகளில் சிறந்த கவிதையை தேர்ந்தெடுக்கும் போது ஆசிரியர் குழு அனுபவித்தது. இறுதியில், தேர்வான கவிதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் பரிசுக்குரிய 25 கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை கவிஞரும், ஞாபகங்கள் பட நாயகனுமான பா.விஜயிடம் ஒப்படைத்தோம்.
ஞாபகங்கள் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலையில் இருந்தாலும், நம் வாசகிகளுக்காக நேரம் ஒதுக்கி, வாசகிகளின் ஒவ்வொரு கவிதையையும் பொறுமையாக ரசித்துப் படித்தவர் ஆச்சரியப்பட்டுபோய், "ஒரு தேர்ந்த கவிஞர்களைவிட வாசகிகள் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்' என்றார்.

"அம்மா!
கையெழுத்திடு, கவிதை கேட்கிறார்கள்!
தெரியாதே மகளே! ரேகை வைக்கட்டுமா?
வை! பரவாயில்லை
ஓவியமும் கேட்கிறார்கள்!'

திருச்சியை சேர்ந்த மாலதி எழுதிய இந்த கவிதையை ரசித்து வாசித்தவர், இந்த கவிதையில் 80 ஆண்டுகள் வாழ்ந்த ஒரு கவிஞனின் முதிர்ச்சியும், அனுபவமும் தெரிகிறது என்றார். அவரை கவர்ந்த இன்னொரு கவிதை,

"துõரத்தில் நிலவு அருகில் அம்மா
பக்கத்தில் என் குழந்தை
துõரத்தில் பாட்டியாய்...' வேதாரண்யம் ரமிதா எழுதியது.

"என் பிள்ளைகள் சுகமாய்
இருக்கவேண்டும்!
முதியோர் விடுதியின்
கூட்டுப்பிரார்த்தனையில்
அம்மா!' இது ஈரோட்டிலிருந்து ஆழிலதா எழுதியது.

இப்படி ஒவ்வொரு கவிதையையும் சிலாகித்துப் பாராட்டி அவர் சொன்னது. ""என்னைப்பொறுத்தவரை தொழில் முறையாக கவிதை எழுதும் கவிஞர்கள் கவிதை செய்கிறார்கள். ஆனால், இதுபோல வாசகர்கள்தான் கவிதைகளைப்பிரசவிக்கிறார்கள். இவர்களின் படைப்பில் தான் ஜீவனிருக்கும். உணர்வு இருக்கும்.

ஆண்களைப்போல பெண்கள் அதிகமாக கவிதைகள் படைப்பதில்லையே என்று கருத்து கேட்ட போது, அவரிடம் விளக்கம் இருந்தது.

""பெண்கள் அதிகம் கவிதைகள் எழுத முன்வராததற்கு காரணம் அவர்களின் சூழ்நிலை. பதினெட்டு வயதுவரை சுதந்திரமாக இருக்கும் அவர்கள், திருமணம் ஆனவுடன் பொறுப்புகள், சுமைகள் சுமக்கவேண்டியிருப்பதால் இந்த தேக்கம் வந்து விடுகிறது என்று நினைக்கிறேன்.

இருந்தாலும், பெண்கள் அதிகம் படிக்கவேண்டும். எழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். ஒருவர் படிக்க படிக்க, படித்த விஷயங்கள் உள்ளே போனதும் அவை உள்ளேயே இருந்து விடாது. அது எழுத்தாகவோ, பேச்சாகவோ வெளியே வந்துவிடும். வெளியே வந்தவை நிச்சயம் நல்ல படைப்புகளாக மலரும். அதனால் தான் பெண்கள் நிறைய படிக்கவேண்டும் என்கிறேன்.

அடுத்ததாக, பெண்களை எழுதவைக்க பத்திரிகைகள் இது போல போட்டிகள் வைத்து அவர்களை உற்சாகப்படுத்தி, எழுததுõண்டும் சேவையை செய்ய வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.
உங்களின் அன்னையை பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டதற்கு, ""என்னுடைய வெற்றிக்கெல்லாம் காரணம் என் அப்பா என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். சமீபத்தில் தான் என் வெற்றிக்கு அப்பா மூலமாக அம்மா இருந்திருந்ததை அறிந்தேன். "தாய்காவியம்' படம் எடுக்க போய் நான் பட்ட கஷ்டங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த சுமையை சுமக்க முடியாமல் நிம்மதியில்லாமல் இருந்தேன். ஒருநாள் இரவு அசிரிரீ போல என் அம்மாவின் குரல் ஒலித்தது. "மகனே, ஏன் சுமையை சுமந்துகொண்டே இருக்கிறாய். சுமை அழுத்தும் போது எப்படி நடக்க முடியும்? அந்த சுமையை இறக்கி ஓரம் வைத்துவிட்டு வேறு வேலையைப் பார். எல்லாம் சுபமாகும்' என்று கேட்டது.
கொஞ்சம் யோசித்தேன். அம்மாவின் வார்த்தையை வாக்காக எடுத்துக்கொண்டு தாய்காவியம் கசப்பான சம்பவங்களை மறந்து, அந்த பட முயற்சியை துõரவைத்து விட்டு "ஞாபகங்கள்' பட வேலையில் இறங்கினேன். கிடுகிடுவென்று படம் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் அம்மா'' என்று உருகினார் பா.விஜய்.
தேவராஜன்
*************************************************


14. எங்கள் குடும்பம் ஓவியக்குடும்பம்!


""கோட்டு ஓவியம், நவீன ஓவியம் என எத்தனை ஓவியங்கள் வந்தாலும், பாரம்பரிய தஞ்சை ஓவியத்திற்கு உள்ள மவுசே தனி. அதற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. இன்றும் தஞ்சை ஓவியம் வாங்கவும், அதை வரைய கற்றுக்கொள்ளவும் விரும்புகிறார்கள் என்பதால் தஞ்சை ஓவியக்கலை சாகாவரம் பெற்றது என்று தான் சொல்வேன்'' என எடுத்த எடுப்பிலேயே பிரம்மிப்பூட்டுகிறார், மணிமொழி.
சென்னை கே.கே.நகரில் வசிக்கும் மணிமொழி, ஓவியகலைஞர். இவர் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் மதுரை. தனக்கு இருக்கும் ஓவியத்திறமையை வளர்த்துக்கொள்ளவும்,கலையார்வம் உள்ளவர்களுக்கு தஞ்சாவூர் ஓவியக்கலையை கற்றுக்கொடுக்கவும் மதுரையிலிருந்து சென்னைக்கு இடப்பெயர்ச்சி செய்துள்ளார்.

உங்களைப்பற்றி சொல்லுங்களேன்?
அன்பான கணவர் அன்பு மணி. எனக்கு எல்லாவகையிலும் ஊக்கியாக இருக்கிறார். ஒருமகள். மதுரையில் இருக்கிறார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். என்னைப் போலவே மகள், பேத்திகளுக்கும் ஓவியத்தின் மீது ஆர்வமும் ஆசையும் கொண்டிருக்கிறார்கள். சொல்லப்போனால் எங்கள் குடும்பம் ஓவியக் குடும்பம்.

தஞ்சாவூர் ஓவியக்கலைக்கு உங்களுக்கு அறிமுகமானதைச் சொல்லுங்களேன்?
ஸ்கூலில் படிக்கும் போது தான்தோன்றித்தனமாக ஓவியம் வரைவேன். பள்ளிகளில் ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன். இதனால்தான் எனக்கு ஓவியத்தின் மீது ஆர்வம் வந்தது என்று சொல்ல முடியாது. பள்ளிப்படிப்பு முடிந்தப்பிறகு, வீட்டில் சும்மா இருந்தபோது, ஒரு சமயத்தில் எதிர் வீட்டில் உள்ள சக தோழிகள் பொம்மைகள் செய்வது, ஓவியம் தீட்டுவது என இருந்தார்கள். சும்மா இருப்பதற்கு அவர்களைப்போல ஓவியம் வரைந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது. நானாகவே ஆர்வமிகுதியால் பல ஓவியங்கள் வரைந்து பழகினேன். ஒருவிழாவில் ஓவியர் முருகேசனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் முறைபடி ஓவியம் பழக ஆரம்பித்தேன். பின்னர், எம்பிராய்டு செய்தல், சேலைகளுக்கு டிசைன் செய்தல் என இருந்தேன். என் கணவரின் துõண்டுதலால் பிறருக்கும் சொல்லிக் கொடுக்கலாமே என தீர்மானித்தேன். அதற்கு மதுரை சரிவராது என தோன்றியதால் 2000ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன்.

தஞ்சாவூர் ஓவியம் தவிர, வேறு வகை பெயிண்டிங் பண்றீங்களா?
பாட், பேப்ரிக், நிப், பதிக், சேன்ட், காஷ்மீரி, ஸ்டெயின், போர்ட்ரய்ட், டைல்ஸ், கட்கிளாஸ், ராஜாஸ்தான், முரல், பேட்ச் ஒர்க், சோலார்வுட், ஸ்டோன் ஒர்க், சாப்ட்பர் டால், கேன்வாஸ், கிளாத் எம்போசிங், மெட்டல் எம்போசிங் என்று நிறைய பெயிண்டிங் செய்யறேன். ஆர்டரின் பேரில் தஞ்சாவூர் பெயிண்டிங் பண்ணிக் கொடுக்கிறேன். கொலுவின் போது அழைப்பின் பேரில் அவரவர்கள் விருப்பப்படி திருவண்ணாமலை கிரிவலம், திருப்பதி மலை, நீர் ஊற்று போன்ற டெக்கரேசன் செய்து கொடுக்கிறேன். பள்ளி மாணவர்களுக்கு பிராஜக்ட் செய்து கொடுக்கிறேன்.

ஓவியக்கண்காட்சி வைத்திருக்கிறீர்களா?
அசோக்நகரில் ஜெவஹர் வித்யாலயா ஸ்டாலிலும், கே.கே. நகர் ஸ்பென்சர் ஸ்டாலிலும் கண்காட்சி வைத்திருக்கிறேன். ஓவியங்களுக்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக, அப்சரா பென்சில் நிறுவனமும், கேமல் நிறுவனமும் ஸ்பான்சர் செய்யும் ஓவியப்போட்டி ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்துகிறேன். இந்தப் போட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி மாணவர்களிடம் ஓவியக்கலையார்வத்தை வளர்த்து வருகிறேன். மேலும் மாணவர்களுக்கு ஸ்டைல் கையெழுத்துப்பயிற்சியும் கற்றுத்தருகிறேன்.

உங்களை மெய்சிலிர்க்வைத்த பாராட்டு?
என்னிடம் பிரபல ஓவியர் மாலி தன் பேத்திக்கு ஓவியம் கற்றுக்கொடு என்று சொல்லி பேத்தியை அனுப்பி வைத்தார். ஒரு நாள் தன் பேத்தி வரைந்த ஓவியத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, கற்றுத்தந்த என்னை மனம் திறந்து பாராட்டினார். அது தான் என்னை கவுரவப்படுத்தியது.

எதிர்கால லட்சியம் என்ன?
வருங்காலத்தில் அரசு அங்கீகாரத்துடன் ஓவியப் பள்ளி தொடங்க வேண்டும் என்பது என் கனவு. மேலும் ஓவிய ஒர்க்ஷாப் வைத்து, ஓவியதொழிலில் மேலும் மேலும் வளரவேண்டும்.
தேவராஜன்
**************************************************


15.அனுதாபம் வேண்டாம், அங்கீகாரம் போதும்!

கல்லுõரிப் பெண்ணைப் போன்ற தோற்றம், பேசும் போது ஒவ்வொரு வார்த்தையோடு புன்னகையையும் சேர்ந்து வந்து விழுகிறது. இதுதான் முத்துச்செல்வி. முத்துச்செல்வியை பிரம்மன் சிருஷ்டி செய்தப்போது, கவனக்குறைவால் கண்ணில் ஒளியை கொடுக்க மறந்து விட்டானோ? என்ற ஆதங்கம் மனதை ஓங்கி அறைந்ததில் தகித்துப் போய் மவுனத்தில் இருந்த நிமிடங்களில், ""பார்வை இல்லை என்பதை ஒருபொருட்டாகவே நான் கருதியதில்லை. இதுவரை கண் தெரியாதவர்கள் யாரும் இந்தியாவில் நீதிபதியானதில்லை. அந்த சாதனையை நான் செய்வேன். அதன் மூலம் நான் பார்க்காத இந்த உலகத்தை, என்னைப் பார்க்கச் செய்வேன்'' என்று தன்னம்பிக்கை மிளிர லட்சிய கனவை முத்துச் செல்வி கூறியதும் அவரைப் பார்த்தது முதல், மனதில் படிந்திருந்த அனுதாப உணர்வை சுத்தமாய் துடைத்துப் போட்டு அவரைப் பற்றி விசாரித்தோம்.

""நெல்லை மாவட்டத்தில் உள்ள வள்ளியூர்தான் என் அப்பா, அம்மாவின் பூர்வீகம். இப்போ காட்டாங்குளத்துõரில் எஸ்ஆர் எம் காலேஜ் பக்கத்தில் சொந்த வீட்ல இருக்கோம். அப்பா சப்இன்ஸ்பெக்டர். அம்மா ஹவுஸ் வொய்ப். என் அக்கா வெங்கடேஸ்வரி பிஸியோதெரபிஸ்ட். இப்போ அவளுக்கு ஸ்டேட் பாங்கில் வேலை கிடைச்சிருக்கு. இளையவன் தம்பி மணி லயோலா காலேஜில் சோஷியாலஜி படிக்கிறான். குடும்பத்தில் எங்கள் மூவருக்குமே கண் தெரியாது. எங்க மூணு பேருக்கும் மாறி மாறி சிகிச்சைப் பார்த்து அலுத்துவிட்டார் என் அப்பா'' என்கிறார் முத்துச்செல்வி.

""அம்மாவும், அப்பாவும் நெருங்கிய உறவுக்குள் கல்யாணம் செய்து கொண்டதுதான் நாங்க இப்படி பொறந்ததுக்கு காரணம்னு டாக்டர்கள் சொல்றாங்க. எங்களுக்கு பார்வைதான் இல்ல. ஆனா, தன்னம்பிக்கை நிறைய இருக்கு. அதுக்கு காரணம் எங்களோட பெற்றோர்தான். பார்வையில்லை என்பதை ஒருபொருட்டாகவே நாங்கள் எண்ணாத அளவுக்கு எங்களை வளர்த்து, படிக்க வைத்திருக்கிறார்கள்'' என்று தன் பெற்றோருக்கு நன்றி கூறும் முத்துச்செல்வி பிஎல் ஹானர்ஸ் படித்திருக்கிறார். இப்போது ஜஸ்டீஸ் படிப்பும் படித்துக் கொண்டிருக்கிறார்.

""இதுவரை கண் தெரியாதவர்கள் யாரும் இந்தியாவில் நீதிபதியாக இருந்ததில்லை. ஜஸ்டீஸ் பரிட்சையில் பாசாகி, நீதிபதியாக ஆவதே என் லட்சிய பயணம்'' என்கிறார் உறுதியோடு.

தன்னைப்போல் பார்வையில்லாமல் இருப்பவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக முத்துச்செல்வியும், அவரின் தோழிகளும் இணைந்து "டாண்' என்ற டிரஸ்ட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.

""பார்வையில்லாதவர்களில் 90 சதவீதம் பேர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பொருளாதார ரீதியா உதவி செய்யணும். கல்வி, மருத்துவ வசதி செய்து கொடுக்கணும். பார்வை கிடைக்க வழி செய்யணும். என்னோட இந்த ஆசையை எல்லாம் நிவர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் இந்த டிரஸ்ட்டையே ஆரம்பிச்சிருக்கோம். நான் செய்யவேண்டிய பணிகளும், என் லட்சியங்களும் நீண்டுகிடக்கிறது. அதை நோக்கி என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது'' என்கிறார் புன்னகையுடன்.

உங்களின் வருங்கால கணவர் எப்படிப்பட்டவரா இருக்கணும் என்ற நம் கேள்விக்கு, ""என் மீது அனுதாபப்படாமல், என்னை சக மனுஷியாக நினைக்கும் ஆண்தான் எனக்கு கணவராக வரவேண்டும்'' என்று பட்டென்று பதில் வருகிறது முத்துச்செல்வியிடமிருந்து.

தேவராஜன்
படங்கள்: செல்வக்குமார்
***************************************************


16 . முதுகுவலியால் அவதிப்படுபவரா...?

நம் அம்மா, பாட்டிகளின் வாழ்க்கை முறைக்கும் இன்றைய நம் வாழ்க்கை முறைக்கும் வித்தியாசம் உள்ளது.
பாட்டிமார்கள் செய்த வீட்டு வேலைகளே உடற்பயிற்சிகளாக அமைந்து, உடல் வலுவையும் ஆரோக்கியத்தையும் கொடுத்தன. அம்மி, ஆட்டுக்கல், உரல் பயன்படுத்துவது, பெருக்குவது, கோலம் போடுவது, கிணறு, அடி பம்புகளில் தண்ணீர் எடுப்பது போன்ற செயல்களினால் அவர்களுக்கு முதுகு வலி, மூட்டுவலி, தசைப்பிடிப்பு, சுளுக்கு எல்லாம் ஏற்பட்டதில்லை.
ஆனால், இன்று சுவிட்சை தட்டுவது மட்டும்தான் நம் வேலை. மற்றவற்றை அந்தந்த வேலைக்குரிய மிஷின்கள் பார்த்துக் கொள்கிறது. இதனால் நமக்கு குனிந்து, நிமிர வேண்டிய வேலையே இல்லாமல் போய்விட்டது. இதனால் எலும்புகளும், தசைகளும் இறுகி முதுகுவலி, மூட்டுவலி போன்ற வலிகளை ஏற்படுத்துகின்றன.

முதுகு வலி வராமல் இருக்க சில எளிமையான டிப்ஸ்கள்:

1. முதுகு வலி வருவதற்கு முதல் காரணமாக இருப்பவை நாம் படுத்து உறங்க பயன் படுத்தும் படுக்கை தான். படுக்கை மேடு, பள்ளமாக, ரொம்ப தடிமனாக இருக்கக்கூடாது. அதே சமயம் படுக்கை மேற்பரப்பு மிகவும் மென்மையாகவும், கடுமையானதாகவும் இருக்கக் கூடாது.

2. படுத்ததும் ஆழ்ந்த துõக்கம் வருவதற்கு துõங்கும் முறை கவனிக்கப்படவேண்டியவையாக இருக்கிறது.
கொஞ்சம் தளர்வாக, ஒருக்களித்துப் படுத்துக்கொண்டு, தலைக்கு கீழ் அதிக தடிமன் இல்லாத தலையணை வைத்து கொள்ளவேண்டும். முழங்காலுக்கு இடையில் மென்மையான தலையணை வைத்துக்கொண்டு படுத்தால் முதுகு வலி ஏற்படாது. இருக்கும் வலியும் தீரும்.

3. அதிக எடையுள்ள பொருளை மூச்சைப் பிடித்துக்கொண்டு தள்ளவோ, இழுக்கவோ கூடாது. ஒரே இருக்கையில் ஒரே முறையில் ரொம்ப நேரம் அமர்ந்திருக்கக்கூடாது. அப்படி அமரவேண்டிய நிலை
ஏற்பட்டால் கொஞ்ச நேரம் எழுந்து, நடந்து பிறகு அமரவும். பிறகு படத்தில் காட்டியவாறு பயிற்சி செய்து பழகி வந்தால் முதுகு வலி வராது.

4. முழங்காலிலும், முட்டியிலும் வலி ஏற்பட்டால், அடிப்பட்டு வலி வந்தால், வலிகாரணமாக உடம்பை அசைக்க முடியாமல் இருந்தால், 3 நாளுக்கு மேலும் வலி குறையாமல் இருந்தால் உடனே, உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

5. பளுவான பொருளைத் துõக்கும் போது முதுகு வலி ஏற்படும். அதனால் சற்று குனிந்த நிலையிலோ, கால் முட்டி வளைந்த நிலையிலோ பொருளைத் துõக்கக்கூடாது. அமரும் நிலையில் முதுகு தண்டு நேர் நிலையில் இருக்கும்படி இருந்து பளுவைத்துõக்கினால் முதுகு வலி ஏற்படாது.

7. ஒரே நிலையில் ஒரே இடத்தில் ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தாலும் முதுகு வலி வரும். அதனால், நீண்ட நேரம் ஒரே நிலையில் நிற்காமல் சற்று தடிமனான கட்டை மீது ஒரு காலின் பாத்தை வைத்து நின்றால் முதுகு வலியை தவிர்க்கலாம்.

8. முதுகுவலிக்கு சில எளிய உடல் பயிற்சிகள்: படம் 1ல் உள்ளது போல ஒரு காலை மடக்கி முட்டி நெஞ்சு பகுதிக்கு வருமாறு வைத்து சிறிது நேரம் கைகளால் அணைத்து கொள்ளவேண்டும். படம்2ல் உள்ளது போல இரு கால்களையும் மடக்கி கைகளால் அணைத்துகொள்ளவேண்டும். படம்3 இருப்பது போல
இரு கைகளை தரையில் நேராக படுமாறும், பின்னர் கால்களை மடக்கி இடுப்பு பகுதியை உயர்த்திக்கொண்டு
இருக்க வேண்டும்.

9. முதுகு வலி ஏற்பட நாம் அணியும் செருப்பும் ஒரு காரணமாக இருக்கிறதாம். ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்தால் முதுகு வலி வரும். படத்தில் உள்ளது போன்று எளிய உடற்பயிற்சியை தினமும் செய்து வந்தால்
முதுகு வலியை தவிர்க்கலாம்.

10. துõங்கும் போது தலைக்கு கீழ் தலையணையும் தொடைக்கும் முட்டிக்கும் கீழ் அதிக தடிமன் இல்லாத தலையணை வைத்து கொண்டு துõங்க வேண்டும். முதுகு வலி இருக்கிறதே என்பதற்காக இடுப்புக்கு கீழ் தலையணை வைத்துக் கொள்ளக்கூடாது.

11. சேரில் அமரும் போது படத்தில் காட்டியவாறு அமர்ந்து பணி செய்யுங்கள். இருக்கமாக அமராமல் சற்று தளர்வாகவும், எல்போ நிலையிலும், தோள்பாகம் ரிலாக்ஸ் ஆகவும், இடுப்பு பகுதி சேரின் பின்புறம் நன்கு பதியும் படியும், கால் பாதம் தரையில் சமதளமாக படுவது போலும் உட்கார வேண்டும்.
தேவராஜன்
***************************************************


17.பொண்ணுப் பார்க்க போறீங்களா?

பெண்கள்மலரை ஆண்களும்தான் படிக்கிறோம், எங்க சப்ஜெக்ட் ஏதாவது கொடுக்கக் கூடாதா? என்று ஏக்கத்தோடு கேட்கும் ஆண்களுக்குதான் இந்த கட்டுரை.
கல்யாண பருவம் வந்துவிட்டால் பார்க்கும் பெண்கள் எல்லாம் அழகாக இருப்பார்கள், எந்தப் பெண் சிரித்தாலும் சிப்பொனியாகவே கேட்கும். "மணி என்ன?' என்று கேட்பது கூட கவிதையாய் தித்திக்கும். இப்படி பருவம் வருத்தெடுக்கும் போது, இதில் என்னவள் எவள்? அவள் எப்படி இருப்பாள், இந்தப் பெண்ணை போல் இருப்பாளோ, அவளைப் போல இருப்பாளோ என்று ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கும் திருமணம் ஆகாத ஆண்களுக்கு இந்த கட்டுரை நிச்சயம் உதவும். தொடர்ந்து படியுங்கள்.
"நீங்கள் உங்கள் மனைவியை தேர்ந்தெடுப்பதில் பாதி பங்கு உங்களுடையவை. மீதி பங்கு இறைவனுடையவை' என்று கண்ணதாசன் சொல்லியிருக்கிறார். கல்யாணம் என்ற பேச்சு வந்ததுமே மனதில் ஆயிரத்தெட்டு கேள்விகள் வந்து வண்டு போல துளைத்தெடுத்து விடும். எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்துகொள்வது? அவள் என் குடும்பத்தோடு ஒத்துபோவாளா? எத்தனை முறை சந்தித்து,பேசினால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியும்? எப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம்? இது என் வாழ்க்கை. எனக்கு பிடித்த பெண்ணை தேர்வுசெய்வதில் எனக்கு உரிமையிருக்கிறது. ஆனால் தேர்ந்தெடுப்பதில் எதாவது தவறு செய்துவிடுவேனா? அப்படி என்றால் அந்த தவறுகள் என்னவாக இருக்கும்? இப்படி நீங்கள் குழம்பி இருக்கலாம். உங்கள் குழப்பத்தை தீர்த்துக் கொள்ள இந்த விதிகளை பின்பற்றுங்கள்.

கல்யாண விதி1

18 வயது வரை பெண்களுக்கு வெளிஉலகம் அவ்வளவாக தெரியாது. 2324 வயதில்தான் படித்து முடித்து, வேலைக்கு செல்வார்கள். இந்த வயதில்தான் தைரியமாக வெளிமனிதர்களிடம் பேசி, பழகுவார்கள். ஆனால் இந்த வயதுடைய பெண்ணை நீங்கள் தேர்ந்தெடுத்தால் கொஞ்சம் தொல்லை தான். அவர்களுக்கென்று திட்டவட்டமான ஒரு தீர்மானம், நிலையான விருப்பம் எல்லாம் இருக்காது. எனவே உங்கள் தேடல் முதல் கிளிக்கில் கிளிக் ஆக வேண்டுமென்றால் 2425 வயதுடைய பெண்ணைப் பாருங்கள்.

கல்யாண விதி2

எல்லாருமே உலக அழகி ஐஸ்வர்யாராயை மணமுடிக்க முடியாது என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்கள் அந்தஸ்துக்கு கொஞ்சம் குறைவாகவே பெண்ணை தேர்ந்தெடுங்கள். நல்ல பெண்கிடைப்பது நிச்சயம்.

கல்யாண விதி3

வாழ்க்கையில் எத்தனையோ பெண்களை சந்திக்கிறோம்; பழகுகிறோம். எல்லாரையும் சட்டென்று இவர் இத்தகையவர் என்று தீர்மானித்துவிட முடியாது. ஆதலால் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண்ணை பல தடவைகள் சந்தியுங்கள், நட்புடன் பேசுங்கள். உதவிக்கு வேண்டுமானால் பெற்றோர், நண்பர்கள், நெட், ஈ மெயில் வசதிகளை பயன்படுத்திகொள்ளுங்கள்.

கல்யாண விதி4

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதை தீர்மானித்தாலும் முதலில் உங்களைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ற துணையை தேர்ந்தெடுங்கள்.

கல்யாணம் விதி5

திருமண உறவு ஒரு மனிதனுக்கு கடைசி வரை நிழல் போலவே இருக்கக்கூடியது என்பதால் அடுத்தவர்கள் விருப்பத்திற்காக,வேண்டுகோளுக்காக, கட்டாயத்திற்காக ஒரு பெண்ணை மறந்தும்கூட தேர்ந்தெடுத்துவிடாதீர்கள். யார் எது சொன்னாலும் உங்கள் சொந்த விருப்பத்தின் படியே தேர்ந்தெடுங்கள்.

உங்கள் ஜோடியை தேர்ந்தெடுக்க உதவும் வழிமுறைகள்:

குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு குறையாமல் காலம் எடுத்துகொள்ளவேண்டும். எந்த மாதிரி பெண்ணை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும். பல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுங்கள். வெப் சைட்டுகளில் பதிவு செய்யுங்கள். உறவுகள், குடும்ப நண்பர்களிடம் சொல்லிவையுங்கள். இதெல்லாம் செய்து முடித்துவிட்டு உங்கள் வீட்டுக்கதவை திறந்தே வையுங்கள். உங்கள் தேவதை எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

தேவா
******************************************************


18. புற்றுநோயின் கோரப்பிடியிலிருந்து
மீண்டு சாதித்த மாணவி!

"தன்னம்பிக்கையும் பிறரின் ஊக்கமும் ஒருவருக்கு இருந்தால் போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் தான் கொண்டிருக்கும் லட்சியங்களை அடையலாம்' என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் மாணவி பாத்திமா. இவருக்கு ஆறுவயதில் ரத்த புற்று நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவர, தொடர்ந்து 99ம் ஆண்டிலிருந்து சிகிச்சை எடுத்து வந்த பாத்திமா தனக்கு இப்படி ஒரு நோய் வந்து விட்டதே, உயிர் பிழைப்போமா, மாட்டோமா என்றெல்லாம் நொந்து, மனம் தளர்ந்து விடாமல், படிப்பை தொடர்ந்து, இப்போது நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 472 மார்க் எடுத்து, அவர் படித்த பள்ளியில் முதல் மாணவியாக தேர்வாகியிருக்கிறார். பாத்திமாவை சென்னை குழந்தை நல மருத்துவமனையில் சந்தித்து உரையாடியதின் தொகுப்பு.

படிப்பில் நீங்க படு சுட்டியா?
ஆமாம். மாநில அளவில் முதல் இடம் எடுக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு தான் படித்தேன். ஆனால், அது பள்ளியளவில் முதல் இடமாகிவிட்டது. எனக்கு அறிவியலும், கணிதமும் ரொம்ப பிடித்த பாடங்கள். பத்தாம் வகுப்பில் கோட்டை விட்ட லட்சியத்தை இதே பிராட்வே சயின்ட் ஆனிஸ் பெண்கள்மேல்நிலைபள்ளியில் தொடர்ந்து படித்து, ப்ளஸ் 2வில் சாதித்துக்காட்டுவேன். பயாலஜி குரூப் எடுக்கவுள்ளேன். என் படிப்புக்கும், உயர்வுக்கும் சக மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர் எல்லாம் முழுஒத்துழைப்பு கொடுக்கறாங்க. எனக்கு இருந்த ரத்த புற்று நோய் குணமாகும். நான் நல்லா வருவேன்னு எல்லாருமே ஆறுதல் தந்தாங்க. எனக்கு பலவிதத்திலும் எப்போதும் நம்பிக்கையூட்டிய அவங்களுக்கு எல்லாம் என் நன்றி எப்போதும் உண்டு.

ப்ளஸ்2 பிறகு உங்கள் லட்சியம்?
டாக்டருக்குப் படிக்க வேண்டும். இதுதான் என் ஆசை. சாதாரண குடும்பத்தில் பிறந்த என்னால் முடியுமா? என்று பலர் என் காதுபடவே பேசுகிறார்கள். ரத்த புற்றுநோயிலிருந்தே உயிர் பிழைக்க முடிந்திருக்கிறது. டாக்டர் ஆசை மட்டும் நடக்காமலா போகும். நம்பிக்கையிருக்கிறது. கடவுள் வழிநடத்துகிறார். பிறகென்ன எதுவும் சாத்தியம் தானே! ஆறுவயதில் ரத்த புற்று நோய் பாதித்த என்னை கஷ்டப்பட்டு, வைத்தியம் பார்த்து, கண்ணைப்போல காத்து வளர்த்திருக்காங்களே என் அம்மா, அப்பா. அதெல்லாம் எதற்காக? நான் நல்லா இருக்கணும், சாதிக்கணும்தானே இத்தனை கஷ்டங்களையும், பொருள் இழப்புகளையும் தாங்கிக்கிட்டாங்க. அவங்களுக்கு என் சாதனை மூலமாத்தான் நன்றி கடன் செலுத்தணும்.

ரத்த புற்றுநோய் வந்தப் பிறகு உங்க மனநிலை எப்படி இருந்தது?
அப்போ எனக்கு ஆறு வயசு என்பதால அதைப் பற்றிய பயம் தெரியல. 10 வயசுக்கு மேல தான் விவரம் புரிஞ்சது. மருந்து மாத்திரை தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால தலைமுடியெல்லாம் கொட்டிடுச்சு. உடம்பு துரும்புபோல ஆயிடுச்சு. என்னோட தோற்றமே மாறிபோச்சு. இருந்தாலும் அம்மா, அப்பாவின் அரவணைப்பும் டாக்டர்கள், நர்சுகள், ஆயாக்களின் ஊக்கமும் இந்த நோயிலிருந்து விடுபடலாம் என்கிற நம்பிக்கையை விதைத்தது. மேலும் நான் இருந்த வார்டில் என்னைப்போல ரத்த புற்றுநோய் பாதிச்சவங்க எல்லாம் குணமாகி வீடு திரும்பியது எனக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்தது. 99ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததால தான் நான் இப்போ முற்றிலும் இந்த நோயிலிருந்து குணமாகி இருக்கேன்.
தேவராஜன்
படங்கள்: செல்வக்குமார்.
*******

பாக்ஸ்!

பாத்திமாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் திலகவதியிடம், பாத்திமாவுக்கு வந்த நோயின் தன்மை பற்றி கேட்டதற்கு, ""ரத்த புற்றுநோயில் பல வகையிருக்கிறது. பாத்திமாவுக்கு நெஞ்சில் ஒரு கட்டிபோல இருந்தது. அந்த கட்டி சதையை எடுத்து ஆய்வு செய்த போது அவருக்கு ரத்தபுற்று நோய் இருப்பது தெரிய வந்தது. இதே போல ஆண்டுக்கு 100லிருந்து 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்காங்க. நோயாளிகள் ஆரம்பநிலையில் இருக்கும் போது வருபவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் ரத்த புற்றுநோய் குணமாகிறது. பாத்திமா 5 ஆண்டுகள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதால் இந்த நோயிலிருந்து முழுவதுமாக குணமடைந்திருக்கிறார். இந்த வகை புற்றுநோய் நாம் சாப்பிடும் உணவுவகையில் உள்ள ரசாயனம், சுற்றுசூழல் பாதிப்பு, பரம்பரை வழி ஆகிய காரணங்களாலும், சிலருக்கு காரணங்களே இல்லாமலும் வருகிறது. இருந்தாலும் சிகிச்சைப் பெறுபவர் தரும் தொடர் ஒத்துழைப்பு தான் அவர்கள் குணமடைய அடிப்படை காரணமாக இருக்கிறது'' என்றார்.
சுகாதாரக்கேட்டினால் வரும்
*************************************************

குடல்புழு தொற்றுநோய்!

சிறியவர்கள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் குடல்புழு தொற்று நோய் ஏற்படும். ஆனாலும் பெரியவர்களை விட சிறியவர்களைதான் இந்த நோய் அதிகம் தாக்கும். இந்த தொற்று நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நாம் இருக்கும் இடம், உண்ணும் உணவு, உடுக்கும் உடை இந்த மூன்றும்தான். இந்த குடல்புழு தொற்று நோய் எப்படி, எதனால் ஏற்படுகிறது? அதன் விபரீதம் என்ன? அதை தடுப்பது மற்றும் தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை டாக்டர் கல்பனா ஸ்ரீதரன் விளக்குகிறார்.

வெப்பநாடுகள் மற்றும் மித வெப்பநாடுகளில் உள்ள குழந்தைகளிடம் இந்த தொற்று நோய் அதிகம் காணப்படுகிறது. உருளைப்புழு, கொக்கிப்புழு, ஊசிப்புழு, சாட்டைப்புழு, பட்டைப்புழு ஆகியவை பொதுவாகக்காணப்படும் குடல்புழுக்களாகும்.

19 . குடல்புழு தொற்றுநோய் எப்படி ஏற்படுகிறது?

இந்த நோய்க்கு தொற்று நோய் என்று பெயரிடப்பட்டுள்ளதால் வெளியிலிருந்து தான் நமக்குள் தொற்றிக் கொள்கிறது என்பது மேலோட்டமாக தெரிந்த விஷயமாகிவிடுகிறது. சுகாதாரக்குறைவான இடங்களில் வசிக்கின்றவர்களுக்கும், சுகாதாரமற்ற திறந்த வெளியில் மலம் கழிப்பவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் மலத்துடன் புழுக்கள் மண்ணோடு மண்ணாகக் கலக்கின்றன. இது மண்ணில் ஊடுருவி பயிர்கள், காய்கறி செடிகள், நிலத்தடி நீரையும் பாதிக்கிறது. இந்தப்புழுக்கள் கலந்த பயிர், செடிகளிலிருந்து பெறப்படும் காய்கறி, கீரை, உணவுவகைகள் மற்றும் நிலத்தடி நீரை உட்கொள்ளும் போது புழுக்களும் புழு முட்டைகளும் தானாகவே நம் உடலுக்குள் செல்கின்றன.
அடுத்ததாக நம் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளின் மலங்களிலும் புழுக்கள் கலந்து மண்ணோடு மண்ணாகி மக்கி மனிதர்களைப் பாதிக்கின்றன. புழுக்கள் உள்ள மண்ணைத் தொடும் குழந்தைகள் கைகளை வாயில் வைத்து சப்பும் போது புழுக்கள் குழந்தைகளின் உடலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மண்ணை உண்ணும் குழந்தைகளின் உடலிலும் புழுக்கள் செல்கின்றன.
வெறும் காலுடன் நடக்கும் போது கொக்கிப்புழுக்களின் முட்டைகள் கால் சருமம் வழியாக உடலுக்குள் செல்கின்றன. பெண் ஊசிப்புழுக்கள் இரவு நேரத்தில் முட்டையிடும் போது ஆசன வாய் பகுதியில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. நாம் அவற்றை சொரியும் போதும் முட்டைகள் கைகளிலும் நகங்களிலும் ஒட்டிக்கொள்கின்றன. வாய் அல்லது சருமம் மூலம் உடலுக்குள் செல்கின்றன.
அடுத்ததாக வெயில் காலத்தில் நாம் உடுத்தும் உடையில் வியர்வை, துõசுகள், அழுக்குகள் படிந்திருக்கும். இதன் காரணமாக நம் உடைகளில் ஊசிப்புழு முட்டைகள் ஒட்டிக்கொண்டு அடுத்தவர்களுக்கு தொற்றுகின்றன.
நாம் சாப்பிடும் உணவில் பச்சை பன்றி இறைச்சி அல்லது மாட்டு இறைச்சி உண்ணும் போது பட்டைப்புழுக்கள் உடலுக்குள் தொற்றிக்கொள்கின்றன.

குடல்புழு தொற்று நோய் அறிகுறிகள்:

குடல் புழு தொற்றுநோய் ஏற்பட்ட குழந்தைகளுக்கு எடை குறைவு, பசியின்மை, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, ரத்தசோகை, ஆசனவாய் அரிப்பு ஆகியவை ஏற்படலாம். குடலில் இருந்து இந்தப் புழுக்கள் ஈரல், நுரையீரல், மூளை ஆகியவற்றிற்கு தொற்றி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

குடல்புழு தொற்றியின் அறியும் வழிகள்:

மலத்தை நுண்நோக்கி மூலம் பரிசோதனை செய்து ஆய்வு செய்து தான் குடல் புழுக்கள் இருப்பதை உறுதி செய்ய முடியும். சில சமயம் வாந்தியிலும் புழுக்கள் இருக்கலாம்.

சிகிச்சை முறைகள்:

குடல் புழு தொற்று நோய் சிகிச்சைக்கு மருந்து மாத்திரைகள் உள்ளன. ஒரு முறை மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டாலே போதுமானது. குழந்தைகள் குடல் புழு தொற்று நோய்க்கான சிகிச்சையை அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளைக் கவனிக்கும் செவிலியர்கள் குடல்புழு நோய் பரவ முக்கியக் காரணிகளாக இருப்பார்கள். எனவே குடும்ப உறுப்பினர்கள் குடல்புழுக்கான சிகிச்சையை மேற்கொள்ளும் போது குழந்தைகளை கவனிக்கும் செவிலியர்களுக்கும் சிகிச்சை அளிப்பது நல்லது.

குடல்புழு தொற்றுநோயை தடுப்பது எப்படி?

* உணவு சமைப்பதற்கு முன்பும் உண்பதற்கும் முன்பும் கைகளை சோப்பினால் நன்றாக கழுவ வேண்டும்.
*கழிவறை சென்று வந்த பிறகும் டயாபர்களை மாற்றிய பிறகும் கைகளைச் சோப்பினால் நன்றாக கழுவ வேண்டும்.
*சமைப்பதற்கு முன்பு காய், கனிகளை தண்ணீரில் சுத்தமாக கழுவ வேண்டும்.
*செருப்பில்லாமல் வெறும் காலுடன் நடக்கக் கூடாது. செருப்பு போட்டுதான் எங்கும் நடந்து செல்லவேண்டும்.
*திறந்த இடங்களில் மலம் கழிக்கக்கூடாது.
*வெறும் கைகளினால் மண்ணைத் தொடக்கூடாது. அப்படி தொட்டுவிட்டால் உடனே கையை கழுவவேண்டும்.
*செல்லப்பிராணிகள் உடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அகற்றப்படவேண்டும்.
*விரல் நகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். நீண்ட நகங்கள் வளர்ப்பது கூடாது.
*உள்ளாடைகள், இரவு உடைகள், கைக்குட்டைகள், டவல்கள், படுக்கை உறைகள் ஆகியவற்றை அடிக்கடி மாற்றவேண்டும். சுடு நீரில் துவைத்து காயவைத்து பயன்படுத்த வேண்டும்.

தேவா
**************************************************


20 . நோய் தீர்க்கும் நம் தோட்டத்துக்காய்கறிகள்

நாம் ஆரோக்கியமாக வாழவேண்டுமானால் வீட்டில் ஒரு காய்கறி தோட்டம் அமைத்துவிட்டாலே போதும். இயற்கையில் கிடைக்கும் காய்கறி,பழங்களே கடவுள் நமக்களித்த வரபிரசாதம். எந்தெந்த காய்கறி வகைகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன என்பதை தெரிந்துகொள்வோம்.
கொத்தவரங்காய்:
கொத்து கொத்தாய் காய்க்கும் கொத்தவரங்காய் நார்ச்சத்துள்ள காய்கறி வகை. இந்தகொத்தவரங்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.மலச்சிக்கல் தீரும். மூட்டுவலி தொல்லைகள் தீரும். பெண்களுக்கு கண்கண்ட முக்கியமான உணவு பொருள் இது.
வெண்டைக்காய்:
அரிந்தால் கொலகொலப்பாக இருக்கும் வெண்டைக்காய் பச்சையாக கூட சாப்பிடலாம். தினமும் இதை உணவில் சேர்த்துவர, சோர்வுநீங்கி புத்துணர்வு கிடைக்கும். மூளைவளர்ச்சிக்கு உதவும். உடம்பை இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.
அவரைக்காய்:
அசைவ உணவில் உள்ள புரதம்,கொழுப்பு சத்துக்களை அவரைக்காய் கொடுத்துவிடும். வளரும் குழந்தைகளுக்கும், பருவ வயதில் இருக்கும் பெண்களுக்கும் உடல் வளர்ச்சி,பொலிவை அவரைக்காய் கொடுக்கும். இதன் விதையான மொச்சையை யும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பச்சைகாய்கறியாக இருக்கும் போதும் பயன்படுத்தலாம். அவியல் செய்து வத்தலாகவும் பயன்படுத்தலாம்.
புடலங்காய்:
பந்தலில் பாம்புபோல காய்த்துத்தொங்கும் புடலங்காய் நீர்சத்துள்ள காய்கறி வகையைச் சேர்ந்தது. புடலங்காயிலுள்ள சத்துகள் உடம்பில் உள்ள எலும்புகளுக்கு வலுவைக்கொடுக்கவல்லது. மேலும் தொற்றுகாய்ச்சல், ஜூரம் வந்தசமயத்தில் புடலங்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் காய்ச்சல் குறைந்துவிடும்.
முருங்கைக் காய்:
முருங்கை மரத்திலிருக்கும் இலை,பூ,பிஞ்சி, பிசின், காய் என எல்லாமே உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. முறுங்கைக்கீரையில் அனைத்து வகை சத்துகளும் இருக்கின்றன. இரும்பு சத்து, விட்டமின்கள் என இருக்கின்றன. முறுங்கைக்காய் தினமும் சாப்பிட்டு வர பெண்களின் உதிரப்போக்கு எளிதில் மட்டுபடும். ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி பெருகும். இதனால் ஆண்மைக்குறைவு பிரச்னை தீரும்.
பாகற்காய்:
கசப்புத்தன்மை கொண்ட பாகற்காய் பல வகையில் உடல் நலத்திற்கு நன்மைத் தரக்கூடியவை. குறிப்பாக சரக்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் நல்ல மருந்துபோலவே பலன் அளிக்கும். பாகற்காய் தினமும் சாப்பிட்டுவர உடலில் உள்ள ரத்தக்குழாய்களின் சுவர்களைப் பலப்படுத்தும். பிரோசயனிட்ஸ் என்ற கசப்புப்பொருள் இதில் பெருவாரியாக இருப்பதால் வாரம் மூன்று நாள் சாப்பிட்டுவரலாம்.
வாழைக்காய்:
வாழைக்காய், வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிறு தொடர்பான பிரச்னைகளை களையும். உடம்புக்கு மினுமினுப்பைத் தரும். புரதசத்து, விட்டமின் உள்ளது. நார்சத்து உள்ளதால் செரிமானத்துக்கு உதவுகிறது.
தக்காளி:
தக்காளி இதை பச்சையாகவே சாப்பிடக்கூடிய உணவுப்பொருள். தக்காளி உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளை நீக்கும். கேன்சர் நோயை தடுக்கும் அரணாக இருக்கும். தினமும் தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டோ, ஜூஸ் வைத்து பருகி வந்தால் பெண்களுக்கு உடல் எடை எளிதில் குறையும்.
எலுமிச்சை:
எலுமிச்சை காயை ஊறுகாய்போட்டு சாப்பிட்டால் பித்தம் தெளியும். உடம்புக்கு தேவையான புளிப்பு தன்மையை சீராக வைத்திருக்கும். எலுமிச்சை சாறு பருகி வந்தால் உடல் பருமன் சீராக குறைந்து வரும்.
காராமணி,ஊளுந்து. பயறு:
பயிறுவகைகளான இவைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் புரத சத்துகிடைக்கும். தசை நார்களை வலுபடுத்தும். எலும்புகளுக்கு ஊட்டத்தை அளிக்கும். இளமை தோற்றத்தை நீட்டிக்கச் செய்யும். சீக்கரம்முதுமை தோற்றம் அணுகாமல் காக்கும்.
பழவகைகள்:
மாதுளம்பழம்:
மாதுளம் பழம் சாப்பிட்டால் உடம்பு சூடு தணிந்து, குளிர்ச்சியாகும். மூளை விழிப்புணர்வுடன் இருக்க தேவையான உப்பு இந்த மாதுளம் பழத்தில் உள்ளது. மேலும் உணவில் சேர்த்துக்கொள்ளும் பால்,ராகி போன்றவற்றில் உள்ள சுண்ணாம்புச் சத்து உடலில் சேர மாதுளம் பழம் உதவுகிறது.
ஆரஞ்சு பழம்:
ஆரஞ்சு பழம் பெண்களின் அழகை கூட்டவும் மெருகேற்றவும், உடல்பொலிவை கட்டுக்குலையாமல் காக்கவும் உதவுகிறது.உடம்பில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை, எண்ணை பிசுபிசுப்பை நீக்குகிறது.
திராட்சைப் பழம்: திராட்சைப்பழம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தரக்கூடியவை. மேலும் இதில் உள்ள ஒருவகையான உப்பு மூளைக்கு சுறுசுறுப்பைத் தரக்கூடியது.
மேலே உள்ள நம் தோட்டத்தில் விளையும் காய்கறி, பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டு சாப்பிட்டு வந்தாலே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இனியாவது வீட்டில் இடமிருந்தால் முதல் வேலையாக தோட்டம் அமைக்க விரும்புங்கள்.
தேவராஜன்.
*************************************************


21. வளர் இளம்பருவப் பெண்களுக்கான சத்தான உணவு
டாக்டர்.வர்ஷா

வளர் இளம் பருவம் என்பது 13 முதல் 17 வயது வரையுள்ள பருவமாகும். இந்தப் பருவத்தில் பெண்களுக்கு உடலில் வேகமான வளர்ச்சி ஒன்பதரை வயதில் தொடங்கி 13 ஆண்டுகள் 6 மாதம் வரை தொடர்கிறது. பொதுவாக 12 ஆண்டு 6மாதங்களில் இவர்கள் பூப்பெய்துகின்றனர். உடலில் பெரியளவிலாவ வளர்ச்சி 19 வயதுக்குள் முடிந்து விடுகிறது. இந்த பருவத்தில் இவர்களுக்கான சத்தான உணவு எவை எவை என்பதை பரிந்துரைக்கிறார் டாக்டர். வர்ஷா. இவர் பிரபலமான சத்துணவு ஆலோசகர் மற்றும் சத்துணவு அறிவியல் நிலையத்தை உருவாக்கியவர்.
வளர் இளம் பருவத்தை 10 முதல் 12 வயது, 13முதல் 15 வயது, 16 முதல் 18 வயது என மூன்று பிரிவுகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். வளர் இளம் பருவம் தொடங்கும் சமயத்தில் சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதமும், பொதுவான எடையில் 53 சதவீத்ததையும், உடலமைப்பின் வளர்ச்சி 52 சதவீதத்தையும் எட்டியிருப்பார்கள். இந்தப் பருவத்தில் இவர்களின் எடை இருமடங்கா உயரக்கூடும். உயரம் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரையும் கொழுப்பு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாய்ப்புண்டு. உடலில் இருக்கும் கொழுப்பு கருத்தரிக்கும் நேரத்தில் முக்கிய பங்காற்றும். கரு முட்டை உற்பத்தி சுழற்ச்சியையும், கால்சியம் அளவை 300 முதல் 750 கிராம் வரையிலும் பராமரிப்பதற்கு உடலின் எடையில் 22 சதவீதம் கொழுப்பு இருப்பது நல்லது.
குறைவான சக்தியை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், மாதவிலக்கு நேரத்தில் இரும்புசத்தின் தேவை இரட்டிப்பாக உயரும். கால்சியம் சத்து தேவையானது எலும்பு வளர்ச்சியால் அதன் தின்மை குறைய நேரிட்டால் வாழ்வின் பிற்பகுதியில் எலும்பின் வலு குறைந்துப்போகலாம். உடலின் எடையைத்தாங்க முடியாமல் பிரச்னைகள் ஏற்படலாம்.
வளர் இளம்பருவத்தில் இருக்கும் பெண்கள் நாகரீகம் என்கிற பெயரில், பெற்றோரின் உணவுப்பழக்கத்திலிருந்து மாறுபட்ட உணவுப்பழக்கத்தை பின்பற்றுவது, ஒல்லியாக இருப்பதுதான் நமக்கு ஏற்ற உடல்வாகு என்று நினைத்து உணவு கட்டுப்பாடு கொள்ளுதல், உணவு மற்றும் சத்து விஷயங்களில் ஆர்வம் காட்டாமை போன்ற பாதிப்புகளை சமூக மற்றும் உயிரியல் காரணங்களால் ஏற்படுகிறது.
அடுத்ததாக, காலை உணவை தவிர்ப்பது, நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் சாப்பிடுதல், பாஸ்ட் புட் சாப்பிடுதல், வழக்கத்துக்கு மாறான உணவு சாப்பிடுதல், குளிர்பானங்கள் அருந்துவது, மது, புகை பழக்கம் கொண்டிருப்பது எல்லாம் வளர்இளம்பருவ வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்களாகும்.
வளர் இளம்பருவப் பெண்களுக்கு அந்த வயதில் உடலில் ஏற்படும் வேகமான வளர்ச்சிக்குத் தேவையான சத்து கிடைக்கும் வகையில் உணவு வகைகளை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். பூப்பெய்தும் காலத்தைக் கணிப்பது மற்றும் கருத்தடை பயன்பாடு பற்றிய விவரங்களை கேட்டறிந்து அதற்கேற்ற உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது, இரும்புச் சத்து குறைப்பாட்டைத் தடுப்பது, அதை சரிசெய்வது, தினமும் சராசரியாக 2000 முதல் 2500 கிலோ கலோரி வரையில் சத்து கிடைக்கும் வகையில் உணவுவகைகளைத் தேர்ந்தெடுப்பது போன்றவை கவனிக்கத்தக்க அம்சங்களாகும்.
5 வகையான உணவுக்குழுக்களுக்கு சமன்படுத்தப்பட்ட உணவுப் பட்டியலின்படி வளர் இளம்பருவப் பெண்களுக்குத் தேவையான உணவுகளின் பட்டியல்:
தானியங்கள், தினை, சாமை:
தினமும் 260320 கிராம் ( 10 முதல் 12 வயதின் முற்பகுதி)
தினமும் 290 350 கிராம் (13 முதல் 15 வயது வரையில் மற்றும் 16 முதல் 18 வயதின் பிற்பகுதி)
புரோட்டீன் சத்துள்ள பயறுகள், பயறுகாய்கள், அவரை வகைகள்
தினமும் 30 70 கிராம் வளர் இளம் பருவம் ( 10 முதல் 12 வயதின் முற்பகுதி)
தினமும் 5070 கிராம் வளர் இளம்பருவம் ( 13 முதல் 18 வயது வரை)
சாப்பாட்டுடன் சேர்க்கப்படும் போது குறைவான அளவு பரிந்துரைக்கப்படும்.
புரோட்டீனுக்கு மாற்று உணவுகள்:
அசைவம் கறி, மீன் மற்றும் முட்டை தினமும் 30 முதல் 60 கிராம் வரை அல்லது முந்திரி போன்ற கொட்டை வகைகள் மற்றும் எண்ணைய் வித்துகள் நிலக்கடலை போன்றவை தினமும் 30 முதல் 50 கிராம் வரை.
பால் மற்றும் பால் பொருள்கள்:
தினமும் ஒரு லிட்டர் வளர் இளம் பருவம் ( 10 முதல் 18 வயதுவரை)
காய்கறிகள்:
மனித இனத்துக்கு இயற்கையளித்துள்ள டானிக் மினரல்கள், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை பாதுக்காபான உணவகையாகும்.
பச்சை இலை காய்கறிகள்
வேரில் விளைபவை கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம்
கிழங்குகள் உருளை போன்றவை
நீர் மிகுந்த காய்கறிகள் வெள்ளரிக்காய் போன்றவை
பிற காய்கறிகள் பின்ஸ், பயறு வகைகள்
தினமும் 175 கிராம்: வளர் இளம்பருவம் (10 முதல் 12 வயதின் முற்பகுதி)
தினமும் 275 350 கிராம்: வளர் இளம் பருவம் (16 முதல் 18 வயதின் பிற்பகுதி)

பழங்கள்:
உலர் பழங்கள், கொட்டை வகைகள் மற்றும் எண்ணைய் வித்துகள், சக்தி, கொழுப்பு மற்றும் புரோட்டீன் ஆதார சத்துணவை 4 பிரிவுகளாக பிரிக்கலாம்.
ஆரஞ்சு மற்றும் பழங்கள் பப்பாளி, மாம்பழம், வாழைப்பழம்
சிட்ரஸ் பழங்கள் எலுமிட்சை, ஆரஞ்சு பழம்
மற்ற பழங்கள் முந்திரி, பைனாப்பிள், தக்காளி, நெல்லி
உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் எண்ணைய் வித்துகள் அத்திப்பழம், பேரிச்சை,உலர் திராட்சை, விதையில்லா முந்திரிபழம், நிலக்கடலை, தேங்காய், எள் போன்றவை.
அந்தந்தப் பருவத்தில் கிடைக்கும் பழங்களை வாரத்தில் ஒவ்வொரு நாளிலும் சுழற்சி முறையில் சாப்பிட வேண்டும்.
வளர் இளம்பருவம் (10 முதல் 18 வயது வரை) தினமும் 50 முதல் 100 கிராம் வரை புதிதாக விளைந்த பழங்கள்
தினமும் 30 முதல் 50 கிராம் கொட்டை வகைகள் மற்றும் எண்ணைய் வித்துகள்.

மேலே சொல்லியபடி உள்ள சத்து உணவு வகைகளை வளர்இளம் பருவத்தில் சாப்பிட்டு வந்தால் பெண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணலாம்.
தேவா
**************************************************8

22.மருத்துவமுறை துõக்கம் கொள்வதெப்படி?

ரொம்ப டல்லாக இருக்கீங்களா? எப்போதும் உங்கள் முகம் பொலிவிழந்து சுறுக்கமாக உள்ளதா? முதுமை தோற்றம் வந்து விட்டதா? கண்களுக்கு கீழே தடித்த கருவளையம் ஏற்பட்டுள்ளதா? டென்ஷன் ஏற்படுகிறதா? இதற்கெல்லாம் மருத்துவ காரணம் எண்ண தெரியுமா? நீங்கள் சரியாக மருத்துவ முறை துõக்கம் கொள்வதில்லை என்பது தான்! அதென்ன மருத்துவ முறை துõக்கம் என்று ஏதும் குழம்பிக்கொண்டு வர்ற துõக்கத்தையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்! சுலபமான வழியில் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வகான இந்த கட்டுரையை படியுங்கள்; படித்ததும் நிச்சயம் துõக்கம் கண்ணை சொக்கவைக்கும். துõங்கி எழுந்ததும் மேலே குறிப்பிட்ட பிரச்னைகள் அதுவாக சால்வாகிவிடும்.
இரவு வந்தால் எல்லோரும் தான் துõங்குகிறோம். பிறகென்ன? என்று உங்களுக்குள் ஒரு கேள்வி தோன்றினால், என்னிடம் எதிர்கேள்வியும் இருக்கிறது. அது எத்தனை மணிநேரம் துõங்குகிறீர்கள்? எப்படி துõங்குகிறீர்கள் போன்ற விஷயங்கள் எல்லாம் இருக்கிறது. எவ்வளவு நேரம், எப்படி துõங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து பலன் இருக்கிறது.
துõக்கத்தில் நடப்பது என்ன?
நாம் அசந்து துõங்கும் போது நம் உடல் ஓய்வு எடுத்துக்கொள்கிறது. அந்த ஓய்வு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் சரும வளர்ச்சிக்கான ஹார்மோன் சரும ஆரோக்கியத்துக்கான செயல்பாடுகளைத் துõண்டுகிறது. சரும ஆரோக்கியத்துக்கு மிகமிக முக்கியத் தேவையான கொலாஜன் மற்றும் கெராட்டின் இரண்டும் சீராக உற்பத்தியாகவும், சரும செல்கள் புதுக்கப்படவும் துõக்கம் அவசியமாகிறது. துõக்கம் சரியில்லாதவர்களுக்கு சருமபிரச்னைகள் ஏற்பட்டு தோல்வறண்டு, பருக்கள், வெடிப்புகள், கருப்பு திட்டைகள் ஏற்படும்.
பகலில் கடுமையாக உழைத்த உடலுக்கு கட்டாயமாக இரவில் ஓய்வு கொடுப்பது தான் துõக்கம். அப்படி உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் இருந்தால், ரத்த ஓட்டம் சீராக ஓடாமல், உடல் உறுப்புகளுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
எது அளவான துõக்கம்?
எது நல்ல துõக்கம், எத்தனை மணிநேரம் துõங்குவது எல்லாம் நாம் கட்டாயமாக தெரிந்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயது, உழைப்புக்கு ஏற்ப துõங்கும் நேரம் அளவு மாறுபடும். குழந்தைகள் 16 மணிநேரமும், பருவ வயதில் இருப்பவர்களுக்கு 78 மணிநேரமும், கர்ப்பிணி பெண்கள் 10 மணிநேரமும், வயதானவர் 56 மணிநேரமும் துõக்கம் கொள்ள வேண்டும்.
இந்த அளவான துõக்கம் எடுத்துக்கொள்ளும் போது, உடம்பின் ரத்த ஓட்டம், செல்கள்,திசுக்கள் எல்லாம் புதுப்பிக்கப்படுகின்றன. சக்தியூட்டப்படுகிறது. புதுபொலிவு ஏற்படுகிறது. உடம்பின் அழுத்தம்,வெப்பம், மூச்சு சுழற்சி எல்லாம் சீராக்கப்படுகிறது. மூளைப்பகுதி குளுமையடைந்து, சிந்திக்கும் திறனையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கிறது.
சுகமான துõக்கம் வர என்ன வழி?
மெத்தை வாங்கினேன். துõக்கத்தை வாங்கலன்னு பலர் படுத்ததும் துõக்கம் வரமால் புலம்பி தீர்ப்பதை நடைமுறையில் பார்க்கிறோம்.அதே சமயம் படுத்ததும் அசந்து துõங்கி விடுபவர்களும் உண்டு. அவர்கள் கொடுத்தவைத்தவர்கள். துõக்கம் வரவில்லை என்பதற்காக துõக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்வது மிக மோசமான பழக்கம். அதனால் துõக்கம் வர இயல்பான, இயற்கையான வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும். தினமும் குறித்த நேரத்தில் படுக்கைக்குச் செல்வதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயம் விழித்துக்கொள்வதையும் குறிப்பிட்ட நேரமாக வைத்துக்கொள்ள வேண்டும். மாலையில் கொஞ்சம் நடைப்பயிற்சி அல்லது சுலபமான உடற்பயிற்சி, தியானம் போன்றவை செய்யலாம். படுக்கையறை ரம்மியமாக இருக்கவேண்டும். நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். வடக்கு பக்கம் தலைவைத்துப் படுத்தால் நல்ல துõக்கம் வரும். துõங்க செல்வதற்கு முன் வெதுவெதுப்பான தண்ணீரீல் குளித்து விட்டு சென்றால் துõக்கம் வரும். மேலும் பிடித்த புத்தகம், இசை கேட்கலாம்.
துõக்கத்தைக்கெடுக்கும் திரைகள்!
டென்ஷன், கவலை, எதைப்பற்றியாவது சிந்தனை செய்துகொண்டிருப்பவர்களுக்கு படுத்ததும் துõக்கம் வராது. அடுத்ததாக இரவில் தாமதமாக சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, போதைப் பழக்கம் கொண்டிருப்பது, உடல் உபாதைகள் தலைவலி, வயிற்றுவலி, இருமல், நுரையீரல் பாதிப்பு நோய்கள் போன்றவை இருந்தால் துõக்கம் வராது. காபி, குளிர்பானங்கள், சாக்லெட் போன்றவைகளை இரவில் உட்கொண்டால் துõக்கம் காணாமல் போய்விடும்.
தேவராஜன்
**********************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக