சனி, 19 ஏப்ரல், 2014

பூமியை பயமுறுத்தும் விண்கற்கள்! - &தேவராஜன்.


பூமியை பயமுறுத்தும் விண்கற்கள்! - &தேவராஜன். *************************************************************************************************************************** இந்தப் பூமியை அவ்வப்போது வந்துஅச்சுறுத்தும் எதிரிகளில் ஒன்று விண்கற்கள். இந்த விண்கற்கள் சில, பூமியை பயமுறுத்திய சம்பவங்கள் சில உண்டு. அந்த சம்பவங்கள் இதோ! ரஷ்யாவில் யுரல் மலைப் பகுதியில் 2013 ம் ஆண்டு பிப்ரவரி 15 தேதி சக்தி வாய்ந்த விண்கல் ஒன்று விழுந்தது. சுமார் 55 அடி அகலமும் 10,000 டன் எடையும் கொண்டிருந்த இந்த விண்கல் மணிக்கு 44,000 மைல்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துள்ளது. பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த இந்த விண்கல் 32.5 மணித்துளிகளில், பூமியின் மேற்பரப்பில் இருந்து 15 மைல் தூரத்தில் வெடித்து சிதறியது. இந்த விண்கல் சிதறி தாக்கியதில் ரஷ்ய நாட்டில் உள்ள சிலியாபின்ஸ்க் நகரில் சுமார் 1200 பேர் காயம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இந்த விண்கல் 1945 ஆம் ஆண்டு ஜப்பான் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 30 மடங்குகள் அதிகமான சக்தி வாய்ந்தது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் கலிபோர்னியா, நெவாடா மாகாணத்தில் 2012ம் ஆண்டு ஏப்ரல் 22 ம் தேதி காலை 8 மணி அளவில் வானில் அதிசய ஒளி தென்பட்டது. அந்த ஒளி தோன்றியதைத் தொடர்ந்து இடி முழக்கசத்தம் இரண்டு முறை கேட்டது. வீடுகள் அதிர்ந்தன. குழந்தைகள் பயத்தால் அலறின. வீடுகளில் இருந்தவர்கள் நிலை தடுமாறி சுவர் மீதும் ஜன்னல் மீதும் மோதினர். கலிபோர்னியா, நெவாடா மாகாணங்களில் 600 கி. மீட்டர் பிராந்தியத்தில் இக்காட்சி தென்பட்டுள்ளது. வாஷிங் மெஷின் அளவிலான விண்கல் காற்று மண்டலத்தில் நுழைந்து தீப்பிடித்து வெடித்த போது தான் இப்படியான அதிசய விளைவுகள் ஏற்பட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படி அபூர்வமாக வடிவில் பெரிய கல் வந்து விழுமானால் அது காற்று மண்டலம் வழியே இறங்கும் போது பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். இப்படி பூமியில் வந்து விழுந்த கற்களை மியூசியத்தில் காணலாம். இவற்றை விண்கல் என்று குறிப்பிடுகின்றனர். சில சமயம் பெரிய விண்கல அவ்வளவாகச் சேதமடையாமல் பூமியில் வந்து விழுவதுண்டு. ஆப்பிரிக்காவில் நமீபியா நாட்டில் வந்து விழுந்த விண்கல் இதற்கு உதாரணம். இதன் எடை 60 டன். இது சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்து விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அபூர்வமாக பெரிய பாறை பூமியில் வந்து விழுந்ததும் உண்டு. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பாரிங்கர் கிரேட்டர் என்னும் வட்ட வடிவப் பள்ளம் பெரிய பாறை வந்து விழுந்ததால் ஏற்பட்டதே. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், 45 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் வந்து விழுந்ததால் இது தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 2012ம் ஆண்டு டிசம்பரில் இலங்கையில் பொலன்னறுவை நகருக்கு மேலே வானத்தில் ஒரு நெருப்பு பந்து பூமி நோக்கி விழுந்தது. கீழே வீழ்ந்த விண்கற்களின் பாகங்களைச் சேகரித்து இலங்கையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக் கூடத்துக்கு அனுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இதன் சில பாகங்களை மேல் ஆய்வுக்காக வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். அதை ஆராய்ந்த பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அவற்றில் பாசி போன்ற உயிர் சுவட்டினை அடையாளம் கண்டுள்ளனர். பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் வாழ்க்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது இது போன்ற விண்கற்களின் வீழ்கையால் தான் என்ற கணித்திருக்கின்றனர். சுமார் 6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் விண்கல் வந்து பூமியில் மோதியதன் விளைவாகத்தான் டைனோசார் வகை விலங்குகள் அழிந்ததாகச் சொல்லப்படுகிறது. ***பாக்ஸ் செய்தி **** வருகிற 2032 ம் ஆண்டு பூமியை ராட்சச விண்கல் ஒன்று தாக்கும். இதனால் உலகம் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். 2032ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி ஒரு ராட்சச விண்கல் பூமியை தாக்க கூடிய ஆபத்து இருப்பதாகவும், சுமார் 1345 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியில் மோதினால் உலகம் முற்றிலும் அழிய கூடிய ஆபத்து இருப்பதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமியின் மீது மோதினால் மிக மிக சக்தியை கொண்ட அணுகுண்டு வெடித்து சிதறினால் ஏற்படக்கூடிய பாதிப்பை காட்டிலும், இது சுமார் 50 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. ‘2013 டி.வி 135 ’என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் பற்றிய தகவல்களை இங்கிலாந்து, இத்தாலி, ரஷ்யா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகளும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். எனினும், பூமியை நோக்கி வேகமாக பயணித்து வரும் இந்த ராட்சச விண்கல் பூமியை தாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என நாசா தெரிவித்துள்ளதுதான் ஆறுதல் தரும் செய்தி! *****************

வியாழன், 17 ஏப்ரல், 2014

கடல் கொண்ட பழைய தமிழகம்! - தேவராஜன்.


கடல் கொண்ட பழைய தமிழகம்! - தேவராஜன். 2004 டிசம்பர் 26ம் நாள் நம்மில் சிலர் நேரடியாகவும் பலர் தொலைக்காட்சிகளிலும், செய்திதாள்களிலும் அறிந்து கொண்ட சுனாமி எனும் ஆழிப்பேரலையை பழந்தமிழகம் பலமுறை கண்டிருக்கிறது என்பது வியப்பு மட்டுமல்ல சோகமும்கூட. 1964ம் ஆண்டு டிசம்பர் 23ம் நாளன்று வீசிய கடும்புயலின்போது, ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர எல்லையான தனுஷ் கோடியை ஒரு பேரலை தாக்கியது. அதிகாலை 3 மணியளவில் 20 அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத ஆழி பேரலையால் ராமேஸ் வரம் தீவின் கிழக்கு முனையில் இருந்த தனுஷ்கோடி என்ற 500 வீடுகளைக் கொண்ட அழகிய மீனவப் பகுதி முற்றிலுமாக அழிந்தது. ( இதே பகுதியில் இது பற்றி விரிவாக ‘ மனிதர்கள் வசிக்கு முடியாத நகரம்’ என்ற கட்டுரையில் முன்பு படித்திருப்பீர்கள்!) பழைய தமிழகத்தைத் தாக்கிய நான்காவது கடற்கோள்(ஆழிபேரலை), காவிரிப்பூம்பட்டினம் என்கிற பூம்புகாரை தன்னுள் சுருட்டிக்கொண்டது. ஏதென்ஸ், ரோமாபுரி போன்ற ஐரோப்பிய கண்டத்தின் பழம்பெருமைமிக்க நகரங்களுக்கு இணையாக கட்டமைப்பிலும் வணிகத்திலும் சிறந்து விளங்கிய துறைமுக நகரம் பூம்புகார்.( இதே பகுதியில் இது பற்றி விரிவாக ‘கடல் குடித்த நகரம் ’ என்ற கட்டுரையில் முன்பு படித்திருப்பீர்கள்) கடலால் விழுங்கப் பட்ட தமிழகத்தின் பூம்புகாரும், குஜராத்தின் காம்பேவும் ஹரப்பா- மொகஞ்ச தாரோ நாகரிகத்திற்கும் முற்பட்டவை. பழந்தமிழ் நிலப்பரப்பை நான்கு கடற்கோள்கள் தாக்கியிருக்கின்றன. முதல் கடற்கோள், முதல் தமிழ்ச் சங்கம் அமைத்த தென்மதுரையை இரையாக்கியது. இரண்டாவது கடற்கோள், நாகநன்னாட்டை காவு கொண்டது. மூன்றாவது கடற்கோள், இடைச்சங்கம் அமைத்த கபாடபுரத்தை விழுங்கியது. இப்படி மூன்று சங்கங்கள் கொண்ட நிலப்பரப்புகளை ஆழிப்பேரலை குடித்துவிட்டது என்று மொழி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்படி ஓர் ஆழிப்பேரலையில்தான் குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியா கண்டம் கடலடி சேர்ந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் சீனிவாசய்யர், சேசைய்யர், ராமச்சந்திர தீட்சிதர், தேவநேயப்பாவாணர் உள்ளிட்டோரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குமரி கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்குதான் நம் பண்பாடு, கலாசாரம், நாகரீகம் வளர்ந்து செழித்தது. இப்படிப்பட்ட பெருமைமிக நிலப்பரப்பு இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கிறது. இப்போது காணப்படும் தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சிறு, சிறு தீவுகள் இணைந்திருந்த ஒரு பெரிய நிலப்பரப்பு தான் அன்றைய குமரிக்கண்டம். இந்த நிலப்பரப்பில் ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழு முன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது! இந்த நிலப்பரப்பில் பறுளி, குமரி என்ற இரண்டு பெரிய ஆறுகள் ஓடியுள்ளது ! குமரிக்கொடு(மலை), மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது! தென்மதுரை, கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன! இலக்கிய ஆய்வாளர்களின் ஆய்வுகளும், உலக செம்மொழி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளிலும் கீழ்கண்ட நிகழ்வுகள் குமரி கண்டத்தில் நிகழ்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. அவை: தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள ‘ தென் மதுரையில் கி.மு 4440ல் 4449 புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து, பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் அனைத்துமே அழிந்து விட்டது. இரண்டாம் தமிழ்ச் சங்கம் கபாடபுரம் நகரத்தில் கி.மு 3700 ல் 3700 புலவர்களுடன் அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது . இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய மதுரையில் கி.மு 1850 ல் 449 புலவர்களுடன் அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள் ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது. ஒவ்வொரு கடற்கோளும் நாடு நகரங்கள் மக்களோடு சேர்த்து, தமிழ் பண்பாட்டு,வரலாற்று அடையாளங்களையும் கடலுக்குள் கொண்டு புதைத்து வைத்திருக்கிறது. கடலுக்குள் புதையுண்ட நகரங்களை ஆய்வு செய்யும் பணியை தொடர்ந்து மேற்கொண்டால், நமக்கு முன் தோன்றிய மூத்தகுடியின் அடையாளங்களைக் கண்டுபிடிக்கலாம்! காப்பாற்றலாம்! அடுத்த தலைமுறைக்கும் நம் பெருமையை எடுத்துச் சொல்லி பெருமிதம் கொள்ளலாம்! **

சனி, 5 ஏப்ரல், 2014

புரியாத புதிர்களாக கல் வட்டங்கள் - தேவராஜன்


புரியாத புதிர்களாக கல் வட்டங்கள் - தேவராஜன் ************************************************************************************ இந்த உலகத்தில் புதைந்து கிடக்கும் பல புதிர்களுக்கு இன்று வரை பதில்களே எட்டப்படவில்லை! நாம் வாழும் பூமியில், நம் முன்னோர் ஆக்கிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக உருவாக்கப்பட்டவை, இன்று நமக்கு எதற்காக அவை ஆக்கப்பட்டது என்ற குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. கால காலமாய் ஆராய்சி செய்தி ஆராய்சியாளர்கள் சிலவற்றிற்கு பதில் தேடி தந்திருக்கிறார்கள். அப்படி புரியாத புதிர்களில் ஒன்று கல் வட்டங்கள். சில ஊர்களில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் திட்டுகளில் வட்ட வட்டமாக கற்களைக் கொண்டு வட்டம் அமைத்திருக்கிறார்கள். இதற்கு கல் வட்டம் என்று பெயர். இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன. இந்த கல்வட்டம் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் என்று ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில், கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். இப்படி அமைக்கப்படும் கல்வட்டங்கள் ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கவும், அடையாளப்படுத்தும் அமைப்பாகவும் இது இருப்பதாக கருதப்படுகிறது. இத்தகைய கல்வட்டங்கள் அமைப்பதினால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை என்று கருதப்படுகிறது. பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படுகின்றன. இது போது கல் வட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களிலும் மேலும், தமிழகத்தில், கற்கள் கிடைக்காத ஆற்றுப் படுகைகள் தவிர, பிற பகுதிகளில் ஆயிரக்கணக்காண எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. குறிப்பாக சானூர், சித்தன்னவாசல் கொடுமணல், குப்பால் நத்தம்,ஆனைக்கரை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. இது போல கல்வட்டங்கள் உலக அளவில் மிக பிரமாண்டமான கல்வட்டங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில சில்பரி மலை மற்றும்ஆவ்பரி கல் வட்டங்கள். சில்பரி மலை இங்கிலாந்தின் ‘சில்பரி’ என்னுமிடத்தில் ஒரு பிரமாண்டமான மலை இருக்கிறது. இதுவும் ஒரு கல்வட்டம் மாதிரிதான். அளவு தான் பிரமாண்டம்! சில்பரி மலை 40 மீட்டர் உயரமும், 167 மீட்டர் விட்டமும் கொண்டது. அதன் உச்சி தட்டையாக இருகிறது. அந்த தட்டையின்விட்டத்தின் பரப்பளவு 30 மீட்டர். இது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த மலை இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால், இந்த சில்பரி மலையை தொடர்ந்து ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. சுமார் 4750 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலை கட்டப்பட்டிருக்கலாம். கி.மு. 2400 முதல் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மலை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலை ஏன்கட்டப்பட்டது? என்ன உபயோகத்திற்காக என்பதற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. முழுவதும் வெண்கட்டிக் கற்களால் கட்டப்பட்டது சில்பரி மலை. இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள இதைக் கட்டி முடிக்க 18 மில்லியன் மனித மணி நேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். தட்டையாக உள்ள அதன் மேல் பகுதி உருண்டை வடிவில் இருந்திருக்கலாம் என்றும் இடைப்பட்ட காலத்தில் அது ஏதேனும் கட்டடம் கட்டுவதற்காக தட்டையாக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆவ்பரி கல் வட்டங்கள் சில்பரி மலைக்கு அருகில், வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் 100 டன்களுக்கும் அதிக எடையுள்ள நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வட்ட வடிவ அமைப்பில் 331 மீட்டர் விட்டமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. வட்டத்தை சுற்றியுள்ள கால்வாய் 21 மீட்டர் அகலமும், 11 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மொத்தம் 98 கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில 40 டன்னுக்கு மேல் எடையுடையதாக உள்ளன. வடக்கு பக்கமுள்ள உள் வட்டமானது 98 மீட்டர் விட்டம் உடையாதாக உள்ளது. இதில் உள்ள 4 கற்களில் 2 மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. தெற்கு பக்கமாக உள்ள வட்டமானது 108 மீட்டர் விட்டமுடையதாக உள்ளது. 5.5 மீட்டர் உயரமுள்ள ஒரு கல் நடுநாயகமாக நிறுவப்பட்டுள்ளது. இதுவும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கல் வட்டமும் யார் அமைத்தார்கள்? ஏதற்காக அமைத்தார்கள் என்ற விவரங்கள் மட்டும் தெரியாத புதிராகவே இருக்கிறது. **