வியாழன், 28 பிப்ரவரி, 2013

மகா சிவராத்திரி மகிமை

மகா சிவராத்திரி மகிமை!/78/3.3.2013 நாகரீக மோகத்தில் நமது உடை, உணவு, வாழ்க்கை முறை எல்லாம் மாறிவிட்டது. அது வழிபாட்டையும் விட்டு வைக்கவில்லை. உதாரணம் மகா சிவராத்திரி. வருகிற 9ம் தேதி சனிக்கிழமை மகாசிவராத்திரி விரத நாள் வருகிறது. இப்போதெல்லாம் மகாசிவராத்திரி விரத நாள் என்பது வியாபார திருநாளாகிவிட்டது. சில பக்தர்களை மகிழ்விக்க ஊரெல்லாம் திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் என்று விடிய விடிய திரைப்படம் காட்டுகிறார்கள். வீட்டிலோ விடிய விடிய டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள். இவைகளில் ஆர்வம் இல்லாதவர்கள் சிலர் விடிய விடிய சீட்டு விளையாடி இரவை கழிக்கிறார்கள். பெண்கள் தாயம் விளையாடுகிறார்கள். ஆக, சிவராத்திரி என்றால் இரவு முழுவதும் எப்படியாவது கண்விழிக்க வேண்டும். துõங்காமல் அன்றிரவு இருந்துவிட்டால் ஈசனின் அருள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இப்படி எல்லாம் செய்கிறார்கள். துõங்காமல் இருப்பதுதான் சிவராத்திரி விரதம் என்று இவர்களுக்கு யார் சொன்னார்கள் என்று தெரியவில்லை. சிவராத்திரியில் ஏன் கண்விழித்திருக்க வேண்டும் என்றால், சிவராத்திரியன்று இரவு சிவவழிபாடு இன்றியமையாதது என்பதை உணர்த்துவதற்குத்தான். சிவராத்திரி நாளில் சிவாலயங்களில் நான்கு ஜாமப் பூஜைகளும் சிறப்பாக நடைபெறும். முதலாம் ஜாமத்தில் பஞ்கவ்யம், சந்தனக்குழம்பு போன்றவை சாத்தப்படுகின்றன. பயற்றன்னம் நைவேதிக்கப்படுகின்றது. வில்வம் இலையால் அர்ச்சிக்கப்படும். இரண்டாம் ஜாமத்தில் அமிர்தம், அகிற் குழம்பு என்பன சாத்தப்படும். மூன்றாம் ஜாமம் ஆனதும் லிங்கோற்பவருக்கு தேன், பச்சைக்கற்பூரம், தாமரை போன்றவை சாத்தப்பட்டு எள்ளுச்சாதம் நைவேதிக்கப்பட்டு ஷன்பகம், ஜாதிமுல்லை, வில்வம் இலைகளால் அர்ச்சிக்கப்படும். நான்காம் ஜாமத்தில் கருப்பஞ்சாறு, குங்குமப்பூ என்பவை சாத்தி சுத்த அன்னம் நைவேதிக்கப்படும். இந்த நான்கு கால பூஜைகளை கண்டுகளித்து வழிபாடு செய்ய வேண்டுமானால் இரவு விழித்திருந்தால்தானே முடியும். அதனால் சிவராத்திரியில் இரவு கண்விழிக்கச் சொன்னார்கள். சிவராத்திரி மகிமை மிகுந்த விரத நாள். <மாசியில் பிரம்மதேவரும், பங்குனியில் மகாவிஷ்ணுவும், சித்திரையில் உமாதேவியும், வைகாசியில் சூரியனும், ஆனியில் ஈசானியரும், ஆடியில் குகனும், ஆவணியில் சந்திரனும், புரட்டாசியில் ஆதிசேஷனும், ஐப்பசி யில் இந்திரனும், கார்த்திகையில் சரஸ்வதியும், மார்கழியில் மனோன் மணியும், தை மாதத்தில் நந்திதேவரும் சிவராத்திரி விரதம் கடைப்பிடித்து பேறு பெற்றிருக்கிறார்கள் என்று சிவபுராணம் சொல்கிறது. எனவே, இனிமேலாவது சிவராத்திரி பொழுதை கேளிக்கையில் கழிக்காமல், ஈசனை மனதில், இரவெல்லாம் ஏதோ ஒரு சிவாலயத்தில் வழிபடுங்கள். இயலாதவர்கள் வீட்டில் கண் விழித்து, சிவபுராணம்,நமச்சிவாய திருப்பதிகம், திருநீற்றுத் திருப்பதிகம், சிவாயநம பாரயணப்பாடல்களைப் படிக்கலாம், பாராயணஞ் செய்யலாம். லிங்கபுராணத்தை சிவராத்திரியன்று படித்தல் நல்லது. <சிவராத்திரியன்று கண்ணுறங்காமல் ஈசனை மனதிலிறுத்தி வணங்குபவர்கள் அவனருளை முழுதுமாகப் பெறுவார்கள் என்பது திண்ணம்!< - தேவராஜன் ******************************************** ******************************************** வாழ நினைத்தால் வாழலாம்!/80/17.3.2013/ நம் வாழ்வின் நோக்கம் எது? சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும்? வாழ்க்கை என்பது என்ன? வாழும் முறை யாது? அதனால் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? சரியான வாழ்க்கை என்றால் எப்படி அமைய வேண்டும் என்பதை எல்லாம் நம் சமயம் எடுத்துகூறுகிறது. சமய தத்துவங்களைப் புரிந்து, அவைகளை சரிவர நாம் பின்பற்றினால், நம் வாழ்க்கை முறை மிகச் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும் இருக்கும். தார்மிகமாகவும், நிம்மதியாகவும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்தும். மனித இனத்தை தவிர பிற உயிரினங்களுக்கு மனம் என ஒன்று இருந்தாலும், தன்னிச்சையான மன இயக்கங்களுடன் இருப்பதற்கான சாத்தியங்கள் இல்லை. மனித மனம், அதன் முழு பரிணாம வளர்ச்சியின் மூலம் நாம் வாழும் வாழ்க்கையை அறிவதற்கான, அறிவதன் மூலம் அடையும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான சாத்தியத்தை பெற்றுள்ளது. நாம் முழுமையை அடைய விரும்பினால், முழுமையான வாழ்க்கையை வாழ விரும்பினால், நாம் செய்ய வேண்டியதெல்லாம் சாஸ்திரப்படி வாழ்வதுதான். நம் பண்டைய வழக்கப்படி முதலில் கல்வி கற்கும்போது பிரம்மத்தைப் பற்றி அறிவதற்கு உண்டான எல்லா கட்டுப்பாடுகளும், ஒழுக்கம், நெறிகளுடன் இருந்து பயில்வதற்கு ஒரு பிரம்மச்சரிய வாழ்க்கைமுறை. பிறகு மணம் செய்துகொண்டு மனைவி, பிள்ளைகளுடன் வீடு, வாசல் என நல்வாழ்க்கை வாழ்ந்து, சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்த ஒரு கிருஹஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. தன் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் கடமையுடன் பணியாற்றியபின் அதுவரை தேவையாக இருந்த சுகபோகங்களைக் குறைத்துக்கொண்டு, தான் பிறந்ததன் பயனைப் பற்றிச் சிந்திக்க ஒரு வானப்பிரஸ்தாச்ரம வாழ்க்கைமுறை. இறுதியில் இவ்வுலகச் சுகங்களை முற்றிலும் துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை முறை. ஒருவன் எப்படி வாழவேண்டும் என்பதற்கான படிப்படியாக வாழ்க்கை முறைகளை நம் முன்னோர் வகுத்திருக்கின்றனர். உலகத்தில் உள்ளவைகளை அனுபவித்து சுகபோகமாக இன்பத்தில் திளைக்கவே நாம் பிறந்திருக்கிறோம் என்று எண்ணியே அனைவரும் வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இன்பமோ வெகுநாட்கள் நீடிப்பதில்லை, மேலும் இன்பமாய் இருப்பதே சில நாட்களில் துன்பம் கொடுப்பதையும் பலர் பார்க்கின்றனர். அப்போதுதான் சிலருக்கு புலன்களைக் கொண்டு போகம் அடைவதைவிட்டு, புலன்களைக் கட்டுப்படுத்தி யோகம் செய்து பேரின்பப் பெருநிலையை அடையும் வழிகள் தெரியவருகின்றன. அப்படிச் சிறிது சிறிதாக மனத்தைக்கொண்டே அவைகளைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தி வாழ முயற்சி செய்வதே துன்பங்கள் நீக்கி ஆனந்த நிலையை அடையும் வழியாகும். - தேவராஜன்.

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

இப்படிதான் வாழணும்

***************************************** இப்படிதான் வாழணும்!/75/10.01.2013/ எப்படியும் வாழ்வது வாழ்க்கை அல்ல. இப்படிதான் வாழவேண்டும் என்பதற்கு வரையறைகள் உண்டு. அதனால் தான் மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி என்பதற்கு சாஸ்திரங்கள் பல வழிமுறைகளை கூறுகின்றன. சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறை படுத்தும் போது மனிதனுடைய வாழ்வு சிறக்கும். இறை உணர்வும் மிகும். குடும்பமே ஒரு கோயிலாகும். தினமும் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கண் விழித்து எழுந்து விடவேண்டும். பிறகு மங்களகரமான பொருட்களைப் பார்க்கவேண்டும். மனிதன் உறங்குவது இறப்பு என்றும், உறங்கி விழிப்பது பிறப்பு என்கிறார் வள்ளுவர். உறங்கியவன் காலையில் எழுந்துவிடுவான் என்பதற்கு எவ்வித நிச்சயமும் இல்லை. ஆதலால், எழுந்ததற்கு நன்றி கூறும் விதமாக குளிக்கும் போது இறைவன் நாமங்களை சொல்லிக் கொண்டே குளிக்கவேண்டும். இறைவன் நாமத்தை சொல்வதால் உள்ளம் சுத்தமாகும். பெண்கள் அவசியம் மஞ்சள் தேய்த்து குளிக்கவேண்டும். குளித்து முடித்தவுடன் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து நின்று கொண்டு உலகத்தில் அனைத்தும், அனைத்து உயிர்களும் நல்ல படியாக இருக்கட்டும் எனக் கூறி இரண்டு கைகளில் நீர் எடுத்து அர்க்கியம் கொடுக்கவேண்டும். குளித்து முடித்து சுத்தமான ஆடை உடுத்தி, நெற்றியில் அவரவர் பழக்கப்படி திருநீறு, குங்குமம், நாமம், சந்தனம் போன்றவற்றை இட்டுக் கொள்ளலாம். உணவு உண்ணும் போது இறைவன் நாமங்களை நினைத்துக் கொண்டு இறைவன் கொடுத்த பிரசாதமாக நினைத்து உண்ணவேண்டும். தானங்களில் சிறந்தது அன்னதானம். உணவை சிறிது கூட வீணாக்க கூடாது. உணவை இறைவனை நினைத்துக் கொண்டு உட்கொண்டால் உடலும், உள்ளமும் ஆத்மசக்தி பெறும். செய்யும் தொழிலில் நேர்மையும், முழுமையும் வேண்டும். செய்யும் தொழில் தெய்வ ஆராதனை, வழிபாட்டுக்கு சமம் என சாஸ்திரம் கூறுகிறது. மனிதன் துõங்கி எழுந்தது முதல் இறை உணர்வுடன் செயல்படவேண்டும்.< இறைவன் திருநாமம் மனதில் நிறைந்திருந்தால் தீய எண்ணங்கள் வராது. மாலையில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்து நமஸ்காரம் செய்யவேண்டும். விளக்கு ஏற்றுவதால் மகாலட்சுமியின் அருள் இல்லம் முழுவதும் நிறையும். மாலை இறைவனது திருப்பாடல்களை தனியாகவோ, கூட்டாகவோ பாடினால் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். இரவில் துõங்கச் செல்லும் போது அன்றைய பொழுதினை நல்ல படியாக கழிக்க உதவிய இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.< தினமும் இறைவனை தியானிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கவேண்டும். வயிற்றுக்கு உணவு எவ்வளவு அவசியமோ, அதைவிட மனதிற்கு தியானம் அவசியம். இறைவன் பற்றிய நினைப்பு ஒன்றே மனித மனத்திற்கு நிம்மதி அளிக்கும்.அதற்கு நம்மை தயார்படுத்தவே சாஸ்திரங்கள் உதவுகின்றன. -தேவராஜன் ************************************ இறைசக்தி!/76/17.2.2013/ இந்த உலகத்திற்கு ஒரு ஒழுக்கு முறை இருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு உயிரையும்,பொருளையும் இயக்குகின்ற ஒரு சக்தி இருக்கிறது. அது எல்லா உயிர்கள் மீதும் ஆட்சி நடத்துகிறது அதுதான் இறைசக்தி. இது வார்த்தையால் விவரிக்க முடியாத ஏதோ ஒரு அதிசய சக்தி. இந்த அதிசய சக்தி உலகில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் நிறைந்து நிற்கிறது. கண்ணால் காண முடியாது. ஆனால் உணரும்படி இருக்கிறது. நமது புலங்களால் அறியக்கூடிய பொருள்கள் போல் எந்த வகையிலும் நிருபிக்கப்பட முடியாதபடி முற்றிலும் புலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. இந்த தெய்விக சக்தி உயிரினங்களின் நன்மைக்காக உலகமெங்கும் பரவி நிற்கிறது. மனிதனுக்கு அச்சம் இருக்கிறது. சிறிது கண் மூடியதும் ஏதாவது கடித்து விடுமோ, திருடர் வந்து தாக்குவாரோ என்ற அச்சத்தில் அவன் தலை மாட்டில் ஒரு தடியை வைத்துகொள்கிறான். தடி பக்கத்தில் இருப்பது நல்லது.திருடன் வந்தால் அடித்து விரட்டு உதவும் என நினைக்கிறான். திருடன் அந்த தடியை எடுத்து அவன் தலையில் போட்டால் என்னவாகும்? யாருடைய தைரியத்தில் துõங்குகிறாய் ! இச்சமயத்தில் இறைவன் கையில் இருக்கிறாய். நீ விழித்து எழுந்தால் அல்லவா உன்னை பாதுகாத்து கொள்ள முடியும்? உறக்கத்தில் உன்னை பாதுகாப்பவர் யார் ? நாம் ஏதோ ஒரு சக்தியை நம்பி துõங்குகிறோம். எந்த சக்தியின் நம்பிக்கையில் சிங்கம்,பசு முதலிய பிராணிகள் உறங்குகின்றனவோ அதை நம்பியே நாமும் உறங்குகின்றோம். தாயின் மடியில் குழந்தை கவலை இல்லாமல் துõங்குகிறது. நீங்களும் நானும் எங்கும் பரவி உள்ள அந்த இறை சக்தி தாயின் மடியில் உறங்குகிறோம் என்ற நம்பிக்கை பெற வேண்டும். எந்த சக்தியின் அடிபடையில் நம் வாழ்க்கை முழுமையும் நடந்து கொண்டு இருகிறதோ, அதை நாம் மேன்மேலும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த சக்தியில் நமக்கு எவ்வளவு அதிக நம்பிக்கை தோன்றுமோ,அந்தளவுக்கு அதிக பாதுகாப்பும் நமக்கு ஏற்படும். நமக்கு அந்த சக்தியின் அனுபவம் எந்த அளவுக்கு நமக்குஅதிகமாகுமோ அந்த அளவுக்கு நாம் ஆனந்தம் பெறலாம். இந்த இறைசக்தி என்பது ஒரு பொருள் அல்ல. அப்படி இருந்தால் அதை இன்றைய விஞ்ஞானம் விட்டு வைத்து இருக்காது. அது ஒரு பொருளில் மட்டும் இயங்குவது இல்லை. இந்த உலகத்தில் அனைத்திலும் அது முழுமையாக செயல்படுகிறது. அதனால் தான் அதை புரிந்துகொள்ளமுடியவில்லை. இதை விஞ்ஞானத்தால் ஒருக்காலும் பிரிந்து கொள்ளவும் முடியாது.உணரத்தான் முடியும். - தேவராஜன். ************************** நடப்பது நடக்கட்டும்/77/24.02.2013/ ‘நாம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்குது. என்ன பண்றது?’ இப்படி சிலர் அலுத்துக்கொண்டு சொல்வதுண்டு. நாம் செய்கிற செயல்கள் எதிர்வினையாவது இறைவன் கட்டளைப்படி அல்ல. அது நாம் செய்த முற்பிறவி கர்ம பலன்கள். முற்பிறவியின் கர்ம பலனுக்கு ஏற்ப அனைவருக்கும் பிறவி ஏற்படுகிறது. ஆதலால் நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அனைவரும் செய்தாக வேண்டும். பலன் எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ‘கடமையை செய் பலனை எதிர்பாராதே’ என்று அர்ஜூனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணர் சொன்ன நுட்பமான கருத்தும் அதுதான். அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்து வரவேண்டும். செய்யும் கடமையில் நிறைய பிரச்னைகள் , தடங்கல்கள், தோல்விகள் வரலாம். அதை எல்லாம் கண்டு பயந்து ஓடிவிடக்கூடாது. அப்பாடா! பட்டது போதும்... நான் சாமியாராக போகிறேன் என்று ஏதோ காட்டுக்கோ, மலைக்கோ சென்று தியானம் செய்வதால் யாரும் பிறவியில் இருந்து தப்பிக்க முடியாது. கடமையை செய்யாமல் ஓடினால் பாவம் மேலும் சேரும். யார் ஒருவருக்கு செய்வதற்கு கர்மங்கள் இல்லையோ அவரால் யாரும் பாதிக்கபட வில்லையோ, அவரை நம்பி யாரும் இல்லையோ, அப்படி பட்ட ஒருவர் பக்குவபட்ட மனத்துடன் இறை வழியில் துறவியாகலாம். நாம் எதிர்ப்பார்த்தபடியே எல்லாம் நடப்பதில்லை. அது நம் கர்மவினைபடிதான் நடக்கும். ஒரு குட்டிக்கதை: ஒரு பாம்பாட்டி கையில் ஒருபெரிய பாம்பு ஒன்று சிக்கியது. அதன் வீரியம்,அதன் துடிப்பு அவனுக்கு கட்டுக்கு அடங்கவில்லை. ஆகவே அதன் வீரியத்தை குறைப்பதற்காக ஒரு பெட்டியில் வைத்து பட்டினி போட்டான். சில நாட்களுக்குள் தன் வசப்படும் என நினைத்தான். அதன்பின் அதைவைத்து பிழைப்பு நடத்தலாம் என்று நினைத்திருந்தான். சில நாட்கள் சென்றன. பாம்பு உணவு இன்றி மிகவும் மெலிந்து,வலிமை குறைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இனிபிழைக்கமாட்டோம் என அது வருந்தியது. அச்சமயத்தில் ஒரு எலி பசியுடன் அந்தப்பெட்டியை பார்த்தது. நமக்கு உணவு இதில் இருக்கும் என எண்ணி, பெட்டியை துளையிட்டு உள் புகுந்தது. உள்ளே பாம்பு இருக்க கண்டு பயம் கொண்டு அஞ்சி நின்றது. பாம்பு அந்த எலியை சாப்பிட்டது. எலி வந்த துளையின் வழியாக வெளியே தப்பி விட்டது. ஆக பாம்பாட்டி ஒரு விதமாக நினைத்தது நடக்கவில்லை. உயிர் பிழைக்க மாட்டோம் என நினைத்த பாம்பு எலியை தின்றுவிட்டு பிழைத்து விட்டது. பாம்பு பெட்டிக்குள் உணவு கிட்டும் என எண்ணிய எலி மாய்ந்தது. இந்தக் கதையில் எல்லாஉயிர்களும் தனக்கு உண்டான கருமத்தை செய்தது. இது விதியின் செயலால் வேறுவிதமாக நடந்து விட்டது. ஆதலால் நடப்பது நாராயணன் செயல். முடிந்தது ஈசன் செயல் என்று மனப்பக்குவம் பெற்றால் எந்த வினைக்கும் அஞ்சவேண்டாம். - தேவராஜன். ************************ மன நிறைவு வேண்டும்!/78/3.3.2013/ ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால், அது கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதுதான் தவறு. உன் விதிபடி கோடி கோடியாய் பணம் சம்பாதிக்க முடியும் என்றால் பணத்தைத்தேடு. அதே சமயம், போதும் என்ற மனமே பொன் செய்யும் என்பதையும் நினைவில் கொள். இது ஆறுதலுக்காக சொல்லப்பட்டவை அல்ல. அதிலும் ஆழமான ஆன்மிக தத்துவம் பொதிந்திருக்கிறது. கோடி கோடியாய் சம்பாதிக்க முடிந்தால் நல்லது. சந்தோஷப்படு. அதே சமயம் அது உன்னால் இயலாவிட்டால் அதற்காக வருதப்படாதே என்பதற்க்காகவே இருவேறு கருத்துக்களை நம் சமயம் எடுத்துரைக்கிறது. உனக்கு என்ன கிடைக்கிறதோ, எவ்வளவு கிடைக்கிறதோ அதை திருப்தியோடு, மன நிறைவோடு ஏற்றுக் கொள். மன நிறைவு மிகவும் முக்கியமானது. பக்தி வழியில் இருப்பவர்கள், இறைவனை முழுமையாக நம்புகிறவர்கள் மனநிறைவோடு, உற்சாகத்தோடு காரியம் செய்பவராக இருக்க வேண்டும். இதற்கான வழிகள் வேதத்திலும், உபநிஷத்திலும், கீதையிலும் சொல்லப்பட்டுள்ளன. பல நுõற்றாண்டுகளாக தோன்றி கொண்டிருக்கும் யோகிகளும், ஞானிகளும் மத ஆச்சார்யர்களும் தங்களுடைய தவ வலிமையினாலும், அறிவின் வன்மையினாலும் கடவுளின் தன்மையையும் உலகின் இயல்பையும் நன்றாக அறிந்து, புரிந்து நமக்கு சுலபமாக புரிந்து கொள்ளும் வகைளும் கஷ்டமில்லாமல் இலகுவாக செய்யக்கூடியம் வழிகளை சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை சொல்கிறார்களே! எதை பின்பற்றுவது? இறைவன் ஒருவன்தான் என்றால் ஏன் இத்தனை போதனைகள், வழிமுறைகள் என்ற சந்தேகங்கள் எழலாம். ஆனால், அவர்கள் சொல்லியதன் நுட்பத்தைப் புரிந்துகொண்டால் குழப்பம் எழாது. பல வழி முறைகளை ஏற்படுத்தியவர்கள் இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. அவரவர்களுக்கு எது உகந்ததாகப் படுகிறதோ அந்த முறையைப் பின்பற்றலாம். இதுதான் நம் இந்து மதத்தின் ஒரு தனிச் சிறப்பு. இந்து மதம் தனிப்பட்ட ஒருவருக்கு எந்த முறை எளிதாகவும் உபயோகமாக படுகிறதோ அதாவது ஒத்து வருகிறதோ அதை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறது. இதைப் பின்பற்றித்தான் உருவ வழிபாட்டிலும் அவர் அவர் விருப்பத்திற்கேற்ப வணங்குகிறார்கள். ஆன்மிகத்தில் ஈடுபட யோகம் ஒரு வழி, பக்தி மற்றொரு வழி. மனிதர்கள் இதை பின்பற்றியே எவ்வளவு பிறவி எடுக்க வேண்டுமோ அவைகளை எடுத்து கடவுளைச் சேரலாம். பக்தி செலுத்தி கடவுளின் அருளைப் பெறலாம். விரைவாக யோக முறையில் கடவுளின் அருளை அடையலாம். யோக முறை சிறிது கடினமானது. எல்லாராலும் பின்பற்ற முடியாது. யோகமோ, பக்தியோ எதை பின்பற்றினாலும் வாழ்க்கையில் மனநிறைவு, எதைச் செய்தாலும் மன நிறைவோடு, மகிழ்ச்சியோடு இரு. வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் திருப்தியோடு மன நிறைவோடு இருந்தால் அர்த்தத்தோடு வாழ்ந்து செல்லலாம்! - தேவராஜன் ********************

திங்கள், 4 பிப்ரவரி, 2013

சுவார(ஹா)ஸ்யம் பாகம் மூன்று

சுவார(ஹா)ஸ்யம் அதிர்ச்சி நகைச்சுவை/22/ 1.02.2013/........................................................................... (தினமலர்- சிறுவர் மலரில் 7.9.2012 முதல் நான் எழுதி வரும் சுவாரஸ்யம் தொடர்கட்டுரைகளின் பாகம் மூன்று.) கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் நகைச்சுவையாக பேசக்கூடியவர். அவர் பேச்சுகள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும். இதோ ஒரு அதிர்ச்சி நகைச்சுவை. என்.எஸ். கிருஷ்ணன் குடும்பமும் பக்கத்து வீட்டு குடும்பமும் திருப்பதிக்கு செல்வதாக திட்டுமிட்டு இருந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டு பெண்மணி, என்எஸ் கிருஷ்ணனை பார்த்து பேச வந்தார். அந்தப் பெண்மணி , என் எஸ் கிருஷ்ணனைப்பார்த்துக் கேட்டாங்க ...... “நாம நாளானிக்கு திருப்பதி போறதா ஒரு பிளான் வச்சிருந்தோமே!, யார், யார் போறோம்னு முடிவு பண்ணியாச்சா?” என்று கேட்டார். அதற்கு, என்எஸ் கிருஷ்ணன் சிலேடையாக அந்த பெண்மணியைப் பார்க்காமலேயே....“அதெல்லாம் எனக்குத் தெரியாது , நா ஓம் புருஷன் , நீ என் பொண்டாட்டி ..... அவ்வளவு தான்”என்றார் . இப்படி அவர் சொல்லி முடித்ததும்,அந்தப் பெண்மணி அதிர்ச்சியும் குழப்பமும் ஏற்பட்டு வாயடச்சுப் போயி இருந்தாங்க. பிறகு, கொஞ்சம் நேரம் கழித்து அவர் சொன்னதை ஆழமாக யோசிச்ச போது தான் அந்தப் பெண்மணிக்கு வாய் நிறைய சிரிப்பு வந்து சிரிச்சாங்க. என் எஸ் கிருஷ்ணன் சொன்னதின் அர்த்தம்- நான் ஓம் புருஷன் என்பது நானும், உன் புருஷனும். நீ என் பொண்டாட்டி என்பது நீயும் என் பொண்டாட்டியும் திருப்பதி போறோம் என்று இரட்டை அர்த்தம் வரும்படி பேசினார். ** நானா பொய்யன்? அமெரிக்காவில் 1961ம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் நிக்சனும், ஜான் எப். கென்னடியும் போட்டி யிட்டனர். பொதுக் கூட்டத்தில் பேசிய நிக்சன், “கென்னடி நம்பிக்கைக்குரியவர் அல்லர்; அவர் மகா பொய்யர்” என்று பேசினார். இதனைக் கேட்ட கென்னடி, “நண்பர் நிக்சன் என்னை ஒரு பொய்யர் என்று குறிப்பிட்டுப் பேசினார். நான் பொய்யன் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இப்போது இந்தக் கூட்டத் தில் நான் பேசுபவை பொய் என்றால் தைரியமாகக் கூறுங்கள். இப்போது நான் சொல்கிறேன், இந்தக் கூட்டத்திலிருக்கும் ஆண்கள் அனைவரும் சிறந்த அறிவாளிகள்; அதேபோல் இங்கே கூடியிருக்கும் பெண்கள் அனைவரும் சிறந்த அழகுடையவர்கள். நான் சொன்னது பொய்யெனில், இப்போதே தைரியமாக மறுத்துக் கூறுங்கள்” என்று சாதுரியமாகப் பேசினார். கூட்டத்திலிருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர். தேர்தலில் வெற்றிபெற்று, குறைந்த வயதிலேயே குடியரசுத் தலைவரானவர் என்ற பெருமையையும் பெற்றார் கென்னடி. ************************************************************************************************************************************************ சுவாரஸ்யம் பனியை விட விஷம் நன்று!/23/8.02.2013/ ஒருமுறை யாழ்ப்பாணத்துப் புலவர் ஆறுமுக நாவலரும் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் மதுரையில் சந்தித்தனர். அப்போது இருவரும் பேசிமகிழ்ந்தனர். மறுநாள் காலை அவர்கள் இருவரும் தம் மாணவர்களுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றனர். அப்போது பனிக்காலம். பனிக்கொடுமையால் மிகுதியாக வாடிய ஆறுமுக நாவலர், மீனாட்சி சுந்தரம் பிள்ளையை நோக்கி, “ஐயா பனிக்காலம் மிகக் கொடிது” என்றார். உடனே மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆமாம் என்று கூறாமல். “நான் பனிக் காலம் நல்லது” என்பேன் என்றார். உடன் சென்ற மாணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆறுமுக நாவலரோ பனிக் காலம் கொடுமை என்று கூற மீனாட்சி சுந்தரம் பிள்ளையோ பனிக்காலம் நல்லது என்று கூறுகிறாரே? இதில் ஏதேனும் உட்பொருள் இருக்குமோ என்று எண்ணி மாணவர்கள் அவரை நோக்கினர். மாணவர்களின் சந்தேகத்தை ஊகித்து, மீனாட்சி சுந்தரம்பிள்ளை, “ நான் ஆறுமுக நாவலர் கூறியதை மறுக்கவில்லையே ,அவர் பனிக்காலம் மிகக் கொடிது என்றார். பனிக்கு ஆலம் மிகவும் நல்லது என்றேன் நான். ஆலம் என்றால் விஷம் தானே! இப்பனிக் கொடுமைக்கு விஷம் நல்லது என்றுதானே சொன்னேன். இதில் தவறு உண்டா? என்ன”என்றார். ஒரு எளிய உரையாடலுக்குள் இத்தனைப் பொருள் பொதிந்துள்ளதா என்று மாணவர்கள் வியந்தார்களாம். புலவர்களின் சிலேடைத் திறமையை எண்ணி எண்ணி வியக்கும் படி உள்ளதல்லவா! *** ராமன் மீது விளைவு? தமிழகத்தைச் சேர்ந்தவர் சர். சி.வி.ராமன். இவர் அறிவியல் அறிஞர். இவர் ஒளிவிலகல் பற்றிய ராமன் விளைவு என்பதை கண்டறிந்தவர். இவரின் கண்டுபிடிப்புக்காக பாராட்டு விழா ஒன்றை வெளிநாட்டில் நடத்தினர். அந்த விழாவிற்கு சர்.சி.வி.ராமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்று அவர் வெளிநாட்டிற்குச் சென்றார். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு ‘மது பார்ட்டி’ வைக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட நம் அறிவியல் ஆராய்ச்சியாளரான சர் சி வி ராமனுக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க சொல்லி வீம்பு செய்திருக்கிறார்கள் அவர்கள். சர்.சி.வி. ராமனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை. அதனால், அவர்கள் வற்புறுத்தலை விடாப்பிடியாக மறுத்தார் சர் சி வி ராமன். அவர்களும் விடுவதாக இல்லை. உடனே அவர்களிடம் இவ்வாறு சொன்னாராம். “நான் உங்களுக்கு தண்ணீரின் மீது ராமன் விளைவை காண்பித்தேன். நீங்களோ, ராமன் மீது தண்ணீரின் விளைவை காண்பிக்க முயற்சி செய்கிறீர்கள்” என்றாராம். இதைக்கேட்டு விழா எடுத்தவர்கள் சிரித்த சிரிப்பில் அரங்கமே அதிர்ந்ததாம்! ........................................................... ******************************************************************************************************************************************************* சுவாரஸ்யம்/15.02.2013/ *பாதி புத்திசாலிகள்! தைரியமாக கேலியும், நையாண்டியும் செய்யும் துணிச்சல் பெற்றவர் எழுத்தாளர் பெர்னாட் ஷா. ஒருமுறை அமெரிக்கா சென்றிருந்தபோது மக்களவையில் கூட்டத்தில் பேச அவருக்கு அழைப்பு வந்தது. பேசத் தொடங்கிய அவர் இங்கிருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் என்றார். சினமடைந்த அவையினர் சொன்னதை மீட்டுக்கொள்ளுமாறு குரல் எழுப்பினர். பெர்னாட் ஷா என்ன செய்தார் தெரியுமா? அமைதியாக அவையினரைப் பார்த்து சரி, இங்கே இருப்பவர்களில் பாதி பேர் புத்திசாலிகள் என்றாரார்.அவரது பேச்சுத்திறமையைப் பார்த்து அந்த அவை வியந்தது. *யார் காரணம்? ஒல்லியான தோற்றமுடைய பெர்னாட் ஷாவைப் பார்த்து ஒருமுறை அவரது நண்பரும், சக எழுத்தாளருமான ஹெச்.டி வெல்ஸ் நம் நாட்டிற்கு வருபவர்கள் உம்மைப் பார்த்தால் இங்கிலாந்தில் பஞ்சம் வந்திருப்பதாக எண்ணுவார்கள் என்று கிண்டலடித்தார். அதற்கு சற்றும் சளைக்காமல் அந்தப் பஞ்சத்திற்கு யார் காரணம் என்பதும் உம்மைப் பார்த்தால் அவர்களுக்குப் புரியும் என்றார் பெர்னாட் ஷா. காரணம் ஹெச்.டி.வெல்ஸ் உடல் பருமனானவர். *சிந்தித்துச் செயல்படுங்கள் புதுவையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அதோ பின்னால் பாருங்கள் என்றார். கூட்டத் திலிருந்த அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கு எந்தக் காட்சியும் தென்படவில்லை. உடனே புரட்சிக்கவிஞர், இப்படி யார் எதைச் சொன்னாலும் அவர் சொற்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள். நன்மையா, தீமையா, லாபமா, நட்டமா என்று சிந்திப்பதே இல்லை. ஏமாளியாக இருக்காமல் சிந்தித்துச் செயல்படுங்கள் என்றார். *பார், அதி சின்னப்பயல்! பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை. “காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப் பார் அதி சின்னப் பயல்” என்று பாடினார். பாரதி என்பதை பார் அதி என்று பதம் பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படி செய்தார் பாரதி. - தேவராஜன். முற்றும். ***********************************************

சனி, 2 பிப்ரவரி, 2013

எது வாழ்க்கை தரம்? /74/ 3.02.2013/

எது வாழ்க்கை தரம்? /74/ 3.02.2013/ “அவனுக்கு என்னப்பா...சோறு கண்ட இடம் சொர்க்கம். திண்ணை கண்ட இடம் கைலாசம்” என்று சிலரைப் பார்த்து சொல்ல கேட்டிருக்கலாம். இதில்தான் வாழ்க்கையின் அர்த்தமே இருக்கிறது. எல்லாருக்கும் பசி தீர சாப்பாடு, மானத்தையும், குளிர் வெயிலையும் காப்பாற்றப் போதுமான உடை, வசிப்பதற்கு ஒரு சின்ன வீடு. இந்தத் தேவைகள் வாழ போதுமானதுதான். இந்தத் தேவைகள் பூர்த்தியானதும், இதை அடைய உதவிய இறைவனுக்கு நன்றி செலுத்தவும், நம்மை படைத்த இறைவனின் அருளை அடைய பக்தியில் ஈடுபடுவதாக நம் வாழ்க்கை செல்ல வேண்டும். பெரிய பங்களா, பொன்,கார் என சுகபோகத்திற்கான ஆடம்பர பொருட்களைப் பெற இரவு, பகலாக உழைத்து வருவதால் மட்டும் ஒருவர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடும் என்று கருதுவது உண்மையல்ல. உண்மையில் வாழ்க்கைத் தரம் என்பது வெளி பொருட்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதுதான். நாம் மேலைநாட்டினர் மாதிரி இருக்க நினைக்கிறோம். போகத்தின் உச்சிக்குப்போன மேல் நாட்டினர் அதில் நிறைவே இல்லை என்பதால் நம்முடைய யோகத்துக்கு, வேதாந்தத்துக்கு, பக்திக்குக் கூட்டம்கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய சிஷ்யர்களுக்கு ஒரு குரு அனுபவ பாடத்தை இப்படி போதித்தார்: ஒரு பாத்திரத்தில் சுவையான உணவை கொண்டு வந்தார். கூடவே சாப்பிட பித்தளை, செப்பு, இரும்பு, வெள்ளி தட்டுகளை எடுத்து வைத்தார். சீடர்கள் ஆளுக்கு ஒரு வெள்ளித்தட்டில் உணவை வைத்து சாப்பிட ஆரம்பித்தனர். குரு சொன்னார்: ‘நீங்கள் எல்லாரும் விலை உயர்ந்த வெள்ளித்தட்டை எடுத்துக் கொண்டுள்ளீர்கள். வாழ்வில் மிகச் சிறந்தவைகளையே அடைய வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது. நல்லது. ஆனால் உங்கள் பிரச்னைகளின் பிறப்பிடமே அதுதான். தட்டுகளின் தரத்தினால் உணவின் சுவை நிச்சயிக்கப்படுவதில்லை. உங்களுக்கு வேண்டியது சுவையான உணவு. ஆனால் நீங்கள் விலையுயர்ந்த தட்டுகளில் தேடினீர்கள். அதுமட்டுமல்ல; மற்றவர்களின் கைகளில் இருந்த தட்டுகளையும் கவனித்தீர்கள். வாழ்க்கை என்பதை உணவு என்று வைத்துக் கொள்ளுவோம். உங்களது உழைப்பு, வருமானம், அதனால் இந்தச் சமூகத்தில் உங்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து இந்த தட்டுகளைப்போல. இந்தத் தட்டுகள் உணவை சாப்பிட பயன்படும் வெறும் சாதனங்கள்; அவ்வளவே. இவற்றால் நமது வாழ்க்கை தீர்மானிக்கப்படுவதில்லை. இவை நம் வாழ்க்கையின் தரத்தை அளவிடும் அளவு கோல் அல்ல. சில சமயங்களில் தட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் வாழ்க்கை என்னும் ருசி மிகுந்த உணவை அனுபவிக்க மறந்து விடுகிறோம். கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் சரியான அளவில் தயாரிக்கப்பட்ட சுவையான உணவையே கொடுத்திருக்கிறார். நாம் அதனை ஏதேதோ அளவுகோல் கொண்டு மதிப்பிட்டுப் பார்க்கிறோம்” என்றார். -தேவராஜன். *****************************************