திங்கள், 29 ஜூலை, 2013
ஆன்மிகம்: ஆறு ( 94 முதல் 101ம் வாரம் வரை)
ஆன்மிகம்: ஆறு ( 94 முதல் 101ம் வாரம் வரை)
(தினமலர்- வாரமலரில் ஆன்மிகம் பகுதியில் 11.9.2011 தேதியில் இருந்து நான் எழுதிவரும் ஆன்மிக தொடரின் ஐந்தாம் பாகம்)
-----...........................தாராளமா இருக்கனும் தயாள குணம்!/95/ 30.6.13/....................................
இல்லறத்தில் இருப்பவர்கள் தயாள குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக தினசரி ஆயிரம் ருபாய்க்குக் காசோலை எழுதி அநாதை இல்லங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதல்ல.
இக்காலத்தில் வசதிமிக்கவர்கள் கூடச் சற்றுக் கருமிகளாகவும், வசதியற்றவர்களில் சிலரோ தங்கள் வாழ்க்கைக்கே இடையூறு வரும் அளவிற்குத் தானம் செய்கிறார்கள். இந்த இருவேறு நிலையும் இருக்கக்கூடாது.
யாருக்கோ எதையோ கொடுத்த பிறகு எதாவது நல்ல விளைவு கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருப்பதும் சரியல்ல.
தானத்தை அவ்வப்போது மட்டும் அல்ல; வருடம் ஒருமுறை என்றில்லாமல் தினமும் ஒரு முறை செய்தால் மிகவும் நல்லது.
கொடுக்கும் போது சந்தோஷமாக கொடுக்க வேண்டும். கரும விளைவுப்படி வினைப்பயன் நமக்குத் திரும்ப வரும்போது பன்மடங்கு பெரிதாக வரும். ஆனால் வரும் பயன் கொடுக்கும் போது இருந்த அதே மன உணர்ச்சியுடன் வரும்.
கொடுத்த பிறகு என்றைக்கும் அதற்காக வருத்தப்படக் கூடாது. கொடுத்த தானம் தவறாகப் பயன் படுத்தப் பட்டாலும் சரி, தொலைக்கப் பட்டாலும் சரி, கொடுத்ததற்கு நன்றி உணர்வு தெரிவிக்கப்படாமல் இருந்தாலும் சரி - கொடுத்ததைப் பற்றி வருந்தாதீர்கள். எந்த மனநிலையில் நீங்கள் பொருளை முந்தைய வாழ்விலோ இந்த வாழ்விலோ கொடுத்திருந்தாலும் அது பன்மடங்காகி கொடுத்த அதே மனநிலையில் உங்களிடமே திரும்ப வரும் .
கொடுப்பதென்பது பொருள் மட்டுமில்லாமல் நேரத்தையோ உழைப்பையோகூடக் கொடுக்கலாம், அன்பைக்கூடக் கொடுக்கலாம்.
உள்ளம் சார்ந்த தானமாகவும் இருக்கலாம் - அதாவது ஒருவரிடம் அன்பாக பேசுவதே ஒரு வகைத் தானம் தான்.
உங்கள் பூஜைஅறையில் ஒரு உண்டியலை வைத்து அதில் ஒவ்வொரு நாளும் ஒரு ரூபாயையோ, ஐந்து ரூபாயையோ போட்டு வாருங்கள். அப்படி ஒரு மாதம் சேமியுங்கள். ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் இந்தத் தயாளச் செயலைச் செய்யுங்கள். தினசரி காலைக் கடன்களை முடித்துக் குளித்த பின்பு உங்கள் உண்டியலில் சற்று மகிழ்ச்சியான மன நிலையில் ’இந்தப் பணம் ஒரு நல்ல காரியத்திற்குப் பயன்படட்டும்’ என்று எண்ணிப் பணம் போடுங்கள்.
மாதக் கடைசியிலோ வருடக் கடைசியிலோ உங்கள் விருப்பமுள்ள கருணை நிறுவனத்திற்கோ, ஒரு கோயிலுக்கு விளக்கெரிக்கவோ, ஓர் ஏழையின் கல்விக்கோ கொடுத்துப்பாருங்கள்.இப்படிக் கொடுப்பதில் ஏற்படும் மகிழ்வு நீடித்து நிலைத்திருக்கும்.
பிறருக்கு உதவிட தினமும் ஆயிரம் வாய்ப்புகள் வருகின்றன. அதில் ஒன்றையாவது உதவி, தயாள குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.
ஏனெனில், தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.
- தேவராஜன்.
******************************************************************************************************************************************************
....................பூட்டைத்திற! மகிழ்ச்சி வரட்டும்!/96/ 7.7.2013/.......................................
நாம், நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பல இருக்கின்றன.
காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் செய்வது, உறங்குவது என்பது போன்ற பணிகள் நாள்தோறும் இருக்கின்றன.
இதுதவிர, இன்னும் சில கடமைகள் இருக்கின்னற. அது, மனதின் அமைதிக்காகத் தியானம், கடவுள் வழிபாடு, யோகா போன்ற செயல்களையும் செய்யவேண்டும்.
உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க உதவ நம் உடம்பில் கோசம் என்ற தொகுதி இருக்கிறது. இக்கோசங்கள் ஐந்து . அவை அன்னமய கோசம், பிரணாமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்த மய கோசம்.
தினமும் நம் உடலில் இருக்கும் இந்த ஐந்து கோசங்களும் ஒழுங்காகச் செயற்பட்டால் மட்டுமே அமைதியாக, ஆனந்தமாக உயிர் வாழஇயலும்.
தினமும் குளிக்கிறோம். வயிற்றின் அழுக்கு நீக்குகிறது. இதன் மூலம் அன்னமய கோசம் சுத்தம் ஆகின்றது.
மூச்சுப் பயிற்சியின் காரணமாக பிரணாமய கோசத்தை சுத்தப்படுத்தலாம். தினம் தினம் மனதின் அழுக்கை நீக்க, இறைவனை தவறாது வணங்கி, வழிபாடு செய்தால் மனோமய கோசமும் சுத்தம் பெறும்.
எதிலும் நன்மை, தீமை இருப்பது போல அறிவிலும் அழுக்குச் சேரும். அந்த அழுக்கைப் போக்க நல்ல நுõல்களைப் படிக்கவேண்டும். இவற்றின் காரணமாக துன்பம், கவலைகளை போக்கி ஆனந்த மய கோசத்தின் எல்லையைத் தொட முடிகின்றது. இவை எல்லாம் தினமும் நம்மால் செய்ய முடிந்தவைதான்!
இதற்கு மேலான தத்துவ மயத்தை நல்லகுருவின் துணையால் அடைய முடியும்.
வாழும் வாழ்க்கையில் நாள்தோறும் உடல், மூச்சு, மனம், அறிவு ஆகியன இயங்குகின்றன.
தினம் தினம் ஓய்வின்றி அவை செயல்படுவதால் அவை பழுது ஆகலாம் இல்லை? அசுத்தம் ஆகலாம் இல்லையா? அதனால் அவற்றைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது.
நல்ல எண்ணங்கள் மூலமாக, நல்ல செயல்களை செய்வதும், நல்லதே நினைப்பதும், நம் துணையாக இறைவனை எப்போதும் வைத்திருக்கும் செயல்கள் வழியாக ஐந்து கோசங்களை தினம் தினம் சுத்தி செய்யலாம். அப்படி செய்து வந்தால் என்றும் மனதில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்தான்!
எனவே நாளும் பொழுதும் குற்றம் நீக்க வேண்டும்.
நாளும் குறைகள் களைய வேண்டும். உடல் வளர்க்கவேண்டும். உயிர் வளர்க்க வேண்டும். நல்ல மணம் வளர்க்க வேண்டும். நல்லறிவு வளர்க்க வேண்டும். நல் ஆனந்தம் துõய்க்க வேண்டும்.
இறைவன் நம் உடலில் கொடுத்த ஐந்து கோசங்கள்தான் நிம்மதிக்கான, ஆனந்தத்திற்கான சாவி. அந்தச் சாவியை நாம் நன்றாக பராமரித்து, பயன்படுத்தி வந்தால் போதும்.
கையில் சாவி இருக்கும் போது கவலை எதற்கு? பூட்டைத் திற, மகிழ்ச்சி வரட்டும்!
- தேவராஜன்.
********************************************************************************************************************************************************
.............................தமிழ் பக்தி மொழி!/97/ 14.7.2013/.............................................
உலகில் பல மொழிகள் இருக்கின்றன. நம் தமிழ் மொழிக்கென்று தனிச்சிறப்பு உள்ளது.
பக்தி இலக்கியங்கள் அதிகமுள்ள ஒரே மொழி நம் தமிழ்மொழி மட்டுமே.
தமிழ் பக்தி மொழி. தமிழ் பேசினாலே தெய்வ அருள் கிட்டிவிடும்.
ஆழ்வார்களில் ஒருவர் திருமாழிசையாழ்வார். திருமாலே அவர்முன் தோன்றி, எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்துள்ளார்.
‘ நாராயணனை தொழுதால் நல்ல குலம், சிறந்த செல்வம், அருளுடன் கூடிய பணம் கிடைக்கும்’ என்பதை தனது பாசுரத்தில் தெளிவாக குறிப்பிடுகிறார்.
குலசேகர ஆழ்வார், தன்னை தசரதனாக பாவித்து, பெருமாளை ராமனாக பாவித்து, துõய தமிழில் தெய்வத்துக்கே தாலாட்டு பாடினார்.
தமிழகத்தில் தோன்றிய மகான்கள் நாம் சிறப்பாக வாழ்வதற்கு ஏராளமான கருத்துக்களைத் தமிழில் கூறிச் சென்றுள்ளனர்.
தவறுகளை திருத்திக் கொள்வதற்காக, திருவள்ளுவர் நமக்கு திருக்குறளை கொடுத்துள்ளார்.
ஆழ்வார், நாயன்மார் பாடல்கள் தெய்வத்தின் குரல் என்றே சொல்லலாம். அவர்கள் பாடல்கள் துறவறத்தை பழிக்கவில்லை; இல்லறத்தை வெறுக்கவில்லை. நிலையாமை உணர்த்தப்படுகிறது. இந்த உலக இன்பங்களைஅனுபவித்து இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவை பன்னிரு திருமுறைகளும், நாலாயிரம் திவ்விய பிரபந்தமும் தருகிறது.
உலக வாழ்வைக் கண்டு அஞ்சும் அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியில் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்கிறது திருஞான சம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்.
ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் கடவுளுக்குமுன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தை வலியுறுத்தின.
தமிழுக்கென்று, தமிழர்களுக்கென்று பண்பாடு இருக்கிறது. மற்ற மொழியினர் தங்கள் குழந்தைகளுக்கு பொருட்களை காட்டித்தான் எழுத்துக்களை அறிமுகப்படுத்துவர். நாம் மட்டும் தான், ‘அ’ அறம் செய்ய விரும்பு என்று மொழியோடு சேர்த்து பண்பையும் கற்றுக்கொடுக்கிறோம்.
அ + உ + ம் = ஓம்
இதனை- தனித்தனியாக உச்சரித்துப்பாருங்கள்!
‘அ’என்னும் அகாரம் அடிவயிற்றிலிருந்து ஒலிக்கும்.
‘உ’ என்னும் உகாரம் நெஞ்சுக்குழியிலிருந்துஒலிக்கும்.
‘ம்‘ என்னும் மகாரம் தொண்டையிலிருந்து ஒலிக்கும்.
இம்மூன்றையும் சேர்த்து ஒன்றாக உச்சரிக்கும்போது, நம் உடலில் மூலாதாரம் தொடங்கி... ஆக்கினை வரையிலான ஆறு ஆதாரங்களும் (சக்கரங்கள்) சீரடையும்.
இந்த ஓங்காரத்தை நாம் இயல்பாக பயன்படுத்தும் வழியை தமிழ் தந்திருக்கிறது.
வருவோம் = வரு + ஓம்
செல்வோம் = செல் + ஓம்
இப்படி பல வார்த்தைகள் ஓங்காரத்தை இயல்பாக நம்மை உச்சரிக்க வைத்துவிடுகிறது தமிழ்!
நாம் தமிழை சரியாக உச்சரித்து, பேசினால் அதுவே பெரிய யோகப்பயிற்சிதான்!
மனிதனாய் பிறப்பது அரிது. தமிழனாய் பிறந்து தெய்வத்தமிழில் பேசுவது அதனினும் அரிது!
-தேவராஜன்.
*******************************************************************************************************************************************************
..............................ஆடி மாதம் பக்தி மாதம்!/98/ 21.7.2013/...................................
ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பிற்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வகையில், தமிழ் மாத பிறப்பு என்பது சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை கர்கடக மாதம் என்பார்கள்.
சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாதப் பிறப்பாகும்.
ஆடி மாதம் நம் எண்ணங்கள் எல்லாம் இறைவனோடு வைத்துக் கொள்ள உதவும் கருவியாக இருக்கிறது.
கண்ணனுக்கு மார்கழி மாதம் போல, ஆடி மாதம் பெண்களுக்கு உகுந்த மாதம் என்றே கூறலாம். அதனால் தான்
இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.
ஆடி மாதத்தில் வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும் விரத வழிபாடுகளும் களைகட்டும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று எங்கும் பக்தி தான்!
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.
ஆடிவெள்ளி அன்று அம்மன் வழிபாடு மிகப் பிரசித்தம். இது சகல பாக்யங்களையும் அள்ளித் தரும். குழந்தைப் பேறு கிடைக்கும். ஆடி ஞாயிற்றுக்கிழமை நேர்த்திக் கடன்களையும், பிரார்த்தனைகளையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.
அலகு குத்துதல், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல் என்று இந்த மாதம் முழுவதும் பக்தியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பையும் ஆர்வத்தை ஏற்படுத்தி தருவது ஆடி மாதம் என்றால் மிகையில்லை!
இந்த மாதத்தில் வரும் ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி, ஆடிக் கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, வரலட்சுமி விரதம் என விசேஷ வைபவங்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கும்.
இந்த மாதத்தில் வரும் சிறப்பு நாட்களில் கோயிலுக்குச் சென்று வந்தாலே போதும் புண்ணியம் தான்!
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாகும். அன்று நம் முன்னோர்களை வணங்கி, திதி கொடுப்பதும் அன்னதானம், வஸ்திர தானம் செய்வதும் இம்மைக்கும், மறுமைக்கும் புண்ணிய பலன்களை சேர்க்கும் என்பது ஐதீகம்.
ஆடி 18 மிக சிறப்பான நாள். இது இயற்கையை வழிபடும் நன்னாள்.
ஆற்றிலும், நதியிலும் நுரை பொங்க புரண்டு வரும் நீரை வணங்குதல் மரபு. இப்போது ஆற்றில் தண்ணீர் வருவதில்லை.
ஆதலால், கடற்கரைகளில் மக்கள் கூடுகிறார்கள்.
இந்த நாளில், கன்னிப் பெண்கள் திருமணம் கூடிவர அம்மனை வேண்டி கழுத்தில் மஞ்சள் சரடு கட்டிக் கொள்வார்கள்.
இத்தனை சிறப்புகள் கொண்டுவரும் ஆடி மாதத்தில், நாம் இறை பக்தி செலுத்தி இறைவன் அருள் பெறுவோமாக!
- தேவராஜன்.
***********************************************************************************************************************************************************
..............................சுலபமாக பாராயணம் செய்யலாம்!/99/28.7.13/....................................
நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை எல்லாம் நீக்கி, மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர்.
ஓர் அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும்.
சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம்.
24,000 சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள். 68 அத்தியாயங்கள். வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.
இவ்வளவையும் எல்லாராலும் ஒரே மூச்சில் படிக்க இயலாது. பலருக்கு நேரம் கிடைப்பது இல்லை.
இத்தகையவர்களின் நலன் கருதி, ஐந்தே நிமிடங்களில் சுந்தர காண்டத்தை படிக்க அதன் சுருக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சுருக்கத்தைப் படித்தாலே, சுந்தர காண்டத்தை முழுமையாக படித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களில் பெரிவாச்சான்பிள்ளை என்னும் மகான் தொகுத்து அருளிய பாசுரப்படி இராமாயணம் என்பதில் கீழ் வருமாறு சுந்தர காண்டம் உள்ளது:
“சீர் ஆரும் திறல் அனுமன் மா கடலைக் கடந்து ஏறி,
மும்மதிள் நீள் இலங்கை புக்கு,
கடிகாவில் வார் ஆரும் முளை மடவாள் வைதேகிதனைக் கண்டு,
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டு அருளாய்:
அயோத்தி தனில் ஓர் இடவகையில் எல்லியம்போது இனிது இருத்தல்
மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததுவும்
கலக்கிய மாமனத்தனளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாது ஒழிய,
“குலக்குமரா! காடுறைய போ!” என்று விடை கொடுப்ப,
இலக்குமணன் தன்னொடும் அங்கு எகியதும்,
கங்கைதனில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீர் அணிந்த தோழமை கொண்டதுவும்,
சித்திர கூடத்து இருப்ப பரத நம்பி பணிந்ததுவும்,
சிறு காக்கை முலை தீண்டி மூவுலகும் திரிந்தோடி,
“வித்தகனே! இராமா! ஒ! நின் அபயம்” என்ன,
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்,
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட,
நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக,
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்,
அயோத்தியர்கோன் உரைத்த அடையாளம்,
“ஈது அவன் கை மோதிரமே!” என்று,
அடையாளம் தெரிந்து உரைக்க,
மலர்க்குழலாள் சீதையும்,
வில்லிறுத்தான் மோதிரம் கொண்டு,
“அனுமான்! அடையாளம் ஒக்கும்” என்று,
உச்சி மேல் வைத்து உகக்க:
திறல் விளங்கு மாருதியும் இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து,
காதல் மக்களும் சுற்றமும் கொன்று,
கடி இலங்கை மலங்க எரித்து,
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு,
அன்பினால் அயோத்தியர் கோன் தளிர் புரையும்,
அடி இணை பணிய!”
மேலே சொன்ன இந்த பாடலைப் பாராயணம் செய்ய 5 நிமிடம் போதும்! தினமும் பக்திக்காக 5 நிமிடம் ஒதுக்கி, இந்தப்பாடலைப் பாராயணம் செய்தால் சுந்தரகாண்டம் பாராயணம் செய்த புண்ணியம் கிட்டும்.
- தேவராஜன்.
*********************************************************************************************************************************************************
.................................ஹிந்துத்துவத்தின் மேன்மை!/100/......................................
உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை, அது ஹிந்துத் தன்மை. அதாவது ஹிந்துத்துவம். இதன் சிறப்புகள் பல. ஆண் - பெண் உறவில் புனிதம், விருந்தோம்பல், குடும்ப முறை, அன்னை, பிதா, ஆசிரியன் ஆகியோரை இறைவனுக்குச் சமமாகக் கருதுதல் போன்றவை.
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல்” எனப் பாடியவர் நமது தாயுமானவர்.
‘சர்வே ஜனா சுகினோ பவந்து’ எனச் சொன்னவர்கள் நம் முன்னோர்கள்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று குரல் கொடுத்தவன் ஒரு தமிழன்.
ஹிந்து மதத்தில் தினந்தோறும் அனைவரும் சொல்லும் பிரார்த்தனை மந்திரமாக,‘லோகாஸ் ஸமஸ்தோ சுகினோ பவந்து’ -அனைத்து லோகங்களும் சுகமுடையதாக ஆகட்டும் என்ற மந்திரம் பிரபஞ்சம் அனைத்தின் நலத்தையும் வேண்டுகிறது.
’சர்வே ஜனா: சுகினோ பவந்து’ என்ற மந்திரம் எல்லா மக்களும் சுகமுடன் இருப்பார்களாகுக! என்ற பிரார்த்தனையைப் புரிய வைக்கிறது.
’ஆத்மனோ மோக்ஷார்த்தாய; ஜகத் ஹிதாய ச’ என்ற குறிக்கோளை ராமகிருஷ்ண மடத்தின் குறிக்கோளாகப் பொறித்தார் விவேகானந்தர்.
அதாவதுஆத்மா, மோக்ஷம் அடையட்டும்; உலகம் சுகத்தைப் பெறட்டும் என்ற குறிக்கோள் அனைவரின் மோக்ஷத்தையும் சுகத்தையும் தழுவிய குறிக்கோளாக, பிரார்த்தனை மந்திரமாக அமைந்திருக்கிறது.
இவைகள் எல்லாம் இந்திய நாட்டின் பண்பின் பிரதிபலிப்பாக உதிர்ந்த வார்த்தைகள்.
எல்லா ஜீவராசிகளிடமும் அன்பு செலுத்தும் பண்பு இந்த நாட்டின் பண்பு.
மனித நேயம் என்பது மனிதனிடத்து அன்பு செலுத்துவது. மாறாக விலங்குகள்,பறவைகள், தாவரங்கள் என அனைத்திடமும் அன்பு செலுத்தும் ஜீவகாருண்யம் இந்திய நாட்டின் பண்பாடு.
‘சர்வ தர்ம சம்மான்’அதாவது அனைத்து தர்மங்களையும் சமமாக பாவியுங்கள் என்பது ஹிந்துத்வா.
ஹிந்துவம் சொல்கிறது ‘ஏகம்சத் விப்ராஹ, பஹுதா வதந்தி’ அதாவது சத்தியம் ஒன்றுதான் ஆனால் பலவிதமாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் வழியில் அதை சொல்கிறார் அவ்வளவுதான்!
எல்லாவற்றையும்விட, ஹிந்துத்வாவின் மிக உன்னதமான குறிகோள் இது தான்:
‘சர்வே பவந்து சுகினஹ’, ‘சர்வே சந்து நிராமயா’,
‘சர்வே பத்ரானி பஷ்யந்து’, ‘மா கஷ்சித் துகபாக் பவேத்’!!
இதன் பொருள்:
எல்லோரும் நன்றாக இருக்கட்டும். எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கட்டும்.
எல்லோருக்கும் நல்ல கல்வியும் ஞானமும் கிடைக்கட்டும்.
இந்திய பண்பாட்டின் குறிகோளும் ஹிந்து மதத்தின் வேண்டுதலும் எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்த உலகத்தின் நன்மையைத்தானே நினைக்கிறது!
- தேவராஜன்.
*********************************************************************************************************************************************************
.........................................101/
மனிதனின் அன்பும்
இறைவனின் அருளும்...............................................................
அன்பு என்ற உணர்வு அழகானது. இன்பமானது. இறைவனுமானது.
கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க எடுக்க மேலும் மேலும் தண்ணீர் சுரப்பதுபோல, நெஞ்சில் இருந்து அன்பு சுரந்து கொண்டே இருக்கும்.
இந்தகைய அன்பு மனிதர்களிடம் அவர்களது பக்குவ நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு வடிவில் வெளிப்படுகிறது.
உயர்ந்த ஞான நிலையில் உள்ளவர்களுக்கு
அது ஜீவகாருன்யமாக அருளாக வெளிப்படுகிறது. உதாரணம் வள்ளலாரைச் சொல்லலாம். அவர் மனசு ‘வாடிய பயிருக்காக வாடியது’அல்லவா?
பக்குவப்பட்ட மனிதர்களிடம் சுத்த அன்பாக வெளிப்படுகிறது. இது பிரதிபலன் பாரதது. இதற்கு <உதாரணமாக பல ஞானிகள், சித்தர்கள் இருக்கிறார்கள்.
பக்குவம் இல்லாத மனிதர்களிடம் அது ஆசையாக அல்லது காமமாக வெளிப்படுகிறது. இதற்கு உதாரணம் நம் வாழ்க்கையில் பலரைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அன்பின் உயர்ந்த நிலை ஜீவகாருண்யம்.
அன்பின் கீழ் நிலை காமம்.
ஒரு எதிர்பார்ப்புடன் செலுத்தப்படுவது அன்பு. நாம் சகமனிதர்கள் மேல் காட்டுவது அன்பு. பக்தர்கள் இறைவன் மீது செலுத்துவது அன்பு. இவை எல்லாம் வெளிப்படையாக,ஒரு எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.
கணவன், மனைவியிடம் அன்பு செலுத்துகிறான். அதற்கு பிரதிபலனாக அவளின் அன்பையும், கவனிப்பையும் எதிர்பார்க்கிறான்.
தாய் தனது பிள்ளையிடம் அன்பு செலுத்துகிறாள். பிள்ளையின் பாசத்தையும், சந்தோசத்தையும் பிரதிபலனாக எதிர்பார்க்கிறாள். இதுபோல நாம் இறைவனிடம் காட்டுகிற அன்பு அவனின் அருளையும், கவனிப்பையும் வேண்டி நிற்பதாகும்.
இறைவன் உலகத்து உயிர்கள் மீது செலுத்துவது அன்பு அல்ல; அது அருள்.
அருள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதது. மேலான ஒருவரால் கீழான நிலையில் உள்ளவரிடத்துக் காட்டப்படுவது அருள். அது இறைவனுக்கு மட்டுமே உரியது.
இறைவன் மீது நாம் அன்பு செலுத்தினால், இறைவன் நம் மீது அருள் காட்டுவான். இதற்கு உதாரணங்கள் நம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் உள்ளன.
கண்ணப்ப நாயனார் வழிபட்ட விதம், ஆண்டாள் வழிபட்ட விதம், சபரியின் பக்தியும் இறைவன் மீது அன்பு செலுத்தியதுதானே!
இறைவன் அருள் பெற துறவியாக இருக்க வேண்டியதில்லை. தவம், தியானம் செய்ய வேண்டியதில்லை. மந்திரங்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
தூய்மையான, உறுதியான அன்போடு மனமுருகிச் செய்யும் பிரார்த்தனைகளாக இருக்க வேண்டும்.
இறைவன் மீது அன்பு கொண்டிருந்தால் போதும். இறைவன் நம்மைத் தேடி வருவான்.
தருமி என்ற தரித்திரப் புலவன், கண்ணப்பன் என்ற வேடுவன், வந்தி என்ற பிட்டு விற்கும் கிழவி இவர்களின் அன்புக்காக, இறைவன் அவர்களைத் தேடி வந்த கதைகள் நாம் அறியாதவர்களா, என்ன?
- தேவராஜன்.
****************************************************************************************************************************************************
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக