செவ்வாய், 27 மே, 2014

ஆயிரமாயிரம் குகைகள் மர்மங்கள்... - தேவராஜன்.


**************************************************************** 27. ஆயிரமாயிரம் குகைகள் மர்மங்கள்... - தேவராஜன். ************************************************************* மத்திய நேபாளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் முஷ்டங் மலைபாங்கான பகுதி. இது பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இப்பகுதியில் மனிதர்களால் கட்டப்பட்ட வித்தியாசமான குகைகள் நிறைய உள்ளன. இங்கு இருக்கும் ஆயிரமாயிரம் குகைகள் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னதாக முஷ்டங் பற்றி தெரிந்து கொள்வோம்! 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை முஷ்டாங் பல அரசர்கள் ஆண்ட பகுதி. முஸ்டாங் மாகாணம் பண்டைய திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. புத்த மத வழிபாட்டிற்கும், கலைக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கு உப்பு வணிகம் நடைபெற்றது. 17 ம் நூற்றாண்டிற்கு பிறகு, இப்பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கியது. ஒரு கட்டத்தில் எவ்வித தொடர்பும் அற்றுப்போன பகுதியாகிப் போனது. சில குடும்பங்கள் இன்னும் இந்த குகைகளில் வசிக்கிறார்கள். குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக இருப்பதாகவும் ; குடி நீர் கிடைப்பது இப்பகுதியில் கடினமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த முஷ்டாங் பகுதியில் இருக்கும் ஆயிரக்கணக்கான குகைகளுக்கு உள்ளே செல்வதற்கு பாதைகள் கிடையாது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. பெரும்பான்மையானவை 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. அகழ்வாராய்சியாளர் ஏறக்குறைய ஒரு லட்சம் குகைகள் இருப்பதாக மதிப்பிடுகிறார். இவற்றில் பெரும்பான்மையானவை ஆராய்சிக்கு உட்படுத்தப் பாடாதவை மட்டுமல்ல; இன்னும் பல குகை இருக்குமிடமே கண்டறியப்படாமல் இருக்கிறது. இவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ? எதற்காக, யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு மேற்கொண்ட குழுவிற்கு ஏற்பட்டது. இந்தக் குகைகளை தொல்பொருள் ஆய்வாளர் பீட் எதென்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது. இவர் முதலில் 1981 ல் இப்பகுதியில் ஆராய்ச்சி மேற்கொண்டார். 2011ம் ஆண்டு எட்டாவது முறையாக இப்பகுதியை மார்க் அலெண்டெர்பெர் (கலிபோர்னிய பல்கலைக்கழகம்) மற்றும் ஜாக்குலின் இங் என்ற பெண் ஆராய்சியாளரும் (வெஸ்டர்ன் மெக்சிகன் யுனிவர்சிட்டி), மோகன் சிங் லாமா என்ற நோபாளிய தொல்பொருள் ஆய்வாளரும் ஆய்வு செய்தனர். மர்ம நிகழ்வுகள் : ஆய்வுக் குழுவினரில் இருவருக்கு குகைகளில் அடுத்தடுத்த ஆய்வின் போது , அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டது. ஆய்வு தடை பட்டது. லிங்கன் எல்ஸ் என்ற விடியோ கிராஃபர் ஹெல்மெட் எடுத்த சமயத்தில், கற்கள் சரிந்து தலையில் விழுந்து மண்டை எழும்பு உடைந்து. ஆபத்தான கட்டத்தில் காத்மாண்டுவில் சிகிச்சை பெற்று பின் நலமடைந்தார். இன்னொருவர் ரிச்சர்ட் (மலை ஏறி மற்றும் போட்டோகிராபர்) விழுந்து அடிபட்டதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு ஹெலிஹாப்டரில் மீட்கப்பட்டார். இந்த மோசமான நிகழ்வுகள் அந்த குகைகளை பாதுகாக்கும் ஸ்ப்ரிட்டுகளினால் ஏற்பட்டது என்பது அந்த பகுதியில் வசித்த ஒரு லாமாவின் கணிப்பு. இந்தக்குகைகள் மர்மங்கள் பற்றி விவரிக்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் பீட் எதென்ஸ்: ‘இமய மலையின் பெரும்பகுதி ஒரு காலத்தில் கடலில் மூழ்கிய நிலையில் இருந்த நிலப்பரப்பு என்கிறார்கள். இமய மலையின் 5ஆயிரம்-6 ஆயிரம் அடி உயரத்தில் கடல் அலையின் அரிப்பின் சுவடுகள், கடல் உயிரினம் படிமம் ஆனவை எல்லாம் கிடைத்துள்ளன. அக்காலத்தில் பெரு வெள்ளம், அல்லது கடல் நீர் அங்கு புகுந்து இருக்கலாம், அதன் விளைவாக உயரமான இடத்தில் குகை அமைத்து தங்கி இருப்பார்கள். இப்படி கடல் நீர் மட்டம் உயர்ந்ததை அப்போது பல வரலாற்று,புராண நூல்களிலும் குறிப்பிட்டு இருக்கிறார்கள், இதனை‘ பெரு வெள்ளக்காலம்’ என்கிறார்கள். வெள்ளத்திற்கு பயந்தே மக்கள் உயரமான இடத்திற்கு குடிப்பெயர்ந்திருக்க வேண்டும்’ என்கிறார் அவர். பாக்ஸ் செய்தி * சாம்ட்ஜோங் குகையில், ஓர் இறந்த உடல் ஒரு சவப் பெட்டியில் இருந்தது. இறந்த உடல் வெறும் எலும்புக்கூடாக இருந்தது. பெட்டி மூடியின் மேல் ஒரு குதிரையின் மீது வீரன் ஒருவன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு நிழல் சித்திரம் இளஞ்சிகப்பு மையால் வரையப்பட்டிருந்தது. இடதுபுறம் செழிப்பன ஒரு மரம் அதன் வலதுபுறம் காய்ந்து போன மரம். இந்த குகை ஒரு வசதியானவர்களுக்கான மயான குகையாக இருந்திருக்க வேண்டும். மேலே சொன்ன மம்மிகளுடன் 30 சிதைந்த மம்மிகள் கிடைத்தன. மம்மிகள் மரத்தாலான சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தன. 2 ஆயிரம் வருடங்கள் பழமையானவை. இவற்றின் உடலில் பட்டையான துணிகளால் சுற்றப்பட்டிருந்தன. தாமிர கை வளையல்கள், கண்ணாடியாலான நீள் பாசிவடிவ மணி மாலைகள்,சங்கு மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. ***********

சனி, 17 மே, 2014

குழந்தைகளின் சொர்க்கம்! - தேவராஜன்


குழந்தைகளின் சொர்க்கம்! - தேவராஜன் ---------............................................................ 26 .................................................................... ‘ஜாக்ஸன் 5’ இசைக் குழுவில் சுண்டிவிட்ட நாணயம் போல சுழன்று சுழன்று அவன் ஆடிப் பாடியபோது ‘என்ன ஓர்அழகான, திறமை மிக்கச் சிறுவன்!’ என்று அமெரிக்காவே வியந்தது! அவன் ஒன்பது வயதிலேயே நட்சத்திர அந்தஸ்தை பெற்றான். பின்னாளில் உலகமே பாப் இசை மன்னன் என்று அவனைக்கொண்டாடியது. அந்தச் சிறுவன் தான் மைக்கேல் ஜாக்சன்! மைக்கேல் ஜாக்சன் 1958 ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி இண்டியானா நகரில் ஜோசப் வால்டர் - கேத்ரின் எஸ்தர் என்ற தம்பதிக்கு ஏழாவது மகனாக பிறந்தார். மைக்கேல் ஜாக்சனின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 8 பேர். இவர் தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டர். ஜோசப் ஒரு இசைக் கலைஞன். ஜோசப் தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்திய குழுவில் இருந்தார். ஆனால் அவரால் சாதிக்க முடியவில்லை. அதனால் தன் மகன்களுக்கு கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார். ஆறு வயதில் ஆரம்பப் பாடசாலையின் பாடல் போட்டியில் மைக்கேல் ஜாக்சன் முதல் பரிசு வாங்கினார் . பின் இசையில் நாட்டம் அதிகமாக மைக்கல் ஜாக்சன் தன் சகோதரர்களுடன் சேர்ந்து ஜாக்சன்-5 என்ற குழுவில் இணைந்தார். ‘ஜாக்ஸன் 5’ இசைக் குழுவின் மூலம் அந்தச் சின்ன வயதிலேயே இசை நிகழ்ச்சிகளை அமெரிக்கா முழுக்க நடத்தி நிறைய பணம் சம்பாதித்தான் மைக்கேல் ஜாக்சன்! அதே சமயம் அந்தச் சிறுவன் ஒரு சராசரி குழந்தைக்கான விளையாட்டு, பொழுது போக்குகள், கதை கேட்டல், அன்புச் சீராட்டல்கள், பெற்றோரின் கதகதப்பில் தூங்குதல், பொம்மைகளோடு விளையாடுதல் போன்ற இன்பங்கள் அவனுக்கு கிடைக்கவேயில்லை. அதுமட்டுமல்ல; வீட்டில் அப்பா, “ஏய் குரூபியே...” என்றுதான் அவனை அழைத்தார். சகோதரர்கள், “நீள மூக்குக்காரா...” என்று சொல்லி கேலி செய்தார்கள். ‘அழகில்லாதவன்’ என்று கேலி செய்யப்பட்டதாலும், தந்தையின் குரூரமான தண்டனைகளாலும் மன ரீதியான அழுத்தத்தில் இருந்த அந்த இளைஞன், தன் பால்ய கால ஏக்கங்களை நிறைவேற்ற நேவர்லேன்ட் என்கிற பண்ணை வீடு ஒன்றை வாங்கினார். லாஸ் ஏன்ஜலஸ்-லிருந்து 50 மைல் தொலைவில் உள்ளது சாண்டா பார்பரா. இயற்கை எழில் மிக்க ரம்மியமான சோலைகள் மற்றும் பசிபிக் கடலின் அலைகளாலும் சூழப்பட்ட அழகு பகுதி அது. உலகப்புகழ்ப்பெற்ற பணக்காரர்களின் ஓய்விடமாகவும் இவ்வூர் திகழ்கிறது. சாண்டா பார்பராவின் 50 மைல் வடமேற்கில் உள்ளது லாஸ் ஆலிவ்ஸ். இங்குதான் சுமார் 2600 ஏக்கர் பரப்பளவில் நெவர்லேண்ட் ரான்ச் ஹோம் எனப்படும் அழகிய பண்ணைவீட்டை முன்னாள் பாப் பாடகர் மைக்கேல் ஜாக்ஸன் தனது ஓய்விடமாக வைத்திருந்தார். நெவர்லேண்ட் ஒரு பிரம்மாண்டமான வீடு. மாயாஜாலக் கதைகளில் வருவது போன்ற அமைப்புடையது. இதை தன்னுடைய 33ம் வயதில், மிகப் பெரும் கற்பனா சக்தியில் மைக்கல் ஜாக்சன் அதை வடிவமைத்திருந்தார். அதை உலகின் மிகப் பெரிய சிறுவர் பூங்கா என்றே சொல்லலாம். இந்த மாளிகையில் ஏழு பாடும் குள்ளர்கள், சிம்பன்ஸி, மலைப்பாம்பு, மூன்று ஒட்டக சிவிங்கிகள், மான்கள், வாத்துக்கள், வரிக் குதிரைகள், நெருப்புக் கோழிகைளைக் கொண்ட ‘மினி ஜூ’ இருந்தது. சில்வர் ஓக் மரக்காடுகளில் பறவைகள் பாடின. காமிக்ஸ் பாத்திரங்களின் சிலைகள் நிறுவப்பட்டிருந்தன. வீட்டின் வாசலில் இருந்து அந்த மாளிகை சுற்றி ஒரு சிக்கு புக்கு ரயில் புகை விட்டுக்கொண்டு ஓடியது. நடு நடுவே குட்டி ஸ்டேஷன்கள். அதில் சாக்லேட் மற்றும் ஐஸ்கீரிம் விற்கும் கடைகள். குழந்தைகளுக்கான சினிமா தியேட்டர். அங்கேயிருந்த ஏரியில் பொம்மை வடிவிலான படகுகள். குழந்தைகளுக்குப் புரியும் வகையிலான படங்கள் கொண்ட புத்தகங்கள் நிரம்பிய லைப்ரரி இருந்தது. ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஸ்பெஷல் படுக்கை வசதிகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் உண்டு. முழுக்க முழுக்க பொம்மைகளால் நிரப்பப்பட்ட பெரிய ஹால் என்று குழந்தைகளின் சொர்க்கமாகவே இருந்தது அந்த மாளிகை. இந்தப் பிரம்மாண்டமான மாளிகையில் நிறைய குழந்தைகளை கூட்டி வந்தார். அவர்களுடன் ரயிலில் அந்த மாளிகையைச் சுற்றிச் சுற்றி வந்தார். தியேட்டரில் அவர்களுடன் அமர்ந்து பல காமிக்ஸ் படங்களைக் கண்டு களித்தார். ரோஸ்வுட் பியானோவில் இசை கற்றுக் கொடுத்தார். தான் மிகவும் ஆசைப்பட்டு கட்டிய ‘நெவர்லேண்ட்’ மாளிகையில் மொத்தம் நான்கு ஆண்டுகளே வாழ்ந்தார் ஜாக்ஸன். கட்டற்ற செலவுகளைச் சமாளிக்க முடியாமல் அந்தக் கனவு மாளிகை மூடப்பட்டது. மிகப் பெரிய கனவு மாளிகை கட்டி, அதில் தானும் ஒரு சிறுவனைப் போல் வாழ நினைத்த அந்த இசை அரசனின் கனவு பாதியிலேயே கலைந்து போனது. ==================================*****************************

வெள்ளி, 2 மே, 2014

மரண பள்ளத்தாக்கில் நடக்கும் கற்கள்! - தேவராஜன்


மரண பள்ளத்தாக்கில் நடக்கும் கற்கள்! - தேவராஜன் அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு தேசிய பூங்காவின் பெயர் டெத் வேலி நேஷனல் பார்க். இந்த தேசிய பூங்கா ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும். டிம்பிஸா பழங்குடியினரால் இப்பள்ளத்தாக்கிற்கு டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்தது. 1849ம் ஆண்டில் தான் ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் இதற்கு டெத் வேலி எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கலிபோனியா தங்க நெருக்கடி காலத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அக்குழுவில் பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் உயிரிழந்து விட்டார். அதனால், கனிம வள ஆய்வாளர்களால் இது டெத் வேலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 1850ம் ஆண்டு காலப்பகுதிகளில் மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1933 ம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. 1994ம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்காவின் 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும். இப்போது போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 1940ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு. இந்த மர்ம பிரதேசத்தில் தான் விஞ்ஞானிகளுக்கும் ஆராய்ச்சியாளருக்கும் இதுவரை பிடிக்கொடுக்காத புதிர்கள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த டெத் வேலி என்கிற மரண பள்ளத்தாக்கில் மணல் பரப்பில், ஆயிரக்கணக்கான கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. இந்த அதிர்ச்சி தகவல் 1948ல் வெளியாகியது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு பாலைவானம் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் இந்தப் பகுதியில் ஆங்காங்கே மணல் பரப்பில் ஆயிரக்கணக்கான கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். மணல் பரப்பில் இந்த கற்கள் ஏன் நகருகின்றன? எதற்காக நகருகின்றன? எப்படி நகருகின்றன என்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் இங்கு படையெடுக்க ஆரம்பித்தனர். 1972 ம் ஆண்டிலிருந்து 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இங்கு ஆராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் இங்கே கல் தனது நகர்வைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் மட்டும் நகர்ந்தபாடில்லையாம்! இங்குள்ள கற்கள் மூன்று ஆண்டுகளில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறதாம்! இதனை அந்தக் கற்கள் பணிக்கும் பாதை சுவடே அடையாளம் காட்டுகிறது. இங்கே கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக்க ஆரம்பித்து, சமமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது. இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை! ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது இந்த பள்ளத்தாக்கிற்கு அருகில் ஒரு மலை இருக்கிறது. அந்தமலையில் இருந்து விழும் கற்களே இந்த மணல் பரப்பில் நடக்கிறது. மலையில் இருந்து விழும் சில கற்கள் 10 ஆயிரம் அடி வரை நகர்கின்றது. சில கற்கள் சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகர்கின்றது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்கும் தொடர்புகள் இல்லை. இங்கு மணல் பரப்பில் கற்கள் மர்மமாக நகர்வதற்கு காரணம் இந்த பாலைவனத்தின் அமைப்பா? அங்குள்ள களி மண் காரணமா? காற்றின் வேகத்தினால் தள்ளப்படுகிறதா? மேலே சொன்ன எந்தக் காரணமும் அதற்கு சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆக இந்த மர்மத்திற்கான விடை ஒரே குழப்பம்தான்! அது இன்னும் தீரவில்லை! நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் சொன்ன விடையிலும் உறுதியில்லை. இந்த மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன? என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஆராய்சிகளை விட இங்கு கற்கள் அதிவேகத்தில் நகர்கின்றன என்பது ஒரு பெரிய ஆச்சரியம்! *****************

பறக்கும் தட்டு மர்மங்கள்... - &&&தேவராஜன்.


பறக்கும் தட்டு மர்மங்கள்... - &&&தேவராஜன். வானத்தில் பறக்கும் தட்டுகள் அவ்வப்போது பறந்து வருகின்றன. அதில் வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றனர். வேற்றுகிரக வாசிகள் நம் பூமியை ஆய்வு செய்து வருகின்றனர். இப்படி எல்லாம் பல அதிர்ச்சி தகவல் உலகில் பல பகுதிகளில் இருந்தும் இன்றும் வந்துகொண்டே இருக்கின்றன. வானத்தில் பறப்பதாக சொல்லப்படும் எதுவென்று திட்டவட்டமாக குறிப்பிடமுடியாத இந்த பறக்கும் பொருட்களை ‘அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள்’ (க்ணடிஞீஞுணtடிஞூடிஞுஞீ ஊடூதூடிணஞ் Oஞடீஞுஞிtண்) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகில் பறக்கும் தட்டுகள் பற்றிய சுவாரஸ்யமான சில சம்பவங்களைப் பார்க்கலாமா? 1960ம் ஆண்டில் அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பகுதியில், பறக்கும் தட்டு ஒன்று இறங்கியது அதை அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் பார்த்தனர். பால் ட்ரெண்ட் என்பவர் அதனை படமெடுத்தார். பத்திரிகைகளிலும் அது பற்றிய செய்திகள் வெளியானது. 1973ல் அமெரிக்காவின் நியூ ஆர்லின்ஸ் துறைமுகத்தின் பணிபுரியும் இருவர் பறக்கும் தட்டைக் கண்டனர். இரவு நேரத்தில் வேலை முடித்து அவர்கள் வீடு திரும்பும் போது பறக்கும் தட்டு அவர்கள் முன் தோன்றியது. அதிலிருந்து இறங்கிய சில உருவங்கள் அவர்கள் இருவரையும் பறக்கும் தட்டுக்குள் கொண்டு சென்று, சில ஆய்வுகளைச் செய்தன. அரைகுறை மயக்கத்தில் இருந்த இருவரும் தங்களுக்கு நடப்பனவற்றை உணர முடிந்தாலும் அவர்களால் அந்த பறக்கும் தட்டு மனிதர்களை எதிர்த்து எதுவும் செய்யாத நிலையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். 1088ம் ஆண்டின் இடைப்பட்டப் பகுதி. சீன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷென் குயோ என்பவர் ட்ரீம் பூல் என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த கட்டுரை யில்,சீனாவில் ஒரு கிராமப் பகுதியான யாங்க்சௌ என்ற பகுதியைச் சேர்ந்த அன்ஹூய் மற்றும் ஜியாங்சு விவசாயிகள் தாங்கள் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்த போது, வானத்தில் இருந்து தட்டு போன்ற ஒரு பெரிய பொருள் பறந்து வந்தது. அந்தப் பொருளில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்து கண்கூசத்தக்க ஒளி பாய்ந்து வருவதைக் கண்டதாகவும் அதன் நிழல், பத்து மைல் தூரம் வரை நீண்டு இருந்து இருந்ததாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். 1878ம் ஆண்டு. வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டென்னிசன் என்ற தினசரிபத்திரிகை. ஏ ஸ்ட்ரேன்ஜ் பினோமினா (புதுமையான பெயர் தெரியாத உருவம்) என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டுருந்தது. அந்தச் செய்தியில், டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் மார்ட்டின் என்பவர், தான் வயலில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் தான் கண்டதாகவும், அது பலூன் வடிவில் ஒத்திருந்ததாகவும் தன் ஆச்சர்யத்தை வெளியிட்டிருந்தார். 1904ம் ஆண்டு, அமெரிக்காவில் இருந்து சரக்குக் கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 300 மைல்கள் மேற்கே பயணித்துக்கொண்டிருந்தபோது, மூன்று பிரகாசமான முட்டைவடிவ மற்றும் வட்ட வடிவ பொருள்கள் அணிவரிசையாக வேகமாக பறந்து சென்றதும், பின்னர் தன் போக்கை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார் அக்கப்பல் மாலுமி. இப்படி விதவிதமான பறக்கும் தட்டு சம்பவங்கள் பற்றி விஞ்ஞானிகளின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா? ‘பறக்கும் தட்டுக்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. அவ்வாறு ஒருவேளை இருந்தாலும், ரேடார் போன்ற கருவிகள் அவற்றைத் துல்லியமாகக் கண்டுபிடித்துக் கூறி விடும் என்றும் கூறுகின்றனர். ஒரு சில ஆய்வாளர்களோ பறக்கும் தட்டுக்கள் மிக வேகமாக ஒளியின் அளவிற்கு வேகமாகப்பறப்பவை என்றும் அதனால்தான் ரேடாரின் கண்களுக்குச் சிக்குவதில்லை என்றும் கூறுகின்றனர். பாக்ஸ் செய்தி: *பிரிட்டன் நாடு மட்டும் பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக தாம் சேகரித்து வைத்துள்ள இரகசிய அறிக்கைகளை வெளியிட்டது. 6ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை 1994 – 2000 வரையான காலப் பகுதியில் பறக்கும் தட்டுக்கள் குறித்து திரட்டப்பட்ட தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. * அது முதலில் 240 கிமுவில் வானில் அதிசயதக்க ஒரு பொருள் பார்த்ததாகவும் அது ஹாலியின் வால்மீன் என்று சீன வான சாஸ்திர வல்லுநர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது. * அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றி புலனாய்வுகளுக்கு உட் படுத்தப்பட்டு, பல ஆண்டுகள் நோக்கத்தில் பரவலாக ஆய்வுகள் நடத்தப்படு வருகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, யு.கே, ஜப்பான், பெரு, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன், பிரேஸில், சிலி, உருகுவே, மெக்ஸிகோ, ஸ்பெயின், மற்றும் சோவியத் யூனியன் போன்ற நாடுகளில் அரசாங்கமோ அல்லது கல்வியியல் சுயேச்சை அமைப்புகளோ அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் பற்றிய அறிக்கைகள் பற்றி பல்வேறு கால கட்டங்களில் புலனாய்வுகள் செய்து கொண்டு வருகின்றன.

புதையுண்ட ரோஜா நகரம்! - ................................................... தேவராஜன்


புதையுண்ட ரோஜா நகரம்! - ................................................... தேவராஜன் .............................................................................................................. ஒரு நகரமே ரோஜா வண்ணத்தில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்? அப்படி ஒரு நகரம் இருக்குமா? உண்மையில் அப்படி ஒரு நகரம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. மேற்கு ஆசியாவில் உள்ள ஜோர்டானில் இருந்திருக்கிறது. சவுதி அரேபியாவுக்கு அருகில் அமைந்துள்ள சிறிய நாடுதான் ஜோர்டான். இது சாக்கடலுக்கும், அகாபா வளைகுடாவுக்கும் இடையில் அமைந்துள்ளது. 18ம் நூற்றாண்டு வரை இது புதையல் நகரம். இந்த ரோஜா நகரம் பற்றி உலகத்துக்கு தெரியாது. இந்த அழகான, அற்புதமான, கலைபொக்கிஷமான மலை நகரத்தை, 1812ம் ஆண்டு லுட்விக் பர்க்ஹார்ட் என்ற சுவிட்சர்லாந்து நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்து, தான் கண்டு பெற்ற இன்பத்தை உலகம் கண்டு இன்புற வெளி உலகுக்கு அடையாளம் காட்டினார். பின்னர் 1985ம் ஆண்டு இது யுனெஸ்கோ அமைப்பால் உலக கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ‘இறப்பதற்கு முன் உலகில் அவசியம் பார்க்க வேண்டிய 28 இடங்கள்’ என்கிற பட்டியலில் பிரதானமான இடத்தை பெட்ராவுக்கு அளித்துள்ளது ஸ்மித்சோனியன் என்கிற பத்திரிகை. கி.மு 3ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜோர்டான் பிரதேசத்தை ஆண்டுவந்த நெபாட்டியன்கள் காலத்தில் பெட்ரா நகரம் உருவாக்கப்பட்டது. பண்டைய காலத்தில் நெபாடியன்களின் தலைநகரமாக செல்வ வளம் கொழித்த நகரம் தான் பெட்ரா. பெட்ரா என்றால் கிரேக்க மொழியில் பாறை என்று அர்த்தம். நாலாபுறமும் மலைகள். நடுவில் பள்ளத்தாக்கு. இந்த நகரம் மிகவும் பாதுகாப்பாக அமைந்திருந்தது. பெட்ரா நகரத்தில் 20,000 நெபாடியன்கள் மட்டும் வாழ்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்கள் தண்ணீர் சேமிப்பதில் வல்லர்கள். அந்த வறண்ட மலைப் பிரதேசத்தில் பெய்யும் மழை வீணாகி விடாத வகையில், நகருக்குள் நேர்த்தியான கால்வாய்கள், அணைகள் போன்றவற்றை அமைத்து தண்ணீரை பல இடங்களில் தேக்கியுள்ளனர். வானைத் தொடும் வகையில் உயர்ந்து நிற்கும் குகைக் கோவில்கள் தான் இந்த நகரின் சிறப்பம்சம். இவற்றில் பல காலவெள்ளத்தில் சிதைந்து விட்டாலும், இன்னும் சில பிரம்மாண்டங்கள் அங்கே நிலைத்து நிற்கின்றன. அவற்றில் மிக முக்கியமானது, கருவூலம் என அழைக்கப்படும் அல்-கஸ்னே. இந்த கல் கட்டிடத்தின் சிற்ப வேலைப்பாடுகளையும், கைவினை நுணுக்கங்களையும் பார்க்கும் போது( நம் நாட்டு மகாபலிபுரத்தை மிஞ்சி விடும்) இது உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கும். பெட்ராவில் உள்ள ஒவ்வொரு கல் மாளிகையும் கட்டிடக் கலைக்கு பெருமை சேர்ப்பவை. பல கலாசாரங்களின் கலவையாக இந்த கல் மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. நகரின் மையத்தில் அமைந்துள்ள பெரிய கோவிலின் முகப்பு பகுதி நான்கு தூண்களுடன் பிரம்மாண்டமாக இருக்கிறது. பெட்ரா நகர் கலைப்பொக்கிஷங்களை பொதுவாக நான்கு வகைகளுக்குள் அடக்கிவிடலாம். கருவூலக் கட்டடம், வெளிப்புற கல்லறைகள், வாடி மூசா கல்லறைகள், கலைக்காட்சியகம் ஆகியன. இவ்வளவு சிறப்பு பெற்ற அழகு நகரம் யார் கண்பட்டதோ தெரியவில்லை! கி.மு. 312 ம் ஆண்டு வாக்கில் உருவாக்கப்பட்ட பெட்ரா நகரம் கி.பி. 363 ல் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தின் காரணமாகவும், கி.பி. 700 ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாகவும் மண்ணுக்குள் முழுமையாக புதைந்து போய்விட்டது. பாக்ஸ் செய்தி அல் கேசினே! * லுட்விக் ஒரு சுற்றுலாப் பிரியர். சரித்திரப் பெருமை வாய்ந்த டமாஸ்கஸ், லெபனான். எகிப்து மற்றும் அரேபியாவின் பல சிறிய தேசங்களைச் சுற்றி வந்தவர். உண்மையில் நைல் நதியின் மூலத்தை அடைந்து அதன் ஆற்றுப்படுகைகளில் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபடும் நோக்கில்தான் அவர் தனது புதிய பயணத்தைத் தொடங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக ஜோர்தானில் புதைந்து கிடந்த பிரம்மாண்டமான கருவூலமான அல் கேசினே-வை கண்டுபிடித்தார். நெபாடியர்களின் கடவுள்! *பெட்ராவில் வாழ்ந்த மக்கள் பல தெய்வங்களை வணங்கிவந்தனர். அவர்களது மதம் இன்னதென்று தனித்துக் குறிப்பிட்டு விட முடியாதபடி கலப்பு மதமாக இருந்து வந்திருக்கிறது. அவர்களது காலத்தில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களில் அவர்கள் வணங்கிவந்த அல்அஸி மற்றும் துஷாரா ஆகிய கடவுள்களை பிரதிபலிக்கும்விதமாக சிலைகள், தூண்கள் கட்டப்பட்டிருக்கின்றன. துஷாரா கடவுளை போற்றி வணங்கும் துஷாரி பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. அவர்களது ஆலயங்களுக்கு அல் டெயிர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பெட்ரா கண்காட்சியகம் *1994ல் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் பெட்ராவில் கண்டெடுக்கப்பட்ட சிறிய மண் சிற்பங்கள், பயன்படுத்திய பாத்திரங்கள், ஓவியங்கள், கலை வேலைப்படுகள் கொண்ட கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக கண்காட்சியாக வைத்திருந்தனர்.