திங்கள், 7 ஜூன், 2010

என் படைப்புகள்

22. தண்ணீர் நோய்கள் தெரியுமா?
( என் படைப்புகள் : தினமலர் பெண்கள் மலரில் பிரசுரிக்கப்பட்ட பேட்டிகள் கட்டுரைகள்)
முக்கால் பங்கு நீரினால் நிறைந்தது நாம் வாழும் உலகம் மட்டுமல்ல; நம் உடம்பும் தான்!
நாம் பருகும் நீர், உபயோகப்படுத்தும் நீர், நம் வசிக்கும் இடத்தில் இருக்கும் நீர் இவற்றினால் நம் ஆரோக்கியம் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை கேட்டால் அதிர்ச்சியடைவீர்கள்!
ஓரிடத்தில் வசிக்கும் ஒருவர் பிறிதோர் இடத்திற்கு செல்லும் போது அங்கு குளித்தாலோ, அந்த நீரினைப் பருகினாலோ உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. சளி, ஜலதோஷம், இருமல் வந்து, நீருக்கும் நமக்குமான ஆரோக்கியம் சார்ந்த சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. இதை நம்மில் பலர் அனுபவித்திருப்போம்.
மருவத்து துறையைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் மனிதனுக்கும் நீருக்குமான உறவையும் அதனால் விளையும் நன்மை, தீமைகளைப்பற்றியும் ஆராய்ச்சி செய்ததில் மனிதர்களுக்கு பல நோய்கள் வருவதற்கு அடிப்படை வாயில்களாக இருப்பவை நீர் என்றே சொல்லியிருக்கிறார்கள்.
விஞ்ஞான ரீதியில் கண்டறியப்பட்ட வாட்டர் பில்டர்கள் மூலம் வடிக்கட்டிய நீரைக் குடிப்பதாலோ, நீரில் குளோரின் கலந்து குடிப்பதாலோ, காய்ச்சி குடிப்பதினாலோ நீரினால் ஏற்படும் அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்தி விடலாம் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும்.
நீரினால் ஏற்படும் நோய்கள் நான்கு வகைகளாக இருக்கின்றன. அவை நீரினால் பரவும் நோய்கள் குறிப்பாக காலரா, ஒவ்வாமை, ஜூரம், சளிபிடித்தல், இருமல் போன்றவை. இரண்டாவது நீரில் இருக்கும் கிரிமிகளால் ஏற்படும் நோய்கள் அதாவது நரம்புச்சிலந்தி போன்ற நோய்கள். இவை நீர் மாசுபடுவதாலும், நீர் இருக்கும் பூமி மாசுபடுவதாலும் கிருமிகள் நீரில் ஊடுருவி நோய்களை ஏற்படுத்துகின்றன. அடுத்ததாக நீரினால் பரவும் நோய்கள் உதாரணமாக மலேரியா, டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா போன்றவை. இந்த தொற்றுக்கு காரணம் நீர் தான். எப்படி என்றால் மலேரியா, டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு காரணமான பாக்டீரியா, வைரஸ்களை ஏற்படுத்தும் கொசுக்கள் நீர்நிலைகளில்தான் முட்டையிட்டு அதன் மூலம் கிருமிகளை பரப்புகின்றன.
நான்காவதாக நீர் பற்றாக்குறையினால் ஏற்படும் நோய்கள் தோல்நோய்கள், படர்தாமரை, தேமல், சொறி போன்றவை. இந்த நோய்களுக்கும் காரணமாக இருப்பவை நீர்தான். மனிதனுக்கு தேவையான தண்ணீர் இல்லாவிட்டாலும் நோய் வருகின்றன. குளிப்பதற்கு தேவையான தண்ணிரில்லாமல் அரைகுறையாக குளிக்கும் போது உடம்பில் அழுக்கு சேர்ந்து சரும தொடர்பான நோய்களை ஏற்படுத்துகின்றன. அணியும் ஆடை சுத்தமாக இல்லாத போதும் தோல் நோய்கள் ஏற்படுகின்றன.
நீரில் நோய்களைப் பரப்பும் கிருமிகள், அதனால் வரும் நோய்களின் பட்டியல் ரொம்பவும் நீளும். உதாரணத்துக்கு சில பார்க்கலாம்.
அனாபிலஸ் என்ற கிருமி கொசுக்களால் பரப்பப்படுகின்றன. இந்த கிரிமிகள் சுத்தமான நீர் நிலைகளான ஆறு, குளம், ஏரி, கிணறு போன்றவைகளிலும், வயல்வெளியிலும் பரவி அது மலேரியாவாக நமக்குள் நுழைகிறது.
கியூலக்ஸ் எனும் கிருமி அழுக்கு நீர், தேங்கிக்கிடக்கும் நீர், சாக்கடை போன்றவற்றில் உருவாகி அந்த நீரை மிதிக்கும் போதோ, தொடும் போது நம்மில் ஊடுருவி யானைக்கால் நோயை ஏற்படுத்துகின்றன.
ஏடிஸ் என்ற கிருமி செயற்கையாக தேங்கும் நீர், குளிர்சாதன கருவிகளிலிருந்தும், பிரிஜ் கழிவு நீரிலும், மொட்டை மாடி, டயர், தேங்காய் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நீரிலிருந்து பரவி சிக்குன்குனியா, டெங்கு, மஞ்சள்காமாலை போன்ற நோய்களாக வந்து நம்மை வாட்டுகின்றன.
ஆதலால் தண்ணீர் தானே என்று நாம் அலட்சியமாக இருக்கக்கூடாது. நாம் பருகும் தண்ணீரிலிருந்து, உபயோகப்படுத்தும் தண்ணீர், நம்மைச்சுற்றி இருக்கும் நீர் நிலைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். குளிரூட்டப்பட்ட தண்ணீர், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் இவைகளை பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அடுத்ததாக நாம் வசிக்கும் இடத்தில் இருக்கும் நீர்நிலைகளில் எடுக்கும் தண்ணீரின் சுகாதாரம் அறிந்து வெளி உபயோகத்துக்குப் பயன்படுத்தவேண்டும்.
ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு இடம் பெயரும் போது அங்கிருக்கும் தண்ணீரின் இயல்பு பற்றி அறிய தண்ணீர் மாதிரி சோதனை செய்து அதில் உள்ள கலவைகள் பற்றி அறிந்து நம் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா என்பதை மருத்துவர்களின் ஆலோசனைக் கேட்டு பயன்படுத்த வேண்டும்.
தேவராஜன்
**********************************************

23 .அஞ்சறை பெட்டியில் ஆரோக்கியமிருக்கு...

சமையல் அறையை மருத்துவத்தின் தொட்டில் என்று சொன்னால் அதுமிகையாகாது. நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களை வைத்துக்கொண்டே அனேக நோய்களுக்கு மருந்து செய்தவர்கள் பாட்டிமார்கள். இன்னமும் பாட்டிய வைத்தியத்திற்கு தனி மவுசே உண்டு! அஞ்சறை பெட்டிதான் மருந்தகம்.
நாம் சாப்பிடும் உணவின் அளவு, உணவின் வகை இவைகளை சரியாக கடைப்பிடித்தாலே நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். அதற்கு இன்னமும் சாட்சிகளாக இருப்பவர்கள் நம் தாத்தா, பாட்டிகள் தான்.
இன்று மருந்துவகைகளின் விலைகளை விட, சமையல் பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. இந்த நிலையில் நாம் ஆரோக்கியமா இருக்க மருந்துவகைகளை வாங்காமலிருக்க, சமையல் பொருட்களையே மருந்தாக பயன்படுத்துவது எப்படி என்பதை பாட்டிமார்கள் சொல்லிவைத்தவைகளை பார்க்கலாம்.
நம் வீட்டில் அஞ்சறை பெட்டியில் எப்போது இருப்பது இஞ்சி, வெந்தயம், மஞ்சள், கடுக்காய், பூண்டு, சீரகம், பெருங்காயம், மிளகு, கடுகு, கிராம்பு இவைகளும் இன்னம்பிறவும் இருக்கும். இதில் இஞ்சி, மஞ்சள், வெந்தயம், கடுக்காய், பூண்டு, சீரகம் இவைகளை உணவுப்பொருளில் சேர்த்து எப்படி ஆரோக்கியத்தை அடையலாம் என்பதை கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.
இஞ்சி:
இஞ்சி சாறுபிழிந்து அதை காலையில் ஜூஸாகப் பருகினால் போதும் வயிறு வலி, வயிற்றுப்போக்கு, வாயுவு தொல்லை முதலிய வயிறு தொடர்பான நோய்களின் அவஸ்தையிலிருந்து விடுபடலாம். டீ, காபி, பால் இவற்றிற்கு மாற்றாக தினமும் காலையில் இஞ்சி டீயை பருகிவந்தால் காலைக்கடன் உபாதைகளில் இருந்து மீளலாம். மேலும் கொலஸ்ட்ரால் நிலையை சமசீர்படுத்தும். உண்ட உணவுப்பொருட்களின் செரிமானத்திற்கு பெரிதும் உதவி செய்யும். அதிக புரோட்டின் உணவுவகைகள் செரிமானமாகும். இஞ்சியை வாயில் போட்டு மென்றால் பல் வலி தீரும். காய்ச்சல், நீர்கொண்டதற்கு மருந்தாக இஞ்சி செயல்படும்.
இஞ்சி ஜூஸ் ஆனது எலுமிச்சை சாறு, தேன் இவற்றின் கலவையாக இருக்கவேண்டும்.
வெந்தயம்:
சர்க்கரை வியாதிக்கு மாமருந்து வெந்தயம். இது பாட்டிமார்கள் போட்டுதந்த ஆரோக்கியத்தின் சூத்திரம். பிள்ளைப்பெற்ற தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தேவையான பால் சுரக்காவிட்டால் வெந்தயத்தை உணவுப்பொருளில் சேர்த்துக்கொண்டால் பால் அதிகமாக சுரக்கும். அடுத்ததாக பெண்களின் வீட்டுவிலக்கு நாளில் ஏற்படும் வலி தொல்லைகளுக்கு வெந்தயம் கண்கண்ட மருந்தாக இருக்கிறது. வெந்தயத்தில் இருக்கும் டையோஸ்ஜினின், ஈஸ்ட்ரோஜின் ஆனது பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
மஞ்சள்:
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே மஞ்சள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டது. மஞ்சளில் ஆன்டிசெப்டிக் மூலப்பொருள் இருப்பதை அறிவியல் உலகமே ஒப்புக்கொண்டுள்ளது.
அடிப்பட்டகாயம், தீக்காயம் இவற்றிற்கு வெளிஉபயோகமாக மஞ்சளை பயன்படுத்தலாம். அல்சர், குடல் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு மஞ்சள் நிவாரணப்பொருள்.ரத்தஓட்டத்தை சீர்படுத்தி, இதயநோய், ஹார்ட் அட்டாக் தடுக்கும். தினமும் ஒருகப் பாலில் கொஞ்சம் மஞ்சள் துõள் கலந்து பருகி வந்தால் நோய்கள் வராமல் தடுப்பு கவசமாக செயல்படும்.
கடுக்காõய்:
கடுக்காய் குழந்தைகளுக்கான சிறந்த மருத்துவ பொருளாக இருக்கிறது. வாந்தி, பித்தம், கபம் இவற்றிற்கு கடுக்காயை ஊரவைத்து அந்த தண்ணீரை குழந்தைகளுக்கு கொடுத்தால் வாந்தி, மலச்சிக்கல், செரிமானமின்மை தொல்லைகளிலிருந்து விடுவிக்கும். மேலும் தேனில் கடுக்காய் துõளை கலந்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக்கொடுக்கும்.
பூண்டு:
பூண்டு பல மருத்துவ குணம் கொண்டதாகும். அதிக சல்பர் கொண்ட பூண்டு நம் ஆரோக்கியத்தின் நண்பனாக இருக்கிறது. உடல் உஷ்ணம், வாய்ப்புண், குடல்புண் இவைகளுக்கு பூண்டு நிவாரணியாக உள்ளது. கொலஸ்ட்ராலை மட்டுப்படுத்தும் சக்தி பூண்டுவுக்கு உண்டு. ஜலதோஷம், உயர் ரத்த அழுத்தம்,குறைந்த கொலஸ்ட்ரால் இவைகளை ஒரு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
சீரகம்:
சீரகம் செரிமானத்துக்கு உதவும் மருந்தாகும். நிறையசாப்பிட்டவர்கள் கொஞ்சம் சீரகத்தை வாயில் போட்டு மென்னு சாறை விழுங்கினால் உணவு செரிமானம் ஆகிவிடும். அது மட்டுமல்ல வாயுதொடர்பான வலி, தசை பிடிப்பு இவைகளை நீக்கிவிடும். ஒருலிட்டர் தண்ணீரில் ஒரு டீ ஸ்பூன் சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை பருகினால் இதயம், யூட்ரஸ் பிரச்னைகளுக்கு மருந்தாக செயல்படும். குழந்தைப் பெற்ற தாய்மார்கள் சீரகத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் பால் சுரப்பு அதிகமாகும். சீரகத்தில்
புரோட்டின், கொழுப்பு, ஹார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துகள் அடங்கியுள்ளது.
தேவராஜன்
*******************************************

24. இதயத்துக்கு இதமான உணவு!

மனிதர்களுக்கு எந்த முன் அறிவிப்புமின்றி வருவது ஹார்ட் அட்டாக். முதல் ஹார்ட் அட்டாக் வந்து விட்டால் நம் வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருவதை எச்சரிக்கும் எச்சரிகை மணி என்றே சொல்லலாம். உயிரின் கவசமான இதயத்தை காப்பது எல்லாருடைய கடமையாகும். நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகை மூலமே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கமுடியும். அப்படிபட்ட உணவு வகை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்!
புரோட்டீன்:
இதயத்தை காக்க மற்ற உணவுவகைகளைவிட, புரோட்டீன் வகை உணவுகள் இதயத்துக்கு இதம் தருகின்றன. புரோட்டீன் இதயத்துக்கு நண்பன் என்றே சொல்லலாம். முட்டை இதில் பி விட்டமின் இருக்கிறது. மீன் இதில் ஒமேகா3 , பேட்டி ஆசிட் இருக்கிறது.தோலில்லா கோழியிறைச்சி இவைகள் உணவில் சேர்த்து வந்தால் இதயத்துக்கு தேவையான புரோட்டினைத் தந்து காக்கும்.
நல்ல கொழுப்பு:
பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணை இவைகளில் குறைந்த கொழுப்பு உள்ளது. பட்டானி,பீர்க்கன்காய், வால்நட் முதலியன இதயத்துக்கு வேண்டிய கொழுப்பை தந்து இதயத்தை காக்கும்.
காய்கறி மற்றும் பழங்கள்:
பொதுவாக நம் ஆரோக்கியத்துக்கு காய்கறிகள், பழங்கள் உதவிசெய்கின்றன. ஒவ்வொருவரும் ஒரு நாளில் பழச்சாறு பருகுவதை வாடிக்கையாக கொள்ள வேண்டும். இதயநோய்கள், அட்டாக் இவை வருவதற்கு முதல்காரணமாக இருப்பவை ரத்த ஓட்டத்தின் அளவைப் பொறுத்தே அமைகிறது. இந்த ரத்த ஓட்டத்தை சீர்படுத்த தேவையான ஊட்டச்சத்து, விட்டமின்இ, விட்டமின்சி, இவை இதயத்திற்கு வலுசேர்க்கின்றன.
வெள்ளைப்பூண்டு கொலஸ்ட்ராலை கட்டுபடுத்தும் சக்தி கொண்டிருப்பதால் பூண்டை உணவில் சேர்த்து வந்தால் இதயநோய்களை தவிர்க்கலாம்.
தானியங்கள்:
பார்லி, ஓட்ஸ், சோளமாவு,கோதுமை, கேல்வரகு, கொள்ளு இவைகளை உணவில் சேர்த்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவை சமமாக வைத்து இதயத்தை காக்கும்.
புகையிலை பொருட்கள்:
புகையிலை சேர்ந்த எந்தப்பொருளையும் பயன்படுத்தாதீர்கள். அது வெற்றிலைபாக்கு போடும் பழக்கமோ, புகைபிடிக்கும் பழக்கமோ எந்த போதை பழக்கமாக இருந்தாலும் இப்போதே விட்டுவிடுங்கள். இது தான் இதயத்துக்கு எதிரி.
உடற்பயிற்சி:
தினமும் காலை மாலை நடைபயிற்சி செய்யுங்கள். முடிந்தால் எளிமையான ஏயாக பயிற்சியை செய்து பழகுங்கள்!
தேவா
************************************************

25.பெட்ரூம் பெட்டர் ரூமாகணுமா?

தம்பதிகளிடையே பிரச்னை ஏற்படுவதற்கும், அது விவாகரத்து வரை செல்வதற்கும் காரணமாய் இருப்பது பெரும்பாலும் பெட்ரூம்தான் என்கின்றனர் மனஇயல் நிபுணர்கள். அத்துடன் தம்பதிகள் பெட்ரூமில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பட்டியலிட்டு இருக்கிறார்கள். அந்த பட்டியல் இதோ:

இது ஆண்களுக்கு:
* வியர்வை சொட்ட சொட்ட, உடல் நாற்றமெடுக்க, ஈ என்று இளித்துக்கொண்டு பெட்ரூம் போனால் உங்க பார்ட்னர் அப்செட் ஆயிடுவாங்க. அதனால, பெட்ரூம் போகும் முன் சுத்தமா குளிச்சிட்டு, நறுமணம் கமழும் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கிட்டு சும்மா ஜம்முன்னு இருந்தா, உங்க பார்ட்னர் அசந்துடுவாங்க.
* எதை எதை எங்க செய்யணுமோ, அதை அதை அங்கங்கே செய்ய பழகிட்டாலே பல தொல்லைகள் தீர்ந்துடும். நீங்க ரொம்ப சின்சியரான ஆபிசராக இருக்கலாம்; கடினமான உழைப்பாளியா இருக்கலாம், அதுக்காக பெட்ரூமில் உங்க ஆபிஸ் வேலை எல்லாத்தையும் மூட்டைக் கட்டிட்டு எடுத்துட்டு போய் பொறுப்பா வேலைபார்க்கிறது, அல்லது ஏதாவது தீவிரமா போனில் டிஸ்கஸ் பண்றதெல்லாம் உங்க பார்ட்னரை மூட் அவுட் மட்டுமல்ல எரிச்சலடையவும் வைக்கும்.
* தாம்பத்தியம் என்பது வெறும் உடல் சுகம் மட்டும் கிடையாது. உங்கள் சக பார்ட்டனுருக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்.

இது பெண்களுக்கு:
*அச்சம், மடம், நாணம், வெட்கம் பெண்களுக்கு இருக்க வேண்டியதுதான். ஆனா அது பெட்ரூமில் அதிகமாக இருந்தால் உங்கள் ஹஸ்பெண்ட் உங்களை சஸ்பெண்ட் செய்துடுவார். அதனால கூச்சம், வெட்கத்தை துõர வைத்து, கணவருக்கு ஒத்துழைப்பு தாருங்கள்.
* கன்னத்தில் கைவைத்துக்கொண்டு தேமேன்னு உட்காந்திருந்தா, கணவருக்கு இருந்த மூடெல்லாம் பேய் அறைந்த மாதிரி ஓடிவிடும். அதனால, எப்போதும் பெட் ரூமில் அப்போது பறித்த ரோஜா மலர் பூ போல சிரித்த முகத்துடன் இருங்கள்.
* நிர்வாகத்தில் ராஜகுமாரியாக இருங்கள். ஆனால், பெட்ரூமில் ராஜகுமாரி தோரணையில் கணவரை மிரட்டாதீர்கள். அவர்களின் செயல்களுக்கு மறுப்பு தெரிவிக்காதீர்கள்.
* இரு கை சேர்ந்தால் தான் ஓசை வரும். அது போல இருவரின் ஆசை சேர்ந்தால்தான் இல்லறம் இனிக்கும்.
மேலே சொன்ன சூத்திரங்களை இருவரும் சூட்சகமாக கற்றுக்கொள்ளுங்கள். பிறகென்ன அன்பெனும் ஊஞ்சலில் நாளெல்லாம் சந்தோஷ சங்கீதம் பாடி ஆடலாம்.
தேவா
************************************************


26.திருமண நாளில் நீங்கள் தேவதையாக ஜொலிக்க...

திருமணத்திற்கு வந்தவர்கள் மாப்பிள்ளையை பார்க்கிறார்களோ இல்லையோ, மணப்பெண்ணை நிச்சயம் பார்ப்பார்கள். ஆதலால் மணப்பெண் தன் அழகில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக திருமணத்திற்கு முதல் நாள் பியூட்டி பார்லர் போய் வந்து விட்டால் அழகு வந்து விடும் என்று எண்ணிவிடாதீங்க. அதுக்குன்னு சில வழிமுறைகள் இருக்கு. அதை அப்படியே கடைபிடிச்சா, கல்யாண வைபோகத்தில் நீங்க தேவதையாகலாம்.
3 மாதங்களுக்கு முன்பு...
திருமணம் நிச்சயமான அடுத்த நாளில் இருந்தே நீங்க உங்கள் அழகை பராமரிக்க கவனம் செலுத்த வேண்டும். முகப்பரு, கரும்புள்ளி, படை இருந்தால் குறைந்தது ஆறு வாரங்களுக்கு தோல் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு கால்வானிக் மசாஜ் தினமும் எடுத்துக் கொண்டால் முகத்தில் உள்ள கறுப்பு நிறம் நீங்கி, சருமம் மென்மையாக மாறும்.
சுருண்ட பரந்த தலைமுடிக்கு ஹேர் ஸ்பா செய்து கொள்ளலாம். இதனால் முடி பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் மாறும். பேன், பொடுகு தொல்லை இருந்தால் ஹேர் ஸ்மூத்திங், ஆயில் மசாஜ், ஹென்னா சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
2 மாதங்களுக்கு முன்பு...
தொடர்ந்து ஆரஞ்சு கால்வானிக் மசாஜ் எடுத்துக்கொள்ள வேண்டும். மாதம் ஒரு முறை பெடிக்யூர் முறையில் கை,கால் நகங்கள் மற்றும் விரல்களை அழகு படுத்திக் கொள்ள வேண்டும்.
முகப்பரு நீங்க பிம்பிள் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். தவிர உணவில் மீன், முட்டை, காய்கறிகளை சேர்த்துக்கொண்டு வரவேண்டும். அதிகமாக தண்ணீரும் பருக வேண்டும். இதனால் உடல் மெலியும், ஒரு வனப்பும் ஏற்படும்.
ஒரு மாதத்திற்கு முன்பு ...
திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பாக பியூட்டி பார்லரில் ஸ்டீம் பாத் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தோலில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் மென்மையாகும். மேலும் சூரிய கதிர்களால் தோலில் ஏற்பட்ட சுருக்கம், வெடிப்பு ஆகியவை நீங்கி விடும்.
2 வாரத்திற்கு முன்பு ...
ஆரஞ்சு கால்வானிக் மசாஜ் பண்ணியப்பிறகு, உங்களுடைய சருமத்திற்கு பொருத்தமான பேஷியல் செய்துகொள்ளலாம்.
ஒரு வாரத்திற்கு முன்பு...
திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது வேண்டும் உங்களுக்கு எந்த விதமான ஹேர் ஸ்டைல் பிடிக்குமோ அல்லது உங்களுடைய முகத்துக்கு எது அழகாக இருக்குமோ அந்த ஹேர் ஸ்டைல் எது என்பதை தெரிந்து கொண்டு ஹேர் ஸ்டைலில் முடியை தயார் செய்து கொள்ளவும்.
3 நாட்களுக்கு முன்பு...
உடம்பு முழுவதையும் பிளீச் மற்றும் வாக்சிங் செய்து கொள்ளவும். ஸ்கிரப் பண்ணிக்கொள்ளலாம். மேலும் பிரெஞ்சு மெனிக்யூர், பெடிக்யூர் பண்ணிக்கொண்டால் விரல்களும், நகமும் அழகு கூடும்.
திருமணத்திற்கு முந்திய நாள்...
திருமணத்திற்கு முதல் நாள் மெகந்தி போட்டுக்கொள்ளலாம். மெகந்தி போடுவதற்கு முன்பு மெகந்தி போடும் இடத்தில் எண்ணை பூசிவிட்டு பின்னர் மெகந்தி போட்டுக்கொண்டால் அழியாமல் இருக்கும். இன்றைக்கு மெகந்தி டிசைன்கள் பல இருக்கின்றன. குறிப்பாக அராபிக் மெகந்தி, இந்தி மெகந்தி ஆகியவை அனைவராலும் பெரிதும் விரும்பி போடப்படுகின்றன.
மேலே சொல்லப்பட்ட முறைகளை நீங்கள் பின்பற்றினால் திருமணத்தின் போது அழகு அள்ளும் தேவதையாக இருப்பீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!
தேவா.
********************************************************


27. ஹார்ட் அட்டாக் வந்துடுச்சா...
கொஞ்சம் இருமினால் போதும்!

அலுவலகத்தில் தலைக்குமேல் வேலை. டார்கெட்படி எந்த வேலையும் முடியவில்லை. ஒரே டென்ஷன்! டென்ஷன்! ஒருவழியாய் நினைத்த வேலையை கஷ்டப்பட்டு முடித்துவிட்டு, மாலையில் காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறீர்கள். உடம்பெல்லாம் ஒரே அசதி! வியர்வை வேறு நசநசவென்று வடிந்து எரிச்சலடையவைக்கிறது. காரை வேகமாக செலுத்தி வீடுசேரலாம் என்றால் ரோடில் அங்கங்கே டிராபிக் ஜாம்! வெறுத்துபோய் ஆமைவேகத்தில் வீடு வந்து சேர்ந்தது... அப்பாடா! என்று ஷோபாவில் அக்காடான்னு உட்கார்ந்திருக்கிறீர்கள். களைப்பு தீர கொஞ்சம் சூடாக மணக்க மணக்க ஒரு கப் காபி தர வீட்டில் யாருமில்லை. வீட்டின் வெருமை, தனிமை, அசதி, களைப்பு எல்லாம் சேர்ந்து மனசை உறியடிக்க... சட்டென்று நெஞ்சில் ஏதோ ஒரு ஜந்து ஊர்வது போல உணர்கிறீர்கள். அடுத்த சில நொடிகளில் நெஞ்சு வலி வந்து தொலைக்கிறது!
நெஞ்சில் உள்ளங்கையை வைத்து பிசைந்து கொண்டிருக்கிறீர்கள். உதவிக்கு ஆளில்லை! அருகே மருந்து மாத்திரையும் இல்லை! நீங்கள் என்ன செய்வீர்கள்? அவ்வளவு தான் நம் கதையென்று மரணபயம் கொண்டு துடிப்பீர்களா? தலையில் கைவைத்து விதி முடிந்தது என்று என்று கண்கசிவீர்கள்!
இனிமே, அப்படி எல்லாம் நீங்கள் கவலைபடவேண்டாம். நெஞ்சு வலி வந்தா பயப்படவேண்டாம். சட்டென்று நெஞ்சுவலி வந்தா, நீங்க சட்டென்று இருமுங்க! அவ்வளவு தான்! ஹார் அட்டாக் வந்தால் பர்ஸ்ட் எயிட் காப் தான்!
என்ன இருமினால், ஹார்ட் அட்டாக் போயிடுமா? அட, வேடிக்கையாக இருக்குதே என்று தானே நினைக்கிறீங்க.
உண்மையில் நெஞ்சு வலி வந்த சமயத்தில் தொடர்ந்து இருமுங்க; ஒவ்வொரு முறைஇருமினப்பிறகும் ஆழமாக காற்றை இழுத்து சுவாசிங்க. அந்த நேரம் ஹார்ட் அட்டாக்கில் இருந்து நீங்கள் விடுபடலாம்.
இதைப் பற்றி இதயநோய் நிபுணர்கள் என்ன கருத்து சொல்றாங்கன்னு பார்க்கலாமா?
தேவா
******************************************

28. பூமியை காக்க, பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!
உமா நாராயணன்

""நீர்கொடுக்கிறது; உணவுக்கொடுக்கிறது; நம்மை காலகாலமாய் சுமந்துக் கொண்டிருக்கிறது, இந்த சுற்றும் பூமி! நம்மையும், நம் வருங்கால சந்ததிகளையும் ஒரு தாய்போல சுமக்கும் இந்த பூமிக்கு நம் வாழ்நாளில் ஏதாவது கைமாறு செய்திருக்கிறோமா? அப்படி என்ன செய்யலாம் என்று என்றாவது யோசித்திருக்கிறோமா? இப்படி எல்லாம் உங்களை யோசிக்க வைக்கவும், இந்த பூமி மீதான ஒரு கரிசன நேசப்பார்வையை செலுத்த வைக்கும் ஒரு சிறுமுயற்சிதான் "ஸ்மால் ஸ்டெப்ஸ்' '' என்கிறார், உமா நாராயணன்.
சென்னையில் வசிக்கும் இவரின் அப்பா, அம்மாவுக்கு பூர்வீகம் கேரளா. ஃபோர்டு நிறுவனத்தில் ஹெச்ஆர்டியாக வேலைப் பார்க்கும் உமா ஸ்மால் ஸ்டெப்சில் அம்பாசிடராக இருக்கிறார். உமாவின் கணவர் அருள்தேவ்வும் இவரைப்போலவே ஸ்மால் ஸ்டெப்பில் சேவை செய்து வருகிறார்.

உங்களுக்கு பூமி மீதான இந்த கரிசனம் எப்படி ஏற்பட்டது?
திடீரென்று ஏற்படவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே இந்த உலகத்துக்கான சேவையில் என் பங்கு இருக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்துக் கொண்டுதான் இருந்து வந்தது. அந்தந்த வயசுக்குரிய சக்திக்கு ஏற்ப என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுதான் இருந்தேன். இப்போது இளமையும், துடிப்பும், ஆற்றலும் இருப்பதால் என் சேவை எண்ணம் விசாலமடைந்திருக்கிறது. அதற்காக இந்த பூமி மீதான கரிசனம் மட்டும்தான் என் மனதில் இருந்தது என்றெல்லாம் சொல்லமுடியாது. இந்த நிலையில் "ஸ்மால் ஸ்டெப்ஸ்' மூலம் என் சேவை தொடர்ந்தப் போது அது பூமிக்கான சேவையாக மாறிவிட்டது.

"ஸ்மால் ஸ்டெப்ஸ்' பற்றி சொல்லுங்களேன்?
இது, உலகம் மற்றும் மக்களின் நலனுக்கான ஒரு சேவை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிறுவனம். இதன் தொண்டர்கள் உலக அளவில் இருக்கிறார்கள். தமிழகத்தில் பாண்டிச்சேரி ஆரோவில் இடத்தில் உபாசனா மையம் இருக்கிறது. ஸ்மால் ஸ்டெப்ஸ், சுனாமி பாதிப்பு மீனவர்களுக்கு உதவிகளும் அவர்கள் அந்த அதிர்ச்சி சம்பவத்திலிருந்து மீள கவுன்சிலிங்கும் முழுமையாக கொடுத்து மீனவர்கள் துயர் துடைத்தது. அடுத்தது பாரம்பரிய நெசவு தொழில் நலிந்த நிலைக்கு சென்றபோது வாரணாசியில் உள்ள நெசவாளர்களையும், நெசவுத்தொழிலையும் காப்பாற்ற உதவிக்கரம் நீட்டியது. இப்படி பல சேவைகள் செய்திருக்கின்றது.

ஸ்மால் ஸ்டெப்சில் உங்கள் சேவை என்ன?
உலக சுற்றுப்புறச்சூழல் மாசடைவதை தடுக்கும் விழிப்புணர்வு செய்திகளை மக்களிடத்தில் எடுத்துச்செல்லும் பணி என்னுடையவை. இன்று நாமிருக்கும் பூமியை பெரிதும் மாசுப்படுத்துவது மக்காத குப்பை எனப்படும் பிளாஸ்டிக் பைகள். நம் இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 5,600 டன் பிளாஸடிக் பைகள் பூமியில் எறியப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்பை குப்பைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனால் பூமியின் அடுக்கில் இதுவும் ஒரு அடுக்காகி விடும். இதனால் ஏற்படும் ஆபத்துகள் ஒன்றெல்ல, இரண்டெல்ல. இந்த பூமிக்கெதிரான தீமையை தடுக்க வேண்டும்; இது பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும். இதில்தான் என் கவனம் இருக்கிறது.

உங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி எப்படி இருக்கிறது?
முதலில் நானும், என் கணவரும் பிளாஸ்டிக் பைகளை தொடுவது கூட இல்லை. அடுத்ததாக என் வீட்டில் பிளாஸ்டிக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பிளாஸ்டிக் பை உபயோகிப்பதிலிருந்து விடுவித்து விட்டேன். நண்பர்கள், உறவினர்கள், பணிசெய்யம் இடத்தில் ஊழியர்கள் இவர்களிடத்தில் பிளாஸடிக் பைகளை உபயோகபடுத்துவதால் ஏற்படும் தீமைகளைச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பொதுமக்களையும், கடைமுதலாளிகளையும் சந்தித்து கேரி பேக்குகளை பயன்படுத்தாதீர்கள் என்றும் அதனால் ஏற்படும் தீமைகளை எடுத்துச் சொல்லியும் அவர்கள் மனதை மாற்றி வருகிறேன். அதற்கு இந்த அம்பாஸிடர் பேக் பெரிதும் உதவுகிறது.

அம்பாஸிடர் பேக்கா? அது என்னது?
இது கையளவில் மடித்து வைத்துக்கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்ட காட்டன் துணி பை. நாம் காய்கறி, மளிகைப் பொருள்கள் வாங்கச் செல்லும்போது அதை கேரிபேக்கில் போட்டுதான் கடைகாரர்கள் கொடுக்கிறார்கள். நாம் கேரி பேக்குகளை தவிர்க்க இந்த காட்டன் பைகளை பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த பையை பார்க்கும் மற்றவர்களுக்கும் கேரி பேக்குகளை பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும். அதனால் தான் இதை அம்பாஸிடர் பேக் என்று பெயரிட்டிருக்கிறார்கள். இந்த பேக்கை உருவாக்கும் பின்புலத்தில் ஆயிரக்கணக்கான ஏழைபெண்கள் இருக்கிறார்கள்.

பெண்களுக்கு உங்களின் மெசேஜ் என்ன?
பெண்கள்தான் இதற்கு முதல் ரோல்மாடல் என்றுகருதுகிறேன். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். இந்த பூமிக்கெதிரான பிளாஸ்டிக் கலாசார யுத்தத்தையும் தடுக்க முடியும்! நம்மால் என்ன முடியும் என்று யோசிக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வரும் எடுத்து வைக்கும் சிறு ஸ்டெப்ஸ் தான் பெரிய பாதையையே உருவாக்கும். அதனால் தான் இந்த இயக்கத்திற்கு"ஸ்மால் ஸ்டெப்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறோம். இன்று நாம் பிளாஸ்டிக்கிற்கு எதிராக எடுத்து வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் நாம் வாழும் பூமியை வளமாக்கும். நம் சந்ததிகளை சுமக்க இருக்கும் இந்த பூமிக்கு நம் பரிசாக இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி?

தேவராஜன்
படங்கள்: ராஜன்
*******************************************************


29. மார்பக புற்றுநோய்க்கு கிச்சன் பார்மஸி!

மாறிவிட்ட வாழ்க்கை முறையில் நடைமுறை பழக்கங்கள் எல்லாம் மறைந்து விட்டன. நவீன கலாசார வாழ்க்கையில் உணவு, உடை, இருப்பிட சூழல் எல்லாம் மாறிவிட்டன. இதன் விளைவாக இன்றைய பெண்களுக்கு மார்பக புற்றுநோய் எனும் அபாயகரமான அச்சுறுத்தல் மிரட்டிக்கொண்டிருக்கிறது.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கு அனேக காரணங்கள் இருந்தாலும், அவற்றிலிருந்து குணமடைய, விடுபடவும் பல வழிகள் இருக்கின்றன. மார்பக புற்றுநோய் வந்து விட்டால், அவ்வளவு தான் வாழ்க்கை என்று மனம் தளர்ந்து விட வேண்டாம். வீட்டின் கிச்சனையே பார்மஸியாக மாற்றிக்கொள்ளுங்கள். இதுவும் ஒரு வழிதான் கேன்சரை கேன்சல் பண்ண. கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்!
தக்காளி:
தளதளவென இருக்கும் தக்காளி உங்கள் சமையல் அறையில் இருந்தாலே போதும். பெண்களை புற்றுநோய் அணுகிட அச்சப்படும். தக்காளியில் இருக்கும் "லைகோபென்' கேன்சருக்கு செக் வைக்கும் வேகதடையாகும். இந்த லைகோபென் தக்காளியில் அதிகம் இருப்பதால் உணவில் தக்காளியை பிரதான காய்கறியாக பயன்படுத்துங்கள். தக்காளியை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிட வேண்டும்.
திராட்சை :
சிவப்பு திராட்சைப் பழம், அதன் விதைகள் கேன்சர் செல்லின் இயக்கத்தை முடக்கிப்போடும் அபார ஆற்றலைக் கொண்டிருக்கிறது. திராட்சையில் ஆன்டிஆஸிடன்ஸ் கேன்சர் செயல்பாட்டை தடுத்து, கேன்சரை தடுக்கும் அரணாக உதவுகிறது.
காலிபிளவர்:
கேன்சர் செல்களை ஒடுக்கக்கூடிய சக்தி விட்டமின் சி மற்றும் இயற்கை அயோடினுக்கு உள்ளது. இந்த விட்டமின் சி நார்சத்துள்ள காய்களான, காலிபிளவர், முட்டைகோசில் உள்ளது. இவ்வகை காய்கறிகளை பெண்கள் உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் மார்பக புற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
பச்சைக் காய்கறிகள்:
பச்சைக்காய்கறிகளில் உள்ள சத்துக்கள் பெண்களின் உடலில் உள்ள தசை செல்களுக்கு ஆரோக்கியமும், திடமும் கொடுப்பவையாக இருக்கின்றன. குறிப்பாக கசப்பு சுவையுள்ள பாகற்காய் போன்ற காய்கறிகள் கேன்சரை உண்டுபண்ணும் செல்களை ஆரம்பத்திலேயே தடுக்கின்றன. மேலும் கேன்சருக்கு எதிரான எதிர்ப்பாற்றலை தசை செல்களுக்கு தருகின்றன.
முட்டை, கிரீன் டீ:
முட்டையில் பெரும் பகுதியாக விட்டமின் டி இருக்கின்றது. முட்டையில் இருக்கும் விட்டமின் டி ஆனது பெண்கள் உடம்பில் உள்ள தசை செல்களில் கால்சியம் படிவதை தடுக்க உதவுகிறது. மேலும் இந்த விட்டமின் டி நுரையீரல் புற்றுநோயையும், மார்பக புற்றுநோயையும் தடுக்கும் சுவராக இருந்து உதவுகிறது. ஆதலால் பெண்கள் தினமும் ஒரு முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தினமும் காலை சூரிய வெயிலில் சிறிது நேரம் இருக்க வேண்டும். காலை வெயிலில் விட்டமின் டி அதிகளவு இருப்பது குறிப்பிடத்தக்கது. கிரீன் டீ கேன்சர் செல் உடலில் பரவாமல் இருக்க உதவுகிறது.
ஆகவே, பெண்கள் மேலே சொன்ன காய்கறிகளை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், மார்பக புற்றுநோயிலிருந்து தப்பிக்கலாம்.
தேவா
************************************************

30. கிடு கிடு விலைவாசி...
சிக்கனமாக இருப்பதெப்படி?

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள். அந்த இரண்டு பக்கங்கள் சொல்லும் வாழ்வியல் தத்துவத்தை என்றேனும் நீங்கள் காது கொடுத்துக் கேட்டிருக்கிறீர்களா? நாணயத்தின் ஒரு பக்கம் சம்பாதிக்கவும்; மறு பக்கம் சேமிக்கவும் சொல்லிக் கொடுக்கத்தான் நாணயம் இரண்டு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், நாம் சம்பாதிக்கிறோம்; சம்பாதிப்பதை கண்ணைமூடிக்கொண்டு தண்ணீர் போல செலவழிக்கிறோம். மாதத்கடைசியில் பிறரிடம் கடன் கேட்கும் நிலைக்கு ஆளாகிறோம்.
விலைவாசி கிடுகிவென உயர்ந்துக் கொண்டே போகிறது. ஆனால், அதற்கேற்ற வருமானம் ஈட்ட நம்மில் பலருக்கு இயலாத காரியமாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இல்லத்தரசிகள் பணத்தை எப்படி நிர்வகிப்பது? எப்படி செலவு செய்வது? எவ்வாறு சேமிப்பது? எவ்வாறு சிக்கனமாக இருப்பது போன்ற குடும்ப சூத்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்!

வீரலுக்கேத்த வீக்கம்:
வரவு எட்டணா ஆனா செலவு பத்தணா என்றால் நம் வாழ்க்கையில் ஆண்டியாகிவிடுவோம். அதனால் தான் "வீரலுக்கு ஏத்த வீக்கம்', "வரவுக்கு ஏற்ற செலவு' என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள். ஆதலால், குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகள் குடும்பத்தின் மொத்த வருமானம் , மொத்த செலவு இவைகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும். வருமானத்துக்கு ஏற்றவாறு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். எது அவசியம், எது அனாவசியம் என்பதில் தீர்க்கமான முடிவை தயங்காமல் எடுக்க வேண்டும். அதற்கு முதல்படி வரவுக்கு ஏற்ற செலவு செய்ய பழகிக்கொள்ள வேண்டும். அதிலும் மிச்சப்படுத்தும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வருமானத்தை நிர்வகிக்கும் திறமை:
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் பல ஏற்படலாம். எனவே சூழ்நிலைக்கு ஏற்ப திட்டமிடல் வேண்டும். செலவு செய்வதிலும் ஒருகொள்கையை கொண்டிருக்க வேண்டும். அத்யாவசிய பொருள் எல்லாம் யானை விலை, குதிரை விலை விற்கிறது. இந்த நிலையை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இந்த நிலைக்கு ஏற்ப நாம் வாழ முடியும். அதற்கேற்றவாறு வாழ்க்கை முறைகளையும், மனபாங்கையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சேமிக்கும் எண்ணம் வளரவேண்டும்:
நாம் உழைப்பால் ஈட்டும் பணத்தை எந்த வழியில் பெருக்குவது என்று எப்போதும் யோசிக்க வேண்டும். பணத்தை ஒரு வளரும் மரமாகவோ, பொன் முட்டையிடம் வாத்தாகவோ கருத வேண்டும். பணத்தை எதில் முதலீடு செய்வது? என்னென்ன பொருட்களை வாங்குவது போன்ற வழிகளை தீர ஆராய்ந்து மேற்கொள்ள வேண்டும். மாத வருவாயில் குறைந்தது 20 சதவீதமாவது சேமிக்க வேண்டும். அது போல வருமானம் பெருகும் போது சேமிப்பின் தொகையையும் கூட்டிக்கொண்டே போக வேண்டும்.

எளிய முறையில் வீட்டில் சிக்கனம் செய்க!
பொதுவாக குடும்பத்தை நிர்வகிக்கும் நாம் தேவையில்லாத செலவுகளை குறைத்துகொள்ளுதல், வீண் விரையங்களைத் தவிர்த்தல் இவைகளில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்திற்கு மேல் ஒருகாலும் செலவு செய்யக்கூடாது. அத்யாவசியப் பொருட்களைத் தவிர மற்ற பொருட்களை வாங்குவதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு என்ன தேவையோ அவைகளை மட்டுமே வாங்க வேண்டும். கொண்டாட்டம், குதுõகலம் இவற்றில் பணத்தை வாரி இறைக்கக்கூடாது.
எலக்டிரிக் பில், போன் பில் போன்ற கட்டணங்களை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தி அபராத கட்டணத்தை தவிர்க்க வேண்டும். சம்பளம் வாங்கியதும் வீட்டிற்கு தேவையான ஒரு மாதக்காலத்திற்கான பொருட்களை வாங்க வேண்டும்.
தேவையில்லாமல் டூவீலரை, காரை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஆடம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடாது. தேவையில்லாமல் உடல் நலத்திற்கும், வருமனத்திற்கும் ஆகாத கெட்டப் பழக்கங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வீட்டின் செலவுகளை மட்டுப்படுத்த குடும்பத்தில் இருப்பவர்கள் எல்லாரும் ஒத்துழைப்பு தரவேண்டும்.
மேற்கண்டவாறு வருமானத்தை ஈட்டவும், ஈட்டிய வருமானத்தை சிக்கனமாக செலவழிக்கவும், சிறுக சிறுக சேமிக்கவும் பழகிக்கொண்டால், விலைவாசி எவ்வளவு ஏறினாலும் தள்ளாடாமல் குடும்பத்தை நடத்தலாம்.

தேவராஜன்
******************************************************

31 . இதயத்துக்கு இதமான உணவுகள்!

மாரடைப்பு என்ற நோய் முன்பெல்லாம் வயதானால் தான் வரும். ரொம்பவும் பருமனாக இருப்பவர்களுக்கும் வரும். இப்போதைய சூழலில் யாருக்கு, எப்படி, எப்போது வரும் என்று தெரியாமல், சட்டென்று வந்து பொட்டென்று உயிரைக் குடித்துவிடுகிறது ! இந்த அபாயகரமான நோயிலிருந்து விடுபட நாம் முன்னெச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். வாழும் வாழ்க்கை முறை, உண்ணும் உணவு பழக்கம்,செய்யும் தொழில் இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தி வந்தால் இளம் வயதில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுக்கலாம்.
வாழ்க்கை முறை:
பரபரப்பான வாழ்க்கை முறையை கூடுமான வரை தவிர்க்க வேண்டும். காலையில் எழுவதிலிருந்து, இரவு துõங்குவது வரை நேரம் என்பது ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். தேவையில்லாத ஆர்ப்பாட்டம், ஆசை இவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். கவலை, இழப்பு, தோல்விகளை மனதில் புதைத்துக் கொள்ளாமல் ஒவ்வொரு நாளும் புதிதாக பிறந்தது போல் புத்துணர்வோடு அன்றைய தினத்தை வாழ வேண்டும். காலையில் சிறிது நேரம் நடைபயிற்சி, தியானம், சந்தோஷமான விஷயங்களில் மனதை செலுத்துதல் என இருக்க வேண்டும். மேற்கண்டவைகளைக் கடைபிடித்தாலே ஓரளவு இந்த அச்ச நோயிலிருந்து விடுபடலாம்.
உணவு முறை:
யாரும் வாழ்வதற்காகதான் சாப்பிடுகிறோம். சாப்பிடுவதற்காக வாழவில்லை! ஆதலால், எதை சாப்பிட்டால் உடல்நலத்துக்கு நல்லது, எதை சாப்பிட்டால் உடல் நலத்துக்கு தீங்கு என்பதை அறிந்து அதற்கேற்றவாறு உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தக்காளி: இதில் லிகோபைன் என்கிற திரவம் இருக்கிறது. இந்த திரவம் இதயத்துக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும். ஆகையால் தினமும் ஒரு தக்காளியை அப்படியே சாப்பிடுங்க.
திராட்சை: திராட்சையில் ரத்ததிசுக்களை உற்பத்தி செய்யும் சத்து இருப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதனால் திராட்சை சீசனில் தினமும் கொஞ்சம் திராட்சையை சாப்பிடுங்க.
கேரட், வெங்காயம், சக்கரவள்ளிக் கிழங்கு இவைகளையும் பச்சையாக சாப்பிடலாம். இவைகள் இதயத்துக்கு பாதுகாப்பு தரும்.
கனி,காய்கறி, தானியங்கள்:
விட்டமின் சி, இ இரண்டும் இதயத்தின் நண்பர்கள். இந்த சத்துகள் பழங்களில், காய்கறிகளில், தானியங்களில், சிலபருப்பு வகைகளில் இருக்கின்றன. கோஸ்பெர்ரி, நெல்லிக்காய், கேரட், பாதாம் பருப்பு, சூரியகாந்தி விதைகளில் இவ்வகை விட்டமின்கள் இருப்பதால் தினமும் இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆலிவ், சோயா, கடுகு, கடுக்காய் எண்ணைகள் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்லக்கொழுப்பை உடலுக்கு தரும். அதனால் இவைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஒமேகா3 மற்றும் 6ம் இதயத்திற்கு நல்லது. அதனால் ஒமேகா உள்ள மீன், பருப்பு வகைகளையும் அடிக்கடி சாப்பிடலாம்.
கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்துக்கு முக்கியமான எதிரி. இதை தடுக்க நார்ச் சத்துள்ள காய்கறிகள், நவ தானியவகைகள், பீன்ஸ், ஓட்ஸ், பழுப்பரிசி இவைகளை உணவில் எடுத்துக்கொண்டால் கொலஸ்ட்ரால் பாதிப்பால் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
காலை சூரிய வெளிச்சத்தில் விட்டமின் டி உள்ளது. இந்த விட்டமின் டி இதயத்துக்கு பலத்தைக் கொடுக்கிறது. உயர் ரத்தஅழுத்தம், ரத்தக்கொதிப்பு உபாதைகளில் இருந்து விடுபட விட்டமின் டி தேவை. அதை காலை வெயிலிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இவைகளைத்தவிர யோகா, உடற்பயிற்சி, நடைபயிற்சி அவசியம்.
செய்யக்கூடாதவை:
எப்போதும் எதையாவது கொரித்துக்கொண்டிருக்கக்கூடாது. நொறுக்குத்தீனி, சாக்லெட், ஐஸ்கிரீம், பீசா, மாமிச உணவு, புகைப்பிடித்தல், மது அருந்துதல், சோம்பேறியாக இருந்து உடல் பருமனாக்கிக் கொள்ளுதல், டென்ஷன், கவலை இவைகளை எல்லாம் தவிர்த்து வந்தால் ஹார்ட் அட்டாக்கில் இருந்து நீங்கள் விடுபடகூடும்.
தேவராஜன்
**********************************************



32. சாஸ்திரம் பெயரில்
செப்படி வித்தைகள்!

நாம்,நம் சமய, சம்பிரதாயங்கள் மீது அதீத நம்பிக்கை வைத்திருப்பதையே சிலர் அந்த நம்பிக்கையை மூலதனமாக கொண்டு பலரிடம் காசு பார்த்து விடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் நான் வசிக்கும் ஊரில், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
அது பழங்காலத்து சிவன் கோயில். பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து இருக்கிறது. ஒரு சனிபிரதோஷ நாளில் கோபுரத்தில் இருந்து பழுதடைந்த ஒரு பகுதி இடிந்து தரையில் விழுந்து விட்டது. சனிபிரதோஷத்திற்கு வந்த பக்தர் கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது என்ன கெட்ட சகுனமோ என குழம்பினர். ஊருக்கு என்ன தீங்கு நேரிடுமோ என்று பயந்தபடி இருந்தனர்.
அந்த பக்தர் கூட்டத்தில் இருந்த தொழில் போனியாகாத சோதிடர் ஒருவர், அந்த நிகழ்ச்சியை தனக்கு சாதகமாகக் கொண்டு, வந்து இருந்தவர்களிடம்,"கோபுர தரிசனம் கோடி புண்ணியம் தரும்! அப்படியாகிய கோபுரம் இடிந்து விழுவதைப் பார்த்தால் பல தோஷம் வரும். இதற்கு பரிகாரமாக, ஹோமம் செய்ய வேண்டும். அதற்கு இந்த ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து, கோயிலில் ஹோமம் செய்து பரிகாரம் செய்தால் தோஷம் பாதிக்காது' என்று அந்த நேரத்தில் இன்ஸ்டன் லக்சர் கொடுத்தார்.
அவர் பேச்சை நம்பி ஊரில் எல்லாருமே வீட்டுக்கு 50 ரூபாய் என வசூல் செய்து மொத்தமாக ஒரு தொகை அவரிடம் கொடுத்தனர்.
இதில் நான் மட்டும் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். அது மட்டுமல்லாமல், ஊராரிடம் சோதிடர் சொல்வதெல்லாம் கட்டுக்கதை. வேண்டுமானால், ஊரார் பணம் போட்டு சிதலமடைந்த கோபுரத்தை பழுதுப் பார்க்கலாம். அது தான் புண்ணியம்!' என்றேன்.
யாரும் என் பேச்சைக் கேட்டபாடில்லை. ஒருசில தினங்களில் பேருக்கு ஒரு ஹோமத்தை கோயிலில் செய்து விட்டு, சோதிடர் மக்கள் கொடுத்த பணத்தில் ஒரு தொகையை லம்பாக அபேஸ் செய்துவிட்டார்.
இப்படி தான் நாட்டில் பலர் மக்களின் அதீத நம்பிக்கையையும், மூடநம்பிக்கையையும் தங்களுக்கு சாதகமாகக்கொண்டு அதை வணிக ரீதியாக்கி கையில் காசு பார்த்துவிடுகின்றனர்.
பச்சை சேலை வதந்தி, திருவண்ணாமலை தீபம் அணைந்த வதந்தி, ஸ்ரீரங்கம் கோயில் கோபுர விரிசல் இப்படி பல வதந்திகளால் மக்கள் எதை தின்னால் பித்து தெளியும் என்பது போல போலி வதந்திகளால் ஏமாந்து வருகின்றனர்.
ஏமாறுவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள். சாஸ்திரம், சம்பிரதாயம், சகுனம் கடைப்பிடிப்பதெல்லாம் நன்மை பெறும்பொருட்டே அன்றி அவற்றினால் யாதொரு தீங்கும் வராது என்ற திடமான நம்பிக்கை ஏற்படுமானால், நம்பிக்கைகள் ஒரு போதும் மூடநம்பிக்கையாக மாறாது.
*****************************************

33. ஜனாதிபதி பிரதிபா சாதனை!

இந்தியாவின் அதிநவீன ஜெட் விமானம் சுகோய்30. இந்த ஜெட் விமானம் ஒலியின் வேகத்துக்கு சற்று குறைவாக அதாவது மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
இந்த ஜெட் விமானம் இந்திய விமானப்படையின் போர் விமானமாகும். இந்த ஜெட் விமானத்தில் தான் 74 வயதான இந்திய ஜனாதிபதி பிரதிபா பறந்து சாதனைப் படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு 2006ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் சுகோய்30 ஜெட் போர் விமானத்தில் பறந்து சாதனைப்படைத்தார்.
இந்த சாதனைக்குறித்து பத்திகையாளர், "உங்களுக்கு பயமே இல்லை?' என்ற தற்கு, கலாம்," பயப்படுவதற்கு எல்லாம் எனக்கு நேரமில்லை.' என்றார்.
இதே போல் போர்விமானத்தில் பறக்க ஜனாதிபதி பிரதிபாவும் விரும்பினார். இதற்காக சிறப்பு பயிற்சியும் பெற்றார். இதையடுத்து நவம்பர் 25ம் தேதி புனே விமானப்படை தளத்தில் இருந்து ஜனாதிபதி பிரதிபாவை ஏற்றிக்கொண்டு "சுகோய்30' ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தை விங் கமாண்டர் எஸ். சாஜன் ஓட்டிச் சென்றார். போர் விமானப் பைலட்டுக்கான சிறப்பு உடையை ஜனாதிபதி பிரதிபா அணிந்து கொண்டு, உதவி பைலட் இருக்கையில் அமர்ந்திருந்தார். ஜெட் விமானம் வானில் மணிக்கு 1000கி.மீ. வேகத்தில் பறந்தது. அதே வேகத்தில் தொடர்ந்து 30 நிமிடங்கள் பறந்தது. இந்த விமானப் பயணம் செய்ததன் மூலம் போர்விமானத்தில் பறந்த முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையை அவர் படைத்தார்.
அதிவேக ஜெட் விமானத்தில் பறந்து சாதனைப் படைத்து விட்டு, விமானத்திலிருந்து இறங்கிய அவர்," போர் விமானத்தில் பறந்த போது, போர்விமான பைலட்டாக ஏன் பெண்கள் பணிபுரியக்கூடாது என்ற சிந்தனை மேலோங்கியது. ஒரு காலத்தில் ராணுவம்,விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளிலும் பெண்கள் சேர்க்கப்படவில்லை. பின்னர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு, படைகளில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். இப்போது முப்படைகளிலும் பெண்கள் பலர் பணிபுரிகின்றனர்.
ஹெலிகாப்டர் மற்றும் போக்குவரத்து விமானப் பைலட்டுகளாகவும் பெண்கள் இருக்கின்றனர். ஆனால், ஏனோ போர்விமானம் ஓட்டும் பைலட்டுகளாக பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.
நாடு வளம்பெற முற்போக்கு சிந்தனை தேவை. எல்லா பெண்களும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள். எனவே போர்விமான பைலட்ட்õக பெண்களை நியமிப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.
இதில் தொழில்நுட்ப தேவை, தகுதி, சூழ்நிலை போன்றவற்றை அரசும், விமானப்படையும் பரிசீலித்து முடிவு எடுக்கும். ஏனென்றால், எந்தப்பணி கொடுத்தாலும் அதைப் பெண்கள் மிகச் சிறப்பாகவும், நிறைவாகவும் செய்வார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது.' என்றார்.
இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு பெண்ணே இருப்பதால், பெண்களின் திறமை, அவர்களின் நம்பிக்கை, சக்தி பற்றி நிச்சயமாக அவருக்குத் தெரியும். எனவே, நாம் வருங்காலத்தில்
எல்லாத் துறையிலும் பங்கேற்று, அதில் பல சாதனைகள் செய்து பெண் இனத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.
தேவராஜன்
*****************************************88

34. டீன்ஏஜ் மகள்களிடம் அப்பாக்கள்
எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

டீன் ஏஜ் பருவம் என்பது 1314 வயது. இந்த வயது என்பது ஒரு சிக்கலான, புது அனுபவமான, புரிந்தும், புரியாத உணர்வுகளின் தொகுப்பான காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் அவர்களின் சிரிப்புக்கும், அழுகைக்கும், கோபத்துக்கும், எரிச்சலுக்கும் அர்த்தம் கண்டுபிடிக்க முயன்றால், பெற்றோர்கள் தோற்றுத்தான் போக வேண்டும்.
டீன் ஏஜ் பருவ காலக்கட்டத்தில் உங்கள் மகள் வேகமாக வளர்கிறாள். இவ்வளர்ச்சி உடல், அறிவு மற்றும் உணர்வு ரீதியானது. இந்த வயதில் அவள் பாதி பெரியவள் ஆகிவிடுகிறாள். இந்த நிலையில் நீங்கள் அவளை குழந்தையாகவே பாவித்துக்கொண்டு உங்கள் ஆளுமையைத் திணித்தால் பிரச்னைகள் வெடிக்கத்தான் செய்யும்.
அறிவுரைகள், போதனைகள், அதை செய்; இதை செய்யாதே என அதிகாரம் செய்யும் போது அது அவர்களின் மனதை, தன்னம்பிக்கையை, அவர்களுக்குண்டான ஆளுமையை தகர்க்கின்றன. டீன் ஏஜ்ஜில் இருக்கும் மகள் பொதுவாக அம்மாவிடமே முன்னைவிடவும் அதிக நெருக்கம் கொள்வாள். அதே சமயம், அப்பா மற்றும் சகோதரர்களிடமிருந்து விலகி இருக்கவே எண்ணுவாள். ஏறக்குறைய எல்லா உறவுமுறையினரிடமிருந்தும் தனித்து இருக்கவே விரும்புவாள்.அதை அப்பா என்பவர் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய பிள்ளைகள் கைக்குழந்தை நிலையிலிருந்து தத்தித் தவழும் பருவத்தை எட்டிய அந்தக் காலக்கட்டத்தை நினைத்துப்பாருங்கள். மெல்ல மெல்ல பரிணமித்த அவள் குணாதிசயங்களுக்கு ஏற்ப, நீங்கள் உங்கள்ஆளுமைகளை எப்படி எல்லாம் மாற்றிக் கொண்டீர்கள் என்பதையும் எண்ணிப்பாருங்கள். அதுபோல ஒரு மாற்றம் தான் டீன்ஏஜ் பருவமும். இந்தக் காலக்கட்டத்திலும் உங்கள் பிள்ளைகளுக்காக சில விஷயங்களை விட்டுத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். உங்கள் அணுகு முறையை மாற்றித்தான் கொள்ள வேண்டும்.
மேலும் எந்த ஒரு மகளும் தன் டீன்ஏஜ் பருவத்தில் தன்னுடைய அந்தரங்க விஷயங்களை கட்டிக் காப்பவளாகவும், அதை வெளியில் சொல்ல விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். தனக்குள் நிகழ்ந்த இந்த திடீர் மாற்றத்திற்கான காரணம் அறியாது கலக்கப்பட்டிருப்பாள். உடல் வளர்ச்சி மாற்றம், மனதில் எழும் மனவெழுச்சிகளுக்கு அர்த்தம் புரியாமல் இத்தகைய நிலையில் இதை வெளிப்படுத்தாமல் இருக்க, தனிமையை தேடுவாள். பேசுவதைக் குறைத்துக்கொள்வாள். அப்பாவிடம் விலகி இருப்பதையே விரும்புவாள். அதே சமயம் விலகி இருக்கவும் ஆசைப்படும் அவள் அப்பாவின் பாசத்திற்காகவும் ஏங்கிக்கொண்டிருப்பாள்.
இந்த நேரத்தில் அவள் என்ன செய்கிறாள்? எங்கே போகிறாள்? யாரோடு பேசுகிறாள் என்றெல்லாம் துப்பறிய தொடங்கினால் பெற்றோர் மீது கோபப்பட ஆரம்பித்துவிடுவாள்.
டீன் ஏஜ்ஜிற்கே உரிய குழப்பங்களையும், சந்தேகங்களையும், மனபோராட்டங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். உடலிலும் மனதிலும் எழும் மாற்றங்கள் குறித்து அவளுக்கு தோழியாக இருந்து அறிவுறுத்தல் வேண்டும்.
சின்ன வயதில் எந்தப் பெண் குழந்தையும் தன் அப்பாவிடம் மிகவும் பாசமாக இருக்கும். அவரை மதிக்கும். இந்த பாசவலையில் பழகிப்போன அப்பா, திடீரென டீன் ஏஜ்ஜில் மகள் தன்னைவிட்டு விலகத் தொடங்குவதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாதுதான்.
தாய்மகள் முறை என்பது அப்பா மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது. தாயுடன் ஒட்டுதலாக இருக்கும் மகள் தன்னிடம் விலகி இருக்கிறாளே என்ற ஆதங்கம் எந்த ஒரு தகப்பனுக்கும் ஏற்படத்தான் செய்யும். இந்த சூழ்நிலையில் "என் விருப்பப்படிதான் நடப்பேன்! எனக்கு என்ன பிடிக்குமோ அதை தான் செய்வேன்! எனக்கு எதை படிக்க வேண்டும் என்று தோணுகிறதோ அதைத்தான் படிப்பேன்' என்று அவள் அடம்பிடிக்கும் போது, குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முனையும் அப்பாவுக்கும் மகளுக்கும் இடையில் நடக்கின்ற நிகழ்வுகளின் விளைவுகள் நிச்சயம் குடும்பத்தையும் கலங்கடித்துவிடத்தான் செய்யும்.
எனவே, ஒரு டீன்ஏஜ் மகளுக்கு அப்பாவாக இருக்கும் ஒருத்தர் தன்னுடைய அதிகாரத்தை தளர்த்திக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து கீழ் இறங்கி தோழனாக நடந்து கொள்ள வேண்டும். நல்லது, கெட்டதுகளை அன்புடன் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களின் நடவடிக்கையில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, அதே சமயம் அவர்களின் நடவடிக்கைகளில் மேற்பார்வையிட்டு, எந்த விஷயத்தையும் எதிர்க்கொள்ள வேண்டிய மன பக்குவத்தை அவர்களுக்குத் தேவைப்படும் போது தந்து, வழிகாட்டுதலோடு இருந்தால், மகள் அப்பா உறவுமுறை குழப்பத்தை ஏற்படுத்தாது. அச்சத்தை உருவாக்காது.
டீன்ஏஜ் பருவம் என்பது முக்கியமாக பரிணாம வளர்ச்சியை குறிக்கிறது. பார்க்காததைப் பார்க்கவும், கேட்காததைக் கேட்கவும் ஆவல் மேலிடுகிறது. சிலசமயங்களில் இந்த ஆவல் உணர்ச்சியே டீன்ஏஜ் பிள்ளைகளை பெரிய சிக்கலில் மாட்டிவிடுகிறது. இந்தப் பருவத்தில் இன்னமொரு முக்கிய மான மாற்றம் மொட்டு விடும் பாலியல் உணர்வு. இந்த இனம் புரியாத உணர்வை அவர்கள் முழுவதும் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவார்கள்.
இந்தக் காலக்கட்டத்தில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்கள் சில சங்கேத மொழியைக் கைக்கொள்வார்கள். தன் விருப்பங்களை, எண்ணங்களை நாசுக்கான குறிப்புகள் மூலம் உணர்த்த தலையைச்சுற்றி மூக்கைத் தொடுவது போல நடந்து கொள்வார்கள். இதை எல்லாம் கூர்ந்து கவனிக்கும் அப்பாக்கள் சட்டென்று அறிவுரைகளை அள்ளிவிடத்தான் நினைப்பார்கள். ஆனால், அப்படி செய்துவிடாதீர்கள்.
இந்த சூழ்நிலையில் அப்பா என்பவர் மகளுக்கு ரொம்ப அனுசரனையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்குமான தலைமுறை இடைவெளியை மேலும் நீட்டிவிடும் வேளையை இன்றை அவசர உலகமும், மேற்கத்திய பழக்கங்களும், அதிவேக தகவல் தொழில் நுட்பங்களும் கச்சிதமாக செய்து வருகின்றன. இந்த சூழலில் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சில சமயங்களில் பிடிக்காதவர்களாகிவிடுகின்றனர். எனவே, அப்பாக்கள் குடும்பத்தில் தங்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் செயலை மிக புத்திசாலித்தனமாக கையாள வேண்டும்.
வீட்டு வேலைகள், ஏதிர்ப்பார்ப்புகள், வீட்டில் இருக்க வேண்டிய நேரம், வீட்டுப் பாடம் செய்ய வேண்டி நேரம், டி.வி. பார்ப்பது, நண்பர் உள்ளிட்ட செயல்களில் எல்லாருக்குமான ஒரு பொது வரையறைகள் வைத்துக்கொண்டு, டீன்ஏஜ் மகளிடம் அன்பாக நடந்து கொண்டால் எந்த அப்பனுக்கும் பெண் பிடிக்கும். எல்லாப் பெண்களுக்கும் அப்பாவையும் பிடிக்கும்.
தேவராஜன்
*************************************************

34.உணவு முறையே
கிட்னி நோயை விரட்டும்!

உலகில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும், மரண அச்சம் ஏற்படுத்தும், அச்சுறுத்தும் நோய்களாக இருப்பவை புற்று நோய், இதய நோய் அடுத்ததாக இருப்பது சிறுநீரக நோய். உலகின் பெரும் அபாயம் விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் சிறுநீரக நோய் மூன்றாம் இடத்தில் இருப்பதாக ஒரு மருத்தவ ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் நோயாளிகள் சிறுநீரக பாதிப்பால் உயிரிழக்கின்றனர். மேலும் பத்தில் ஆறு பேருக்கு சிறுநீரக நோயுடன் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த கொதிப்பு நோயம் உள்ளது. ஆதலால், இந்தியாவில் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கையை குறைப்பதே மருத்துவ உலகத்தின் முன் உள்ள சவாலாக உள்ளது.
இதற்கு தீர்வாக எவை இருக்கின்றன என்பது பற்றிய ஆய்வில், சிறுநீரக நோயை நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறையாலேயே பாதியளவு கட்டுப்படுத்த முடியும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
அதிகம் சோடியம் உள்ள உப்பு, அதிக பொட்டாசியம் சத்து கொண்ட வாழைப்பழம், தக்காளி, காலிப்ளவர் போன்ற பழங்கள், காய்கறிகள், மாவு சத்தான புரோட்டின் கொண்டுள்ள கிழங்குகளை உணவில் பெருமளவு குறைத்துக்கொள்ள வேண்டும். சூப், பழச்சாறு, காய்கறிகளில் உள்ள சாறு, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகிய உணவுப் பொருட்களில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளன. எனவே இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நீண்ட நாட்களாக தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பசித்தப்பிறகு உணவு உண்ணுதல், குறைந்தளவு உணவு உண்ணுதல் நல்லது. நொறுக்குத்தீனி, மேலை நாட்டு உணவு வகை, அதிக எண்ணை சத்துள்ள உணவுப் பொருட்கள், உணவில் அதிக அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுதல் இவை எல்லாம் சிறுநீரகத்துக்கு ஊறுவிளைவிப்பவையாக இருக்கின்றன.
பொதுவாக உணவு பொருட்களில் சோடியம் அதிகம் உள்ள உப்பு தான் சிறுநீரகத்துக்கு எதிரியாக உள்ளது. உயர் ரத்தக் கொதிப்பு மற்றும் இதய நோய்க்கும் காரணியாக இருப்பது சிறுநீரக நோய் என்பது குறிப்பிடதக்கது.
நம் உடம்பில் தேவையான அளவு பொட்டாசியம் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பொட்டாசியத்தின் அளவு கூடும் போதும், குறையும் போதும் அது சிறுநீரகத்துக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது. அதுபோல பாஸ்பரஸ் அளவும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். கால்சியம் சத்தும் அளவில் சரியாக இல்லாத போது அது சிறுநீரக நோயுடன் எலும்பு நோய்களையும் ஏற்படுத்தும்.
எனவே, சிறுநீரக நோயிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் உணவு வகை அதை சேர்த்துக் கொள்ளும் முறை ரத்த அழுத்தம், உடல் பருமன், ரத்தத்தில் கொழுப்பு, சர்க்கரை இவற்றை கட்டுபடுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும்.
அடுத்ததாக புகைப்பிடிக்கும் பழக்கம், மதுஅருந்தும் பழக்கம் இவற்றை விட்டாலும் சிறுநீரகத்தை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
தேவா
*******************************************************


35. அன்றாட வாழ்க்கையில் சின்ன சின்ன பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். அதை பெரிய சுமையாக கருதாமல் எளிதல் சமாளிக்க கற்றுக் கொண்டால் ள்ள வேண்டும். சமாளிப்பதும் ஈஸி

சிங் அடைப்பு:

சிங், பேசின், பாத்டப் இவற்றில் அடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் தேங்கி விடும். அந்த நேரத்தில் நாம் டென்ஷன் ஆகிவிடுவோம். இந்தப்பிரச்னைக்கு கொஞ்சம் பொறுமையாக கவனம் செலுத்தினால் போதும். பிரச்னை தீர்ந்து விடும். சிங் அடைப்பு ஏற்பட்டால் ஒரு பக்கெட் தண்ணீர் கொஞ்சம் உயரத்தில் இருந்து ஊற்றினால் தண்ணீர் அழுத்தத்தில் அடைப்பு நீங்கிவிடும். டியூப், குழாய் இவற்றின் மூலம் காற்றை செலுத்தினால் அடைப்பு போய்விடும்.

பாத்ரூம் துர்நாற்றம் நீங்க:
ஏர்பிரஷ், சோடா பவுடர் இவற்றை பாத்ரூம் பின் பக்கம் வைத்தால் நாற்றம் இருக்காது.

அசைவ உணவு நாற்றம் நீங்க:
மீன், இறைச்சி இவற்றிலிருந்து வரும் நாற்றத்தை தவிர்க்க ஒரு பாத்திரத்தில் ஒயிட் வினிகர் ஊற்றி கொஞ்ச நேரம் அதில் வைத்திருந்தால் நாற்றம் போய்விடும்.

பர்னிச்சர் அழுக்கு நீங்க:
கண்õடி, கட்டில் , பீரோ இவற்றில் ஸ்டிக்கர் கறை, அழுக்கு போன்ற கரைகளை நீக்க வெஜிடபிள் ஆயில் கொண்டு துடைத்தால் அவை நீங்கிவிடும்.

மூடி, திறக்கும் பொருள் இலகுவாக:

மூடி,திறக்கும்படியான பிரீஜ் போன்ற சாதனங்களில் துõசுபடிந்தால் இலகுவாக மூடி, திறக்க முடியாது. அதற்கு கிராபைட் திரவம் இடுக்குகளில் போட்டு, கொஞ்ச நேரம் இழுத்து, மூடினால் இலகுவாகிவிடும்.

சுவர் பரப்பில் கோடுகள், சிராய்ப்புகள் நீங்க:
மொசைக், பெயிண்டிங் சுவர், வினையல்வால்பேப்பர் இவற்றில் கோடுகள் சிராய்ப்புகள் ஏற்பட்டால் சில்வர் பாலிஷ், சோடா கொண்டு மெதுவாக துடைத்தால் போதும். விடி40 கொண்டு சுவர்பரப்பில் ஸ்பிரே செய்து துøக்கலாம். டிஷ்சோப்பு கொண்டும் துடைக்கலாம்.

ஆடைகளில் சூயிங்கம் ஒட்டியிருந்தால்:

நெயில் பாலிஷ் கொண்டு கறைபட்ட இடத்தில் தடவி பின்னர் வாஷிங் செய்யலாம். ஷாம்பு கொண்டும் கறைபட்ட இடத்தில் தடவி வாஷிங்செய்லாம். பொதுவாக வாஷிங் மிஷினில் ஒரு ஷாம்பு பாட்டில் ஊற்றி, அதில் ஆடைகளை போட்டு வாஷிங் செய்தாலும் சகல கறைகளும் நீங்கிவிடும்.

பேனா இங்க் கறை நீங்க:

பேனா இங்க் , பால்பெயின்ட் இங்க் கறை ஏற்பட்டால் கொஞ்சம் ஆல்கஹால் தடவினால் அந்த கறை நீங்கிடும்.

எண்ணை கறை நீங்க:
மென்மையான ஸ்பான்ச் கொண்டு அதில் தண்ணீர் நனைத்து துடைக்கலாம். ஷாம்பு மற்றும் கிரீஸ் ஆயில் இவற்றைத் தடவி, உலர்ந்தப் பிறகு தண்ணீர் தெளித்து துடைத்தால் எண்ணை கறை நீங்கும்.

குழம்பு, உணவுப்பொருள் கறை நீங்க:

கொஞ்சம் கிளிசரின், கொஞ்சம் சோப் இவை கொண்டு தண்ணீரால் துடைத்தால் இவ்வகை கறைகள் நீங்கிவிடும்.

ரத்தக்கறை நீங்க:

உடையில் ரத்தக்கறை படிந்து விட்டால் உடனே நீக்கிவிட வேண்டும். ரத்த கறை படிந்த இடத்தில் ஷாம்பு தடவி, தண்ணீரில் அலசவேண்டும்.

காயத்தில் ரத்தக்சிவை நிறுத்த:
குளிர்ந்த நீரை ரத்தக்கசிவு இடத்தில் ஊற்றவேண்டும். ஈரத்துணியினால் ரத்தக்கசிவு இடத்தில் அழுத்தி பிடித்தால் ரத்தக்கசிவு நின்று விடும்.

சுவர் சிராய்ப்பு நீங்க:
ஒரு காலன் தண்ணீரில் 3 டிஸ்பூன் டிரைசோடியம் பாஸ்பேட் கலந்து சிராய்ப்புகள் உள்ள இடத்தில் தெளித்து, பின்னர் துடைத்தால் அவை நீங்கி விடும்.

பாத்திரங்களில் கறை நீங்க:

வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டும், உப்பு கொண்டும் செம்பு, பித்தளை பாத்திரங்களை கழுவினால் கறைகள் நீங்கும். பேக்கிங் சோடா கொண்டும் கழுவலாம்.



தேவா
********************************************

36.கோடையும், நோய்களும்!

கோடையும், உஷ்ணமும் பிரிக்க முடியாதவை. கோடையில் உடல் அதிக வெப்பத்தை பெறுகிறது. அதனால் உடல் உஷ்ணத்தில் சமச்சீரற்ற தன்மை உருவாகிறது. இந்த தாக்கத்தை இளம் பருவத்தினரும், நடுத்தர வயதினரும் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால், குழந்தைகள் மற்றும் முதியோர்களால் இந்த உஷ்ண ஏற்றத்தை தாக்குப் பிடிக்க முடியாது.

கோடை தாக்குதலால் வரும் நோய்கள்:
அதிக உஷ்ணத்தால் எதிர்ப்பு திறன் குறைந்து, ஹீட் கிராம்ப்ஸ் (தோலில் வெடிப்பு ஏற்படுதல்), ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன், சன் ஸ்ட்ரோக் மற்றும் வயிற்றுவலி, தலைவலி, கழிச்சல் உள்ளிட்ட சில நோய்கள் ஏற்படும்.
இதில் ஹீட் கிராம்ப்ஸினால் அதிக பாதிப்பு ஏற்படாது. ஹீட் எக்ஸ்டாஸ்ட்ஷன் என்பது உடலில் இருக்கும் உப்புத்தன்மை குறையும் போது ஏற்படும். கோடையில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வெளியாகிக்கொண்டே இருக்கும். அதில் உப்பும் சேர்ந்து வெளியேறும். வியர்வையோடு வெளியாகும் உப்புபற்றாக்குறையை சமன் செய்ய வேண்டும். அதற்கு வெறுந் தண்ணீரை மட்டும் குடிக்காமல் எலுமிச்சை சாறில் உப்பு கலந்து, மோரில் உப்புகலந்து பருகினால் நல்லது.
மூன்றாவது வகையான சன்ஸ்ட்ரோக் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். நாடித்துடிப்பு குறையும். 107 டிகிரி வரை காய்ச்சல் ஏற்படும். நினைவு இழப்பு ஏற்பட்டு, கோமா நிலைக்குச் செல்லவும் கூடும். இந்தபாதிப்பு உள்ளானவர்கள் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிர் இழப்புகூட ஏற்பட வாய்ப்புண்டு.
கோடைகாலத்தில் சுகாதாரமான உணவுப்பொருட்களை சாப்பிடவேண்டும். இல்லை எனில் அதில் உள்ள தொற்று கிருமிகளால் பல நோய்கள் வந்துவிடும். குறிப்பாக சம்மர் டயாரியா எனப்படும் வயிற்றுப் போக்கு வரும். இது அமீபியாசிஸ் கிருமியால் ஏற்படும்.
சிறுவர்கள் கோடையில் நீர்நிலைகளில் விளையாட ஆர்வம் கொண்டிருப்பார்கள். நீர்நிலைகளில் மாசு, தொற்று இருப்பின் அது சிறுவர்களின் காது, மூக்கு , கண்களில் தொற்றி, எரிச்சல், அரிப்பு மற்றும் சரும நோயை ஏற்படுத்தும்.
கோடை வெயிலில் அல்ட்ரா வயலட் கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தியர்களின் சருமம் பெரும்பாலும் கறுப்புநிறத்தில் இருப்பதால், இந்தக் கதிர்களின் தாக்குதலில் இருந்து பெருமளவு தப்பிக்கமுடிகிறது. உஷ்ணம் நிறைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. செயற்கை ஆடைகளை தவிர்க்க வேண்டும். அடர்த்தியான நிறத்திலான ஆடைகளை அணிந்தால் அவை உஷ்ணத்தை உடலில் ஈர்க்கும். ஆதலால், இளநிற ஆடைகளை அணிவது நல்லது. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடர்நிற ஆடை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
சூடுகட்டி ஏற்பட்டால் அதனாலும் காய்ச்சல் வரும். கோடைக்காலத்தில் பெரும்பாலானவர்கள் சிறுநீரகக்கல் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் உஷ்ணமாகும்போது வியர்வை காரணமாக உடலில் இருக்கும் தண்ணீர் அளவு குறையும். இதனால் உடலில் தண்ணீர்பற்றாக்குறை ஏற்பட்டு சிறுநீர் வெளியாவதில் பாதிப்பு ஏற்படும். இதன்காரணமாக சில வேதிவினையால் சிறுநீரகத்தில் கல்கட்டி உருவாக்கூடும். தண்ணீர், எலுமிச்சை, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் பருகி வந்தால் தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டுவந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். கல் தோன்றாது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்தால் காய்ச்சலால் வெளிபடும் உஷ்ணம் மட்டுபடும்.

கோடை பாதிப்பை தவிர்க்க:
* அடிக்கடி தண்ணீர் பருகுங்கள். அது புத்துணர்வைத்தரும்.
* மாலை அல்லது இரவு குளிர்ந்த நீரில் குளியுங்கள். சருமத்தில் இருக்கும் உஷ்ணம் குறையும்.
*வெயிலில் சுற்றுபவராக இருந்தால் ஜூஸ், மோர், தண்ணீரை அடிக்கடி பருகுங்கள். சோர்வு நீங்கும்.
* இளநீர் அருந்துங்கள். சிறுநீர் இளகுவாக பிரியும்.
*எளிதில் செரிமாணம் ஆகக்கூடிய உணவு வகைகளை சாப்பிடுங்கள்.
* குளர்கண்ணாடி, தொப்பி அணிந்து கொள்ளுங்கள்.
* தண்ணீர் சத்துள்ள பழவகைகளை சாப்பிடுங்கள்.
தேவராஜன்
*************************************************


37 . கோடையை சமாளிக்க
கிச்சன் பார்மஸி!

வந்து விட்டது கோடை! தாக்குது அனல்! கொதிக்குது உடம்பு... கொட்டுது வியர்வை... தலைவலி, வயிற்று வலி, வாய்புண், தோல் வெடிப்புகள், வேர்க்குரு என உடல் ரோதனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன! இதை எப்படி சமாளிப்பது?
கோடையை சமாளிக்க கிச்சன் பார்மஸியே போதும். நமது உணவுப்பழக்க வழக்கங்கள் சரியாக, சமச்சீராக இருந்தால் போதும். அதற்கு கோடை காலத்தில் எதை உண்ணலாம், எதைத் தவிர்க்கலாம் என்பதை அறிந்து கொள்வது மிக அவசியம்.
கோடையில் உடலின் தண்ணீர் அளவை சரியான அளவில் பார்த்துக்கொள்வது மிக அவசியம். அதே சமயம் தண்ணீர்
மட்டுமே கோடை இம்சைகளை துரத்திவிடாது. காய்கறிகளில் ஏராளமான நீர்ச்சத்து உண்டு. முடிந்த அளவு காய்கறிகளை பச்சையாகவோ, கொஞ்சமாய் வேக வைத்தோ உண்பது நல்லது. அதிகமாய் வேக வைத்து அல்லது பொரித்து உண்பதில் பலன் கிடைக்காது.
தாகத்துக்கு குளிர்பானங்கள், எனர்ஜி டிரிங்சை தவிர்ப்பது நல்லது. பாட்டில்களில் கிடைக்கும் பழச்சாறுகள் உடலில் தேவையற்ற கலோரிகளைச் சேர்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. தெருவில் விற்கும் குச்சி ஐஸ்களை உண்ணக்கூடாது.
நன்றாக பொரித்த உணவுவகைகளை விலக்குங்கள். சிப்ஸ், ப்ரெஞ்ச் ப்ரை, சிக்கன் பிரை வகைகளை ஒதுக்க வேண்டும். மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. ஐஸ் காபி, ஐஸ் டீ அருந்தக்கூடாது. அதற்கு பதில் இளநீர், மோர், எலுமிச்சை சாறு பானங்கள் நல்லது.
உணவு நேரம் ஒழுங்கு முறையில் இருக்க வேண்டும். டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிக புரோட்டீன் மற்றும் குறைந்த ஹார்போஹைட்ரேட் உள்ள உணவு வகைகளை கோடையில் சாப்பிட வேண்டும். கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளையும், எண்ணை பலகாரங்களையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உருளை, தக்காளி, வெங்காயம், கடலை வகை, கீரைவகைகள், மிளகு, இஞ்சி,மீன் , பால் இவை உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
குளிர்ந்த நீர், பூண்டு, பீட்ரூட், மிளகு, திராட்சை, பைன் ஆப்பிள், மாம்பழம் இவைகளை கோடையில் தள்ளியே வைக்கவும்.
கோடையை சமாளிக்க ஒரு எளிய வரம் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி. வெள்ளரி தாகத்தை தணிப்பதுடன்
பல நோய்களுக்கும் பயன்படக்கூடியது. இதில் 93 சதவீதம் நீர்சத்து உள்ளதால் அப்படியே பச்சையாக உண்பது தான்
முழுமையான பலனைத்தரும்.விரும்பினால் மிளகுப்பொடி சேர்த்துக்கொள்ளலாம்.
வியர்வை மூலம் உடலில்இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்யக்கூடியது வெள்ளரிப்பிஞ்சு . வெயிலில் அதிகம் அலைவதால் உடலில் குறைந்து போன நிறத்தை மீண்டும் பெற வெள்ளரி சாறை சருமத்தின் மீது பூசலாம்.
வெள்ளரியில் சோடியம் அதிக அளவில் உள்ளது. கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், குளோரைட், இரும்புச்சத்து போன்றவையும் உண்டு. விட்டமின் ஏபி,சி உள்ளன.
கோடைக்கு குளிர்ச்சித்தருவது வெட்டி வேர். இது புல் வகையைச் சேர்ந்தது. வெட்டி வேர் மிகுந்த மணம் கொண்டது. இது
வாசனைப் பொருள் தயாரிக்க பயன்படுகிறது. வெட்டி வேருடன் சந்தனக் கட்டையை சேர்த்து நீரிட்டு அந்தண்ணீரை அருந்துவது உடல் வெப்பத்தை தணிக்கும். மேலும், வியர்க்குரு, வேனல் கட்டிகளை குணப்படுத்தும். வெட்டி வேர் விசிறியை நீரில் நனைத்து விசிறிக்கொள்ள குளிர்ச்சியாக இருக்கும்.
கோடை காலத்திற்கு ஏற்றது இளநீர், தேங்காய் நல்லது. இளநீரில் விட்டமின் பி,சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம்,
மக்னீசியம், இரும்பு, காப்பர், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற பல தாது உப்புகள் உள்ளன.
கோடைக்காலத்தில் ஆரஞ்சு, சாத்துக்குடி பழங்கள் குறைந்த விலையில் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறுடன் வெந்நீர் கலந்து குடிக்கலாம். இரவு படுக்கப் போகும்முன் ஒன்று இரண்டு பழம் சாப்பிட்டு படுக்கலாம். இதனால் மலைச்சிக்கல் தீரும். ஆஸ்துமா, நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்சலுக்கு நல்ல மருந்து. செரிமானத்தை அதிகமாக்கி பசியைத்துõண்டும். குடல்பாதையில் தொற்றை தடுக்கும்.
குளிர்ச்சியான பழம் சாத்துக்குடி. தாகத்தை தணிக்கும்; வீரியத்தைக்கூட்டும். வயிற்று பொறுமல், வாயு, இருமல், வாந்தி, வறட்சி, செரிமானமின்மை போன்ற உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் சாத்துக்குடி. நோய் எதிர்ப்பு ஆற்றலும் சாத்துக்குடிக்கு உள்ளது என்பதால் கோடையில் தினமும் ஒரு சாத்துக்குடியாவது சாப்பிடுவது நல்லது.

தேவராஜன்
**********************************************



38. அம்மா போதித்த ஞானம்!

பாரதி பாஸ்கர்

"எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எவர் மனதையும் புண்படுத்தாமல் பேசும் கலையை எனக்கு கற்றுத் தந்தவர் என் அன்பு அம்மா கற்பகம் கிருஷ்ணன். அதோடு இன்று மேடைபேச்சாளர் என்ற தகுதியை எனக்கு தந்தவரும் அவர்தான்' என்று பூரிக்கிறார் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர்.
அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி எதற்கு என்றிருந்த காலக்கட்டத்திலேயே பெற்றோருடன் போராடி, மாநில அளவில் இயற்பியலில் முதுகலைப்பட்டத்தில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கம் பெற்றவர். பின்னர் மத்தியரசு பணியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர் என் அம்மா.
நான் 8ம் வகுப்பு படிக்கும் போதே பேச்சுப்போட்டிக்கு எழுதிக்கொடுத்து, எப்படி பேச வேண்டும் என்று பயிற்சி அளித்து என்னை தயார்படுத்தியது என் அம்மாதான். நான் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று தான் சொல்வார்கள். ஒருபோதும் பரிசு பெறவேண்டும் கட்டாயப்படுத்திதே இல்லை. பரிசு பெற்றாலும், பெறாவிட்டாலும் அவர்களுடைய அணுகுமுறை ஒரேமாதிரியாகத் தான் இருக்கும்.
என் அம்மாவுக்கு மூன்று பெண்குழந்தைகள். எங்கள் மூவரையுமே இயல்பாக, யதர்த்தமாக, சுதந்திரமாக வளர்த்தார்கள். அந்த சுதந்திரம் தான் என்னை இன்று ஒரு நாடறியும் பெண்ணாக பிரபலபடுத்தியுள்ளது.
இப்போது மட்டுமல்ல; எப்போதும் அம்மா வலியுறுத்திவரும் வார்த்தை வரம் எதுவெனில், வார்த்தை வன்முறைகூடாது என்பதுதான். ஏகே47 துப்பாக்கிக் கொண்டு சுடுவதுதான் வன்முறை என்பதில்லை. அதில் ஏற்படும் காயத்தை கூட மருத்துவத்தில் குணமாக்கிவிடலாம். ஆனால், வார்த்தைகளில் பிரயோகிக்கப்படும் ஆபாசம், ஏளனம், சிடுசிடுப்பு, கர்வம், அதிகாரம் இவைகளினால் பிறர் மனம் புண்படுமானால் அதுவும் வன்முறைதான் என்று எனக்கு போதித்தவர். எதையும் திரும்பி பெறமுடியும் ஆனால், கொட்டி தீர்த்த வார்த்தைகளை திரும்ப பெறவே இயலாது என்று கூறுவார்.
வள்ளுவன் குறள் நெறியான "இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்பக் காய்கவர்ந்தற்று' இது அம்மா எனக்கு போதித்த ஞானம்!
இன்றும் என் அம்மாவுக்கு நான் குழந்தைதான்! எனக்கு குழந்தைகள் வந்தப்பின்னும் இப்போதும் தினமும் போனில் "சாப்பிட்டாயா? உடம்பு சுகமா?' என்று வாஞ்சை கலந்த பரிவுடன் விசாரிக்கும் தாய் பாசத்துக்கு ஏது ஈடு?
எத்தனை இருந்து என்ன? தாய் வார்த்தை கேட்கும் சுகம், நிம்மதி எதில் உண்டு?
என் அம்மாவுக்கு பிரிதிபலன் செய்ய வேண்டும் என்றால், அவர் பழையபடி எழுந்து நடமாட வேண்டும் என்பதான பிரார்த்தனையைத் தவிர வேறொன்றும் இல்லை!
தேவராஜன்
************************************


39. என் எழுத்துகளில் வாழும் அம்மா!
ராஜேஷ்குமார்

""இன்று இத்தனை புகழும், பாராட்டும் பெற்ற எழுத்தாளனாக நான் இருக்க காரணம் என் அம்மாவின் அன்பும், பரிவும், அவர் தந்த நம்பிக்கையும் தான் முதல் மூலதனம். ஒவ்வொரு நாளும் நான் பேனா எடுத்து எழுதுவதற்கு முன், என் தாயின் படத்தை வணங்காமல் இருந்ததே இல்லை'' என்று அம்மா பற்றிய ஞாபகங்களை நினைவுகூர்ந்து நெகிழ்கிறார், எழுத்தாளர் ராஜேஷ் குமார்.
அம்மா என்றால் தன் பிள்ளைகளுக்கு ஆமை முயல் கதை, நரி கதை, நிலவில்பாட்டி வடை சுட்டக் கதைத்தான் சொல்வார்கள். ஆனால், என் அம்மா எனக்குச் சொன்னதெல்லாம் திகில், த்ரில் கதைகள்தான். ஒரு விஷயம் எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. அப்போது எனக்கு 10 வயசு இருக்கும். கோவையில் இருந்து மருத மலைக்கு மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். மருத மலை உச்சியில் தனியாக மூன்று கல் இருந்தது. அந்த கல்லைக்காட்டி, "அம்மா, அந்த மூணு கல்லு மட்டும் தனியாக இருக்கே. ஏன்?' என்று கேட்டேன்.
அதற்கு, அம்மா சொன்ன கதை இது. "" ஒரு நாள் நடுநிசி. கும்மிருட்டு. மருதமலை முருகன் கோயில் நிசப்தத்தில் இருந்தது. பலே கில்லாடியான மூன்று திருடர்கள் கோயிலில் புகுந்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணம், காசை எல்லாம் எடுத்து மூட்டைக்கட்டி மலைமேலே ஏறும் போது, முருகன் அந்த மூணு திருடர்களையும் கல்லாகமாற சபித்தார். அப்போதிலிருந்து அந்த திருடர்கள் மூணுபேரும் மலையில் கல்லாகவே இருக்காங்க'' என்று ஒரு குட்டி க்ரைம் கதையை சொன்னார்.
இப்படி என் அம்மா நிறைய எட்டுக்கட்டி கதைகள் சொல்வார். அதையெல்லாம் கேட்டு கேட்டுதான் நான் க்ரைம் எழுத்தாளனாக உருவாகி இருக்கேன்.
1968ல் பட்டம் பெற்றும் வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தேன். அப்போது பொழுதுபோக்க நிறைய கதைகளை எழுதி எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். ஆனா, எதுவுமே பிரசுரமானதில்லை. அக்கம் பக்கம் இருக்கும் பெண்கள் என் அம்மாவிடம்,"பட்டம் படிச்சவன் இப்படி வேலை வெட்டிக்கு போகாம கதை எழுதுகிட்டு இருந்தா, அவன் எதிர்காலம் என்னாகும்? நீ தான் செல்லம் கொடுத்து உன் பிள்ளையை கெடுக்கற' என்று காதில் கிசுகிசுத்தார்கள். இதைக்கேட்டதும் அம்மா ஆவேசமாய், "என் பிள்ளை ராஜாடி. அவனை பற்றி பேச யாருக்கும் அறுகதை கிடையாது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் அவன் பெரிய ஆளாக வருவான். நான் பார்க்க முடியாவிட்டாலும், நீங்க பார்ப்பீங்க' என்று கோபத்தில் பொரிந்தார்.
அம்மா அன்று சொன்னது அப்படியே எனக்கு பலித்தது. நான் பெரிய எழுத்தாளனதையும் பார்த்து சந்தோஷப்பட்டாங்க. என் எழுத்து ஒவ்வொன்றிலும் என் அம்மா இருக்காங்க'' என்கிறார் ஆத்மார்த்தமாய் ராஜேஷ்குமார்.
தேவராஜன்
************************************


40. சமர்ப்பணம்

காசு பெரிதாகிப் போன கலியுகத்தில் பலருக்கும் வயிறு பெருத்து மனது சுருங்கிப் போய்விட்டது. கருவறையே கொடுத்த அம்மாவுக்கு வீட்டில் சிறு அறை கொடுப்பது கூட பலருக்குக் கஷ்டமாகத் தெரிகிறது. குடும்பம் என்பதே, தான், தன் பெண்டாட்டி பிள்ளைகள் என்கிற குறுகிய வட்டத்தில் முடிவடைந்து போகிறது. நினைவு தெரியாத காலம் முதல் தனக்கு என்ன என்ன காரியங்கள் அம்மா செய்திருப்பாள் என்பதும், என்ன என்ன கஷ்டங்கள் பட்டிருப்பாள் என்பதும் பலருக்கும் மறந்து போய் விடுகிறது.
நான் ஆறாவது படித்த சமயத்தில் கடுமையான டைபாய்டு ஜுரம்... 102... 103 என்று டெம்ப்ரேச்சர். முப்பது நாளைக்கு மேல் படுக்கை... பாத்ரூம் போய்வரக் கூட பலம் இல்லை. அப்படி பலமின்றி ஒருநாள் நான் மயங்கிச் சரியும் தருணத்தில் ""யம்மா... என் புள்ளை'' என்று குலை நடுங்க அலறிய என் அம்மாவின் சத்தம் எமனுக்கு எதிரான ஒரு போர் முரசாக இன்னும் என் காதுகளில் கேட்கிறது. இரவு 2 மணி, 3 மணி என்று எப்போ நான் கண் விழித்தாலும் ஹார்லிக்ஸ் தரவா, பார்லி குடிக்கிறாயா என்று கேட்டபபடி அம்மா விழித்திருப்பாள். ஜுர வேகத்தில் நான் அம்மா என்று முனகும் போதெல்லாம் "என்னப்பா' என்று பதில் கொடுக்கும் அம்மாவின் குரல் M.கு. சுப்புலட்சுமி சங்கீதம் மாதிரி எனக்குக் கேட்கும்.

அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். அப்பாதான் கதைகளைப் படி எடுத்துக் கொடுக்கச் சொல்வார். அலுத்துக் கொள்ளாமல் ஆசை ஆசையாக அதைச் செய்வார் கொஞ்ச நாளில் கதைகளைப் படி எடுக்கும் பணியில் கிடைத்த, தன் அனுபவத்தைப் பயன்படுத்தி கதை பின்னும் கலையையும் கற்று, அந்தக் காலத்தில் புகழ் பெற்ற எழுத்தாளராக தன்னை உயர்த்திக் கொண்டவர் என் அம்மா.
பகல் எல்லாம் சமையல், வீட்டு வேலை என்று பம்பரமாகச் சுழன்று விட்டு இரவு பத்து மணிக்கு மேல் கதை எழுத உட்காரும் அசுரத்தனம் அம்மாவின் பலம்.
மெத்தப் படித்த பெரிய வீட்டுப் பெண்மணி போலவே பக்குவமாகப் பண்பாடாகப் பேசும் அம்மா எங்களுக்காக யாரிடமாவது சண்டை போட நேர்ந்தால் அப்போது அவளுக்குள் பதுங்கியிருந்த பாண்டி நாட்டு தமிழச்சியின் முழு வெறியும் வெளிப்பட்டு விடும். பள்ளியில் நாடகத்தில் எனக்குக் கிடைத்த ஒரு பரிசை ஏமாற்றி பறித்துக் கொண்டு போன என் நெருங்கிய நண்பர் வீட்டுக்கு, மதுரை தெருக்களில் நடந்த கண்ணகியை விஞ்சும்படி படையெடுத்துப் போய் சண்டை போட்ட ஆவேச அம்மாவின் போர்க்குணம், தாய்மை வெறி மறக்க முடியாதது.
அம்மாவுக்குக் கடலை மிட்டாய் என்றால் கொள்ளை ஆசை. ஆனால் தனக்காக ஒரு தண்டச் செலவா என்று தன் ஆசையை அடக்கிக் கொள்வாள். ஆனால் கதை எழுத உட்கார்ந்தால் அவள் கற்பனைக் கார் பறக்க கடலை மிட்டாய்தான் பிரிமீயம் பெட்ரோல்ம்தான் .
அப்பாவிடம் நல்ல பெயர் எடுக்க அம்மாவை அடிக்கடி அப்பாவிடம் நான் காட்டிக் கொடுத்துவிடுவேன். அதற்காக என் மீது கோபப்பட்டாலும், அதே அப்பாவுக்குத் தெரியாமல் என் சின்னச் சின்ன ஆசைகளை எப்போதும் நிறைவேற்றிய அம்மாவின் அன்பு எனக்கு ஓர் ஆச்சரிய அனுபவம்தான்.
சிக்கனம், கஞ்சத்தனம் இவையெல்லாம் அவளுக்குத் தெரியாதவை. தன் பிள்ளைகளைப் போலவே, பிள்ளைகளின் நண்பர்கட்கும் பண்டம், பலகாரம், சாப்பாடு, பரிமாறும் பாச வெள்ளம் அவள். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்த பிற்பாடு அவளுக்கு tச்ண்tஞு பார்க்கக்கூட எதுவுமே மிஞ்சாது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவள் கவலைப்பட்டதாக எனக்கு நினைவே இல்லை.

சாப்பிடும் போதெல்லாம் சாதாரணமான பருப்பும், நெய்யும் போட்டுப் பிசைந்து புளிக்குழம்பு தொட்டு பெரிய, பெரிய உருண்டையாக கையில் உருட்டிப் போடுவாள் அம்மா. பிசைந்து சாப்பிட்டால் அந்த tச்ண்tஞு வராது. நிஜமாகவே அந்த tச்ண்tஞு இதுவரை எந்த உணவிலும் எனக்குக் கிடைத்ததே இல்லை.
வீடுன்னா ஒவ்வொரு புள்ளை ஒவ்வொன்னு கேக்கததான் செய்யும்... வீடுகளில் நாயும், மாடும்தான் போட்டதைத் தின்னும்... பிள்ளைகள் கேட்டதைத் தின்னும்... இது என் அம்மா கொள்கை.
தீபாவளியன்று இரண்டு மணிக்கே எழுந்து எண்ணெய் சட்டியில் பலகாரத்துடன் தானும் வெந்தபடி பஜ்ஜி, போண்டா, உளுந்தவடை, மசால்வடை என்று சகலமும் செய்வாள் அம்மா. ஏதாவது ஒண்ணு இரண்டு போதாதா என்று எண்ணெயைவிடச் சூடாகக் கொதிப்பார் அப்பா. ""அதெப்படி ஒருத்தனுக்குப் பிடிச்சது மத்தவனுக்குப் பிடிக்காது... ஆளாளுக்குப் புடிச்சதைச் சாப்பிடத் தானே குடும்பம் நடத்தறோம்'' என்றபடி ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று என்று பத்து, பன்னிரண்டு பலகாரம் செய்யும் அன்னபூரணி அவள். போதாக்குறைக்கு எழுத்தாளர் அகிலன் வீட்டுக்கும், பிரேமா பிரசுரம் அரு. ராமநாதனுக்கும் அம்மாவின் ஸ்பெஷலான இஞ்சிப் பச்சடி வேறு தயாராகும்.
என் திருமணத்திற்கு முன்பு, இரவு சொற்பொழிவுகள் முடித்து எவ்வளவு லேட்டாக வந்தாலும் கொஞ்சம்கூட அலுத்துக் கொள்ளாமல், தோசை சுட்டு போடும் அந்த அம்மா. நீண்ட நாள் வெளியூர் பயணம் முடித்துத் திரும்பினால், "ஏம்ப்பா இப்பிடி இளைச்சிட்டியே' என்று வருத்தப்படும் அம்மா... அப்பாவுக்கு வேறு tச்ண்tஞு, எனக்கு வேறு tச்ண்tஞு என்று ஒரே குழம்பை இரண்டு தினுசாக வைத்திருக்கும் அம்மா ஓர் அற்புத அதிசயம்.உழைக்க அஞ்சாத உற்சாகம் அவள் இயல்பு.
ஒரு மறக்க முடியாத சம்பவம். அடிக்கடி நான் வெளியூர்ப் பயணம் பல நாட்கள் தொடர்ந்து செய்வதால் என் வீட்டு வரவு, செலவு முழுவதும் என் மனைவி நிர்வாகத்தில் இருக்கும். அம்மாவுக்கும் ஏதும் பணம் வேண்டும் என்றாலும், என் மனைவியிடம்தான் கேட்க வேண்டி இருக்கும். இந்திய மாமியார்க்கே உரிய மருமகள் பகை இல்லாவிடினும் அளவுக்கு மீறி என் மனைவிக்கு உரிமை கொடுத்திருப்பதாகக் கோபம் வெடிக்கும். தன் அபிப்பிராயத்திற்கு மாறாக மருமகள் செய்யும் சகல செலவுகளும் என் சம்பாத்யத்தை அழித்தொழிக்கும் ஆடம்பரமாக அம்மா நினைத்து போராடிக் கொண்டே இருந்தாள். அமைதியாக நான் ஒரு நாள் அவளுக்கு விளக்கினேன்.
""அம்மா நீ ஜெயிப்பது முக்கியமா? உன் கருத்து ஜெயிப்பது முக்கியமா?'' என்றேன். சராசரி கோமதிக்குள் இருந்த சமூகப் பிரக்ஞை உடைய எழுத்தாளர் கோமதி விழித்துக் கொண்டாள். ""என் கருத்து ஜெயிப்பதுதான் முக்கியம்'' என்றாள். ""அப்பா உனக்குப் பொருளாதார சுதந்திரம் தரவே இல்லை... ஓர் அடிமை மாதிரி கொடுத்த பணத்திற்குள் குடும்பம் நடத்தச் சொன்னது குறித்து நீ எவ்வளவு குமுறியிருக்கிறாய். மொத்த வரவு, செலவை உன்னிடம் தரவில்லை என்று நீ எத்தனை முறை சண்டை போட்டு அப்பாவிடம் தோற்றுப் போய் இருக்கிறாய்... உன் கருத்தை ஏற்றுக் கொண்ட நான் மனைவியிடம் மொத்த வரவு செலவை ஒப்படைத்திருப்பதை மட்டும் உன்னால் ஏன் ஏற்கமுடியவில்லை? உன் கருத்து ஜெயித்திருப்பதை நீ உணரவேண்டாமா?'' என்றதும் மகிழ்ச்சியோடு அதை ஒப்புக் கொண்டாள் அம்மா. உணர்ச்சிவயப்படும் சராசரி சண்டைக்காரி கோமதியும் அவள்... அறிவுபூர்வமாக விளக்கிச் சொன்னால் தன் தோல்வியை விளங்கிக் கொள்ளும் அறிவு ஜீவியும் அவள்.
எனக்கு அப்பா ஓர் அம்மா மாதிரி... பிள்ளைகளைப் பிரிய பயப்படுவார். அம்மா ஓர் அப்பா மாதிரி... துணிச்சலாக கீடிண்டு எடுப்பாள். அம்மாவுக்கு அப்படி ஒரு நெஞ்சுரம், மனத்துணிவு. அந்தக் காலத்துப் பெண்களுக்குரிய ஜாதீயம் கிடையாது. புதுமை விரும்பி. போராட்ட குணம் உள்ளவள். தான் நினைப்பதைப் பளிச்சென்று எந்த இடத்திலும் பொதுமேடை என்றாலும்கூட தெளிவாகச் சொல்ல அவளால் முடியும்.
சின்ன வயதில் அம்மா சாமி கும்பிடுவதே ரொம்ப அழகாக இருக்கும். நிறைய விரதங்கள் இருப்பாள். பட்டினி அவளுக்கு ஒரு பிரச்சனை அல்ல. நாதவிந்து கலாதீ நமோநம என்ற திருப்புகழை வெள்ளி மணி மாதிரி அவள் பாடிக் கேட்ட காலங்களை என் காதுகளில் கைது பண்ணி வைத்திருக்கிறேன். கோவில் கோவிலாக சாமி விஷயங்களில் காசு விரயம் செய்வது அவள் பலவீனம். அதனால்தானோ என்னவோ கோவில் கோவிலாகப் போய் பேசி அவள் செலவழித்த காசை நான் வசூல் செய்திருக்கிறேன்.
எப்போது நான் வெளியூர் அல்லது வெளிநாடு போகும் போதும் தன் கைகளால் விபூதிபூசி அனுப்புவாள். இப்போதும் (83 வயது) என் நெற்றி எங்கிருக்கிறது என்று குத்துமதிப்பாகத் தன் நடுங்கும் கையாலும், நடுங்காத மனசாலும் விபூதி பூசுவது அவள் பழக்கம். அப்படி அனுப்பினால் அவளே எனக்குத் துணையாகக் கூட வருவது மாதிரி ஒரு நினைப்பு அவளுக்கு. என்ன அர்த்தமோ தெரியாது ஓர் எலுமிச்சம்பழம் கையில் கொடுத்து அனுப்புவாள். இப்போது என் மனைவி, மாமியார் வழியில் எலுமிச்சை கொடுக்கும் மகராசியாக இருக்கிறாள். மற்ற வீடு மாதிரி என் வீட்டில் மாமியார் மருமகள் மனக் கசப்பு கிடையாது. காரணம் என்னைவிட என் அம்மாவுக்கு வேண்டியவள் என் மனைவி. அவளது சகல தேவைகளையும் கவனித்துக் கொள்வதால் நான் என் மனைவியிடம் கடிந்து கொண்டால் கூட மருமகள் சார்பாகத்தான் என்னிடம் பேசுவாள் அம்மா.
முதுமையால் இப்போது அம்மாவுக்கு முதுகு வளைந்துவிட்டது. என்றாலும் இப்போதும் வளையாத முரட்டு மனம் அம்மாவுக்கு. இன்னும் தான் போடுகிற பிளான்படியே எல்லோரும் நடக்க வேண்டும் எதிர்பார்ப்பாள் அவள். ஆனால் தான் நினைத்தபடி நிற்கக் கூட முடியாமல் அப்படியும் இப்படியும் கால் தள்ளாடுகிற முதுமையில், தன் இஷ்டப்படி பிறர் எப்படி நடப்பார்கள் என்பதை இப்போது யோசிக்கத் தொடங்கி இருக்கிறாள். அதனால் நடக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அமைதியாகி விடுகிறாள். லேசலான மரணபயம் அவளுக்கு வந்துவிட்டது. ஆனால் பயப்பட வேண்டியவன் எமனே ஒழிய அம்மா இல்லை. தனியாக இருக்க பயப்படுகிறாள். தன் பெட்ரூம் கதவு திறந்தே இருக்க வேண்டும் என்கிறாள். வீட்டில் நடப்பதைப் பார்த்தபடி, சத்தம் கேட்டபடி இருக்கவே விரும்புகிறாள். சத்தமாக கூ.ங. வைத்துக் கொள்கிறாள்.
ஓர் ஏழை சமயச் சொற்பொழிவாளனாக நான் கழிந்து போகாதபடி ஒரு செல்வாக்கு மிக்க சிந்தனையாளனாக உயர்ந்து வாழ்வு வாழ்வதற்கு அம்மா ஓர் அழுத்தமான காரணம். கார், வீடு என்று அப்பா சேர்க்க முடியாமல் போனவற்றை நான் இன்று சேர்த்து ஜெயித்தமைக்கு அம்மாதான் அஸ்திவாரம்.

தேவராஜன்
****************************************

41. "ஒரு லிட்டர் மினரல் வாட்டர் விலை 10 காசு'
சாத்தியம் என்கிறார், இளம் விஞ்ஞானி விக்னேஷ்வரி

"சுத்தமான, ஒருலிட்டர் மினரல் வாட்டரை 10 காசுக்கு தரமுடியும். நகம் அளவு சிப் மூலம் ஒரு 40 வாட் பல்புக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். கேன்சருக்கு எளிய முறையில் சிகிச்சையளிக்க முடியும். இந்த அதிசயங்கள் எல்லாம் நானோ டெக்னாலஜி மூலம் நடக்கும் என்பதை நிரூபிக்கவே என் ஆய்வுகள் தொடருகின்றன' என்று ஆச்சரியப்படுத்துகிறார், நானோ டெக்னாலஜியில் பி.எச்டி., பெற்ற முதல் இந்தியப் பெண்ணான கிருஷ்ணகிரியைச் சேர்ந்த டாக்டர் விக்னேஷ்வரி.
அவர் சொன்னதைக்கேட்டு, நாம் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கும் போது, "எதிர்கால இந்தியாவின் முன்னேற்றம் அது நானோ டெக்னாலஜி வழியில்தான் இருக்கும். பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தண்ணீர், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், அதற்கு நானோ டெக்னாலஜியின் தயவில்லாமல் சாத்தியப்படாது' என்று கூறி மேலும் ஆச்சரியப்படுத்தியவரிடம், அதென்ன நானோ டெக்னாலஜி, புரியும்படி சொல்லுங்களேன் என்றோம்.
""ஒருவரின் ஒரு தலைமுடியை குறுக்கு வசத்தில் ஒருலட்சம் துண்டுகளாக வெட்டினால், அதில் ஒரு பகுதியின் அளவு எவ்வளவு நுணுக்கமாக இருக்குமோ, அந்த அளவுக்கு நுணுக்கமானது நானோ டெக்னாலஜி. இது விஞ்ஞான அற்புதத்தின் மணிமகுடம் போன்றது.

எப்படி இந்த துறையில் ஆராய்ச்சி செய்ய ஆர்வம் வந்தது?

படிக்கும் போது இந்த துறை மீது ஆர்வம் ஏற்படவில்லை. இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் இயற்பியலில் பெற்று, அடுத்ததாக நெல்லை மனோமணியம் சுந்தரனார் கல்லுõரியில் எம்.பில். பட்டம் பெற்றேன். படித்து முடித்தவுடன் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு கல்லுõரியில் பேராசிரியராக வேலைப் பார்த்தேன். அதன் பிறகு சேலத்தில் உள்ள ஒரு அரசு கல்லுõரியில் சில மாதங்கள் வேலைப் பார்த்தேன். இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் "நானோ தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியாவின் பயணம்' என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் மனவளர்ச்சியில் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மூளையில் புரோகிராம் சிப் பொருத்தி, கம்யூட்டர் மூலம் கட்டளைகள் கொடுத்து அக்குழந்தையை செயல்படவைக்க முடிகிற மாதிரி கற்பனையாக அந்த கட்டுரை நீளும். இந்தக் கட்டுரையை படித்தப் பிறகுதான் எனக்கு நானோ டெக்னாலஜியில் ஆர்வம் ஏற்பட்டது. அதே சமயம் சென்னை பல்கலைக்கழகத்தில் நானோ டெக்னாலஜியை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்ய முழுநேர ஆராய்ச்சியாளர் தேவை என்ற விளம்பரம் வந்தது. உடனே கல்லுõரி பேராசிரியர் பணியை விட்டு ஆராய்ச்சி செய்ய தொடங்கினேன்.

நானோ டெக்னாலஜியில் உங்கள் பங்கு என்ன?

என் பங்கு இதுதான் என்று இப்பவே எப்படி முற்று புள்ளி வைக்க முடியும்? அது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பயணம். இதுவரையில் என் ஆய்வுகள் உலகம் சார்ந்த பார்வையில் உள்ளது. உதாரணமாக மூன்றாவது உலகப்போர் வந்தால் இந்தியா போன்ற நாடுகளில் அடிப்படை வசதிகளான தண்ணீர், மின்சாரம், மருத்துவம் பெருமளவு தேவைப்படும். அதற்கு நிலத்தடி தண்ணீரில் உள்ள மாசுகளை, கிருமிகளை அழிக்க நானோ டெக்னாலஜி பில்டர் மூலம் வடிக்கட்டி பயோ பாக்டீரியா, தேவையில்லாத மினரல்களை நீக்கிவிடலாம். இதன் மூலம் ஒரு லிட்டர் தண்ணீரை 10 காசுக்கு உற்பத்தி செய்யலாம். என்னுடைய இந்த ஆய்வுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. அடுத்ததாக மின்சாரம். அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் அதிக சூரிய வெளிச்சம் இல்லாத போதும் அவர்கள் சோலார் சிஸ்டம் மூலம் மின்சார பற்றாக்குறையிலிருந்து மீண்டுவிட்டார்கள். அப்படியிருக்கும் போது இந்தியாவில் ஆண்டுக்கு 10 மாதங்கள் வரை சூரிய உதயம் இருக்கும் போது நாம் ஏன் சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியவில்லை என்று ஆய்வு செய்தேன். முடிவில் பத்துக்கு பத்து சதுர அடி அளவில் வைக்கப்படும் சோலர் தகட்டின் மூலம் பெறும் வெப்ப ஆற்றலை நானோ டெக்னாலஜி மூலம் நகம் அளவில் சிப் செய்து அதே அளவு வெப்ப ஆற்றலை ஏற்படுத்தும் சிப் வடிவமைத்தேன். பெங்களூரில் உள்ள ஐஎஸ்ஆர்வோ நிறுவனத்திற்கு எரிசக்தியை சேமிக்கும் எடைக்குறைந்த பேட்டரியை வடிவமைத்திருக்கிறேன்.
சங்கரநேத்ராலயாவில் "டார்க்கெட் டிரக் டெலிவரி' என்ற புதிய முறை நானோ டெக்னாலஜி மருந்து கண்டுப்பிடித்துக்கொண்டிருக்கிறேன். இவ்வகை மருந்து மூலம் கேன்சரை மிக எளிதாக குணப்படுத்தமுடியும்.

அப்துல் கலாமுடன் உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்களேன்?

எனக்கு ரோல் மாடலே கலாம் தான்! 2006ம் ஆண்டு டெல்லியில் சிறந்த இளம் ஆராய்ச்சியாளர்களுடன் கலாம் சந்தித்து உரையாடிய நிகழ்சியில் நானும் இருந்தேன். என்னை வெகுவாக பாராட்டினார். "உனக்கு சமூகத்தில் எந்த பிரச்னை வந்தாலும், எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும் ஒருபோதும் ஆய்வுபணியை மட்டும் விட்டுவிடாதே' என்று அறிவுரை கூறினார். மேலும், இந்தியாவின் எதிர்காலம் நானோ டெக்னாலஜியில் தான் இருக்கு. அதற்கு உங்களைப் போன்றவர்கள் தேவை என்றார். ஆய்வுக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று கேட்டார். ஆராய்ச்சி செய்ய ஆய்வு பொருள்கள் இல்லை என்றதற்கு, இனி, நீங்கள் ஆய்வு மேற்கொள்ள இந்தியாவில் எந்த ஐஐடியையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வெளிநாடுகள் சென்று ஆய்வு செய்ய அரசு உங்கள் செலவினங்களை ஏற்கும் என உறுதியளித்தார்.

உங்களைப்பற்றி, எதிர்காலம் பற்றி சொல்லுங்களேன்?

அப்பா பாலசுப்பிரமணியம். காலேஜ் சூப்பிரடன்டாகயிருந்து ஓய்வு பெற்றவர். அம்மா கிருஷ்ணகிரியில் பிடிஓ அலுவலகத்தில் ஆபிஸ் அசிஸ்டென்டாக பணிபுரிந்து வருகிறார். தம்பி ராஜகணபதி திருச்சியில் வேளாண் மை ஆராய்ச்சி மையத்தில் உதவி பேராசிரியராக இருக்கிறார். என்னோட எதிர்கால லட்சியம் என்றால் என்னைப்போல நிறைய நானோ டெக்னாலஜி ஆராய்சியாளர்களை ஏற்படுத்தணும். வெளிநாடுகளில் இருந்து பல லட்ச சம்பளத்திற்கு அழைப்புகள் வந்தன. ஆனால், அதையெல்லாம் நிராகரித்து விட்டேன். என் சேவை இந்தியாவுக்கு மட்டுமே இருக்கவேண்டும் என்பதால்தான் காட்டாங்குளத்துõர் எஸ் ஆர் எம் கல்லுõரியில் என்னைப்போல பலரை உருவாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு நானோ டெக்னாலஜி பிசிக்ஸிஸ்ட் ஆக இருக்கிறேன். இதுவே எனக்கு திருப்தி தருகிறது.

தேவராஜன்
படங்கள்: ராஜன்
***************************************

42. ஏழுவகை உணவு சாப்பிடுங்க! நாற்பதிலும் இளமையாக இருங்க!

"எட்டு வயதில் பெண்கள் அழகு, பதினெட்டில் எந்தப் பெண்ணும் அழகு' என்பார்கள். அழகும், இளமையும் பெண்களுக்கு மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவை போல நினைத்து, தங்கள் அழகை, இளமையை காப்பதில் பெண்கள் அதிக அக்கறை காட்டுவார்கள்.
40 வயது கடந்து விட்டாலே பெண்கள் அழகையும் இளமையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விடுகின்றனர். அதற்கு நுõற்றி எட்டு காரணங்கள் இருக்கலாம். நீங்க நாற்பதிலும் சிலிம்மா... கொடியிடையோடு... இளமை ஊஞ்சலாட இருக்கணுமா? அதற்கு ஏழு வகையான உணவு போதும். இந்த ஏழுவகை உணவுபொருட்கள் உங்களுக்கு ஊட்டத்தை கொடுப்பதோடு, கொழுப்பினை குறைத்து உங்களை சிலிம்மாக்கும்.

ஒரு கப் தண்ணீர்; இரண்டு எலுமிச்சை பழம்:

தினமும் காலையில் ஆகாரம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் வெந்நீரில், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, ஒருகலக்குகலக்கி கடகடன்னு குடிங்க. அவ்வளவு தான் மேட்டர். இந்த எலுமிச்சை சாறு உள்ளே போனதும் முதல்ல பாஸ்போரிக் அமிலத்துடன் கூட்டு சேர்ந்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கும். அடுத்ததா, ரத்த ஓட்டத்தை சரிபடுத்தும். மேலும் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும். இதன் காரணமாக நமக்கு வருடத்திற்கு சராசரியா ஒருகிலோ எடைகுறையும். கூடுதலா தினமும் 4 கப் தண்ணீர் குடித்து வந்தால் மேலும் ஒருகிலோ எடை குறையுமாம்.

நார்சத்துள்ள தானியங்கள்:

வீட்டில் இருக்கும் தானிய வகைகளே மாமருந்து. கிராமத்தில் இன்றும் தானிய வகைகளை உணவில் பயன்படுத்துகின்றனர். தானியங்களை ஊறவைத்து அதன் தண்ணீரைக் குடித்து வந்தால் உடம்பில் உள்ள கொழுப்பு குறையும். அதுமட்டுமல்லாமல் ரத்தத்தில் உள்ள இன்சுலின் சுரப்பு அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். அடுத்ததாக நவ தானியங்களை தினமும் அளவுடன் உணவில் சேர்த்து வந்தால் தோல் சுருக்கம், வெளுப்பு வராது. ரத்தசோகை ஏற்படாது. உடம்பு எடை கட்டுப்பாட்டில் இருக்கும். இதன் காரணமாக சக்தியும், இளமையும் நீடிக்கும்.

கொள்ளு:

கொள்ளு குதிரைக்கு மட்டுமேயான உணவுபொருள் அல்ல. நமக்கும்தான். கொள்ளுவை நாம் உணவில் சேர்த்துவர, உடம்பில் கொழும்பு குறைந்து உடம்பின் வடிவம் உருகுலையாமல் இருக்கும். கொள்ளுவில் இருக்கும் புரதங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை மட்டு படுத்தும். ஹார்மோன் உருவாக்கும் ஈஸ்டோஜனை சீர்ப்படுத்துகிறது. மேலும் கொள்ளு சீக்கரமே செரிமானம் ஆகக்கூடிய உணவுபொருள். கொள்ளுவை சூப் வைத்து பருகலாம். சுண்டல் வைத்து சாப்பிடலாம். காரவகைகளில் சேர்த்து கொள்ளலாம். தினமும் ஏதோ ஒருவகையில் கொள்ளுவை உணவில் சேர்த்துக்கொள்ள நீரழிவு நோய், மாரடைப்பு, ரத்தசோகை போன்ற நோய்களின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்கலாம். அது மட்டுமல்ல உடம்பிற்கு வலுவும் கிடைக்கும். உடல் பொலிவும் மெருகேறும்.

பிஸ்தா:

பிஸ்தா பருப்பு உடலுக்கு மிகவும் ஊட்டத்தைக் கொடுக்கக்கூடியது. ரத்தத்தில் அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். உடம்பில் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தும். பிஸ்தா பருப்பில் உள்ள ஒமேகா3 என்ற சத்து மேனி அழகையும், இளமையையும் கொடுக்கக்கூடியது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடியது. தினமும் 810 பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். உடம்பில் கொழுப்பு சேருவதைத் தடுக்கும். இன்சுலின் அளவை ஒரே அளவில் வைத்திருக்கும். ஆகவே பிஸ்தா சாப்பிடுங்க, பிஸ்தாவா இருங்க.

லவங்கப் பட்டை:

உணவு மணக்க, சுவையாக இருக்க, காரசாரமாக இருக்க உணவில் லவங்கத்தை சேர்த்துக் கொள்கிறோம். இந்த லவங்கம் நம் உடம்புக்கு தேவையான கலோரியைக் கொடுத்து எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்கும். மேலும் உடம்பில் கலோரி இழப்பினைத் தடுத்து சோர்விலிருந்து காக்கும். அதுமட்டுமல்ல, இதயத்துக்கு இதமானது லவங்கம். கொலஸ்ட்ராலை மட்டுபடுத்தி இதயநோயை தடுக்கும் பாதுகாப்பு கவசமாக லவங்கம் இருக்கும்.

பச்சை மிளகாய்சாஸ்:

பச்சை மிளகாய் காரமான ஒரு உணவுபொருள். இதை உணவில் சேர்த்து கொள்வதால் உடம்பில் இருக்கும் கொழுப்பு சத்து கரையும். பொதுவாக எல்லாருக்கும் கொழுப்பு தான் எதிரியாக உள்ளது. கொழுப்புதான் உயிர்க்குடிக்கும் நோய்களுக்கு வாயிலாக இருக்கிறது. மேலும் உடல்பருமனுக்கு ஊக்கியாக கொழுப்புதான் இருக்கிறது. அப்படிப்பட்ட கொழுப்புக்கு கடிவாளம் போடக்கூடியது காரவகை சாஸ். காரவகையான மிளகு, கிராம்பு, மிளகாயை தினமும் அளவோடு உணவில் சேர்த்து வந்தால் மேனியழகோடு இருக்கும்.

மீன் உணவு:

அசைவ பிரியர்கள் உணவில் மீன்வகைகளை தினமும் சேர்த்துக்கொள்ளுங்கள். மீனில் இருக்கும் ஒமேகா3, விட்டமின்ஏ, கால்சியம் போன்ற சத்துகள் உடல்பருமனைத் தடுக்கும். அதுமட்டுமல்ல வயோதிக தோற்றம் ஏற்படுவதை மீன் உணவு தடுக்குமாம். 40 வயதைத் தொடும்போது ஏற்படும் மெனோபாஸ் பிரச்னைகளுக்கு மீன் உணவு ஓரளவு தீர்வாக இருக்கும்.
சைவம் சாப்பிடுவர்கள் கீரைவகைகளும், மீன் மாத்திரைகளும் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியத்தையும், இளமையையும் காக்கலாம்!
தேவராஜன்
*************************************************


43. இந்த முறையில் வளர்த்தால்
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான்!

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும். குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும் குழந்தைகளை இப்படித்தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறையிருக்கிறது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். அந்த 12 வழிமுறைகள் இதோ.

1. இளமையில் கல்வி
குழந்தைகளுக்கு இளமைப்பருவம்தான் அவர்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பருவம். ஆதலால், அந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்லதொரு பண்பாட்டை, பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுத்து
விட்டால் அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும். பின்பு அவர்கள் ஒழுக்க நிலையில் இருந்து ஒருபோதும் மாறமாட்டார்கள்.

2. கோபம்
கோபமாக இருக்கும் போது கூட தகாத வார்த்தைகளை குழந்தைகள் முன் பேசிவிடாதீர்கள். முடிந்தளவு குழந்தைகள் முன் கோபத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது நல்லது.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்!
குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை தந்தையும் தாயும் இணைந்து தீர்மானிக்கவேண்டும். ஒருவர் கண்டிப்புடனும் இன்னொருத்தர் செல்லத்துடன் குழந்தையை அணுகினால் இருவருக்கும் மத்தியில் குழந்தை தன் வேலையை காட்ட ஆரம்பித்து விடும். மேலும், கண்டிப்பவரை குழந்தை வெறுக்கத்தொடங்கி விடும்.

4. உறுதியாக இருத்தல்!
பெற்றோர்கள் தங்களது கொள்கையில் உறுதியை கடைபிடிக்கவேண்டும். அடிக்கடி சட்டத்திட்டங்களை மற்றும் எதிர்ப்பார்ப்புகளை மாற்றிக்கொண்டால் குழந்தைகள் குழம்பிவிடுவார்கள். எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் போது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா, மாட்டீர்களா? அதனால் கோபமடைவீர்களா என்பதை முடிவு செய்தப்பின் உங்கள் அணுகுமுறையை குழந்தைகளிடம் காட்டுங்கள்.

5.குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்!
குழந்தைகளிடம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய் பேசாதீர்கள். குழந்தைகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசினால் குழந்தைகள் உங்களை நம்பமாட்டார்கள். உங்களைப் பார்த்து அவர்களும் பொய் பேசக்கூடும்.

6. அடம்பிடிக்கிறார்களா? விட்டுவிடுங்கள்!
எதையோ எதிர்ப்பார்த்து, அதை அடைய அடம்பிடித்து அழுகிறார்களா? அழுகையை நிறுத்த ஏதாவது கொடுத்து சமாதானப்படுத்த வேண்டாம். ஏனெனில் அது விரும்புவதைப்பெற அழ ஆரம்பித்து விடும். அப்படியே விட்டுவிட்டால் அழுகையின் மூலம் எதையும் பெற முடியாது என்பதை உணர்ந்து விடுவார்கள்.

7. தவறு செய்தால் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள்!
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால், தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். அதன்படி கேட்கவும் சொல்லுங்கள்.

8. மன்னித்து விடுங்கள்!
குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது என்றால் உடனே மன்னித்து விடுங்கள். அதை வெளிப்படையாகவே குழந்தைகளிடம் தெரியப்படுத்துங்கள். குழந்தை மன்னிப்பு கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கிறது என்பதை உணர்த்துவதாகும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்பு கோருங்கள்!
நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள். நான் பெற்றவன். குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். நீங்கள் குழந்தைகளிடம் மன்னிப்பு கோருவது மூலம் தவறு யார் செய்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பண்பு குழந்தைகளுக்கு வளரும்.

10. சாதனையாளர்களை சொல்லிக்கொடுங்கள்!
கார்டூன், சக்திமான் போன்ற கதைகளை டி.வி.யில் பார்த்து, கதையில் வருவது போல அமானுஷ்யங்களை செய்ய வேண்டும் என்று நினைத்து ஏமாற்றம் காண்பார்கள். ஆதலால், சமகாலத்து சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு
களை படிக்கச் செய்யுங்கள்.

11. நல்லொழுக்கங்களைக் கற்று கொடுங்கள்!
பள்ளிகளில் ஆண்டுவிழாக்களில் சினிமா பாடல்களுக்கு ஆடும் கலாசாரத்தை கற்றுக்கொடுக்கிறார்கள். அதை ஊக்குவிக்காமல், கட்டுரை, பேச்சு, நாடகம் போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12.கீழ்ப்படிதல் செய்ய கற்றுக்கொடுங்கள்!
குழந்தைகளை பயமுறுத்தி, அடிமைப்படுத்த நினைக்காதீர்கள். கீழ்ப்படிதல் என்பது ஒரு கடமை என்பதை உணர்த்துங்கள். பெரியவர்களுக்கு கீழ்படிதலில் எந்த ஈகோவும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

மேற்கண்ட 12 பண்புகளையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து வளர்த்தால் எந்த குழந்தையும் ஒழுக்கத்தோடு, நல்ல வர்களாக வளர்வார்கள் என்பது நிச்சயம்.
தேவராஜன்
**************************************************

44. சவாலை சமாளித்த
அஞ்சலி வாக்மேர்!

அஞ்சலி வாக்மேர். இந்தியாவே புருவம் உயர்த்தி, ஆச்சரியத்துடன் பார்த்த இந்தப்பெண், ஒரு வக்கீல்!
அந்தப் பெண்மணியை சுற்றி பத்திரிகையாளர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். கேள்வி மேல் கேள்விக்கணைகளை வீசிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்மணிக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. கால் நடுங்கியது. வியர்வை கொப்பளித்தது. நாக்கு குளறியது.டென்ஷன்! டென்ஷன்! டென்ஷன்! ஓடிப்போய் பக்கத்திலிருந்த நாற்காலியில் அமர்கிறார். சட்டென்று காதைப் பொத்திக் கொள்கிறார். பின்னர், நெற்றியில் கை பொத்தி, கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சம் யோசனையில் ஆழ்கிறார். சட்டென்று வெறித்து, "பிளீஸ், லீவ் மீ அலோன் நவ்' என்று கெஞ்சி, கூச்சலிடுகிறார். அப்படியே அமைதியாகி விடுகிறார்.
பத்து நிமிடம் கழித்து, ஒரு உத்வேகத்துடன் தொண்டையை செறுமிக்கொண்டு, "இந்த கேசை எடுத்துக்கொள்ள குறிப்பிடும்படியாக எந்த முக்கிய முகாந்திரமும் இல்லை. என்னைப்போல 17 வக்கீல்களில் 7 வக்கீல்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு அதில் என்னை அந்த கேசை எடுக்கும் படி உத்தரவிட்டிருக்கிறார்கள். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தெரியும், நான் என்ன செய்ய வேண்டும் என்று. நான் ஒரு இந்தியர் என்பதையும் அறிவேன். சட்டத்திற்கு உட்பட்ட என் கடமை என்னவென்றும் அறிவேன். என்னை ஏன் இம்சைப் படுத்துகிறீர்கள்? பிளீஸ் தொல்லை தராதீர்கள்' என்று கெஞ்சி, கூச்சல் போடுகிறார்.
என்னாச்சு? ஏன் இந்தப்பெண் இப்படி உள்ளம் குமுறுகிறார்? யார் இந்தப் பெண்?
அஞ்சலி வாக்மேர் என்ற இந்த பெண் வக்கீலைத்தான் ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியை "என் கட்சிக்காரர்' என்று பேசும்படி மகாராஷ்டிர செஷன்ஸ் நீதிமன்றம் பணித்திருக்கிறது. அஞ்சலியின் அந்தக் கட்சிக்காரர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்கள் என்னென்ன தெரியுமா?
தேசத்துக்கு எதிராக சதி செய்தல், தீவிரவாத செயலில் ஈடுபடுதல், கடத்தல், அத்துமீறி இந்தியாவில் நுழைதல், கொலை முயற்சி, கொலை செய்தல், மும்பை தாக்குதலுக்கு காரணமாக இருத்தல், சதி திட்டமிடல் போன்ற பல குற்ற செயல்கள் புரிந்ததற்காகவும் இந்த தேசத்தின் 9 காவலர்களை சுட்டுக் கொன்றதற்காகவும் 11 ஆயிரம் பக்கங்களுக்கு மேலான சார்ஜ் சீட் அவர் மீது கொடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாத கும்பலில் ஒருவனான முகமது அஜ்மல் அமீர் என்கிற காசப்தான் அந்த குற்றவாளி.
சென்ற நவம்பர் 26ம் தேதி மும்பை சிவாஜி சத்ரபதி ரயில்வே ஸ்டேஷன், தாஜ், ஓபராய் ஓட்டலில் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, 18 செக்யூரிட்டி, 26 வெளிநாட்டினர் உட்பட 170 பேரை சுட்டுக்கொன்ற பயங்கர தீவிரவாத கும்பலில் ஒருவன்தான் இந்த காசப்.
இந்தத் தீவிரவாதிக்காக வாதிடத்தான் அஞ்சலி நியமிக்கப்பட்டுள்ளார். வக்கீல் என்ற முறையில் தன் கடமையை செய்யவே முதலில் அஞ்சலி ஒப்புதல் கொடுத்திருந்தார். ஆனால், இந்த செய்தி மும்பையில் காட்டுத்தீயாக பரவ, தேச உணர்வாளர்கள், சிவசேனா கட்சித் தொண்டர்கள் இதற்கு காட்டமான எதிர்ப்பு தெரிவித்து, மும்பையில் வோலி பகுதியில் இருக்கும் அவர் வீட்டு முன்பாக கூட்டம் கூடி அத்துமீறி நடந்து கொண்டனர். இந்த வழக்கை அஞ்சலி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அச்சுறுத்தினர்; கொலை மிரட்டல் விடுத்தனர். இந்நிலையில்தான் அஞ்சலி மனஉளைச்சலில், உயிர் பயத்தில் காசப்புக்கு வழக்காடப் போவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். முழு பாதுகாப்பு தரப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்தது. ஆனாலும், "என் முடிவை அறிவிக்க ஒருநாள் அவகாசம் கொடுங்க' என்று அஞ்சலி கேட்டிருந்தார்.
மும்பைவாசியான அஞ்சலி, சட்டப்படிப்பை புனேயில் உள்ள சிம்பியாசிஸ் இன்ஸ்டிடியூட்டில் முடித்துள்ளார். 1996 முதல் கிரைம் மற்றும் சிவில் கேஸ்களில் ஏற்று வாதிட்டு வருகிறார். இதுவரை எத்தனையோ வழக்குகளில் ஆஜராகி வந்த இவருக்கு இந்த காசப் வழக்கில்தான் இத்தனை எதிர்ப்புகள். கொலைமிரட்டல்கள்.
ஒரு தீவிரவாதி சார்பில் வக்கீலாக ஆஜராகலாமா? நம் தாய்நாட்டுக்குள் ஊடுருவி கொலைவெறியோடு பலரையும் சுட்டுக் கொன்ற ஒரு தீவிரவாதிக்கு ஆஜராகுவது நாட்டுப்பற்றையே ஒதுக்கி வைத்தது போல் ஆகாதா? மும்பை மக்களின் ஆத்திர உணர்வு நியாயமாக இருக்கும்போது, அதை ஒதுக்கித்தள்ளி விட முடியுமா? இப்படி நிறைய கேள்விகள் அஞ்சலி மனதில் பிறந்ததில் பெரிய அளவில் தடுமாறிப் போனார். நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வாய்ப்பாகுமே என்றுதான் ஒருநாள் அவகாசம் கேட்டார்.
அன்றையதினம் இரவு அவர் மனசுக்குள் எத்தனை போராட்டம் நடந்திருக்கும்...?
சொன்னபடி, மறுநாள் முடிவை அறிவித்து விட்டார். "எஸ். நான் ஆஜராகிறேன்' என்று. தீவிரவாதி தரப்பில் ஒரு வக்கீல் ஆஜராகாவிட்டால் வழக்கு சிக்கலாகுமே என்ற ஒரே நோக்கத்தில் அவர் எடுத்த முடிவு அது. நீதிதேவதையின் முன் காசப்பும், அஞ்சலியும் பாரபட்சமற்றவர்களே என்பதால், தனக்கு விடுக்கப்பட்ட சவாலை எப்படியோ அஞ்சலி சமாளித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

தேவா
*****************************************************

45. பேசும்புத்தகங்கள்
உருவாக்கிய பெண்மணி!


குழந்தைகள் எழுதப்படாத புத்தகம் போன்றவர்கள். குழந்தைகளைப் புரிந்து கொள்ள ஒரே வழி நாமும் குழந்தைகளாக மாறுவதுதான். அவர்கள் உலகம் குதுõகலமானது. அவர்கள் பூக்களைப்போல மலர்ந்து கொண்டிருப்பவர்கள். குழந்தைகளின் வாழ்க்கை, விளையாட்டு மற்றும் கதைகளால் ஆனது. இந்திய பண்பாடு, கலாசாரம், பக்தி, ஒழுக்கம் போன்ற வாழ்வியல் கூறுகளை கதைகளூடே புகுத்தி வளர்த்ததெல்லாம் நம் தலைமுறையோடு போய்விட்டதோ என்ற நம் அச்சத்தை போக்கும் வகையில் பேசும் புத்தகங்களை உருவாக்கி, குழந்தைகளின் மனதில் சிம்மாசனம் போட்டிருக்கிறார் ஷோபனா விஸ்வநாத்!

அதென்ன பேசும் புத்தகங்கள். கான்செப்டே வித்தியாசமாக இருக்கிறதே?
இன்றைய நவீன தொழில் நுட்பம், புதிய சிந்தனை, புதிய வடிவம் கொண்டு அச்சு எழுத்து முறையில் கற்பதை அடுத்த தளத்திற்கு கொண்டு போன முயற்சிதான் பேசும் புத்தகங்கள். இதில் படித்தல், கேட்டல், பார்த்தல் மூன்றுசெயல்களும் ஒரே சமயத்தில் நிகழ்வதால் குழந்தைகளுக்கு கற்றல் என்பது இனிமையாகிறது.
குழந்தைகளின் சுபாவம் விளையாட்டு, கதைகேட்டல் இவற்றிலேயே சுற்றி வருகிறது. இந்த வட்டத்திலிருந்து அவர்களை பிரித்து எதையும் அவர்களிடம் நாம் புகுத்திவிடமுடியாது. அதனால் இந்த மூன்று செயல்களை ஒருங்கிணைத்து ஒரு புத்தகம் உருவாக்க முடியுமா என்று யோசித்ததில் உருவானதுதான் இந்த பேசும் வகை புத்தகங்கள்.

அட, இந்த ஐடியா எப்படி வந்தது?
எங்கள் குடும்பம் இசை குடும்பம். நான் யூ எஸ்சில் இருந்தபோது என் மகனுக்கு 3 வயது. அவனுக்கு அருகில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்க நேரம் இல்லாமல் இருந்தது. பாட்டு, விளையாட்டு, இங்கிலீஷ் பாடம் அடங்கிய சிடி கிடைத்தது. அதை வாங்கி வந்து மகனுக்கு கொடுத்தேன். என்ன ஆச்சரியம்! அதைப் பார்த்தே, கேட்டே அவன் பாடங்களை சுயமாக கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டான். என் மகனுக்கு ஏற்பட்ட அனுபவமே இந்த ஐடியாவுக்கு அடிப்படை காரணமாக இருந்தது. அமெரிக்காவிலிருந்து சென்னை வந்ததும் குழந்தைகளுக்கான பேசும் புத்தகங்களை "கரடி டேல்' என்ற நிறுவனம் தொடங்கி வெளியிட ஆரம்பித்தோம்.

பேசும் புத்தகங்களுக்கான கதைகள், பாடல்களை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நம் இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் புராணங்கள், இதிகாசங்கள், பஞ்சதந்திர கதைகள் இவற்றிலிருந்து கருத்துகள் எடுத்து இக்காலத்துக்கு ஏற்ப புதிய வடிவில் பாடல், பின்னணி இசையுடன் கதைகளை வடிவமைத்திருக்கிறோம். மேலும் கதைகளின் கதாபாத்திரங்களின் உரையாடல்களை குழந்தைகளுக்கு பிரபலமான நடிகர்களின் சொந்தக் குரலில் பேசி பதிவு செய்திருக்கிறோம். இதை கேட்கும் போது குழந்தைகள் ஆசையாய், ஆர்வமாய் கற்பதற்கு உதவும்.

கரடி டேல் மூலம் எத்தனை பேசும் புத்தகங்களை உருவாக்கி இருக்கிறீர்கள்?
தமிழ், ஆங்கிலம், இந்தி என பல மொழிகளில் பேசும் புத்தகங்களை உருவாக்கி இருக்கிறோம். மேலும் பல பேசும் புத்தகங்களை உருவாக்கும் ஆயத்த பணியில் இருக்கிறோம். எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவில்லை. நிறைய பண்ணியிருக்கிறோம்.

உங்களின் இந்த புதிய முயற்சியை பள்ளிகளில் சோதனை செய்திருக்கிறீர்களா?
செய்திருக்கிறோம். சுனாமி பாதிக்கப்பட்ட நாகை, கடலுõர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 40க்கும் மேலான அரசு பள்ளிகளில் அச்சில் இருக்கும் பாடங்களை நாங்கள் அந்த பாடக்கருத்துகளை, படங்கள், பாடல்கள், இசை, உரையாடல் மூலம் வடிவமைத்து கொடுத்து பயிற்சி கொடுத்திருக்கிறோம். மாணவர்களிடம் கற்றலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சென்னையில் அமிர்தானந்தமயி தனியார் பள்ளிகளிலும் எங்கள் தயாரிப்புகளை நடைமுறைபடுத்தியுள்ளோம். மேலும் 80 பள்ளிகளில் வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் எங்களின் கரடிடேல் நிறுவனத்தின் கரடி பாதை பேசும் புத்தகங்கள் பாடங்களாக இருக்கின்றன.

வேறென்ன தளங்களில் இயங்குகிறீர்கள்?
இந்த பேசும்புத்தகங்கள் வடிவில் நம் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை பிரபலமானவர்களின் குரலில் தயாரித்திருக்கிறோம். உதாரணமாக முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல்கலாம் வாழ்க்கை வரலாறு நுõலான அக்னிசிறகினை கவிஞர் வைரமுத்துவின் குரலில் உருவாக்கி இருக்கிறோம். காந்தி, ஜே.ஆர்.டி.டாட்டா, காளிதாசனின் சாகுந்தலை போன்ற சில நுõல்களை பேசும் புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறோம். மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. அடுத்து குழந்தைகளுக்கு அனிமேஷன் படங்கள் எடுத்து பிரபல டிவி சேனலில் தொடராக ஒளிபரப்ப உள்ளோம்.

பெண்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது?
குழந்தைகளை வளர்க்கும் முழுபொறுப்பு தாய்மார்களிடம் தான் இருக்கிறது. ஆதலால், முதலில் பெண்கள் நிறைய படிக்க வேண்டும். நாம் நிறைய படிப்பதின் மூலமே நம் பிள்ளைகளின் படிப்பிற்கு உதவவும், ரோல்மாடலாகவும் இருக்கமுடியும். நம் பிள்ளைகளுக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய சொத்து கல்வி. மிக உயர்ந்த பரிசு புத்தகங்கள்.

தேவராஜன்,
படங்கள்: செல்வகுமார்
*****************************************

46. பிரசவத்துக்குப் பிறகு
குண்டாயிட்டீங்களா?

"குழந்தை பிறந்தா அழகு போய்விடும்' என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள். அது இன்று உண்மையாகியிருக்கிறது. பெரும்பாலான பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு குண்டாகி விடுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கு அதிக ஊட்டம் தேவைப்படுவதால் உணவு அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் கருவுற்ற நாள் முதல் கருவின் எடைக்கேற்ப அந்தக் கருவை சுமக்கும் தாயின் உடல் எடை அதிகமாகும்.
நார்மல் டெலிவரியில் குறைந்தது 300 முதல் 350 மி. ரத்தம் இழப்பு ஏற்படுகிறது. இது 500 மி. வரை அதிகரிக்கவும் கூடும். இதனால் ஹீமோகுளோபின் குறைகிறது. பிரசவத்துக்குப் பிறகு உடலுக்கு ஹீமோகுளோபின் தேவை அதிகமாகிறது. ஆக்ஸிஜன் ரத்த ஓட்டத்தில் குறைந்து போவதால் ரத்தசோகை ஏற்படுகிறது. சருமம், முடி வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகின்றன. அடுத்ததாக, குழந்தைக்கு பால் புகட்ட வேண்டியிருப்பதால் தாய்மார்களுக்கு கால்சியம், புரோட்டீன், விட்டமின்களின் தேவைகள் அதிகமாகின்றன. இவைகள் சமச்சீராக பிரசவத்துக்குப் பிறகு கிடைக்காமல் போவதால் உடல் நலத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இது போல பிரச்னைகளிலிருந்து விடுபடவும், பிரசவத்துக்குப் பிறகு எடை குறைந்து பழைய உடல் தோற்றத்தையும், இளமையையும் பெறவும் சில வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாமா?

உணவு தேவையை ஈடு செய்யுங்கள்!
பொதுவாக மூன்று வேளை சாப்பிடுவது பழக்கம். ஆனால் பிரசவத்துக்குப்பிறகு மூன்று வேளையை ஆறு வேளையாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளைக்கும் சத்தான உணவை கொஞ்ச கொஞ்சமாக எடுத்துக் கொள்ள வேண்டும். பால், பழங்கள், பழச்சாறு, சூப் இந்த வகை உணவுவகைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

காபி அதிகம் பருகாதீர்கள்!
ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு கப் காபிக்கு மேல் பருகாதீர்கள். காபியில் உள்ள காபீன் குழந்தைக்கு புகட்டும் பாலில் ஊறு விளைவித்து விடும். தண்ணீர் அடிக்கடி அருந்துங்கள். ஆப்பிள், வாழைப்பழம் சாப்பிடுங்கள். இவைகள் உடலுக்கு தேவையான கால்சியத்தை கொடுத்துவிடும்.

அதிக கொழுப்பு, வறுத்த உணவை தவிர்த்திடுங்கள்!
உடல் பருமனை குறைக்க கொழுப்பு வகை உணவுகளைத் தவிர்க்கவேண்டும். அதுபோல வறுத்த வகை உணவுகளையும் தவிர்க்க வேண்டும். பருப்பு வகைகளில் செய்யப்படும் வடை போன்ற உணவு வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

இறைச்சி போதுமான அளவு உண்ணுங்கள்!
கோழி இறைச்சி, மீன் இவைகளை போதுமான அளவு உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான புரதச் சத்து கிடைக்கும். இது குழந்தைக்கு கொடுக்கப்படும் தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்யும். பால் கொடுப்பதன் மூலம் இழக்கப்படும் சக்தியை மீட்டுத்தரும். சைவ உணவு சாப்பிடுபவர்கள் தயிர், வெண்ணை, பால், ராகி, சோயா, பழுப்பரிசி போன்ற உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.

எளிதில் செரிமானமாகும் உணவு உண்ணுங்கள்!
நுõடூல்ஸ், பிரட் போன்று எளிதில் செரிமானம் ஆகும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். பரங்கி, வெண்டைக்காய், பீன்ஸ், காளான் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு தேவையான விட்டமின்களையும் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும்.

உடற்பயிற்சி!
நார்மல் டெலிவரி ஆனவர்கள் 40 நாட்களுக்குப் பிறகு எளிய வகை உடற்பயிற்சியை செய்து வரவேண்டும். சிசேரியன் செய்து கொண்டவர்கள் மருத்துவர்களின் அறிவுரைக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யலாம். உடற்பயிற்சி செய்து வந்தால் தசைகள், நரம்புகள், எலும்புகள் வலுவடையும். தேவையில்லாத கொழுப்பு குறைந்து தேவையில்லாத தசைகள் கரையும்.

நடை பயிற்சி, யோகா, டான்ஸ்...
ஒரு நாளைக்கு காலையிலோ மாலையிலோ குறைந்தது 2030 நிமிடநேரங்கள் நடைபயிற்சி செய்து வரவேண்டும். பிரசவத்துக்குப்பிறகு மீண்டும் பழைய தோற்றத்தையும், இளமையும் பெற யோகா சிறந்த வழிமுறையாகும். யோகாவினால் மூச்சு ஓட்டம் சீராகும். இதனால் சோகை ஏற்படாது. டான்ஸ், இசை இவற்றினால் மனம் இறுக்கம் விலகி சந்தோஷம், குதுõகலம் ஏற்படும். இதனால் ஹார்மோன் சுரப்பு அதிகமாகி இளமையையும், வசீகரத்தையும் தரும்.
மேலே சொன்ன வகைகளை தவறாது கடைபிடித்து வந்தால், பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உடல் பருமனை குறைக்கலாம்; பழைய தோற்ற பொலிவையும், இளமையையும் பெறலாம்!

தேவராஜன்
**********************************************

47. பன்றிக் காய்ச்சலை
விரட்டும் துளசி!

இன்றைய இளம் தலைமுறையினரில் பலருக்கு கொஞ்சம் வெயிலில் அலைந்தால் தலைவலி வந்துவிடுகிறது. ஒரு நாள் மழையில் நனைந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது, பனியில் நனைந்தால் ஜலதோஷம் பிடித்து விடுகிறது. இதற்கெல்லாம் காரணம் எதுவென்று தெரியுமா? நமக்கெல்லாம் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதுதான்! தொட்டதுக்கெல்லாம் வரும் நோய்களிலிருந்து விடுபட உடலுக்கு எதிர்ப்பு சக்தி இருக்கவேண்டும். எதிர்ப்பு சக்தியை எப்படி வளர்த்துக்கொள்வது பற்றி விரிவாக அதே சமயம் எளிமையாக புரியும்படி சொல்கிறார், டாக்டர் வேல்விழி.

எதிர்ப்பு சக்தி என்பது என்ன?
உடலில் உள்ள ரத்தத்தில் வெள்ளை அணு மற்றும் சிவப்பணுகள் கலந்து இருக்கின்றன. இந்த அணுக்களின் எண்ணிக்கை விகிதம் சமமாக இருந்தால் அது ஆரோக்கியமான உடல்நிலைக்கு உத்திரவாதம் கொடுக்கக்கூடியது. அதே சமயம் வெள்ளை அணுக்கள் சிவப்பணுக்களைவிட எண்ணிக்கையில் அதிகமாகவோ, சிவப்பணுக்கள் வெள்ளை அணுக்களைவிட குறைவாக இருந்தாலோ எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
உதாரணமாக வெளியில் இருந்து தொற்றும் நோய்கிருமிகள் உடலுக்குள் சென்று ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது ரத்தத்தில் உள்ள சிவப்பு, வெள்ளை அணுக்கள் ஒன்று சேர்ந்து கிருமிகளிடம் போராடி, அந்தக் கிருமிகளை அழித்துவிடும். இதனால் நோய்தொற்று ஏற்படுவதில்லை! ஆனால், ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிவப்பு அணுக்கள் எண்ணிக்கையில் மாறுபடும் போது கிருமிகள் இந்த அணுக்களை வென்று உடலுக்குள் இருக்கும் உறுப்புகளில் ஊடுருவி, பல தொல்லைகளை ஏற்படுத்துகின்றன. இதை தான் எதிர்ப்பு சக்தி இல்லை என்றோ, எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றோ வழக்கில் சொல்லி வருகிறோம்.

எதிர்ப்பு சக்தியை தரும் ரத்த அணுக்கள் எங்கு உற்பத்தியாகின்றன?
உடலில் கல்லீரல், மண்ணீரல், எலும்புமஜ்ஜை ஆகிய உறுப்புகளில் ரத்தம் உற்பத்தியாகிறது. இந்த உறுப்புகளை காக்கும் அல்லது வலுப்படுத்தும் உணவுவகைகளை சாப்பிட்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தியாகும் ரத்தத்தில் வெள்ளை அணு மற்றும் சிவப்பணுக்கள் சம அளவில் உருவாகி, எதிர்ப்பு சக்தியை தரும்.

எதிர்ப்பு சக்தியை உருவாக்க என்ன செய்யவேண்டும்?
"பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டில்கூட உணவு சாப்பிடலாம்' என்பார்கள். மிளகு, சீரகம், நவதானியங்கள், நார்சத்துள்ள காய்கறிகள், கீரைகள், கனிகள் இவைகளைஅன்றாடம் உணவில் சேர்த்து வரவேண்டும். குழந்தைப் பருவத்திலேயே இத்தகைய உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் வளர்ந்தப் பிறகு அவர்களுக்கு நல்ல எதிர்ப்புசக்தி கிடைக்கும். இந்த வகையான இயற்கை உணவுகளை பாப்பா பருவத்திலிருந்து பாட்டி பருவம் வரைக் கொடுத்து வரவேண்டும்.
குறிப்பாக அதுவும் முக்கியமாக கொத்துமல்லி, புதினா, இஞ்சி, கருவேப்பிலை, சுக்கு, திப்பிலி, மிளகு, நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் இவைகளை எந்த வகையிலாவது உணவில் சேர்த்து வந்தால் எதிர்ப்பு சக்தி கூடுதலாகவே இருக்கும். பொதுவாக உணவில் பிடித்த உணவு, ருசி உணவு என்று பார்க்காமல் உடம்புக்கு நல்லது செய்யும் உணவுவகைகளையே சாப்பிட்டு வரவேண்டும்.

எதிர்ப்பு சக்தி குறைய காரணம் என்ன?
இயற்கை உணவுகளைத் தவிர்த்து செயற்கை உணவுகளை நாம் உண்ணும் போது உடம்பில் இருக்கும் கொஞ்ச எதிர்ப்பு சக்தியையும் அது கெடுத்து விடும். பொரித்த உணவு வகைகள், சாலையோர சுகாதாரமற்ற உணவுகள், துரித உணவுவகைகள், குளிர்பானங்கள், நொறுக்குத் தீனிகள், ரெடிமேடு பொருட்களை உணவில் பயன்படுத்துதல் இவைகளினால் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்புள்ளது. இந்த உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல உடல் உறுப்புகள் செயல் இழந்து, ஆபத்தான நோய்களுக்கு இடம் கொடுத்துவிடும். மேலும், சின்ன சின்ன விஷயங்களுக்காக மாத்திரை, மருந்துகள் எடுத்துக் கொள்வதாலும் அவை உடம்பில் சேர சேர எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக குறைத்துவிடும்.

தொற்று நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இப்போது உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் ஒரு தொற்று நோய்தான். இது அதிகப்படியாக உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களையே பெரிதும் பாதிக்கிறது. உடம்பில் எதிர்ப்பு சக்தி இல்லாததால் உடம்புக்குள் ஊடுருவிய கிருமிகள், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், மூளை ஆகிய உறுப்புகளை பாதிக்கச் செய்கின்றன. இந்த நோய் வராமல் இருக்க எதிர்ப்பு சக்தி நமக்குள் இருக்க வேண்டும். பாரம்பரிய மருந்தான துளிசி, மஞ்சள், வேப்பிலை, கற்பூரவள்ளி இவைகளை கசாயம் வைத்துக் குடித்தாலே தொற்று நோய்களை பெரும்பாலும் தவிர்த்து விடலாம். திரிபலா சூரணம், சோற்றுக்கற்றாழை சூப் இவைகளை நாம் பயன்படுத்தி வந்தால் எந்த தொற்று நோயிலிருந்தும் தப்பிவிடலாம்.

தேவராஜன்
******************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக