வியாழன், 19 டிசம்பர், 2013


மனிதர்கள் மாயமாகும் மர்ம தீவு! -தேவராஜன் உலகில் ஏராளமான மலைகளும், தீவுகளும், கடல் பகுதிகளும் மர்மத்தின் புதையலாக புதைந்து கிடக்கிறது. விளக்க முடியாத வியப்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் ரகசியங்கள் இருந்துக் கொண்டுதான் இருக்கிறது! அவற்றில் ஒன்று மனிதர்களை கொல்லும் மர்ம தீவு! இந்த மர்மத் தீவில் கண்ணுக்கு எட்டிய துõரம் வரை விரிந்த ஏரியும் குட்டி குட்டியாக தீவுகள் இருக்கின்றன. இத்தீவில் ஒன்று ‘என்வைட்டினெட்’. இங்கே காலடி வைக்கும்மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள். இந்த மர்மத் தீவு கென்யாவில் துர்கானா ஏரி அருகே உள்ளது. துர்கானா ஏரி ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்கா கண்டத்தின் மையத்தில் கென்யாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது ருடால்ப் ஏரி. நீண்டு குறுகலான வடிவத்தில் அமைந்திருக்கும் இதன் பரப்பளவு சுமார் 6475 சதுர கி.மீ. இந்த ஏரியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன. கி.பி. 1888ம் ஆண்டு ஆஸ்திரிய ஆய்வாளர் கவுண்ட் பால் டெலிக்கி என்பவர் இந்த ஏரியைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரியாவின் இளவரசர் ரூடால்ப் என்பவரின் பெயரால் ரூடால்ப் ஏரி என வழங்கப்படுகிறது. இந்த ஏரியைச் சுற்றி எரிமலைகள் அமைந்துள்ளன. இந்த ஏரியின் நீர் வெளியேற இயலாத நிலை உள்ளது. முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட். கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரைஅனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர, விஞ்ஞானிகள் திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை. இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான்அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்’ என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர். பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா,அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்குவிடை கிடைக்கவில்லை. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை. ஆளே இல்லாத ஒரு அமானுஷ்யக் கிராமமாக அது அமைதிக்குள் உறைந்து கிடந்தது. பாக்ஸ் : கென்யா நாட்டின் துர்கானா ஏரியின் படுகையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனித இனத்தின் எலும்புக் கூடுகளின் படிமங்கள் கிடைத்துள்ளன.மிகப் பழமையான மனித உடல்களின் படிமங்கள் அடுத்தடுத்து கிடைத்து வருகின்றன. இதனால் இந்தப் பகுதிக்கு ’மனித குலத்தின் தொட்டில்’ என்ற பெயரே உண்டு. இங்கு கிடைத்துள்ள மனித உடல் படிமங்களை ஆராய்ந்ததில், அவை ஹேமோ சேப்பியன்ஸ் இனத்தின் படிமம் அல்ல என்பது தெரியவந்துள்ளது. மாறாக அவை மனித இனத்தின் இன்னொரு வகையான உயிர் என்பது தெரியவந்துள்ளது. இந்த மனித வகையினரின் மூளை மிகப் பெரிதாக இருந்துள்ளதும், தலை நீண்டு இருந்ததும், அதே நேரத்தில் முகம் வட்ட வடிவமின்றி ஒடுங்கி இருந்ததும், கீழ் தாடை மிக மிக பலமானதாகவும் இருந்ததும் தெரியவந்துள்ளது. மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ், ஹேமோ ஹபிலிஸ் ஆகியவை. இதிலிருந்து பரிமாண வளர்ச்சி அடைந்தே ஹேமோ சேப்பியன்ஸ் என்ற இப்போதைய மனித இனம் உருவானது. ஹோமோ சேப்பியன் மனித இனமும் ஒரே காலகட்டத்தில் வசித்துள்ளனர் என்கிறார் மீவ் லீக்கி. ***************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக