வியாழன், 10 மே, 2012

பாகம் -2 ஆன்மிகம்

பாகம் -2 ஆன்மிகம் உதவி வழி புண்ணியப் பயணம்- -23- 12.2.2012- (தினமலர் வாரமலர் இதழில் நான் எழுதி வரும் ஆன்மிகம் தொடர் கட்டுரையின் பாகம் -2) உதவி வழியில் புண்ணியப் பயணம் செய்தால் சொர்க்கத்தை அடையலாம். உதவி ஒரு கருவி. அதைக்கொண்டு இந்தப் பிறவியை செம்மையாக செய்யலாம். இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு துப்பு தான் உதவி செய்யும் குணம். அதைக்கொண்டு வாழ்க்கையை துப்பறிந்தால் இறைவனை முடிவில் தெரிந்து கொள்ளலாம். மனிதனாகப் பிறந்தவர்கள் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். பிறரைச் சார்ந்து வாழக் கூடிய நிலையிலேயே இறைவனால் உயிர்கள் அனைத்தும் படைக்கப்பெற்றுள்ளன. எனக்குப் பிறர் உதவி தேவையில்லை என்று யாரும் கூற முடியாது. ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாட வேண்டி உள்ளது. இவ் உதவியினை உபகாரம், தர்மம் என வடமொழியில் குறிப்பிடுவர். நன்றி, அறம் என்று தமிழில் குறிப்பிடுவர். வாழ்க்கை முடிந்தப் பின்பு, உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். அப்படி பிறருக்கு உதவி செய்யும்போது பயனை எதிர்பார்க்காமல் நாம் உதவிசெய்ய வேண்டும். பயனை எதிர்பார்த்துச் செய்வது உதவியாகாது. வாழை மரத்தின் இலை, பூ, காய், பழம், தண்டு என்று அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்படும். ஒரு வாழைமரத்தின் அனைத்துப் பாகங்களும் உணவாகப் பயன்பட்டு இல்லாமல் போய்விட்டாலும், அந்த வாழைமரத்தின் கீழ்வளரும் கன்றும் வளர்ந்து உணவாகப் பயன்படும். அதைப்போல, தந்தை தம்மிடம் இருந்த பொருளை எல்லாம், இல்லாதவர்களுக்குக் கொடுத்து வறியவராகி விட்டார் என்று நினைத்து, அவரது மகன் பிறர்க்குக் கொடுப்பதை நிறுத்தி விடக்கூடாது. மகனும் தன்னால் இயன்ற அளவு பிறருக்கு உதவிசெய்து வாழவேண்டும். உதவி செய்யும் போது, அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று பாராமல், உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும், வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவ வேண்டும். செய்த உதவி வீணாகாது. அது நமக்கு ஏதாவதொரு வகையில் எப்போதாவது பயன்தரும். நாம் யாரேனும் ஒருவருக்கு உதவி செய்துவிட்டு மறந்து விட்டாலும்கூட, அது பின்னொருநாளில் நமக்கு யார் வாயிலாகவாவது கிடைக்கும். அதனால் நாம் பிறருக்கு உதவி செய்தல் வேண்டும். உதவி செய்வதைக் கைவிட்டுவிடுதல் கூடாது என்பது நம் பண்பாட்டு நெறி. ‘செஞ்ச உதவியும் இட்டுவைத்த விதையும் வீணாகப்போகாது’ என்கிறது முதுமொழி. நாம் ஒருவருக்குச் செய்த உதவியை மறந்து விடவேண்டும். அதனை எலலோரிடமும் கூறித் தற்பெருமைபடக் கூடாது என்பதை ‘இடது கை செஞ்சது வலது கை அறியக் கூடாது’ என்ற பழமொழி நினைவுபடுத்துகிறது. உதவி என்றால் பொன்னும் பொருளும் வாரி கொடுப்பது என்று மன்னர் காலத்தை நினைக்காதீர்கள். படித்தவன் ஏழைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கலாம். வசதி படைத்தவன் அன்னதானம் செய்யலாம். கலைஞர்கள் தம் கலையால் பிறரை சந்தோஷப்படுத்தலாம். ஏதோ ஒருவகையில் முடிந்தளவு பிறருக்கு உதவுங்கள். எதுவுமே இயலாமல் போனாலும், இந்த உலக மக்கள் நலமாக, வளமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இதுவும் ஒருவகை உதவிதான்! - தேவராஜன். உண்மையான சொத்து- -!-24- 19.2.2012 மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே பிறவி பயன். இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லாரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். நாமோ மனம் போன போக்கெல்லாம் வாழ்ந்து, பாவ புண்ணியங்களைச் செய்தபடி,பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி பூமியில் பிறவி எடுக்கிறோம். பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். இந்த மனிதப் பிறவியிலாவது பிறவி கரையேற வழி தேட வேண்டும். அதற்கு இறைவனே உயர்ந்த உறவு. இறைவனின் திருநாமமே மிகப் பெரிய சொத்து என்று கருத வேண்டும். அப்படி ஒருத்தரும், பணம் சேர்ப்பதே வாழ்க்கையின் லட்சியம் என்றும் கருதும் ஒருத்தரும் வாழ்ந்தார்கள். அவர்கள் கதை இது: அவர் தெய்வ பக்தி, நல்லொழுக்கங்கள் பெற்றவர். அவரின் மனைவி நேர்மாறாக இருந்தாள். அதிகமாகப் பணம் சம்பாதிக்கும்படிக் கணவனை அவள் தொந்தரவு செய்தாள். கணவன், ‘நமக்கு போதுமான செல்வத்தை இறைவன் தந்திருக்கிறான். இதற்கு மேலும் ஆசைப்படாதே’ என்று நயமாக எடுத்துச் சொன்னார். மனைவி கேட்கவில்லை. ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவரிடம் அற்புதங்கள் நிகழ்த்தும் பல சித்திகள் இருப்பதாக ஊர் பேசியது. “நம் ஊருக்கு வந்துள்ள துறவியிடம் பல யோகசக்திகள் இருக்கிறதாம். அவரிடம் நாம் நிறைய பணம் சேர்க்க வழி ஏதாவது செய்யும்படி கேளுங்கள்” என்று கணவனை நச்சரித்தாள். வேறு வழியில்லாமல் கணவனும் வேண்டாவெறுப்பாகச் துறவியிடம் சென்றார். ‘அன்பனே, உன் மனதில் என்ன குழப்பம்.’ என்றார். “சுவாமி, என் மனைவி பணத்தாசை பிடித்தவள். அவள் ஆசையை பூர்த்தி செய்ய ஒரு மாயக்கல் இருந்தால் கொடுங்கள்” என்று துறவியிடம் கெஞ்சினார். ‘ஒரு மாயக் கல்லை அதோ அந்த சாக்கடையில் வீசினேன். நீ வேண்டுமானால் அந்தச் சாக்கடையில் தேடி எடுத்துக் கொள்’ என்று சாதாரணமாகக் கூறினார் துறவி. சாக்கடையில் தேடி எடுத்த மாயக் கல்லுடன் வந்தவர், “சுவாமி அற்புதமான கல்லையே நீங்கள் அற்பமாகக் கருதிச் சாக்கடையில் வீசிவிட்டீர்களே! அப்படி எனில் இதைக் காட்டிலும் உயர்ந்த ஒரு பொருள் உங்களிடம் இருக்கணுமே! ’ என்று கேட்டார். ‘ஆமாம்! இறைவனின் திருநாமம் என்னும் மிக உயர்ந்த ஒரு பொருள் என்னிடம் இருக்கத்தான் செய்கிறது. அதையும் உனக்குத் தர தயார். ஆனால் அதைப் பெறுவதற்கு உரிய பக்குவத்தை உன் மனைவி அடையவில்லை. அவளிடம் இந்த மாயக் கல்லைக் கொடுத்துவிட்டு நீ என்னிடம் வரலாம். இந்த மாயக் கல்லைவிட உயர்ந்ததான இறைவனின் திருநாமத்தை உனக்கு மகிழ்ச்சியுடன் தருகிறேன்’ என்றார். துறவியின் யோசனைப்படி அவர் மாயக்கல்லை மனைவியிடம் கொடுத்து விட்டுத் திரும்பினார். அவருக்கு உலக இன்பங்களையும் செல்வங்களையும்விட இறைவனின் நாமம் எவ்வளவு மகிமை வாய்ந்தது என்பதை விளக்கினார். அன்றிலிருந்து இறை திருநாமத்தை எந்நேரமும் ஆர்வத்துடன் ஜபித்து வந்தார். இறைவனிடம் இரண்டறக் கலக்கும் முக்தி நிலையைப் பெற்றார். -தேவராஜன். அன்பால் ஆனது உலகம்- -25- 26.2.2012 ஒரு விதை முளைப்பதற்கு அந்த விதை தரமான விதையாக இருக்க வேண்டும். அது பதியும் மண் வளமாக இருக்க வேண்டும். பிறகு நீர், காற்று, வெப்பம் இருக்க வேண்டும். இவைகள் இருந்தும் அந்த விதை முளைத்து வெளியே வர, முட்டி மோதும் முயற்சி இருக்க வேண்டும். ஒரு விதை முளைப்பதற்கே இத்தனை சோதனைகளை இறைவன் நிர்ணயித்திருக்கிறான் என்றால், தன்னை அடைய விரும்பும் மனிதனுக்கு எவ்வளவு பரிசோதனைகள் கொடுப்பான் அந்த இறைவன்! பக்தி செய்தால் யாரும் இறைவனுக்குப் பிரியமானவர்களாகிவிடலாம். அந்தப் பக்தி எப்படி இருக்கணும்? அன்பு, சேவை என கலந்து இருக்கணும். எந்த ஒரு செயலைச் செய்வதானாலும், மற்றவருடைய நலனைக் கருத்தில் கொள்ளுங்கள். சுயநலமான வாழ்க்கை, தனிப் பட்ட பலன்களை மட்டும் எண்ணாதீர்கள். இறைவனை நினைவில் வைத்து அவன் பெயரைச் சொல்லியவாறு, சமுதா யத்தில் இறங்கி சேவை செய்யுங்கள். இதுவே எல்லாம் சிவமயம். அன்பே சிவமயம் என்ற எளிய தத்துவத்தைப் புரியவைக்கும். இந்த உலகம் அன்பால் நிரப்பப்பட்டுள்ளது. அன்பே முழுமையாக இருப்பதால் அதுவே சிவமாகிவிட்டது. இந்த அன்பில் தான் நாம் எல்லாம் பிறந்து, அன்பினாலேயே வளர்க்கப்பட்டிருக்கிறோம். இறைவன், இந்த உலகம் இவற்றின் கூறுகளான பஞ்சபூதங்கள் சுயநலமற்ற தன்மையை தான் கொண்டிருக்கின்றன. சூரியன், உயிரினங்களுக்கு ஒளியும், வெப்பமும், வாழ்வும் தந்து உதவுகிறது. மரங்கள் காரியமில வாயுவைத் தன்னுள்ளே ஏற்று மனித வாழ்க்கைக்குத் தேவையான பிராண வாயுவைத் தருகின்றன. மண்ணோ, நீர் தருகிறது. உணவு தருகிறது. நம்மை சுமக்கிறது. காற்று நமக்கு உயிர் தருகிறது. ஆகாயம் மழைத்தருகிறது. இப்படி ஐம்பூதங்களான இயற்கை எந்த விதமான பிரதியுபகாரமும் எதிர் பாராமல் உலக உயிர்களுக்கு உதவுகின்றன. இயற்கையை நம்பி, இயற்கை தயவில் வாழும் மனிதன் மட்டும் சுயநலமும், சுயலாபமும் கொண்ட வாழ்க்கை வாழ்வது நியாயம் தானா? இப்படி வாழ்ந்து கொண்டு பக்தி செய்தால் இறைவன் பார்வை நம் மீது எப்படி விழும்? ஒரு உயிரற்ற சடலம், ஒரு நோயாளி, வயது முதிர்ந்த ஒரு மனிதன் ஆகியவர்களைப் பார்த்ததுமே புத்தருக்கு ஞானம் புலப்பட்டு, அவரால் நிர்வாண நிலையை அடைய முடிந்தது. காரணம் புத்தனின் இதயம் அன்பால், கருணையால் நிரப்பப்பட்டிருந்தது. நாமோ எத்தனையோ சடலங்களையும், வயது முதிர்ந்தோரையும், நோயாளிகளையும் பார்க்கிறோம். ஆனால் நமக்கு ஞானம் வரவில்லையே! ஏன் ஒரு மனமாற்றம் கூட வரவில்லையே! நம் உதடுகள் மந்திரங்களை உச்சரிக்கின்றன. கண்கள் கடவுள் சிலைகளைப் பார்க்கின்றன. காது பஜனை கேட்கின்றது. இவற்றை எல்லாம் பார்த்து இறைவன் நம் இதயத்தில் வந்து அமர விரும்பினால், நம் இதயமோ சுயநல குப்பைகளும்,அன்பு, இரக்கம் இல்லாத முற்களும் இறைந்து கிடக்கின்றன. இறைவன் எப்படி நுழைவான்? உன் விழியால் பிறர்க்கு அழுதால், உன் விழி நீரைத் துடைக்க இறைவனின் கரம் நீளும். ஆனால், நம் துயரத்திற்கு மட்டுமே நம் கண்கள் கண்ணீர் கொட்டுகின்றன. நாம் எங்கே, வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் எங்கே? - தேவராஜன். அறிவே தெய்வம்!-- 26- 4.3.2012 வேறு எந்த உயிர்களுக்கும் இல்லாத ஒரு சிறப்பு மனிதராகிய நமக்கு உண்டு. அது அறிவு. அறிவு என்றால் எது நல்லது எது கெட்டது, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை சுயமாகவே அறிந்து கொள்வதாகும். குளிர் என்றால் போர்வை போர்த்திக்கொள்ள வேண்டும், மழையெனில் குடைபிடித்துக்கொள்ள வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அதற்கு காரணம் கடவுள் விசேஷமாக நமக்குக் கொடுத்திருக்கும் சுத்தமான அறிவு. அதுவே ஒரு பசுவுக்கோ, ஒரு பறவைக்கோ தெரியாது. காரணம் அவைகளுக்கு சுத்தமான அறிவு கொடுக்கப்படவில்லை. நம்மை படைத்தவனின் கருணையை நாளெல்லாம் நினைக்க வேண்டும், நன்றி கூற வேண்டும் என்ற வேத நெறி மனிதர்களாகிய நமக்குத் தெரிந்திருக்கிறது. இவை மிருகங்கள், பறவைகளுக்குத் தெரியாது. நம்முடைய விருப்பப்படி அமைதியாக இருக்கலாம். அன்பாக இருக்கலாம். சத்தியப்படி நடக்கலாம். இரக்கம், தர்மம் கொள்ளலாம். இவைகளினால் நிம்மதி, சந்தோஷம் பெறலாம். புண்ணியம் அடையலாம். அதே சமயம் நம்முடைய விருப்பப்படி மேலே சொன்னவற்றிற்கு எல்லாம் எதிர்மாறாக செய்யலாம். அப்படி செய்தால் அதற்குரிய பலனான துன்பம், கவலை. நிம்மதியின்மையை அடையலாம். பாதை இருக்கிறது. எந்தப் பாதையில் என்ன பலன் வரும் என்பதும் கூறப்பட்டுவிட்டது. நாம் எதில் செல்ல வேண்டும்? அதற்கு நம் அறிவை பயன்படுத்துவதே இல்லை. செம்மறி ஆடுபோல முன் சென்ற ஆட்டினைப் பின்பற்றியே தொடர்கிறோம். அதர்ம வழியில் சென்று துன்பங்களை சந்திக்கிறோம். அதன் பாதிப்பினால் அமைதியை இழக்கிறோம். பிறகு தவிக்கிறோம்! மனிதன் தவறு செய்வான் என்று தெரியாதா, பிறகு ஏன் இறைவன் இரு வேறு பாதைகளை படைக்க வேண்டும் நியாயம் கேட்கிறான். வாழ்க்கைப் பயணம் ஒரு இலக்கினை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறான். இலக்கின் முடிவில் தான் படைத்த மனிதர்களை தழுவிக்கொள்ள இறைவன் ஆசையோடு காத்திருக்கிறான். நாம் இலக்கற்ற பாதையில் பயணம் தொடங்கி, கால் போன போக்கில் மனம் போகும் போக்கில் சென்றால் யார் பொறுப்பு? நம் இன்ப துன்பங்களின் அடிப்படை ஆசையும் பகையும். ஆசையின் விதை? அறியாமை. ஆசை விதை முளைவிட்டு வளர, பொறாமை, முட்டாள்தனம், சினம், பேராசை, சுயநலம் போன்றவை உரங்களாக அமைகின்றன. ஆசை விதைக்கு நீர் வார்ப்பது, நம் கண்மூடித்தனம். கண்களை மூடி செய்வது எல்லாம் செய்து விட்டு, வெளிச்சத்தில் இருப்பவர்களைப் பார்த்து ஏங்குகிறோம்! படைத்தவன் ஓரவஞ்சனைக்காரன், நம்மை எல்லாம் கைவிட்டு விட்டானே என்று புலம்புகிறோம். நல்லறிவு நல்ல உள்ளத்தை வளர்க்கிறது. பகை, குரோதம், பேராசையிலிருந்து விலக்கி, நம்மை சத்தியமான ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறது. சத்தியத்தை தேடி, தேடி வளர்கிறது. வாழ்க்கையில் பிழைப்புக்காக அந்த நல்ல அறிவை கொத்தடிமையாக்கிவிடக்கூடாது. கொத்தடிமையாகிய அறிவு ஆபத்தைத் தரக்கூடியது. அது நம்மையும் நம் சுற்றத்தையும் நாம் வாழும் இந்த உலகத்தையும் பாதிக்கின்றன. இறைவன் கொடுத்த அறிவினால், அந்த இறைவனை அறியவும், அவனை அடையவும், அவனை போற்றவும், நினைக்கவும் பயன்படுத்தினால் அந்த அறிவே தெய்வம்! - தேவராஜன் எது கவுரவம்? -- 27- 11.3.2012 நம்மைவிட உயர்ந்தவரைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மை விடத் தாழ்ந்தவர் மீது வெறுப்பு, ஏளனம் காட்டாமலும், எவராக இருந்தாலும் சமமாக பாவிப்பது ஒருவகை பண்பு நலம். இத்தகைய இனிய பண்பு நலன்கள் நம் மனதின் அடிஆழத்தில் நீர் ஊற்றுபோல இருக்கிறது. நம் மனதில் நாம் சேர்த்துக்கொண்ட போட்டி, பொறாமை, வறட்டுகவுரவம் போன்றவை அந்த ஊற்றை மூடிவிடுகின்றன. பெரிய மகான்கள், ஞானிகள், குருமார்கள், தொண்டுள்ளம் படைத்தவர்களைப் பாருங்கள். அவர்கள் கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல், ஏற்ற தாழ்வு காணாமல், சாதி, இன பேதம் பாராமல் மக்களை மகேசனாக பாவித்து அன்புகாட்டுவார்கள். நாமோ சாதாரணமானவர்கள். நமக்குத்தான் எத்தனை ஆணவம், அகம்பாவம், வறட்டு கவுரம் உள்ளது! சக மனிதனையே பேதம் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், நம்மைவிட மேன்மையான இறைவன் மட்டும் நம்மை பேதம் பார்க்காமல் நமக்கு அருள் புரியவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நியாயம் தானா? ஒரு சின்னக்கதை. பாரத போர் முடிவடைந்த தருணம். கிருஷ்ணன் களைப்படைந்து, தன் கண்களில் ஒளி இழந்து, உடல் கறுத்துஅழகு இல்லாமல் காணப்பட்டார். இதற்குக் காரணம் துரியோதனனும் அர்ஜுனனும், கிருஷ்ணனை நாடிய போது, தன் சேனைகளை துரியோதனனுக்கு அளித்தார். தன்னையே பாண்டவர்களுக்கு அளித்தார். இறுதியில் வெற்றியும் கண்டார். கிருஷ்ணனின் சேனைகள் சில பாரத போரில் மடிந்தன. அந்த பாவம் அவரை தாக்கியது. கிருஷ்ணன் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். படைவீரர்கள், பாண்டவர்கள், என எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோரும் விருந்தில் கலந்து கொண்டனர். விருந்து ஆரம்பமாகும் சமயம். “எல்லாரும் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்” என்று கிருஷ்ணன் கேட்டார். “பரமாத்மாவே வரம் கேட்பதா” என திகைப்பு! அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். விருந்து இனிதே முடிந்தது. திடீரென்று கிருஷ்ணனை காணவில்லை. அச்சமயம் கிருஷ்ணன் விருந்து சாப்பிட்டவர்களின் இலையை எடுத்துக் கொண்டு இருந்தார். “கிருஷ்ணா, என்ன செய்கிறாய்? நான் இலையை எடுக்கிறேன்”என்று கூக்குரல்கள். கைகூப்பி வணங்கியபடி,“நீங்கள் எல்லாரும் எனக்கு வரம் கொடுத்திருக்கிறீர்கள், ஞாபகம் இருக்கிறதா, நான் கேட்ட வரம் இதுதான். இங்கு உள்ள எல்லா இலைகளையும் நான் ஒருவனே எடுக்க வேண்டும்” என்றார். மனதில் சங்கடம் இருந்தாலும், அனைவரும் கிருஷ்ணருக்கு கட்டுப் பட்டனர். சாப்பிட்ட எல்லா இலைகளையும் எடுத்து முடித்தார். அப்போது மீண்டும் கிருஷ்ணனுக்கே உண்டான அழகு, கண்களில் ஒளி. தான் இழந்ததை மீண்டும் பெற்றார். தன் பாவம் நீங்கியது எப்படி என்பதை கிருஷ்ணன்விளக்கினார். “சாப்பாடு போடுவது புண்ணியம், சாப்பிட்ட இலைகளை எடுப்பது அதைவிட புண்ணியம்” நான் ஒவ்வொரு இலையை எடுக்கும் பொழுதும் அந்த இலையில் புண்ணியம் மறைந்து இருந்தது. புண்ணியம் சேர சேர பாவங்கள் என்னை விட்டு மறைந்தன என்றார். பாவ புண்ணிய எல்லைகளை கடந்தவர் கிருஷ்ணன். இப்படி ஒரு சம்பவத்தை உருவாக்கியதே மனிதர்கள் ஆகிய நாம் வறட்டு கவுரவம், சாதி, இன, ஏழை, செல்வ ஏற்றத்தாழ்வு பார்க்கக்கூடாது என்பதை நினைவூட்டத்தான்! - தேவராஜன். நீங்க எப்படி நினைக்கிறீங்க? 28-- -18.3.2012 இந்த மாதம் ஐந்து நாள் லீவு எடுத்தாச்சு. சம்பளத்தில் 5000 ரூபாய் குறையுது என்ன பண்றது இப்படி ஒருத்தருக்கு கஷ்டம். கணவனிடம் மனைவிக்கும், மனைவியிடம் கணவனுக்கும் சின்ன பிரச்னை. இப்படி சிலருக்கு கஷ்டம். முதுகுவலி, பல் வலி,சளி ஒழுகுது உடம்பே சரியில்ல இப்படி சிலருக்கு கஷ்டம். உலகத்தில் இந்த மாதிரி கஷ்டங்கள் இல்லாதவர்களே இல்லை. உண்மையில் உலகத்தில் கஷ்டம் என்று ஒன்று இல்லை. எந்தக் கஷ்டம் வந்ததோ, அது நம் நன்மைக்காக வந்தது. நமக்கு வந்த கஷ்டத்தின் உருவில் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்த கடவுள் நடத்தும் நாடகம் இது. அதை நாம் உணராவிட்டால், கடவுளின் கருணையை நாம் இழந்து விடுவோம். கஷ்டத்தைக்கொடுத்து தான் கடவுள் தன் இருப்பைக்காட்ட வேண்டுமா, என்ன? ஏன் இன்பத்தைக் கொடுத்து தன் இருப்பைக்கடவுள் காட்டினால் என்ன? என்று கேள்வி சிலர் மனதில் எழும். உடல் ஆரோக்கியமானவர்களுக்கு இனிப்பு கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். ஆனால், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு கசப்புடன் சேர்த்து இனிப்பு கொடுத்தால் தான் நல்லது. முதலில் உள்ள கசப்பு நோயை குணப்படுத்தும். அடுத்ததாக உள்ள இனிப்பு மனசை சந்தோஷப்படுத்தும். இந்த நுட்பம் புரியாமல், நாமோ கசப்பை சாப்பிட்டதும், சட்டென்று துப்பி விட்டு கடவுளை விமர்சிக்கிறோம். மனதை துõய்மையாக வைத்திருந்தால் கடவுள் எப்போதும் இனிப்பைத்தான் கொடுத்துக்கொண்டிருப்பார். நாம் பேராசை, பொறாமை, கோபம், வஞ்சம், வெறி என பல அழுக்குகளைக் கொண்டிருந்தால் மனசு எப்படி ஆரோக்கியமாக இருக்கும்? அதானல் தான் கசப்பு கொடுக்கப்படுகிறது. இன்று நீ எதை கஷ்டம் என்று நினைத்துக்கிட்டு இருக்கிறயோ அதுதான் நாளைக்கு இன்பம். ஒரு சைக்கிள் வாங்கக்கூட வசதியில்லை. நாலு கி.மீ. நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இது கஷ்டமாக இருக்கிறது என்று மனம் நினைக்கிறது. வாழ்க்கையில் வசதி, வாய்ப்பு வந்ததும், உடலில் சுகர் வியாதியும் வந்து விடுகிறது. முதுமையில் குறைந்தது நாலு கி.மீ நடப்பது தான் ஆரோக்கியம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்போது வசதி இருந்தும் நடக்க வேண்டியிருக்கிறது. இப்போது நடப்பதை மனசு ஆரோக்கியமாக நினைக்கிறது. நடப்பது ஒரு செயல். அதை முன்னர் கஷ்டம் என்றும்; இப்போது ஆரோக்கியம் என்று மனசுதான் சொல்கிறது. சாதாரண மனித மனத்தின் சிந்தனை இது. ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது. ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா! கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா? இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி!” என்று நினைக்கிறது ஞானியின் மனசு! செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. கடவுளும் அப்படி தான். நீங்கள் எப்படி நினைக்கப் போறீங்க? - தேவராஜன். ஜென்ம வாசனை- 2-9-. 25.3.2012 நம் உடம்பு, நம் மனம், நம் வினை, நம் விதி, நமது வாழ்வின் குறிக்கோள் , நம் உண்மை இயல்பு இதெல்லாம் நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்வதில்லை. உலகத்தில் உயிரினங்கள் தோன்றி, பலபரிணாமங்களை அடைந்து, அது மனிதன் வரை உருபெறுகிறது. அப்படி உருவாகும் ஒரு ஆன்மாவுக்கு பல அனுபவங்கள் ஏற்படுகிறது. அது தான் ஜென்ம வாசனை. ஒரு ஆன்மா பல உயிர் இனங்களில் பயணம் செய்து மனிதனாக உருவாகும் போது, அது பிரம்மத்தை முழுமையாக அறிய ஆரம்பிக்கிறது. அதாவது தான் வந்த ஒன்றிலிருந்து இறுதியில் சேர வேண்டிய ஒன்றைப் பற்றி அறிய முயல்கிறது. இதை ஆன்ம தேடல் என்றோ பிறவிக் குறிக்கோள் தேடல் என்றோ சொல்லலாம். இந்தத் தேடலுக்காகக் தான் எல்லாரும் பிறக்கிறோம். ஆனால், இந்த தேடலில் சிலர் தோல்வியடைகிறார்கள். ஏன்? சிறிய உதாரணம்: ஒரு பெரிய ஷாப்பிங் மகால். உள்ளே நுழையும் போது என்ன வாங்கணும் என்ற ஒரு முடிவுடன் தான் இருக்கின்றோம். ஆனால், அந்தக் கடையை விட்டு வெளியே வரும் போது, நாம் வாங்க நினைத்த பொருளை வாங்காமல் வேறு ஒரு பொருளுடன் வருகின்றோம். உள்ளே சென்றதற்கும், வெளியே வருவதற்கும் இடைப்பட்ட அந்த காலத்தில் தான் மனத்தில் ஏற்பட்ட எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஒப்பிடுகையில் சிக்கி,வாங்க வேண்டியதை விட்டு, இன்னொன்றை வாங்கி விடுகிறோம். காரணம் என்ன? வாழ்க்கை என்பது ஒரு போட்டியாகிவிட்டது. இந்தப்போட்டியில் ஜெயிக்கலாம், தோற்கலாம். வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் மாறி மாறி நடக்கின்றன. லாபம், நஷ்டம் ஏற்படலாம். மனிதன் செய்யும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் இருக்கலாம். வாழ்க்கையில் இதுதான் நடக்குமென்று மனிதன் நிர்ணயிக்க முடியாது. வாழ்க்கையில் எந்த சம்பவம் வேண்டுமானாலும் நிகழலாம். வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதனால் நம் பிறவி லட்சியம் இலக்கை அடைய இயலாமல் போய்விடுகிறது. இலக்கை அடைய தடையாக இருக்கும் சுயநலம், ஆசை, அதீத பற்று, ஆடம்பரம் போன்ற குணத்தை நீக்கி, அன்பு, அமைதி, போதுமென்ற திருப்தியைக் கொண்டு, மனப்பக்குவத்தோடு தடைகளையும் இடர்பாடுகளையும் சமாளிக்க வேண்டும். உறுதியோடு இருக்க வேண்டும். இறைவனிடத்தில் அன்புகொண்டு அவன் தயவு கேட்டப்படி இருக்க வேண்டும். அப்படி வாழ்க்கைப் பயணத்தை நடத்த வேண்டும். வாழ்க்கைப் பயணத்தில் பிறவிக்குறிக்கோள் தேடலில் அடைய வேண்டியதை அடைந்தவர்கள் தங்களுடைய ஆன்மிக அனுபவங்களை இந்த உலகிற்கு வாய்வழியாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவித்து செல்கிறார்கள். அவர்கள் தான் கடந்து வந்த பாதை, மேலும் தான் கடக்க வேண்டிய நிலை இரண்டையும் சேர்த்து தனது அனுபவமாக விட்டுச் செல்கிறார்கள். அவர்களைத் தான் ஞானிகள், சித்தர்கள், குருமார்கள், அவதாரங்கள் என்று சொல்கிறோம். அவர்களின் அந்த அனுபவங்களை நாம் பின்பற்றினால் பிறவி பயனை அடைய இயலும். ஜென்ம வாசனையை புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்து கொண்டால் எங்கிருந்து வந்தோமோ, அங்கே நாம் செல்ல ஜென்ம வாசனை வழிநடத்திச் செல்லும். - தேவராஜன். முக்தி பெற எளிய வழி-- 30 - 1.04.2012 அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்றார் அவ்வை. மனிதப்பிறவி அவ்வளவு உயர்வானது; உன்னதமானது. காரணம் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத மோக்ஷத்தை, இந்த மனிதப் பிறவியில் நாம் அடையமுடியும். அதனால் தான் பல மகான்கள், சித்தர்கள், ஞானிகள் கிடைத்த இந்த மனிதப்பிறவியை பக்தியிலும் இறைவழிபாட்டிலும் ஈடுபடுத்திக்கொள்கின்றனர். ‘ஐயா, நான் சாதாரண மனிதன். எனக்கு குடும்பம் இருக்கிறது. வீடு இருக்கிறது. பிழைப்பு இருக்கு. நான் எப்படி சதாகாலமும் பக்தி செய்யமுடியும்? எப்படி இறைவனை நினைத்துக்கொண்டே இருக்க முடியும்?’ இப்படி பலர் கேட்பதும் வாழ்வியல் நியாயமே. இப்படிபட்டவர்களும் ஈஸியாக முக்தி பெறலாம். அதற்கு, எளிய வழிகளையும் மகான்கள் கூறியுள்ளனர். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி தலம். இந்த சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனம்,மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, ‘எனக்கு மறுபிறவி இல்லாத மோக்ஷத்தை தந்து அருள்புரிய வேண்டும்’ என்று நடராஜ மூர்த்தியிடம் பிரார்த்தித்துக்கொண்டால் மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும். தமிழகத்திலுள்ள திருவாரூர் தலத்தில் நல்ல உயர்ந்த தாய் தந்தையர்களுக்கு பிள்ளையாகப் பிறவியெடுத்தால், திருவாரூரில் பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அங்குள்ள ஸ்ரீதியாகராஜர் முக்தியை தந்து விடுகிறார். திருவாரூரில் பிறந்த அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். புண்ணியம்மிக்க கங்கா நதி பொங்கி ஓடுவதும், கைலாசவாசியான சிவன் தனது கணங்களுடன் விசுவநாதராக அன்னபூரணி யுடன் எழுந்தருளியிருக்கும் தலமான உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள வாராணசி என்னும் காசி தலத்தில் உடலைவிடும் அனைத்து ஜீவன்களுக்கும் தாரக பிரம்மமாகிய ஸ்ரீசீதாராமச்சந்திரமூர்த்தியே நேரிடையாக வலது காதில் ஸ்ரீராம நாமாவை சொல்லி மறுபிறவி இல்லாமல் செய்து,முக்தியை வழங்குகிறார் என்கிறது சாஸ்திரம்.ஆகவே காசியில் இறந்தால் முக்தி. ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன், இறப்பவரின் அருகில் இருந்து, பணிவிடைகளைச் செய்து, இறுதி காலத்தில் பெற்றோருக்கு வாயில் பால் விட்டு, அவரை தன் வலது துடையில் மடிமீது வைத்துக்கொண்டு,அவரது வலது காதில் கர்ண மந்திரங்களையும்,பகவான் நாமாவையும் கூறி அவரை நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்தால் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார் என்கிறது நமது சாஸ்திரம். இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது? திருவாரூரில் பிறத்தல் என்பது நம் கையில் இல்லை. ஆனால், எங்கு பிறந்திருந்தாலும், திருவாரூர் வந்து தியாகேசனை வழிபடலாம். மற்ற மூன்று வகை வழியையும் ஒருவர் பின்பற்றி முக்தி பெறலாம் தானே! - தேவராஜன். எல்லாம் ஒரு நாள் முடியும்! - - 31- 8.4.2012 ‘இதுவும் கடந்து போகும்’ நல்ல தத்துவம். இதைப் புரிந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என்ன? சாதனை, வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன! இப்படி யோசித்து பார்த்தால், இதுவரை வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து ஒரு திருப்பு முனை ஏற்படும். இப்போது வாழும் எவருமே ஆண்டாண்டு காலமாய் வாழப்போவதில்லை. பூமிக்கு நமக்கு சொந்தமில்லை. உரிமை கொண்டாட முடியாது. அதிகபட்சமாக நுõறாண்டு வாழலாம். அதுவும் நிம்மதியாக, சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்கும் என்றும் சொல்ல முடியாது. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் வாழும் வரை, முடிந்த வரை எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யலாம். எதிலும் திருப்தி அடையலாம். இப்படி வாழும் வாழ்க்கையில் பெரிய செல்வந்தராகவோ, பெரிய சாதனையாளராகவோ, பெயர், புகழ், பட்டம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயம் நிம்மதி கிடைக்கும். வாழ்க்கையில் நமக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலம் வரை வாழ்வோம். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்வோம். என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல கனவு காண வேண்டாம். ஏனென்றால், எல்லாம் ஒரு நாள் முடியும்! நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்னைகளும், கவலைகளும், இழப்புகளும் நிரந்தரமல்ல. அப்படி இருக்கும் போது வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது? சுகமும் துக்கமும் தொடர்வது முன்வினை பலன்கள். அதை தடுக்கவோ,அதிலிருந்து தப்பிக்கவோ இயலாது. இருநுõறு ஐம்பது காசுகளை சுமப்பது கஷ்டம். அதை ஒரு நுõறு ரூபாய் தாளாக சுமப்பது சுகம். ஆனாலும் இரண்டின் மதிப்பு ஒன்றுதான். அதை செலவிட்டுதான் ஆகணும். நல்ல மனதுடன், அடுத்தவருக்கு துன்பம் இழைக்காது, ஒரு நிம்மதியான வாழ்வு வாழ முடிந்தாலே , உங்களுக்கு இறைவனின் ஆசி உண்டு என்று நம்புங்கள். அப்படி இருக்க முடியவில்லை என்றால் , முறையான இறை வழிபாடு செய்யுங்கள். இறைவன் உங்கள் பாவ சுமையான காசுகளை, பணமாக மாற்றி தருவார். அதற்காக ஒரு நாள் முழுவதும் விடிய விடிய இறைவனை வழிபாடு செய்துவிட்டு, இன்னும் அந்த இறைவன் கருணை காட்ட வில்லையே என்று உடனே பலனை எதிர் பார்க்காதீர்கள். இறை வழிபாடு என்பதும், இறைவனின் கருணை என்பதும் , ஒரு விதையை விதைத்து, அதற்கு நீர் ஊற்றி , உரம் போட்டு வளர்ப்பதற்கு ஒப்பானது. மரத்திற்குரிய பலன் நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கும் கிடைக்கும். ஒரு சந்ததிக்கேகூட கிடைக்கும். அதனால் , உங்கள் மனதை இன்னும் பலப்படுத்துங்கள். இறைவனை முழுமையாக பற்றுங்கள். வாழ்க்கையில் இழப்பு நேரும் போதெல்லாம் ‘இதுவும் கடந்து போகும்’ என்று நினையுங்கள். சுகபோக சந்தோஷத்தில் இருக்கும் போது, ‘எல்லாம் ஒரு நாள் முடியும்!’ நினையுங்கள். இதை நீங்கள் நினைத்தால், உங்களை அந்த இறைவன் நினைத்துக்கொண்டே இருப்பான்! - தேவராஜன். நலம் தரும் நந்தன ஆண்டு! -32 -15.4.2012 புத்தாண்டு புதிதாக பிறக்கப் போகிறது என்றாலே எல்லாருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். இந்த ஆண்டாவது வளமான எதிர்காலம் அமையுமா? விலைவாசி குறையுமா? என்ற ஏக்கம் பிறக்கும். பிறக்கப்போகும் நந்தன ஆண்டில் நல்ல மழை பெய்யுமாம், அமோக விளைச்சல் இருக்கும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி குறையும். இந்த ஆண்டு நல்ல மழை பொழிந்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஆண்டு தான்யாதிபதியாக சூரியன் வருவதால் நெல், அரிசி, நவதான்யங்கள் விலை கொஞ்சம் குறையும். தேயிலை, காபி, நறுமணப்பொருட்கள்,மிளகாய், புளி, உள்ளிட்ட மளிகைச் சாமான்கள் விலை குறையும் என்று நந்தன ஆண்டுக்கான பலன் என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளவை எல்லாம் சாத்தியமாக நம்முடைய பிரார்த்தனையும் இருக்க வேண்டும். நாம் வாழும் உலகில் போட்டி, பொறாமை, நல்லெண்ணம் இல்லாமை, கள்ளம், கபடம் என தேவையற்ற காரணங்களால் உலகில் துன்பங்களும் துயரங்களும் துரத்துகின்றன. இதிலிருந்து மீள பிரார்த்தனை செய்வோம். பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. இறைவன் யாருடைய பிரார்த்தனையையும் நிராகரிப்பது இல்லை. யார் இறைவனிடத்தில் இரு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை செய்கிறார்களோ, அவர்களை வெறும் கை களாக திருப்பி அனுப்பவதில்லை இறைவன். இடைவிடாத பிரார்த்தனை இறைவன் காதில் தவறாது விழும். மனித வாழ்விலுள்ள எந்தச் சிக்கலையும் அவிழ்க்கும் திறனுடையது இடையறாத பிரார்த்தனை. நம் பிரார்த்தனை இறைவனிடத்தில் கண்டிப்பாக ஏற்கப்படும். இறைவனிடத்தில் எதற்காக வேண்டுமானலும் பிரார்த்தனை செய்யலாம். எந்த நேரத்திலும் பிரார்த்தனையை மேற்கொள்ளலாம் . பிரார்த்தனை செய்ய சுலோகங்கள்; மந்திரங்கள் அவசியமில்லை. மனத்தின் நம்பிக்கையும், இடைவிடாத இறைவனின் நினைப்பும் போதும். ‘ இறைவா! நாங்கள் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்திருப்பின் எங்களை மன்னிப்பாயாக! எங்களால் தாங்க முடியாத துன்பத்தை கொடுக்காதிருப்பாயாக! எங்கள் குற்றங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! கருணை காட்டுவாயாக! உலகில் பஞ்சம், பசி, நோய் கொடுமைகளைத் தீர்ப்பாயாக! நாடுகள் தோறும் நட்பும், நல்ல எண்ணமும், அன்பும், புரிந்துணர்வும் கொள்ள செய்வாயாக! எல்லோரும் எல்லாமும் பெற்று, இன்புற்று இருக்க அருள்புரிவாயாக!’ என்று எல்லோரும் பிரார்த்தனையால் பூமியை நனைப்போம்! இதைப்படிக்கும் வாசகர்கள் ஓரே ஒரு நிமிடம் உலகமும், மக்களும் நலம் பெறவேண்டும் என வேண்டி இறைவனை நினைத்தாலே போதும். ஒவ்வொரு நெஞ்சங்களின் பிரார்த்தனையும், வாழ்த்தும், ஆசிகளும் உலகமக்களை சிறப்பாக வாழ வைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. - தேவராஜன். ஆசைப்படு தவறல்ல! -- 33 -22.4.2012 ஒவ்வொருவரின் நோக்கம் இவ்உலக வாழ்வில் சுகமாக, நிம்மதியாக, செல்வ செழிப்போடு குடும்பம், உறவு, நண்பர்கள் என சுகபோகமாக வாழணும் என்ற ஆசைதான் இருக்கும். இது யாவர்க்குமான இயல்பு. ஆசைகளை அழிக்க வேண்டும் என்று முற்றும் உணர்ந்த ஞானிகள் போல், புத்தரைப் போல தம்மைக் காட்டிக்கொள்வோர் கூறும் பொய்த் தத்துவத்தை எல்லாம் கேட்டால் வாழ்கை சுகப்படாது. எதையும் அடைய ஆசைகள் வேண்டும். அது பக்தியாகட்டும்; செல்வம் தேடுவதாக இருக்கட்டும் எதற்கும் ஆசைதான் அடிப்படை. ஆடைபாதி ஆள் பாதி என்பது போல ஆசைபாதி ஆள்பாதி என்றுதான் இருக்க வேண்டும். ஆசைப்படுதலும் ஒருவழிபாடுதான்! இந்த உலகில் வாழ நமக்கு வேண்டியவை எவை என்பதை உணர்ந்து நேர்மையாக, நியாயமான வகையில் நம் சக்தி கேற்ப, நிறைவேற்றத் தக்க ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்ளுதல் பாவம் அல்ல. ஒரு இனிய பாடலைக் கேட்டு, பாடி மகிழ்வது, உற்ற நண்பர்களுடன் ஒன்றுகூடி பேசி, சிரித்து களிப்பது, நம் மனசுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணையை தேடுவது, காதல் கொள்வது, மனம் விரும்பும் துணைவரை மணம் செய்து கொண்டு இல்லற இன்பம் துய்ப்பது, நல்ல பிள்ளைகளைப் பெற்றடைவது, நம் பிள்ளைகளுக்காக நமது வாழ்வை அர்ப்பணிப்பது எல்லாம் ஆசைகளே! இது பாவம் என்றோ, இப்படிபட்ட ஆசைகள் துன்பத்திற்கு காரணம் என்றோ நினைத்தால், நாம் வாழ்வதில் எந்த அர்த்தமும் இருக்காது. பிறவி பயன் அடைய இதெல்லாம் செய்துதான் ஆகவேண்டும். பிறந்து, வளர்ந்து, படித்து, வேலையைத்தேடி, மணம் முடித்து, பிள்ளைகள் பெற்று, அவர்களை ஆளாக்கி, அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுத்துவிட்டால் பலர் தம் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிவிடுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையின் பாதி கடமை முடிந்ததுவிட்டது. மீதி வாழ்க்கையை தான் யார் என்பதையோ, தாம் பிறந்த நோக்கம் என்ன என்பதைபற்றி அறிய ஆசைப்பட வேண்டும். சிலர் தம் குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்த பின்னர் சமுதாயத்தில் உள்ள பிறரைப் பற்றியும் அக்கறைகொண்டு சேவை புரிய மீதமுள்ள தமது வாழ்நாட்களைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்கின்றனர். இது கர்மயோகம். உலகம் போற்ற பொதுநலப் பாதையில் வாழ்வை அர்ப்பணித்து இறந்தும் இறவா புகழ் அடைகின்றனர். சிலர் காசி,ராமேஸ்வரம், கங்கை, யமுனை புண்ணிய தலங்களுக்கும், பக்தி, பஜனை, தியானம் என்று இறை நினைப்பிலேயே காலத்தைக் கழித்து முக்தி நிலையை பெற புண்ணியம் தேடுகின்றனர். இப்படி ஏதேனும் ஒரு வழியில் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்துச் செல்ல இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வது நம் ஒவ்வொருவரின் விருப்பமே! மரணத்தை நோக்கிய மனித வாழ்வில் தாம் வாழ்ந்த சுவடு தெரியாமல் உலகிலிருந்து மறைந்து போவது சரியா? கொஞ்சம் யோசியுங்கள்! - தேவராஜன். இறை உணர்வு! --34- 29.4.2012 நாம் தாய் வயிற்றில் இருந்து பத்து மாதத்தில் இதே தாய் மண்ணில்தான் பிறந்தோம். இதே காற்றைத் தான் சுவாசிக்கிறோம். இதே நீரைத்தான் பருகுகி றோம். எல்லாருக்கும் ஒரே சூரியன், நிலவு தான்! அப்படியிருக்கையில், எல்லாரும் ஏன் ஒரே மாதிரியாக இருப்பதில்லை? ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டு இருக்கிறோமே, ஏன்? இந்த வேற்றுமைகள் எல்லாம் எப்படி வந்தது? சத்யம், தர்மம், சாந்தி, அன்பு, அஹிம்சை ஆகியவை தான் உண்மையான மனித உயர் குண நலன்கள். இந்த குணங்கள் இயற்கையாகவே நம்மிடம் இருக்கின்றன. இந்த குணங்களில் ஏதாவது ஒன்றை நாம் இழந்தாலும் கூட மனித இயல்பு மாறிவிடும். கோபம் என்பது நாயின் இயல்பு. சலனப்படுத்திக் கொண்டே இருப்பது குரங்கின் குணம். தந்திரம் நரியின் குணம். இப்படி பல குணங்களை விலங்குகள், பறவைகள் கொண்டிருக்கின்றன. அவை அவைகளுக்கு வாழ உதவுகின்றன. உயர்ந்த குணங்களைப் பெற்ற நாம் விலங்குகளின் குணங்களைக் கொண்டிருக்கிறோம். நமக்கு கோபம் வரும் போது நான் நாயல்ல, நான் மனிதன் என்றும், நம் மனம் அலை பாயும் போது நாம் குரங்கல்ல என்றும் நினைவுகொண்டு, மனித குணத்தை பின்பற்றுங்கள். சக மனிதர்களிடம் அன்பு செலுத்தாமல், மணிக்கணக்காக தியானம், வழிபாடு செய்வதால் மட்டுமே யாரும் பக்தியை முழுமையாக பெற இயலாது. உண்மையான பக்தி, ஆன்மிக சாதனை என்பது சேர்ந்து வாழ்வதும், பிறருக்கு உதவுவதும், அனைவருடனும் சேர்ந்து சமுதாயம் முழுமைக்குமாக சேவை செய்வது தான். எதிர்ப்பார்ப்பில்லாத அன்பு, தியாகம், தருமம் இவைகளாகத் தான் இறைவன் பரிணாமித்திருக்கிறான். இது தான் இறைவனின் குணங்கள் என்றால், அந்த குணம் கொண்டுதானே இறைவனை புரிந்து கொள்ள இயலும்? அன்பே இறைவன். ஆகவே அன்பிலேயே வாழுங்கள். தியாகமே இறைவனை அறிய பாதை. அந்தப்பாதையில் செல்லுங்கள். தருமமே இறைவனின் முகவரி. தருமம் செய்து வாழுங்கள். உங்கள் கோரிக்கைகள் இறைவனின் கவனத்திற்கு நிச்சயம் செல்லும். எந்த ஒரு செயலையும் ஆன்மிகப் பார்வையோடு அணுகுங்கள். சத்யம், அன்பு இவற்றைப் பின்பற்றிச் செய்யும் கடமையை விட, சிறந்த ஆன்மிகப் பயிற்சி முறை வேறெதுவுக்கும் ஒப்பாகாது. அன்பையும், தியாகத்தையும் உங்களது உயிர் மூச்சுக் காற்றாக எண்ணுங்கள். உங்கள் புலன்களை அடக்குங்கள். மனிதனின் உயர்குணநலன்களை இழந்து விட்டால் மனிதன் என்கிற அடையாளத்தையே நீங்கள் இழந்து விடுவீர்கள். பிறகு, எப்படி இறைவனுக்குப் பிரியமாகுவீர்கள்? சத்யம், தர்மம், சாந்தி, அன்பு, அஹிம்சை எனும் இக்குண நலன்களின் மேல் நம்பிக்கைக்கொள்ளுங்கள். அவற்றைப் போற்றி, வளர்த்து. அவற்றிடமிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவியுங்கள். அது தான் உண்மையான இறை உணர்வு! - தேவராஜன். இறைவன் நடத்தும் தேர்வு! 35/6.5.2012 பச்சை பசேல் மலைகள். சில்லென்ற காற்று, பாடி பறந்திடும் பலபறவைகள். சல சலத்து ஓடும் ஆற்று நீர். பசுமை வயல்கள், தோட்டங்கள். அலையோடு அலை மோதும் கடல். துõரத்தே தொடுவானம். இரவில் விண்மீன், ஒளி வீசும் நிலா. இதுபோன்ற இயற்கைக் காட்சிகள் மனிதனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை, அமைதியை, பரவசத்தைத் தருகின்றன. மனிதன் மகிழ்கிறான். இவற்றை படைத்த இறைவனை நினைத்து பெருமைபடுகிறான். இதமான காற்று புயலாய் உருவெடுக்கும்போது, சில்லென்று ஆற்று நீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுக்கும்போது, மலையில் எரிமலை வெடிக்கும் போது, பூமிப்பரப்பில் பூகம்பம் புறப்படும்போது தவித்துப் போய் விடுகிறான் மனிதன். ஏன் இந்த கொடூரம் என்று இறைவனை வசைபாடுகிறான். மகிழ்ச்சியை வழங்கிக் கொண்டிருந்த இயற்கை, திடீரென துன்பத்தை தருவது ஏன்? இறைவனே அனைத்தையும் படைத்தவன் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் இரண்டுக்கும் அவன்தான் பொறுப்பு. மனிதன் நலமாய் இருந்திடும்போது மகிழ்கின்றான். வெற்றிகள், சாதனைகள் பெறும் போது மகிழ்ச்சி. மணம் முடித்த மனைவி கண்டு மகிழ்ச்சி. குழந்தைக்குத் தந்தையானால் மகிழ்ச்சி. சொத்துக்கள், செல்வம் பெருக பெருக மகிழ்ச்சி. எல்லாம் இறைவன் கொடுத்தப் பரிசு என்று இறைவனை கொண்டாடுகிறான். திடீரென்று ஒரு நாள் நோயுற்றால், விபத்தொன்றில் சிக்குண்டால், தன் தொழிலில் நஷ்டங்கள் ஏற்பட்டால், உறவுகளால், நண்பர்களால் ஏமாற்றப்பட்டால் நம்பிக்கை இழந்து, இறைவன் தன்னை வஞ்சித்து விட்டதாக ஓலமிடுகிறான். இதுவா பக்தி? இதுவா இறைவன் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கை? நல்லதே நடந்தால் போற்றுவதும், அல்லதே நடந்தால் துõற்றுவதும் இறைபக்தியாகாது. இதை புரியவைக்க இறைவன் செய்த ஏற்பாடு தான் இந்த முரண்பட்ட நிகழ்வுகள். சிலருக்கு எல்லாம் இருக்கிறது அமைதி இல்லை! அழகான மனைவி சந்தோஷம் இல்லை! குழந்தைகள் இருக்கின்றன நிம்மதி இல்லை. கவலை இல்லாத வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லையே ஏன்? ஏன் நோய்? ஏன் பிறப்பு? இறப்பு? இறைவன் நடத்தும் திருவிளையாடல்களுக்கு எல்லாம் அர்த்தம் உண்டு. அதை புரிந்து கொண்டால் மனப் பக்குவம் வரும். பூமியில் பிறப்பெடுத்தால் நல்லதும் கெட்டதும் உண்டு. இன்ப துன்பம் இருக்கும். பிறவிகள் தொடரும். பிறந்து பிறந்து இறக்க வேண்டியிருக்கும். இதை புரியவைக்கத்தான் இறைவன் இப்படி லீலை புரிகிறான். பிறவா பேரின்பம் பெறவேண்டுமானால் நாம் பந்த, பாச,ஆசாபாசங்களில் இருந்து விடுபட வேண்டும். அதற்கு நம்மை தயார் செய்ய, பிறவா பேரின்பம் பெற இறைவன் நடத்தும் தேர்வுகள் அவை. தேர்வில் தேர்ச்சிப் பெற நாம் முயன்றால் என்ன? - தேவராஜன். இறைவனை தொடர்பு கொõள்ள.. 36/ 13/5/2012 மனிதன் ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறான். ஆனந்தத்தைப் பெறுவது சுலபமல்ல. ஆனந்தம் என்பது முழுமையானது. நிலையாக, துõயதாக, நிரந்தரமானதாக. இரட்டை நிலையைக் கடந்ததாக இருக்கக்கூடியது. தீய குணங்கள், செயல்கள் கொண்ட மனிதன் இந்த உயர்ந்த ஆனந்தத்தை அனுபவிக்க இயலாது. ஆனந்தம் இருக்கும் இடம் இதயம். இதயம் என்பது இறைவனின் கருவறை. அதனை தீய எண்ணங் களாலும். தீய உணர்வுகளாலும் மாசுபடுத்திவிட்டு ஆனந்தத்தை தேடினால் அது கிடைக்காது. இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உடல் அந்த ஆனந்தத்தை பெறுவதற்குத்தான். அதற்காக, இந்த உடலை நல்ல தர்மமான வழியில் செயலாற்றுவதற்கும், சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்த வேண்டும். வீணே உறங்குவதற்கும், உண்பதற்கும், பருகுவதற்கும், கேளிக்கை மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது. இதற்காகவா இறைவன் இந்த உடலையும் அதற்கும் அளப்பெரிய சக்திகளையும் கொடுத் திருக்கிறார்? பிறர்க்கு நன்மை செய்வதிலும், சேவை புரிவதிலும், இறைவனை தொழுவதிலும் உடலைப் பலப்படுத்தலாம். நல்ல எண்ணங்களைப் போற்றி வளர்க்கையில் மனதை செம்மை படுத்தலாம். இந்த இரு செயல்களும் ஒருமுனையில் சந்திக்கும் இடம் ஆனந்தம்! மனிதனின் எண்ணங்கள் மாறுபாடாக, ஒழுங்கு கட்டுப்பாடில்லாமல் இருந்தால் அங்கே அல்லல்களைத்தான் சந்திக்க முடியும். காலையிலிருந்து மாலை வரை, இறைவனை மறந்து விட்டு இந்த உடல் அடையப்போகும் சுகம் எதுவாக இருந்தாலும் அது நிரந்தரமல்ல. இந்த உடல், மனம் ஆனந்தத்தை அடைந்து, அதன் வழியாக இறைவனோடு சங்கமிக்க வேண்டும். ஒரு ஜடப்பொருளான தொலைபேசிக்கே இணைப்புகள் ஏற்படுத்த முடிகிறது. மனிதனுக்கும், இறைவனுக்கும் இணைப்பு ஏற்படுத்த முடியாதா என்ன? இதயத்துக்கு இதயம் இணைப்பு கொடுக்க அன்பு என்கிற மின்காந்த அலைவேண்டும். மனசாட்சி என்கிற தொலைபேசி எண் வேண்டும். பக்தி எனும் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டால் உங்கள் இணைப்புகள் எல்லாம் நேராக இறைவனோடு இணையும். உங்களுக்கு இறைவன் வேண்டும் என்ற உண்மையான உணர்வு மட்டும் இருக்குமானால், இறைவனே நேரில் உங்களிடம் வந்து பேசுவார். அன்பு, பக்தி, மனச்சாட்சி இல்லாமல் இறைவனோடு தொடர்பு கொண்டால் இறைவன் தொடர்பு எல்லை அப்பால்தான் இருப்பார். யாரையும் வெறுக்காதீர்கள்;துன்புறுத்தாதீர்கள்; விமர்சிக்காதீர்கள். யாரையும் துன்புறுத்தாமல், அதே நேரத்தில் தானும் புண்படாமல் இருந்து, இறைவனை நொடிப்பொழுதும் மறவாமல், நல்லதே நினைத்து, நல்லதே செய்துகொண்டிருந்தால் இறைவனே உங்களோடு தொடர்பு கொண்டு பேசுவார். - தேவராஜன். இறைவனின் ஆசை! 37/ 20.5.2012/ பக்தி, யோகம் என்றால் காட்டுக்குச் சென்று துறவியாக வாழ்வது, வீட்டை துறந்து சொந்த பந்தங்களை வெறுத்து தன்னந்தனியனாக திரிதல், ஒரே இடத்தில் அமர்ந்து தன்னை மறந்து தியானம் செய்தல், காலை மடக்கிக் கொண்டு உட்காருதல், ஒரு காலில் நிற்பது போன்றவற்றை செய்வதுதான் யோகம், பக்தி செய்யும் முறை என சிலர் நினைக்கின்றனர். இவைகள் எல்லாம் யாருக்கு முடிகிறதோ அவர்கள் செய்துவிட்டு போகட்டும். இவை எல்லாம் என்னால் முடியாது என்பவர்கள் சுலபமாக பக்தி செய்யலாம். உண்மையான யோகம் என்பது உங்கள் அன்பை, இறைவனோடும், சக மனிதர்களோடும் இணைப்பது மட்டுமே. இறைவன் எதையும் உங்களிடமிருந்து விரும்பவில்லை. அவர் உங்களை யோகம், தியானம் செய்ய வற்புறுத்தவில்லை. அவர் கேட்பதெல்லாம், உங்கள் இதயங்களில் இருந்து சுரக்கும் ஆத்மார்த்தமான, துõய, எதிர்பார்ப்பு இல்லாத அன்பை, தியாகத்தைதான். இதுவும் கூட இறைவனுக்கு உதவபோவதில்லை. அதன் பலன் முற்றிலும் நமக்காகத்தான். உலகில் உண்மையோடு, பக்தியோடு அன்றாட கடமைகளை நிறைவேற்றினால் நீங்கள் கேட்காமலேயே, உங்களது தேவைகள் அனைத்தையும் இறைவன் நிறை வேற்றுவார். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பாராட்டப்படவேண்டும். போற்றப்படவேண்டும். உங்களை எல்லாரும் நேசிக்க வேண்டும். உதவ வேண்டும். நீங்கள் சொல்வதை பிறர் பின்பற்ற வேண்டும் இப்படி உங்கள் விருப்பப் பட்டியல் நீளும். எல்லாம் சரிதான். நீங்கள் எதை எல்லாம் பெற விரும்புகிறீர்களோ, அவற்றை எல்லாம் பிறருக்கு நீங்கள் செய்தாலே உங்கள் மனம் பக்குவப்பட்டுவிட்டது என்று பொருள். பக்குவப்பட்ட மனதிற்கு தனியாக ஒரு யோகமோ, பக்தியோ அவசியப்படாது. எப்போது ஒருவரின் சிந்தனைகள், செயல்கள் எல்லாம் அன்பின் வழியாக இருக்கிறதோ, சுயநலம் இல்லாமல் பிறர் நலம் கருதி செயல்படுகிறதோ, அப்போதே அவர் இறைவனின் பார்வையில், வழிநடத்தலில் இருக்கிறார் என்றாகிவிடும். பிறர் துயர் துடைக்க அல்லது இறைவன் வந்து இருக்க உதவும் இந்த உடலை துõய்மையாக, ஆரோக்கியமாக வைத்துகொள்வோம். ஆதலால் புகை பிடிப்பது, மது அருந்துவது, போதை வஸ்துகளை பயன்படுத்துவதை தவிர்ப்போம். உணவு, பணம், காலம், சக்தி ஆகியவற்றை வீணாக்காதீர்கள். வன்முறை, தீய எண்ணங்களை மனதில் எழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த உலகம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும். அதில் வாழும் மனிதர்கள் எல்லாம் ஆனந்தமாக இருக்கட்டும் என்பது இறைவனின் ஆசை. அதற்காகத்தான் உலகமும், உயிர்களும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறது. இறைவனின் ஆசையை நாம் நிறைவேற்றினால் அதில் நம் ஆசைகளும் நிறைவேறிவிடும். - தேவராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக